Showing posts with label நான்காம் பாவம். Show all posts
Showing posts with label நான்காம் பாவம். Show all posts

Tuesday, 31 August 2021

கட்டம் பார்த்து திட்டம் போடு!


வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து  முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும் வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்றாலும் அவர்கள் முந்தைய வகையினரைவிட மெதுவாகவே முன்னேறுகிறார்கள். “எண்ணித் துணிக கருமம்” என்பார் வள்ளுவர். குழப்பமான சூழலில் எடுக்கும் முடிவு சாதகமாக இருப்பதில்லை. குறிப்பிட்ட விஷயத்தில் தெளிவு பெற்றவர்கள் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த விஷயத்தில் தைரியமாக முடிவெடுகிறார்கள். தாங்கள் எடுக்கும் முடிவு சாதகமற்றுப் போகும்போது தங்களது விஷய ஞானத்தால் அம்முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்  அல்லது  பாதகத்தின் விகிதத்தை குறைத்துக் கொள்கிறார்கள். மற்றொரு வகையினர் உண்டு. முடிவெடுக்க வேண்டிய விஷயத்தின் மீது தெளிந்த அறிவு இல்லாமல், உரிய விஷய ஞானம் கொண்டவர்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு அவ்விஷயம் சாதகமற்றுப் போகும்போது மற்றவர்களை துணைக்கு அழைப்பார்கள். இவர்களை சொதப்பல் திலகங்கள் எனலாம். இன்றைய பதிவில் ஜோதிடத்தின் துணைகொண்டு முடிவெடுப்பதில் கோட்சார கிரகங்கள் எப்படி பயன்படுகின்றன என்பதை ஆராய்வோம்.


மேற்கண்ட ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். பிறப்பு ஜாதகம் இடது பக்கமும், கோட்சார ஜாதகம் வலது பக்கமும் உள்ளது. கோட்சார சந்திரன் ரிஷபத்தில் உச்ச கதியில் சுய சாரத்தில் செல்கிறார். பொதுவாகவே சந்திரன் ஸ்திர ராசியின் ரிஷபத்தில் உச்சம் பெற்ற நிலையில் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் நிதானமானவர்கள். தெளிவான முடிவெடுப்பவர்கள். தாங்களால் முடிவெடுக்க இயலாவிட்டால் தகுந்த ஆலோசனையை நாடிப்பெற தயங்காதவர்கள். ஜனன கால சனியும், புதனும் கோட்சார சந்திரனை பார்க்கிறார்கள். எனவே ஜாதகர்  புதன், சனி ஆகிய இரு கிரகங்களின் காரகங்கள், பாவங்கள் தொடர்பான விஷயத்திற்காகத்தான் ஜாதகம் பார்க்க வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜோதிடத்தில் இம்முறை “சந்திர நாடி “ என அழைக்கப்படுகிறது. ஜனன ஜாதகத்தில் விருட்சிக சனி மகர செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். எனவே ஜாதகர் கேட்க வந்துள்ள விஷயத்தில் செவ்வாயின் காரகத்துவமும் கலந்திருக்கும்.

கோட்சார சந்திரனை ஜனன கால சனி பார்ப்பதால் ஜாதகர் சனியின் காரகமான வேலை தொடர்பான விஷயதிற்கு தெளிவு பெற வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜனன கால சனி மீது கோட்சார கேது நிற்பதால் ஜாதகருக்கு வேலையில் தடையா? அல்லது வேலை இல்லையா? என்பதை முதலில் அனுமானிக்க வேண்டும். ஜனன காலத்தில் நீசமான 6 ஆமதிபதி சூரியன், கோட்சாரத்தில் ஆட்சி பெற்று ஜனன கால மற்றும் கோட்சார வக்கிர குருவின் நேர் பார்வையில் உள்ளார். தன பாவாதிபதியான செவ்வாயும் 6 ல் சூரியனோடு இணைந்து குரு பார்வை பெறுவதால் ஜாதகர் வேலையில் இருக்கிறார் என்பதை அனுமானிக்கலாம். அதே சமயம் 6 ஆமதிபதி சூரியன் அடுத்து மாற்றத்தின் காரகரான ஜனன கால சந்திரனையும், ஜனன கால கேதுவையும் நோக்கி சென்றுகொண்டிருப்பதாலும், ஜனன கால ஜீவன காரகன் சனி மீது கோட்சார கேது நிற்பதாலும் வேலையில் சிரமங்கள் உண்டு என அனுமானிக்கலாம். எனவே உங்களுக்கு வேலையில் சிரமங்கள் தற்போது உண்டு. அதை பொறுத்துக்கொண்டு பணி செய்யவும். வேலை சிரமங்களை பொறுத்துக் கொள்ளாவிட்டால் வேலை இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது என அறிவுரை வழங்கப்பட்டது. “மிக்க நன்றி சார். வேலைப்பழு விஷயமாகத்தான் உங்களிடம் ஆலோசனை பெற வந்தேன்” என்று ஜாதகர் கூறினார்.

கோட்சார சந்திரனோடு தொடர்புகொள்ளும் மற்றொரு ஜனன கால கிரகம் புதன் ஆவார். புதன் லக்னத்திற்கு 4 ஆம் அதிபதியாகிறார். மேலும் ஜனன கால சனியோடு பரிவர்தனையாகும் உச்ச செவ்வாயும் விருட்சிகத்திற்கு வந்து கோட்சார சந்திரனை பார்க்கிறார். இதனால் ஜாதகர் 4 ஆமிட புதன் குறிக்கும் நிலம், செவ்வாயின் காரகமான வீடு தொடர்பான சிந்தனையில் உள்ளது தெரிகிறது. கோட்சாரத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து 4 ஆம் பார்வையாக பரிவர்த்தனை செவ்வாயை பார்ப்பதாலும், 4 ஆமதிபதி புதன் கோட்சாரத்தில் உச்சமானதும் இதை உறுதி செய்கிறது. “இடம், வீடு வாங்கும் சிந்தனையும் உங்களுக்கு உள்ளது. தற்போது ஜனன கால பரிவர்த்தனை செவ்வாய் மற்றும் புதனின் மீது கோட்சார கேது நிற்பதால் தற்போது அதற்குரிய காலமல்ல. எனவே இது தொடர்பான விஷயத்தை ஒத்திப்போடவும் என்று கூறினேன்”. ஜாதகர் தற்போது "கடன் பெற்று இடம் வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் அது உதவுமா? என்று கேள்வி எனக்கிருக்கிறது" என்றார். கோட்சார சந்திரன் அடுத்து 4 ஆம் பாவத்திற்கு சென்று ஜனன கால குருவின் 5 ஆம் பார்வையை பெறவுள்ளது. அதே சமயம் ஜனன கால புதன், பரிவர்த்தனை செவ்வாயை விட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ராகு-கேதுக்கள் விலகுகின்றன. அதன் பிறகு அது பற்றி முடிவு செய்யலாம். தற்போது வேண்டாம் என்று கூறினேன்.

மூன்றாவது கேள்வியாக ஜாதகர் தனக்கு 2 ஆவது குழந்தை வாய்ப்பைப் பற்றி கேட்டார். இரண்டாவது குழந்தையை குறிக்கும் பாவம் 5 க்கு 3 ஆன 7 ஆம் பாவமாகும். கோட்சார குரு லக்னத்திற்கு வந்து 5, 7 ஆகிய பாவங்களை பார்க்கும்போது அதற்குரிய காலம் உள்ளது. திசா புக்திகளும் கோட்சாரத்துடன் அதற்கு பொருந்தி வர வேண்டும். ஜாதகருக்கு அந்த அமைப்பு அடுத்த 2022 பிற்பகுதியில் வருகிறது” என்று கூறப்பட்டது. கோட்சார சந்திரனை பார்த்த 7 ஆமதிபதி புதனாலும், கும்பத்தில் குரு வக்கிரமாகி பின்னோக்கிய நிலையில் மகரத்தை நோக்கி வருகிறார். இப்படி அரைப்பங்கு  மகர தொடர்பு பெற்ற வக்கிர குருவின் 5 ஆம் பார்வை  கோட்சார சந்திரனுக்கு கிடைக்கிறது. எனவே ஜாதகர் குழந்தை பற்றிய விஷயத்தை இறுதியாக கேட்டார்.

