Friday 22 February 2013

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பதற்கான ஜோதிட விளக்கம்


                
ஆடி மாதம் பிறந்ததும் புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கம் நமது இந்து தர்மத்தில் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடிக்கப்படும் அவசியமான ஒரு வழக்கமாகும். ஆடிமாதத்தில் இப்படி ஒரு நடை முறையை தற்போதைய புதுமணத் தம்பதியரிடம் கூறினால், தற்காலக் கணவன்மார்கள் யாரிதைக்கூரிய ஜோதிடன் என்று ஜோதிடரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் தமது வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வை முன்னிட்டே இவ்வழக்கத்தினை கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன். தற்காலத்தில் இம்மண்ணின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய மரபுகள் மறைந்து வருவதும் தற்காலத்திய பல குடும்ப அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.  

           
ஆடிமாதம் தம்பதியர் இணைந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் வெயில் காலத்தில் தாயும் சேயும் சிரமப்படுவர் என்பதால் இத்தகைய ஒரு மரபு கடை பிடிக்கப்பட்டிருக்கலம் என்பது சாதாரணமாக மக்களின் கருத்து. இதில் ஜோதிடர்களின் கருத்து என்ன? சித்திரை மாதத்தில் தலைச்சன் குழந்தையாக ஆண் குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் அது தகப்பனுக்கு ஆகாது. அப்படிப் பிறந்தால் குழந்தையின் தந்தை எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அணைத்தையும் இழந்து சாதாரண நிலைக்கு வந்து விடுவது கண்கூடு என்பர். இது உண்மையே. ஆனால் இதன் பிண்ணனியை ஜோதிடர்கள் கூட ஆராய்ந்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க ஜோதிடத்தை கடுமையாக விமர்சித்துக் கற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் இதை ஆராய்ந்து பார்க்க ஏனையோரை அழைக்கிறேன்.


                            
     
படம் விஜய வருடம் சித்திரை மாதம் 12ஆம் தேதி (25.04.2013) அன்று சந்திரன் துலாத்தில் இருப்பதை காட்டுகிறது.

ஜோதிடக் கணக்கீட்டு முறையில் சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசி மண்டலத்திலும் 3,4 ஆம் பாதங்கள் துலாம் ராசி மண்டலத்திலும் அமைந்திருக்கும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்ச கதியில் இருக்கும் போது மேஷ ராசிக்கு சுகஸ்தான ராசி நாதனான சந்திரன், சூரியனின் நீச்ச ராசியான துலாத்தில் சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில்  சஞ்சரிப்பது சூரியனுக்கு கடுமையான பாதிப்புகளை கொடுக்கும். அதாவது சூரியனின் அம்சமான தந்தை தனது சுகங்களை இழந்துவிடுவார்.அது மட்டுமல்ல சந்திரன் அப்படி அமரும் சித்திரை நட்சத்திரத்திற்கு அதிபதியானவரும் சூரியனுக்கு வீடு கொடுத்தவருமான செவ்வாயானவர் சந்திரனின் கடக ராசியில்தான் நீச்சமாகிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

சூரியன் முதன்மைக் கிரகம் என்பதும் தலைமைப் பண்புக்கான கிரகம் என்பதாலும் இந்த விதி முதலாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு (தலைச்சன் ஆண் குழந்தை) மட்டுமே பொருந்தும். இரண்டாவது ஆண் குழந்தையாலோ அல்லது முதல் மற்றும் இரண்டாவது பெண் குழந்தைகளாலோ தந்தைக்கு இவ்வித பாதிப்பு ஏற்படுவதில்லை. இவ்வரிய உண்மையை நன்கு ஆராய்ந்தே நம் முன்னோர்கள் தமது சந்ததியினர் இத்தகைய கிரகச் சூழ்நிலையில் குழந்தை பெற வாய்ப்புள்ள சித்திரை மாதத்தில் குழந்தை பெறாமல் இருக்க ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை உணரலாம். நவீன வசதிகளற்ற அக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் எத்தனை குடும்பங்களை ஆராய்ந்து பார்த்து இத்தகைய உண்மைகளை நமது முன்னோர்கள் நமக்குக் கூறியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இயற்கை அளிக்கும் வாழ்க்கைச் சிக்கலில் இருந்து விடுபட எத்தகைய எளிய முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து வியப்படையந்தேன்.  எனவே நமது  சந்ததியினரின் நல்வாழ்வின் பொருட்டு இந்த மரபை விட்டுவிடாது தொடர்ந்து  கடை பிடிக்க வழி செய்ய வேண்டும்.               

