Sunday 5 May 2013

என்ன படிக்க வைக்கலாம்?

 பகுதி : 1

ஓவியக் கலைஞன்







"ஒரு மனிதனது வாழ்வில் வெற்றி தோல்வியை அவன் பிற மனிதனைத் தொடர்பு கொள்ளும் முறைதான் முடிவு செய்கிறது" என்றொரு கருத்து உண்டு.ஆனால் இது தவறான கருத்து. ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றி என்பது எது என்பதிலேயே பல கருத்து  வேறுபாடுகளுண்டு.இன்றைய கால கட்டத்தில்  பணம் சம்பாதிப்பதையே வாழ்வின் வெற்றியாக பெரும்பாலோனோர்     கருதுகின்றனர். பணம் சம்பாதிப்பது வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று அவ்வளவே. அதனால்தான் மேற்சொல்லப்பட்ட கருத்துக்கு மாற்றாக " வாழ்வில் வெற்றி தோல்விகளை ஒருவரது சுய விருப்பமே நிர்ணயிக்கிறது" என்கின்றனர் அறிஞர்கள்.

இதில் சம்பாதிப்பதில் ஒருவரது சுய விருப்பங்களை மீறி அவரது ஜாதக அமைப்பே முன்நிலை வகிக்கிறது. ஒருவன் எத்தகைய கர்மங்களைச் செய்து பொருளீட்டுவான் என்பதை ஒருவரது ஜாதகத்தில் 1,2,6,10 மற்றும் சனியின் நிலையைக் கொண்டு தெளிவாக அறியலாம். ஒருவர் எத்துறையில் பிரகாசிப்பார் என்பதை தகுந்த ஒரு ஜோதிடர் மூலம் அறிந்து அந்தத் துறையை தேர்ந்தெடுத்து உயர்கல்வியில் தங்களது குழந்தைகளை ஈடுபடுத்தினால், கல்விக்கும் உத்தியோகத்திற்கும் தொடர்பில்லாமல் இயந்திரவியல் படித்துவிட்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துப் பிழைக்கும் அவலங்கள் குறையும். இன்று கற்ற கல்விக்கு தொடர்பில்லாத துறைகளில் பெரும்பாலோனோர் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஆனால் ஈடுபாடுள்ள தொழிலைச் செய்வதில்தான்  ஒருவர் ஆத்ம திருப்தியடைய முடியும். மேலும்  அந்தத் தொழிலும் அவர்களால் சிறப்படையும். சில புத்திசாலிகள்  பிடிக்காத துறையில் வருவாய்க்காகப் பணிபுரிந்துகொண்டு  விருப்பமுள்ள மாற்றுத் துறையில் ஈடுபட்டுப் புகழடைந்து கொண்டிருப்பதை  வாசகர்கள் தற்காலத்தில் காணலாம்.

ஒருவர் எத்துறையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் பொருளாதார ரீதியாக எப்படி இருப்பார் என்பதை ஜாதகத்தில் தனகாரகன் குரு, இரண்டாம் பாவம், இரண்டாம் அதிபதி உள்ளிட்ட கிரக அமைப்புகள்தான் முடிவு செய்கின்றன. எனவே ஒருவர் ஈடுபடும் துறைக்கும் பொருளீட்டுதலுக்கும் தொடர்பில்லை என்பதை வாசகர்கள் நன்கு உணர வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள். ஜாதகி பிறந்தது 31.04.1977. இந்த ஜாதகத்தில் உள்ள ஒரு யோகத்தின் பெயர் காந்தர்வ யோகம். பல கலைகளில் திறமையும் பிரபலமும் அளிக்கும் யோகம் இது.  சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி இந்த நான்கு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் அமையப்பெறுவதால் இந்த யோகம் ஒருவருக்கு ஏற்படும். இந்த யோகத்திற்கான விதிகள்.
                           
                                 






1.சூரியன் உச்சமாக இருக்க வேண்டும்.
2.சந்திரன் பாக்கியஸ்தானத்தில் (9 மிடத்தில்) இருக்க வேண்டும்.
3. பத்தாமதிபதி கிரகம் ஏழாமிடத்திற்கு திரிகோணத்தில் இருக்க வேண்டும்.
4. லக்னாதிபதியை குரு பார்க்க வேண்டும்.

இக்கிரகங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களாவன.
சந்திரன்  - கற்பனா சக்தி
சுக்கிரன் - கலைகளில் ஈடுபாடு
சனி         - சிரத்தை, பொறுமை , உழைப்பு
புதன்       - மேற்கண்ட செயல்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் புத்திசாதுரியம்.
குரு        - படைப்பு உன்னதமாக வெளிப்பட உதவுபவர், வெற்றி, புகழ்.
சூரியன் - ஆளுமை மற்றும் ஒருங்கிணைத்தல்.

மேற்குறிப்பிட்ட நான்கு விதிகளில் முதல் 3 விதிகள் இந்த ஜாதகத்தின்  ராசிக்கட்டத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். நான்காவது விதி அம்சத்தில் அமைந்துள்ளது. லக்னாதிபதி சனியை(அம்சத்தில்) குரு ஒன்பதாம் பார்வையாகப் பார்ப்பதைக் கவனியுங்கள்.

இந்த யோகம் தவிர ஜாதகர் செய்யும் தொழிலுக்காண தொடர்புகள் இந்த ஜாதகத்தில் மேலும் சில உண்டு. அவை பின் வருமாறு.

1. ராசி, அம்சம் இரு கட்டங்களிலும் பத்தாமிடம் (செய்யும் தொழிலைக் குறிக்குமிடம்) கலைகளுக்குரிய சுக்கிரனின் வீடாகவே அமைந்திருப்பதைக் கவனியுங்கள்.
2. தனஸ்தானாதிபதியும்  (2 ஆமதிபதி) லக்னாதிபதியுமான  சனியானவர்  கலை மற்றும் கற்பனைகளுக்குரிய  சந்திரனின் வீட்டில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள். 
3. தனகாரகன் குரு சுக்கிரனின் வீட்டில் உள்ளது ஜாதகர் fine arts ல் ஈடுபட்டு பொருளீட்டுவதை உறுதி செய்கிறது.
4.மேலும் சந்திரனுக்கு இரண்டாமிடமும் சுக்கிரனின் வீடுதான் (துலாம்) என்பதையும்         கவனிக்க வேண்டும்.
        

நாம் ஆராய்ந்த ஜாதகத்திற்குரிய ஜாதகி ஓவியத்துறையில் ஈடுபாடுள்ளவர். ஓவியத்தை மாணவர்களுக்கு கற்றுத்தந்து பொருளீட்டுகிறார்.

தலைப்பின் கீழே நீராடும் யுவதியை முதன் முதலாகப் பார்ப்பவர்கள் அவசரப்பட்டு  ஜொள்ளுவிட  வேண்டாம். அந்த யுவதி பென்சில் டிராயிங் என்ற எளிய முறையில் வரைந்த ஒரு ஓவியம். நம்ப இயலாதவர்கள் கீழே அதை கர்ம சிரத்தையுடன் இத்தாலிய இளைஞனொருவன்  வரைவதைக் காணுங்கள்.









இது போன்ற மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,


பழனியப்பன்.

No comments:

Post a Comment