Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Friday, 20 August 2021

இரண்டாம் பாவத்தின் மறுபக்கம்!

 


ஜோதிடத்தில் இரண்டாவது பாவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் பொருளாதார வளத்தை குறிப்பது இரண்டாம் பாவமாகும். இரண்டாம் பாவம் ஒருவரது குடும்பத்தொடர்புகளை குறிக்கும். எனவே ஒருவருக்கு பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்றால் இரண்டாம் பாவம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும். தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும், வாழ்வில் தன்னோடு உடன் வரும் நபர்களுக்காகவுமே ஒருவர் பொருளீட்டுகிறார். பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்து அதற்காக அதிக நேரம் செலவிடுவோர் குடும்ப வாழ்வின் சிறப்புகளை புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். குடும்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர் பொருளாதரத்தின் சிறப்பை புரிந்துகொள்ள தவறிவிடுவது மட்டுமின்றி தனது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்துகிறார். உறவுகள் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் சரியாக கையாள்வது ஒரு கலை என்றே கூறலாம். பொதுவாக ராசிக்கட்டத்தில் அனைத்து பாவங்களுமே உறவுகளையும் பொருளாதாரத்தையும் குறிப்பிடும் என்றாலும் ஒரு பாவத்தின் உயிர் காரகம் அதீத வலுவடையும்போது பொருட்காரகமும், பொருட்காரகம் அதிக வலுவடையும்போது உயிர் காரகமும் பாதிக்கப்படும். இன்றைய பதிவில் உதாரணமாக 2 ஆம் பாவத்தை எடுத்துக்கொண்டு இக்கருத்தை ஆராய்வோம்.

மேற்கண்ட ஜாதகம் ஒரு 1990 ல் பிறந்த ஒரு பெண்ணுடையது. விருட்சிக லக்னத்திற்கு 7 ல் லக்னாதிபதி செவ்வாய் ராசியிலும் நவாம்சத்திலும் ரிஷபதிலேயே நின்று வர்கோத்தமம் பெறுகிறார். செவ்வாய் 1௦ ஆம் பாவமான சிம்மத்திற்கு 1௦ ல் நின்று 1௦ ஆம் பாவத்திற்கு திக்பலம் தருகிறார். 1௦ சூரியன் ஆட்சி பெற்று திக்பலத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகி பொருளாதார ரீதியாக நல்ல வேலையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இரண்டில் நிற்கும் வக்கிர சனிக்கு வீடு கொடுத்த குரு கடகத்தில் சனியில் சாரம் பூசத்திலேயே உச்சம் பெற்று நிற்கிறார். இதனால் இரண்டாம் பாவ சனி அதீத வலுவடைகிறார். அதே சமயம் இரண்டாம் பாவாதிபதி குரு இரண்டுக்கு 8 ல் தான் உச்சம் பெறுகிறார். இவ்வமைப்பு பொருளாதார சிறப்பை தருகிறது. ஆனால் இல்லறத்திற்கு சிறப்பல்ல. இரண்டாமிட சனி வேலையில் ஜாதகியை முழுமையாக ஈடுபடுத்தி குடும்ப வாழ்வை தாமதப்படுத்துகிறது. 3௦ வயதில் பொருளாதார வளத்தில் திளைக்கும் ஜாதகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2 ஆமிட வக்கிர சனி வேலையை உயிர் மூச்சாக நினைக்க வைக்கிறது ஆனால் தனக்கான குடும்பத்தை அமைத்துக்கொள்வதை தடுக்கிறது. இந்த ஜாதகி பொருளாதாரத்தைவிட குடும்ப வாழ்வு முக்கியம் என எப்போது கருதுகிறாறோ அப்போதுதான் திருமணம் நடக்கும்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகன் 1995 ல் பிறந்த ஒரு இளைஞன்.மிதுன லக்னாதிபதி புதன் நீசம் பெற்று திக்பல சூரியனுடன் 1௦ ல் வக்கிர குரு பார்வை பெற்று நிற்கிறார். குடும்ப காரகன் குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் குடும்ப பாவத்தில் நீசம் பெற்று, 11 ஆம் பாவமான மேஷத்தில் சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். ஜாதகருக்கு நடப்பது. 5 ல் சுய சாரம் பெற்று நிற்கும் ராகு திசை. 5 ஆம் பாவம் என்பது காதலுக்கு சிறப்பு. ஆனால் அது வேலை பாவமான 6 ன் விரைய பாவம் என்பதால் சம்பாத்யத்திற்கு சிறப்பை தராது. இந்த ஜாதகருக்கு சரியான வேலை இல்லை. சம்பாத்தியமும் இல்லை. ஆனால் 5 ஆமிட ராகு காதலை கொடுத்து திருமணத்தையும் செய்து வைத்துள்ளது. இந்த இளைஞர் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 ல் உள்ள 6 ஆமதிபதியான நீச செவ்வாய் 11 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதால் காதலை நிறைவேற்றி வைத்துள்ளது. ஆனால் பொருளாதாரத்திற்குரிய உகந்த வேலையை செவ்வாயால் தர இயலாது. குடும்பம் அமைந்த பிறகுதான் ஜாதகர் பொருளாதாரத்தை முன்னிட்ட முயற்சிகளை எடுக்கிறார். 1௦ ஆமிட திக்பல சூரியன் சுய தொழில் எண்ணத்தை தூண்டுவார். ஆனால் 1௦ க்கு 8 ல் இருந்து திசை நடத்தும் ராகு அதற்கு தடை போடுவார். அதே சமயம் ஜாதகரின் வேலைக்கும் ராகு சிறப்பை தரமாட்டார். இதனால் உரிய வயதில் குடும்பம் அமைந்துவிட்டது. காரணம் இரண்டாம் பாவத்திற்குரிய உயிர் காரகத்துவங்கள் 5, 7, 11 ஆகியவை வலுவடைந்துவிட்டன. ஆனால் நல்ல வேலையும், போதிய வருமானமும் இன்றி ஜாதகர் தவிக்கிறார். காரணம் உயிர் காரகத்திற்கு சிறப்பு சேர்ந்த கிரகங்கள் பொருட்காரகங்களுடன் கை கோர்க்கவில்லை என்பதே.

கீழே மூன்றாவது ஜாதகம்.

ஜாதகர் 1992 ல் பிறந்த ஒரு ஆண். கேது திசையில் பிறந்த ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திற்கு 5 ல் 7 ஆமிடத்தில் நிற்கும்  குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு திருமணமானது. தன காரகன் குரு, குடும்ப பாவமான 2க்கு 6ல் மறைந்து 7 ஆமிடத்தில் நின்றாலும் அவர் லக்னத்தின் மீது தனது கதிர்வீச்சை செலுத்துகிறார்.   இதனால் குரு குடும்பம், தனம் ஆகிய இரு அம்சங்களிலும் குறைவற்ற நிலையை  தருகிறார். திசா நாதன் சூரியன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் நின்றாலும், சூரியனின் வீட்டோன் புதன், 6 ல் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி குருவின் சார நாதன் சுக்கிரனும் கடகத்தில்தான் நிற்கிறார். ஜாதகர் வெளிநாட்டில் மனைவியோடு வசிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும்  இந்த அமைப்பு உதவுகிறது. இந்த ஜாதகத்தில்  தனகாரகனும் குடும்ப காரகனுமான குருவே இரண்டாம் பாவதிபதியுமாகி அவர் லக்னத்தை பார்வை செய்வதால் இந்த ஜாதகருக்கு குடும்பம், பொருளாதாரம் மற்றும் புத்திர வகையிலும் சிறப்பான பலனை தந்துள்ளது. ஆனால் இவ்வகை அமைப்பு அனைவருக்கும் எளிதாக ஏற்படுவதில்லை. இத்தகைய அமைப்புகள் ஜாதகத்தில் அபூர்வமானவையாகும்.

