Showing posts with label ராகு-கேது. Show all posts
Showing posts with label ராகு-கேது. Show all posts

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 14 October 2021

தொழில் சிந்தனைகள்...

 


ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக  ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை. கால மாற்றங்களை போன்றவைதான் எண்ணங்களும். எனவே எல்லோரும் காலத்தின் கைப்பாவைகளே. ஒருவர் சிறப்பான தொழில் சிந்தனையை பெற்றிருப்பதை அவரது மனப்போக்குதான் தீர்மானிக்கிறது. நமது இன்றைய பதிவு ஒருவரின் தொழில் ரீதியான சிந்தனைகளை ஜோதிடப்படி ஆராய்வதே.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 43 வயது நிரம்பிய ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் ஜீவன பாவமான லக்னத்திற்கு 1௦ ல் மிதுனத்தில் திருவாதிரை-4 ஆம் பாதத்தில்  செல்கிறார். திருவாதிரை-2 ஆம் பாதத்தில்  ஜனன காலத்தில் நிற்கும் லாபாதிபதி மீது கோட்சார சந்திரன் செல்கிறார்.  லாபாதிபதி சந்திரன் மாற்றத்திற்குரிய கிரகம் என்பதோடு அவர் 1௦ ஆமிட தொடர்பில் கோட்சாரத்தில் செல்வதால் இவர் தொழில் மாற்றத்தால்  லாபம் உண்டா? என்ற கேள்வியுடன் ஜாதகம் பார்க்க வந்தார். கோட்சார சந்திரனும் ஜனன சந்திரனும் லக்னத்தில் நிற்கும் ராகு சாரம் பெறுவதால் இவர் சந்திரன்+ராகு சேர்க்கை  குறிக்கும் விவசாயதிற்குரிய உரங்கள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவராக இருப்பார். கோட்சாரத்தில் சந்திரன் ரோகிணி-1 ல் நிற்கும் ராகுவை கடந்து வந்துள்ளது இதை உறுதி செய்கிறது. லக்னத்தில் நிற்கும் கிரகமே ஜாதகரை வழி நடத்தும் என்பதற்கேற்ப, அலைச்சலை குறிக்கும் 12 ஆமதிபதி சூரியன் சாரம் பெற்று அலைச்சலின் காரக கிரகமான ராகுவே லக்னத்தில் நிற்கிறார். இவர் கடந்த காலங்களில் ரசாயன உரங்கள் தொடர்புடைய துறையில் விற்பனை பிரதிநிதியாக நீண்ட பயணங்கள் செய்து நன்கு பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

2௦19 ல் இவர் மருந்து வணிகம் தொடர்புடைய துறைக்கு மாறி, கடினமாக உழைத்தும் அதில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்கிறார். கொரான காலம் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் வேலையில் திருப்தியில்லை என்கிறார்.  காரணம் மருத்துவத்தின் காரக கிரகமான செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதியாவதால் ஜாதகருக்கு நன்மைகளை வழங்க இயலவில்லை. இவர் மருத்துவம் சார்ந்த துறையில் ஈடுபட காரணம் செவ்வாய் வருமான பாவமான 2 ஆமிடத்தில் நிற்பதால்தான். கோட்சாரத்தில் செவ்வாயும் சூரியனும் ஜனன கால ராகுவிடம் சரணடைவது ஜாதகர் ஈடுபட்ட செவ்வாய் சார்ந்த துறையில் ஜாதகர் சோபிக்கவில்லை என்பதை கூறுகிறது.  இதனால் ராகு-சந்திரன் சேர்க்கை குறிக்கும் விவசாயத்திற்குரிய உரங்கள், ரசாயனங்கள் தொடர்புடைய துறையே ஜாதகருக்கு   நன்மையை செய்கிறது. காரணம் ராகுவும் சந்திரனும் லக்னத்தோடும் 1௦ ஆம் பாவத்தோடும் தொடர்புகொள்வதே. கோட்சார சந்திரன் லாப ஸ்தானத்தில் கடகத்தில் நிற்கும் உச்ச குருவைத்தான் அடுத்து தொடவுள்ளது. விவசாயத்தை கால புருஷனின் நான்காமிடமான கடகமும் அதன் அதிபதி சந்திரனும் குறிப்பதோடு சந்திரன்+ராகு  தொடர்பு, ஜாதகர் முன்பு ஈடுபட்ட ரசாயன உரத்துறைக்கு திரும்புவது ஜாதகருக்கு நிச்சயம் லாபமாக அமையும் என்று கூறப்பட்டது.  

அடுத்து ஒரு ஜாதகம்.   

