Showing posts with label ஆறாம் பாவம். Show all posts
Showing posts with label ஆறாம் பாவம். Show all posts

Saturday, 7 August 2021

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்பது ஒருவருக்கு அமையும் அவர் நேசிக்கும் சிறப்பான வேலைதான். வாழ்க்கைக்கு ஆதாரமான வேலை சிறப்பாக அமைந்துவிடின் அது ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய இதர வகை சிரமங்களை பெருமளவு குறைத்துவிடும். ஆனால் அந்த வேலை அவரது அறிவுக்கும், திறமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதிஷ்டவசமாக சிலருக்குத்தான் அத்தகைய கனவு வேலையே கிடைக்கிறது. அதில் சென்று சேர்ந்த பிறகும் சிலருக்குத்தான் அந்த வேலையில் உரிய அங்கீகாரமும், உயர்வும் நிம்மதியான பணிச்சூழலும்  கிடைக்கிறது. இரயில்வே துறை வேலைக்காக தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் எனது வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று என்னை அனுகிய நபருக்கான அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து எனது கருத்துக்களை தெரிவித்தேன். எனது ஜோதிட கோணங்களால் ஈர்க்கப்பட்ட அவர், அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒரு பதிவாக எழுத வேண்டுகோள் விடுத்ததன் விளைவே இப்பதிவு.


ரயில்வே துறை வேலைக்கான ஜாதக அமைப்புகள்.

ராகு ரயிலின் காரக கிரகம் ஆகும். ஜீவன காரக கிரகம் சனியாகும். ரயில் போன்ற பெரிய இயந்திரங்களுடன் ஒருவரது வாழ்க்கை தொடர்பு ஏற்பட வேண்டுமெனில் வாகன காரகன் செவ்வாயும் சனியும் தொடர்பில் இருக்க வேண்டும்.  அரசுப்பணிக்குரிய காரக கிரகம் சூரியன் ஆகும். அரசுப்பணிக்குரிய காரக பாவங்கள் 5, 1௦ ஆகியவை ஆகும். சம்பாத்யத்திற்குரிய காரக பாவங்கள் 2, 6, 1௦ மற்றும் 1௦ ன் பாவத் பாவமான 7 ஆகும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி திசா புக்திகள் சாதகமாக வரும் காலம் ஒருவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1968 ல் பிறந்தவர். ரயிலை குறிப்பிடும் ராகு, லக்னாதிபதி சந்திரனோடும், ஜீவன காரகன் சனியோடும், 6 ஆமதிபதி குருவோடும், 1௦ ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்புகொள்கிறார். 2 ஆமதிபதி சூரியன் ராகு சாரமான சுவாதியில் நின்று 1௦ ஆவது பாவமான மேஷத்தை பார்க்கிறார். வித்யா காரகன் புதன் உச்சம் பெற்று, ஆதிக பாகை பெற்று ஆத்மா காரகனாக சிறப்பாக அமைந்ததால் கல்வி சிறப்பாக அமைந்தது. புதனுக்கு செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் பொறியியல் பயின்றார். பிறகு 1998 ல் 5 ல் நிற்கும் சுக்கிர திசையில் சனி சாரம் உத்திரட்டாதி-4 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி கிடைத்தது. தற்போது முதுநிலை பொறியாளராக பணிபுரிகிறார். ரயிலின் காரக கிரகம் ராகுவிற்கு ஜீவன காரகன் சனி மற்றும் 5,1௦ ஆமதிபதி செவ்வாய் தொடர்பு இருப்பதை கவனியுங்கள். இவை ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி அமைய காரணங்களாகும். ஒரு துறையில் ஒருவர் மதிப்பான உயர்ந்த நிலைக்கு  உயர வேண்டுமெனில் 9 ஆமிடம் சிறப்புற வேண்டும். இந்த ஜாதகத்தில் ராகு 9 ல் அமர்ந்து 9 ஆமதிபதி குரு பார்வை பெற்றது சிறப்பு. மேலும் ஜீவன காரகன் சனி உச்சம் பெற்ற புதனின் சாரத்தில் ரேவதி-4 ல் அமைந்திருப்பது ஜாதகரை தனது துறை சார்ந்த வகையில் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதை அறியலாம்.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகி 1952 ல் பிறந்து இரயில்வே துறையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருட்சிக லக்னத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தில் கேது நிற்கிறார். இதனால் இவர் அரசு மருத்துவரானார். கேது உயர்நிலை மருத்துவரை குறிக்கும் கிரகமாகும். சிம்மம் அரசுத்துறை என்பதை குறிக்கிறது. 12 ஆமிட செவ்வாய் ராகுவின் சுவாதி-2 ல் நின்று வேலை பாவமான 6 ஆம் பாவத்தையும், 1௦ ன் பாவத் பாவமான 7 ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் இவர் செவ்வாய் குறிப்பிடும் மருத்துவராகவும், லக்னாதிபதி செவ்வாய் ராகு சாரம் பெற்றதால் ரயில்வே துறை மருத்துவராகவும் செயல்பட வேண்டும் என்பது இவரது கர்மாவாகும்.

சனி வீட்டில் நிற்கும் 1௦ ஆமதிபதி சூரியன் மருத்துவ கிரகம் புதனுடன் இணைந்து சனி நிற்கும் சந்திரனின் சாரத்தையே பெறுகிறார். (சூரியன்-திருவோணம்-3, சனி-ஹஸ்தம்-4. மேலும் 6 ஆமதிபதி செவ்வாய், 1௦ ஆமதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகி அரசுத்துறையில் ரயில்வே மருத்துவராக பணியாற்றியுள்ளார்.  


தொழிலை சுட்டிக்காட்டும் தசாம்சத்தில் லக்னம் கால புருஷனின் 6 ஆமிடமாகி, லக்னாதிபதி புதன் கேதுவுடன் இணைவதும், 1௦ ன் பாவத்பாவம் 7 ல் இருந்து சூரியனோடு சேர்ந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாய் பார்ப்பதிலிருந்து ஜாதகி ஒரு அரசு மருத்துவர் என்பதையும் குரு உச்ச ராகுவோடு இணைந்ததிலிருந்து ஜாதகி ரயில்வே துறை சார்ந்தவர் என்பதையும் உணரலாம்.  

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1994 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ரயில்வே துறையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். விருட்சிக லக்னதிலேயே ராகு அமர்ந்து தனது ஆதிக்கத்தை ஜாதகரின்மேல் செலுத்துகிறார். இதனால் ரயில்வே துறை தொடர்பு. 4 ஆம் பாவத்தில் சனி,செவ்வாய், புதன் ஆகியவை ஒருங்கிணைந்து 1௦ ஆமிடமான சிம்மத்தை பார்ப்பதால் இவரது ஜீவனம் சுகாதாரத்துறை ஆகும். 1௦ ஆம் அதிபதி சூரியன் 5 ஆம் பாவத்தில் மீனத்தில் அமர்ந்ததால் இவருக்கு அரசு தொடர்பான பாக்கியம் ரயில்வே மூலமாக கிடைத்துள்ளது.


