Sunday 22 March 2015

சுக்கிர,சந்திரர்கள் பெறும் திக் பலம்

திக்பலம் – பகுதி 2

முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு வந்து பிறகு தொடரவும்.


படைப்பின் சூட்சுமங்களை புரிந்துகொள்ள ஒரு ஜென்மம் போதாது. படைதவனின் கொடுப்பினை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஜோதிடம் அதற்கு உறுதுணை புரிவதால் விசேஷத்தன்மை பெறுகிறது.

ஜனன கால சுக்கிர திசை இருப்பு :10 வருஷம், 5 மாதம், 6 நாட்கள்.

மேற்கண்ட ஜாதகம்  ஒரு பெண்மணியின் ஜாதகம்.

ஜாதகி ஒரு சாதாரண அழகியல்ல. உலக இளைஞர்களெல்லோரையும் ஜொள்ளு விட வைக்கும் பேரழகி. ஆனால் என் போன்ற ஜோதிட ஆய்வாளர்களை பரவசப்படுத்திக்கொண்டிருப்பது அவரது ஜாதகம் என்றால் அது மிகையல்ல. பிறந்த தேதியை வைத்து ஜாதகியாரென்று ஊகிக்க இயலாதவர்கள் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடர்களால் முன்னதாக பூட்ட கேஸ் என கைவிடப்பட்ட ஜாதகம்.ஜாதகி உலகப் புகழ் பெற்று  30 வயதை கடந்த பிறகும் கூட இவரது திருமண வாழ்க்கை பற்றி ஜோதிடர்களால் அறுதியிட்டு கூற இயலாத நிலையே நிலவியது எனில் இந்த ஜாதகத்தின் சிறப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஜோதிடர்களுக்கு ராகுவின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள பெருமளவில் உதவிய ஜாதகம் இது.

லக்னத்திற்கு 4 ஆவது பாவத்தில் சுக்கிரனும் சந்திரனும் திக்பல வலிமையுடன் உள்ளனர். ராகுவிற்கு உள்ள விசேஷம் என்னவெனில் அவர் உடன் இணைந்த கிரகங்களின் கதிர்வீச்சை தூண்டிவிடுபவர். ராகுவின் இந்த தன்மையால் சந்திரன் மற்றுன் சுக்கிரனின் திக்பல வலிமை பன்மடங்காகியது. லக்னத்திற்கு சுகஸ்தானமான 4 ஆமிடம் அதீத வலிமை பெற்றதால் அந்த வீட்டிற்குடைய குருவும் வலிமை பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளார்.

ராகு-கேதுக்களுக்குடைய மற்றொரு விசேஷம் என்னவெனில் அவை உடன் இணையும் கிரகங்கள் மற்றும் அமரும் பாவதிபதிகளின் காரக மற்றும் ஆதிபத்திய வலிமையை தாங்கள் கவர்ந்துகொண்டு அக்கிரகங்கள் வழங்கவேண்டிய பலன்களையும் தங்களது திசா புக்தியில் வழங்குவர். அதனால் ராகு-கேதுக்களுடன் இவ்வாறு சம்மந்தம் பெரும் கிரகங்கள்  தங்கள் வலிமையை இழந்துவிடும்.

மேற்கண்ட  ஜாதகத்தில் நான்காமிடத்தின் வலிமை கூடியதால் ஜாதகி சுகவாழ்வு வாழ்கிறார். சுகவாழ்வுக்குத் தேவையான தனவரவும் வளமாகவே உள்ளது. லக்னம் சந்திரனின் நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. வளர்பிறைச் சந்திரன் அழகுணர்ச்சிக்கு அதிபதியாவார். சுக்கிரன் அழகு மற்றும் ஆடம்பரம் இவற்றிற்கு அதிபதியாவார். ராகு தனது சுபாவப்படி இவ்விரண்டு விஷயங்களில் ஜாதகிக்கு தூண்டுதலை அதிகமாக்கினார்.  . 