ஜாதகதிற்குரியவர் 4௦ வயதான ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் கன்னியில் சுய சாரத்தில் ஹஸ்தம்-3 ல் செல்கிறது. குரு கால புருஷனுக்கு 12 ஆமதிபதி என்பதோடு சனியும் கால்கள், பாதங்கள், கழிவுகள் ஆகியவற்றை குறிப்பவர். தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் ஜனன ராகு சனி சாரம் பூசம்-2 ல் நிற்கிறார். 12 ஆமிடாதிபதி புதன், அங்கு சந்திரனோடு  பரிவர்த்தனை பெற்ற சூரியனோடு இணைந்து நிற்கிறார். ஜாதகருக்கு தற்போது ராகு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. எனவே இவரது தொழில் பற்றிய சிந்தனையில் ராகுவின் காரகத்தோடு, சூரியன் குறிக்கும் சுய தொழில் எண்ணம், சந்திரன் குறிக்கும், திரவங்கள், புதன் குறிக்கும் தரகு கமிஷன், ஏஜென்சி,  ஒப்பந்தம்  ஆகியவை கலந்திருக்கும் எனலாம். செவ்வாய் மிதுனத்தில் ராகு சாரம் திருவாதிரை-4 ல் நிற்பதால் இவரது தொழில் சிந்தனையில் செவ்வாயின் தாக்கமும் இருக்கும். இவர் குடிநீர் விற்பனை செய்தார். தற்போது ஒரு சிமென்ட் ஏஜன்சி வைத்துள்ளார். கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி தருகிறார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது கழிவறையை  குறிக்கும் என்பதோடு, கன்னியில் ஜனன காலத்தில் கால புருஷனுக்கு 12 ஆமதிபதி குரு இருந்து அவர் கோட்சாரத்தில் நீசமாவதும், கழிவுகளை குறிக்கும் சனி ஜனன காலத்தில் அங்கு நிற்கிறது. கோட்சாரத்தில் கட்டுமானங்களுக்குரிய  செவ்வாயும், அரசை குறிக்கும் சூரியனும், கோட்சார புதனோடு லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் செல்வதால், அரசு மக்களுக்கு கழிவறை கட்டித்தரும் திட்டங்களை தான் ஏற்று செய்யலாமா? என்று கேட்கிறார். ஒருவரது தொழில் சிந்தனையின் தரத்தை கோட்சார கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றால் அது மிகையல்ல.

மூன்றாவதாக ஒரு ஜாதகம்.


ஜாதகத்திற்கு உரியவர் 36 வயதான ஒரு பெண். ஜாதகத்தில் கடனை குறிக்கும் 6 ஆமதிபதி சந்திரன் லக்னத்தில் நிற்கிறார். தொழிலை குறிக்கும் 1௦ ஆமதிபதி செவ்வாய் நீசம் பெற்று கடன் பாவமான 6 ஆமிடத்தில் நிற்கிறார். ஜீவன காரகரும் லக்னாதிபதியுமான சனி உச்சம் பெற்று கடனின் காரக கிரகமான கேதுவோடு பாதக ஸ்தானமான துலாத்தில் உள்ளார். இம்மூன்று அமைப்புகளும் ஒன்றைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அது ஜாதகிக்கு தொழில் ரீதியான கடன் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பதே. இது விஷயங்களில் ஜாதகியை ஒரு தேர்ந்த ஜோதிடரால் எச்சரிக்க இயலும். ஆனால் ஜாதகி சம்பவங்களை அனுபவிப்பதை தடுக்க முடியாது.  ஜாதகி ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் கன்னி ராசியில் சுய சாரம் ஹஸ்தம்-3 ல் சென்றுகொண்டிருக்கிறார். கன்னி ராசி கால புருஷனின் 6 ஆவது பாவம் என்ற வகையிலும் சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 8 ல் சுய சாரத்தில் செல்வதால் ஜாதகி கடன் நெருக்கடியில் ஜாதகம் பார்க்க வந்துள்ளார்.

கடக ராசியில் உள்ள 1௦ ஆமதிபதி செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரை துலாத்தில் கேதுவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையை பார்த்த நிலையில் கோட்சார சந்திரன் கடக ராசியை கடந்து வந்துள்ளது. பிறகு சூரியனை கடந்து வந்துள்ளது. கோட்சாரத்தில்  1௦ ஆமதிபதி செவ்வாயும், புதனும், சூரியனும் லக்னத்திற்கு 8 ல் நிற்கின்றனர். சுக்கிரன் லக்னத்திற்கு 1௦ ல் விருட்சிகத்தில் கேதுவோடு நிற்கிறார். இது ஜாதகி தொழிலுக்கான கடன் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவிட்டதை குறிக்கிறது. அரசு வங்கிக்கடனுக்கு உரிய சூரியனும் புதனும் லக்னத்திற்கு 8 ல் கோட்சாரத்தில் மறைந்துவிட்டது ஜாதகி அரசு வங்கிக்கடன் பெற எடுத்த முயற்சிகள் பலனடையவில்லை என்பதை குறிக்கின்றன. ஜாதகி தொழிலுக்கான துவக்க முதலீடு செய்துள்ளார். கூடுதல் முதலீட்டிற்காகவே வங்கிக்கடன் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் ஜாதகி தற்போது தொழில் இருந்து பின் வாங்க இயலாது. கோட்சார சந்திரன் அடுத்து உச்ச சனியையும் கேதுவையும் தொட்ட பிறகே 1௦ ஆமிடம் செல்லமுடியும். இதனால் ஜாதகி தொழிலில் கடுமையான போராட்ட சூழலை சந்தித்த பிறகே தொழிலில் காலூன்ற இயலும் என்பதை கோட்சார சந்திரனின் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜீவன விஷயங்கள் ஒருவரது வாழ்க்கை போக்கை தீர்மானிப்பவை. கணிசமான முதலீட்டில் செய்யும் எந்தவொரு விஷயத்தையும் தகுந்த ஜோதிடரின் மூலம் அதன் சாதக பாதகங்களை அறிந்து செயல்படுவது சிறப்பு.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Saturday, 14 August 2021

இரிடியத்தில் இன்வெஸ்ட் பண்ணலாமா?

