Monday 30 October 2017

ஆத்ம காரகனும் தாரா காரகனும்.

ஜோதிடம் ஒரு கடல் அதனால்தான் எங்களது ஜோதிட பகிரி குழுவுக்கு ஜோதிட சாகரம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு ஜாதகத்தை அலச பல்வேறு முறைகளை ஜோதிடத்தில் பயன்படுத்துவோம். அதில் ஒன்று ஜெயமினி முனிவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ள ஆத்ம காரகன் மற்றும் தாரா காரகன் நிலைகளைக்கொண்டு ஆராய்வது. இவர் பிரகத் ஜாதகத்தை இயற்றிய வராக மிகிரருக்குப்பின் வந்த முக்கியமான ஜோதிட அறிஞர். 

ஜனன ஜாதகத்தில் முப்பது பாகைகள் கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் அதிக பாகைகள் சென்றுள்ள கிரகம் ‘ஆத்ம காரகன்’ எனப்படும். மிகக்குறைந்த பாகை சென்றுள்ள கிரகம் ‘தாரா காரகன்’ எனப்படும். தற்போது இந்த முறையைக்கொண்டு ஜாதகத்தை அலசுவது குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் தொடர்புடையதான கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் நின்ற பாகையைக்கொண்டு ஜாதகத்தை அலசும் ஜோதிட ஆய்வாளர்கள் “பாகை முறை ஜோதிடம்” என்ற வகையில் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றனர். இந்த முறையில் கிரகங்கள் வெவ்வேறு ராசிமண்டலங்களில் இருந்தாலும் தங்கள் நிற்கும் பாகைகளுக்கு 3 பாகைகள் அளவில் நெருக்கமாக இருக்கும் கிரகங்கள் கிரகக்கூட்டணிபோல  ஒருங்கிணைந்து செயல்படும் என்பது இந்த முறையின் முக்கிய அம்சம்.  

இந்த பாகை முறை ஜோதிட அலசலில்  ஆத்ம காரகன் ஜாதகரை முன்னின்று வழிநடத்தி ஜாதகரின் கர்மங்களை நிறைவேற்ற உறுதுணை புரியும். இதற்கு எதிர்மாறாக தாரா காரகன் ஜாதகரின் கர்மங்களில் இடர்பாட்டை எற்படுத்தி ஜாதகரை தவறான பாதையில் வழிநடத்தும். எப்படி ஆயினும் இவ்விரு கிரகங்களும் ஜாதகரின் வாழ்க்கைப்பயணத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பின்வரும் சில ஜாதகங்கள் இந்த வகையில் இவ்விரு கிரகங்களின் செயல்பாடுகளை எடுத்துக்காட்ட அடியேன் ஆராய்ந்தது.

பகவான் ரமண மகரிஷியின் ஜாதகம் இது.



30.12.1879 - பாண்டிச்சேரி
ஜாதகத்தில் ஆத்ம காரகன் சந்திரன் – 29.23 பாகை.
தாரா காரகன் சுக்கிரன் – 1.36 பாகை.

சந்திரன் ஞான காரகன் கேதுவுடன்  நின்று ஆன்மீகத்தை நோக்கிய திசையில் ஜாதகரை உலகம் போற்றும் உத்தம குருவாக உயர்த்தியது. தாரா காரகன் சுக்கிரனுக்கும் குடும்ப ஸ்தானமான துலாத்திற்கும் 3, 8 க்கு உரிய செவ்வாய் பார்வை பெற்றுள்ளது. மேலும் இல்லற வாழ்வை குறிக்கும் 2,4,7,8,12 ஆகிய பாவங்களும் அதன் அதிபதிகளும் கெட்டுள்ளன. இந்நிலையில் கேதுவுடன் சேர்ந்துவிட்ட ஆத்ம காரகன் சந்திரன், சுக்கிரனின் இல்லற எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டு ஜாதகரை தனது பாதைக்கு திருப்பினார்.

அடுத்து ஹிட்லரின் ஜாதகம்.





20.04.1889 - ப்ராணா, ஆஸ்திரியா.
ஆத்ம காரகன் சுக்கிரன் – 25.32 பாகை.
தாரா காரகன் புதன் – 4.24 பாகை.