வாழ்த்துக்களுடன்,
ழனியப்பன். 


Saturday 16 February 2013

அவன்


அவன் ஒரு சிறுவன்
அவனது கை நிறைய பொம்மைகள்
ஒன்றின் தலையை பரிவுடன் கோதிவிடுகிறான்
ஒன்றை முத்தமிடுகிறான்
ஒன்றின் கையை பிடித்துத் திருகுகிறான்
ஒன்றின் காலை ஒடிக்கிறான்.

அவன் ஒரு அன்னை
தன் குழந்தையின் அழுகைக்கு ஓடி வந்து அணைத்துக்கொள்கிறான்
குழந்தையின் சிரமங்களை பாசத்துடன் சரி செய்கிறான்
தலை வாரி ஆடையுடுத்தி அலங்காரம் செய்கிறான்
நல்லிசை இசைக்கிறான்  
நல்ல பாடங்களை சொல்லித்தருகிறான்

அவன் ஒரு பைத்தியக்காரன்
ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் தாக்குகிறான்
கண்டதையும் வீசி எறிகிறான்
சகல பாஷையில் திட்டுகிறான்
உணவு கேட்டு கை நீட்டுகிறான்
பெற்றதை ஆர்வத்துடன் உண்ணுகிறான்

அவன் ஒரு வழிகாட்டி
உண்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்
நேரிய பாதையில் நடக்கக் கோருகிறான்
பாதையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறான்
பயணத்தில் எதிர்படும் அற்புதங்களை கவனிக்ச் சொல்லுகிறான்
சுகமான பயணத்துக்கு துணை நிற்கிறான்

யாரிவன்?
அவனது பெற்றோர்கள் யார்?
அவன் எந்த ஊரைச் சார்ந்தவன்?
ஏனிப்படி நடந்து கொள்கிறான்
அதனால் அவனுக்கு என்ன பலன்?
அவன் பெயர் என்ன?

அவன் ஓர் அனாதை
அவனுக்கு பெற்றோர்கள் இல்லை
ஆகவே அவன் ஓர் பரதேசி
அவனுக்கு பிடித்த செயல்களை அவன் செய்கிறான்
அதனால் நம் கர்மங்களை அவன் கழிக்கிறான்
அவன் பெயர் இறைவன்!


ஆக்கம்
பழனியப்பன்

பிற்சேர்க்கை:

நாலாயிரத்தில் மூழ்கி
நம்மாழ்வாரில் பிரம்மித்தபோது
நான் எழுதிய கவிதை இது 

பிறிதொரு நாளில் புத்தகமாகலாம்
பிடித்திருந்தால்
பின்னூட்டம் இடுங்கள்!

Sunday 10 February 2013

ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி?


சிறுகதை
   
“ரகு நான் சொல்றதை கேளுடா நம்ம வம்சத்தில் ஒருத்தர் தீர்த்த நாராயணப் பெருமாளை சேவிச்சுண்டு ப்ரோஹிதம் ஜோதிடம் என்று இருப்பதுதான் மரபு. இந்த காவிரிக்கரையில் நமது மூதாதையர்கள் வந்து குடியேறிய பிறகு நமது வம்ச விருத்திக்காகவும் குலம் தழைக்கவும் பெருமாளை வணங்கி நேர்ந்துண்டது. எனக்குப்பிறகு நீயும் அப்படியேதான் தொடரணும். சேஷூ (சேஷகோபாலன்) C.A படித்து ஆடிட்டர் ஆகட்டும் நாளைக்கு உனக்கு அமையும் குடும்பத்தையும் சேர்த்து அவன் பார்த்துப்பான். ஆனால் நாம பெருமாளை கைவிட்டோம் நாம் எல்லோரையும் அவன் கை விட்டுடுவான் என்ற தன் தந்தையின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் தன் தந்தையுடன் கோவில் கைங்கர்யம் செய்துகொண்டு இப்போது ஜோதிடம் கற்க தன் தந்தை வேங்கடகிருஷ்ணனின் பால்ய நண்பனும் தனது தாத்தாவிடம் தன் தந்தையோடு சேர்ந்து ஜோதிடம் படித்தவருமான சந்திரசேகர சர்மாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் ரகு. பெருமாள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயங்கார் வகுப்பை சேர்ந்தவன் ரகு.