நான்காவது ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். 7, 1௦ ஆமதியும், தன புத்திர காரகருமான குரு லக்னத்தில் திக்பலம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமதிபதி குரு லக்னத்தில் அமைந்து, ஜீவன காரகரான 7 ல் திக்பலம் பெற்ற சனியை பார்ப்பதால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். குரு களத்திர பாவாதிபதியாகி, 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணமும் ஆகிவிட்டது. இவருக்கு  பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் திக்பல குருவின் வலுவை, குருவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் கேது பாதிக்கிறார். ஜோதிட விதிகளின்படி இதை குரு, கேது சேர்க்கையாகவே பாவிக்கலாம். இரண்டில் அமைந்த கேது ஜாதகரது குடும்பம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. ஆனால் புத்திரத்தை பாதிக்கிறார். காரணம் கேது 5 ன் விரையாதிபதி புதனின் சாரம் ஆயில்யம் பெற்று 6 ல் மறைந்த 5 ஆமதிபதி சுக்கிரனுக்கு பாதகத்தில் அமைந்துள்ளார். இதனால் குடும்பத்திற்கு குழந்தை வருவதை 2 ஆமிட கேது தடை செய்கிறார். இந்த வகை அமைப்பை பெற்ற ஜாதகர்கள் குழந்தை அமையுமுன் தனது பொருளாதாரத்தை உயர்த்த முயலாமலிருப்பது நன்று. ஏனெனில் குடும்பம், பொருளாதாரம் இரண்டும் நிறைவாக கிடைத்துவிட்டால் 2 ஆமிட கேது குழந்தை பாக்கியத்தை தடுத்துவிடுவார். இதனால் ஜாதகர் தீவிர மருத்துவம் மற்றும் இறை சக்தியின் துணைகொண்டு முதலில் புத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் 5, 7, 9 ஆகிய பாவங்களை குரு பார்வை புனிதப்படுத்தினாலும் குரு அவ்விடங்களை கேதுவின் தடைகளோடுதான் பார்க்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.   

அனைத்து பாவங்களுமே வாழ்வின் அனைத்து விஷயங்களோடும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு பெறும் என்றாலும், அனைத்து பாவங்களின் உயிர் மற்றும் பொருள் காரணிகளை ஒருவர் எந்த அளவு சமநிலைப்படுத்தி    தனது வாழ்வை கொண்டு செலுத்துகிறாரோ அந்த அளவு அவர் இரு காரணிகளையும் தனது வாழ்வில் திறம்பட அனுபவிக்கிறார் எனப்பொருள்.  இதில் சமநிலை தவறும் பட்சத்தில் அவரது வாழ்வில் இவ்விரு காரணிகளில் ஒன்றை பாதிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் எனப்பொருள்.  

மீண்டும் உங்களை விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைப்பேசி: 8300124501

Sunday, 9 May 2021

தத்துக்குழந்தை யோகம்!

 


