Sunday 30 July 2017

நித்ராதேவி!

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே

என்று தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடினர் கவிஞர்கள். தூக்கத்தைப் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்ந்தவர்கள் குறைவே.

ஆனால் தூக்கம் மனித வாழ்வில் ஒரு முக்கிய அங்கம். சராசரியாக ஒருவர் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது. உறக்கம் சரியாக இருக்கும்போது உடல் தனக்கேற்படும் உடல் மற்றும் மன ரீதியான  குறைகளை தானே நிவர்த்தி செய்துகொள்ள முனைகிறது. சரியான உறக்கம் உடலையும் மனதையும் சீரான இயக்கத்தில் ஆரோக்கியமாக வைக்கிறது.

இன்றைய அவசர உலகம் உறக்கம் மற்றும் உண்ணும் நேரத்தையும் குறைத்துவிட்டது. உழைக்கும் நேரம் இன்று அதிகம் உறங்கும் நேரம் குறைவு. பசியெடுத்து சத்தாக நிதானமாக உணவுண்ட காலம் போய் ருசிக்காக அவசர கதியில் உணவை வாயில் திணித்துக்கொள்ளும் காலமாக இன்றைய காலச் சூழல் மனிதனை மாற்றிவிட்டது.  இதுவே இன்று மருத்துவமனைகள் ஜனத்திரளால் நிரம்பி வழிய முக்கிய காரணம்.

மருத்துவ மனைக்கு சென்றால் மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி “நன்கு சாப்பிட முடிகிறதா? தூங்கமுடிகிறதா? என்பதுதான். இவ்விரண்டும் கெட்டுவிட்டால் உடலியக்கம் கெட்டுவிடுகிறது.



ஜோதிடத்தில் 12 ஆம் பாவம் உறக்கத்தைப்பற்றி தெரிவிக்கும். 12 ஆம் பாவாதிபதி,  அதில்; அமர்ந்த மற்றும் பார்த்த  பாவத்தின் அடிப்படையில் ஒருவரது உறக்க நிலையை பற்றி சொல்லலாம். போக பாக்கியத்தை தெரிவிக்கும் இடம் என்பதால் இவ்விடத்தை ஆராய்ந்தால் ஒருவரது பள்ளியறையில் தாம்பத்யம் நடக்குமா அல்லது சண்டை நடக்குமா என்பதையும் கூறிவிடலாம். 12 ஆம் பாவத்தில் நல்ல பாவாதிபத்யம் பெற்ற வளர்பிறை சந்திரன் அமர்ந்து ஒருவர் படுத்தால் உடனே உறங்கிவிடுவார்.


இதற்கு மாறான பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகர் ஓரளவு வசதியானவர். நல்ல அமைப்பான மாடி வீட்டில்தான் வசிக்கிறார். ஆனாலும் உறக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவத்தை நீச கிரகமான சந்திரன் பார்ப்பதால் மெத்தையை தவிர்த்து தரையில் படுத்தால்தான் நன்றாக உறங்க முடிகிறது என்கிறார்.

ஜோதிடத்தில் புதுமையான அனைத்து விஷயங்களுக்கும் ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் என்றால் அது ராகுவும் கேதுவும்தான்.  இந்த கிரகங்கள் 12 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளும்போது ஒருவரது உறக்கம் பாதிக்கிறது. அதை மீறி சில விஷயங்களும் நடக்கிறது என்பதையும் அவை என்ன என்பதையும் பின்வரும் ஜாதகம் கொண்டு ஆராய்வோம்.

ஜாதகிக்கு 12 ஆமிடத்தில் வளர்பிறை சந்திரன் உள்ளது அதுவும் வர்கோத்தமத்தில் உள்ளது. அதன் பாவாதிபதி செவ்வாய் வக்கிரமடைந்து ராகுவுடன் இணைந்துவிட்டாலும் செவ்வாய் உச்சன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்ததாலும் நவாம்சத்திலும் சிம்மத்தையே அடைந்து  வர்கோத்தமம் பெற்றுவிட்டதாலும் வலுவாகவே உள்ளது. குருவின் மீனத்தில் ஒரு உச்சன் அமர்ந்ததாலும் குருவும் உச்சன் சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து வலுவடைந்து 12 ஆமிடத்தை தனது 9 ஆம் பார்வையால் புனிதப்படுத்துகிறார். இதனால் ஜாதகிக்கு ராகே-கேதுக்களின் தொடர்பையும் மீறி நல்ல உறக்கம் கிடைக்கிறது.

