Sunday 26 April 2015

மருத்துவக் கல்வி பயில வைக்கும் ஜாதக அமைப்பு.

ஒருவர் மருத்துவத்துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.

1.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன்.

2.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் (தன்வந்திரி என போற்றப்படும்) சூரியன்.      (ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.)

3.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.

4.கேதுவை மருத்துவக் கார கிரகம் என்று ஜோதிடம் போற்றுகிறது.

5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது    அத்துறையில்  தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.

கீழே உதாரண ஜாதகம்




லக்னமே சூரியனது லக்னமாக அமைந்தது சிறப்பு. தன வரவுக்குரிய 2 ஆவது பாவத்தில் உச்ச புதனுடன் சூரியன் கூடி புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். இது மருத்துவம் மூலமாகத்தான் தனவரவு என்பதை உறுதி செய்கிறது. அறுவைச் சிகிச்சையைக் குறிக்கும் செவ்வாய் உச்சம். ஒரு இடத்தில் செவ்வாயும் ராகுவும் கூடினால் அங்கு இரு கிரகங்களுமே வலுவடையும் என்பது ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் ராகு செவ்வாயை தூண்டுகிறார். நவாம்சத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியே லக்னமாக அமைந்து 10 ஆமிடமான சிம்மத்தில் சூரியன், புதன், செவ்வாயும் இணைந்து இருப்பது ஜாதகர் மருத்துவத்தொழில் புரிவார் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.

தொழில் தொடர்பாக விளக்கமாக ஆராய தசாம்சத்தை ஆராய்வது கூடுதல் தெளிவைத் தரும். தசாம்சத்தில் லக்னத்திற்கு இரண்டில் ஜீவன காரகன் சனி பகவான் லக்னாதிபதி செவ்வாயுடன் இணைந்து உள்ளார். (சனி-செவ்வாய் 2,3,6,9,10,11 ல் இணைந்திருப்பது கடுமையான தோஷமல்ல). ஐந்தாமிடத்தில் உள்ள கேது ஜாதகரது மருத்துவத் தொழில் ரீதியான ஈடுபாட்டை குறிப்பிடுகிறது. தசாம்சத்தில் பத்தாமிடத்தில் மருத்துவ காரகன் புதனே வீற்றிருப்பது ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்பு கொள்வார் என்பதை குறிப்பிடுகிறது.    


கீழே இரண்டாவது ஜாதகம். 


லக்னமே புதனின் லக்னம். தனவரவை குறிப்பிடும் இரண்டாமிடத்தில் செவ்வாய் பகவான் சனியுடன் சேர்க்கை. சந்திரன் உச்சமானதால் செவ்வாய் நீச பங்கம் பெறுகிறார். தனவரவு மருத்துவம் சார்ந்தது என்பது இதன் பொருள். ஐந்தாமிடமான சிந்தனை ஸ்தானத்தில் உள்ள சூரியனும் புதனும் ஜாதகரது சிந்தனையை மருத்துவத்தில் நிலை கொள்ள வைக்கின்றனர். சூரியன் உச்சன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நின்றதால் நீச பங்கம் பெறுகிறார்.

தசாம்சத்தில் தன வரவைக் குறிக்கும் 2 ஆமிடத்தில் தன்வந்திரியான சூரியன் உள்ளார். மருத்துவத்தின் மூலம் தன வரவு என்பதுடன் அரசாங்கத்தின் மூலம் தன வரவு என்பதையும் இது குறிப்பிடுகிறது. புதன் ஐந்தாமிடத்தில் இருந்து ஜாதகரின் சிந்தனையை மருத்துவம் நோக்கி திருப்பிவிடுகிறார். தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் செவ்வாய் ஆட்சியில் உள்ளது ஜாதகரின் தொழில் மருத்துவம் என்பதை உறுதி செய்கிறது.  