மனித வாழ்வின் பொருளே இயற்கை வகுத்துள்ள நியதிப்படி நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டறிந்து அதில் வெற்றி பெற்று, பிறகு நமக்கான ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டு, நமது சந்ததியை விருத்தி செய்து, அற  வழியில் நடந்து நாம் வாழும் பூமிக்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்து, இறுதியாக நாம் வந்த இயற்கையுடன் இரண்டற மீண்டும் கலந்து விடுவதுதான். இயற்கையின் நியதியை மீறி செயல்பட்டால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகாது. அதனால்தான் இயற்கை நியதிகளுக்கு எதிராகவும் குடும்ப வாழ்வுக்கு எதிராகவும் துறவறத்தை போதித்த நமது நாட்டிலேயே தோன்றிய சமண, பௌத்த மதங்கள் தோல்வியை தழுவின. இந்து மதம் இல்லறமே நல்லறம் என்கிறது. இல்லறத்தில் இருந்துகொண்டே சமுதாயத்தொண்டு செய்ய வலியுறுத்துகிறது. இயற்கையின் நியதியில் எந்த இடத்தில் தடுமாறினாலும் வாழ்வு நிறைவானதாக இருக்காது. பொருளாதாரத்தை மட்டுமே பின்தொடர்ந்து செல்பவர்களுக்கு குடும்ப வாழ்வில் பாதிப்பிருக்கும்.. குடும்ப வாழ்வில் மட்டுமே திளைப்பவனுக்கு பொருளாதார முன்னேற்றம் குறைவு. இதில் தனி ஒருவரின் குடும்ப வாழ்வு முழுமையடைவது அவரது சந்ததி விருத்தியில்தான். அதனால்தான் குழந்தை இல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்றொரு கூற்று உருவானது. புத்திரப்பேறற்றவர்களிடம் ஆசி பெறுவது கூட பயனற்றது என்று கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் அன்றைய சமுதாயம் புத்திரப்பேறு இல்லாத ஆண் மட்டும் சந்ததி விருத்தியின் பொருட்டு இரண்டாவதாக மற்றொரு பெண்ணை மணந்து  புத்திரப்பேறை  பெறலாம் என்று பெண்ணுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்திருக்கிறது. ஏனெனில் தனது சொத்துக்காக தனது சந்ததியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஆணுக்கு இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுவரை சொத்து உரிமை ஆணுக்கு மட்டுமே இருந்ததன் பொருட்டே இத்தகைய கருத்துக்கள் எழுந்துள்ளதை உணரலாம். அத்தகைய கருத்துக்களை முன் வைத்தவர்கள் ஆண்கள் என்பதும் மற்றொரு காரணம். இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிர்ப்புகுரல்கள் எழும்பிய காலகட்டத்தில் ஒருவரது குடும்ப வாழ்வு முழுமையடைய ஒருவர் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்றொரு நிலைப்பாடு பிற்பாடு ஏற்பட்டது. இன்றைய பதிவில் நாம் சந்ததி இல்லா தம்பதியரில் தத்துக்குழந்தை அமைவது எத்தகைய ஜாதகத்தினருக்கு என்பதைப்பற்றி ஆராயவிருக்கிறோம். இது ஒரு உடலியக்கம் சார்ந்த விஷயம் என்பதால் மருத்துவ ரீதியாக ஆராய வேண்டி பாகை அடிப்படையில் இப்பதிவை அணுகியுள்ளேன்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1985 ல் பிறந்த ஒரு ஆண். இவரது ஜாதகத்தில் வீரிய ஸ்தானாதிபதி சந்திரன், விரையாதிபதி செவ்வாய், தடைகளுக்குரிய ராகு ஆகிய மூவரும் 3 பாகை நெருங்கிய நிலையில் அமைந்துள்ளனர். இப்படி வெவ்வேறு ராசிகளில் 3 பாகை இடைவெளிக்கும் அமையும் கிரகங்களும் கிரகச்சேர்க்கையாக நவீன ஜோதிடவியலில் குறிப்பாக மருத்துவ ஜோதிடவியலில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன  சந்திரனும் செவ்வாயும்  நின்ற மீனத்தின் அதிபதி குரு நீசமாகியுள்ளார். பாகை அடிப்படையில் பார்க்கையில் போக ஸ்தானாதிபதி (மூன்றாமதிபதி) சந்திரனும் வீரியத்திற்கு காரகன் செவ்வாயும் பாகை அடிப்படையில் ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்திர காரகன் குருவும் பாதக ஸ்தானத்தில் நீசம் பெற்றதால் ஜாதகருக்கு குழந்தை பெற உடலில் போதிய உயிரணுக்கள் இல்லை என்ப்பது தெளிவாகிறது. 5 ஆமதிபதி புதன் 8 ஆமிடத்திலிருந்து திசை நடத்துகிறார். இது புத்திரப்பேறுக்கு சிறப்பல்ல. மேலும் புத்திர காரகன் குரு 5 ன் விரையாதிபதி சூரியனோடு பாதக ஸ்தானத்தில் நீசம் பெற்று அமைந்த நிலையில் அலி கிரகங்களான கேது மற்றும் சனியின் 3 ஆம் பார்வையை பெறுவது கடும் புத்திர தோஷமாகும்.  ஜோதிடத்தில் 5 ஆம் பாவம் புத்திரம் என்றால் 8 ஆம் பாவம் தத்துக்குழந்தையை குறிக்கும் பாவமாகும். இதனால் 5 ஆமதிபதி 8 ல் நின்று திசை நடத்துவதால் ஜாதகர் தத்துக்குழந்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என பார்த்தால் தத்துக்குழந்தையை குறிக்கும் 8 ஆமதிபதி நீசமானதால் ஜாதகருக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்கும் எண்ணமே இல்லை. மனைவிக்கு புத்திர பாக்கியம் உண்டா என ஆராய்ந்தால் 7 ஆமிடம் பாதிக்கப்பட்டு 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சந்திரனுடன் நெருங்கிய பாகையில் அமைந்து இவ்விருவருக்கும் நெருங்கிய பாகையில் ராகு அமைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதனால் இவரது மனைவிக்கும் புத்திர பாக்கியத்தில் பாதிப்பு உள்ளது தெளிவாகிறது. இவருக்கு புத்திர பாக்கியம் தத்து உட்பட அனைத்து வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகரும் ஒரு ஆண்தான் 1976 ல் பிறந்தவர். இவருக்கு சந்திரன் 6 ல் நீசமாகி லக்னாதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று திசை நடத்துகிறார். 5 ல் ராகு உள்ள நிலையில் ஜாதகருக்கும் புத்திரப்பேறு கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய ஜாதகருக்கு குழந்தை இல்லை. செவ்வாய் லக்னாதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். இங்கு பரிவர்த்தனை 1 & 11 என ஆகிறது ஒரு சிறப்பு. பரிவர்த்தனைக்குப்பின் செவ்வாய் புதனின் பாகை 21.21 க்கு வந்து 5 ஆமதிபதியான உச்ச சுக்கிரனின் சாரம் பரணி-3 பெறுகிறார். மேலும் செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு-கேதுக்களும் நெருங்கிய பாகையிலே அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இவற்றை பாகை வரிசைப்படி கிரகச் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். ஜாதகத்தில் பரிவர்த்தனை மூலம் உச்ச சுக்கிரன் தொடர்பு பெற்று வலுவடைந்த செவ்வாய்  நீச சந்திரனை 8 ஆம் பார்வையாக பார்த்து  நீச பங்கப்படுத்துகிறார். 5 ல் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு சுக்கிரனின் உச்ச வலுவை தனதாக்கிக்கொள்கிறார். சூரியனில்  அஸ்தங்கமாகாமல்  குருவோடு இணைந்து 5 ஆமதிபதி சுக்கிரனின் உச்ச வலுவை ஏற்றுக்கொண்ட செவ்வாய் திசா நாதன் சந்திரனை பார்ப்பதால் சந்திரனுக்கு வலு அதிகமாகிறது. சந்திரன் இந்த ஜாதகத்தில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனானது கூடுதல் சிறப்பு. மேலும் பரிவர்தனைக்குப்பின் குருவின் சாரம் புனர்பூசம்-1 க்கு லக்னாதிபதி புதன் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் புதனின் கேட்டை-3 ல் நிற்கும் திசா நாதன் சந்திரனால்  புத்திரப்பேறை அளிக்க வாய்ப்பு உருவாகிறது. இந்நிலையில் 8 ஆமதிபதி சனி 2 ல் அமைந்து தனது 1௦ ஆம் பார்வையாக 11 ஆமிட கிரகங்களை பார்ப்பது புத்திர வாய்ப்பை குறைக்கவே செய்கிறது என்பதோடு சனி கால புருஷ 5 ஆமதிபதியான உச்ச சூரியனுக்கு பாகை அடிப்படையில் நெருங்கி நிற்கிறார். இப்படி பாகை அடிப்படையில் சனி சூரியன் இணைவதும் புத்திரப்பேறுக்கு பெரும் தடையாகும். இது புத்திர வாய்ப்பை குறைத்து குடும்பத்தில்  தத்துக்குழந்தையை ஏற்றுக்கொள்ளும்  நிலையை உருவாக்குகிறது. இதனால் ஜாதகர் குழந்தையை தத்து எடுக்க வேண்டி விண்ணப்பித்தார். கூடுதலாக மேற்கண்ட கிரகங்களோடு பாகை நெருக்கம் பெற்று 5, 11 அமைந்த ராகுவாலும் கேதுவாலும் புத்திரத்தடை ஏற்படுவதால் ஜாதகர் செயற்கை முறை கருவூட்டலை நாடுகிறார். புத்திர பாவங்களோடும் காரக கிரகங்களோடும் பாகை அடிப்படையில் நெருகிய தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களின் அமைப்பால் சில தோல்விகளுக்குப்பிறகு செயற்கைக்கருவூட்டல் வெற்றி பெற்று ஜாதகருக்கு சந்திர திசையில் பரிவர்தனைக்குப்பின் குரு சாரம் புனர்பூசம்-1 பெறும் புதன் புக்தியில் 5 ஆமதிபதி சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது அந்தரத்தில் கடந்த 2021 ஆண்டு துவக்கத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பாகை அடிப்படையில் சேர்க்கை பெற்றதாலும் செயற்கைக்கருவூட்டல் என்ற தங்களது காரகம் பயன்படுத்தப்படுவதாலும் ராகு-கேதுக்கள் புத்திரம் அமைய உதவியுள்ளன.  தற்போது சந்திர திசையின் அதே புதன் புக்தியில் குடும்ப பாவத்தில் நிற்கும் 8 ஆமதிபதி சனி அந்தரத்தில் தத்துக்குழந்தை வாய்ப்பும் வந்தது. தத்துப்புத்திரத்தையும் தங்களது குழந்தையாக ஏற்றுக்கொண்டு வளர்க்கவே ஜாதகர் எண்ணினார் என்றாலும் தங்களைப்போல் புத்திரப்பேறுக்காக தவிக்கும் மற்றொரு தம்பதிக்கு அந்த வாய்ப்பு செல்லவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தத்துக்குழந்தை வாய்ப்பை ஜாதகரது குடும்பம் மறுத்தது.