 



மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ்ந்த பண்டைய காலத்தில் சக மனிதர்களிடம் நேசம் அதிகம் இருந்தது. அதன் காரணமாக சக மனிதரை ஏமாற்றுவதும் குறைந்திருந்தது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாக தனிமைப்பட்டு நிற்கும்  இன்றைய காலத்தில் சக மனிதன் மீதான நேசம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் சக மனிதனை ஏமாற்றிப்பிழைக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டனர். அரசே மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் சக மக்களை ஏமாற்றுகின்றனர். அதுவும் நவீன மின்னணு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துவிட்ட இக்காலத்தில் இவற்றை சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை காணலாம். பல்வேறு வகையான மோசடிகள் பல்வேறு பெயர்களில் பிரபலமாகிவிட்டன. இரிடியம் மோசடி, மண்ணுள்ளிப்பாம்பு மோசடி, ஈமுக்கோழி மோசடி, இணைய வழி மோசடிகள், கைபேசி வழி மோசடிகள், முகநூல் வழி மோசடிகள் என்று இப்பட்டியல் நீளுகிறது. காலத்திற்குக்காலம் இத்தகைய மோசடிகள் புதிய அவதாரங்கள்  எடுக்கின்றன. தற்போது நடப்பில் உள்ளது அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் அரசியல் ஏஜெண்டுகளின் மோசடிகள்தான். பொதுவாக வங்கியை தவிர்த்து தனி நபர்களிடம் சேமிக்கும் சேமிப்பில்தான் மோசடிகள் நடக்கும் என்றால் தற்போது வங்கியில் பணியாற்றுவோரே மோசடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவை எல்லாவற்றையும் பார்த்து சாதாரண மனிதன் திகைத்து நிற்கிறான். பணம் கொடுத்து  அரசு வேலைக்கு முயற்சிக்கலாமா?, இரிடியம் நபர்களிடம் பணம் கொடுக்கலாமா? என்று என்னிடமும் பலர் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். நமது இன்றைய பதிவு இவற்றை ஆராய்வதே.

இரிடியம் 

பொதுவாக மோசடிகளுக்கு முதன்மை காரக கிரகம் என்று ராகுவை சொல்லலாம். மனிதனின் ஆசையை தூண்டிவிட்டு பிறகு இழப்பை கொடுத்து இறுதியாக உண்மையை உணர்த்துவது ராகு-கேதுக்களின் பணி. கேதுவின் மோசடியில் ஒரு தனித்துவம் இருக்கும். கேது ஆசை காட்டி இழப்பை கொடுத்து பிறகு ஜாதகரை நெறிப்படுத்தும். ஆனால் ராகு,  வகை தொகையற்ற மோசடிகளுக்கு காரக கிரகமாகும். ராகு கொடுக்கும் பாதிப்பிலிருந்து ஒருவர் விரைவில் மீளமுடியாது. சுக்கிரன் வளமையை நேசிக்கும் கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனுக்கு  ராகு-கேதுக்களின் தொடர்பு ஏற்படும் போது அந்த ஜாதகர் பண மோசடியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ராகு-கேதுக்கள் இருவருமே ஆசையை தூண்டி தண்டிக்கும் கிரகங்கள் என்றாலும் தொடர்புடைய திசா புக்தி வரும் வரை இவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராகு-கேதுக்கள் குறுக்கு வழியில் கொடுக்கும் தனத்தை ஒருவர் அனுபவித்து விட்டால் அதன் பிறகு அந்த ஜாதகர் அவற்றின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை எனலாம். அல்லது ஒரு இழப்பை ஜாதகருக்கு கொடுத்துவிட்ட பிறகு அவருக்கு முறையான மற்றும் முறையற்ற வகைகளில் உதவி புரிகிறது.  ஆனால் அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. ராகு-கேதுக்களுக்கு குருவின் தொடர்பு ஏற்பட்டால் அந்த ஜாதகர் ராகு-கேதுக்களின் மூலம் நேர் வழியில் சிறப்பான தனம் ஈட்டுகிறார். உதாரணமாக கைராசி மருந்துவர், மிக நேர்மையான குற்றம் கண்டுபிடிக்கும் அதிகாரி, நேர்மையான நீதிபதி ஆகியோர் இவற்றின் அம்சங்களாகும். இப்படி குரு தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களுடைய ஜாதகர்களுடன், ராகு-கேதுக்கள் ஒரு தெய்வீக சக்தியாக உடன் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த வகை ஜாதகர்கள் மற்றவர்களின் கர்மாவை அவர்களை தண்டிப்பதன் மூலம் தீர்க்க அவதாரம் எடுத்தவர்கள் எனலாம்.

கீழே ஒரு ஜாதகம்.


இந்த ஜாதகி 1964 ல் பிறந்தவர். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மாங்கல்ய பாவமான 8 ஆமிடம் பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துள்ளது.. இதனால் இந்த ஜாதகிக்கு மாங்கல்ய பலமில்லை. கேது சாரத்தில் மேஷத்தில் குரு நிற்கிறார். களத்திர பாவத்தில் சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது முதலில் மாங்கல்ய, பாக்ய ஸ்தானாதிபதியான சனியையும் லக்னத்தில் நிற்கும் ராகு முதலில் 5 ஆம் பாவாதிபதியான சுக்கிரனையும் முதலில் தொடுகின்றனர். ஜாதகிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுக்கிரனை கடக்கும் ராகு அடுத்து தொடுவது களத்திர பாவாதிபதியான குருவைத்தான். இத்தகைய அமைப்புகளால் விதவையானவர் ஜாதகி. 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது நிற்பதால் இவரது மகள் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்துள்ளார். இந்த ஜாதகிக்கு ராகு-கேதுக்கள் தீய பலனை ராகு மற்றும் கேதுவோடு தொடர்புடைய குரு திசையில் கொடுத்துவிட்டன. தற்போது ஜாதகிக்கு பாக்ய ஸ்தானமான கும்பத்தில் மூலத்திரிகோணம் பெற்று நிற்கும் சனியின் திசை 2010 முதல் நடக்கிறது.  

