Sunday 13 December 2015

வீடு பாக்கியம்....

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் அத்தியாவசிய தேவைகளாகின்றன.

உணவுத்தேவைக்கே அல்லல்படும் இன்றைய உலகில் வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு என்றுதான் கூறவேண்டும். சிலருக்கு அது மறுக்கப்பட்டிருக்கும் சிலருக்கு அளவுக்கு அதிகமாகவும் அது வழங்கப்பட்டிருக்கும். மறுக்கப்பட்ட பாக்கியங்களை ஒருவர் அடைய முயன்றால் அது ஒருவரது விதிக்கும் ஆசைக்குமான TUG OF WAR தான். பூர்வ பாராசரியம் போன்ற பண்டைய ஜோதிட நூல்கள்  ஜாதகப்படி ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும்  பாக்கியங்களை தெளிவாக விளக்குகின்றன.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
09.10.1972 – 7.10 PM, காக்கிநாடா.




வீடு பாக்கியத்திற்கு ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய கிரகங்கள் பூமிகாரகன் செவ்வாய் மற்றும் வீடு காரகன் சுக்கிரன் ஆகியோர். இவற்றோடு வீடு பாக்கியத்தை குறிக்கும் நான்காம் பாவம், அதன் பாவாதிபதி மற்றும் இக்கிரகங்களை பார்க்கும் ஏனைய கிரகங்களையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் கேது அமர்ந்துவிட்டார். கேது செவ்வாயைப்போன்று பலன் தருபவர் என்பதால் வீடுபாக்கியத்திற்கு கேது தடைசெய்யமாட்டார். மேலும் சுகஸ்தானமான சதுர்த்த கேந்திரத்தில் (நான்காமிடம்) அசுப கிரகமான கேது அமர்வது  ஆரோக்கியத்தில் வேண்டுமானால் சில பாதிப்புகளை தரலாம் ஆனால் கேது வீடுபாக்கியம் அமைய தடைசெயயமாட்டார். ஆனால் நான்காம் அதிபதி சந்திரன் ஆறாம் அதிபதி புதனுடன் இணைந்து 7ல் நின்றதுதான் தோஷம். பூமிகாரகன் செவ்வாய் 6 ஆம் பாவத்தில் பகைவீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனுடன் இணைந்து மறைந்துவிட்டார். “கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்” என்பது ஜோதிடப்பழமொழி. சுக்கிரனுக்கு இருபுறமும் பாவிகள் நின்றதால் கடும் பாவ கர்தாரி யோகத்தில் வீடுகாரகன் சுக்கிரன்.

நான்காம் பாவத்தை லக்ன பாதகாதிபதி சனி வக்கிரகதியில் ரிஷபத்தில் நின்று 3 ஆம் பார்வையாக பார்ப்பது இந்த ஜாதகத்தில் வீடு பாக்கியத்திற்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய கடுமையான தோஷம் ஆகும். இதன் பொருள் சனி அல்லது சனி பார்வை பெறும் கிரகங்களின் திசா-புக்திகளில் பாதிப்பு நான்காம் பாவத்திற்கு ஏற்ப்படும் என்பதே ஆகும்.

லக்னரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை ராசியைக்கொண்டு ஒப்புநோக்கினால், ராசிக்கு 4 ஆம் பாவாதிபதி சனி 8 ல் மறைந்துவிட்டார். அதோடு ராசினாதனும் வீடுகாரகனுமான சுக்கிரன் தனது பாவத்திற்கு பாதகஸ்தானத்தில் (11 ல்) நின்றுவிட்டார்.  ராசிக்கு பாதகாதிபதி சூரியனுடன் 12 ல் பூமிகாரகன் செவ்வாய் மறைந்துவிட்டார்.

இவை அனைத்தும் ஜாதகருக்கு வீடு பாக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகங்களை தெளிவாக உணர்த்துகின்றன.

ஜாதகருக்கு 2009 துவக்கத்திலிருந்து ஆறாம் அதிபதியான புதனின் திசை நடப்பில் உள்ளது. புதனின் வீட்டில் செவ்வாய் நின்றதாலும் புதன் 4 ஆம் அதிபதியுடன் இணைவு பெற்றதாலும் புதன் திசையில் ஜாதகர் பல்மாடி அடுக்குவீடு (APARTMENT) கட்டினார். (லக்னாதிபதி கிரகம் சூரியன் போன்ற ராஜ கிரகத்துடன் இணைந்தால் உயர்வாகத்தான் சிந்திப்பார்.)



16.09.2011அன்று ஆறாம் அதிபதி புதன் திசையில் லக்ன பாதகாதிபதி சனி பார்வை பெற்ற 4 ஆம் இடத்தில் சந்திரனின் வீட்டில் நின்ற கேதுவின் புக்தியில் சந்திரன் அந்தரத்தில் ஜாதகரின் வீடு இடிந்து விழுந்தது. பொதுவாக ராகு-கேதுக்கள் தாங்கள் நின்ற பாவாதிபதியின் செயலை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. சனி பார்வையால் கேது கெட்டுவிட்டதால் கேது நின்ற பாவாதிபதி சந்திரனும் பாதிப்பைத்தான் தரவேண்டும்.

அன்றைய கிரக நிலைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

திசா புக்திகள் பாதிப்பை எப்படி வழங்கின என்பதை அறிந்தாலும் கோட்சாரத்தில் இதனை உறுதி செய்துகொள்ளவேண்டும்.  கோட்சாரத்தில் பூமிகாரகன் செவ்வாயும் வீடுகாரகன் சுக்கிரனனும் நீசமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. ஜனன ஜாதகத்தில் 4 ஆம் பாவத்தை பார்வை செய்யும் சனி கோட்சாரத்தில் நீச சுக்கிரனுடன் இணைந்து வீடு பாதிப்படைய தனது பணியை துல்லியமாகச் செய்துள்ளது கவனிக்கத்தக்கது. லக்னாதிபதியும் ராசியதிபதியும் நீசமானதுடன் ஜாதகரை தாங்கிப்பிடிக்க வேண்டிய பாக்யாதிபதி குரு நின்ற பாவாதிபதி செவ்வாய் நீசமானதால் வலுவிழந்துவிட்டார் மேலும் வக்ரமும் அடைந்து மிக பலகீனமாகிவிட்டார். பூர்வ புண்யாதிபதி சூரியன் ஆட்சியில் இருந்தாலும்  ஆறாமதிபதியும் திசா நாதனுமான புதனுடன் இணைவு பெற்றதாலும் பாவகர்த்தாரி யோகம் பெற்றதாலும் கெட்டுவிட்டார்.

எனவே ஒரு அசாதரணமான செயலை செய்யத் துவங்குமுன் அது தொடர்புடைய கிரகங்களின் வலு ஜாதகத்தில் எவ்விதம் உள்ளது என்பதை அறிந்துகொண்டால் பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.

மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.