ஹிட்லரின் ஜாதகத்தில் ஆத்ம காரகன் சுக்கிரன் சுய சாரத்தில் நின்றாலும் பாவிகளுடன் இணைந்து மறைவு ஸ்தானத்தில் வலுவிழந்துவிட்டது. லக்னாதிபதியான தாரா காரகன் புதனுக்கும் இதே நிலைதான். மேலும் புதன் அஸ்தங்கமாகிவிட்டது.  இங்கு ஆத்ம காரகனாக சுக்கிரன் இருந்தாலும் விபரீத ராஜ யோகம் பெற்று வலுவாகிவிட்ட உச்ச சூரியன் மற்றும் ஆட்சி செவ்வாயை மீறி வக்கிரமடைந்த ஆத்ம காரகன் சுக்கிரன் தனித்து செயல்பட முடியாது என்பதே உண்மை. எனவே உலகை அழிக்கும் குரூரத்தனம் சூரிய செவ்வாயின் நிலையால் ஜாதகருக்கு ஏற்பட்டது.

அடுத்து இந்திய அரசியல்வாதிகளை அலறவிட்ட மக்களின் மதிப்பிற்குரிய நமது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். (T.N.சேஷன்) அவர்களின் ஜாதகம்.





14.05.1933 - பாலக்காடு
ஆத்ம காரகன் சந்திரன் – 27.02 பாகை.
தாரா காரகன் சூரியன் - ௦.52 பாகை

அரசு வகை யோகங்களை குறிக்கும் 5 ஆமிட அதிபதி சந்திரன் ஆத்ம காரகனாகி கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தில் நிற்கிறது. தாரா காரகனாகிய சூரியன் தனது வீட்டிற்கு தசம கேந்திரம் பெற்று, பாவத்தில் வருமான வழியை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் நின்றதால் அரசுப்பணியில் உயர்ந்த நிலை.  லக்னமும் ராசியும் குருவினுடையதாக அமைந்துவிட்டதால் நல்ல விஷயத்தில் உறுதித்தன்மை. எதிர்ப்புகளைக்குறிக்கும் 6 ஆமிடமான சூரியனின் சிம்ம ராசியில் லக்ன & ராசி அதிபதி குரு நின்றதால் அரசு வகையில் கடும் எதிர்ப்புகளுக்குடையே பணியாற்றினார்.

குருவின் லக்னத்தையும் ராசியையும் பெற்றதால் உணவு விஷயத்தில் தாராளம். (ஓய்வு பெற்ற பிறகு சமையல் கலை பற்றி விகடனில் தொடர் ஒன்று எழுதினார்.)

பாவத்தில் புத-ஆதித்ய யோகம் – மிகச் சிறந்த ஜோதிடர். (ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்கூட்டியே கணித்தவர். காஞ்சி மகா பெரியவரின் வேண்டுதலுக்கிணங்க ராஜீவ் காந்தியை எச்சரிக்கை செய்து TOP MOST URGENT” என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு ஒரு வாரம் கழிந்த பின் உரை பிரிக்கப்படாத அக்கடிதம் ராஜீவின் மேசையிலிருந்து கைப்பற்றப்பட்டது.)

ஐந்தாமதிபதி சந்திரன் ஐந்துக்கு ஆறில் மறைவு.. குரு லக்னத்திற்கு ஆறில் மறைவு. மகத்தான இம்மனிதரின் குழந்தைப் பேரின்மையை இது குறிக்கிறது.

தற்போது யாருக்கும் பாரமின்றி முதியோர் இல்லத்தில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். 

அடுத்து உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் உள்ள பில் கேட்சினுடையது.



இது ஒரு விசேஷ ஜாதகம்.


28.10.1955 - சியாட்டில், அமெரிக்கா.
ஆத்ம காரகன்  சனி – 29.29 பாகை
தாரா காரகன் குரு – 05.40 பாகை

ஆத்ம காரகன் சனி பொதுவான அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 5 ஆமிடத்தில் உச்சம் அது மட்டுமா அவரே ஜீவன காரகன், ஆயுள் காரகன், திடீர்  அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 8 ஆமிடாதிபதி. பாக்யாதிபதி போன்ற பல்வேறு பொறுப்புகளை இந்த ஜாதகத்தில் ஏற்றுள்ளார். அத்தோடு அவர் 8 க்கு  8 ஆமிடமான மூன்றாமிடாதிபதியான  சூரியனை நீசத்திலிருந்து விடுவித்து நீச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்துகிறார். மூன்றாமிடம் வெற்றியைக் குறிப்பிடுமிடம்  என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகின என்பதை அனைவரும் அறிவோம். 

