Sunday 14 May 2017

ஒருபுறம் அவசரம் மறுபுறம் ஆவேசம்

கிரகங்கள் வரிசையில் இப்பதிவில் செவ்வாய் மற்றும் தற்போதைய கோள்சாரத்தில் அதன் செயல்பாடு  ஆகியவற்றை ஆராய்வோம்.

செவ்வாய் துணிச்சல், வீரம், வீரியம், ஆதிக்கம், பராக்கிரமம், அதிகாரம், ஆளுமை, உறுதி, பிடிவாதம், வளைந்துகொடுக்காத குணம், நம்பிக்கை, தர்மம், நேர்மை, நியாயம், சகோதரம், காவல், தீயணைப்புத்துறை, உயர்பதவி, போன்ற பலவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம். தைரிய காரகன் என அழைக்கப்படுபவர். தங்கள் உயிரையே துச்சமாக நினைத்து போரில் ஈடுபடும் ராணுவத்தினரை குறிப்பவர். பூமி, தோட்டம்,  மண்ணின் மைந்தர்களான விவசாயிகளை குறிப்பவர் செவ்வாய்.

செவ்வாய் ஜாதகத்தில் நன்கு அமைந்தவர்கள் இப்பதிவில் குறிப்பிடுவது போன்ற பல நல்ல பாக்கியங்களையும் தோஷப்பட்டவர்கள் இங்கு குறிப்பிட்டிருப்பது போன்ற பல பாதக நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளவர்கள் ஆவர்.   



பயத்தின் காரணமாக ஏற்படும் ஆத்திரம், அவசர முடிவுகள் போன்றவை செவ்வாயின் காரகத்தில் வருபவை. அதனால்தான் செவ்வாயின் இரு நிலவுகளில் ஒன்றுக்கு PHOPOS (அவசரம்) என்றும் மற்றொரு நிலவுக்கு DEIMOS  (ஆவேசம்) என்றும் பொருள்படும்படி கிரேக்கர்கள் ஆதிகாலத்திலேயே பெயரிட்டிருக்கிறார்கள்.

ஆத்திரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடிய குரூர முடிவுகளை எடுக்க வைப்பவர் செவ்வாய். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழி செவ்வாயின் இந்த குணத்தை முன்னிட்டு தோன்றியதே. ஆறாம் பாவத்திற்கு உரிய காரகங்களான கடன், வியாதி மற்றும் எதிரி போன்றவற்றிற்கு காரக கிரகம் செவ்வாய் ஆவார். அதனால்தான் ஆறாம் பாவ காரகன் என செவ்வாயை குறிப்பிடுகிறது ஜோதிடம்.    

கடன் எனும் புதைகுழியில் விழுந்து அதிலிருந்து வெளியேற இயலாத சூழலில் மானத்தைவிட உயிர் பெரிதல்ல என்ற முடிவெடுக்க வைப்பவர். .தற்கொலை காரகன், கடன் காரகன் என்ற பெயர்களும் செவ்வாய்க்கு உண்டு. ஜாதகத்தில் செவ்வாயின் நிலையையும் திசா புக்திகளையும் ஆராய்ந்தால் மேற்சொன்ன குரூரங்கள் நடக்கும் காலத்தை தெளிவாக அறிய இயலும்.

கன நேர கவனச் சிதறலால் வாகன விபத்தில் உயிரிழப்புகள் நிகழ செய்வாயே காரணம். செவ்வாய் ஜாதகத்தில் தோஷப்பட்டவர்கள் நில விவகாரங்களில் வேதனைப்படாமல் இருக்க முடியாது. சகோதரனால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. கடனால் துயரப்படாமல் இருக்க முடியாது. இவற்றுள் ஒன்றன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். தீமை தரும் லாகிரி வஸ்துக்களின் பழக்கத்திற்கும் செவ்வாயே காரணம்.