கீழே மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேற்கண்ட ஜாதகி 1974 ல்  பிறந்தவர். ஜாதகிக்கு 20 வயது முதல் 37 வயது வரை புதன் திசை. ஜாதகிக்கு புதன் திசையில் ராகு புக்தியில் 3௦ வயதில் திருமணம் நடந்தது. ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனும் 7 ஆமதிபதி செவ்வாயும் விரையாதிபதி புதனும் தங்களுக்குள் 3 பாகை நெருக்கத்தில் அமைந்துள்ளன. இதனால் ஜாதகியும் கணவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். புதன் காதலை குறிக்கும் கிரகமாவதால் புதன் திசையில் காதல் திருமணம். மிதுனத்தில் 5 ஆமதிபதி சனி இருப்பதால் பாக்கிய ஸ்தானமான மிதுனத்தின் வேலையை புதன் செய்ய மாட்டார். தான் நிற்கும் 12 ஆமிடமான கன்னியின் வேலையை மட்டுமே செய்வார். இதனால் 5க்கு 8 ஆம் பாவமான கன்னியில் இருந்து திசை நடத்தியதாலும் பாகை அடிப்படையில் 5 ஆமதிபதி சனிக்கு மிகுந்த இடைவெளியில் புதன் அமைந்ததாலும் புதனின் திசையில் ஜாதகிக்கு புத்திரம் அமையவில்லை. அதே சமயம் கணவரை குறிக்கும் செவ்வாய், ஜாதகியை குறிக்கும் சுக்கிரன் மற்றும் கற்பப்பையை குறிக்கும் சந்திரன் ஆகியோரோடு அலி கிரகமான புதன் நெருங்கிய பாகை பெற்றதால் கணவன் மனைவிக்கு காதலை தருகிறது ஆனால் புதன் ஒரு அலிக்கிரகம் என்பதால் புத்திரத்தை தர இயலவில்லை. புதன் திசைக்கு அடுத்து வந்த கேதுவும் 8 ஆமிட தொடர்பு பெற்றதால் புத்திரப்பேற்றை தரவில்லை. ஆனால் 8 ல் அமைந்த கேது, பாகை அடிப்படையில் பாக்ய ஸ்தானமான 9 ல் அமைந்த 5 ஆமதிபதி சனியோடும் 5 ல் வக்கிரம் பெற்று 5 ஆமதிபதி சனியை பார்க்கும் குருவோடும் 3 பாகை நெருக்கமாக அமைந்துள்ளார். இப்படி 5 அமைந்த புத்திர காரகன் குரு, 5 ஆமதிபதி சனி மற்றும் 8 ஆமிட கேது இவர்களுக்கிடையேயான பாகை முறை தொடர்பால் ஜாதகியும் அவர்தம் கணவரும் தத்துக்குழந்தையை ஏற்க முடிவு செய்கின்றனர். இதன் அடிப்படையின் 8 ல் நின்ற கேது திசையில் 5 ல் நின்ற குரு புக்தியில் ஜாதகியின் 41 ஆவது வயதில் இவர்களுக்கு தத்துக்குழந்தையாக ஒரு ஆண் குழந்தை கிடைக்கப்பெற்றது.  

மீண்டும் ஒரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Thursday, 18 March 2021

அதிசயங்களை நிகழ்த்த வரும் அதிசார குரு!

 


ஒரு கிரகம் முறையான பெயர்ச்சிக்கு முன்னரே தற்காலிகமாக அடுத்த ராசிக்கு செல்லும் பெயர்ச்சியே அதிசார பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. தற்போது மகரத்தில் சனியோடு இணைந்து நிற்கும் குரு இன்னும் சில நாட்களில் கும்பத்திற்கு அதிசாரமாக செல்ல இருக்கிறார்.  உண்மையில் குருவை கடந்து செல்லும் பூமியின் சுழற்சியால் ஏற்படும் ஒரு மாயத்தோற்றமே இது என்றாலும் கிரகங்களின் கதிர் வீச்சுகளே உயிரினங்களை இயக்குகின்றன என்பதன் அடிப்படையில் இதுவும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி அதிசாரமாக அடுத்த ராசிக்கு செல்லும் குரு வழக்கமாக 4 மாதங்கள் அதிசார மற்றும் வக்கிர கதியில் இருப்பார். ஆனால் இம்முறை குரு கிட்டத்தக்க 6 மாத காலங்கள் இப்படி அதிசார மற்றும் வக்கிர கதியில் இருப்பார் என்ற அடிப்படையில் இந்த அதிசார குருப்பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.  பொதுவாக நீச வீட்டிலிருந்து வெளியேறும் ஒரு கிரகம் தனது ஆரோகண பயணத்தை துவங்குகிறது. நீச்ச வீட்டிலிருந்து வெளியேறி அடுத்த வீட்டிற்கு செல்லும் குரு தனது நீச்சத்தன்மையிலிருந்தும் உடன் இணைந்த சுபாவ பாவி சனியின் பிடியிலிருந்தும் விடுபட்டுச் செல்கிறார். இதனால் குரு தற்போது தீவிர வீரியத்தோடு செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.  

குரு இக்காலத்தில் பெருமளவு வக்கிர கதியிலேயே இருப்பார். வக்கிர நிலை பெறும்  கிரகங்கள் ராகு-கேதுக்களோடு இணைந்து அல்லது அதன் தன்மையில் செயல்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  அதே சமயம் இதுவரை சனியோடு இணைந்திருந்து சனியின் மற்றொரு வீட்டிக்கு செல்லும் குருவிடம் சனியும் குணமும் இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். குரு கும்பத்திற்கு சென்று மிதுனத்தையும் சிம்மத்தையும் துலாத்தையும் தனது பார்வையால் புனிதப்படுத்துகிறார். அதற்கு முன்னர்  செவ்வாய் ராகுவை கடந்து செல்லும் இம்மாத கடைசி வாரம் உலக அளவில் ஒரு கடுமையான நெருக்கடியான காலமாக இருக்கும்.  குரு செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் கும்பத்திற்கு செல்லும் இதே காலத்தில் குருவின் சார நாதன் செவ்வாய் ராகுவை கடந்து தனது சொந்த நட்சத்திரம் மிருகசீரிஷத்தில் மிதுனம் சென்று குருவின் 5 ஆம் பார்வையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் இம்மாத இறுதிக்குப்பிறகு உலக அளவில் அரசியல், வேலை, குடும்ப மற்றும் பணிச்சூழல்களில் மாறுதல்களை அனைவரது வாழ்விலும் உணரும்வண்ணமோ அல்லது உணராவண்ணமோ ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த அதிச்சார குருவின் மாற்றம் தனி மனித வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 

லக்னாதிபதி புதன் 5,12 ஆமதிபதி சுக்கிரனுடன் இணைந்து நீண்ட பயணங்களை குறிக்கும் 9 ஆமிடத்தில் உள்ளதால் ஜாதகர் தனது வாழ்வில் நீண்ட தொலைவு பயணங்களை செய்வார். சுக்கிரனே வெளிநாட்டுப்பயணத்தை குறிக்கும் 12 ஆமதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. புதன் 1௦ ஆமதிபதியும் ஜல ராசியான மீனத்தின் அதிபதியுமான குருவின் பூரட்டாதி-3 அமைந்து, புதன் நின்ற வீட்டோனான சனி மற்றொரு ஜல ராசியான விருட்சிகத்தில் புதனின் கேட்டை-4 ல் நின்று,  வருமான ஸ்தானாதிபதி சந்திரன் கடகத்தில் ஜீவன காரகன் சனியின் பூசம்-4 ல் நின்றதால் ஜாதகர் வெளிநாட்டில் பணி புரிகிறார். 1௦ ஆமதிபதி தனகாரகன் குருவாகி, லக்னாதிபதியோடு இணைந்த கிரகமும் தனத்தை குறிக்கும் மற்றொரு கிரகம் சுக்கிரனாகி , ஜீவன காரகன் சனி கணக்கு, வங்கி, பதிவுகளை குறிக்கும் புதனின் கேட்டையில் நின்றதால் ஜாதகர் வங்கித்துறையில் பணிபுரிகிறார். கூட்டுக்கிரக சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலுவானவர்கள் என்ற அடிப்படையில் 1௦ ஆமிட கிரகங்களில் வலுவானது ராகுதான். இதனால் ஜாதகர் வளைகுடாவில் கணினி சார்ந்த துறையில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். (குரு-வங்கி, ராகு-கணினி.)