சனி குருவின் விசாக நட்சத்திரத்தில் உச்சமானதால் தாராகாரகன் குருவும் குருவின் வீட்டில் நிற்கும் தன ஸ்தானாதிபதி சந்திரனும் சேர்ந்தே வலுவடைந்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்.  சுக்கிரன் ஆட்சி வீட்டில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமடையவில்லை. இந்த ஜாதகத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் இங்கு ஆத்ம காரகன் சனி தாரா காரகன் குருவின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று இருவரும் உச்ச பலனை ஜாதகருக்கு தரவேண்டிய நிலையில் அமைந்துள்ளனர் என்பது இந்த ஜாதகத்தில் உள்ள அபூர்வமான மற்றும் விசேஷமான ஒரு அமைப்பாகும்.

கால மாற்றத்தில் ஜோதிடமும் பல்வேறு நவீன யுக்திகளை கையாள்கிறது. பண்டைய முறையானாலும் தற்போது இந்த வகை ‘பாகை முறை ஜோதிடம்’ சிறப்பான பல கணிப்புகளுக்கு வழி வகுக்கிறது என்றால் அது மிகையல்ல.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி எண்: 8300124501

Wednesday 27 September 2017

ஜோதிடத்தில் கனி மரங்கள்.

ஜாதகத்தில் நான்காம் பாவம் ஒருவர் எந்த வகையான சூழலில் வசிப்பார் என்பதை குறிபிடுகிறது,.



ஒருவர் கனி தரும் மரங்கள் சூழ்ந்த வீட்டில் வசிக்க வேண்டும் எனில் அதற்கு சுக்கிரன் அனுக்கிரகம் வேண்டும். பெரிய அடர்ந்த உயர்ந்த மரங்களை சூரியன் குறிப்பார் என்றாலும் மனம் வீசம் மலர்ச்செடிகளையும் சுவை தரும் கனி மரங்களையும்  குறிப்பவர் சுக்கிரனாவார். எனது சிறு வயதில் வீட்டின் முன்பகுதியில் முல்லை, மல்லிகை செடிகளையும் பின்பக்கத்தில் மா மரங்கள் கொண்ட வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அது ஒரு பொற்காலம். 

கனி மரங்களில் இனிப்பான சதைப்பற்று கொண்ட மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, ஆப்பிள் ஆகியவை குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. திராட்சை, ஆரஞ்சு போன்ற ரசக்கனிகள் சுக்கிரனின் தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அதனால்தான் இறைவனுக்கு மனம் வீசும் மலர்களையும், கனிகளையும் படைக்கிறோம்.

கீழே கிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட கனிகள் சில.

இலந்தை பழம்        - சூரியனின் அம்சம்.

பேரிக்காய், தர்பூசணி  – சந்திரனின் அம்சம்.

முந்திரி               - செவ்வாயின் அம்சம்

நெல்லிக்கனி, கொடுக்காப்புளி - புதனின் அம்சமாகும்.

மா, பலா, வாழை – குருவின் அம்சம்

நாவல், திராட்சை, ஆரஞ்சு – சுக்கிரனின் அம்சம்.

பேரிச்சை, வேப்பம் பழம்  – சனியின் அம்சம்

பலவகை சுவை கொண்ட உண்ட பின் சுவை மாறும் கனிகள் ராகு-கேதுவின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டவை.

ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் வலு குறைந்தவர்கள் வாய்ப்பு இருப்பின் தொடர்புடைய மலர்களையும் கனி மரங்களையும் வீட்டில் பேணி வளர்த்து வந்தால் அவர்களுக்கு தொடர்புடைய கிரகங்கள் கருணை புரியும் என்பதும் குறிப்பாக சுவையும் ரசமும் கொண்ட குரு சுக்கிரனுக்குரிய கனி மரங்களை வீட்டில்  வளர்த்து வந்தால் வீட்டில் லக்ஷ்மியும் திருமாலும் வாசம் செய்வார்கள் என்பது அனுபவ உண்மையாகும். இவ்விரு கிரகங்களின் அருட்பார்வையை பெற்றவர்கள் பிற கிரகங்கள் தரும் சிரமங்களையும் கடந்திட வழி பிறக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கீழே சமீபத்தில் அடியேன் ஆராய்ந்த அன்பர் ஒருவரது ஜாதகம் கீழே.