மிதுனத்தில் அமைந்த லக்ன ராகு குறுக்கு வழி சிந்தனையை தூண்டுவார். கேது சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். பணத்தின் மீதான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் தன காரக கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஆத்ம அல்லது தாரா காரகர்களாக இருக்க வேண்டும் அல்லது ராகு-கேதுக்கள் தொடர்பு பெறவேண்டும். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நிற்பது கவனிக்கத்தக்கது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட வலையில் சிக்க வைத்து  ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அந்த குறிப்பிட்ட விஷத்யத்தின் மீது அவரது ஆசையை தூண்ட வேண்டும். ராகு முதலில் தொடப்போவது சுக்கிரனைத்தான். மேலும் ஆசையை தூண்டி சிக்க வைக்கும் காரக கிரகமான கேது பாதக ஸ்தானத்தில் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். எனவே ராகுவும்-கேதும்  ஜாதகிக்கு பணத்தின் மீதான ஆசையை தூண்டுவர். இந்த ஜாதகியை 9 ல் ராகு சாரம் சதையத்தில் நிற்கும் சனியின் திசையில், கேது புக்தியில் இரிடியம் மோசடியாளர்கள்  தொடர்புகொண்டனர். சனி பாக்ய ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினாலும் அவர் திடீர் அதிஷ்டத்தை குறிக்கும் 8 ஆம் பாவத்திற்கும் அதிபதி என்பதாலும் சனி ராகு சாரம் பெற்றதாலும் ஜாதகிக்கு இத்தகைய வாய்ப்பு வந்தது. ஜாதகி அவர்களிடம் பணம் கொடுக்குமுன் என்னை ஜாதகத்துடன் அணுகினார். ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் மிதுனத்தில் ஜனன கால ராகு மீது சென்றுகொண்டிருந்தது.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Friday, 12 March 2021

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

 


நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன் எதிர்மறையாகவும் செயல்பட்டு வளர்ச்சியை அடையக்கூடியது. சுக்கிரனின் இந்த எதிர்மறைத்தன்மையால் தமிழ்நாட்டு மக்களாகிய நமக்கெல்லாம் பொதுவாகவே ஒரு எதிர்மறை சிந்தனைகொண்டவர்கள்தான். தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயர் மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கேதுவின் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டது. கேது மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம்,  நேர்மையான நீதி நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மருத்துவத்துறையின், ஆன்மீகத்துறையின், ஜோதிடத்துறையின் எழுச்சி ஆகியவை கேதுவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டதை தெளிவாக உணர்த்துகிறது. எனவே கேதுவின் ஆதிக்க காலமான இன்றைய நிலையில் இனி திரைத்துறையோடு தொடர்புடையவர்கள் தமிழகத்தை ஆள நினைத்துப்பார்க்கவே இயலாது. இதை எதிர்வரும் தேர்தலில் திரைத்துறை வேட்பாளர்கள் அடையும் தோல்வியிலிருந்து உணரலாம். சுக்கிரன் பாவிகள் தொடர்பு, சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் ஒருவர் நேர் வழியில் செயல்பட்டு அடைய முடியாத தனது விருப்பங்களை லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் சென்று நிறைவேற்றிக்கொள்வதை குறிக்கும். அப்படி பாவிகள் தொடர்பு பெற்ற சுக்கிரனின் செயல்பாட்டிற்கு ஒருவரது ஜாதகத்தில் உள்ள வக்கிரம் பெற்ற கிரகங்களும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் உதவுகின்றன. இக்கருத்தை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவதே இன்றைய பதிவு.


 

ஜாதகர் 1962 ல் பிறந்த ஒரு ஆண். இவர் அரசுத்துறையில் பணிபுரிந்து கடந்த 2020 பிற்பகுதியில் பணி ஓய்வு பெற்றவர். ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமானாலும் அவர் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாய் நீசமாகிவிட்டதால் ஜாதகர் நேர் வழியில் முயன்று தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலாது. சந்திரன் பரிவர்தனைக்குப்பிறகு ராகுவோடு தொடர்பாவதாலும் இவர் மனம் ராகுவின் குறுக்கு வழி சிந்தனையை நாடும். நேர் வழி முயர்ச்சிகளை ராகு தடை செய்வார். குறுக்கு வழியை ராகு தடை செய்ய மாட்டார். லக்னாதிபதி நீசமாகி ராகுவோடு இணைந்து நிற்பதால் குறுக்கு வழிக்கு ஜாதகர் முயல்வார் ஜீவன காரகன் சனியும் மூன்றாமிடத்தில் அமைந்திருப்பது சிறப்பே. ஜீவன விஷயங்களில் கேதுவின் நேர்மைத்தன்மை வேண்டும் என்பதை இது குறித்தாலும் ராகு-கேதுக்களோடு தொடர்பான சனியை நீச செவ்வாய் பார்ப்பதால் ஜாதகருக்கு நேர் சிந்தனையை விட குறுக்கு சிந்தனைகளே அதிகம் வெற்றி தரும். 1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு லாப ஸ்தானத்தில் இணைத்துள்ளது. இதனால் ஜாதகர் அரசுத்துறையில் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் மற்றும் வரி வசூல் சார்ந்த துறைகளில் ஜாதகர் பணி புரிந்தார். 1௦ ஆமதிபதி சூரியனானதால் அரசுத்துறையிலும் சூரியன் புதனோடு இணைந்ததால் திட்டமிடல் துறையிலும் ஜீவன காரகர் சனி ராகு கேதுக்களோடு தொடர்பானதால் வரி வசூல் துறையிலும் ஜாதகர் பணி புரிந்தார்.   1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு இணைந்துள்ளது  ஜாதகரின் பணியில் நேர்மையான நண்பர்களை விட குறுக்கு வழி ஆசாமிகள் அதிகம் உடன் வருவர் என்பதை உணர்த்துகிறது.  