ராகுவின் அம்சங்கள் எவை என ஆராய்ந்தால் அதில் பாம்புகள்,அந்நிய இனத்தவர்.,முஸ்லீம்கள்,விதவைகள்ஆகியோரை குறிப்பிடலாம். இதில் மற்றொன்று அதீத அழகும் கவர்ச்சியும் கொண்ட இளம் வயதுப்பெண்களும் ராகுவின் அம்சம்தான்.  ராகு திசையோ புக்தியோ நடப்பில் இருப்பவர்களுக்கு ராகுவின் இத்தகைய அம்சங்களில் ஒன்றையாவது தமது வாழ்க்கை வட்டாரத்தில் அடிக்கடி தென்படுவதை உணரலாம். ராகுவின் அம்சமாக அமைந்த ஜாதிகியும் பேரழகியே. தனது கொடுப்பினையான அழகையே முதலீடாகக் கொண்டு மாடலிங் உலகில் நுழைந்தார் . பிற்பாடு திரை உலகிலும் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார். கோடி கோடியாகச் சம்பாத்தித்தார். சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். உலகை தனது அழகால் வென்றவர் ஜாதகி.

ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் விரயாதிபதி சூரியன் நீச நிலையில் அமைந்து குடும்ப ஸ்தானத்தை தோஷப்படுத்துகிறார். மேலும் பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை வழங்கும் மாங்கல்யகாரகன் செவ்வாய் ஆட்சியில் இருந்தாலும் வக்கிரமாகிவிட்டதால் வலிமை இழந்தார். செவ்வாயை நீச சூரியன் பார்த்து செவ்வாய் தோஷத்தை மேலும் கடுமையாக்கினார்.

தனது காரகப்படி தனவரவிலும் ஆதிபத்தியப்படி சுகத்திலும் பாதிப்பை தரவேண்டிய பாதிப்பை குரு  தர இயலாதபடி ராகு தடை செய்துவிட்டார். ஆனால் இரண்டாமிடம் தோஷப்பட்டதாலும் குடும்ப காரகன் என்ற தனது மற்றொரு காரகத்தின்படியும் குரு ஜாதகியை கடுமையாகப் பாதித்துவிட்டார். இவ்விடத்தில் மற்றொரு ஜோதிட விதியும் செயல்படுவதை கவனிக்க வேண்டும். அது ஒரு கிரகம் தனது காரக அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வழங்கிவிட்டால் அது தொடருடைய இதர விஷயங்களில் கடும் பாதிப்பை தரக்கூடாது என்பதே அது.

ஜாதகிக்கு குடும்பம் அமைவதை குரு பாதித்தாலும் ராகு குருவை கட்டுப்படுத்துவதால் தானே ஜாதிக்கு திருமணம் செய்து வைத்து ஜாதகி சுகப்படுவதை ராகு இந்த ஜாதகத்தில் உறுதி செய்கிறார். ஜாதகிக்கு அவரது 17 வயதில் திக்பலம் பெற்ற சந்திர திசை வந்தது. சந்திரன் சுகஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் ராகுவிடம் தனது வலிமையை இழந்த சந்திரனால் ஜாதகிக்கு திருமணம் செய்துவைக்க இயலவில்லை. அடுத்துவந்த அஸ்டமாதிபதி செவ்வாயின் திசையிலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெறவில்லை. 08.04.2007 ல் ராகு பகவான் திசை துவங்கியது. 20.04.2007 ல் ஜாதகிக்கு திருமணம் நடந்தேறியது.

அற்புதமான திக்பலம் பெற்ற சுக்கிர சந்திரர்களால் நல்ல பலன்கள் கிடைத்தாலும் அவைகளின் செயல்பாடுகள் ராகுவால் கட்டுப்படுத்தப்பட்டதால் இந்த உலக அழகிக்கு அவரது 34 ஆவது வயதில்தான் ராகு தனது ஆதிக்க திசை துவங்கியதும் திருமணம் செய்து வைத்தார்.