ஜாதகரின் நிலையை ஜனன & கோட்சார கிரகங்கள் ஒரு ஊடுகதிர் படம் போல (Scan report) தெளிவாக உணர்த்துகின்றன. இனி முடிவெடுப்பதில் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த தெளிவை தருவது ஜோதிடம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்!

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Monday, 19 July 2021

நுண்ணுயிரியல் கல்வி

 


நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி வாய்ப்புகளும் அதற்கேற்ப பெருகிவிட்டன என்றுதான் கூற வேண்டும். வருடா வருடம் புதிய பிரிவுகள் கல்வித்துறையில் அறிமுகமாகின்றன. பழைய காலத்திற்கு ஒவ்வாத துறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய  காலத்திற்கேற்ப நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தரக்கூடிய பிரிவுகளை பலர் அறிந்திருந்தாலும் அதன் எதிர்கால நிலையையும் கணிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தங்கள் மன ஆர்வத்தை பூர்த்தி செய்யக்கூடிய கல்வியாக தாங்கள் தேர்ந்தேடுக்கும் கல்வி அமைய வேண்டும் என்று எண்ணுவது இயற்கையே. அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி தனது திறமைக்கு உட்பட்டதாகவும், பொருளாதார சூழலுக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டியதும் அவசியமாகிறது. இவை அனைத்தும் ஒருங்கே தரும் கல்விப்பிரிவை ஒரு மாணவன் இனங்கண்டு கொண்டால் மட்டும் போதாது, அதில் சேர வைக்கப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அதில் சேர முடியும் என்ற நிலை இன்று ஏறக்குறைய அனைத்து கல்விப்பிரிவிலும் உள்ளது. இந்நிலையில் உயர் கல்வி வாய்ப்பில் ஒரு பிரிவான நுண்ணுயிரியல் (Micro Biology) பிரிவில் தனது மகளுக்கு வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் என்னை ஒரு தாய் அணுகியதன் விளைவே இன்றைய பதிவு.

ஜோதிடத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் சிறப்பாக அமைய வேண்டுமெனில் கிரகிப்புத் திறனுக்கும் நினைவுத் திறனுக்கும் உரிய சந்திரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்களின் தொடர்பு எந்த கிரகங்களுக்கும் நல்லதல்ல என்றாலும் தீவிரமான நுட்பத்திறனை வழங்குவது ராகு-கேதுக்கள்தான். குறிப்பிட்ட வகை கல்வியில் நவீனத்துவத்தை (advanced level) குறிக்கும் ராகு-கேதுக்களின் தொடர்பு விரும்பத்தக்கது. கல்வியின் காரக கிரகம் புதனும், பாக்ய, லாப ஸ்தானங்களும் அவற்றின் அதிபதிகள் நிலையும் சிறப்புற அமைய வேண்டியது அவசியம். குறிப்பாக உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவம் ஆகியவை சிறப்பாக அமைவது நன்று. ஒருவர் தனக்கான உயர் கல்வியில் சிறப்புற பயின்று தேர்ச்சி பெறுவாரா அல்லது பாதிப்படைவாரா என்பதை கோட்சாரமும் திசா-புக்திகளும் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டும்.   

பொதுவாக அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக சுக்கிரன் அமைகிறார் எனினும் Biology எனும் உயிரியலுக்கு காரக கிரகங்களாக ஜீவ கிரகங்கள் புதனும் குருவும் அமைகின்றன. அடிப்படை உயிரியல் கல்வியை புதனும் மேம்பட்ட உயிரியல் கல்வியை குருவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உயிரியல் பிரிவின் மேம்பட்ட Micro Biology எனும் நுண்ணியிரியலிலுக்கு காரக கிரகம் குருவாகும். குருவோடு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ளும் போது அது இயந்திரங்களைக் கொண்டு கையாளும் technology எனும் நுட்பவியலாகிறது. குருவோடு ராகு-கேதுக்கள் தொடர்பாகும்போது அது நவீன தொழில்நுட்பமாக (Advanced Technology) மாற்றமடைகிறது.  

கீழே ஒரு 1999 ல் பிறந்த ஒரு மாணவியின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் விருச்சிகம்  மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவமான கடகத்தையும் குரு பார்க்கவில்லை. ஆனால் அதன் அதிபதிகளான செவ்வாயையும் சந்திரனையும் பார்க்கிறார். இந்த ஜாதகி முதுகலை உயிரி தொழில் நுட்பவியல் (Msc-Bio Technology) பட்டம் பெற்றவர். ஜாதகிக்கு  இக்குறிப்பிட்ட கல்வியை படிக்கும் காலத்தில் நடப்பில் இருந்தது 5 ஆம் பாவத்தில் இருந்த சுக்கிர திசையாகும். சுக்கிரனும் ராகுவும் வித்யா ஸ்தானமான 4 ல் ஆட்சி பெற்று சூரியனோடு சேர்க்கை பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்துள்ள புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் நட்சத்திர சாரம் கொடுத்த புதன் குரு சாரம் (புனர்பூசம்) பெற்றதே இந்த ஜாதகி உயிரி தொழில்நுட்பம் படிக்க காரணமாக அமைந்துள்ளது. இவரது கல்வியில் technology என்ற பெயர் அமையக் காரணம் ராகுவே ஆவார். திசா நாதன் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு கல்வி போன்ற உயிரற்ற காரணிகளை தடுக்க மாட்டார். எனவே ஜாதகியின் கல்விக்கு அவர் உதவினார் என்றே சொல்ல வேண்டும். சுரப்பி காரகன் சுக்கிரனோடு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு ஜாதகிக்கு உடல் ரீதியாக சில சிரமங்களை கொடுத்துள்ளதை மறுக்க முடியாது. 9 ஆமதிபதியை  (செவ்வாய்) குரு பார்த்தது ஜாதகி இரட்டை பட்டம் பெற காரணமாக அமைகிறது.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயின்று கொண்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் தனக்கு நுண்ணுயிரியியல் (Micro Biology) கிடைக்குமா என கேட்கும் மாணவிக்கான ஜாதகம் கீழே.


சிம்ம லக்ன ஜாதகம் வித்யா ஸ்தானமான நான்காம் பாவத்தில் புதனும் சூரியனும் புத்த-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளனர். பால்ய கல்வியை குறிக்கும் 2 ஆம் பாவத்தில் குரு, 4 ஆம் பாவம் புத-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளது. உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் தனித்த ராகு அந்த ராசியாதிபதி செவ்வாயைப் போன்றே செயல்படுவார் எனலாம். சந்திரனை குரு பார்ப்பது சிறப்பு எனலாம். எனினும் 8 ல் மறைந்த சந்திரனை நோக்கி ராகு வருவது சிறப்பல்ல. ஜாதகிக்கு தற்போது கேது திசை நடப்பில் உள்ளது. ஜாதகி கல்லூரி செல்லும் காலத்தில் கேது திசையில் புதன் புக்தி நடப்பில் இருக்கும். இந்நிலையில் இந்த மாணவிக்கு கல்லூரியில் நுண்ணுயிரியியல் பயில வாய்ப்பு கிடைக்குமா என காண்போம்.