ஜாதகர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழ்பெற்ற மருத்துவர். எலும்புக்கு காரகத்துவம் பெற்ற சூரியன் வலுவிழந்து எலும்பு மஜ்ஜை மற்றும் கால்களுக்கு காரகத்துவம் பெற்ற செவ்வாயும் வலுவிழந்து சனியுடன் சேர்ந்து தோஷப்பட்டதால் மருத்துவரான ஜாதகர் உடல் ஊனமுற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது ஜாதகம் கீழே




ஜாதகி கண் மருத்துவத்தில் உயர் கல்வியான கண்ணொளியியல் (MS OPTHOLMOLOGY) பயின்றுகொண்டிருக்கும் மாணவி.

லக்னத்தில் மருத்துவக் கிரகங்களுள் முதன்மையான சூரியன் உள்ளார். ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்புபடுவதை இது குறிப்பிடுகிறது. சூரியனைத் தவிர்த்து இதர மூன்று மருத்துவக்கிரகங்களும் தன வரவைக் குறிக்கும்  இரண்டாமிடத்தில் சுக்கிரனுடன் உள்ளனர். தனவரவு மருத்துவத்தின் மூலம் வரவேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.சூரியன் கண்களைக் குறிக்கும் கிரகமாக நேந்திர காரகன் என்று போற்றப்படுபவர். உப நேந்திர காரகனாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுபவர் சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ஆமிடம் கண்களைக் குறிக்கும் பாவமாகும். குறிப்பாக வலது கண்ணை குறிப்பிடும் பாவமாகும். 12 ஆமிடம் இடது கண்ணைக் குறிப்பிடும்.

நேந்திர காரகன் சூரியன் லக்னத்தில் மருத்துவ காரகன் புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் உள்ளார். உப நேந்திர காரகன் எனப்படும் சுக்கிரன் நேந்திர ஸ்தானமான இரண்டாமிடத்தில் மருத்துவக் கிரகங்களோடு உள்ளார்.

தசாம்சத்திலும் லக்னம் மற்றும் தன ஸ்தானத்திலும் மருத்துவக்கிரகங்கள் நின்றது ஜாதகர் மருத்துவர் என்பதையும் மருத்துவத்தின் மூலம் தன வரவு ஏற்படும் என்பதையும் குறிப்பிடுகிறது.

கீழே நான்காவது ஜாதகம்



ஜாதகர் பல் மருத்துவர்.

புதன், செவ்வாய் ஆகிய இரு மருத்துவக் கிரகங்கள் உச்சம். உச்ச புதனுடன் மற்றொரு மருத்துவக்கிரகம் சூரியன் இணைவு மிகச் சிறப்பு. தசாம்சத்திலும் சூரியனின் சிம்மமே  லக்னமாக அமைந்து லக்னத்திலும் இரண்டாமிடத்திலும் மருத்துவக் கிரகங்கள் நின்றது மற்றும் லக்னாதிபதி சூரியனுக்கு செவ்வாயின் பார்வை ஆகியவை ஜாதகர் மருத்துவத்துறையோடு தொடர்புகொள்வார் என்பதைக் குறிக்கிறது.

சரி ஜாதகரை பல் மருத்துவத்தோடு தொடர்பு பெறக் காரணம் என்ன?

ஜோதிடத்தில் பற்களைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆவார். வெண்மை நிறத்தோடு தொடர்பு பெறும் கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் ஆவர்.

மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்திலும் சூரியனும் புதனும் சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் கேது சந்திரனின் வீட்டில் புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும் நின்றது மற்றும் புதன் சூரியனோடு சுக்கிரன் இணைந்தது ஜாதகரை பல்மருத்துவத்தில் ஈடுபடுத்தியது என்றால் அது மிகையல்ல.

இவ்வாறு ஜாதகங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒருவர் எத்துறையில் ஈடுபடுவார் என்பதை ஜோதிடத்தால் துல்லியமாக விளக்க இயலும்.