தசாம்ச லக்னத்திலும் ராகு-கேதுக்கள் தொடர்பாகியுள்ளதை கவனியுங்கள். தசாம்சத்தில் உணவு காரகன் சந்திரன் உச்சம். இதனால் இவர் ரயிலில் வழங்கப்படும் உணவு தொடர்பான விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவார் எனலாம்.    

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday, 2 May 2021

வட்டித்தொழிலில் வளர்ச்சி உண்டா?

ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின் அதிபதி ஆவது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் குரு தனது மூலத்திரிகோண வீடான தனுசுவிற்கு மறைவதே ஒரு வகையில் பொருளாதார சிரமங்களை குறிக்கும். அப்படி குரு தனுவிற்கு 6, 8, 12 ல் மறைந்தால், லக்னத்திற்கு மறையாமல் இருப்பது நன்மை. இரண்டு விதங்களிலும் குரு சாதகமாக அமையாவிடில் அந்த ஜாதகர் பொருளாதார வகையில் பாதிக்கப்படுவார். குறிப்பாக லக்னத்தை குரு பார்ப்பது பொருளாதார வகையில் மட்டுமல்ல ஏனைய அனைத்து  வகையிலும் ஒரு மேம்பட்ட நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவமும் அதன் எதிர்பாவத்தை சார்ந்தே இயங்குகிறது. உதாரணமாக கணவன்-மனைவி, வியாபாரி-வாடிக்கையாளர், முதலாளி-பணியாள். குருதான் கால புருஷனுக்கு விரைய பாவம் மீனத்தின் அதிபதியும் ஆகிறார். செலவிற்கு பணம் இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் மீனத்தின் எதிர்பாவம் கன்னி கால புருஷ தத்துவப்படி கடன் பாவம் எனப்படுகிறது. ஒருவர் உழைக்காமல் பொருளீட்டுவதை உபய ராசிகள் நான்கும் குறிப்பிடும். உபய ராசிகளுக்கு அதிபதிகள் குருவும் புதனும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் நாம் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபட ஜாதக ரீதியான அமைப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் கடனை குறிக்கும் பாவம் 6 என்றால், கடனை வசூலிப்பது 5 ஆம் பாவமாகும். எனவே கடன்னை வசூலிப்பதை 5 ஆம் பாவமும் அதையே தொழிலாக செய்ய 5 மற்றும் 1௦ ஆம் பாவங்களும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகரான ஆண் வங்கிகளுக்கு கடன் வசூல் செய்து தரும் நிறுவனத்தை (Loan collection agency) நடத்தி வருபவர்.  சந்திரனும் 5 ஆம் பாவமும் ஒருவரது எண்ணங்களையும் ஆசைகளையும் குறிப்பிடும். அது 1௦ ஆம் பாவ தொடர்பு பெறுவது எண்ணத்தையே தொழிலாக்குவதை குறிப்பிடுகிறது. ஜோதிடத்தில் கேது கடனை நேரடியாக குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். கேது லக்னத்திற்கு 2 ல் அமைந்துள்ளது கடனை முன்னிட்டு வருமானம் பெறுவதை குறிக்கிறது. தடைகளுக்குரிய கேது தன பாவமான 2 ல் அமைவது இல்லறம், உறவுகள் வகைக்கு சிறப்பல்ல. ஆனால் கடன் என்ற தனது காரகம் செயல்படுவதால் பொருளாதார வகையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். பொதுவாகவே ராகு-கேதுக்கள் உயிர் காரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமளவு பொருட்காரகத்திற்கு பாதிப்பை தரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்துப்பொருளீட்ட ஜீவன காரகன் சனி ,இரட்டைப்படை பாவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும். இந்த ஜாதகத்தில் கடன் வசூல் செய்வதை குறிக்கும் ஒற்றைப்படை பாவம் 5 ல் சனி அமைந்திருப்பது ஜாதகர் செய்யும் தொழிலுக்கு உகந்த ஒரு அம்சமாகும். லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 3 ல், தனுசுவிற்கு 6 அமைந்தாலும் அவர் வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய) நிலையில் உள்ளதால் தனுசு ராசியின் மீது குருவின் அறைப்பங்கு பார்வை விழுகிறது.

ஜாதகத்தில் 8 ஆமிடம் என்பது 7 க்கு 2 ஆக அமைவதால் அது அடுத்தவர் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்து 2 ஆம் இடத்தை பார்வை செய்வதால் அடுத்தவர்கள் தனம் ஜாதகரிடம் அதிகம் புழங்கும் எனலாம். ஜாதகருக்கு 8 ல் வட்டி காரகன் ராகுவின் சுவாதி-1 ல் மறைந்த 2 ஆமதிபதி செவ்வாய் திசை துவங்கியவுடன் கடன் வசூல் செய்யும் நிறுவத்தை துவங்கி இன்று பல வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து கடனை வசூல் செய்து தருகிறார். அதற்கான தனது  தரகுத்தொகையை பெற்றுக்கொள்கிறார். பல வங்கிகள் இவரது சேவையை நாடிப்பெறுகின்றன. இவரது கடன் வசூல் நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தன ஸ்தானமான 2 ஆமிடத்தை சூரியன், புதன், சனி ஆகியவை இணைந்து பார்வையிடுவது வங்கிகளுக்கு கடன் கடன் வசூல் செய்து தருவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் 2 ஆம் பாவத்தோடு தொடர்பாவது கடனுக்கான வட்டியை குறிக்கிறது. பொதுவாக தனுசி ராசி அதுவும் மூல நட்சத்திரத்தில் சந்திரன் அமைவது இரக்கமற்ற முறையில் வட்டி வாங்குவதை குறிப்பிடும். ஜாதகர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  