தற்போது ஜாதகருக்கு 1௦ ஆமிட ராகுவின் சதையம்-4 ல் நிற்கும் சுக்கிரனின் திசையில் லக்னாதிபதி புதனின் ரேவதி-1 நிற்கும் ராகுவின் புக்தி நடத்துகிறது. ராகுவின் சாரநாதன் புதன் உத்தியோக உயர்வை குறிப்பிடும் 9 ஆம் பாவத்தில் 1௦ அதிபதி குருவின் சாரம் பெற்று நிற்கிறார். இந்த அமைப்பால் 9 மற்றும் 1௦ ஆமிட கிரகங்கள் இணைந்து செயல்பட்டு ஜாதகருக்கு தற்போது  தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றன. ஜாதகருக்கு குருவின் அந்தரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து சனியின் அந்தரம் துவங்கவுள்ளது. இதே சமயம் 1௦ ஆமதிபதியான குரு கோட்சாரத்தில் 9 ஆம் பாவமான கும்பத்திற்கு அதிசாரமாக வந்து அங்கு ஜனன காலத்தில் நிற்கும் சுக்கிரன் மற்றும் புதனோடு இணைகிறார். இது ஜாதகருக்கு ஒரு அருமையான கால கட்டமாகும். 9 ஆமிடம் குருவிற்கு இதர பாவங்களைவிட ஒரு ஒப்பற்ற ஸ்தானமாகும்.. காரணம் குரு கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதி என்பதால்தான். இக்காலத்தில் ஜாதகருக்கு வாழ்வில் உத்தியோக உயர்வுகள் ஏற்பட வேண்டும். காரணம் சனி அந்தரத்தில் இது நடக்கிறது என்பதால்தான். சனிக்கு 9 ஆவது திரிகோணத்தில் கடகத்தில் நிற்கும் சந்திரன் சனியில் சாரத்தில் ஆட்சி பெற்று அமைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இட மாற்றத்தை குறிக்கும் சந்திரன் சனியின் சாரம் பெற்றதால் இட மாற்றம் வேலை வகையில் ஏற்படுவதை இது உணர்த்துகிறது. கோட்சார சூரியனும் லக்னத்திற்கு 1௦ ஆம் பாவத்தில் தற்போது நிற்கிறார் இதனால் அப்படி இட மாறுதலோடு அமையும் வேலை ஜாதகருக்கு மிகுந்த மதிப்பையும் சிறப்பையும் தருவதாக அமையும்.  லக்னாதிபதிக்கு நண்பரான சூரியன் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1௦ ல்  திக்பலம் பெற்று அமைந்துள்ள நிலையில் கோட்சாரத்திலும் திக்பலம் பெற்று நிற்பதுதான் இந்த சிறப்பிற்கு காரணம்.

தற்போது ஜாதகர் வளைகுடாவில் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு இடமாறுதலுடன் கூடிய உத்தியோக உயர்வு கிடைக்கப்பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில்  பணியில் சேர உள்ளார்.     

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

  


8 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிர கதியில் நிற்கிறார். 7 ஆமிடம் மனைவியை குறிக்கும் பாவமாகும். அங்கு நிற்கும் குரு குடும்பம், குழந்தை வருமானம் இவற்றோடு 8 ஆமதிபதி என்பதால்    விபத்து, கண்டம், மாரகம், பிரிவினை, அவமானம்  போன்றவற்றை குறிக்கிறார். திருமணத்திற்கு பிறகுதான் வாழ்க்கையில் அவமானம் என்றால் என்னவென்று உணர்ந்துகொண்டதாக ஜாதகர் தெரிவிக்கிறார். தன்னை அவமானப்படுத்துவதற்காகவே தனக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்களோ என புலம்பினார். ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் செவ்வாயின் வீட்டில் அனுஷம்-1 சுய சாரம் பெற்ற சனியின் திசை நடக்கிறது. 4, 9 ஆம் வீட்டோனின் ராசியில் சனி நிற்பதால் இரு வீட்டு வேலையையும் சனி செய்தாக வேண்டும். 9 ஆமிடம் சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இப்படி மேஷத்திற்கு செயல்படும் சனி ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்திற்கு விரையத்தில் மேஷத்திற்கு செயல்படுவதால் வேலையில் பாதிப்புகளை கொடுத்துக்கொண்டுள்ளார். கோட்சார கேது ஜனன சனி மீது தற்போது சென்றுகொண்டுள்ளது இதை தெளிவாக உணர்த்துகிறது. இதனால் வேலைவகை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உள்ளது. வேலையில் கவனக்குறைவாக இருந்தால் பணி பறிபோகும் காலமாகும். சனியின் திரிகோணத்தில் ராகு நிற்பதால் ஜாதகர் ராகு-கேதுக்கள் தொடர்புடைய கணினித்துறையில்தான் பணிபுரிகிறார்.   ஜனன சனி மீது கோட்சாரத்தில் தற்போது சென்றுகொண்டிருக்கும் கேதுவின் காரக தொழிலை ஜாதகர் செய்வதால்  வேலை வகையில் பாதிப்பு ஜாதகருக்கு குறைவாகவே உள்ளது. கர்ம காரகன் சனி தந்தையை குறிக்கும் பாவமான 9 ஆமிடத்தோடு தொடர்புகொண்டு செயல்படும் இந்த காலகட்டத்தில் ஜாதகர் தனது தந்தைக்கு கர்மம் செய்யும் நிலை ஏற்பட்டது.. அதே சமயம் 6 ஆமிட நீச்ச குருவால்  மனைவியுடன்  இணக்கமற்ற சூழலில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார். இங்கே குடும்பத்தை பிரியாமல் காப்பது பிரிவினை பாவமான 8 ஆமிடதிற்கு  திரிகோணத்தில் விருட்சிகத்தில் நின்று திசை நடத்தும் சனிதான் என்றால் அது மிகையல்ல. 

8 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் சனியோடு இணைந்து சென்றுகொண்டிருப்பது குருவின் செயல்பாட்டை திசா நாதன் சனி தடுத்துவிடுகிறார் என்பதை காட்டுகிறது. மேலும் தன் வீட்டில் நிற்கும் குருவிற்கு கேந்திரத்தில்தான் சனி நிற்கிறார். இதனால் தன் வீட்டில் நிற்கும் குருவை கட்டுப்படுத்தும் சக்தி குருவின் சம கிரகமான சனிக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனினும் குரு தரும் அவமானங்களை சனியால் தடுக்க இயலாது. அதாவது அவமானங்களை எதிர்கொண்டு பிரிவினையை ஜாதகர் தவிர்ப்பார். திசா நாதன் சனி பாக்ய ஸ்தானமான 9 ஆமிடம் மேஷத்திற்கு செயல்படுவதாலும் புத்திர காரகன் குருவோடு கோட்சாரத்தில் இணைந்துள்ளதாலும் ஜாதகரின் மனைவி தற்போது கருவுற்றிருக்கிறார். லக்னத்திற்கு 4 ஆமிடதில் செவ்வாயின் வீட்டில் நிற்கும் சனி ஜாதகருக்கு வீடு யோகத்தையும் தருகிறார். ஜாதகாருக்கு சனி திசையில் சுய புக்திதான் நடக்கிறது. சிம்மத்தின் பூர்வ புண்ணியாதிபதி குரு 4 ஆமதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் தற்போது திசா  நாதன் சனிக்கு 4 ஆமிடம் கும்பத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி வரும் குரு ஜாதகருக்கு வீடு யோகத்தை வழங்குகிறார். ஜாதகர் வீடு கட்டும் முயற்ச்சியில் நிலத்தை முதலில் தற்போது வாங்கியுள்ளார். 