பூமி விவகாரங்களில் பிறரை ஏமாற்றியவர்கள், பூமியை நம்பி பிழைக்கும் விவசாயிகளுக்கு வேதனை தந்தவர்கள் செவ்வாயின் குரூரப் பார்வையால்  மேற்குறிப்பிட்ட துர்பலன்களை அனுபவிப்பார்கள்.

செவ்வாயின் இத்தகைய குரூரத்தன்மைகளின் விளைவாகவே செவ்வாய் தோஷம் திருமண பொருத்தத்தில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. செவ்வாய் ஜாதகத்தில் வலுவாக இருந்து நல்ல ஆதிபத்தியம் பெற்றிருந்தால் உலகமே எதிர்த்து நின்றாலும் கலங்காது தனது செயலில் வெற்றி பெற வைப்பார். தன்னலம் கருதாது கடமையாற்றும் தியாக சீலர்களாகவும் பூமி பாக்கியங்கள் நிறைந்தவர்களாகவும் பெரிய இயந்திரங்கள்கொண்ட தொழிற்சாலைகளை ஏற்று நடத்தும் முதலாளிகளாகவும் சுரங்க அதிபர்களாகவும் இருப்பர்.

செவ்வாயின் அதி தேவதை முருகன். 

பூர்வ ஜென்ம வினையால் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களும் செவ்வாய் மட்டும் நன்கமைந்திருந்து முருகனை சரணடைந்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். “முன்செய்த பழிக்குத்துணை முருகா எனும் திருநாமம்” என்பது நமது கிராமங்களில்  சொல்லப்படும் வாக்கு.

சஷ்டி விரதம் இருந்து திருமணம், புத்திரம், கடன், செவ்வாய் தோஷம் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட பலரை நான் அறிவேன். அறுவைச்சிகிச்சை நடக்கும் காலங்களில் வீட்டில் முருகன் படத்தின் முன் பசும் நெய் தீபம் ஏற்றி வைத்தால் சிகிச்சை நல்லபடியாக நடக்கும். சனியும் செவ்வாயும் கடுமையான பாவக்கிரகங்கள் என்றாலும் இவ்விரு கிரகங்கள் அளிக்கும் மேற்சொன்னது போன்ற பூமி வகை பாக்கியங்கள் பல தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் வகையிலானவை.  
   .       
செவ்வாயை எதிர்த்து போரிடக்கூடிய கிரகங்கள் என்றால் அது சனியும் ராகுவும்  மட்டுமே. செவ்வாயின் முழுமையான எதிரி கிரகம் புதன் மட்டுமே. சனி அல்ல. சனியும் செவ்வாயும் எதிரிடையான செயல்படும் சம வலுவுடைய கிரகங்களாகும். சனியை விட அதீத குரூரம் காட்டுபவர் செவ்வாய். ராகு-கேதுக்கள் முன்னாள் எந்த கிரகமும் எதிர்த்து நிற்க முடியாது என்றாலும் செவ்வாயை போன்ற குணாதிசயங்களை கொண்ட கேதுவிற்கும் சனியை போன்ற குணாதியசங்களை கொண்ட ராகுவிற்கும் சம வலிமை கொண்டவர் செவ்வாய் என்பதும் கவனத்தில் கொள்ளக்கூடியது,

செவ்வாயின் அம்சமான சீனாவின் அதட்டல்கள் ராகுவின் அம்சமான இந்தியாவிடம் (சுதந்திர இந்திய ஜாதகத்தில் லக்னத்தில் ராகு உச்சம்) எடுபடாமல் போவதன் காரணம் இதுதான்.

செவ்வாய் கோட்சாரத்தில் சாதாரணமாக ஒரு ராசி மண்டலத்தை 45 நாட்களில் கடந்துவிடுவார். செவ்வாய் திசை 7 வருடங்கள். செவ்வாய் ஜாதகத்தில் கெட்டிருந்தால் திருட்டு பொய் புரட்டு போன்றவற்றில் ஈடுபட வைக்கும்.  