தனுசு லக்ன அதிபதி குரு ஒரு ஜாதகரின் வசிக்கும் சூழலை குறிக்கும் நான்காம் பாவத்தில் ஆட்சியில் உச்ச சுக்கிரனுடனும் ராகுவுடனும் இணைந்துள்ளது. சுக்கிரன் நவாம்ச நிலைப்படி வர்கோத்தமம் என்பது அருமையான அமைப்பு. கேந்திரத்தில் ராகு-கேதுக்கள் நிற்பது ஒருவகையில் நன்மையே.  வலுவான மரங்களுக்கு ஆதிபத்தியம் பெற்ற பாக்யாதிபதி சூரியன் தனது சுய நட்சத்திரத்தில் உச்சம். தனது வீட்டில் உச்சமான சூரியனால் பூமி காரகன் செவ்வாயும் வலுவடைகிறது. தனது சுய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் செவ்வாய் நிற்பது கூடுதல் பலம். நீர் கிரகமான சந்திரன் தனது சுய நட்சத்திரத்தில் ஹஸ்தத்தில் நிற்பது சிறப்பே. புதனும் உச்சன் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் நின்றதால் வலுவடைகிறது. சனி ஜல ராசியான விருட்சிகத்தில் பகைவனின் வீட்டில் வக்ர நிலையில் நிற்பது ஒருவகையில் நன்மையே. 

ஜாதக அமைப்பின் பலனாவது ஜாதகரது வீட்டில் கனி தரும் பல மரங்கள் இருப்பது மட்டுமின்றி அவை வருடம் முழுதும் பலனளிக்கின்றன என்பது ஜாதகருக்கு இறைவன் கொடுத்துள்ள பாக்கியம் என்றே கூற வேண்டும். 

கிரகங்களின் அருளைப்பெற எளிய வழி அவைகளின் அம்சங்களை நேசித்து போற்றுவதே. எனவே கனி மரங்களை போற்றி வளர்த்து கிரகங்களின் அருளை பெறுவோம்.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 7871244501.

Saturday 26 August 2017

பகிரி




வாசக அன்பர்களுக்கு ஆசிரியரின் இதயங்கனிந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.


சுழி போட்டு செயல் எதையும் துவங்கு என்பது முன்னோர் வாக்கு.

அதன் அடிப்படையில் பல நாட்களாக பல்வேறு வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது வலைதளத்திற்காக பகிரி வழி தொடர்புக்குழு  (Whatsapp Group) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. "ஜோதிட சாகரம்"  என்ற பெயரில் அடியேனை நிர்வாகியாகக்கொண்டு  இயங்கி வருகிறது. இந்தக்குழுவில் ஜோதிடக்கருத்துக்கள், ஆய்வுச் செய்திகள், ராசி பலன்கள் வழங்க உத்தேசம். தனிப்பட்ட தங்களது ஜாதகத்தை ஆய்வு செய்துகொள்ள அல்ல என்பதை அறியவும். ஜோதிடத்தை உண்மையாக நேசிக்கும் ஆர்வலர்களும், ஜோதிடர்களும், ஆய்வாளர்களும் பங்குகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.  . விருப்பமுள்ள அன்பர்கள் தங்களைப்பற்றிய முழுவிபரங்களுடன் ஜோதிடத்திற்கும் தங்களுக்குமான தொடர்பு பற்றி சுருக்கமாக விளக்கி தங்கள் பகிரி (Whatsapp)  அலைபேசி எண்ணை குறிப்பிட்டு புகைப்படத்துடன் feedbackjn@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யவும். 

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்:7871244501

Sunday 20 August 2017

பெண்

இன்றைய காலத்தில் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றால் அதற்கு ஆச்சார்ய கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். 

இதில் குரு தன, குடும்ப காரகன் என்றால் அதை வளமையாக அனுபவிக்க சுக்கிரனே காரணமாகிரார். குரு வலுவாக இல்லாதிருந்து சுக்கிரன் வலுவாக அமைந்துவிட்டால் கூட அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.  பெண்கள் மகிழ்வாக இருக்கும் குடும்பத்தில் மகாலகஷ்மி வாசம் செய்கிறாள். பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வம்சத்தில் அதற்கு காரணமானவர்களை சுக்கிரன் தண்டிக்கிறார். இதை ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை கண்டு அறியலாம்.



“எங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லையோ
எங்கே பெண்மைக்கு மதிப்பில்லையோ
எங்கே பெண்கள் வஞ்சிக்கப்படுகிரார்களோ
அது மக்கள் வாழத்தகுதியற்ற பூமியாகும்”

என நமது நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன.