சந்திரசேகரசர்மா  பால்க்காரன் வராததால் பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். சர்மா  தமிழ் பிராமண வகையைச் சேர்ந்தவர். அவரது மகள் காயத்திரிக்கு அவளது ஜாதகப்படி தங்கள் குலத்தை விட்டு வேறு குலத்தில் திருமணம் செய்யும் அமைப்பு இருந்ததால் காலம் கடந்த திருமணம் அந்த தோஷத்தை நிவர்த்திக்கும் என்று தனது ஜோதிடத்தின் மூலம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் காயத்திரியின் திருமணத்தை தள்ளிக்கொண்டே வந்தார். எதிர் வீட்டு நாராயணன் தெலுங்கு பிராமண வகையைச் சேர்ந்தவர். 23 வருடங்களுக்கு முன் இவர்களது அக்ரஹாரத்தில் வந்து குடியேரியவர். “ராமு என் குடும்பத்தைப்பற்றி உனக்கும் உன் குடும்பத்தைப்பற்றி எனக்கும்  நன்கு தெரியும். உன் பெண் காயுவை என் மகன் நரேஷுக்கு கொடுத்துவிடு, குழந்தையாக அவளை கொஞ்சிய நான் இப்போது அவளை மருமகளாக எங்கள் பெண்ணாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரது மகன் நரேஷ் MS IT முடித்துவிட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகா அமெரிக்காவில் IBM ல் இருக்கிறான்.

எதிர் வீட்டு சிநேகிதன் என்பதற்காக குலம்விட்டு குலம் கொடுக்க வேண்டுமா?. அதுவும் இல்லாமல் பிராமணன் கடல் கடக்கக் கூடாது என்ற சாஸ்த்ர நியதியை மீறியவன், தமிழும் தெலுங்கும் எப்படி ஒத்து வரும் போன்ற எண்ணங்களைக் கொண்டிருப்பவர்.

தன் மகள் ஒரு தமிழ் பிராமணனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சர்மா.
     
ஆச்சு இன்னும் 7 மாதம்தான் பாக்கி  வரும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அவளது  தோஷம் கழிந்துவிடும் அதன் பிறகு திருமண ஏற்பாட்டைத் துவங்கலாம் என நினைத்தவாறே நடந்து கொண்டு இருந்தார்.
    
வாசலில் ரகு நின்று கொண்டிருப்பதைப்  பார்த்து “அடடே வா ரகு, ஆத்துல எல்லாரும் சௌக்கியமா? என்றார்.

அவரை நமஸ்க்கரித்து “சௌக்யம் மாமா “நீங்க எப்படி இருக்கேள்? என்றான் ரகு.

“உன் அப்பாவை நேத்து கோவில்ல பார்த்தப்ப சொன்னான்  உன்னை ஜோஷ்யம் படிக்க அனுப்பி வைக்கிறேன்னு. “ஏன் உன் தோப்பனார்ட்டயே படிக்கறதில் என்ன சிரமம் உனக்கு? என வினவினார் சர்மா.

“அவர் அதிகமா வைவார் என்றான் ரகு.

“சரி உள்ள வா என்றார் சர்மா.

ஜன்னல வழியே இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த சர்மாவின் மனைவி ஜானகி, அது சரி சிங்கத்திடம் தப்பித்த மான் புலியிடம் அகப்பட்டதாம் என நினைத்தவாறே முட்றத்துக்கு வந்து தன் கணவனிடமிருந்த பாலை வாங்கிக்கொண்டு சமையல் கூடத்திற்குச் சென்றாள்.

பாடம் துவங்கியது.

கடவுள்களை வணங்கி கிரகங்களை போற்றி பிறகு பாடம் துவங்கியது.

“ ஜனனீ  ஜென்ம சௌக்யானாம்... எனச் சென்றது பாடம்.

இடையே காயத்ரி வந்து காபி கொடுத்துவிட்டுச் சென்றாள்.

முடிவில் “அம்பி ஜோசியம் படிக்க வாக்கு பலிதம் வேணும், புத பகவான் அனுக்ரகம் வேணும். நாளை வர்ரச்சே உன் ஜாதகத்தை கொண்டு வா, உனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கணும் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

அவனது வாக்கு நன்றாக இருந்ததோ அல்லது காயத்ரி ஜாதகம் வலுவாக இருந்ததோ தெரியவில்லை ஐந்து மாதங்கள் கழித்து ஒரு நாள்  மாலை கோவிலுக்குச் செல்லும் வழியில் ரகுவை சந்தித்தாள் காயத்ரி.