சந்திரன் கேதுவில் அஸ்வினி – 1 ல் உள்ளது. கேது பனிரெண்டாம்  பாவத்தையும் அதில் உள்ள சந்திரனையும் அந்த பாவாதிபதி வக்கிர செவ்வாயையும் தனது பார்வையால் கட்டுப்படுத்துகிறார். நூதன மற்றும் தீவிர விஷயங்களுக்குரிய ராகு-கேதுக்கள் மேற்படி 12 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டுள்ளனர்.

இத்தகைய கிரக அமைப்பின் காரணமாக ஜாதகிக்கு நெருங்கிய தொடர்புடைய நபர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கனவிலும் சில சமயம் உடனேயும் யூகித்தறியும் ஆற்றல் ஏற்பட்டு அதனால் சிரமங்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டு வருவதாக கூறுகிறார். பெரும்பாலான சம்பவங்கள் விபத்து மரணம் போன்றவைகளே.

ஜாதகிக்கு இது போன்ற சம்பவங்களை  கனவில் காணும்போது உடல் முறுக்கி வலியில் தவிப்பதாக கூறுகிறார்.

ஜாதகியின் ஜனன நாளை கவனித்தால் இவரது உடல் எண் சந்திரனை குறிக்கும் 2 ஆகவும் உயிர் எண் ராகுவை குறிக்கும் 4 ஆகவும் உள்ளது மனதை குறிக்கும் சந்திரனுடன் ராகு இணைந்து ஆதிக்கம் செலுத்துவது எண்ணியல் ரீதியாக ஆய்வுக்கு உரியது.

ஜாதகிக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் கீழே.

2008 ஜூன்-ஜூலை – ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் அமைந்த  சூரிய திசையின் குரு புக்தியில் உறவுப்பாட்டியின் வீட்டில் உணவுண்டபின் பாட்டியின் மருமகள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளாததன் விளைவாக மருமகளின் காலில் விபத்தால் அடிபடும் என்று கணித்து ஆறரை மாதம் கழித்து நடந்தது. திடீரென மனதில் ஏற்பட்ட உள்ளுணர்வால் இதை கூறியதாக ஜாதகி கூறுகிறார்.

தனது சித்தப்பாவுக்கு காரில் விபத்து நேரும் என்று 2008 துவக்கத்தில் எச்சரித்துள்ளார். 2009 மே மாதம்  நடந்த கார் விபத்தில் சித்தப்பா குடும்பத்துடன் காரின் சென்ற அவரது சகலை விபத்து ஏற்பட்டு ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்.

2009 ஜனவரியில் ஒருநாள் இரவு 9.35 அளவில் ஒரு பிணம் எரிவதாக கனவு கண்டுள்ளார். அதே 9.35 மணி அளவில் தனது தாய் மாமா இரயில் விபத்தில் மரணமடைந்ததாக சற்று நேரத்தில் தகவல் வந்ததாக கூறுகிறார்.

02.03.2010 தந்தை வழி உறவில் தாத்தா இறந்து 12  வது நாளில் பாட்டியும் மரணமடைவார் என்று காதருகில் ஒரு குரல் கூறியதாக கூறினார். சரியாக அதே 12 வது நாளான 07.03.2010 அன்று பாட்டியும் மரணமடைந்தார்.

2010 ஜூன் மாதத்தில் கருவுற்றிருந்த தனது குழந்தையை பிரகாசமாக மிகுந்த ஒளியுடன் கனவில் கண்டதாக கூறினார்.

இதனை அடுத்து சில நாட்களில் இறந்த தனது மாமியார் தன்னுடன் கனவில்  வந்து பேசியதாகவும் அவரது உடல் சூட்டை கையில் பிடித்து தான் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

2016 ஜனவரியில் கனவில் தானும் மற்றொரு பெண்ணும் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது  தெரிந்த கர்பிணி பெண் மாடிக்கு வரமுற்பட்டுள்ளார். அவரை வரவேண்டாம் என உரத்த குரலில் கூறியதாகவும் அதை மீறி வந்ததால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார். கனவில் கண்ட கருச்சிதைவு உண்மையில் அந்த அறிந்த பெண்ணுக்கு மார்ச் மாதம் நடந்ததாகவும் ஆனால் கரு வளர்ச்சி ஜனவரியில் தான் கனவு கண்ட காலத்திலேயே நின்றுவிட்டதாகவும் மருத்துவர் கூறியதாக கூறுகிறார்.