லக்னாதிபதி நீசமானதால் ஜாதகர் ஆளுமைத்தன்மை இல்லாதவராக செயல்பட்டார். நீச செவ்வாய் பாதக ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்பானதால் ஜாதகரிடம் பொதுவாகவே ஒரு பயந்த சுபாவம் உண்டு. இவரால் தனது துறையில் தவறு செய்யும் பணியாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ஜாதகரின் இந்தத்தன்மையால் ஜாதகருக்கு பணி ஆண்டுகள் அடிப்படையில் தன் துறை சார்ந்த வகையில் முதன்மை இடத்திற்கு முன்னேற தகுதி இருந்தும்  இவரை முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல அரசு நிர்வாகம் தயங்கியது என்றே சொல்லலாம். ஜோதிடத்தில்  உத்தியோக உயர்வை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். ஒன்பதாம்  பாவமே ஜாதகருக்கு பாதக ஸ்தானமாகவும் அமைந்துவிட்டதால் உத்தியோக உயர்வில் ஜாதகருக்கு பாதகம் ஏற்படும் என்பதை இவரது லக்னமே குறிப்பிடுகிறது. ஜாதகருக்கு வேலை பாவமான 6 ஆம் பாவம் மேஷத்தில் சந்திரன் லக்னத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-3 ல் நிற்கிறார். இதனால் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் ஏற்பட்ட தொடர்பால்  சந்திரனின் திசையில் 6 க்கு லாபத்தில் நிற்கும் குருவின் விசாகம்-4 ல் விருட்சிகத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் ஜாதகருக்கு அரசுப்பணி கிடைத்தது. ஜாதகருக்கு கடந்த 2019 பிற்பகுதி வரை குரு திசையில் கேது புக்தி நடந்தது. குரு வேலை பாவமான 6 க்கு லாபத்தில் நிற்கும் அதே சமயம் அது 6 ன் பாதக ஸ்தானம் என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் குரு திசை ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு குரு திசையில் கேது புக்தி 2020 பிற்பகுதி வரை நடக்கிறது. கேது உத்தியோக உயர்வை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சந்திரனின் திருவோணம்-1 ல் அதே திருவோணம்-1 ல் உள்ள சனியுடன் இணைந்து இருந்தாலும் 9 ஆமிடம் பாதக ஸ்தானமாக வருவதாலும் உத்தியோக உயர்வுகளில் தடையும் மறுப்பும் ஜாதகருக்கு ஏற்பட்டது. கேது புக்தியை அடுத்து வரும் சுக்கிர புக்தி வருமான பாவமான 2 ன் விரையமான லக்னத்தில் இருப்பதால் சுக்கிர புக்தியில் ஜாதகர் பணி ஓய்வு பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 ல் உள்ள ராகுவும் உத்தியோக உயர்வில் தடைகளையே கொடுத்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஆனால் ராகு முன் சொன்னபடி முறையான வழியில் செயல்படுவதை தடை செய்வார். முறையற்ற வழிகளில்  செயல்பட தடை செய்ய மாட்டார். இதனால் உத்தியோக உயர்வை முறையாக பெற இயலாது என்பதை புரிந்துகொண்ட ஜாதகர் உத்தியோக உயர்வுக்காக லஞ்சம் கொடுத்து பணி உயர்வு பெற்றார். பணி ஏற்ற சில மாதங்களில் குரு திசையில் சுக்கிர புக்தி வந்ததும் பணி ஓய்வும் பெற்றார்.

இந்த ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டதை கிரகங்கள் சுட்டிக்காட்டினாலும் அவர் குறுக்கு வழியில் சென்று பணி உயர்வு பெறவும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் இதர வக்கிர கிரகங்களான புதனும் குருவும் இணைந்து செயல்பட்டுள்ளன. புதன் லஞ்சப்பணத்தை மேலிடத்தில் கொண்டுசேர்க்கும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் லஞ்சத்தின் காரக கிரகமாகும். இவைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் ஜாதகர் குறுக்கு வழியில் உத்தியோக உயர்வு பெற்றார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 15 December 2020

ஊமையை பேச வைத்த குரு சனி சேர்க்கை!

 


சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஊமையான சிவாஜிகணேசன் அன்னை சரஸ்வதி அருளால் திடீரென பேசத்துவங்கி அற்புதமான பாடல் ஒன்றையும் பாடுவார். நிஜத்தில் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் தெய்வ சக்தி மூலம் இது சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட அதிசய நிகழ்வொன்றை ஜோதிட ரீதியாக இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன். முடிவுகள் ஆச்சரியமானவை என்றாலும் ஊமைகள் பேசவும் கிரகங்கள் சம்மதிக்க வேண்டும். இப்பதிவில் நாம் ஆராயவிருக்கும் ஜாதகி 1981 ல் பிறந்தவர். பிறவி ஊமை. ஆனால் தனது 14 ஆம் வயதிற்குப்பிறகு பேச்சு வந்தது. தற்போது சிறந்ததொரு குடும்பத்தலைவியாக திகழும் இவரா சிறுவயதில் ஊமையாக இருந்தார்? என நம்ப முடியாதவராக காட்சியளிக்கிறார். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.