பெண் மனித வாழ்வின் இன்றியமையாத சக்தி.

சக்தி இல்லையேல் சிவமில்லை.

பெண் இல்லாத வாழ்க்கை பட்டுப்போன மரத்திற்குச்சமம்.

இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தற்கொலை செய்துகொல்பவர்களை தினசரிகளில் படிக்க முடிகிறது.

இது போன்ற நிலைக்கு 80 களில் துவங்கி 90களில் புற்றீசல்களாக உருவெடுத்த பாலினத்தை அறியும் மையங்களும் தவறான மருதுவர்களுமே காரணம். அதை நாடிச்சென்று தங்கள் பெண் செல்வங்களை அழித்தவர்களின் சந்ததியினரே இன்று பெரும்பாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

பெண்களை துன்புறுத்தினால் அல்லது அழித்தால் அவர்களது சந்ததியினருக்கு பெண் வகையில் குடும்ப சந்தோஷங்களோ பெண் வாரிசுகளோ இல்லாததை அல்லது மிகத்தாமதமாக அமைவதை காண முடிகிறது. ஒருவர் பெண்களுக்கு இழைக்கும் தீங்குகள் அவரை மட்டுமின்றி அவரது வம்சத்தையும் கடுமையாகவே பாதிக்கின்றன.

பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளை சேறும் என்பது மிகச்சரியான அனுபவ மொழியாகும்.

ஒருவர் அவருக்கு கேடு செய்யும் செயல்களை செய்யக்கூடாது என்பதுடன் அவரது சந்ததியினருக்கு செல்வங்களை சேர்த்து வைக்காமல் விட்டாலும் பரவாயில்லை. அவரது சந்ததியினருக்கு பாவங்களை தேடிவைதுவிட்டு செல்லக்கூடாது.

இது வெறும் பயமுறுத்தல் அல்ல.

பெண்களுக்கு பாதகம் செய்தவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். அவர்களது ஜாதகங்களை பெற்று ஆய்வு செய்து பாருங்கள். சுக்கிரன் எப்படி அமைத்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். நான் சொல்வதன் உண்மை உரைக்கும்.

பெண்களை வஞ்சிக்க துணை நின்றவர்கள், மருத்துவர்கள் அதை சார்ந்தவர்கள், கற்புடைய மங்கையரைப்பற்றி பழி சொன்னவர்கள் போன்றவர்களையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.

இது போன்ற செயல்களை செய்தவரின் சந்ததியினர் இராமேஸ்வரத்தில் மூன்றுமுறை தில ஹோமம் செய்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

வீட்டுப்பெண்களை கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அம்மன் கோவிலில் அக்கினிச்சட்டி எடுப்பதில் அணுவளவும் பயனில்லை என்பதை உணருங்கள்.


முக்கியமாக தொடர்புடையவர்களை மட்டுமின்றி அவர்களின் சந்ததியினரையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.  


மேற்கண்ட பெண்மணியின் ஜாதகத்தில் குரு உச்சமாகி வக்கிரமான நிலையில் இருக்கிறார். ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமானால் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும். இவ்விதிப்படி குடும்ப பாவமான 2 க்கு விரயத்தில் அமைந்த குரு திசையில் ராகு புக்தியில் ஜாதகி கணவரை இழந்தார். ராகு கணவரை குறிக்கும் 7 ஆமிடத்திற்கு சுகஸ்தானம் 1௦ உடனும், 7 ஆமிடத்திற்கு பாதக ஸ்தானமான 5 உடனும் தொடர்புகொண்டுள்ளது. (7 ஆமிடம் சர ராசியாகியதால் 7 க்கு 11 ஆன விருச்சிகம் பாதக ஸ்தானம் ஆகும்).   

கணவரை இழந்தபின் மருமகளை மாமனாரே அடைய எண்ணினார். இதற்கு தந்தை மற்றும் மாமனாரை குறிக்கும் சூரியன் காம களத்திர ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்ததே காரணமாகும். ஜாதகி கணவர் குடும்பத்தை விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார்.

சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகமாகி அது தொடர்புகள் ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்து லக்னத்தை பார்த்ததால் ஜாதகிக்கு அரசுப்பணியையும் முன்னமே கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற குரு ஐந்தாமிடத்தை பார்த்ததாலும் ஐந்தாமதிபதி செவ்வாய் 5 க்கு விரயத்தில் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டதாலும் கணவர் வகை தொடர்புகளின் இந்த செயல் இவர்களது வம்சத்தை பாதித்தது.