இவரும் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளார். தொடர்பு ஸ்தானமான 7 ஆமிட குரு, கடனை வசூல் செய்யும் 5 ஆம் அதிபதி புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் இவர் இந்த வேலையில் உள்ளார். 5 ஆமதி புதனும் 1௦ ஆமதிபதி சனியும் இணைந்து 1௦ ஆம் பாவத்தில் நிற்பதால் இவர் இத்துறையில் உள்ளார். 5 ஆமதிபதி புதனும் 6 ஆமதிபதி சுக்கிரனும் 1௦ ஆம் பாவத்தில் இணைந்து நிற்பது, கடன் கொடுத்து வசூல் செய்வதையே தொழிலாக செய்யும் நிதி நிறுவனத்தில் பணி புரிவதை குறிக்கிறது. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும் என்றேன். சனி இந்த ஜாதகத்தில் 1௦  ல் நிற்பதால் இவர் மற்றொருவரிடம் வேலை செய்கிறார். தனது மூலத்திரிக்கோண வீட்டில் நிற்கும் சனியின் திசை துவங்கினால் ஜாதகர் சுய தொழிலில் இறங்குவார்.   சூரியன் 11 ல் நின்று 5 ஆம் பாவத்தை பார்ப்பது இவரது முதலாளி இவர் மீது மிகுந்த மதிப்பைக்கொண்டிருப்பதை காட்டுகிறது. குரு புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகத்தில் புதனுக்கும் குருவிற்கும் நட்சத்திரப்பரிவர்த்தனை ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி உபய ராசி அதிபதிகளான குரு-புதன் தொடர்பு கடன் மற்றும் கடன் வசூல் செய்யும் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. 8 ஆமதிபதி குரு லக்னத்தை பார்ப்பது ஜாதகரிடம் அடுத்தவர் பணம் வருவதை குறிக்கிறது. 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Friday, 26 March 2021

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

 

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது புதியவர்களுக்கு புதிய கோணங்களில் வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நீண்ட காலம் ஒரு துறையில், ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து ஒரு சூழலில் பணிமாறுதலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  காரணம் பணி மாறுதல் என்பது தனி மனிதனுக்கு சாதாரண மாறுதல் மட்டுமல்ல அது ஒருவரது வாழ்க்கையின் சூழலையே மாற்றியமைக்கக்கூடியது. அத்தகைய மாறுதலின் பொருட்டு ஒருவர் தனது உழைப்பை, சம்பாத்தியத்தை, குடும்பத்தை பணயம் வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு பாதுகாப்பான எந்த சூழலும் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிரந்தரமான ஊதியத்தை தரும் என்று சொல்லப்படும் அரசு உத்யோகத்தில் கூட லஞ்ச, லாவண்யங்களாலும், பாலியல் சீண்டல்களாளும், திறமையின்மையினாலும் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது தனது வேலையை அல்லது வேலை சூழலை ஒருவர் மாற்றவேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நிலையில் வேலையில்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மன நிலையில் இருப்போர்க்கு ஜோதிடம் எவ்வாறு உதவ முடியும் என்பதை அலசுவதே இப்பதிவின்  நோக்கம்.

ஜோதிடத்தில் மாற்றத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாவார். சந்திரன் சனியோடு தொடர்புகொள்ளும் சூழலில் ஒருவர் பணி மாற்றத்தை சந்திக்கிறார். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த திசை, புக்தி நடந்தாலும் ஏழரை சனியில் குறிப்பாக ஜென்மச்சனியில் ஒருவர் தனது ஜீவன சூழலை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஜீவன காரகன் சனி  தனது ஆதிக்க காலத்தில் மாற்றத்தின் காரகன் சந்திரன் மேல் கோட்சாரத்தில்  செல்லும் காலம் தரும் பணி மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.




1973 ல் பிறந்த இவர் தன் பணியில் தனக்குள்ள தனித்திறமையால் தன் திறமைக்கேற்ற நல்ல சூழலில் வேறு ஒரு நாட்டில் பணிபுரிய விரும்புகிறார். இதற்கேற்ற சூழல் ஜாதகத்தில் உள்ளதா என ஆராய்வோம். ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் நீசமாகி சனியோடு இணைந்து நீச பங்கமும் ஆகியுள்ளார். இது பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியை தரும் அமைப்பே ஆகும். எனவே ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர இன்னும் சில காலமாகும். ஜாதகருக்கு சுக்கிர திசையில் குரு புக்தி 2022 இறுதி வரை நடக்கிறது.  சுக்கிரன், குரு இருவரும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திசா நாதனை மீறி புக்தி நாதன் செயல்பட இயலாது. சுக்கிரனும் குருவும் சந்திரனின் சாரத்திலேயே (சுக்கிரன் ரோஹிணி-1, குரு திருவோணம்-3)  உள்ளதால் இவர் பணி மாறுதலை விரும்புகிறார். மேலும் முதலாளி அல்லது முதன்மை நிர்வாகியை குறிக்கும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் குறைந்த பாகை  பெற்று (சூரியன் 3 பாகை 1௦ விகலை) நிற்கும் ஜாதகத்தினருக்கு தனது நிர்வாகியிடம் எவ்வளவு சிறப்பாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாவச்சக்கரத்தில் சுக்கிரன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் மேஷத்தில் நிற்பதால் இவருக்கு தான் பணிபுரியுமிடத்தில் அதிருப்தி உள்ளது. ஆனால் திசை மற்றும் புக்தி நாதர்கள் தற்போது சிறந்த பொருளாதார உயர்வை வழங்கும் நிலையில் இல்லை. எனவே ஜாதகர் அவசரப்பட்டு வேலையை விடுவது நன்மை அளிக்கும் முடிவல்ல.

ஒரு நேர்முகத்தேர்வின் முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளேன். அந்த வேலை கிடைக்குமா என கேட்ட நபருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் ஆரூடமும் கவிப்பும் உள்ளது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமாகியுள்ளது. இது ஜாதகர் வேலையில் ஒரு உயர்வான நிலையை நோக்கி செல்லும் எண்ணத்தில் உள்ளதை காட்டுகிறது. வேலை கேட்பவர் உதயாதிபதி என்றால் வேலை கொடுப்பவர் 7 ஆமதிபதி ஆவார். உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் தடையை குறிக்கும் ராகுவிற்கு நெருக்கமாக சென்றுகொண்டுள்ளார். அதே சமயம் ஜாம செவ்வாய் (வெளி வட்ட செவ்வாய்)   வேலை பாவமான 6 க்கு விரையத்தில் மீனத்தில் நிற்பது ஆகியவை சிறந்த அமைப்பல்ல. வேலை தர தயாராக இருப்பதாக சொல்லும் 7 ஆமதிபதி சுக்கிரன் வெளி வட்டத்தில் விரையத்தில் உள்ளது. உள்வட்டத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 1௦ ஆமதிபதி சூரியனுடன் நெருக்கமாக அஸ்தங்கமாகி நிற்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதி சுக்கிரன் ஆகிய இருவருக்கும் இடமளித்த மீனத்தில் அதிபதி குரு உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நீசம் பெற்று நிற்பது, வேலை தருபவர் இவர் எதிர்பார்க்கும் சிறந்த சம்பளத்தை தர மாட்டார் என்றே குறிப்பிடுகின்றன. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமானாலும் உள்வட்ட சூரியனின் பலமே ஜாம சூரியனுக்கு செயல்பாட்டு வலுவைத்தரும். உள்வட்ட சூரியன் வேலை பாவத்திற்கு விரைய  பாவத்தில் நிற்கிறது. இந்த நிலை ஜாதகருக்கு ஊதிய உயர்வை தர தங்கள் நிறுவனத்திற்கு மாறுதலாகி வந்தால் சாத்தியம் என சொல்லும் நபர் ஜாதகரை வேலையை இழக்க வைத்து பிறகு தங்கள் எண்ணப்படி சொல்லும் ஊதியத்திற்கு இணங்க வைக்கும் முயற்சி உடையவராக  இருக்ககூடும் என்பதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடத்தில் உள்ள கவிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே வேலை அளிப்பதாக சொல்லும் நிறுவனத்தை நம்பி பார்க்கும் வேலையை விட்டுவிட்டால் பிறகு பாதிப்படைவது உறுதி என்பது புலனாகிறது. உச்சமான ஜாம சூரியன் உதயத்தை தொடும் காலத்தில் ஜாதகருக்கு உத்யோக உயர்வு காத்துள்ளது. அதுவரை ஜாதகர் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்க சொல்லப்பட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 12 March 2021