அடியேனது ஆய்வு இந்த ஜாதகத்தில் இன்னும் தொடர்கிறது

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.

Monday 24 July 2017

போர்க்களத்தில் சில புள்ளி மான்கள்.

மருத்துவ ஜோதிடம் – பகுதி 2

போர்களை வழியச்சென்று சந்தித்து தனது எல்லைகளை விரிவாக்கும் அல்லது இழக்கும் அரசர்கள் ஒரு புறம். தங்களது தினசரி வாழ்க்கையையே போர்க்களமாக சந்திப்பவர்கள் ஒருபுறம். இரு வகையினருக்கும் இறைவன் இப்பூமியில் இடம் கொடுத்துள்ளான்.

வாழ்க்கைப்பாதை சிலருக்கு எளிதானது. சிலருக்கு கடினமானது. அவரவர் கர்ம வினைகளின்படி அவை அமைகின்றன. 


பல போர்களை சந்தித்த அரசன் மாவீரனாகிறான்.

பல துயரங்களை சந்திக்கும் மனிதன் எந்தச் சூழ்நிலைக்கும் கலங்காத மன உறுதி பெறுகிறான்.

இரு வகையினரும் தங்களது உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்பதால் விதியே சில நேரங்களில் இத்தகையவர்களிடம் குழம்பி நிற்கிறது.  

பல வருடங்களுக்கு முன் என் கவனத்தை கவர்ந்த ஒரு கவிதை.

வாழ்க்கையே போர்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமோ!



சிலரது வாழ்க்கை போர்க்களத்தில் அகப்பட்டுக்கொண்ட புள்ளிமான்களைப்போன்றது. அடுத்த வினாடி தனக்கு ஆபத்து உள்ளதை அறிந்தும் கலங்காது போராடும் இவர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். அப்படி வியாதி என்ற ஒரு போர்க்களத்தில் அகப்பட்டு  போராடிக்கொண்டிருக்கும் நமது வாசக அன்பர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்கள் அவற்றிற்கு காரணமான ஜோதிட காரணங்களோடும் அவரின் ஒப்புதலோடும் இங்கே பதிவிடப்படுகிறது.


இவரது உடல் எண்  5. உயிர் எண் 3.

புதனுக்குரிய 5 ஆம் எண்ணும் குருவுக்குரிய 3 ஆம் எண்ணும் எதிர் எதிர் அதிர்வலைகள் கொண்டவை. புதனுக்கு 8 ல் குரு வக்கிரமாகி பகை வீட்டில் நிற்கிறார். கடுமையான நிலை இது.

லக்னம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. புதன் நவாம்சத்தில் நீசம். லக்ன புள்ளியின் உப நட்சதிராதிபதி சூரியன் ராசியில் நீசமாகியுள்ளார். நவாம்சத்தில் உச்சமாகியுள்ளார்.  இப்படி லக்னம் அமைந்த நட்சத்திராதிபதிகள் நீச நிலை பெற்றது இவர் வாழ்வில் துயரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை குறிக்கிறது. ஏனெனில் லக்னம், ஆத்ம காரகன் சூரியன், உடல் & மனோ காரகன் சந்திரன் ஆகியோர் நல்ல நிலையில் அமைந்துவிட்டால் ஜாதகர் எவ்வளவு துயரங்களையும் துணிந்து எதிர்கொள்ள இயல்பாகவே தயாராக இருப்பார்.

இங்கு ஆத்ம காரகன் சூரியன் நீசமாகி தனக்கு அஷ்டமத்தில் வக்கிர நிலையில் அமைந்த குருவின் சாரத்தில் விசாக நட்சத்திரத்தில் உள்ளார். நவாம்சத்தில் உச்சமானது நன்மையே. மனோ காரகன் சந்திரன் ஆறில் கேதுவுடன் சேர்ந்து மறைந்து கேதுவின் சாரம் (அஸ்வினி) பெற்றதும் சந்திரனின் வீட்டில் சனி அமர்ந்ததும் கடுமையானதே. வர்கோத்தமம் பெற்றதும் ஒருவகையில் நன்மையே. இதன் பொருளாவது துயரங்களின் அடிப்படையிலேயே ஜாதகர் துணிவை பெற வேண்டும் என்பதே.