எப்படி எனில்.
ஜாதகியின் மகன் வேற்று ஜாதியில் மணமுடித்து தனது குல மரபுகளை விட்டு விலகிவிட்டார். எனினும் ஜீவன ரீதியாக கடினமான சூழ்நிலையிலேயே உள்ளார். ஜாதகியின் மகள் வேற்று குலத்தை சார்ந்தவரை காதலித்து மணமுடிக்க தயாராக உள்ளார்.

ஜாதகத்தில் 5, 9 மற்றும் அதன் பாவாதிபதிகளும் குருவும் கெட்டுவிட்டால் ஒருவர் தனது குலத்தை விட்டு விலகுகிறார் அல்லது தனது குல மரபுகளுக்கு மாறாக நடக்கிறார்.

கீழே வருவது ஒரு ஆணின் ஜாதகம் 


கன்னி லக்னத்திற்கு 7 ல் விரயாதிபதியும் தந்தையை குறிக்கும் கிரகமும் ஆன சூரியன் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து 6 ஆமதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். தனம் மற்றும் தந்தையை குறிக்கும் 2 , ஒன்பதாம் பாவாதிபதியான சுக்கிரன் விரயாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியுடன் இணைந்து குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். அஷ்டமாதிபதியான செவ்வாய் தனது கடும் பகைவனும் 5, 6 ஆம் பாவாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார்.

இவர்கள் நின்ற நட்சத்திராதிபதிகளும் பாவாதிபதிக்களுமான குருவும் சனியும் வக்கிரமாகி தங்களது இயல்பை இழந்த நிலையில் மேற்கண்ட மூவரையும் பார்வை செய்கின்றனர்.

ஜீவன காரகன் சனியும் தன காரகன் குருவும் வக்கிரகமாகி தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் நிற்பதும் லக்னாதிபதி புதன் ஆறாமதிபதி சனியுடன் பரிவர்த்தனை ஆகி 6 ல் நின்றதும் ஜீவனம் மற்றும் ஆரோக்ய ரீதியாக கடும் போராட்டங்களை ஜாதகருக்கு தந்துகொண்டிருக்கிறது.

ஜாதகரின் இந்த நிலைக்கு கீழ்வரும் தந்தையார் வகை கர்மங்களே காரணமாகும்.

ஜாதகரின் தந்தையார் அபலைப்பெண் ஒருவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கற்பவதியாக்கி கைவிட்டார். பிறந்த குழந்தை தமதில்லை என்று வாதிட்டார். நீதிமன்றத்தில் மரபுக்கூறு சோதனையில் குழந்தைக்கு தந்தை அவரே என்று நிரூபணமாகி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. 

ஜாதகரின் தாயார் ஒரு மாதம் ஜீவனாம்சம் பெற்ற பிறகு அவரது தந்தை ஜாதகியை வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். இப்போது மகன் விரும்பினாலும் தாயாரை தொடர்புகொள்ள இயலாத நிலை. ஜாதகர் ஜீவனம் ஆரோக்கிய வகை போராட்டங்களால் மனம் நொந்த நிலையில்   மூன்று முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். 

தந்தையின் செயல்களுக்கு தமையனே இப்படி அனுபவிக்கிறார் என்றால் ஜாதகரின் தந்தையின் நிலை என்னவாகி இருக்கும்.

இவற்றிற்கு காரணமான ஜாதகரின் தந்தையையார் அவரது ஒழுக்கக்கேடான வாழ்வினால்  எய்ட்ஸ் வியாதியில் நிராதரவான நிலையில் இறந்து போனார்.

பெண்மைக்கு தீங்கு விளைவித்தால் அது காரணமானவர்களை மட்டுமல்ல அவரது வம்சத்தையே கடுமையாக பாதிக்கிறது.

பெண் பாவம் பொல்லாதது என்பது அறிவுரை மட்டுமல்ல அது அனுபவமொழி.

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன், அன்பன்,

பழனியப்பன்,
கைப்பேசி எண்: 7871244501 

Sunday 30 July 2017

நித்ராதேவி!

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே

என்று தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடினர் கவிஞர்கள். தூக்கத்தைப் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்ந்தவர்கள் குறைவே.