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

 


நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன் எதிர்மறையாகவும் செயல்பட்டு வளர்ச்சியை அடையக்கூடியது. சுக்கிரனின் இந்த எதிர்மறைத்தன்மையால் தமிழ்நாட்டு மக்களாகிய நமக்கெல்லாம் பொதுவாகவே ஒரு எதிர்மறை சிந்தனைகொண்டவர்கள்தான். தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயர் மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கேதுவின் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டது. கேது மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம்,  நேர்மையான நீதி நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மருத்துவத்துறையின், ஆன்மீகத்துறையின், ஜோதிடத்துறையின் எழுச்சி ஆகியவை கேதுவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டதை தெளிவாக உணர்த்துகிறது. எனவே கேதுவின் ஆதிக்க காலமான இன்றைய நிலையில் இனி திரைத்துறையோடு தொடர்புடையவர்கள் தமிழகத்தை ஆள நினைத்துப்பார்க்கவே இயலாது. இதை எதிர்வரும் தேர்தலில் திரைத்துறை வேட்பாளர்கள் அடையும் தோல்வியிலிருந்து உணரலாம். சுக்கிரன் பாவிகள் தொடர்பு, சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் ஒருவர் நேர் வழியில் செயல்பட்டு அடைய முடியாத தனது விருப்பங்களை லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் சென்று நிறைவேற்றிக்கொள்வதை குறிக்கும். அப்படி பாவிகள் தொடர்பு பெற்ற சுக்கிரனின் செயல்பாட்டிற்கு ஒருவரது ஜாதகத்தில் உள்ள வக்கிரம் பெற்ற கிரகங்களும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் உதவுகின்றன. இக்கருத்தை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவதே இன்றைய பதிவு.


 

ஜாதகர் 1962 ல் பிறந்த ஒரு ஆண். இவர் அரசுத்துறையில் பணிபுரிந்து கடந்த 2020 பிற்பகுதியில் பணி ஓய்வு பெற்றவர். ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமானாலும் அவர் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாய் நீசமாகிவிட்டதால் ஜாதகர் நேர் வழியில் முயன்று தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலாது. சந்திரன் பரிவர்தனைக்குப்பிறகு ராகுவோடு தொடர்பாவதாலும் இவர் மனம் ராகுவின் குறுக்கு வழி சிந்தனையை நாடும். நேர் வழி முயர்ச்சிகளை ராகு தடை செய்வார். குறுக்கு வழியை ராகு தடை செய்ய மாட்டார். லக்னாதிபதி நீசமாகி ராகுவோடு இணைந்து நிற்பதால் குறுக்கு வழிக்கு ஜாதகர் முயல்வார் ஜீவன காரகன் சனியும் மூன்றாமிடத்தில் அமைந்திருப்பது சிறப்பே. ஜீவன விஷயங்களில் கேதுவின் நேர்மைத்தன்மை வேண்டும் என்பதை இது குறித்தாலும் ராகு-கேதுக்களோடு தொடர்பான சனியை நீச செவ்வாய் பார்ப்பதால் ஜாதகருக்கு நேர் சிந்தனையை விட குறுக்கு சிந்தனைகளே அதிகம் வெற்றி தரும். 1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு லாப ஸ்தானத்தில் இணைத்துள்ளது. இதனால் ஜாதகர் அரசுத்துறையில் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் மற்றும் வரி வசூல் சார்ந்த துறைகளில் ஜாதகர் பணி புரிந்தார். 1௦ ஆமதிபதி சூரியனானதால் அரசுத்துறையிலும் சூரியன் புதனோடு இணைந்ததால் திட்டமிடல் துறையிலும் ஜீவன காரகர் சனி ராகு கேதுக்களோடு தொடர்பானதால் வரி வசூல் துறையிலும் ஜாதகர் பணி புரிந்தார்.   1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு இணைந்துள்ளது  ஜாதகரின் பணியில் நேர்மையான நண்பர்களை விட குறுக்கு வழி ஆசாமிகள் அதிகம் உடன் வருவர் என்பதை உணர்த்துகிறது.  