ஜாதகி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்கில் சுக்கிரனும் சந்திரனும் உள்ளனர். சந்திரன் இதில் நீசம். இப்போது திக்பலம் எப்படி வேலை செய்யும் எனும் கேள்வி எழுகிறது.

சிற்றின்பத்திற்கு அதிபதியான சுக்கிரன் நீச நிலையில் உள்ள மனோகாரனான சந்திரனுடன் சுகஸ்தானத்தில் இணைந்ததால் ஜாதகரின் எண்ணமெல்லாம் சிற்றின்பத்திலேயே திளைக்கிறது. பார்க்கும் பெண்களெல்லாம் அனுபவிப்பதற்கே எனும் விபரீத எண்ணம் கொண்டவர் ஜாதகர்.

திக்பலம் பெறும் கிரகங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்றால் அவை  பாவிகளின் பார்வை சேர்க்கை பெறாமலும் பகை – நீசம் பெறாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

அடுத்த பதிவு

லக்னத்தில் அமையும் குருவின் திக்பலம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Friday 6 March 2015

சூரியனின் திக்பலம்

ஜாதகத்தில் கிரக மற்றும் பாவ வலுவை அளவிட 51 முறைகள் உள்ளதாக பண்டைய ஜோதிட  நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் திக்பலம்  பற்றி இங்கு காண்போம்.

எளிய முறையில் கூறுவதென்றால் சிங்கத்துக்கு வலிமை கரையில். முதலைக்கு வலிமை நீரில். இதே போன்று ஒவ்வொரு கிரகமும்  ஜாதகக் கட்டத்தில் கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய பாவங்களில் பெறும் சிறப்பான  அல்லது சௌகரியமான நிலையையே திக்பலம் என ஜோதிடத்தில் கூறுகிறோம்.

ஒவ்வொரு கிரகமும் எவ்விடத்தில் திக்பலம் பெறுகின்றன என்பது பின்வருமாறு.

கிரகம்                                                 திக்பலம் பெறும் கேந்திர ஸ்தானம்.
புதன் & குரு                          -           1 ஆமிடம்  (லக்ன கேந்திரம்)

சந்திரன் &  சுக்கிரன்          -           4 ஆமிடம்  (சதுர்த்த கேந்திரம்)

சனி                                          -           7 ஆமிடம் (சப்தம கேந்திரம்)

சூரியன் & செவ்வாய்        -           10 ஆமிடம் (தசம கேந்திரம்)

ராகு-கேதுக்கள் இரண்டும் தாங்கள் அமையப்பெறும் பாவாதியின் நிலையை ஓட்டிச் செயல்படும் நிழல்கிரகங்கள் என்பதால் இவற்றிற்கு திக்பலம் கிடையாது.

இப்பதிவில் நாம் தசம கேந்திர திக்பலனை ஆராய்வோம்.


அரசனும் சேனாதிபதியும் அதிகத் துடிப்போது  செயல்படும் இடம் போர்க்களமாகும்.  வெல்லவேண்டும்  என்ற துடிப்பு இருவருக்கும் போர்க்களத்தில் அதீதமாக இருக்க வேண்டும். அந்த அடைப்படையில்தான் அரச கிரகம் எனப்படும் சூரியனுக்கும் சேனாதிபதி எனப்படும் செவ்வாய்க்கும் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தை திக்பலம் கொண்டதாக ஜோதிடத்தில் வரையறுத்தார்கள். 


ஜனன கால சூரிய திசை இருப்பு: 4 வருஷம் 4 மாதம் 14 நாட்கள்.