இந்த நிலையில்தான் கோட்சார குரு லக்னத்திற்கு 7 ல் அதிசாரமாக வருகிறார். இதனால் ஜாதகர் பாதிப்படைவார். கோட்சார குரு லக்னத்தை பார்ப்பது சிறப்பே ஆனாலும் ஜனன காலத்தில் தான் நின்ற அதே 7 ஆமிடத்திற்கு அவமான ஸ்தானாதிபதி வருவது நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். குழந்தை பிறந்ததும் மனைவி கோபம்கொண்டு கணவரோடு ஒருங்கிணைய மாட்டார். அதுவும் சில காலம்தான். அதன் பிறகு கோட்சார சனி அடுத்த வருடம் கும்பத்திற்கு வந்து அங்கு ஜனன காலத்தில் நின்ற குருவை கட்டுப்படுத்திவிடுகிறார். இதனால் மனைவியால் நீண்டநாள் கணவரை பிரிந்து இருக்க இயலாது. காரணம் தனது மூலத்திரிகோண வீட்டிற்கு வரும் 7 ஆமதிபதியும் திசா நாதனுமான சனி, குருவை தன்னோடு இணைந்து செயல்பட வைத்துவிடுவார். எனவே இங்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் பிரிவினை நிரந்தரமாகாது தடுக்கப்படும்..

இந்த ஜாதகத்தில் கோட்சாரத்தில் அதிசாரமாகி கும்பத்திற்கு வரும் குரு ஜாதகருக்கு மனைவி வகையில் நெருக்கடியை தற்காலிகமாக கொடுப்பார் ஆனால் அது நிரந்தரமாகாமல் சனி தவிர்த்துவிடுகிறார்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 19 June 2020

ஜோதிடத்தில் குடும்ப உறவுகள்





மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது. ஒரு நபர் உறவுகளின்றி வாழ்ந்தால் அவர் அநாதை என அழைக்கப்படுவார். பொருளாதார சிரமங்களைகளைக்கூட ஒருவர் பொறுத்துக்கொள்ளவார். ஆனால் இன்று உறவுகள் ரீதியில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை மிகப்பெரிய அளவில் எடுத்துக்கொள்கின்றனர். உறவுகளோடு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அன்றைய காலத்தில் ஒருவர் ஒரு உறவால் பாதிக்கப்பட்டால் மற்றொரு உறவினர் அவரை தாங்கிப்பிடிப்பார். இதனால் உறவுகள் என்றாலே சிரமப்படுதுபவர்கள் என்றொரு மனோநிலை ஜாதகருக்கு வராது.  ஆனால் உறவுகளைவிட்டு சம்பாத்தியதிற்காக பிரிந்து செல்லும் இன்றைய சூழலில் உறவுகளோடு ஒரு மனிதனின் பிணைப்பு குறையத்தொடங்குகிறது. இதனால் அவன் தனி மனிதன் ஆகிறான். அவனது உறவு அவனது மனைவி மற்றும் குழந்தைகள் என்ற அளவில் சுருங்கிவிடுகிறது. மற்றவை எல்லாம் பெயரளவிலேயே உறவாக அமைந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் கால மாற்றம் ஏற்படுத்தும் விழைவுகள். இவைகளை ஒரு தனி மனிதனால் தடுத்துவிட இயலாது. பண்டைய ஜோதிட விதிகளோடு போராடாமல் காலமாற்றத்திற்கேற்ப மாறிவரும் உறவு நிலைகளையும் கவனித்து ஜோதிடத்தை அணுகுவதே சிறந்தது. இதனால் ஒருவர் மனோரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த ஆலோசனைகளை ஒரு ஜோதிடரால் வழங்க முடியும். இவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


மிதுன லக்னம். லக்னத்திற்கு 7 ல் பாதகாதிபதி குரு ஆட்சி. கடும் களத்திர தோஷம் கொண்ட ஜாதகம். ஜாதகருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களது குடும்ப வாழ்விலும் பாதிப்புகள் உண்டு. களத்திர காரகன் சுக்கிரனும், களத்திர பாவமும் பாவாதிபதி குருவும் பாவகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாதகருக்கு பாதிப்பை மனைவி ஏற்படுத்தினால் மனைவியும் பாதிக்கப்படுவார் என்ற அமைப்பு இங்கே உள்ளது. இதனால் இருவரும் தங்கள் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட்டால் குடும்பம் பிரியாமல் தடுக்க முடியும். செவ்வாயின் சேர்க்கை பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் பாதக ஸ்தான கிரகங்களை பார்க்கிறது. இதனால் மனைவி பிடிவாதமும் கோபமும் நேர்மையும் கொண்டவராக இருப்பார். சனியைவிட 4 பாகைகள் பின்தங்கி கிரக யுத்தத்தில் தோல்வியுற்ற செவ்வாய் தனது நான்காம் பார்வையாக 8 ல் மறைந்த லக்னாதிபதி புதனையும் சூரியனையும் பார்க்கிறது. இதனால் ஜாதகருக்கும் ஜாதகரின் தந்தைக்கும் பிடிவாதமும் வைராக்கியமும் ஏற்படும். லக்னாதிபதி புதன் சூரியனோடு லக்னத்திற்கு 8 ல் நிற்பது சிறந்த புத ஆதித்த யோகம். ஜாதகர் நல்ல மதிநுட்பம்கொண்டவர். இப்பொழுது இவர்களின் வாழ்வில் உறவுகள் வழி பாதிப்புகள் எப்படி என்பதை காணலாம்.


கோட்சாரத்தில் லக்னத்திற்கு 1 – 7ல் ராகு – கேதுக்கள் நிற்பதால் ஜாதகருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறவு சரியில்லை. மனைவி தனது தந்தையின் வீட்டில் குழந்தையோடு இருக்கிறார். தனது மாமனார் மற்றும் கணவரின் மூத்த சகோதரி, மற்றும் மூத்த சகோதரியின் கணவர் ஆகியோர் தங்களது குடும்ப வாழ்க்கைக்கு தடையாக இருப்பதாகவும் கணவன் தன்னை மதிப்பதில்லை என்பதும் மனைவியின் குற்றச்சாட்டு. ஜாதகத்தில் லக்னாதிபதி 8 ஆமிடத்தில் சூரியனோடு சேர்ந்து மறைவு பெற்று அமர்ந்துள்ள நிலையில் 8 ஆமதிபதி உச்சமானதால் ஜாதகர் ஒரு பாரம்பரியமும் கௌரவமும்கொண்ட குடும்பத்தில் பிறந்தவராவார். இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி புதனுக்கு சனியும் சுக்கிரனும் நண்பர்கள். சுக்கிரன் பாதக ஸ்தானம் பெற்றுள்ளது. சூரியன் மறைவு ஸ்தானம் பெற்றுள்ளது. புதன் எந்த பாவத்திலும் முழுமையான மறைவு பெறாத ஒரே கிரகமாகும். சூரியன் 8, 12 ல் மறைவு பெறும் கிரகமாகும். இங்கு நண்பனின் வீட்டில் மறைந்த புதன் பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஆனால் 8 ல் பகைவன் சனியின் வீட்டில் அமைந்த சூரியன் பாதிக்கப்படும். சூரியனுக்கும் பாகை இடைவெளி அதிகம் என்பதால் இங்கு தந்தைக்கும் மகனுக்கும் ஒருங்கிணைவு இருக்காது. ஆனால் சூரியனுக்கு புதன் கட்டுப்படும் கிரகமாகும். சூரியன் புதனைவிட அதிக பாகையில் சென்றிருப்பதால் சூரியன் புதனை கட்டுப்படுத்தும். 

