Sunday 21 December 2014

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும் விபரீதங்கள்.

விசித்திர ஜாதகங்கள்: பகுதி-1 

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும்  விபரீதங்கள்.

சிலவகை ஜாதகங்களை ஆராயும் போது ஜோதிடருக்கு இந்த ஜாதக அமைப்பு ஜாதகருக்கு என்ன கொடுமை செய்யுமோ என கவலை கொள்ளவைக்கும். ஜோதிடர்களால் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு ஏற்படுத்தும் பாதிப்பை சிலசமயம் துல்லியமாகக்கூட அளவிட இயலும் அதன் பாதிப்பை தடைசெய்ய ஜோதிடர்களால் மட்டுமல்ல யாராலும் இயலாது என்பதே உண்மை. துயரங்களைக் கலைய அதற்கு காரணமான படைத்தவனை சரணடைவதே சரியான முறை.

அந்தச் சரணாகதிகளும் படைத்தவனிடம் வைக்கப்படும் கோரிக்கை மனுக்களே. அனைத்து மனுக்களும் கனிவோடு பரிசீலக்கப்படும் என்பது உறுதியில்லை. காரணம் அவைகளும் கர்மவினைகளின்படியே பரிசீலிக்கப்படும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு இறுதியில் இறைவன் தங்களை வாழ்வை கடினப் படுத்துவான்  என ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொண்டு  கிரகப் பெயர்ச்சி காலங்களில் மட்டும் நீதிபதியின் முன்னாள் முறையிடும் வாதியைப்போல் பணிந்து வணங்குவது மட்டும்  பயன்தராது. இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம் கிரகப் பெயர்சிகளும் இன்றைய காலகட்டத்தில் காமர்ஷியலாகிவிட்டன என்பது வேதனைக்குரிய விஷயம். 

இந்து தர்மமும் அதன் பிரதான அங்கமான ஜோதிடமும்  சில விசேஷமான முறைகளின் மூலம் மனிதனது துயரங்களைக் குறைத்துக்கொள்ள வழிவகை செய்துள்ளது மறுக்க இயலாத உண்மை. ஆனால் இதைவைத்து நடக்கும் பொருளீட்டு முறைகள் இவற்றின் அற்புதங்களை சிதரடித்து வருவது வேதனை. நாத்திகர்களைவிட பொருளாதாரத்தை பிரதானமாக முன்னிறுத்தும் ஆத்திகர்களால் நமது மதம் மட்டுமல்ல ஜோதிடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுமே தவறானவை எனும் எண்ணம் கொள்ள வைக்கும். உண்மையான நமது இந்து தர்மத்தையும் அதன் அற்புதங்களையும் புரிந்துகொள்வோம். தவறான ஆத்திகன் மோசமான நாத்திகனைவிட வேகமாக மத-தர்ம நெறிகளை அழித்துவிடுவான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால கேது திசை இருப்பு: 2 வருஷம், 7 மாதம், 12 நாட்கள்.

ஜாதகத்திற்கு உரியவர் ஒரு பெண்.

இந்த ஜாதகத்தில் சூரிய சந்திரர்களும் அவர்களது வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கால சர்ப்ப தோஷ ஜாதகத்தில் 2 ஆம் வீட்டில் குரு உச்சமாகியுள்ளார். காரகன் பாவத்தில் இருப்பது பாதிப்பைத் தரும். “காரகோ பாவ நாசாய என்பது ஸ்லோகம். ஒரு கிரகம் எந்த வகையில் செயல்படும் என்பதை அக்கிரகத்தினது காரகத்துவங்கள், அதன் சுய பாவங்கள், அக்கிரகம் அமைந்த பாவம் மற்றும் அதன் பாவாதிபதி இவற்றுடன் அக்கிரகம் அமைந்த நட்சத்திராதிபதி & உப நட்சத்திராதிபதி போன்றவற்றைக் கொண்டு அறியலாம். (குறிப்பிட்ட கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் என்பதை அறியவேண்டும்.) 