பள்ளி இறுதித்  தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் உயர்கல்வியை தேர்வுசெய்யுமுன் ஜோதிடத்தின் உதவியை நாடுவது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். நம் முன்னோர்கள் அருளிய அறிய வழிகாட்டியாம் ஜோதிடம் இது விஷயத்தில் வழிகாட்டி உதவும் என்பது உறுதி.

அடுத்த பதிவும் உயர்கல்வி பற்றியதே.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலை பேசி: 7871244501.

Sunday 12 April 2015

லக்னத்தில் அமையும் குருவின் திக்பலம்

மனித வாழ்க்கையில் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கும் ஆதார சுருதியாக விளங்கும் இரு கிரகங்கள் குருவும் சனியுமாவர்.சூரியனுக்கு அடுத்த பெரிய கிரகம் குருதான். சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து சொச்சம் கிலோமீட்டர்கள் விட்டம் கொண்ட குரு என்றழைக்கப்படும் வியாழன் கிரகத்தில் 1300 பூமிப்பந்துகளை  ஒன்றை     ஒன்று    தொடாமல்   அடுக்கிவிடலாம்    என்றால்   அதன் 


   படத்தில் குருவும் பூமியும்.

பிரம்மாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள். முழுதும் பனி உறைந்த கடல். சூரிய ஒளியில் 80 சதவீதத்தை பிரதிபளித்துவிடுகிறது. சூரிய ஒளியின் பெரும்பகுதியை கிரகிக்காமல் பிரதிபளித்துவிடுவதால் இதன் தரை வெப்பநிலையானது ஏறக்குறைய மைனஸ் 250 டிகிரி சென்டிகிரேடு ஆகும். இத்தகைய இதன் அதீத குளிர்ச்சியே எத்தகைய வெப்பக் கதிர்வீச்சுகளையும் சாந்தப்படுத்திவிடும். இத்தகைய இயல்புகளால்தான் குருவை சுபக்கிரகங்களில் முதன்மையானது என்கிறோம்.
 
அறிவு ஜீவிகளுக்கு காரகத்துவம் பெற்றவர் குரு. குரு லக்னத்தில் அமைந்தால் திக்பலம் பெறுகிறது. ஒரு அறிவு ஜீவி வாகன ஒட்டியாகிவிட்டால் பயணிப்பவனுக்கு பயணம் வெகு சுலபம் அல்லவா.

ஐஸ் கட்டியை கையில் வைத்தால் எப்படி உணர்வோம். ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் சில வினாடிகள். பிறகு...

பிறகு ஐஸ்கட்டி சுட ஆரம்பித்துவிடும். கையில் வைத்திருக்க இயலாது. அதுபோல்தான் குருவும். தனிப்பட்ட முறையில் சுபக்கிரகம் என்றாலும் குரு ஜாதகத்தில் தனித்திருப்பது சனியின் கதிர்வீச்சுக்கு ஒப்பான வெப்பக் கதிர் வீச்சைத்தரும் அதனால் தனித்த குரு ஓரளவு  பாவத்தன்மை பெறுகிறது.

சிறு வயதில் எங்கள் கிராமத்து அக்ரகாரத்தில் வேலையாக வெளியே செல்வோர் பிராமணர் ஒருவர் எதிரே வந்தால் திரும்ப வீட்டுக்கு வந்து சிறிது நேரங்கழித்து மீண்டும் செல்வதை கவனித்திருக்கிறேன். ஒற்றை பிராமணன் எதிரே வந்தால் போகும் காரியம் விளங்காது என்பது ஐதீகம். இது ஜோதிடத்திலிருந்து வந்த வார்த்தை. குரு ஜாதகத்தில் தனித்திருந்தால் கடும் சோதனைகளை தருகிறார். நற்பலன்களுக்கு பிற கிரகங்களுடன் சேர்க்கையில் அல்லது பார்வையில் இருக்க வேண்டும்.  . 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகர் ஒரு ஆண். 