சனி ஒரு ராசி மண்டலத்தை கடக்க சராசரியாக இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சனி திசை 19 வருடங்கள். சனி கடும் உழைப்பாளி, நியாயஸ்தன் என்பதே செவ்வாயை விட சனியை பார்த்து அனைவரும் நடுங்க காரணம்.

புவி அமைப்பில் ஒவ்வொரு ராசியும் அந்தந்த ராசி தொடர்புடைய தொழில் செய்பவர்களை குறிக்கும். இந்திய ஜாதக அமைப்பில் தமிழ்நாடும் ஆந்திராவும் துலாம் ராசி அமைப்பில் வருபவை என்றொரு ஆய்வுக்கோணம் உண்டு. இது பற்றி முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன், காவிரி பாயும் தமிழ்நாட்டின் முதன்மை தொழில் பண்டை காலம்தொட்டு விவசாயம்தான்.  இதனால் துலாமின் சப்தம (7 வது) ராசியான மேஷமும் செவ்வாயும் விவசாயிகளை குறிப்பிடுபவை.

தற்போது மேஷ ராசிக்கு அஷ்டமத்தில் செவ்வாயின் மற்றோர் வீடும் நீர் ராசியுமான விருச்சிகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சனி நிற்கிறது. இந்தகைய அமைப்பால் செவ்வாயின் இரு வீடுகளுமே சனியால் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. பரம சுபனும் செவ்வாயின் நண்பனுமான குரு தற்போது கோள்சாரத்தில் மேஷ ராசிக்கு 6 ல் மறைந்துள்ளார். மேஷ ராசிக்கு பாதக ஸ்தானமான கும்பத்தில் கேது நின்று மேஷத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். மேஷத்திற்கு சிந்தனை ஸ்தானமான 5 ஆம் பாவத்தில் ராகு நின்று மேஷத்தின் சிந்தனையை குழப்புகிறார். இவை அனைத்துமே மேஷ ராசிக்கு பாதகமான நிலைகள். மேஷ விருசிக ராசிகளுக்கு தற்போது குரு பார்வை இல்லை. விருட்சிகத்திற்கு 11 ல் குரு நல்ல நிலையில் இருந்தாலும் விருட்சிக ராசியில் இருக்கும் சனி அதன் பலன்களை அனுபவிக்கவிடாமல் தடை செய்கிறார்.

செவ்வாய் சனியின் மூலத்திரிகோண வீடாகிய கும்ப ராசியில் பிரவேசித்தது முதல் அதாவது கடந்த டிசம்பர் துவக்கம் முதல் ஒரு பெரிய இழப்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அமைந்தது. அதனை தொடர்ந்து செவ்வாயின் காரகத்தொடு தொடர்புடைய மண் (மணல் குவாரி பிரச்சனை), பூமி தொடர்பான பாதிப்புகள் (பத்திரப்பதிவு பாதிப்புகள்), விவசாயிகள் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்களும் அதிகம் நடக்கின்றன. ஜனவரி மூன்றாவது வாரம் வரை செவ்வாய் கும்பத்தில் இருந்தபோது விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நடந்தன பிறகு அது  குறைந்தாலும் போராட்டம் தொடர்கிறது.

காரணம் என்ன?

தமிழ்நாட்டில் ராசியாகிய துலாம் ராசிக்கு செவ்வாய் ஆறில் மறைந்தார். பிறகு மேஷத்தில் ஆட்சி பெற்றதும் போர்க்குணத்திற்கு உரிய செவ்வாய் போராட வைத்தது. (டெல்லியில் விவசாயிகள் போராட்டம்). தற்போது ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் தனுசுவின் துவக்கத்தில் வக்ர கதியில் இருக்கும் சனியின் பார்வையை பெறாவிட்டாலும் சனிக்கு செவ்வாயின் 8 ஆம் பார்வை படுகிறது. இதன் பொருள் முழு வேகத்தில் எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள் காஸ்மீர் எல்லையில் ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இந்தியாவின் கடக ராசிக்கு 6 ரில் சனியும் 10 ல் செவ்வாயும் இருக்கும்போது இது நடப்பது கவனிக்கத்தக்கது. இதே சமயம் உழைப்புக்குரிய சனியை செவ்வாய் பார்ப்பதால் ஜீவன வகையில் உலக அளவில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். இந்தியாவில் குறிப்பாக மென்பொருள்துறையில் இதன் தாக்கம் நன்கு தெரிகிறது.