உச்ச சனியோடு சேர்ந்த செவ்வாய் புதனையும் சூரியனையும் பார்ப்பதால் ஜாதகரின் தந்தை சனி+செவ்வாய் சேர்க்கையை குறிக்கும் சீருடையணிந்த ராணுவ அதிகாரியாக பணிபுரிந்தவராவார். இதனால் தந்தை மகனின் குடும்ப வாழ்வில் தலையிட்டு தனது ராணுவ கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இதனால் ஜாதகர் தனது குடும்ப வாழ்வில் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் தனது குடும்ப வாழ்வில் தடுமாறுகிறார். சூரியன் சுக்கிரனுக்கு பகை கிரகம் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். மேலும் செவ்வாயின் பார்வையும்  தந்தையை மூர்க்கமாக்குகிறது. மூத்த சகோதரியை குறிக்கும் சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் அமைந்து செவ்வாயோடு சேர்ந்த சனியின் பார்வையை பெறுகிறது. இதனால் கணவனின் மூத்த சகோதரி வகையில் ஜாதகரின் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும்.  மைத்துனனை குறிக்கும் செவ்வாய் 6,11 ஆமதிபதியாகி தனது கடும் பகை கிரகமான சனியோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் மைத்துனனாலும் (ஜாதகரின் மூத்த சகோதரியின் கணவன்)  ஜாதகருக்கு பாதிப்புகளே அதிகம். சனியும் செவ்வாயும் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்தில் இணைந்து நின்று, 7 ஆம் பாவத்தில் ஆட்சி பெற்று நிற்கும் புத்திர காரகனும் களத்திர பாவாதிபதியுமான குருவை சனி பார்ப்பதால் குருவின் களத்திர தோஷத்தை சனி குறைத்தாலும் குழந்தை பிறந்த பின் இருவருக்கும் பிரிவினை பாதிப்பு ஏற்படவேண்டும் என்ற விதி இங்கே செயல்படுகிறது.

தற்போது இந்த நபருக்கு ஜோதிடர்கள் கிரகங்கள் ஜாதக ரீதியாக அமைந்துள்ள விஷயங்களை விளக்கி ஜாதகரது தந்தை, மூத்த சகோதரி மற்றும் அவரது கணவரை தனது குடும்ப விஷயங்களில் தலையிடாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் மனைவியோடு தனியாக குடித்தனம் போகவேண்டும் என ஆலோசனை கூறலாம். இவற்றை கிரகங்களின் நிலைகளின்படியே அறிவுறுத்தவேண்டும். தற்போது கோட்சார  ராகு-கேதுக்கள் லக்னத்திற்கு 1 – 7  ஆக அமைந்துள்ளன. வரும் புரட்டாசி மாதம் (செப்டம்பர் 2௦2௦)ல் அவை 6 -12 நிலை பெற்று சிறப்பாக மாறவிருக்கின்றன. மேலும் ஜனன கால புதன்+சூரியன் மீது நீதிமானான கோட்சார சனி செல்வதால் தந்தை சனியின் நேர்மைக்கு தலைவணங்கியாக வேண்டும். கூடுதலாக பாதகாதிபதி குரு இவ்வருட இறுதியில் லக்னதிற்கு 8 நீசமாகி அங்கு ஆட்சிபெற்ற சனியோடு சேரவிருக்கிறார். (தற்போது தற்காலிகமாக அதிசார குரு சனியோடு சேர்ந்துள்ளது). இதனால் இவ்வருட பிற்பகுதியில் ஜாதகர் தனது குடும்பத்துடன் இணைய வாய்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஜாதகத்தில் 7 ஆமிட நிலையும் சனியோடு சேர்ந்த செவ்வாயும் பிரிவினையை குறிப்பிடும் அமைப்பு இந்த சூழலில் இவர்கள் பிரிவதே ஜாதகப்படி உள்ளது என ஜோதிடர்கள் சிந்திக்கத்தோன்றும். இங்கு செவ்வாய் சனியிடம் கிரக யுத்தத்தில் தோல்வியுற்றுள்ளதையும் பாதக ஸ்தானத்திற்கும் பாதகாதிபதிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளதையும்  வெற்றி பெற்ற லக்ன யோகாதிபதி சனியின் 7 ல் பதிவதையும் கவனிக்க வேண்டும். மனைவியின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து ஜாதக திசா புக்திகள் மற்றும் கோட்சாரத்தின் அடிப்படையில் தீர்க்கமான பதிலை கூறுவது ஒரு சிறந்த ஜோதிடரின் முக்கிய கடமை. இந்த ஜாதகரின் மனைவிக்கு  தனுசு லக்னம். பாதக ஸ்தானமான மிதுனத்தில் புதன் ஆட்சியாக உள்ளது. சம சப்தம லக்னம் என்பதைவிட சம தோஷம் கொண்ட ஜாதகங்கள் என்பதையும் அடியேன் கவனித்தேன்.

விரைவில் உங்களை மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Saturday, 11 April 2020

சப்தாம்சத்தை கையாள்வது எப்படி?




ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் பாவங்கள் எப்படி திசா புக்தி காலங்களில்  ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதன் ஆதார சுருதியை கண்டுபிடித்துவிட்டால் பலன் சொல்வதில் துல்லியம் தன்னால் வந்துவிடும். இப்படி கிரகங்களும் பாவங்களும் ஒரு குறிப்பிட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்குமா என கண்டுப்பிடிக்க ஷட்பலம், அஷ்டவர்க்கம் போன்ற பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டாலும் அதற்கான வர்க்கச் சக்கரங்களைகொண்டு ஆராய்ந்து தெளிவது மிகச் சரியாக இருக்கும் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அதற்காக ஏறத்தாழ 60 க்கும் மேற்பட்ட வர்க்க சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் எப்படி கணக்கிடுவது என்பது ஒரு புறமிருக்க மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் குடும்பதவர்களுக்கே அன்றைய ஜனன நேரம் மிகச் சரியாக கணித்து வைத்திருந்ததால் சாமான்யனுக்கு அவை பயன்படவில்லை. எனவே ராசி மற்றும் நவாம்சம் இவற்றோடு கூடுதலாக திரேக்காணம் போன்ற ஒரு சில வர்க்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றை கைவிட்டுவிட்டனர். ஜோதிஷ மகரிஷி பராசரர் இப்படிப்பட்ட பல்வேறு வர்க்கங்களையும் ஆராய்ந்து தெளிந்து அவற்றில் 16 வர்க்கங்களை மட்டும் கடைபிடித்து வாழ்வின் அணைந்து விஷயங்களுக்கும் விடை காணலாம் என வகைப்படுத்தி தந்துள்ளார். இவையே சோடசாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 16 வகை வர்க்க சக்கரங்களில் ஒருவரின் புத்திர பாக்கியத்திற்கு உரிய சப்தாம் சத்தைக்கொண்டு பலன் காண்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம். கணினியில் சிறந்ததொரு ஜோதிட மென்பொருளைக்கொண்டு இந்த  சக்கரங்களை வினாடிகளில் அமைத்துவிடலாம் என்றாலும் இதற்கான நல்ல நூல்களும் தற்போது வரத்துவங்கியுள்ளன. அவற்றைகொண்டு சோடச வர்க்கங்களின் அடிப்படையை தெரிந்துகொண்டால் இவற்றைக்கொண்டு ஜெனன நேரத் தவறுகளைக்கூட சரி செய்ய இயலும். 

கீழே நீங்கள் காண்பது ஒரு பெண்ணின் ஜாதகம்.