ஜோதிடத்தில் பேச்சுக்கு உரிய காரக கிரகம் சந்திரன். பேச்சுத்திறமைக்கு உரிய காரக கிரகம் வாக்கு காரகன் என அறியப்படும் புதன். கால புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் ரிஷபம் பாவ கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது நல்ல நாவன்மைக்கு அவசியம். சந்திரன் மட்டுமல்ல சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். மேலும் சந்திரன் நீசமடையும் விருட்சிக ராசி, கடகத்தில் உச்சமடையும் குருவின் மீன ராசி ஆகிய மூன்று நீர் ராசிகளும் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருப்பது ஒருவரின் பேச்சு பாதிக்கப்படாமல் இருக்க உதவும். அதனால்தான் மூன்று நீர் ராசிகளும் ஜோதிடத்தில் ஊமை ராசிகள் என அழைக்கப்படுகின்றன. புதனும் சுக்கிரனும் அடுத்ததாக ஜாதகத்தில் சிறப்பாக அமையப்பெற்றிருப்பது நாவன்மைக்கு சிறப்பு. காரணம் சுக்கிரன் காலப்புருஷனுக்கு வாக்கு ஸ்தானாதிபதி என்பதோடு அவர் சுரப்பிகளுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் சிந்தனையில் எழும் எண்ணங்கள் பேச்சு வடிவம் பெற எண்ணச்சமிக்கைகள் காலபுருஷனின் குரல்வளையை குறிக்கும் மிதுனத்திற்கு தடையின்றி செல்ல ரிஷப ராசியும் சுரப்பிகாரகன் சுக்கிரனும் உதவ வேண்டும். நாவன்மைக்கு உரிய புதனும் மிதுன ராசியும் அதன் பகை கிரகமான செவ்வாயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.  

மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் நின்று தன் வீட்டில் நீசம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதி சந்திரனை பார்க்கிறார். ரிஷப ராசி பாதிக்கப்பட்டாலும் செவ்வாய் ராசி அதிபதி ஆவதால் சந்திரனுக்கு நீச பங்கம் கொடுத்தாக வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரனும் சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு காரகன் புதன், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்கிரமாகியுள்ளார். மிதுன ராசிக்கு பாவகர்த்தாரி யோகம் உள்ளது. மிதுன ராசியை பாதகாதிபதி குருவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். வாக்கு ஸ்தானாதிபதியும் பேச்சு காரகனுமான நீசம் பெற்ற சந்திரனை சனி மூன்றாம் பார்வையாகவும், செவ்வாய் 7 ஆம் பார்வையாகவும் பார்கின்றனர். சனி செவ்வாய் பார்வை பெற்ற பாவங்களும் அதில் இருக்கும் கிரகங்களும் பாதிப்படைய வேண்டும். சுக்கிரனும் புதனும் அஸ்தங்கமடையாவிட்டலும் சுக்கிரனனும் புதனைப்போலவே ராகுவின் திருவாதிரை சாரம் பெற்று பாதிக்கப்பட்டுள்ளார். லக்னாதிபதியும் வாக்கு காரகனுமான புதன் வக்கிரமாகியுள்ளார். அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் திருவோணம்-1 ல் நின்று சந்திரனை முதலில் தொடவிருக்கும் கேதுவும் சந்திரனின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளார்.  

இவை யாவும் ஜாதகிக்கு பேசும் திறன் பாதிக்கப்படும் என்பதை குறிக்கின்றன. இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள செவ்வாயால் ராசி வலுவடைகிறது. செவ்வாய் சந்திரனை நீசபங்கப்படுத்துவதோடு ராசிக்கு 2 ஆம் இடத்தையும் தனது 8 ஆம் பார்வையால் பார்ப்பதை கவனிக்க வேண்டும். மேலும் சந்திரன் பாதகாதிபதி குருவின் விசாகம்-4 ல் நின்று நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். சனியும் குருவும் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். ராசியாதிபதி செவ்வாய், ராசியின் யோகாதிபதியும் லக்னாதிபதி புதனின் நண்பருமான சூரியனின் சிம்ம ராசியை தனது நான்காம் பார்வையாக பார்க்கும் சூழலில் சூரியனும் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் அமைந்துள்ளார். இதனால் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் ஒரு இணைந்து செயல்படும் தன்மை ஏற்படும்.

ஜாதகி பிறந்தது முதல் 2 வயதுவரை பாதகாதிபதி குருவின் திசையில் பேசவில்லை. அதன்பிறகு 1983 முதல் 2002 வரை சனி திசை. லக்னத்திற்கு 8 & 9 ஆம் அதிபதியாக சனி வருகிறார். சனிக்கும், சூரியனுக்கும் அஷ்டமாதித்ய தோஷமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாதகாதிபதி தொடர்பால் தோசமுண்டு. 19 வருட சனி திசையின் முதல் ஒன்பதரை வருடங்கள் முடிந்து இரண்டாவது பகுதி 1995  ல் வந்தது. அப்போது சனி திசையின் சந்திர புக்தியில் ஜாதகி இருந்தார். சந்திரன் செவ்வாயால் நீசபங்கப்படுதப்பட்டுள்ளார். சந்திரன் தந்து புக்தியில் 6 ஆமிட பலனையும் 11 ஆமிட பலனையும் வழங்க வேண்டும். சந்திர புக்தியில் இரண்டாம் பகுதியான லாப ஸ்தான பலனை சந்திரன் வழங்கத்துவங்கிய காலம். ஜாதகிக்கு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரிரு வார்த்தைகள் பேசத்துவங்கினார். சந்திரனை நீச பங்கப்படுத்திய செவ்வாய் புக்தி துவங்கிய பிறகு ஜாதகி எல்லோரையும் போல சாதாரணமாக பேச ஆரம்பித்தார். அப்போதைய கோட்சார நிலை (1997 துவக்கம்) கீழே.