ஜாதகத்தில் கேது செவ்வாயை கடந்திருப்பது சிறப்பான அமைப்பே.  நுண்ணுயிரியலின் காரக கிரகமான குரு, இந்த லக்னத்திற்கு 5 மற்றும் 8 ஆம் பாவாதிபதியாகிறார். எனவே 5 ஆமதிபதி எனும் நிலையில் உயர் கல்வியை தரும்போது 8 ஆமதிபதி எனும் நிலையில் அதை தடை செய்ய அமைப்புள்ளது. குரு 8 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் ஹஸ்தம் பெற்றுள்ளார் எனவே உயர் கல்வியில் நிச்சயம் தடைகளும் விரையங்களும் ஏற்படும். கல்லூரிக் காலத்தில் புதன் புக்தியில் ஜாதகி இருப்பார். புதன் ஆத்ம (அதிக பாகை பெற்ற கிரகம்) காரகனாக உள்ளார். அது சிறப்பு என்றாலும் புதன் 9 க்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துவதும் எண்ணிய பாடப்பிரிவை அடைவதில் தடைகள் ஏற்படும். 3 ஆமிட கேது 2 ஆமிடத்தில் விரயாதிபதி சந்திரன்  சாரம் பெற்ற குருவை நோக்கி வருகிறார். திசா நாதன் கேது கோட்சாரத்தில் தற்போது 4 ஆம் பாவத்தில் விருட்சிகத்தில் நிற்பது கல்வியை பாதிக்கும் அமைப்பாகும். இந்த பாதிப்பு இந்த ஜாதகிக்கு மட்டுமல்ல தற்போதைய கொரோனா காலத்தில் அனைத்து மாணவர்களுக்குமான அமைப்பாகும். கோட்சார கேது 3 ஆம் பாவத்திற்கு செல்கையில் ஜாதகியின் கல்விச் சூழலில் நல்ல வகையான மாறுதல் ஏற்படும் என்றாலும் உயர்கல்விக் காலத்தில் ஏழரை சனியில் பயிலும் இந்த ஜாதகத்தில் ஜாதகி குறிப்பிட்ட வகை பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில் எளிதாக கிடைக்காமல் அதற்காக கணிசமான பொருளாதாரத்தை செலவு செய்துதான் பெற வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 22 June 2021

ஆழ்துளைக்கிணறு

 



“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர். அதற்கு முந்தைய மொழி  நீரில்லா ஊரில் வாழ்வு ஏது? என்பதாகும். “நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி. உலக நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரை நாகரீகங்களாகவே தோன்றியதிலிருந்து இச்சொல்லின் முக்கியத்துவத்தை உணரலாம். ஒருவரது வாழ்வை பாழ்படுத்த தண்ணியில்லா  காட்டுக்கு பணி மாறுதல் என்பது இன்றைய நிலை. நீரே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதார சக்தி. நிலத்திற்கு  தாய்போல வளங்களை ஊட்டுவது நீர்தான். நீரில்லா பூமி, உயிர்கள் ஜீவிக்க இயலாத பாலைவனம்தான். அது வெறும் தாதுதான். காட்டை சமன்படுத்தி விளைச்சல்  நிலங்களாக்கும்போது அது மூலமாக உருப்பெறுகிறது. மூலமாக மாறிய பூமியில் நீர் பாயும்போது அது ஜீவனாக உருப்பெற்று உயிர்கள் வாழ வழி ஏற்படுகிறது.


அதனால்தான் நீரை பூமியின் தாய் என்கிறோம். கடக ராசி மாத்ரு (தாய்) பாவம் எனப்படுகிறது. விலை நிலங்களை ஒட்டியே குடிகள் வாழ்விடம் அமையும். அதன் பிறகு குடிகள் வழிபட கோவில்கள் ஏற்படும். ஆனால் இன்றைய நிலையை நினைத்துப்பாருங்கள் நீர் ஆதாரங்களை பெருக்காமல், இருப்பதையும் பாழ்படுத்தி,  ஆக்கிரமித்து சீரழித்துவிட்டு நரக வாழ்வு வாழ்கிறோம். வாழ வழியற்று  புலம்புகிறோம். ஊருக்கு ஊர் இருந்த கண்மாய்களும், நீர்நிலைகளும் பெரிய பண முதலைகளின் பேராசைக்கு பலியாகிவிட்டன. நீருக்கு ஆதாரமாக விளங்கும் மரங்கள்  அரசியல் பின்புலம் கொண்டவர்களால் கடத்தப்படுவது அனைத்து ஆட்சியிலும் நடக்கிறது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் பழமையான மரங்கள் மொட்டையடிக்கப்பட்டு மரங்களுக்குப்பதில் கட்டுமானங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. பூமித்தாயின் மார்பை கிழித்தி எறிந்துவிட்டு பால் இனி இல்லை என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். இந்நிலையில் இருக்கின்ற நீர் ஆதாரங்களை பாதுகாக்க நல்லோர்களும் நீதிமன்றங்களும் போராடுகின்றன. இப்பதிவில் நாம் ஜாதக ரீதியான நீர் யோகத்தையும் பிரசன்ன ரீதியான ஆழ்துளைக்குழாய் கிணறு (Bore well) தொடர்பாகவும்  ஆராயவிருக்கிறோம். 


ஒருவருக்கு நீர் வகையில் பாக்கியம் இருக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சந்திரனும் கடக ராசியும் சிறப்பாக அமைய வேண்டும். லக்னத்திற்கு 4 ஆம் பாவமும் நீர் வளம் பற்றிக்கூறும்.  மேற்கண்ட ஜாதகத்தில் கடக ராசிக்கு இரு புறமும் புதனும் குருவும் அமைத்து சுப கர்த்தாரி யோகத்தை வழங்குகின்றனர். கடக ராசிக்கு பாவிகள் பார்வை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடக ராசி அதிபதி சந்திரன், லக்னத்திற்கு லாபத்தில் நீர்க்கிரகம் என்று ஜோதிடத்தில் அழைக்கப்படும் சுக்கிரனின் சாரத்தில் பரணி-2 ல் நிற்கிறார். சந்திரன் நின்ற வீட்டோ\ன் செவ்வாய், சந்திரன் உச்சமடையும் ரோஹிணி-3 ல் நிற்கிறார். செவ்வாய் நீர் ராசியான தன் வீடு விருட்சிகத்தை தானே பார்க்கிறார். இதனால் விருச்சிகம் சிறப்படைகிறது. ஜாதகத்தில் மீன ராசி மட்டுமே பாவிகளான ராகு, சனியால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு நீர் ராசிகள் கடகமும் விருட்சிகமும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நீர் கிரகமான சுக்கிர திசையில் பிறந்த இந்த ஜாதகர் சந்திரனின் சாரம் ரோஹிணியில் நிற்கும் சூரிய திசை கடந்து, சுக்கிரனின் சாரம் பெற்று லாபத்தில் நிற்கும் சந்திர திசை கடந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் செவ்வாய் திசை கடந்து தற்போது நீர் ராசியான மீனத்தில் நிற்கும் ராகுவின் திசையில் உள்ளார்.. சுக்கிரனும், செவ்வாயும் சூரியனை விட்டு 5 பாகைக்கு மேல் விலகி நிற்பதால் பெரிய அளவில் அஸ்தங்க தோஷம் இல்லை. மீனத்தில் நிற்கும் ராகுவும் குருவின் தன்மையிலேயே செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தில் 4 ஆம்  பாவம், 4 ல் நின்ற கிரகம், 4 ஆமதிபதி, 4 ன் எதிர் பாவமான 1௦ ஆம் பாவத்திலிருந்து 4 ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும் கிரகங்கள் இவைகளை வைத்து கிணற்றின் நீர் வளத்தை அறியலாம். இந்த ஜாதகத்தில் 4 ஆம் பாவம் தெற்கு திசையை குறிக்கும் கன்னி ராசியாகி, அதில் தென்மேற்கு திசையை குறிக்கும் கேது அமைந்து மேற்கு திசையை குறிக்கும் ராகு, சனியால் 1௦ ஆம் பாவத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பால் இந்த ஜாதகரின் நிலத்தில் தென்மேற்கு திசையில் இவரது கிணறு அமைந்துள்ளது.     மேற்கண்ட ஜாதகரின் நிலத்தில் உள்ள கிணற்றில் இதுவரை நீர் வற்றவில்லை. சந்திர திசை வரை நீர்வளம் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. அதனால் நெல் பயிரிட்டுள்ளனர். செவ்வாய் திசையில் நீர்வளம் சற்றே குறைந்தது. அதனால் செவ்வாய் திசையில் நெற்பயிர் பயிரிடாமல் இதர வகை பயிர்களை பயிரிட்டனர். பூமி காரகன் லக்னத்திற்கு 12 ல் மறைந்ததால் செவ்வாய் திசையில் நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு வேலை நிமித்தம் ஜாதகர் சொந்த ஊரைவிட்டு வெளியேறினார். தற்போது ராகு திசையிலும் கிணற்றில் நீர் வற்றிவிடவில்லை. ஓரளவு உள்ளது.