ஜாதகி 1989 துவக்கத்தில் பிறந்து 2008 இறுதியில் திருமணம் செய்தவர். 11 வருடங்கள் குழந்தையின்மையால் குடும்ப பிரிவினை வரை சென்றவர். தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகம். லக்னாதிபதி குரு 6 ஆமிடத்தில் வக்கிர நிலை பெற்று 6 ,11 ஆமதிபதி சுக்கிரனோடு பரிவர்த்தனையில் உள்ளார். ஒரு ஜாதகத்தில் புத்திர காரகன் குரு வக்கிரமானால் புத்திர வகையில் தடை தாமதங்கள் மற்றும் பாதிப்புகள்  ஏற்படும். 5 ஆமதிபதி செவ்வாய் 5 க்கு விரையம் பெற்று அமைந்துள்ளதும் புத்திர வகைக்கு சிறப்பல்ல. குடும்பத்திற்கு புது வரவுகளை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் பாதகாதிபதி புதன் மாந்தியுடன் இணைந்து அமைந்துள்ளதும், 2 ஆமதிபதி சனி 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமைந்ததும் ஒரு வகை புத்திர தடையே ஆகும். பெண்ணுக்கு 9 ஆமிடமான பாக்ய ஸ்தானமே முக்கிய புத்திர ஸ்தானமாகும். 9 ல் கேது அமைத்துள்ளதும் புத்திர தடையை குறிப்பிடுகிறது. ஆண்-பெண் இருவருக்கும் உயிரணு உற்பத்திக்கு காரக கிரகம் கால புருஷ 5 ஆமதிபதி சூரியனாகும். சூரியன் சனியோடு சேர்ந்தால் உயிரணு உற்பத்தியில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். கர்ப்பப்பையை குறிப்பிடும் 8 ஆம் பாவத்திற்கு பாதகாதிபதி புதனின் பார்வை விழுகிறது. கர்ப்பப்பைக்கு காரக கிரகம் சந்திரன் சனியோடு சேர்ந்து உள்ளதால் ஜாதகிக்கு கற்பப்பை சார்ந்த விஷயங்களால் புத்திரப்பேறு தடைபட வேண்டும். ஜாதகி கர்ப்பப்பை சார்ந்த பாதிப்புகளால் குழந்தை பிறப்புக்கு குறைந்த வாய்ப்புள்ளவர் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டவர்.   சுக்கிரனோடு பரிவர்தனைக்குப்பின் லக்னத்தில் குரு வந்து அமர்வது மட்டுமே ஒரு நல்ல அமைப்பாகும். இதனால் குருவின் பார்வை  5,7,9 பாவங்களில் பதிகிறது. ஜாதகிக்கு தற்போது அஷ்டமாதிபதியான சந்திர திசையில் சனி புக்தி நடக்கிறது.  சந்திரன் லக்னத்திற்கு 6, 11 க்குரிய சுக்கிரனின் பூராடம்-1 ல் நிற்கிறது. சனி கேதுவின் மூலம்-4 ல் நிற்கிறது. இந்த நிலையில் தற்போது புத்திரப்பேறுக்கான வாய்ப்புகளை பார்த்தால் மிகக்குறைவாகவே தெரிகிறது. குரு லக்னத்தில் இருப்பது ஒரு நம்பிக்கையை தருகிறது அவ்வளவே.

தற்போது புத்திர பாவத்திற்கு ஆராய வேண்டிய சப்தாம்ச சக்கரத்திற்கு வருவோம். சப்தாம்ச சக்கரத்தில் 7 ஆவது பாவத்தையும் குருவையும் பிரதானமாகக்கொண்டு குழந்தைப்பேறை ஆராய வேண்டும். ராசிச்சக்கர 5 ஆமதிபதி செவ்வாய் சப்தாம்சத்தில் குரு பார்வை பெற்று வர்கோத்தமம் பெற்றுள்ளது மிகச் சிறப்பு.    சப்தாம்ச சக்கரத்தில் 5 ஆமதிபதி சுக்கிரன் 7 ஆமிடத்தில் நிற்பதும் சிறப்பே. சப்தாம்ச குரு ராசியில் 9 ஆம் பாவத்தில் உள்ள கேதுவுடன் இணைந்துள்ளார். இதனால் புத்திரத்தடைக்கு கேதுவினால் ஏற்படும் தோஷம் கோட்சாரத்தில் குருவோடு கேது இணைவுபெறும்போது நீங்க வேண்டும் என்பது விதி. குரு வக்கிர கதியில் உள்ளதால் கேதுவின் தோஷத்தை கட்டுப்படுத்தும் தகுதி குருவிற்கு உண்டு. ஜாதகிக்கு சப்தாம்சத்தில் குரு வீட்டில் குரு  பார்வை பெற்று திசை நடத்தும் சந்திர திசையில் சப்தாம்ச பாக்யாதிபதி சனியின் புத்தியில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

கீழே இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஜாதகிக்கு ராகு திசையில் சுய புக்தியில் சுக்கிரன் அந்தரம் நடக்கிறது. ராகு 5 க்கு விரையத்தில் உச்ச நிலையில் அமைந்துள்ளார். இது புத்திரப்பேறுக்கு சிறப்பல்ல. அந்தர நாதன் சுக்கிரன் 5 ஆவது பாவத்தில் அமைந்துள்ளது மட்டுமே தற்போது புத்திர பாக்கியத்திற்கு தொடர்பை  ஏற்படுத்துகிறது. 2 ஆவது குழந்தை பாவமான 7 ல் சந்திரன் அந்தர நாதன் சுக்கிரனின் பூரம்-2 ல் நிற்கிறது.   மேலும் 2 ஆவது குழந்தை என்பது 7 ஆவது பாவம் என எடுத்துக்கொண்டால் 7 க்கு லாபத்தில் மிதுனத்தில் அந்தர நாதன் சுக்கிரன் அமைந்துள்ளார். ஆனால் திசா புக்தி நாதர்களை மீறி அந்தர நாதனால் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தர நாதன் சுக்கிரன் மேல் தற்போது கோட்சார ராகு நிற்பது இதை உறுதி செய்கிறது. சுக்கிரன் சூரியனைவிட 5 பாகைகள் முன்னாள் சென்று சூரியனால் குறைவான அஸ்தங்க தோஷத்தை பெறுகிறார். ராகு 7 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் ரோஹிணி-1 ல் நிற்கிறது. இதனால் ராகுவிற்கு 7 ஆம் பாவ தொடர்பு ஒரு வகையில் ஏற்படுகிறது. தற்போது சப்தாம்ச சக்கரத்திற்கு வருவோம்.

சப்தாம்சத்தில் திசா நாதன் ராகு லக்னத்திற்கு 9 ல் நிற்கிறது. ராகுவின் சார நாதன் சந்திரன் லக்னத்திற்கு 8 ல் ராகுவிற்கு விரையத்தில் நிற்கிறது. சந்திரனுக்கு 7 ல் மிதுனத்தில் மாந்தி நிற்கிறது. அந்தர நாதன் சுக்கிரன் 7 ஆம் பாவத்தில் நிற்கிறது. இந்நிலையில் கருத்தரிப்பது அந்தர நாதன் சுக்கிரனின் நிலையால் மட்டுமே ஏற்படும். அப்படி கருத்தரித்தால் அக்குழந்தையின் உயிருக்கு பாதிப்பை ஏற்படும் என்பது கோட்சாரத்தில் ஜனன சுக்கிரனின் மேல் தற்போது நிற்கும்  ராகுவாலும் சப்தாம்சத்தில் சந்திரனுக்கு 7 ல் நிற்கும் மாந்தியாலும் தெளிவாக தெரிகிறது. இந்த ஜாதகிக்கு 2 ஆம் புத்திரம் என்பது ராகு திசை சுய புக்தி முடிந்து சப்தாம்சத்தில் 11 ஆம் பாவதிலிருந்து  7 ஆம் பாவத்தை பார்க்கும் குரு புக்தியில் தான் ஏற்படவேண்டும். இந்நிலையை ஜாதகிக்கு அறிவுறுத்தி இருந்தாலும் ஜாதகி அதை அலட்சியப்படுத்தி கருவுற்றார். சில வாரங்களுக்குப்பிறகு குழந்தை செயல்பாட்டில் இல்லை என மருத்துவர்கள் கூற கருவை கலைத்தார். கிரகங்கள் தயவின்றி எதுவும் கிடைக்காது. அதுவும் எப்போது கிடக்குமோ அப்போதுதான்  கிடைக்கும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.


அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501