“எப்படி இருக்கேள்? என ஆரம்பித்தாள் காயத்ரி.

“ம் இருக்கேன் நீங்கதான் பார்க்கறேளே என்றான்.

“ஏன் ஜோதிடம் புடிக்கலியா?

“அது இல்ல, நான் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். அப்பாதான் எங்க  வம்ச வழக்கப்படி பெருமாளை சேவிச்சுண்டு கூடவே ஜோதிடம் படிண்ணார். நேக்கு இஷ்டமே இல்லே என்றான்.

“நேக்கு இஷ்டமிருக்கு என்றாள் காயத்ரி.

“என்ன சொல்றேள். ஜோசியத்தை சொல்றேளா? வேற ஏதாவது சொல்றேளா?”  என்றான் ரகு.

அவள் காபி கொடுக்கும் போது சங்கோஜத்துடன் அவளை பார்க்காத மாதிரிப் பார்க்கும் ரகுவை கவனித்து வைத்திருந்தாள் காயத்ரி.

அவன் புரிந்துகொண்டதை உணர்ந்து நாணி “ரெண்டையுமே என்றாள்.

தெளிவான அவளது பதிலால் அரண்டு போன ரகு “ இத்த.. இத எப்டி ஒத்துப்பா?என தடுமாறினான்.

“உங்காத்துல எப்படி மொதல்ல சொல்லுங்கோ என்றாள் காயத்ரி.

“உன்னை மாதிரி பெண் கிடைத்தால் கட்டாயம் ஒத்துப்பா என்றான்.

“ஆனா நரேஷுக்கு உன்ன கேட்டதுக்கு உங்கப்பா முடியதுன்னுட்டார்னு அம்மா சொல்லிண்டிருந்தாளே என்றான் ரகு.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், அப்பாவோட 2 வது அக்கா அவளுக்கு இஷ்டமானவனை பண்ணிவைக்கலேன்னு காவிரியில விழுந்துட்டா. அதனால அவருக்கு  என் விஷயத்துல பயமுண்டு. நான் அம்மாவிடம் பேசி அவரண்ட சம்மதம் வாங்கிக்கறேன். நீங்க ஜோஸ்யத்த முழுசா படியுங்க சந்தேகமிருந்தால் என்னிடம் கூட கேட்கலாம் என்றாள் காயத்ரி.

“உனக்கு ஜோசியமும் தெரியுமா! என  ஆச்சர்யமுற்றான் ரகு.

24 வருஷமா அப்பா ஜோசியம் சொல்றத கேட்டுண்டிருக்கிறேனே. பொழுது போக வேண்டி அப்பா வைச்சிருக்கிற புஸ்தகங்கள படிச்சு தெரிஞ்சுண்டிருக்கேன். அது மட்டுமில்ல நீங்க அப்பாவண்ட கொடுத்த உங்கள் ஜாதகத்த என்னோடதோட பொருத்தமும் பார்த்து வச்சிருக்கேன். உங்களுக்கு சம்மதம் தானே? என்றாள் காயத்ரி.

சற்றே ஒடிசலான தேகத்துடன் பளீரென்ற அவளது வெண்மை நிற வனப்பை பார்த்து எச்சிலை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டு “ சம்மதம் என்றான் ரகு.

கோவில் மணி ஒலித்தது.

சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் 2 மாதங்கள் மீதமிருந்தது.


ஆக்கம் 

பழனியப்பன் 

------------------------------------------------------------

பின் குறிப்பு:
Google லில் தேடும்போது தலைப்பைப் பார்த்து எனது வலைப்பூவிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் நான் எழுதிய கதை இது (மண்டபத்துல யாரும் எழுதித்தரவில்லை). சக பதிவர்கள் இதை காப்பி செய்து தங்கள் கதை என உரிமை கோராமல் அவரவர் வலைப்பூக்களின் உள்ளடக்கத்திற்கு தகுந்தார்போல் முயற்சிக்கலாம். இக்கதை எழுத சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி? என்ற சிறுகதை உந்துதலாக இருந்ததை கூற விரும்புகிறேன்.
----------------------------------------------------------


படித்துப் பயனடையுங்கள்.