ஜாதகத்தில் சுகஸ்தானமான நான்காமிடத்து அதிபதி 12 ல் மறைந்துவிட்டார். 2, 7 பாவங்களுக்கு அதிபதி செவ்வாயும் 12 ல் மறைந்துவிட்டதால் திருமணம் தடைபட்டது.குரு திக்பல வலிமையுடன் இருக்கும்போது நற்பலன்களை செய்வார் என்றாலும் தனது பகை வீடான துலாத்தில் அமைந்ததால் குடும்ப காரகன் என்ற அடிப்படையில் குரு ஜாதகருக்கு குடும்பம் அமையவிடாமல் தடுத்தார். ஆனால் குருவைவிட சுக்கிரனுக்கு வலு அதிகம் என்பதால் லக்னாதிபதியான சுக்கிரன் தனது ஆதிக்க திசையில் ஜாதகருக்கு சற்று தாமதமாக ஜாதகரின் 32 ஆவது வயதில் (கடந்த 2014 ல்) திருமண வாழ்வை அமைத்துக்கொடுத்தார். “குரு நடத்திவைக்க இயலாத திருமணத்தை சுக்கிரன் நடத்தி வைப்பார்” என்பது இப்படித்தான்.

2  ஆவதாக 1967 ல் பிறந்த மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே. 
                                                

ஜனன கால குரு திசை இருப்பு: 13 வருஷம் 0  மாதம் 22  நாட்கள்.


கடக லக்னத்தில் குரு உச்சம். திக்பல வலிமை வேறு. ஜாதகர் பால்யத்திலிருந்தே வெகு புத்திசாலி. தன காரகன் குருவும் ஜீவன காரகன் சனியும் சம்மந்தம் பெற்றால் தனம் புழங்குமிடத்தில் பணி அமைய வேண்டும். ஜாதகர் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் தன பாவமான இரண்டாமதிபதி சூரியன் உச்சம். சூரியனுக்கு 10 வது பாவம் திக்பலம் என்பதை தோணி ஜாதகத்தை உதாரணமாகக் கொண்டு ஆராய்ந்தபோது கண்டோம். சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் ராஜ கிரகம் என்பதிலிருந்து ஜாதகர் அரசு வங்கியில் பணியாற்றுவார் என்பதை அனுமானிக்கலாம்.

தனித்த குரு பிற கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் கொஞ்சம் சனியின் இயல்பை சார்ந்து செயல்படுவார். பொதுவாகவே ஒரு கிரகம்  எந்த இடத்தில் இருந்தாலும் அதன் சுய பாவத்தில் இருக்கும் கிரகத்தைச் சார்த்துதான் செயல்படும். இந்தச் சார்பு எந்த அளவு இருக்கும் என்பது அவ்விரு கிரகங்களுக்கிடையேயான உறவு மற்றும் வலிமையை சார்ந்தது. இந்த ஜாதகத்தில் சனியும் குருவும் சமக் கிரகங்களாகும். ஜாதகர் சிறந்த அறிவாளி என்பதிலிருந்து இங்கு குருவின்  காரகம் முதன்மை பெறுகிறது. ஜாதகர் ஒவ்வொரு வினாடியையும் உபயோகமாக செயல்படுத்த விரும்பும் மனோநிலை கொண்டவர். சற்று தனிமை விரும்பி. கடும் உழைப்பாளி. இவை சனியின் காரகத்துவங்களாகும். ஜாதகர் எனது மதிப்பிற்குரிய நண்பர்.