இரண்டு வயதில் ஆறாம் பாவத்தில் அமைந்த கேதுவின் திசையில் கால புருஷ தத்துவத்தில் வயிறை குறிக்கும் சிம்ம ராசிக்குரிய நீசமான சூரியனது புக்தியில் கல்லீரல் கோளாறால் வயிற்றுப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் பாதிப்பு ஏற்பட்டது.   சூரியன் அமைந்த விசாக நட்சதிராதிபதி குருவே கல்லீரலை கட்டுப்படுத்துகிறார் என்பதும் குருவும் சூரியனும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஆறாவது வயதில் கேது திசை அஷ்டமாதிபதி  புதன் புக்தியில் வலது கால் சைக்கிளில் மாட்டி முட்டிக்கு  கீழ் தோல் முழுதுமாக உரிந்தது. அஷ்டமாதிபதி கொடுத்த கண்டம் அளப்பரியது என்றுதான் கூற வேண்டும். வலது பக்க முழங்காலின் கீழ் பகுதியை குருவும் இடது பக்க பகுதியை சனியும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது மருத்துவ உடலியல் ஜோதிடம் அறிவிக்கும் உண்மை. புதன் முழங்காலுக்கு கீழான பகுதியை குறிக்கும் பதினொன்றாம் பாவாதிபதி ஆகி அந்த பாவத்தை புதனுக்கு எட்டில் நின்ற குரு பார்வை செய்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. புதன் வலது பாதத்தை குறிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் நிற்கிறார். (சனி இடது பாதத்தை குறிப்பார்). எனவே புதன் புக்தியில் காலின் வலது புறம் பாதிக்கப்பட்டது. புதன் காரக அடிப்படையில் உடலின் தோலை ஆட்சி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையுடன் ஜாதகர் மிதிவண்டியில் செல்லும்போது இவ்விபத்து நடந்தது என்பதும். சூரியன் பாதங்களை குறிக்கும் 12 ஆமிடத்தில் நீசம் என்பதும் ஆய்வுக்குரியது.

10.02.1983ல் அதே புதன் புக்தியில் லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான விபத்து காரகன் செவ்வாய் அந்தரத்தில் விபத்தில் வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு 3 மாத மருத்துவமனை வாசம்.

எட்டாம் அதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்த சுக்கிர திசை துவங்கி சுய புக்தி முடிவில் தந்தைக்கு கர்மம் செய்ய வைத்தது. 

புதன் எட்டாம் அதிபதியாகி அதன் நட்சத்திரத்தில் அமைந்த சுக்கிரன் திசை கண்டத்தை தந்து கல்வியை தடைகளோடு தடுமாற வைத்தது. இதற்கு புதன் 12 ல் மறைவு பெற்றதும் முக்கிய காரணம். ஜாதகரால் சுக்கிர திசையில் கல்லூரிப்படிப்பை முடிக்க இயலவில்லை. ஆனால் புதன் பதினொன்றாம் பாவத்திற்கும் அதிபதியானதால் சுக்கிர திசையின் மறு பகுதியில் தான் சார்ந்த மருத்துவம், கணக்கு, புத்தகம், எழுதுதல் என்ற வகையில் ஜாதகரை தொடர்புபடுத்தியது. கட்டுரை, சிறுகதை நாவல், பத்திரிகை உதவி ஆசிரியர் என்ற வகையில்  ஜாதகரை வாழ்வில் முன்தள்ளியது. 

இரு பாவ ஆதிபத்தியம் கொண்ட ஒரு கிரகத்தின் வீட்டிலிருந்து திசை நடத்தும் ஒரு கிரகம் அதன் திசா புக்தி பலனை  அதன் இரு பாவங்களையும் சார்ந்து தர வேண்டும் என்ற விதிப்படி  சுக்கிரன் முதல் பத்து வருடம் 6 ஆமிட பலனை வழங்கி கடுமைப்படுத்தியது. ஆனால் சுக்கிர திசையின் இரண்டாம் பகுதி பத்தாண்டுகள் லக்ன பலனை வழங்கி தடைகளுக்கிடையேயும் ஜாதகரை அசுவாசப்பட வைத்தது. . 

