Monday 20 March 2017

விதியோடு ஒரு விளையாட்டு

வாழ்க்கை ஒரு புதிர்.

பதிலளிக்க இயலாத பல கேள்விகளை தன்னகத்தே கொண்டது.
வாழ்கையின் மற்றும் காலத்தின் சூட்சுமங்களை ஓரளவு அறிந்தவர்கள் நமது ஞானிகள். தங்களது தவ வலிமையால் தாங்கள் அறிந்துகொண்ட அதன் ரகசியங்களை சாதாரண மக்களுக்கு பயன்படும் வண்ணம் உபநிஷங்களாக எழுதி வைத்தனர். பிறகு அவை வேதக் குறிப்புகளாக தொகுக்கப்பட்டன.

வேதங்களின் சாரத்தை எளிமையாக விளங்கிக்கொள்ள எழுதப்பட்டவைகளே இதிகாச புராணங்கள். இவைகளிலுள்ள கருத்துக்கள் வாழ்கையையும் காலத்தையும் அறிந்து சாதாரண மக்கள் இவைகளின் வழியே பயணிக்கும்போது தங்களை காத்துக்கொள்ள எழுதப்பட்ட அற்புதங்கள் என்பது நமது புராணக்களை ஆழ்ந்து அனுபவிப்பவர்களுக்கு புரியும்.

வேதத்தில் காலத்தை கணிக்கும் கண்ணாடி என போற்றப்படுவது ஜோதிஷம். அதனால்தான் ஜோதிடம் வேதத்தின் கண் எனப்படுகிறது. தேர்ந்த ஜோதிடர்களால் கூறப்படும் அறிவுரைகள் தேவர்களின் அறிவுரைகளுக்கு ஒப்பானவை. அத்தகைய ஜோதிட அறிவுரைகளை பின்பற்றாமல் புரந்தள்ளி தங்களது வாழ்க்கை தங்களது கட்டுப்பாட்டை மீறிச்சென்றுவிடாது என எண்ணுபவர்களின் நிலை விதியோடு விளையாடுவதற்கு நிகரானது. ஜோதிட ஆலோசனைகளை சூழ்நிலைகளால் கடைபிடிக்க இயலாதவர்கள் வாழ்க்கையிலும் ஜோதிடரை மீறி விதி அவர்களை ஆட்டுவிக்கிறது என்றே பொருள்கொள்ள வேண்டும்.

கீழே நீங்கள் காணும் பெண்மணியின் ஜாதகம் அத்தகைய ஒன்று. இது நான் பலன் கூறிய ஜாதகமன்று. எனது ஆய்வுக்கு கிடைத்த ஜாதகம். 




லக்னாதிபதியே ஆனாலும் குடும்ப காரகன் குடும்ப பாவத்தில் இருப்பது “காரகோ பாவ நாசாய” எனும் ஜோதிட கிரந்தப்படி குடும்பத்தை கெடுக்கும். அப்படி ஒரு கிரகம் தனது காரகங்களில் ஒன்றில் கடும் பாதிப்பை தந்தால் அதன் மற்ற காரகங்களில் பாதிப்பை தரக்கூடாது என்பது ஒரு முக்கிய ஜோதிட விதியாகும். ஜாதகி கணினி மென்பொருளாளர் கைநிறைய தற்போதும் சம்பாதிப்பவர்.

குரு குடும்ப பாவத்தில் இருப்பதே ஒரு வகையில் கெடுதல் என்பதோடு அங்கு மாந்தியோடு இணைந்தது இன்னும் கேடு. குடும்ப பாவாதிபதி செவ்வாய் தனது பாவமான மேஷத்திற்கு பாதக ஸ்தானத்தில் லக்ன விரையத்தில் ராகுவோடு இணைந்து கடுமையாகவே கெட்டுவிட்டது. ஒரு பாவத்தின் பலனை ஆராயும்போது அந்த பாவாதிபதி தன் பாவத்திற்கு எந்த இடத்தில் எந்த நிலையில் உள்ளார் என்று கவனிப்பது மிக முக்கியமாகும்.

ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்கிரனும் களத்திர பாவாதிபதி புதனும் வக்கிரமடைந்து வலிமை இழந்துவிட்டனர். எனவே ஜாதகியின் பொதுவான சுகம் மற்றும் களத்திர வகை தாம்பத்ய சுகம் ஆகியவை கெட்டுவிட்டதாக பொருள் கொள்ளவேண்டும். படுக்கை சுகத்தை குறிக்கும் 12 ஆமிடத்தில் ராகு-செவ்வாய் அமைந்ததால் கெட்டுவிட்டது. அதன் பாவாதிபதி சனியும் வக்கிரமடைந்து வலிமை குறைந்தார்.

7 ஆமதிபதியுடன் சுக்கிரன் இணைந்ததால் காதல் திருமணம்.
ஜாதகத்தில் 2, 4, 7,12 ஆகிய பாவங்களும் குரு சுக்கிரன் இரண்டாம் அதிபதி, ஏழாம் அதிபதி ஆகியவை கெட்டுவிட்டன. ராசி ரீதியாகவும் இவை கெட்டுவிட்டது தெளிவாகவே தெரிகிறது.