லக்னாதிபதி நீசமானதால் ஜாதகர் ஆளுமைத்தன்மை இல்லாதவராக செயல்பட்டார். நீச செவ்வாய் பாதக ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்பானதால் ஜாதகரிடம் பொதுவாகவே ஒரு பயந்த சுபாவம் உண்டு. இவரால் தனது துறையில் தவறு செய்யும் பணியாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ஜாதகரின் இந்தத்தன்மையால் ஜாதகருக்கு பணி ஆண்டுகள் அடிப்படையில் தன் துறை சார்ந்த வகையில் முதன்மை இடத்திற்கு முன்னேற தகுதி இருந்தும்  இவரை முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல அரசு நிர்வாகம் தயங்கியது என்றே சொல்லலாம். ஜோதிடத்தில்  உத்தியோக உயர்வை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். ஒன்பதாம்  பாவமே ஜாதகருக்கு பாதக ஸ்தானமாகவும் அமைந்துவிட்டதால் உத்தியோக உயர்வில் ஜாதகருக்கு பாதகம் ஏற்படும் என்பதை இவரது லக்னமே குறிப்பிடுகிறது. ஜாதகருக்கு வேலை பாவமான 6 ஆம் பாவம் மேஷத்தில் சந்திரன் லக்னத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-3 ல் நிற்கிறார். இதனால் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் ஏற்பட்ட தொடர்பால்  சந்திரனின் திசையில் 6 க்கு லாபத்தில் நிற்கும் குருவின் விசாகம்-4 ல் விருட்சிகத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் ஜாதகருக்கு அரசுப்பணி கிடைத்தது. ஜாதகருக்கு கடந்த 2019 பிற்பகுதி வரை குரு திசையில் கேது புக்தி நடந்தது. குரு வேலை பாவமான 6 க்கு லாபத்தில் நிற்கும் அதே சமயம் அது 6 ன் பாதக ஸ்தானம் என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் குரு திசை ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு குரு திசையில் கேது புக்தி 2020 பிற்பகுதி வரை நடக்கிறது. கேது உத்தியோக உயர்வை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சந்திரனின் திருவோணம்-1 ல் அதே திருவோணம்-1 ல் உள்ள சனியுடன் இணைந்து இருந்தாலும் 9 ஆமிடம் பாதக ஸ்தானமாக வருவதாலும் உத்தியோக உயர்வுகளில் தடையும் மறுப்பும் ஜாதகருக்கு ஏற்பட்டது. கேது புக்தியை அடுத்து வரும் சுக்கிர புக்தி வருமான பாவமான 2 ன் விரையமான லக்னத்தில் இருப்பதால் சுக்கிர புக்தியில் ஜாதகர் பணி ஓய்வு பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 ல் உள்ள ராகுவும் உத்தியோக உயர்வில் தடைகளையே கொடுத்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஆனால் ராகு முன் சொன்னபடி முறையான வழியில் செயல்படுவதை தடை செய்வார். முறையற்ற வழிகளில்  செயல்பட தடை செய்ய மாட்டார். இதனால் உத்தியோக உயர்வை முறையாக பெற இயலாது என்பதை புரிந்துகொண்ட ஜாதகர் உத்தியோக உயர்வுக்காக லஞ்சம் கொடுத்து பணி உயர்வு பெற்றார். பணி ஏற்ற சில மாதங்களில் குரு திசையில் சுக்கிர புக்தி வந்ததும் பணி ஓய்வும் பெற்றார்.

இந்த ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டதை கிரகங்கள் சுட்டிக்காட்டினாலும் அவர் குறுக்கு வழியில் சென்று பணி உயர்வு பெறவும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் இதர வக்கிர கிரகங்களான புதனும் குருவும் இணைந்து செயல்பட்டுள்ளன. புதன் லஞ்சப்பணத்தை மேலிடத்தில் கொண்டுசேர்க்கும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் லஞ்சத்தின் காரக கிரகமாகும். இவைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் ஜாதகர் குறுக்கு வழியில் உத்தியோக உயர்வு பெற்றார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 28 January 2021

பால் வளத்துறை பலன் தருமா?

 


நமக்கு சம்பாத்தியம் வரும் வழிகளை ஒருவர் தெரிந்துகொண்டு அதில் ஈடுபட்டால் வருமானம் பற்றிய கவலைகள் மறைந்துவிடும். சம்பாத்தியம் சுகமானால் வாழ்வில் பாதிப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சம்பாத்தியத்திற்குரிய சரியான துறையை தேர்ந்தெடுப்பதில்தான் மனித வாழ்வின் பாதி வெற்றியே அடங்கியுள்ளது. பொருளாதாரத்தால் முடங்கிய இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தங்களுக்கான துறையை நாடியே ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் துறைகளை தெரிந்துகொண்டு அந்த திசையில் ஓடுபவர்கள் பொருளாதார ரீதியாக விரைவில் வெற்றிபெறுகிறார்கள். இன்றைய பதிவில் நாம் பால் வளத்துறையில் சம்பாதிக்கும் ஜாதக  அமைப்பு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.

கீழே 1996 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகர் குஜராத் அரசின் பால் வளத்துறையில் பணிபுரிகிறார்.



கடக லக்னம் ஒரு நீர் ராசியாகும். அதில் வருமான ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் நின்று தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தை பார்க்கிறார். வேலைவாய்ப்பு பாவமான 6 ஆமதிபதி குரு நவாம்சத்தில் சூரியன் வீட்டில் நிற்கிறார். இதனால் ஜாதகரின் வேலை அரசு வேலையாகும். ஜீவன காரகன் சனி வேலை பாவமான 6 ஆமிடதிலுள்ள அதன் அதிபதி குருவை 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கிறார். சனி தனது 1௦ ஆம் பார்வையாக 6 ஆமிடத்தையும் 6 ஆம் பாவதிபதியையும் பார்ப்பதால் ஜாதகர் சுயதொழிலைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு என இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லாபாதிபதியுடன் இணைந்து விரையத்தில் நிற்கிறார். செவ்வாய் வியாபர கிரகமான புதனின் வீட்டில் நிற்பதால் ஜாதகர் பாலை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாய் உணவு பாவமான கடக லக்னத்திற்கு விரையத்தில் நிற்பதால் ஜாதகர் சார்ந்துள்ளது உணவை நுகர்ந்து விரையம் செய்யும் துறையாகும். கடகத்தின் யோகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான செவ்வாய் நவாம்சத்தில் லக்னத்தில் உச்சமாகி கடக ராசியை பார்ப்பதால் அந்த வேலை கடகம் குறிக்கும் திரவம் சார்ந்தது என்பது புரிகிறது. இரண்டாம் அதிபதி சூரியனும் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். புதன் வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கும் துறை புதன் குறிப்பிடும் வியாபரத்துறையேயாகும். விரையாதிபதியே வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் விரையம் செய்வதன் மூலமே பொருளீட்டும் துறையாகும். புதன் கேதுவின் மகம்-3 ல் நிற்பதால் ஜாதகர் பால் பதப்படுத்தும் துறையில்  Lab Chemist ஆக பணிபுரிகிறார்.

லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் பூர்வீக பூமியை விட்டு வெகுதொலைவில் சென்று வேலை பார்ப்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. சந்திரன் நீர் ராசியான மீனத்தில் ஜீவன காரகன் சனியோடு அமைந்துள்ளார். நீர் ராசியான மீனம் கால புருஷனுக்கு விரைய ராசியாகும். இதனால் ஜாதகர் குடித்துத்தீர்க்கும் பால் வளத்துறையில் பணிபுரிகிறார். (சனி-மக்கள். சந்திரன்-பால், மீனம்-நுகர்தல், அழித்தல், கேது- Chemist). ராகு கன்னியில் ஹஸ்தம்-3 ல் நிற்கிறார். இது பாலை பதப்படுத்தும் துறையில்  ஜாதகர் ஈடுபடுவதை குறிக்கிறது. (ராகு/கேது-பதப்படுத்துதல்) லாபாதிபதியும் பாதகாதிபதியுமான சுக்கிரன் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் நிற்கிறார். இதனால் பாதகாதிபதி சுக்கிரன் லக்ன யோகாதிபதி செவ்வாய்க்கு கட்டுப்பட்டவராகிறார். சந்திரன் உச்சமாகும் பாதகாதிபதி சுக்கிரன் விரையத்தில் நிற்பதால் பால் உணவால் ஜாதகருக்கு லாபம் வரும். 1௦ ஆமதிபதி செவ்வாயை ஒன்பதாம் அதிபதி குரு பார்க்கிறார். இதனால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஜாதகருக்கு உண்டு.

உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் அமைந்த  கேது 2 ஆம் பாவத்தில் நிற்கும் புதனோடு சாரப்பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் உயர்கல்வியில் ஜாதகர் B.Tech – (Dairy Tech) படித்தார். ஜாதகர் தற்போது புதன் திசை ராகு புக்தியில் உள்ளார். புதன் இரண்டாம் இடத்தில் நிற்பதால் ஜாதகருக்கு புதன் திசையில் 1௦ ஆம் அதிபதி செவ்வாயில் புக்தியில் வேலை கிடைத்தது. அப்போது கோட்சார சனி தனுசுவில் ஜனன கால 6 ஆமதிபதி குருவின்மேல் இருந்தது. கோட்சார குரு துலாத்தில் இருந்து 1௦ ஆம் பாவமான மேஷத்தையும் மிதுனத்தில் நின்ற 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயையும் பார்த்த காலத்தில் வேலை கிடைத்தது. அடுத்தடுத்து திசை நடத்தும் கிரகங்களான புதன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வருமானத்தை தரும். இம்மூன்று கிரகங்களும் ஜாதகர் தொலை தூர இடத்தில் இருப்பதையே குறிப்பிடுகின்றன. 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமர்ந்த சூரிய திசையில் ஜாதகரின் வேலை, வருமானம் தடைபடும். அப்போது ஜாதகர் ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார். சூரியன் லக்னத்தில் நிற்பதால் ஜாதகர் தனது வேலையில் முதன்மையான இடத்தை அடைவார். லக்னாதிபதி சந்திரனும் ஜீவன காரகன் சனியும் உபய ராசியில் அமைந்திருப்பதால் ஜாதகர் வேலையில் பல மாறுதல்களை சந்திப்பார் எனலாம்.

இன்றைய தேவை ஒரு வேலை. கிடைக்கும் வேலையை செய்யும் கூலியாட்களைவிட வாழ்வில் பொருளாதார வகையில் உயர வேண்டுமானால் தகுந்த துறையை ஜோதிடத்தின் வாயிலாக அடையாளம் கண்டு முயல்வது மிகுந்த பயனைத்தரும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துகளுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 27 September 2020

கடனில் கரையும் கர்மவினைகள்!

 


வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை.  இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு. “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றொரு பிரபலமான ராமாயண வாசகம் கடனின் துயரை கூறுகிறது.   பேராசையைத்தவிர கடனுக்கு காரக கிரகங்கள் என்று கூறினால் அது ராகு-கேதுக்கள்தான். தன காரகன் குரு, ஜனன காலத்தில் கேதுவோடு தொடர்பாகி கோட்சாரத்திலும் குருவும் கேதுவும் தொடர்பாகும்போது  நிச்சயம் கடன் ஏற்படும். இதை தவிர்க்க இயலாது. கால புருஷனுக்கு 6 ஆம் அதிபதியான புதனின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து தன ஸ்தானமும் அதன் அதிபதியும் ஜனன ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போதும் கடன் ஏற்படும். கடனால் படும் நீடித்த துயரத்தை சனியும், அதீத துயரத்தை செவ்வாயும், கடனின் குரூரத்தன்மையை ராகுவும், கடனுக்கான சட்ட நடவடிக்கைகளை கேதுவும் சுட்டிக்காட்டும். கடன் கொடுக்கக்கூடாதவர்களுக்கான ஜாதக அமைப்பைப்பற்றி இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்திற்கு விரையத்தில் கால புருஷனுக்கு ஆறாம் அதிபதி புதன், கேது, 4 ஆமதிபதி நீச செவ்வாய் ஆகியோரோடு இணைந்துள்ளார். தன ஸ்தானாதிபதி புதனும் தன காரகன் குருவும் வக்கிரமானது பொருளாதார விஷயத்தில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற ஜாதகியின் தீவிர எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னாதிபதி இப்படி கடனின் காரக கிரகங்களோடு விரையத்தில் மறைந்து குருவும் வக்கிரமானதால் ஜாதகி கடனால் தனது வாழ்வில் நிம்மதி இழப்பார் என எதிர்பார்க்கலாம். லக்னபுள்ளி மகம்-3 ல் விழுந்துள்ளது ஜாதகி கடன், வழக்கு இவைகளோடு தொடர்புடையவாராக  வாழ்வில் தனது கர்மாவை கழிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜாதகி ஒரு வழக்கறிஞர். ஜாதகத்தில் குரு கேதுவின் மூலம்-2 லும், கேது குருவின் புனர்பூசம்-4 லும் நின்று சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். ஜாதகிக்கு தற்போது செவ்வாய் திசையில் சனி புக்தி கடந்த 2019 முற்பகுதியில் துவங்கியது. செவ்வாய் வியையத்தில் நீசமாகி கேதுவால் தீண்டப்பட்டுள்ளது. கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுக்கக்கூடியது. இந்த ஜாதகிக்கும் கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். பாதக ஆதிபத்யம் பெற்ற செவ்வாயின் திசையில் செவ்வாய்க்கு பாதகத்தில் செவ்வாயின்  மிருகசீரிஷம்-1 ல் நிற்கும் 6 ஆமதிபதி சனி புக்தி துவங்கியதும் ஜாதகி கேதுவின் ஆசை வலையில் விழுந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனது மிக கணிசமான தொகையை கடனாக அசையாச்சொத்து ஒன்றின் பெயரில் ஜாதகி ஒருவருக்கு கொடுத்தார். கோட்சாரத்தில் ஜனன காலத்தில் வக்கிரமான குருவோடும், கோட்சார குரு கோட்சார சனியோடும் கோட்சார கேது தொடர்புகொண்ட 2019 முன்பகுதியில் இது நடந்தது.  

