Monday 24 July 2017

போர்க்களத்தில் சில புள்ளி மான்கள்.

மருத்துவ ஜோதிடம் – பகுதி 2

போர்களை வழியச்சென்று சந்தித்து தனது எல்லைகளை விரிவாக்கும் அல்லது இழக்கும் அரசர்கள் ஒரு புறம். தங்களது தினசரி வாழ்க்கையையே போர்க்களமாக சந்திப்பவர்கள் ஒருபுறம். இரு வகையினருக்கும் இறைவன் இப்பூமியில் இடம் கொடுத்துள்ளான்.

வாழ்க்கைப்பாதை சிலருக்கு எளிதானது. சிலருக்கு கடினமானது. அவரவர் கர்ம வினைகளின்படி அவை அமைகின்றன. 


பல போர்களை சந்தித்த அரசன் மாவீரனாகிறான்.

பல துயரங்களை சந்திக்கும் மனிதன் எந்தச் சூழ்நிலைக்கும் கலங்காத மன உறுதி பெறுகிறான்.

இரு வகையினரும் தங்களது உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்பதால் விதியே சில நேரங்களில் இத்தகையவர்களிடம் குழம்பி நிற்கிறது.  

பல வருடங்களுக்கு முன் என் கவனத்தை கவர்ந்த ஒரு கவிதை.

வாழ்க்கையே போர்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமோ!



சிலரது வாழ்க்கை போர்க்களத்தில் அகப்பட்டுக்கொண்ட புள்ளிமான்களைப்போன்றது. அடுத்த வினாடி தனக்கு ஆபத்து உள்ளதை அறிந்தும் கலங்காது போராடும் இவர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். அப்படி வியாதி என்ற ஒரு போர்க்களத்தில் அகப்பட்டு  போராடிக்கொண்டிருக்கும் நமது வாசக அன்பர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்கள் அவற்றிற்கு காரணமான ஜோதிட காரணங்களோடும் அவரின் ஒப்புதலோடும் இங்கே பதிவிடப்படுகிறது.


இவரது உடல் எண்  5. உயிர் எண் 3.

புதனுக்குரிய 5 ஆம் எண்ணும் குருவுக்குரிய 3 ஆம் எண்ணும் எதிர் எதிர் அதிர்வலைகள் கொண்டவை. புதனுக்கு 8 ல் குரு வக்கிரமாகி பகை வீட்டில் நிற்கிறார். கடுமையான நிலை இது.

லக்னம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. புதன் நவாம்சத்தில் நீசம். லக்ன புள்ளியின் உப நட்சதிராதிபதி சூரியன் ராசியில் நீசமாகியுள்ளார். நவாம்சத்தில் உச்சமாகியுள்ளார்.  இப்படி லக்னம் அமைந்த நட்சத்திராதிபதிகள் நீச நிலை பெற்றது இவர் வாழ்வில் துயரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை குறிக்கிறது. ஏனெனில் லக்னம், ஆத்ம காரகன் சூரியன், உடல் & மனோ காரகன் சந்திரன் ஆகியோர் நல்ல நிலையில் அமைந்துவிட்டால் ஜாதகர் எவ்வளவு துயரங்களையும் துணிந்து எதிர்கொள்ள இயல்பாகவே தயாராக இருப்பார்.

இங்கு ஆத்ம காரகன் சூரியன் நீசமாகி தனக்கு அஷ்டமத்தில் வக்கிர நிலையில் அமைந்த குருவின் சாரத்தில் விசாக நட்சத்திரத்தில் உள்ளார். நவாம்சத்தில் உச்சமானது நன்மையே. மனோ காரகன் சந்திரன் ஆறில் கேதுவுடன் சேர்ந்து மறைந்து கேதுவின் சாரம் (அஸ்வினி) பெற்றதும் சந்திரனின் வீட்டில் சனி அமர்ந்ததும் கடுமையானதே. வர்கோத்தமம் பெற்றதும் ஒருவகையில் நன்மையே. இதன் பொருளாவது துயரங்களின் அடிப்படையிலேயே ஜாதகர் துணிவை பெற வேண்டும் என்பதே.