மேற்கண்ட விதிகளின்படி குடும்பகாரகன் குரு குடும்ப பாவமான கடகத்தில் உச்சம் பெற்று அமைந்தது குடும்ப உறவில் ஏற்படும் சச்சரவைக் குறிப்பிடுகிறது. “அந்தணன் தனித்திருக்க அவனியில் அவதிகள் அதிகம் உண்டாம் என்பது ஜோதிடப் பழமொழி. குரு தனித்து உச்சமானது தனவரவில் சில நன்மைகளை தந்தது ஆனால் கணவருடனான் உறவில் அடிக்கடி சண்டைதான் ஏற்பட்டது. அதற்கு குரு ராசிக்கு 12ல் மறைந்ததும் ஒரு முக்கிய காரணம். 

5 ஆம் பாவாதிபதி புத்திரம், சிந்தனை மற்றும் பூர்வ புண்ணியத்தைக் குறிப்பவர். அந்த 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனானவர் எதிரியைக் குறிப்பிடும் 6 ஆம் பாவாதிபதியுடன் இணைந்தது ஜாதகியின்  சிந்தனையில் சண்டையிடும் மனோபாவத்தையும் நெருப்பு வார்த்தைகளையும் உமிழ வைத்தது. ஸ்திர ராசியான சிம்ம ராசிக்கு 9 ஆம் பாவமான மேஷம் பாதகஸ்தானமாகும். மேஷத்தில் சம வலுவுடைய சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து நின்றது தோஷம். இவ்விரு கிரகங்களும் சுக்கிரனின் சுய நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. செவ்வாய் 19.08 பாகை (பரணி-2) & சுக்கிரன் 24.48 பாகை (பரணி-4).

இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது என்னவெனில் சம வலுவுடைய இத்தகைய கிரகங்கள் 5 பாகை இடைவெளிக்குள் அமைந்துவிட்டால் கிரக யுத்தம் ஏற்பட்டு வென்ற கிரகம் தோல்வியுற்ற கிரகத்தை கொன்றுவிடும் அல்லது பிரிவினையை ஏற்படுத்திவிடும் (கணவன் – மனைவி இருவருள் ஒருவர் கொல்லப்படுவார் அல்லது பிரிவினை ஏற்படும்).

இந்த ஜாதகத்தில் 5 பாகை இடைவெளி உள்ளதால் இங்கு கிரக யுத்தம் பெரிய அளவில் இல்லை. மேலும் சுக்கிரன் சுய சாரத்தில் செவ்வாய்க்கு முன்னே உள்ளதால் சுக்கிரனை செவ்வாயைவிட வலுவுடையவராக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி சொந்த வீட்டில் சுக்கிரனுடன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்த 6 ஆம் பாவாதிபதி செவ்வாயானவர் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையில் ஜாதகியை கணவருடன் சண்டையிட தூண்டினார்.

சந்திரனின் வீடு 2 ஆமிட  தனித்த குருவால் பாதிக்கப்பட்டது அறிந்ததே. ராசியாதிபதி சூரியனானவர் குரு அமைந்த சந்திரனின் வீடான கடக ராசிக்கு பாதகஸ்தானமான 11 ஆம் இடம் ரிஷபத்தில் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி-3 ல் அமைந்து கெட்டுவிட்டார். அது லக்னத்திற்கு விரய ஸ்தானமும் ஆகி லக்னாதிபதி புதனும் சந்திரனின் ரோகிணி-4 ல் அமைந்து கெட்டுவிட்டார். சூரியனது வீடும் சந்திரனுடன் அமைந்த  பாவிகளான ராகு மற்றும் சனியால் கெட்டுவிட்டது.

இங்கு மற்றோர் உபவிதி உள்ளது அது "ராகுவானவர் எந்த பாவத்தில் அமைந்துள்ளாரோ அந்த பாவாதிபதி சூரிய சந்திரர்களுக்கு எதிராக செயல்படுவார் என்பதே அது. (சூரிய சந்திரர்கள் இருவரும் அமுது உண்ணும்போது தேவர்களின் வரிசையில் மாறி அமைந்த ராகுவை காட்டிக் கொடுத்ததால் ராகு இவர்கள் இருவருக்கும் பாதகத்தை தருவார் என்பது  இதன் புராண பின்னணி).   இந்த ஜாதகத்தில் ராகு அமைந்த பாவாதிபதி சூரியனது வீடாகவே அமைந்தது சோகமே.