ஆனால் தூக்கம் மனித வாழ்வில் ஒரு முக்கிய அங்கம். சராசரியாக ஒருவர் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது. உறக்கம் சரியாக இருக்கும்போது உடல் தனக்கேற்படும் உடல் மற்றும் மன ரீதியான  குறைகளை தானே நிவர்த்தி செய்துகொள்ள முனைகிறது. சரியான உறக்கம் உடலையும் மனதையும் சீரான இயக்கத்தில் ஆரோக்கியமாக வைக்கிறது.

இன்றைய அவசர உலகம் உறக்கம் மற்றும் உண்ணும் நேரத்தையும் குறைத்துவிட்டது. உழைக்கும் நேரம் இன்று அதிகம் உறங்கும் நேரம் குறைவு. பசியெடுத்து சத்தாக நிதானமாக உணவுண்ட காலம் போய் ருசிக்காக அவசர கதியில் உணவை வாயில் திணித்துக்கொள்ளும் காலமாக இன்றைய காலச் சூழல் மனிதனை மாற்றிவிட்டது.  இதுவே இன்று மருத்துவமனைகள் ஜனத்திரளால் நிரம்பி வழிய முக்கிய காரணம்.

மருத்துவ மனைக்கு சென்றால் மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி “நன்கு சாப்பிட முடிகிறதா? தூங்கமுடிகிறதா? என்பதுதான். இவ்விரண்டும் கெட்டுவிட்டால் உடலியக்கம் கெட்டுவிடுகிறது.



ஜோதிடத்தில் 12 ஆம் பாவம் உறக்கத்தைப்பற்றி தெரிவிக்கும். 12 ஆம் பாவாதிபதி,  அதில்; அமர்ந்த மற்றும் பார்த்த  பாவத்தின் அடிப்படையில் ஒருவரது உறக்க நிலையை பற்றி சொல்லலாம். போக பாக்கியத்தை தெரிவிக்கும் இடம் என்பதால் இவ்விடத்தை ஆராய்ந்தால் ஒருவரது பள்ளியறையில் தாம்பத்யம் நடக்குமா அல்லது சண்டை நடக்குமா என்பதையும் கூறிவிடலாம். 12 ஆம் பாவத்தில் நல்ல பாவாதிபத்யம் பெற்ற வளர்பிறை சந்திரன் அமர்ந்து ஒருவர் படுத்தால் உடனே உறங்கிவிடுவார்.


இதற்கு மாறான பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகர் ஓரளவு வசதியானவர். நல்ல அமைப்பான மாடி வீட்டில்தான் வசிக்கிறார். ஆனாலும் உறக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவத்தை நீச கிரகமான சந்திரன் பார்ப்பதால் மெத்தையை தவிர்த்து தரையில் படுத்தால்தான் நன்றாக உறங்க முடிகிறது என்கிறார்.

ஜோதிடத்தில் புதுமையான அனைத்து விஷயங்களுக்கும் ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் என்றால் அது ராகுவும் கேதுவும்தான்.  இந்த கிரகங்கள் 12 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளும்போது ஒருவரது உறக்கம் பாதிக்கிறது. அதை மீறி சில விஷயங்களும் நடக்கிறது என்பதையும் அவை என்ன என்பதையும் பின்வரும் ஜாதகம் கொண்டு ஆராய்வோம்.

ஜாதகிக்கு 12 ஆமிடத்தில் வளர்பிறை சந்திரன் உள்ளது அதுவும் வர்கோத்தமத்தில் உள்ளது. அதன் பாவாதிபதி செவ்வாய் வக்கிரமடைந்து ராகுவுடன் இணைந்துவிட்டாலும் செவ்வாய் உச்சன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்ததாலும் நவாம்சத்திலும் சிம்மத்தையே அடைந்து  வர்கோத்தமம் பெற்றுவிட்டதாலும் வலுவாகவே உள்ளது. குருவின் மீனத்தில் ஒரு உச்சன் அமர்ந்ததாலும் குருவும் உச்சன் சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து வலுவடைந்து 12 ஆமிடத்தை தனது 9 ஆம் பார்வையால் புனிதப்படுத்துகிறார். இதனால் ஜாதகிக்கு ராகே-கேதுக்களின் தொடர்பையும் மீறி நல்ல உறக்கம் கிடைக்கிறது.