ஒரு நல்ல திசா-புக்திகள் வரும்போது சர்ப்ப கிரகங்கள் ஜாதகருக்கு இருக்கும் பிரச்னையை கோட்சாரத்தில் அவை தொடர்புகொள்ளும் பாவங்கள் மற்றும் கிரகங்களின் மூலம் தீர்த்து வைக்கும். அதே போன்று ஒரு மோசமான திசா – புக்தி காலங்களில் அவை வரும் ராசியை சார்ந்து அதிலுள்ள கிரகங்களை சார்ந்து இல்லாத பிரச்னையை ஜாதகருக்கு உருவாக்கி  விட்டுச்செல்லும். ஜனன காலத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துவிட்ட ராகு அந்த பாவ பலனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது கோட்சார ராகு ராசிக்கு லாபத்தில் ஜனன சனி-குரு மீது வந்து நிற்கிறது. பாதகாதிபதி குருவை கட்டுப்படுத்தும் கோட்சார ராகு, திசா நாதன் சனியின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார். ராகு-கேதுக்கள் மருத்துவ ஜோதிடத்தில் மிகச்சிறந்த பலன்களை வழங்குபவை என்பது யாவரும் அறிந்ததே. லக்னத்திற்கு சுகஸ்தானத்தில் மருத்துவ கிரகம் புதனின் மூலத்திரிகோண வீட்டில் வந்தமரும் ராகு, திசா நாதன் சனிக்கு புதனின் மருத்துவ குணத்தையும் தனது நுட்பத்தையும் சேர்த்து வழங்கி தற்போது செயல்பட வைப்பார். கோட்சாரத்தில் குரு நீசமாகி சனியோடு பரிவர்த்தனை பெறுகிறது. இதனால் குருவும் சனியும் சம கிரகங்களானாலும் சனியின் தயவில்தான் பரிவர்த்தனையால் குரு நீச பங்கம் அடையவேண்டும். எனவே குரு தனது பாதகாதிபத்தியத்தை இழப்பார். ஜனன சனி, குருவிற்கு திரிகோணத்தில் அமர்ந்த கேது கோட்சாரத்திலும் இவ்விரு கிரகங்களோடு தொடர்புகொள்வதை கவனிக்கவேண்டும். இதனால் இவை கேதுவின் மருத்திவ நுட்பத்தை கோட்சாரத்தில் பெறுகின்றன. 

அதே சமயம் கோட்சாரத்தில் பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் கேதுவின் பிடியில் சிக்குவதால் குரு தனது பாதகாதிபத்திய தோஷத்தை இழபார். சனியும் குருவும் கோட்சாரத்தில் கடக ராசியை பார்வை செய்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குரு ஜனன காலத்தில் கேது நின்ற சந்திரனின் அதே திருவோண நட்சத்திரத்தில் கோட்சாரத்தில் சென்ற போது ஜாதகி முழுமையாக பேசத்துவங்கினார். ஜாதகி சனி திசையின் செவ்வாய் புக்தியில் பரிபூரணமாக பேசத்துவங்கினார். ஜனன காலத்தில் சனி,குருவிற்கு திரிகோணத்தில் செவ்வாய் நின்றதால் புக்தினாதனின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சனி திசை சந்திர புக்தியில் ஜாதகி பேச முயற்சித்தார் என்றால் செவ்வாய் புக்தியில் தெளிவாக தங்குதடையின்றி பேசத்துவங்கினார். இதற்கு ஜனன காலத்தில் சேர்க்கை பெற்ற வருட கிரகங்களான சனியும் குருவும் காரணம். திசா புக்தி கிரகங்கள் இவ்விரு கிரகங்களோடு தொடர்பானது மிக முக்கிய காரணம். இவ்விரு கிரகங்களுக்கும் தங்களது மருத்துவ குணத்தை அதிசய மாற்றத்தை கோட்சாரத்தில் வழங்கிய ராகுவும் கேதுவும் மிக மிக முக்கிய காரணம். ராகு-கேதுக்களின் ஒப்புதலின்றி ஒருவர் கடும் சோதனைகளை சந்திக்கவும் முடியாது. அதிலிருந்து விடுபடவும் முடியாது. ஜனன  காலத்தில் லக்னத்தை நோக்கி நகரும் ராகு ஜாதகியின் வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கோட்சாரத்தில் ஜாதகியின் பிரச்னையை சீராக்கினார் என்றால் அது மிகையல்ல.

பேசா ஊமை ஒருவர் திடீரேன பேசம் அதிசயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. அதற்கும்  ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டு.

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Friday, 16 October 2020

கடவுளைத்தேடி!

 


வாழ்க்கை தன்னகத்தே பல்வேறு புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் போக்கில் சென்று அந்தப்புதிர்களை விடுவிக்க முயல்பவர்கள் சிலர். வாழ்வின் புதிர்களுக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் பெரும்பாலோனோர். அப்படி வாழ்வின் புதிர்களுக்கு விடைகாண முயன்ற ஒரு இளைஞன் தன்னால் ஈர்க்கப்பட்ட குரு தனக்கு வழிகாட்டுவார் என எண்ணுகிறான். அவர் மூலம் படைத்தவனை உணர அவனால் முடிந்ததா? அவனது ஞானத்தேடல்களுக்கு விடை கிடைத்ததா? அல்லது வாழ்வில் புதிர்களுக்குள் அவன் சிக்கிக்கொண்டுவிட்டானா? என இப்பதிவில் ஆராய்வோம்.