கீழே ஆழ்துளை கிணறு போட்டு போதிய நீர் கிடைக்காமல் அதையே பயன்படுத்தினால் நீர் ஊறுமா? அல்லது புதிய ஆழ்துளைக்கிணறு போட வேண்டி இருக்குமா? என்று கேட்ட அன்பருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம்.


ஜாமக்கோள் பிரசன்னத்தில் ரிஷப வீதிகளான கன்னி, துலாம், மீனம், மேஷம் ஆகியவை நீர் ராசிகள் எனப்படும். மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவை நீரில்லா ராசிகள் எனப்படும். உதயம் நீரற்ற ராசியான தனுசில் அமைந்துள்ளது. உதயத்திற்கு பாதகத்தில் நீரில்லா ராசியான மிதுனத்தில் ஆரூடம் அமைந்துள்ளது. இது ஜாதகர் செய்துவிட்ட செயலின் தன்மையை குறிக்கிறது. உதயத்திற்கு லாபத்தில் நீர் ராசியான துலாத்தில் கவிப்பு அமைந்தது சிறப்பே. எனினும் கவிப்பில், கடக ராசி அதிபதியும் பிரதான நீர் கிரகமுமான சந்திரன் உள்வட்டத்தில் அமைந்து, கவிப்பு உதயத்திற்கு 8 ல் கடகத்தில் நீசம் பெற்று நிற்கும் செவ்வாயின் சாரம் சித்திரை-4 ல் நிற்கிறது.  இவை அனைத்தும் ஜாதகர் துளையிட்ட ஆழ்துளை கிணற்றின் நீர் வளம் சிறப்பில்லை என்பதை   காட்டுகிறது.  குறிப்பாக கவிப்பில் உள்வட்ட சந்திரன் அமைந்தது நீர் வளம் பாதிக்கப்பட்டதை  தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் கவிப்பு உதயத்திற்கு 11 ல் நிற்பதால் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கிறது. உதயத்தில்  நீர்கிரகமான ஜாம சுக்கிரன் அமைந்துள்ளது ஓரளவு சிறப்பு என்றாலும் உதயாதிபதி குரு உள்வட்டத்தில் வக்கிரம் பெற்று மற்றொரு நீரில்லா ராசியான கும்பத்தில் அமைந்துள்ளது பாதிப்பே. உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் நீர் ராசியான கன்னியில் ஜாமச்சந்திரன் சுய சாரமான ஹஸ்தத்தில் அமைந்துள்ளார். இது நீர் பிரசன்னம் என்பதையும் கேள்வியின் தன்மையையும் கூறுகிறது.  கன்னி சந்திரன், நீர் ராசியான மீனத்தில் நிற்கும் ஜாம குருவை நேர் பார்வை செய்கிறார். உதயத்திற்கு 4 ஆமிடமான மீனத்தில், ஜாம குரு, ராகுவோடு இணைந்து வக்கிரம் பெற்று நிற்கும் பாதகாதிபதி புதனின் சாரத்தில் ரேவதி-2 ல் நிற்கிறார். இந்த அமைப்பும் கேள்வியாளருக்கு சிறந்த நீர் யோகத்தை காட்டவில்லை.

தனுசு உதய கதிர்கள் 6. உதயத்தில் நிற்கும் சுக்கிரனின் கதிர்கள் 2௦. எனவே உதயத்திற்கு மொத்தம் 26 கதிர்கள். 26 ன் மூன்று மடங்கு 78 ஆகும்.. 780 அடி ஆழ்துளை போட்டிருக்க வேண்டும். கேள்வியாளர் 785 அடி போட்டதாக கூறினார். உதயத்திற்கு மிதுன ராசி கிரகங்களின் பார்வை கிடைக்கிறது. மிதுன ராசியில் உள்ள இரண்டு சூரியனுக்கும் 5X2 = 1௦ கதிர்கள். மிதுனத்தில் உள்ள சுக்கிர கதிர்கள் 2௦. ஆக மொத்த மிதுன கதிர்கள் 3௦. உதயத்தை துலாத்தில் இருந்து சனி 3 ஆம் பார்வையாக பார்க்கிறது. சனிக்கு கதிர்கள் 4. உச்ச சனிக்கு கதிர்கள் 3 மடங்கு என 12 கதிர்கள் எடுத்துக்கொண்டால் மிதுன கிரக கதிர்கள் 3௦+உச்ச சனி கதிர் 12 என மொத்தம் 42 வருகிறது. எனவே கூடுதல் தேவைக்கு 420  அடி போட்டுக்கொள்ளலாம் என்று பொதுவாக கூறலாம். ஆனால் இந்த பிரசன்னத்தில் மிதுனம் நீரற்ற ராசியாகவும் உதயத்திற்கு பாதகமாகவும் வருவதால் மிதுனத்திற்காக 3௦௦ அடிகள் போடுவது வீண். துலா சனி கவிப்பில் இருந்து உதயத்தை பார்ப்பதால் சனி பார்வைக்கு கதிர்கள் இல்லை. எனவே கூடுதலாக துளையிடுவது பயனற்ற செலவாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. அப்படி எனில் புதிதாக ஒரு ஆழ்துளைக்கிணறு  போடலாமா? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டது. தற்போதைக்கு குறைவாக நீர் வரும் ஆழ்துளைக்கிணற்று நீரையே பயன்படுத்துமாறும், உள்வட்டத்தில் நீரற்ற கும்ப ராசியில் நிற்கும் குரு உதயத்திற்கு 4 ல் நீர் ராசியான மீனத்திற்கு தனது ஆட்சி வீட்டிற்கு வரும் காலம் வரை பொறுத்திருக்குமாறும், அப்போது கடக ராசிக்கும் உள்வட்ட குரு பார்வையும் கிடைக்கவிருப்பதால் நீர் ஊறும். அப்போதும் கேள்வியாளரின் நீர்த்தேவை பூர்த்தியாகவில்லை எனில் மற்றொரு பிரசன்னம் மூலம் புதிதாக ஆழ்துளைக்கிணறு தொடர்பான சாத்தியக்கூறுகளை பார்ப்போம் என்று கூறினேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 2 February 2021

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

 


சொந்த வீடு என்பது அனைவரது பெரும் கனவான ஒன்று. சிலர் வீட்டை கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டிவிட்டு அதில் வசிக்க இயலவில்லையே என்று புலம்புவர். பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்தமாதிரி அமையவில்லை என புலம்புபவர்கள் சிலர். இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தங்கள் எண்ணப்படி மேலும் வசதி கூடிய வீட்டை அமைத்துக்கொள்பவர் சிலர். இப்படி வீடு வகை சிரமங்களை இன்று பெரும்பாலோரிடையே காணமுடிகிறது. நகர்ப்புறத்தில் இன்று வீடு என்பது பல லட்சங்கள் பிடிக்கும் ஒரு சொத்தாகும். கணிசமான தொகையில் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளையும் மீறி கடன்பெற்று கட்டிவிட்டு அதில் வசிக்க இயலாமை விரக்தியைத்தரும். இதனை தவிர்க்க சரியான திட்டமிடல் வீடு கட்டுவதற்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவு கட்டிய தங்கள்  சொந்த வீட்டில் வாழ்ந்து மகிழ முடியுமா என தகுந்த ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் அவசியம். இது தொடர்பானதே இன்றைய பதிவு.

முதலாவாதாக ஒரு ஆணின் ஜாதகம்.                    