சந்திரன் கேதுவில் அஸ்வினி – 1 ல் உள்ளது. கேது பனிரெண்டாம்  பாவத்தையும் அதில் உள்ள சந்திரனையும் அந்த பாவாதிபதி வக்கிர செவ்வாயையும் தனது பார்வையால் கட்டுப்படுத்துகிறார். நூதன மற்றும் தீவிர விஷயங்களுக்குரிய ராகு-கேதுக்கள் மேற்படி 12 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டுள்ளனர்.

இத்தகைய கிரக அமைப்பின் காரணமாக ஜாதகிக்கு நெருங்கிய தொடர்புடைய நபர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கனவிலும் சில சமயம் உடனேயும் யூகித்தறியும் ஆற்றல் ஏற்பட்டு அதனால் சிரமங்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டு வருவதாக கூறுகிறார். பெரும்பாலான சம்பவங்கள் விபத்து மரணம் போன்றவைகளே.

ஜாதகிக்கு இது போன்ற சம்பவங்களை  கனவில் காணும்போது உடல் முறுக்கி வலியில் தவிப்பதாக கூறுகிறார்.

ஜாதகியின் ஜனன நாளை கவனித்தால் இவரது உடல் எண் சந்திரனை குறிக்கும் 2 ஆகவும் உயிர் எண் ராகுவை குறிக்கும் 4 ஆகவும் உள்ளது மனதை குறிக்கும் சந்திரனுடன் ராகு இணைந்து ஆதிக்கம் செலுத்துவது எண்ணியல் ரீதியாக ஆய்வுக்கு உரியது.

ஜாதகிக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் கீழே.

2008 ஜூன்-ஜூலை – ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் அமைந்த  சூரிய திசையின் குரு புக்தியில் உறவுப்பாட்டியின் வீட்டில் உணவுண்டபின் பாட்டியின் மருமகள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளாததன் விளைவாக மருமகளின் காலில் விபத்தால் அடிபடும் என்று கணித்து ஆறரை மாதம் கழித்து நடந்தது. திடீரென மனதில் ஏற்பட்ட உள்ளுணர்வால் இதை கூறியதாக ஜாதகி கூறுகிறார்.

தனது சித்தப்பாவுக்கு காரில் விபத்து நேரும் என்று 2008 துவக்கத்தில் எச்சரித்துள்ளார். 2009 மே மாதம்  நடந்த கார் விபத்தில் சித்தப்பா குடும்பத்துடன் காரின் சென்ற அவரது சகலை விபத்து ஏற்பட்டு ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்.

2009 ஜனவரியில் ஒருநாள் இரவு 9.35 அளவில் ஒரு பிணம் எரிவதாக கனவு கண்டுள்ளார். அதே 9.35 மணி அளவில் தனது தாய் மாமா இரயில் விபத்தில் மரணமடைந்ததாக சற்று நேரத்தில் தகவல் வந்ததாக கூறுகிறார்.

02.03.2010 தந்தை வழி உறவில் தாத்தா இறந்து 12  வது நாளில் பாட்டியும் மரணமடைவார் என்று காதருகில் ஒரு குரல் கூறியதாக கூறினார். சரியாக அதே 12 வது நாளான 07.03.2010 அன்று பாட்டியும் மரணமடைந்தார்.

2010 ஜூன் மாதத்தில் கருவுற்றிருந்த தனது குழந்தையை பிரகாசமாக மிகுந்த ஒளியுடன் கனவில் கண்டதாக கூறினார்.

இதனை அடுத்து சில நாட்களில் இறந்த தனது மாமியார் தன்னுடன் கனவில்  வந்து பேசியதாகவும் அவரது உடல் சூட்டை கையில் பிடித்து தான் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

2016 ஜனவரியில் கனவில் தானும் மற்றொரு பெண்ணும் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது  தெரிந்த கர்பிணி பெண் மாடிக்கு வரமுற்பட்டுள்ளார். அவரை வரவேண்டாம் என உரத்த குரலில் கூறியதாகவும் அதை மீறி வந்ததால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார். கனவில் கண்ட கருச்சிதைவு உண்மையில் அந்த அறிந்த பெண்ணுக்கு மார்ச் மாதம் நடந்ததாகவும் ஆனால் கரு வளர்ச்சி ஜனவரியில் தான் கனவு கண்ட காலத்திலேயே நின்றுவிட்டதாகவும் மருத்துவர் கூறியதாக கூறுகிறார்.

அடியேனது ஆய்வு இந்த ஜாதகத்தில் இன்னும் தொடர்கிறது

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.