அடுத்து  2௦௦4 ல் நீசமான சூரியனின் திசை துவங்கியது. அத்துடன் மற்றொரு கொடிய கால கட்டமும் துவங்கியது என்றே கூற வேண்டும். திசா நாதன் நீசமானதால் ஜாதகருக்கு புதனின் காரகத்துவமான பத்திரிகைத்துறையே ஈர்த்தது. கால புருஷ தத்துவப்படி முதுகுத்தண்டு மற்றும் முதுகெலும்பை குறிக்கும் சிம்ம ராசி அதிபதி சூரியன் நீசமாகி திசை நடத்தியதால் முதுகில் காச நோய் ஏற்பட்டு நீங்கியது.சூரியன் 7 மற்றும் 12 ஆகிய திருமண பாவங்களுடன் தொடர்புகொண்டதாலும் 2 ஆம் அதிபதி குரு 7 ல் நின்று சுக்கிரன் பார்வை பெற்றதாலும் சூரிய திசை புதன் புக்தியில் 16.11.2007ல் திருமணம்.

பொதுவாக திருமண தொடர்புடைய பாவங்களுடன் ராகு-கேதுக்கள் தொடர்பு கொண்டிருக்கையில் அவைகளுக்குரிய எண்களான 4 (ராகுவிற்குரியது) & 7 (கேதுவிற்குரியது) இவற்றில் திருமண தேதியை நிர்ணயிக்கக்கூடாது. மேற்கண்ட திருமண தேதியின் ஒற்றை இழக்க எண் 7 ஆனது கேதுவின் எண். கேது களத்திர ஸ்தானமான 7 க்கு விரையமான 6 ல் இருக்கிறது. திருமணம் நிலைக்கவில்லை. 04.08.2009 ல் சந்திர திசை துவங்கியது.. காச நோய்க்கு எடுத்துக்கொண்ட வீரியமிக்க மருந்துகளால் ஜாதகரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 26.08.2009 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராசிகளில் துலாம், விருச்சிகம் மற்றும் பாவங்களில் 7 & 8 மற்றும் கிரகங்களில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் , ராகு ஆகியவை சிறுநீரகங்களை கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகதிற்கான காரக கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரனும் சுக்கிரனின் பாவங்களும் பாவிகளாலும் பகைவர்களாலும் பாதிக்கப்பட்டுவிட்டன. சிறு நீரக நோய்க்கு காரணமான சந்திரன் நோயை குறிக்கும் ஆறாமிடத்தில் அமர்ந்து திசை நடத்துகிறது. 6 ஆமிடம் மனைவியை குறிக்கும் 7 க்கு விரைய பாவமும் கூட என்பதால் ஜாதகருக்கு சிறுநீரக பாதிப்பு தெரிந்ததும் மனைவி விலகிச்சென்றுவிட்டார்.

2010 மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம் என இரு மருத்துவர்களை கலந்துவிட்டு முடிவு செய்கிறார் ஜாதகர். அன்று முதல் இன்று வரை ஒரு வாரத்தில் சராசரியாக மூன்று முறை  மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்கிறார். பாதகாதிபதியான சந்திரன் நோயை கொடுத்து மாரகதுக்கு சமமான வேதனைகளை கொடுத்துக்கொண்டிருப்பதால் ஆயுளை பாதிக்கவில்லை.

தற்போது ஜனன கால ராகுவின் மீது கோட்சார குரு செல்லும்போது ஜாதகர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

சிறு சிறு விஷயங்களில் ஏற்படும் ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள இயலாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் மனோபாவம் படைத்தவர்கள் இது போன்றவர்களின் வாழ்க்கைப்போராட்டங்களை பார்த்தாவது  வாழ்வில் போராடி வெற்றிபெற முயல வேண்டும்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 07871244501

Sunday 16 July 2017

வரலாற்றுப்போர்கள்!

போர் கிரகம் செவ்வாய் கடகத்தில் நீசமாகியுள்ள தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்வருமா என “பெட்டிங்” நடந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த கால போர் நிலைகளை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுத வாசகர் ஒருவர் தூண்டியதன் விழைவே இப்பதிவு.  

ஒற்றுமையில்லாத இந்தியர்களை அந்நிய மண்ணிலிருந்து வந்த மொகலாயர்கள் வென்று ஆட்சி செய்தனர் என்றாலும் அவர்களால் இந்திய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள இயலவில்லை என்பதுதான் நிதர்சனம். குறிப்பாக பாபரின் காபூல்படை வீரர்களை டெல்லி வெயில் இந்தியாவிலிருந்து விரட்ட முனைந்தது என்பதுதான் வரலாறு.