கடன் பெற்றவர் தனது நிலப்பத்திரத்தை அடமானமாக வைத்தே கடனை பெற்றிருக்கிறார். சிறு விஷயங்களுக்கு ஜோதிடர்களை நாட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவரின் வாழ்நாள் ஆதாரமான விஷயங்களில் ஈடுபடும்போது தகுந்த தெளிந்த  ஜோதிடர்களின்  ஆலோசனையை நாட வேண்டியது அவசியம். ஒருவர் ஈடுபடும் செயலின் காரக கிரகம் அவரது ஜாதகத்தில் எந்த நிலையில் அமைந்துள்ளது மற்றும் நடக்கும் திசா-புக்திகள் அந்த காரக கிரகத்திற்கு எப்படி ஒத்துழைக்கும் என்று அறிந்து தனது செயல்களை திட்டமிடுவது அவரது வாழ்வின் பல சிரமங்களை குறைக்க வழிவகுக்கும். இந்த ஜாதகத்தில் நிலப்பத்திரத்தை ஈடாக பெற்று கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை (Unmovable Property) குறிக்கும் காரக கிரகமான செவ்வாயும், பத்திரத்தை குறிக்கும் காரக கிரகமான புதனும், லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் அமைந்துள்ளனர். அதிலும் செவ்வாய் அசையா சொத்தை குறிக்கும் 4 ஆவது பாவம் விருட்சிகத்திற்கு 9 ஆம் பாவம் கடகத்தில் நீசம் பெற்று அது லக்னத்திற்கு விரையமாகவும் அமைந்துள்ளது. கால புருஷனுக்கு 4 ல் கடகத்தில் இப்படி ஒரு சூழல் அமைவது ஜாதகி தனது வாழ்நாளின் செவ்வாய் திசா-புக்தி காலங்களில் பூமி வகைகளிலும், புதன் தொடர்பான திசா–புக்தி காலங்களில் பத்திரம் தொடர்பான கடன் வகைகளில் பாதகத்தையும் சந்திப்பார் என்பது ஜாதகத்தில் தெளிவாக உள்ளது. முக்கியமாக ஜாதகிக்கு செவ்வாய் திசை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தியில் கடந்த 2019 முற்பகுதியில் ஜாதகி கடன் கொடுத்துள்ளார். சனி புக்தியில் மிகப்பெரிய தனத்தை கடனாக கொடுத்ததற்கு காரணம், சனிக்கு திரிகோணத்திலும் திசா நாதன் செவ்வாய்க்கு 7ல் லக்னத்திற்கு 6 ல் ராகு நின்று திசா-புக்தி நாதர்களுக்கு ராகு இடும் கட்டளைதான். கடன் கொடுத்த பிறகு ஜாதகிக்கு ஓரிரு மாதங்கள் வட்டி வந்தது. தற்போது கொடுத்த பணமாவது வந்துவிடுமா என்ற நிலைதான். ஈடாக பெற்ற நில பத்திர வகையில் சில பாதகங்கள் இருப்பதை தற்போது அறிந்து ஜாதகி திகைத்து நிற்கிறார். திசா-புக்தி அடிப்படையில் அலசும்போது ஜாதகிக்கு வரவிருக்கும் ஏழரை சனியின் இறுதி காலத்தில்தான் அவரது பணம் பல போராட்டங்களுக்குப்பிறகு திரும்பக்கிடைக்கும் என்று தெரிகிறது.  

ஜாதகிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை 4 & 12 ஆமிடங்களும் அவற்றில் நின்ற கிரகங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 12 ஆமிடத்தில் 4 ஆமதிபதி நீசமானது ஜாதகிக்கு தாயாதிகள் வழியில் பூமிவகையில் எற்பட்ட இட தோஷம் சாபமாக மாறியுள்ளதையும் அதில் சூரியன் தொடர்பானது இது தலைமுறைகளாக தொடரும் சாபம் என்பதையும்,  புதன், கேது தொடர்பாகி 12 ல் நின்றது நில பத்திர வகைகள் மூலம் ஏற்பட்ட பாதிப்பே சாபத்திற்கு காரணம் என்றும் அறிய முடிகிறது.

ஒருவர் வட்டித்தொழிலில் பொருளீட்டவேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் வட்டித்தொழிலின் காரக கிரகங்களான ராகுவும் கேதுவும் பொருட்பாவங்களான 2,6,10,11 ஆகிய பாவங்களில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதில் ராகுவின் பங்கே பிரதானமானதாகும். கேது வட்டித்தொழிலில் ஏற்படும் சிரமங்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும். ராகு மூர்க்கக்குணத்தனத்தொடு எதிர்கொள்ளும். இவைகளுக்கு குரு சுக்கிரன், தொடர்பு ஏற்படின் வட்டித்தொழில் சிரமமின்றி நடைபெறும். இவைகளுக்கு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும். வரக்கூடிய பிரச்சனைகள் மிகுந்த குரூரத்தன்மையோடு அடிதடி, கடத்தல் என்ற வகையில் எதிர்கொள்ளவைக்கும். எனினும் வட்டித்தொழிலில் ஈடுபடுவோரை ஒருவகையில் மற்றவர்களின் கர்மாவை தீர்க்க உதவிடுபவராக கருதலாம். பிறரின் பாவ கர்மாவை இவர்கள் வட்டி என்ற வகையில் பெற்றுக்கொண்டு இவர்கள் கழித்துவிடுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது. இப்படி வட்டித்தொழிலில் சம்பாதிப்பவர்களுக்கு குடும்ப வகையில், சந்ததிகள் வகையில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

விரைவில் மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501

Monday, 10 August 2020

வெளிநாட்டு யோகத்தை அள்ளித்தரும் ராகு-கேதுக்கள்!

 


ராகு கேதுக்கள் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்கள். குடிசையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் கொண்டுசென்று நிறுத்தும். மாடத்தில் இருப்பவரை தெருவில் கொண்டுவந்து நிறுத்தும். பொதுவாக ராகு-கேதுக்கள் தடைகளை ஏற்படுத்தும் கிரகங்கள் மட்டுமே என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சாதகமாக இவை ஜாதகத்தில் அமைந்திருந்தால் இதர கிரகங்களை விட உறுதியான அமைப்பில் முன்னேற்றப்பாதையில் ஜாதகரை கொண்டுசெலுத்தும். இவைகளே இதர கிரக அமைப்புகளால் வாழ வழியற்றுத்திரிபவர்களுக்கு தனது காரகத்துவம் சார்த்த வகையில் திடீர் வெளிநாட்டு வாய்ப்புகளையும் கொடுத்து வாழ வழியும் காண்பிக்கும். சர்ப்ப கிரகங்கள் கட்டுப்பாட்டில் அனைத்து வகையான புதுமையான நவீனமான துறைகள் வரும் என்றாலும் குறிப்பாக குற்றமறியும் துறை, நவீன கணினி மென்பொருள் துறை, மருத்துவத்துறை, விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இவைகளின் மூலம் வெளிநாட்டு வாய்ப்புகளை இவை வழங்குகின்றன. நவீனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் மேற்குறிப்பிட்டவை பொருளாதார உயர்வைத்தரும் முக்கிய துறைகளாகும். 