(இதே இணைய தளத்தில் கிடைக்கும் ஜோதிட மென்பொருள்  மிகச்சிறப்பான ஒரு இலவச மென்பொருளாகும். என் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது. ஒரே குறை அது ஆங்கிலத்தில் இருப்பதுதான். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி ஆராயலாம்.)

தமிழில் இது போன்ற தரமான மென்நூல் எதுவும் இணையத்தில் கிடைக்கவில்லை.எனினும்  அடிப்படை ஜோதிடத்தை பெரும்பாலான ஜோதிட வலைப்பூக்களும், இணைய தளங்களும் வழங்குகின்றன. நடைபாதை கடைகளில் கிடைக்கும் "குடும்ப ஜோதிடம்" எனும் புத்தகம். துவக்க நிலை ஆர்வலர்களுக்குப பயன்படும்.

மறவாதீர்கள் இவை அடிப்படைகள் மட்டுமே. விருப்பத்துடன் கற்றுக்கொண்டு ஜாதக அலசல்களை துவங்குங்கள். மேலும் பல ஜோதிட நூல்கள், எனது வலைப்பூ போன்ற எண்ணற்ற வலைப்பூக்களில் ஜோதிடர்கள் எழுதும் ஆய்வுக்கட்டுரைகளை படித்து வாருங்கள். ஜாதக அலசல்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் 5 ஆண்டுகளில் ஓரளவு ஜோதிடத்தில் தேர்ந்து விட முடியும்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

Friday 8 February 2013

நமது வீட்டிற்கு ராகு கேதுக்கள் விசிட் எப்போது?


ஏங்க ஜோஷ்யரே why this kolaveri? சும்மா இருக்க மாட்டீர்களா என கேட்பவர்களுக்கும் ஜோதிடத்தை, இயற்கையை, இறைவனைப் புரிந்து கொள்ள அணைவருக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் பதிவு அமையும் என்ற நம்பிக்கையிலும்  இப்பதிவை எழுதிகிறேன்.

இறைவன் என்று நாம் அழைக்கும் இயற்கையை அனுபவித்துத்தான் உணர முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை. அபூர்வமாக ஒருசிலருக்கு நேரடி தரிசனம் அவர்கள் நம்பும் வடிவத்தில் கிடைக்கக் கூடும். அவர்களே மகான்கள் எனப்படுகின்றனர். சாமான்யன்களான நாம் அவ்விறைவனை நோக்கி எடுக்கும் ஒருசில அடிகளாக இதுபோன்ற ஆய்வுகள் அமையட்டும்.

ஒரு ஜாதகருக்கு சர்ப்ப (பாம்பு) கிரகங்கள் என்று கூறப்படும் ராகு அல்லது கேதுவினுடைய திசையோ புக்தியோ அல்லது அவைகளின் சாரத்தில் (நட்சத்திரங்களில்) அமைந்த கிரகங்களின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து கோள்சாரத்தில் ராகு-கேதுக்கள் ஒருவரின் இருப்பிடத்தை குறிக்கும் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் வசிக்கும் வாழிடங்களுக்கு ராகு – கேதுக்களின் அம்சங்களான பாம்புகள் வரும் என்பது அனுபவ உண்மை. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இதை பரீட்சித்துப் பார்க்கலாம். ஜோதிடத்தை பரீட்சித்துப் பார்க்க முயல்பவர்களும்    இதை ஆராய்ந்து பார்த்து அதிசயிக்கலாம். தங்களது இருப்பிடத்திற்கு பாம்பு வந்து சென்ற காலகட்டத்தை ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பார்த்தும் இதை அறியலாம். ஒரு வீட்டில் வசிக்கும் பலரில்  யாரேனும் ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட ஜாதக நிலை இருந்தாலும் இது நடக்கும்.
   
நகர்ப்புறங்களில் 14ஆம் மாடியில் வசிப்பவர்கள் எங்கள் வீட்டிற்கு வரவில்லை என ஜோதிடரை இம்சிக்கக்கூடாது. அவர்களுக்கு அவை வேறு வடிவங்களிலும் வரும்.

உதாரணம்: சன்யாசி கேதுவின் அம்சம், விதவைப்பெண் ராகுவினுடைய அம்சம். இவை தவிர வேறு பல அம்சங்களும் உண்டு.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.