ஒருவரின் பிறந்த நேரம் அவரது இயல்பை காட்டிவிடும் என்றாலும் ஒருவரது இயல்பு (சுபாவம்) நடத்தையில் வெளிப்பட்டுவிடும். இளம் வயதிலேயே கடும் போராட்டங்களை சந்தித்தவர்களையும் கடும் போர்களில் ஈடுபட்டவர்களையும் முழுமையான செவ்வாயின் அம்சமாக ஜோதிடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் ஜாதகம் இல்லாதவர்களுக்குக்கூட அவர்களின் அம்சங்களுக்குரிய காரக கிரகங்களின் நிலையைக்கொண்டு அவர்கள் கோட்சாரத்தில் எதிர்கொள்ளும் நிலைகளை ஆராயலாம்.  உதாரணமாக ஜோதிடன் எனில் புதன், பிராமணன் எனில் குரு, செவ்வாய் எனில் போர்வீரன் இப்படி.


                                  பாபர். நன்றி விக்கிபீடியா

இந்தவகையில் போரில் ஈடுபடும் இரு அரசர்களும் செவ்வாயின் அம்சங்களாக கருதப்பட்டாலும் அவ்விருவரில் யாரிடம் செவ்வாயின் காரக குணம் தூக்கலாக தெரிகிறதோ அவர்களே இருவரில் செவ்வாயின் முழுமையான அம்சம் எனலாம். மிகச்சிறந்த போர் வீரர்கள் செவ்வாயின் முழுமையான அம்சமே.


பாபரின் ஜாதகம் நம்மிடம் கிடையாது. ஆனால் பிறந்த தேதி தெரியும். இன்றைய உஜ்பெகிஸ்தானிலுள்ள அன்டிஜனில் 14.02.1483ல் பிறந்தார். லக்னம் தெரியாவிட்டால்  ராசி, ராசியாதிபதி மற்றும் சூரியனின் நிலையைக்கொண்டே ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டும். எதிரியின் ஜாதகம் இல்லாதபோது ஆறாவது பாவத்தைக்கொண்டு எதிரியின் நிலையை ஜோதிட ரீதியாக அளவிடவேண்டும்.



பாபர் பிறந்தநாள் முழுதும் சந்திரன் மகரத்தில்தான் உள்ளது. எனவே எந்த நேரத்தில் பிறந்திருந்தாலும் ராசி மகரம்தான்.  

மகர ராசி ஜாதகத்தில் ராசியாதிபதி சனி ராஜ்ய ஸ்தானமான 10 ஆமிடத்தில் உச்சம். உச்சம் பெற்ற ஒரு கிரகம் தான் நின்ற பாவத்தையும் அதன் அதிபதியையும், தனது சுய பாவங்களையும் அதில் அமர்ந்த கிரகங்களையும், தான் அமர்ந்த நட்சத்திராதிபதி மற்றும் அதன் பாவங்களையும் வலுவடையச் செய்யும்.

இவ்விதிப்படி சூரிய சந்திரர்கள் வலுவடைந்ததால் பாபர் ஒரு ராஜ வம்சத்தை சார்ந்தவர் என்பது ஜாதகப்படி தெளிவாகின்றது. ராசியதிபதி சனியும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகத்தில் அமைந்து சுகிரனுக்கு பாவகர்த்தாரி யோகமும் ஏற்பட்டுவிட்டது. எனவே இல்லறத்தில் பெரிய நாட்டமில்லை. பாபருக்கு ஏழு மனைவிகள், முதலாமவள் இவரின் ஈடுபாடின்மை காரணமாக ஓடிவிட்டாள். தனது சுயசைதையான பாபர் நாமாவில் இது விஷயத்தில் தனக்கிருந்த கூச்ச சுபாவத்தை குறிபிட்டுள்ளார். தைரிய ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் ஒரு உச்ச கிரகம் சுக்கிரன் நிற்பது ஜாதகரின் சிறப்பான வீரத்தை குறிப்பிடுகிறது. சதுர்த்த கேந்திரத்தில் போர் கிரகமான செவ்வாய் ராகுவுடன் கூடி நின்று சனி பார்வை பெறுவது போரில் ஈடுபடும் ஜாதகரின் கர்ம வினையை குறிப்பிடுகிறது. 