இரண்டு வயதில் ஆறாம் பாவத்தில் அமைந்த கேதுவின் திசையில் கால புருஷ தத்துவத்தில் வயிறை குறிக்கும் சிம்ம ராசிக்குரிய நீசமான சூரியனது புக்தியில் கல்லீரல் கோளாறால் வயிற்றுப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் பாதிப்பு ஏற்பட்டது.   சூரியன் அமைந்த விசாக நட்சதிராதிபதி குருவே கல்லீரலை கட்டுப்படுத்துகிறார் என்பதும் குருவும் சூரியனும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஆறாவது வயதில் கேது திசை அஷ்டமாதிபதி  புதன் புக்தியில் வலது கால் சைக்கிளில் மாட்டி முட்டிக்கு  கீழ் தோல் முழுதுமாக உரிந்தது. அஷ்டமாதிபதி கொடுத்த கண்டம் அளப்பரியது என்றுதான் கூற வேண்டும். வலது பக்க முழங்காலின் கீழ் பகுதியை குருவும் இடது பக்க பகுதியை சனியும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது மருத்துவ உடலியல் ஜோதிடம் அறிவிக்கும் உண்மை. புதன் முழங்காலுக்கு கீழான பகுதியை குறிக்கும் பதினொன்றாம் பாவாதிபதி ஆகி அந்த பாவத்தை புதனுக்கு எட்டில் நின்ற குரு பார்வை செய்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. புதன் வலது பாதத்தை குறிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் நிற்கிறார். (சனி இடது பாதத்தை குறிப்பார்). எனவே புதன் புக்தியில் காலின் வலது புறம் பாதிக்கப்பட்டது. புதன் காரக அடிப்படையில் உடலின் தோலை ஆட்சி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையுடன் ஜாதகர் மிதிவண்டியில் செல்லும்போது இவ்விபத்து நடந்தது என்பதும். சூரியன் பாதங்களை குறிக்கும் 12 ஆமிடத்தில் நீசம் என்பதும் ஆய்வுக்குரியது.

10.02.1983ல் அதே புதன் புக்தியில் லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான விபத்து காரகன் செவ்வாய் அந்தரத்தில் விபத்தில் வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு 3 மாத மருத்துவமனை வாசம்.

எட்டாம் அதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்த சுக்கிர திசை துவங்கி சுய புக்தி முடிவில் தந்தைக்கு கர்மம் செய்ய வைத்தது. 

புதன் எட்டாம் அதிபதியாகி அதன் நட்சத்திரத்தில் அமைந்த சுக்கிரன் திசை கண்டத்தை தந்து கல்வியை தடைகளோடு தடுமாற வைத்தது. இதற்கு புதன் 12 ல் மறைவு பெற்றதும் முக்கிய காரணம். ஜாதகரால் சுக்கிர திசையில் கல்லூரிப்படிப்பை முடிக்க இயலவில்லை. ஆனால் புதன் பதினொன்றாம் பாவத்திற்கும் அதிபதியானதால் சுக்கிர திசையின் மறு பகுதியில் தான் சார்ந்த மருத்துவம், கணக்கு, புத்தகம், எழுதுதல் என்ற வகையில் ஜாதகரை தொடர்புபடுத்தியது. கட்டுரை, சிறுகதை நாவல், பத்திரிகை உதவி ஆசிரியர் என்ற வகையில்  ஜாதகரை வாழ்வில் முன்தள்ளியது. 

இரு பாவ ஆதிபத்தியம் கொண்ட ஒரு கிரகத்தின் வீட்டிலிருந்து திசை நடத்தும் ஒரு கிரகம் அதன் திசா புக்தி பலனை  அதன் இரு பாவங்களையும் சார்ந்து தர வேண்டும் என்ற விதிப்படி  சுக்கிரன் முதல் பத்து வருடம் 6 ஆமிட பலனை வழங்கி கடுமைப்படுத்தியது. ஆனால் சுக்கிர திசையின் இரண்டாம் பகுதி பத்தாண்டுகள் லக்ன பலனை வழங்கி தடைகளுக்கிடையேயும் ஜாதகரை அசுவாசப்பட வைத்தது. . 