இன்றைய பதிவில் ராகு-கேதுக்கள் வழங்கும் வெளிநாட்டு வாய்ப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.      

 கீழே ஆணின் ஒரு ஜாதகம். 

jothidanunukkangal.blogspot.com

ஒருவர் உள்ளூரில் ஆதாவது  தான் பிறந்து வளர்ந்த ஊரில் தனது வாழ்க்கையையும் ஜீவனத்தையும் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டுமெனில் ஜாதகத்தில் உள்ளூர் வாழ்க்கையை குறிக்கும் 2 ஆமிடம் சிறப்பாக இருக்க வேண்டும். இரண்டாமிடத்தோடு தொடர்புடைய கிரக அமைப்புகள் ஒருவருக்கு வருமானம் மற்றும் குடும்பம் அமையுமிடங்களை சுட்டிக்காட்டும். ராகுவோடு இணைந்ததால் சந்திரன் தனது பலத்தை ராகுவிடம் இழக்கிறார். இதனால் சந்திரனின் அஷ்டமாதித்ய தோஷம் ராகுவை மீறி இங்கு செயல்பட்டாது. சந்திரனும் ராகுவும் கடல்கடந்து சென்று வெளிநாட்டில் வாழ்வதை குறிக்கும் கிரகங்கள் ஆகும். ஜீவன காரகனும் வருமான ஸ்தானாதிபதியுமான சனி வக்கிரம் பெற்ற நிலையில் 6 ஆமிடத்தில் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் நிற்கிறார். 2 ஆமதிபதி 6 ல் அமைவது ஜாதகர் வேலைக்குச் செல்வார் என்பதும் (2 வருமானம், 6 வேலை), சந்திரனின் சாரத்தில் சனி அமர்வதால் வேலை வெளிநாடு தொடர்பானதாக அமையும் என்பதும் இங்கு புலனாகிறது. லக்னாதிபதி குரு வெளிநாட்டில் வசிக்கும் அமைப்பை குறிக்கும் 12 ஆமிடமான நீர் ராசி விருட்சிகத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்குவார் என்பதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

விருச்சிகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும். எப்போது இந்த அமைப்புகள் எல்லாம் செயல்படும் என்பதைக்கான திசா புக்திகளை காண வேண்டும். ஜாதகர் 1971 ல் பிறந்தவர். ஜாதகருக்கு 1991 இறுதியிலிருந்து குரு திசை நடந்தது. 16 வருட குரு திசையின் முதல் பகுதியான முதல் 8 வருடங்கள்  மேஷத்திற்கு செயல்பட்டது. மேஷம் வேலை பாவமான 6 க்கு விரைய ஸ்தானம். எனவே ஜாதகர் அப்போது சரியான வேலை அமைய போராட்டத்தில் இருந்திருப்பார்.     2004 முதல் குரு திசையின் இரண்டாவது பகுதி செயல்பட்டது. 12 ஆமிடம் ஒருவர் தான் பிறந்த வளர்ந்த வாழிடத்தை விட்டு வெகு தூரம் விலகிச்செல்வதை குறிப்பிடும். விருட்சிகத்திலிருந்து திசை நடத்தும் குரு தனது திசையின் 2 ஆவது பகுதியில் வேலை பாவத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு வேலை கிடைத்து வெளிநாடு சென்றார். ஜாதகருக்கு தற்போது குரு திசை முடிந்து சனி திசையில் உள்ளார். இறுதிக்காலத்தில் 12 ஆமிட குருவின் விசாக நட்சத்திரத்தில் நிற்கும் புதன் திசையைத்தான் ஜாதகர் சந்திக்கவுள்ளார். எனவே ஜாதகர் வெளிநாட்டில்தான் நிரந்தரமாக வாசிப்பார். ஜாதகர் தனது தாய் நாடான  இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க வாய்ப்பே இல்லை. ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பையும் வசிப்பிடத்தையும் இங்கு ராகுவே வழங்கியுள்ளது. அதற்கு திசா புக்திகள் ஒத்துழைக்க வேண்டும். 

இந்த ஜாதகத்தில் செயல்படும் மற்றொரு அமைப்பு தர்ம கர்மாதிபதி யோகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒருவர் அங்கு நிரந்தரமாக குடியுரிமை பெற்று தங்கவேண்டுமெனில் அவர் திறமையும் சாதுரியமும் மதிநுட்பமும் கொண்டவராக இருக்கவேண்டும். இவை இல்லாவிட்டால் வெளிநாட்டிலும் வாழ வழியற்று திறமையற்ற பணியாளராகவோ அல்லது அகதியாகவோதான் தங்கவேண்டியிருக்கும். சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்று பணி செய்யும் அமைப்புள்ளோருக்குத்தான் அத்தகைய அமைப்பு இருக்கும். விசா அதிகாரிகளிடம் மாட்டிய பிறகு வெளிநாட்டில் கம்பி எண்ண வேண்டியதுதான் அல்லது அவமானப்படுத்தப்பட்டு திரும்பவேண்டியிருக்கும். இந்த ஜாதகத்தில் வெளிநாட்டிலும் தனது திறமையால் சகல வசதி வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் குடியுரிமையையும் பெறும் அமைப்புகள் உள்ளன. அவற்றில் சிறப்பானது தர்ம கர்மாதிபதி யோகமாகும். கால புருஷ 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குரு , சனி தொடர்பால் ஏற்படுவதே முதல்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும். இந்த ஜாதகத்தில் சனியை குரு பார்ப்பதால் அது அமைகிறது. மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகமானது லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சுக்கிரனோடு இணைந்திருக்கும் 9 ஆமதிபதி சூரியனாலும் 1௦ ஆமதிபதி புதனாலும் ஏற்படுவதாகும். இது இரண்டாம்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும்.

ராகு கேதுக்களின் யோகத்தை பெறவும் சிறப்பானதொரு ஜாதக அமைப்பிருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்கள் வாழ்வில் ஒரு விஷயத்தில் பாதிப்பை தந்து வேறொரு வகையில் ஜாதகரை உயர்த்தும் என்று கூறுவதுண்டு. இந்த ஜாதகத்தில் நாம் கண்டது போல பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுச்செல்வது பாதகம் என்று  எடுத்துக்கொண்டால் அந்நிய தேசத்தில் சிறப்பான வாழ்வு அமைவது சாதகமே. ஒரே சமயத்தில் இந்த இரு வகையான அமைப்புகளையும் அனுபவிக்க இயலாது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501