இனி பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் நடந்த முதல் பானிபட் போர் தினமான   21.04.1526 க்கு வருவோம்.  


பாபரின் மகர ராசியிலிருந்து எதிரியை குறிப்பிடும் 6 ஆம் பாவாதிபதி புதன் மீனத்தில் நீச்சம். எதிரி கிரகம் நீசமாகிறது எனில் போரில் எதிரி உயிரிழக்கிறான் என்று அர்த்தம். வீரம் வெற்றியை குறிக்கும் மூன்றாமிட அதிபதி குரு அதிஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் அதன் அதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளார். இது வீரமும் அதிஷ்டமும் இணைந்து செயல்படும் என்பதை குறிக்கிறது. ராசியாதிபதி சனி வெற்றி ஸ்தானமான மூன்றாமிடத்தில் நின்று அங்கு நீசமான ஆறாமதிபதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மிகச் சிறப்பு. பாபரின் ஜனன நாளில் தனது வீட்டில் ஆட்சியில்  அமைந்திருந்த போர் கிரகமான செவ்வாய் உச்ச கிரகமான சூரியனுடன் கோட்சாரத்தில் சேர்ந்து நான்காவது கேந்திரத்தில் நின்று அதீத வலு பெற்றுள்ளது. எட்டாமதிபதி சூரியன் வலுவடைந்தால் ஜாதகரின் ஆயுளுக்கு தோஷமில்லை மேலும் திடீர் மற்றும் எதிர்பாராத வெற்றியை உச்சமடைந்த எட்டாமதிபதி கொடுப்பார் என்பது ஜோதிட விதி.  

இப்போது பாபரின் பிறந்த நாள் கூட தெரியாது என எடுத்துக்கொள்வோம். மிகச்சிறந்த வீரன் என்பதால் செவ்வாயின் முழுமையான அம்சமான பாபரை எடுத்துக்கொள்ளலாம். தற்போது பாபரின் கோட்சார ஜாதக லக்னமாக செவ்வாய் இருக்கும் இடத்தையே எடுத்துக்கொண்டு போர் நடக்கும் நாளின் சூழ்நிலைகளையும் வெற்றி தோல்விகளையும் ஆராயவேண்டும்.

இவ்விதிப்படி ஆராய்ந்தாலும் செவ்வாய் கோட்சாரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்று உச்சநிலையிலுள்ள ராஜ கிரகம் சூரியனுடனும் நட்பு கிரகம் சந்திரனுடனும் இணைந்ததால் செவ்வாய் அதீத வலுவாகவே உள்ளார். செவ்வாய் உள்ள மேஷத்தையே லக்னமாககொண்டு எதிரியை குறிப்பிடும் ஆறாவது பாவத்தை ஆராய்ந்தால் 6 ஆம் பாவாதிபதி மீனத்தில் நீசம். இந்தவகையிலும் எதிரி உயிரிழக்கிறான் பாபர் வெற்றி பெறுகிறார் என்பதே தெளிவாகத்தெரிகிறது.

போர் நாள் ஒரு அமாவாசை என்பதை கவனிக்கவும். அமாவாசையில் போரை முதலில் துவங்கியவருக்கே வெற்றி ஏற்படும் என்பது நமது மகாபாரத புராணத்திலேயே ஜோதிடக்குறிப்பாக உள்ளது.

அதிகாலை ஆறு மணிக்கு துவங்கிய போர் மதியம் சூரியன் உச்சிக்கு வந்தவுடன் 6 மணி நேரத்தில் நிறைவடைந்துவிட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான வில் மற்றும் வாலேந்திய படைவீரர்களை கொண்ட இப்ராகிம் லோடியின் படையை வெறும் பணிரெண்டாயிரம் வீரர்களை கொண்ட பாபரின் படை சிதறடித்தது. நவீன தொழில்நுட்ப வரவான துப்பாக்கியை லோடி அறிந்து வைதிருக்கவில்லை. பாபரின் சில நூறு வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தினர் என்பது ஒரு முக்கிய காரணம். அதிகாரப்பூர்வமாக லோடியின் படையில் லோடியையும் சேர்த்து பதினைந்தாயிரம் வீரர்களும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி சுமார் ஐம்பதாயிரம் வீரர்களும் மரணமடைந்ததாக வரலாறு.


மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.