ஜனன நேரத்தை இங்கு குறிப்பிடவில்லை . காரணம் அது சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான். எனினும் ஆய்வு ஜோதிடர்களுக்காக தசா இருப்பை குறிப்பிட்டுள்ளேன். அதைக்கொண்டு ஜனன நேரத்தை அறிந்து கொள்ளலாம். ஜாதகர் பிறந்தது ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி.   

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய ஆணின் ஜாதகத்தில் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தில் சூரியன் தனக்கே உரிய திக்பலத்துடன் சௌகரியமாக இருக்கிறார். சூரியன் அமைந்த தசம கேந்திரம் சூரியனின் ஆத்ம  நன்பணான புதனின் வீடாகும். அத்துடன் சூரியன் தன் நண்பன் புதனோடு இணைந்து அமைந்தது மிகச் சிறப்பு. போர்க்களத்தில் ஒரு அரசன் தன் நம்பிக்கைக்குரிய நண்பனோடு சேர்ந்து போரை சந்திப்பது போன்றது இது. அரசன் இதுபோன்ற சூழ்நிலையில் பதட்டமின்றி மிக வீரமுடனும் சாதுரியத்துடனும் போர்புரிய இது துணை புரியும். புதன் சாதுரியமான செயல்பாட்டிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியன் அமைந்த மிதுன ராசி பஞ்ச பூத அமைப்பில் வாயு ராசி என்பதால் அரசன் வாயுவின் தன்மைக்கேற்றபடி சில சமயம் தீவிரமாகவும் சில சமயம் அலட்டலில்லாமலும் போர்புரிவான். இந்த ஜாதகரும் களத்தில் எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமின்றி ஆனால் தீர்க்கமாகச் செயல்படுபவரே. வெற்றியை  மகிழ்வாய் எற்பவர். அதே சமயம் தோல்வி பெறும் நிலையிலும் கூட அசிங்கமாக அல்லாமல் கௌரவமாக ஏற்றுக்கொள்பவர். போரில் வெற்றி தோல்வி என்பது எதிர்பார்க்கக்கூடியதே. அரசன் (சூரியன்) சிறப்பாகப் செயல்பட்டாலும் ஜாதகரின் கன்னி லக்னத்திற்கு சூரியன் விரைய ஆதிபத்தியம் பெறுவதால் சில சமயம் தோல்வி தவிர்க்க இயலாததாகிவிடும். சில சமயம் மட்டுமே.  பல சமயம் தவிர்க்க இயலாமல் போனால் அவன் அரசனாக இருக்கவே தகுதியற்றவனாகி விடுவான் என்பதை கூறித்தான்  அறியவேண்டுமென்பதில்லை.

மேற்கண்ட ஜாதகர் அரசனல்ல. அரசு சார்பில் தலைமைப் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டவர். போர்க்களம் என்று குறிப்பிட்டது உண்மையில் போர்க்களமல்ல ஆடுகளம். அதுவும் கிரிக்கெட் ஆடுகளம். அரசனாகப் பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி.

மேற்கு இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வென்ற தோனியையும் சக வீரர்களையும் ஊக்குவிப்போம்.

போரின் வெற்றியில்  அப்போரில் பங்குபெறும் மன்னர்களின் ஜாதகம்  முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் போரில் பங்குபெறும் தேசங்களது  ஜாதக அமைப்பு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.மேலும் சம்பவம் நிகழும் நாளின் கோட்சார நிலை மற்றும்  பங்குபெறும் இரு அணி வீரர்களின் ஜாதகமும் கவனமாக ஆராயப்பட வேண்டும். இவை அத்தனையையும் ஆராய்ந்து ஆட்டத்தின் முடிவை துல்லியமாக கூறிவிட  இயலும்.

இப்போது நாம் மலேசிய ஆக்டோபசிடமோ அல்லது நியூசிலாந்து கிளியிடமோ ஆஸ்திரேலியாவில் நடக்கும் 11 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவைத்தெரிந்துகொள்வோம்.  

மற்ற கிரகங்களின் திக்பலத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.