கீழே மூன்றாவது ஜாதகம்.
                                                   

துலாத்தில் உச்சம் பெரும் சனி சந்தோஷமான மனோ நிலையில் இருப்பார். உடன் தமக்கு சமமான வலிமையும் அறிவும் பொருந்திய குரு திக்பலத்துடன் உள்ளார். மேலும் சனியுடன் சனியின் ஆத்ம நண்பன் சுக்கிரன் அதன் ஆட்சி வீட்டில் உள்ளது.ஜாதகத்தில் நீதிமானும் சமக்கிரகமுமான சனியுடனும் தன்னைவிட வலிமை பொருந்திய எதிரியும் தனக்கு அடுத்த சுபக்கிரகமான சுக்கிரனுடனும் குரு உள்ளார். எனவே குரு இந்தச் ஜாதகத்தில் திக்பல வலுவுடன் இருந்தாலும் தன்னிச்சையாகச் செயல்பட இயலாத அமைப்பில் உள்ளார். அதனால் ஜாதகரின் செயல்பாட்டிற்காக தனது கதிர்வீச்சை சனிக்கும் சுக்கிரனுக்கும் வழங்கி ஜாதகரின் அதீத புகழுக்கும் சாதனைகளுக்கும் மறைமுகமாக உதவியுள்ளார்.சர லக்னமான துலாத்துக்கு பாதகாதிபதியான ராஜ கிரகம் சூரியன் இரண்டில் அமைந்தாலும் அங்கு லக்னத்திற்கு சுகம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான உச்ச சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்துள்ளதாலும் சூரியன் அமைந்த வீட்டதிபதி செவ்வாயும் உச்சம் பெற்றதாலும் ஜாதகர் ராஜ கர்மாவை ஏற்று ஒரு மிகப்பெரும் ராஜ்ஜியத்தை ஆட்சிபுரிய வேண்டும். .பல சாதனைகளை புரிந்து புகழ்பெற வேண்டியவராகிறார்.


இந்த ஜாதகர் யாரென்று முடிகிறதா உங்களால்?

கண்டிப்பு, நேர்மை, உறுதி, வீரம், மத நல்லிணக்கம், தயாள குணம் போன்றவற்றுக்காக வரலாற்று அறிஞர்களால் போற்றப்படும் மொகலாய மாவீரச் சக்ரவர்த்தி அக்பரின் ஜாதகம் இது. இஸ்லாமியர்களால் மட்டுமல்ல இந்துக்களாலும் போற்றப்பட்ட மாமன்னர்களான பல்பன், பாபர் வழிவந்த பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி அக்பர் ஆவார். அனைத்து மதங்களில் இருந்த நல்ல கருத்துக்களையும் ஒருங்கிணைத்து “தீன் இலாஹி” என்ற தனி மதத்தை மக்கள் கருத்து வேறுபாடுகளின்றி வாழ உருவாக்கினார் என்பது வரலாறு.

தனது ஆட்சியில் பல சிரமங்களை எதிர்கொண்ட மாமன்னன் ஹிமாயூன் ஒரு சிறந்த ஜோதிடரும் கூட. தனது மகன் அக்பரின் ஜாதகத்தை தானே 60 பக்கங்கள் கொண்டதாக விளக்கமாக குறித்துவைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆய்வு ஜோதிடர்களுக்காக அக்பரின் ஜனனக் குறிப்பு கீழே.

ஜனன நாள்:24.11.1542

நேரம்:  3:46:07 AM (இது ஜோதிட ஆராய்ச்சியாளர்களால் இன்றைய கிரக சஞ்சார விதிகளுக்கேற்ப திருத்தப்பட்ட நேரமாகும்.)

 ஜனன இடம்: உமர்கோட், பாகிஸ்தான். 

(ஜாதகத்தை ஆய்வு செய்ய விரும்பும் ஜோதிடர்கள் ஜெகன்னாத ஹோரா போன்ற உயர்தர வசதிகளுடைய ஜாதக மென்பொருளை பயன்படுத்தி ஆராயலாம்.)


ஜனன ஜாதகத்தில் குருவின் நிலை சரியில்லாதவர்கள் குரு அமைந்த நட்சத்திராதிபதியின் வலிமை அறிந்து உரிய வழிபாடுகளை மேற்கொண்டு குருவருள் பெறலாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.