ஜாதகர் 1955 ல் பிறந்தவர். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சூரியன் லக்னத்திலேயே உள்ளார். சூரியனுக்கு அஷ்டமாதித்ய தோஷம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் வலுவடையும் உத்திராயணத்தில் பிறந்து லக்னத்தில் சூரியன் உள்ளதால் ஜாதகருக்கு தந்தை வழி பாக்கியங்கள் உண்டு. லக்னாதிபதி சனி உச்சமாகி குரு பார்வை பெறுகிறார். வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்தை பூர்வீகத்தை குறிக்கும் சனி பார்த்ததால் ஜாதகருக்கு தந்தை வழி பூர்வீக வீடு கிடைத்தது. ஸ்திர லக்னமாகி உச்ச சனி லக்ன கேந்திரம் பெற்றதால் ஜாதகர் ஜனனம் முதல் இன்று வரை தனது பூர்வீக வீட்டிலேயே வசிக்கிறார். நான்காம் அதிபதி செவ்வாய் 3ல் குரு வீட்டில் பாவர் தொடர்பற்ற நிலையில் உள்ளதால் இவருக்கு வீடு தொடர்பான பாதிப்புகள் எப்போதும் இல்லை. பாக்ய ஸ்தானமான கன்னியில் அமைந்த சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் இவருக்கு செவ்வாய் வகை பாக்கியங்கள் உண்டு. செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெற்ற சனி 4 ஆம் வீட்டை உச்ச கதியில் பார்த்ததால் பழைய வீடு அவ்வளவுதான்.

இரண்டாவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.                

இந்தப்பெண்மணிக்கு 4 ஆம் அதிபதி குரு, தனது 4 ஆம் பாவத்திற்கு 8 ஆம் பாவமான கடகத்தில் பூமி காரகன் செவ்வாயுடன் இணைந்து உச்சமாகியுள்ளார். உச்ச குருவுடனான இணைவால் செவ்வாய் நீசபங்கம் பெறுகிறார். இப்படி 4 ஆமதிபதியும் பூமிகாரனும் லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் அமையும் சிறப்பான அமைப்பால் ஜாதகி தனது உழைப்பால் வீடு கட்டினார். ஜாதகத்தில் சந்திரனும் குருவும் பரிவர்தனையாகியுள்ளனர். கன்னி லக்ன பாதகாதிபதி குரு சந்திரனுடன் பரிவர்தனைக்குப்பிறகு பாதக ஸ்தானம் மீனம் சென்று அங்குள்ள வக்கிர சனியோடு இணைகிறார். இதனால் ஜாதகிக்கு சனி மற்றும் குருவால் பாதகம் ஏற்பட வேண்டும். இந்த வகையில் பணிக்கு செல்லும் ஜாதகி பணி மாறுதல்களின் பொருட்டு சொந்த இருப்பிடத்தில் வாசிக்க இயலாமல் மன  உலைச்சலுக்கு ஆளாகியுள்ளார். (சனி-வேலை, சந்திரன்-இட மாறுதல்கள், குரு-பதவி).  இவருக்கு வீடு பாக்கியம் உள்ளது. ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியம் இல்லை.  பாக்கியாதிபதி சுக்கிரன் நீசமாகியுள்ளது இதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

கீழே மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.                    

ஜாதகத்தில் தனது நான்காம் பாவத்தை அதன் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். இதனால் இவருக்கு வீடு அமைந்தது. ஆனால் ராகு 2 ஆம் இடத்தில் நின்று லக்னத்தில் உள்ள செவ்வாயை நோக்கி வருகிறது. இதனால் செவ்வாயின் காரகங்கள் பாதிப்படையும். ராகு இரண்டாமிடத்தில் நிற்பது ஜாதகரின் வருமான வகைகள் வெளிநாடு, வெளியூர் ஆகியவற்றில் அமையும் என்பதை குறிக்கிறது. ஜாதகர் தனது வாழ்வின் பெரும் பகுதியை வெளிநாட்டில் செலவழித்தவர். தற்போது தாய்நாடு திரும்பினாலும் வெளிமாநிலத்தில் குடும்ப சூழலின் பொருட்டு வாடகைக்கு வசிக்கிறார். சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். சிம்மம் உயர்ந்த வீடுகளை குறிக்கும். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் வீடு மூன்று தளங்களைக்கொண்டது. செவ்வாய் சிம்ம லக்னத்திற்கு 4 ஆமதிபதியும், பாக்ய & பாதகாதிபதியுமாகி ராகுவால் முதலில் தீண்டப்படுவதால் ஜாதகருக்கு கட்டிய வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் குறைவு.   

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.                   

ஜாதகர் மெத்தப்படித்தவர். நிரம்ப சம்பாதிப்பவர். கும்ப லக்னத்திற்கு 4 ல் திக்பலத்தில் அமைந்த சுக்கிரனுடன் லக்னாதிபதி சனி நட்பு பெற்று இணைந்து வக்கிர குரு பார்வை பெறுகிறார்.  உடன் புதனும் சூரியனும் உள்ளதால் ஜாதகரின் வீடு புதன், சுக்கிரன் குறிக்கும் கலை நயம் மிக்கது. சூரியன் குறிக்கும் அடுக்குமாடியில் ஒரு தளத்தில் வசிக்கிறார். எந்த கிரகமும் சூரியனால் அஸ்தங்கமடையவில்லை. பூமி, அசையா சொத்துக்களுக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றாலும், 12 ல் மறைந்து ராகுவுடன் ஒரே பாகையில் நின்று ராகுவால் அஸ்தங்கப்படுத்தப்படுகிறார். இதனால் செவ்வாயை ராகு கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு போதிய தன வசதி இருந்தாலும் வீடு கட்ட விருப்பமின்றி இருக்கிறார். பாக்யாதிபதி சுக்கிரன் திக்பலம் பெற்றதால் ஜாதகருக்கு வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் உண்டு. செவ்வாயின் நிலையால் வீடு கட்டும் பாக்கியம் இல்லை.  

பெரும் பொருளாதரத்தை எடுத்துக்கொள்ளும் வீடு அனைவருக்கும் அவசியமும் தேவ்வையுமான ஒன்று என்றாலும் அதை அனுபவிக்கும் சூழல் உள்ளதா என்று தெரிந்துகொண்டு வீட்டின் யோக திசை, பணிச்சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றை ஆராய்ந்து வீடு கட்டிக்கொள்வதே சிறப்பு.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday, 27 September 2020

கடனில் கரையும் கர்மவினைகள்!

 


வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை.  இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு. “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றொரு பிரபலமான ராமாயண வாசகம் கடனின் துயரை கூறுகிறது.   பேராசையைத்தவிர கடனுக்கு காரக கிரகங்கள் என்று கூறினால் அது ராகு-கேதுக்கள்தான். தன காரகன் குரு, ஜனன காலத்தில் கேதுவோடு தொடர்பாகி கோட்சாரத்திலும் குருவும் கேதுவும் தொடர்பாகும்போது  நிச்சயம் கடன் ஏற்படும். இதை தவிர்க்க இயலாது. கால புருஷனுக்கு 6 ஆம் அதிபதியான புதனின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து தன ஸ்தானமும் அதன் அதிபதியும் ஜனன ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போதும் கடன் ஏற்படும். கடனால் படும் நீடித்த துயரத்தை சனியும், அதீத துயரத்தை செவ்வாயும், கடனின் குரூரத்தன்மையை ராகுவும், கடனுக்கான சட்ட நடவடிக்கைகளை கேதுவும் சுட்டிக்காட்டும். கடன் கொடுக்கக்கூடாதவர்களுக்கான ஜாதக அமைப்பைப்பற்றி இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்திற்கு விரையத்தில் கால புருஷனுக்கு ஆறாம் அதிபதி புதன், கேது, 4 ஆமதிபதி நீச செவ்வாய் ஆகியோரோடு இணைந்துள்ளார். தன ஸ்தானாதிபதி புதனும் தன காரகன் குருவும் வக்கிரமானது பொருளாதார விஷயத்தில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற ஜாதகியின் தீவிர எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னாதிபதி இப்படி கடனின் காரக கிரகங்களோடு விரையத்தில் மறைந்து குருவும் வக்கிரமானதால் ஜாதகி கடனால் தனது வாழ்வில் நிம்மதி இழப்பார் என எதிர்பார்க்கலாம். லக்னபுள்ளி மகம்-3 ல் விழுந்துள்ளது ஜாதகி கடன், வழக்கு இவைகளோடு தொடர்புடையவாராக  வாழ்வில் தனது கர்மாவை கழிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜாதகி ஒரு வழக்கறிஞர். ஜாதகத்தில் குரு கேதுவின் மூலம்-2 லும், கேது குருவின் புனர்பூசம்-4 லும் நின்று சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். ஜாதகிக்கு தற்போது செவ்வாய் திசையில் சனி புக்தி கடந்த 2019 முற்பகுதியில் துவங்கியது. செவ்வாய் வியையத்தில் நீசமாகி கேதுவால் தீண்டப்பட்டுள்ளது. கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுக்கக்கூடியது. இந்த ஜாதகிக்கும் கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். பாதக ஆதிபத்யம் பெற்ற செவ்வாயின் திசையில் செவ்வாய்க்கு பாதகத்தில் செவ்வாயின்  மிருகசீரிஷம்-1 ல் நிற்கும் 6 ஆமதிபதி சனி புக்தி துவங்கியதும் ஜாதகி கேதுவின் ஆசை வலையில் விழுந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனது மிக கணிசமான தொகையை கடனாக அசையாச்சொத்து ஒன்றின் பெயரில் ஜாதகி ஒருவருக்கு கொடுத்தார். கோட்சாரத்தில் ஜனன காலத்தில் வக்கிரமான குருவோடும், கோட்சார குரு கோட்சார சனியோடும் கோட்சார கேது தொடர்புகொண்ட 2019 முன்பகுதியில் இது நடந்தது.  