அடுத்த சில நாட்களுக்கு சனி- செவ்வாய் நேருக்கு நேர் பார்வை ஏற்படவிருக்கிறது. உலக அளவில் இதன் பாதிப்பு இருக்கும். தீவிரவாத தாக்குதல்கள், பூகம்பங்கள், விமான விபத்துக்கள், தீவிபத்துக்கள், வாகன விபத்துக்கள், திடீர் செயற்கை மரணங்கள், திருட்டு, கொள்ளை, கற்பழிப்புகள், ராணுவம்-காவல் துறையோடு தீவிரவாதிகளின் நேரடி மோதல்கள் ஏற்படும்.

இந்தியாவை பொறுத்தவரை ராணுவம் இதுவரை இல்லாத குரூர பாணியில் அதே சமயம் அதிக அளவில் வெளியே தெரியாத வகையில் தீவிரவாதிகளை  எதிர்கொண்டு அழிக்கும். ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கும். காரணம் இந்தியாவின் கடக ராசிக்கு பாதக ஸ்தானமான ரிஷபத்திலும், கடகத்திற்கு 12 ல் மிதுனத்திலும் செவ்வாய் மறைவதாலும் இத்தகைய நிலை ஏற்படும். செவ்வாய் எப்போதெல்லாம் வலுவிழக்கிறதோ, கடகத்திற்கு பாதக, மறைவு ஸ்தானங்களில் செல்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவும் கடக ராசியினரும் பாதிக்கப்படுவர்.   

அடுத்த இரு மாதங்கலில் தேசத்திலும் தமிழ்நாட்டிலும் சில முக்கிய விஷயங்கள் நடந்து முடியும். அது சிலவகையில் பாதிப்பாக இருந்தாலும் முடிவில் நன்மையாக இருக்கும்.  

நீர் ராசியான விருட்சிகத்தை விட்டு சனி மாற இருக்கும் இவ்வருடம் மழைப்பொழிவு இவ்வாண்டு நன்றாக அமையவேண்டும் என்பது விதி. எனவே விவசாயிகள் வேதனை இவ்வாண்டு கணிசமாக குறையும். அதே சமயம் கடகத்திற்கு ராகு மாறுவதால் நீர் மேலாண்மையில் நவீனங்கள் புகுத்தப்பட்டு விவசாயம் கண்டிப்பாக செழிக்கும்.

அன்பர்களுக்கு இவ்விடத்தில் ஒரு வேண்டுகோள்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் தோஷப்பட்டவர்கள் விவசாயிகளுக்கு உதவுங்கள். அவர்களது குழந்தைகளின் கல்விக்கும் திருமணத்திற்கும் வாழ்வாதாரம் மேம்படவும் உதவுங்கள்.  

எனக்கு தெரிந்த ஆன்மீக ஸ்தலத்தில் சத்ரு சம்ஹார ஹோமத்தில் பயன்படுத்த அன்பர் ஒருவர் ஐந்தாயிரம் கிலோ மிளகாயை சேகரித்துக்கொண்டிருக்கிறார்.

மிளகாயை உண்டு எனது வயிறு எரியவில்லை. இதுபோன்றவைகளை கண்டு எனது வயிறு மட்டுமல்ல உள்ளமும் எரிகிறது.

விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவிக்கும் உணவுக்கு ஆதாரமான தானியங்களையும் உணவுப்பொருட்களையும் வீணாக்காதீர்கள். நீராதாரங்களை பாதிக்கும் நெகிழித்தாள்களை (Plastic) பயன்படுத்தாதீர்கள். பாரம்பரியம்மிக்க ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்களை இயன்ற அளவு நடுங்கள்

மேலும் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501