இப்படி இரண்டு கிரகங்களோடு (சந்திரன்-சூரியன்) அவற்றின் பாவங்களும் (கடகம்-சிம்மம்) கெட்டுவிட்டால் அவற்றிற்குரிய திசா புக்திகள் கடும் பாதிப்பைத் தரும்.

ஜாதகிக்கு 2008 பொங்கலன்று சந்திரனின் திசை துவங்கியது.

அது முதல் செவ்வாய்-சுக்கிரனின் நிலையினால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கணவன்-மனைவிக்குள் கடுமையான சண்டை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல சூரியன்-சந்திரர்களும் அவர்களது வீடும் கெட்டதால் சூரிய-சந்திரனின் கோட்சார நிலையால் நிகழும் ஒவ்வொரு அமாவாசையன்றும் தம்பதிகளுக்குள்  கடுமையான சண்டை ஏற்பட்டது. 

கணவர் சற்று பொறுமைசாளி. ஆண் கிரகங்கள் ஜாதகியில் ஜாதகத்தில் கெட்டுவிட்டதிலிருந்து இதை அறியலாம். கணவர் வெள்ளிக்கிழமையையும் அமாவாசையையும் நினைத்தாலே நடுங்க ஆரம்பித்துவிட்டார். சண்டை ஏற்பட்டால் கணவர் அதன் தீவிரத்தைத் தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். அதற்குக் காரணமும் உள்ளது.

அது

ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் ரத்தத்தை குறிக்கும் கிரகங்கள். ஜாதகத்தில் மோசமான நிலையில் அமைந்த இவையிரண்டும் ஜாதகிக்கு இரத்தக் கொதிப்பை உருவாக்கிவிட்டன. மேலும் செவ்வாய் பரம்பரை வியாதியைக் குறிப்பிடும் கிரகமாகும். (ஜாதகியின் தாயார் இரத்தக் கொதிப்பால் உயிரிழந்தவர்)

எனவே வாக்குவாதத்தில் ஜாதகிக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி ஜாதகிக்கு ஏற்படும்  உயிராபத்தை தவிற்கும் பொருட்டு கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்.   

ஆனாலும் கணவரால் ஜாதகியின் உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.

காரணம்.

ஜாதகிக்கு மாரக திசையான சந்திரனின் ஆதிக்க காலம் 2008 லேயே தொடங்கிவிட்டது. சந்திரன் மனோ காரகன் என்பதால் ஜாதகியின் மனோபாவத்தில் அலோபதி மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத எண்ணத்தை உருவாக்கிவிட்டார். ஜாதகி அக்குபங்சர் மருத்துவத்தையே நாடினார். மரண நாளில் அக்குபங்சர் டாக்டரையும் படைத்தவன் வெளியூர் செல்லும் அமைப்ப ஏற்படுத்தினான். கடைசி நேரத்தில் சுய நினைவற்ற நிலையில் அலோபதி மருத்துவர்களாலும் ஜாதகியைக் காப்பாற்ற இயலவில்லை.  சந்திரன் மனோகாரகன் என்பதால் மனோநிலையின் மூலம்  ஜாதகிக்கு மரணவாய்ப்பை வழங்கினான். அது மட்டுமல்ல சந்திரன் தாயாரைக் குறிக்கும் மாத்ருகாரகன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஜாதகியின் தாயாரும் ரத்தக் கொதிப்பால் இறந்தார் எனக் குறிப்பிட்டேனல்லவா? அவர் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மரணமடைந்தார். சந்திரன் மாரகாதிபதி என்பதால் தாயாரை இழந்த துயரில் ஜாதகியும் அதே நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அதே ரத்தக் கொதிப்பால் மரணமடைந்தார்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.