கடன் பெற்றவர் தனது நிலப்பத்திரத்தை அடமானமாக வைத்தே கடனை பெற்றிருக்கிறார். சிறு விஷயங்களுக்கு ஜோதிடர்களை நாட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவரின் வாழ்நாள் ஆதாரமான விஷயங்களில் ஈடுபடும்போது தகுந்த தெளிந்த  ஜோதிடர்களின்  ஆலோசனையை நாட வேண்டியது அவசியம். ஒருவர் ஈடுபடும் செயலின் காரக கிரகம் அவரது ஜாதகத்தில் எந்த நிலையில் அமைந்துள்ளது மற்றும் நடக்கும் திசா-புக்திகள் அந்த காரக கிரகத்திற்கு எப்படி ஒத்துழைக்கும் என்று அறிந்து தனது செயல்களை திட்டமிடுவது அவரது வாழ்வின் பல சிரமங்களை குறைக்க வழிவகுக்கும். இந்த ஜாதகத்தில் நிலப்பத்திரத்தை ஈடாக பெற்று கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை (Unmovable Property) குறிக்கும் காரக கிரகமான செவ்வாயும், பத்திரத்தை குறிக்கும் காரக கிரகமான புதனும், லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் அமைந்துள்ளனர். அதிலும் செவ்வாய் அசையா சொத்தை குறிக்கும் 4 ஆவது பாவம் விருட்சிகத்திற்கு 9 ஆம் பாவம் கடகத்தில் நீசம் பெற்று அது லக்னத்திற்கு விரையமாகவும் அமைந்துள்ளது. கால புருஷனுக்கு 4 ல் கடகத்தில் இப்படி ஒரு சூழல் அமைவது ஜாதகி தனது வாழ்நாளின் செவ்வாய் திசா-புக்தி காலங்களில் பூமி வகைகளிலும், புதன் தொடர்பான திசா–புக்தி காலங்களில் பத்திரம் தொடர்பான கடன் வகைகளில் பாதகத்தையும் சந்திப்பார் என்பது ஜாதகத்தில் தெளிவாக உள்ளது. முக்கியமாக ஜாதகிக்கு செவ்வாய் திசை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தியில் கடந்த 2019 முற்பகுதியில் ஜாதகி கடன் கொடுத்துள்ளார். சனி புக்தியில் மிகப்பெரிய தனத்தை கடனாக கொடுத்ததற்கு காரணம், சனிக்கு திரிகோணத்திலும் திசா நாதன் செவ்வாய்க்கு 7ல் லக்னத்திற்கு 6 ல் ராகு நின்று திசா-புக்தி நாதர்களுக்கு ராகு இடும் கட்டளைதான். கடன் கொடுத்த பிறகு ஜாதகிக்கு ஓரிரு மாதங்கள் வட்டி வந்தது. தற்போது கொடுத்த பணமாவது வந்துவிடுமா என்ற நிலைதான். ஈடாக பெற்ற நில பத்திர வகையில் சில பாதகங்கள் இருப்பதை தற்போது அறிந்து ஜாதகி திகைத்து நிற்கிறார். திசா-புக்தி அடிப்படையில் அலசும்போது ஜாதகிக்கு வரவிருக்கும் ஏழரை சனியின் இறுதி காலத்தில்தான் அவரது பணம் பல போராட்டங்களுக்குப்பிறகு திரும்பக்கிடைக்கும் என்று தெரிகிறது.  

ஜாதகிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை 4 & 12 ஆமிடங்களும் அவற்றில் நின்ற கிரகங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 12 ஆமிடத்தில் 4 ஆமதிபதி நீசமானது ஜாதகிக்கு தாயாதிகள் வழியில் பூமிவகையில் எற்பட்ட இட தோஷம் சாபமாக மாறியுள்ளதையும் அதில் சூரியன் தொடர்பானது இது தலைமுறைகளாக தொடரும் சாபம் என்பதையும்,  புதன், கேது தொடர்பாகி 12 ல் நின்றது நில பத்திர வகைகள் மூலம் ஏற்பட்ட பாதிப்பே சாபத்திற்கு காரணம் என்றும் அறிய முடிகிறது.

ஒருவர் வட்டித்தொழிலில் பொருளீட்டவேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் வட்டித்தொழிலின் காரக கிரகங்களான ராகுவும் கேதுவும் பொருட்பாவங்களான 2,6,10,11 ஆகிய பாவங்களில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதில் ராகுவின் பங்கே பிரதானமானதாகும். கேது வட்டித்தொழிலில் ஏற்படும் சிரமங்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும். ராகு மூர்க்கக்குணத்தனத்தொடு எதிர்கொள்ளும். இவைகளுக்கு குரு சுக்கிரன், தொடர்பு ஏற்படின் வட்டித்தொழில் சிரமமின்றி நடைபெறும். இவைகளுக்கு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும். வரக்கூடிய பிரச்சனைகள் மிகுந்த குரூரத்தன்மையோடு அடிதடி, கடத்தல் என்ற வகையில் எதிர்கொள்ளவைக்கும். எனினும் வட்டித்தொழிலில் ஈடுபடுவோரை ஒருவகையில் மற்றவர்களின் கர்மாவை தீர்க்க உதவிடுபவராக கருதலாம். பிறரின் பாவ கர்மாவை இவர்கள் வட்டி என்ற வகையில் பெற்றுக்கொண்டு இவர்கள் கழித்துவிடுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது. இப்படி வட்டித்தொழிலில் சம்பாதிப்பவர்களுக்கு குடும்ப வகையில், சந்ததிகள் வகையில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

விரைவில் மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501

Wednesday, 16 September 2020

அகதியின் மகன்

198௦களில் இலங்கையில் உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த சூழலில் போர் முனையில் இருந்து தனது மனைவி குழந்தைகளை வெளி தேசங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு ,இலங்கையில் இருக்கும் தனது சொத்துக்களை இழந்து வெளியேற மனமின்றி,வாழவும் மனமின்றி தவித்தோர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள். போராளிக்குழுக்கள் ஒருபுறம்அரசுப்படை ஒருபுறம் என்று தங்கள் நிம்மதியை இழந்து தவித்தவர்கள் அவர்கள். அதைவிடக்கொடுமை, முறையான ஆவணங்களின்றி அந்நிய தேசங்களில் குடியுரிமை அதிகாரிகளிடம் அகப்பட்டு, தண்டிக்கப்பட்ட சூழலில் தனது குடும்பத்தவர்களின் நிலை என்ன? அவர்கள் வாழ்கிறார்களா? மரணித்துவிட்டார்களா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனரா? என தெரியாது அலைந்த மனிதர்களின் மனோ நிலைதான். சற்று கற்பனை செய்து பாருங்கள். அது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.நாம் இங்கு அலசவிருக்கும் ஜாதகமும் அப்படியான ஒரு மனிதரின் மகனது ஜாதகம்தான்..