ஜாதகிக்கு 19.06.2013 ல் சூரிய திசை ராகு புக்தியில் திருமணம் நடந்தது.

திருமண பொருத்தம் பார்க்கையில் ஜோதிடர் ஜாதக கிரக நிலைகளையும் ஜாதகியின் தனுசு ராசிக்கு துவங்கவிருக்கும் ஏழரை சனியையும் ஆராய்ந்துவிட்டு தற்போது திருமணம் நடந்தால் குடும்ப வாழ்வை இழக்க வேண்டியிருக்கும் என்றும் விரைய சனி முடிந்த பிறகு திருமணம் செய்வது நல்லது என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.

பொருளாதார வளத்தில் செழித்த ஜாதகி அதனைக்கொண்டு எத்தகைய சிரமங்களையும் எதிர்கொள்ளலாம் என்று எண்ணிவிட்டார். அதுமட்டுமல்ல தனது சம்பாத்யத்தை வேண்டியும் காதல் மனம் வேண்டாமென்றும் பெற்றோர்கள் நினைத்து தவறான கருத்தை ஜோதிடர் மூலம் கூறுவதாகவும் எண்ணியிருக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு பாவத்திற்கு முந்தைய பாவத்தின் திசை நடக்கையில் அந்த பாவம் பாதிக்கப்படும் என்பது ஜோதிடத்தில் பால பாடமாகும். சூரிய திசை லக்னப்படியும் ராசிப்படியும் ஆறாம் பாவ தொடர்பு கொண்டுள்ளதை கவனியுங்கள். ஆறாம் பாவம் வாழ்க்கைத் துனைவரை குறிப்பிடும் 7 ஆம் பாவத்திற்கு விரைய பாவமாகும். மேலும் சூரியன் களத்திர காரகன் சுக்கிரனுக்கும் களத்திர பாவாதிபதி புதனுக்கும் 12 ல் நிற்கிறது. வாழ்க்கைத் துனைவருக்கு பாதிப்பு என்பதை தெள்ளத்தெளிவாக குறிப்பிடும் அமைப்பு இது. ராகு குடும்ப காரகன் குருவின் சாரம் பெற்று தாம்பத்ய பாவமான 12 ல் நின்றதால் ராகு புக்தியில் திருமணம். அதை அடுத்து வந்த குரு புக்தியில் 2014 ல் ஜாதகி குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

கடந்த 2016 ஏப்ரல் இறுதி வாரத்தில் ஜாதகத்தில் 7 க்கு 12 ஆமிடத்தில் அமைந்த கேதுவின் புக்தி துவங்கியது. ஜாதகியின் தனுசு ராசிக்கு ஏழரை சனியின் கடுமையான கால கட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது. பொதுவாக ராகு-கேதுக்கள் தாங்கள் நிற்கும் பாவாதிபதி மற்றும் நட்சதிராதிபதிகளின் பாவ காரக பலன்களையே பிரதானமாக எடுத்துச் செய்வார்கள். சூரியனின் வீட்டில் சிம்மத்தில் சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்த கேது ஏழாம் இடம் குறிப்பிடும் கனவனை வீழ்த்தியது.

ஜாதகியின் சம்பாத்தியத்தில் தனது சம்பாத்தியத்தை மறந்து போகத்திலும் போதையிலும் திளைத்த கணவனுக்கு அதுவே பிரச்சனைகளுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் வழி வகுத்தது. விழைவு கணவன் தற்கொலை செய்துகொண்டான்.

புதன் தன் வீட்டில் வக்கிரமடைந்து அஷ்டமாதிபதியான வக்ரநிலை பெற்ற சுக்கிரனுடன் இணைந்து வக்கிரம் பெற்ற விரயாதிபதி சனியின் பார்வை பெற்றதைக்கொண்டு கணவனின் சூழ்நிலைகளை மதிப்பிடலாம்.

அறியாத விஷயங்களில் எதிர்பாராமல் மாட்டிக்கொண்டு விழிப்பது ஒருவகை என்றாலும் ஜோதிடர் தெளிவாக தனது வாழ்க்கை பற்றி எச்சரித்ததை மீறி நடந்ததால் ஏற்பட்ட விளைவை எண்ணி எண்ணி ஜாதகி வேதனையுறுவார்.

மருத்துவக்கல்லூரிகளில் பிணத்தைக்கொண்டுதான் உடற்கூறியல் பாடங்களை நடத்துவர். இத்தகைய எதிர்மறையான ஜாதகங்களை ஆராய்வது நம்மை காத்துக்கொள்ளும் வாய்ப்புகளை தேடவே என்பதை உணருங்கள். 

அடுத்த பதிவு “ஒருபுறம் அவசரம் மறுபுறம் ஆத்திரம்”.


அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி:7871244501.

No comments:

Post a Comment