அடுத்து  2௦௦4 ல் நீசமான சூரியனின் திசை துவங்கியது. அத்துடன் மற்றொரு கொடிய கால கட்டமும் துவங்கியது என்றே கூற வேண்டும். திசா நாதன் நீசமானதால் ஜாதகருக்கு புதனின் காரகத்துவமான பத்திரிகைத்துறையே ஈர்த்தது. கால புருஷ தத்துவப்படி முதுகுத்தண்டு மற்றும் முதுகெலும்பை குறிக்கும் சிம்ம ராசி அதிபதி சூரியன் நீசமாகி திசை நடத்தியதால் முதுகில் காச நோய் ஏற்பட்டு நீங்கியது.சூரியன் 7 மற்றும் 12 ஆகிய திருமண பாவங்களுடன் தொடர்புகொண்டதாலும் 2 ஆம் அதிபதி குரு 7 ல் நின்று சுக்கிரன் பார்வை பெற்றதாலும் சூரிய திசை புதன் புக்தியில் 16.11.2007ல் திருமணம்.

பொதுவாக திருமண தொடர்புடைய பாவங்களுடன் ராகு-கேதுக்கள் தொடர்பு கொண்டிருக்கையில் அவைகளுக்குரிய எண்களான 4 (ராகுவிற்குரியது) & 7 (கேதுவிற்குரியது) இவற்றில் திருமண தேதியை நிர்ணயிக்கக்கூடாது. மேற்கண்ட திருமண தேதியின் ஒற்றை இழக்க எண் 7 ஆனது கேதுவின் எண். கேது களத்திர ஸ்தானமான 7 க்கு விரையமான 6 ல் இருக்கிறது. திருமணம் நிலைக்கவில்லை. 04.08.2009 ல் சந்திர திசை துவங்கியது.. காச நோய்க்கு எடுத்துக்கொண்ட வீரியமிக்க மருந்துகளால் ஜாதகரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 26.08.2009 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராசிகளில் துலாம், விருச்சிகம் மற்றும் பாவங்களில் 7 & 8 மற்றும் கிரகங்களில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் , ராகு ஆகியவை சிறுநீரகங்களை கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகதிற்கான காரக கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரனும் சுக்கிரனின் பாவங்களும் பாவிகளாலும் பகைவர்களாலும் பாதிக்கப்பட்டுவிட்டன. சிறு நீரக நோய்க்கு காரணமான சந்திரன் நோயை குறிக்கும் ஆறாமிடத்தில் அமர்ந்து திசை நடத்துகிறது. 6 ஆமிடம் மனைவியை குறிக்கும் 7 க்கு விரைய பாவமும் கூட என்பதால் ஜாதகருக்கு சிறுநீரக பாதிப்பு தெரிந்ததும் மனைவி விலகிச்சென்றுவிட்டார்.

2010 மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம் என இரு மருத்துவர்களை கலந்துவிட்டு முடிவு செய்கிறார் ஜாதகர். அன்று முதல் இன்று வரை ஒரு வாரத்தில் சராசரியாக மூன்று முறை  மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்கிறார். பாதகாதிபதியான சந்திரன் நோயை கொடுத்து மாரகதுக்கு சமமான வேதனைகளை கொடுத்துக்கொண்டிருப்பதால் ஆயுளை பாதிக்கவில்லை.

தற்போது ஜனன கால ராகுவின் மீது கோட்சார குரு செல்லும்போது ஜாதகர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

சிறு சிறு விஷயங்களில் ஏற்படும் ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள இயலாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் மனோபாவம் படைத்தவர்கள் இது போன்றவர்களின் வாழ்க்கைப்போராட்டங்களை பார்த்தாவது  வாழ்வில் போராடி வெற்றிபெற முயல வேண்டும்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 07871244501

2 comments:

  1. ஆழ்ந்த அலசல்.மிக்க நன்றி

    ReplyDelete
  2. ஆழ்ந்த அலசல்.மிக்க நன்றி

    ReplyDelete