இந்த ஜாதகரின் பெயர் கதிர்காமம் என்றும் அவரது தந்தையின் பெயர் மயில்வாகனம் என்றும் கற்பனையான பெயரில் கருதுவோம். மயில்வாகனம் 1983 ல் பிறந்து இரண்டே வயதான தனது மகனையும் தனது இளம் மனைவியையும் அப்படி இத்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் அனுப்பிவிட்டு, இலங்கையில் வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.மயில்வாகனம் தனது மகன் கதிர்காமம் கருவில் இருக்கும்போதே தனது தம்பி வேலாயுதத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தார். இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஒன்று இந்தியாவிற்கு தப்பிச்செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது ராணுவத்துடனோ, போராளிக்குழுக்களுடனோ இணைந்துவிட வேண்டும் என்ற நிலையே அப்போது நீடித்தது.

தனது மகன் குடும்பம் பிரிந்துவிட்டதன் பாதிப்பு மயில்வாகனத்தின் பெற்றோர் வாழ்விலும் எதிரொலித்தது. அது அவர்களது வாழ்வையும் புரட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும். பேரன் கதிர்காமம் பிறந்த 5 வருடம் சென்ற பிறகு மயில்வாகனத்தின் பெற்றோர் இருவரும் தங்களது குடும்ப வாழ்வை முறித்துக்கொண்டனர்.குடும்பத்தை பிரிந்த மயில்வாகனதிற்கு தற்போது பெற்றோர் வழி ஆதரவோ, சகோதர வழி உதவியோ இன்றி தனித்து விடப்பட்டார். சகோதரன், தாய், தந்தை, குடும்பத்தை இழந்த நிலை, போர்ச்சூழல் ஆகியவை தனி ஒருவனின் வாழ்வை தவிடுபொடியாக்கிவிட்டன. அன்றைய சூழலில் பல்வேறு தேசங்களுக்கு உயிர்பிழைக்க தங்களது குடும்பங்களை அனுப்பிவிட்டு இலங்கையில் அப்படி நடைப்பிணங்களாக வாழ்ந்த மயில்வாகனங்கள் ஆயிரமாயிரம். உரிய ஆவணங்களோ அனுமதியோ இன்றி இந்தியா வந்து, தன் மொழி பேசிய மக்களாலேயே ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் .9௦களின் மத்தியில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்தமைக்காக மயில்வாகனத்தின் மனைவியும் மகனும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்படிசொந்த தேசத்தில் வாழ முடியாமல் உறவுகளை உதறிவிட்டு வெளியேறி அந்நிய தேசத்தில் அகதிகளாக, குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக பார்க்கப்படும் மனிதர்களுக்கும் ஒரு ஜாதக  அமைப்பிருக்க வேண்டுமல்லவா, அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே நீங்கள் காண்பது மயில்வாகனத்தின் மகன் கதிர்காமத்தின் ஜாதகம்.


இரண்டாம்பாவம் சொந்த பூமியில், சொந்த ஊரில்ஒருவர் வாழும் நிலையையும், நான்காவது பாவம் சொந்த பந்தங்களோடு குறிப்பாக தந்தை வழி ரத்த உறவுகளோடு அதாவது பங்காளிகளுடன் உள்ள உறவுப்பினைப்பையும் குறிப்பிடும். லக்னம் ஒருவரின் தனித்தன்மையையும், ஐந்தாவது பாவம் அவரது பூர்வீகத்தின் தன்மையையும், 9 ஆவது பாவம் அவரது முன்னோர்களின் செயல்பாட்டையும், சனியின் நிலை ஒருவரது முன்னோர்களின் ஒழுக்கத்தையும் குறிப்பிடும்.. இந்த ஜாதகத்தில் 2 ஆமிடத்தோடு 5 &8 ஆமதிபதி குரு தொடர்பாகி, அங்கு6& 7 ஆமதிபதி சனியோடு 2 ஆமதிபதி புதன் பரிவர்தனையாகியுள்ளது. 5&8 ஆமதிபதி தொடர்பாகும் இந்தப்பரிவர்தனையால் ஜாதகர் பூர்வீகத்தை, சொந்த பூமியைவிட்டு வெளியேறுவார். ஏனெனில் 9 என்பது முன்னோர் வாழ்ந்த பூமி, குரு 8 ஆமிடாதிபதி ஆகையால் பூர்வீகத்தை விட்டு வெளியேறுதலை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. குரு, சனி,ஆகியவை வக்கிரமாகியுள்ளதும் 4 & 9 பாபங்களுக்குரிய செவ்வாய் அஸ்தங்கமாகியுள்ளதும் ஜாதகரது முன்னோர்கள் அடைந்த பாதிப்பை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஜாதகத்தில் 12 ஆமதிபதி சந்திரன் 8ல் சனியின் உத்திரட்டாதி-2 ல் நின்று 2 ஆமிடத்தில் தனது நட்சத்திரம் ஹஸ்தம்-2 ல் அமைந்த சனியோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இந்த இரு பரிவர்த்தனைகளும் ஜாதகரது தந்தைவழி முன்னோர்கள் அடைந்த பாதிப்புகளால் ஜாதகர் தனது தாயகத்தைவிட்டு வெளியேறுவதை தெளிவாக எடுத்துரைக்கிறது. லக்னாதிபதி சூரியன், சனி வீட்டில் நின்று லக்னத்தை பார்ப்பதால் இந்த ஜாதகரின் வாழ்வு சிறப்படைகிறது.. எனினும் சனியின் வீட்டில் அஸ்தங்க செவ்வாயோடும் சுக்கிரனோடும் சூரியன் நிற்பது, ஜாதகருக்கு அதீத கோபத்தையும், பொறுமையின்மையையும், நேர்மையாளனாக, பிடிவாதமுள்ளவனாக, குறைகளை சகித்துக்கொள்ள இயலாதவராக ஒரு மனோநிலையை உருவாக்கும். ஜாதகரின் இந்த குணம் பணியிடத்தில் சிறப்பைத்தந்தாலும், 7 ஆமிடம் இப்படி அதீத உஷ்ணமடைவதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.

தாயை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி, தந்தையை குறிக்கும்9  ஆம் பாவாதிபதி இருவரும் செவ்வாய் ஒருவரே ஆகி அஸ்தங்கமாகியுள்ளது. சனி திசை சுக்கிர புக்தியில் பிறந்த ஜாதகர், அதே சுக்கிர புக்தியில் இலங்கையை விட்டு கள்ளத்தோணி மூலம் தந்தையை பிரிந்து தாயோடு இந்தியா வருகிறார். திசா நாதன் சனி,8 ஆமிட சந்திரனோடு சாரப்பரிவர்தனை பெற்றதும்,புக்தி நாதன் சுக்கிரன் 12 ஆமிட ராகுவின் சதயம்-3 ல் நின்றதும் இதற்கு காரணமாகும். 12 ஆமிடம் வெளிநாட்டில் குடியேறுவதை குறிக்கும். சுக்கிரன் சட்டவிரோத குடியேற்றதிற்குரிய ராகு சாரம் பெற்று 12ல் நின்றதால் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறினர்.ராஜீவ்காந்தி மரணதிற்குப்பிறகு இந்திய அரசு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கிறது. 6 ஆமிடத்தில் நிற்கும் புதனின் திசையில் தண்டனை, அவமானங்களை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரன் சாரம் பெற்ற கேது புக்தியில் 1996-97 ல் ஜாதகரும் தாயும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிற்பாடு விடுதலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2௦௦1ல், 18 வருடங்களுக்குப்பிறகு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வந்து இணைகிறார் மயில்வாகனம்

இப்போது துவதசாம்சத்திற்கு வருவோம்.துவாதசாம்ச சக்கரம் பெற்றோர் நிலையை ஆராய உதவுவதாகும். லக்னத்திற்கு 12 ல் சூரியன் மறைந்து, லக்னத்திற்கு 7 ல் சூரியனுக்கு 8 சந்திரன் நிற்கிறது. சூரிய சந்திரர்கள் 6 – 8 ஆக அமைந்ததிதிலிருந்து பெற்றோர் இருவரும் ஒருங்கிணைந்து வாழும் சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்பதை இது குறிக்கிறது. லக்னத்திற்கு 6, 11 ஆமதிபதி சுக்கிரன் 9 ஆமிடத்தில்தனது புக்தியில் தந்தையைகுடும்பத்தைவிட்டு விலக்குகிறார். இதனால் 6–8 ஆக அமைந்த பெற்றோர் பிரிகின்றனர். அப்போது திசா நாதன் சனி, புக்தி நாதன் சுக்கிரன் இருவருமே சூரியனுக்கு எதிரிகளாவர். ஆனால் 2௦௦1 ல் சூழல் மாறுகிறது. புதன் சனி, சுக்கிரனுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் நண்பனாவார். புதன் லக்னத்தில் அமைந்து 7 ஆமிடத்தில் தன் வீட்டில் அமைந்த சந்திரனை பார்க்கிறார். இதனால் 2௦௦1 ல் புதன் திசையில், சந்திர புக்தியில் பெற்றோர் ஒன்று சேர்கின்றனர்.

 

தந்தை குடும்பத்துடன் இணைந்த பிறகு ஜாதகருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஜாதகர் கணினிக்கல்வியில் முதுநிலை பட்டம் பெற்று தேர்வாகிறார். 2004ல் ஜாதகரின் வாழ்வில் ஒரு பொற்காலம். புதன் திசை ராகு புக்தி அப்போது நடப்பு. ராகு ஜல ராசியில் நின்றாலும் அவர் ஜீவன காரகன் சனியின் சாரம் பூசத்தில் நிற்கிறார். ராகு சூதாட்டம், லாட்டரி, பிரம்மாண்டமான கனவு போல நம்ப முடியாத சம்பவங்களுக்கும் காரக கிரகம் ஆகிறார். அமெரிக்கா எப்போதுமே படித்த, தகுதி வாய்ந்த, திறன்மிகு உழைப்பாளிகளை கடந்த காலங்களில் இருகரங்கள் கொண்டு வரவேற்றிருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் வந்து பணிபுரிய விரும்பும் படித்த, தகுதி வாய்ந்த நபர்களுக்காக நடத்தப்படும் லாட்டரியில் பரிசு பெற்று அமெரிக்காவில் நுழையும்போதே பரிசின் மூலம் பச்சைப்பட்டயம் ( Green card) பெற்று அமெரிக்கா சென்று பணிபுரிகிறார்.

2006ல் இந்தியாவில் புதன் திசையில் குரு புக்தியில் கதிர்காமம் பெற்றோர்களுக்காக ஒரு வீடு வாங்கித்தருகிறார். புதன்4 ஆம் பாவதிபதி செவ்வாயின் சாரம் பெற்று (அவிட்டம்-2)  புக்தி நாதன் குருவின் சாரத்தில் (பூரட்டாதி-3 ல்) செவ்வாய் அமைந்ததால் அது சாத்தியமாயிற்று. ஜாதகருக்கு  பரிவர்த்தனைக்கு உள்ளான புதனின் திசையில் 2 ஆமிடத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் 20௦9ல் திருமணம் நடந்தது .ஒரு ஆண்டிற்குப்பிறகு களத்திர பாவமான 7 க்கு விரையத்தில் 6 ஆமிடத்தில் நிற்கும் வழக்கு பிரிவினை காரகன் கேதுவின் திசை துவங்கியதும் ஜாதகருக்கு வழக்கும் வந்தது, திருமண வாழ்வும் முடிவிற்கு வந்தது. எனினும் மணமுறிவு என்பதை 6 ஆமிடம் குறிப்பிட்டாலும் 8 ஆமிடமே சட்டப்படியான முறையான பிரிவினையை குறிப்பிடும் என்பதால் 4 வருட வழக்குக்குப்பிறகு 2௦15 ல் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் சாரம் (ஹஸ்தம்-2) பெற்ற 8 ஆமதிபதி குருவின் புக்தியின் சந்திரனின் அந்தரத்தில் வழக்கு முடிவுற்று சட்டப்படி விவாகரத்து பெற்றனர். (கேது – வழக்கு, சட்டப்பதியான பிரிவினை) அதே ஆண்டின் பிற்பகுதியில் கேது திசையில்,2 ஆமிடத்தில் ,2 ஆமிடத்ததிபதி புதனோடு பரிவர்த்தனையாகி நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. இங்கு திசாநாதன் கேது (திருவோணம்-2)  மற்றும் சனி (ஹஸ்தம்-2)  ஆகியோர் 8 ஆமிட சந்திரனோடு நட்சத்திர அடிப்படையில் தொடர்புகொண்டதால் ஜாதகருக்கு மணமுறிவு ஏற்பட்டு பிறகு மறுதிருமணம் நடக்கவேண்டும் என்பது கர்மவினை என்று தெளிவாகிறது.

இதனிடையே ஜாதகருக்கு 2017 மற்றும்2019ல்ராசிக்கு 5 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற சுக்கிர திசையில் சுய புக்தியில் ஜாதகருக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். செவ்வாய் அஸ்தங்கமானது ஜாதகருக்கு உறவுகள், பங்காளிகள் வகையில் நன்மையில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் ஜாதகரின் தந்தை தனது சகோதரனை விட்டு விலகினார். உறவுகள் விலகினர், பங்காளிகள் விலகினர். செவ்வாய் அஸ்தங்கமானதால்தான் இந்தியாவில் தங்களது வீட்டில் குடியேரியவர்களிடம்கூட முறையான வாடகை வசூல் செய்ய ஜாதகரால் இயலவில்லை. பெற்றோரை ஜாதகர் தனது முதல் திருமணம் விவாகரத்தான பிறகு அமெரிக்கா அழைத்து வந்தார். எனினும் வீடு மற்றும் சொத்துகள்  வகை பிரச்சனைகளை சரிசெய்ய தந்தை தனது மனைவியை ஜாதகரிடமே விட்டுவிட்டு இந்தியா வந்து தங்கினார். நீண்டதொரு போராட்டதிற்குப்பிறகு 2020 ல் தற்போது சுக்கிர திசையில்  சுய புக்தியில் செவ்வாய் சாரம் பெற்ற புதன் அந்தரத்தில் வீட்டை விற்றனர் எனினும் சிறிது மீத தொகை வரவேண்டியுள்ளது. இங்கே அஸ்தங்க செவ்வாயின் பாதகம் அதீதம் என்பது தெளிவாகிறது.

சூரியன் பாரம்பரியத்தைகுறிக்கும் காரக கிரகம் என்பது தெரியும். ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது ஒரு தலைமுறை தோஷம் என்பது சூரியனின் நிலைகொண்டு அறியலாம். சூரியன்7 ஆமிடத்தில் செவ்வாயோடு இணைந்து நின்றதால் தற்போது ஜாதகர் தனது இரண்டாவது மனைவியோடுகூட இனிமையான இல்லறம் நடத்த இயலவில்லை. ஜாதகரால் மட்டுமல்ல ஜாதகரின் தந்தை,பாட்டன் ஆகியோரின் குடும்ப வாழ்வும் பாதித்துள்ளது. தற்போதும் ஜாதகரின் தந்தை இந்த கொரானா காலத்தில் அமெரிக்கா செல்ல வழியின்றி இந்தியாவில்தான் இருக்கிறார். இத்தகைய கடுமையான தோஷங்களை முறையான வழிகளில் குறைத்துக்கொள்ள ஜோதிடம் நமக்கு வழிகாட்டுகிறது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி:8300124501