ஜாதகர் 1976 ல் பிறந்தவர். மேஷ லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ஞானகாரகன் கேது, மோட்ச ஸ்தானாதிபதி (12 ஆமதிபதி) குருவுடன் இணைந்துள்ளது. இவரது பிறப்பின் நோக்கத்தை, ஞானத்தேடல்களில் ஜாதகர் ஈடுபடுவார் என்பதை குறிப்பிடுகிறது. மனோ காரகன் சந்திரன் மறை பொருளை குறிக்கும் 8 ஆமிடத்தில் நீசமாகி, சந்திரனுக்கு 1௦ல், சந்திரனுக்கு திக்பலம் தரும் வகையில் அமைந்த செவ்வாயால் நீச பங்கமும் ஆகியுள்ளது. இதனால் இவரது மனம் மறைப்பொருள் சார்ந்த வகையில் சிந்திக்கும் என்பது புலனாகிறது. தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் மற்றொரு மறைபொருள் சார்ந்த மோட்ச காரகன் ராகு நிற்பதால் இவரது தொடர்புகள் ஞானம், மோட்சம், இறைவழி சார்ந்ததாகவே அமையும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ள கேது,குருவிற்கு திரிகோணத்தில் சூரியனின் வீட்டில் அமைந்து கேதுவோடு சேர்ந்த குருவின் பார்வையை பெறுவதால் ஒரு உயர்ந்த இடத்தில் (மடத்தில்)  ஞானத்தை தேடும் குருவின் தொடர்பு ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை .குறிப்பிடுகிறது. ராசியிலும் நவாம்சத்திலும் 7 ஆமிடம் பாவிகளால் கெட்டு, குருவின் பார்வையை பெறுகிறது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்வு சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஜாதகர் 1௦ ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க விருப்பமின்றி ஞானத்தேடலில் சனி திசையில் லக்னத்தில் நின்ற குருவின் புக்தியில் வீட்டை விட்டு கிளம்பி தன்னை ஈர்த்த குருவின் ஆசிரமத்தை அடைந்தார். குருவை தரிசித்த ஜாதகர். அங்கேயே தங்கிவிட எண்ணினார். ஆசிரமத்தில் தங்கி பயிற்சி பெற ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அதற்காக ஜாதகர் ஆசிரமம் இருந்த ஊரில் ஒரு குதிரை லாயத்தில் ஓரிரு வருடங்கள் சனி திசை முடியும் வரை வேலை பார்த்தார். ஜாதகரின் விருப்படியான விஷயங்களை ராசியைக்கொண்டே அளவிட வேண்டும். ஜாதகரின் கர்மவழி விஷயங்களை லக்னத்தை கொண்டு அளவிட வேண்டும். இந்த அடிப்படையில் ஜாதகரின் விருப்பத்தை குறிக்கும் ராசிக்கு 5 ஆமதிபதி குரு 6 ல் அமைந்து சனி பார்வை பெற்றதால் ஜாதகர் தனது விருப்பம் நிறைவேற வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை செய்து கிடைத்த பணத்தில் ஜாதகர் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக பயிற்சி பெற்றார். ஜாதகருக்கு புதன் திசை துவங்கி சுய புக்தி முடியும் வரை அது நீடித்தது.

ஜாதகரின் குரு  காமத்தை நுகர்ந்து கடந்து பிறகு ஆன்மீகப்பாதைக்கு திரும்புமாறு போதித்தார். ஏனெனில் காமம் கொண்ட மனம் எப்போதும் தெளிவடையாது. எனவே காமத்தை எதிர்கொண்டு அதை கடந்து வருமாறு தன்னை பின்பற்றுபவர்களுக்கு கூறினார். இதனால் ஜாதகர், தன்னைப்போன்று ஆஸ்ரமத்திற்கு வந்த சக ஆசிரம வாசிகளுடன் காமத்தை நுகர்ந்தார். சுகஸ்தானாதிபதியான சந்திரன் உடலுறவை குறிக்கும் 8 ஆமிடத்தில்  சுகஸ்தானத்தில் அமைந்த சனியின் அனுஷம்-1 ல் அமைந்துள்ளது. சனி திருட்டு, குறை, முறையற்ற விஷயங்களுக்கும், சந்திரன் முறையற்ற உறவிற்கும் காரக கிரகங்களாகும். புதன் காமத்திரிகோணமான மிதுனத்தில் நண்பர்கள் சூரியனோடும் சுக்கிரனோடும் அஸ்தங்கமடையாமால் சிறப்பாக அமைந்துள்ளது. புதன் தனது திசையில் ஜாதகரின் மனம் காமத்தின்பால் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் என்றால் அது மிகையல்ல.சிந்தனை ஸ்தானமான 5 ஆமதிபதி சூரியன், திசாநாதன் புதனோடு இணைந்ததால் ஜாதகரின் மனம் காமத்தில் திளைத்தது.

ஜாதகரின் காம ஸ்தானமான 7 ஆமிடத்தில் ராகு நிற்கிறார். இதனால் 7 ஆமிட தொடர்புகள் வளரும். ஜாதகர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலம் ஒன்றில், ஒரு மகனோடு உள்ள விதவை ஒருவருடன் திருமணமாகாமால் இணைந்து வாழ்கிறார். ராகு விதவையையும் குரு ராகுவை பார்ப்பதால் அவர் குழந்தை உள்ளவராகவும் இருந்தார். 7 ஆமிட ராகு 7 ஆமதிபதி சுக்கிரன் போலவே செயல்படுவார். புகன் திசையில் குருவின் சாரம் புனர்பூஷம்-3 ல் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் அந்த தொடர்பு அமைந்தது. சுக்கிரன் அஸ்தங்கமாகியுள்ளது குறையுள்ள அதாவது விதவையான பெண்மணி என்பதையும், குரு சாரத்தில் அமைந்ததால் அவர் குழந்தையுடனும் இருந்தார் என்பதையும் தெரிவிக்கிறது. குரு திசையில் ஜாதகருக்கு ஏற்பட்ட ஞானத்தேடலை புதன் திசை தனது தன்மையோடு இணைந்து ஜாதகருக்கு புகட்டினார். எனினும் ஞானத்தேடலை ஜாதகர் கைவிடவில்லை. காரணம், புதன் ராசிக்கு 8 ஆமதிபதி. அதே சமயம் புதன் காம திரிகோணாதிபதியாகி காதல் ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்ததால் ஞான அனுபவத்திலும், தன் மீது காதல்கொண்டு தன்னை நாடிவந்த பெண்களால் காம அனுபவத்திலும் ஒன்றுபட்ட சூழல்களால் ஜாதகர் திக்குமுக்காடினார். சில காலங்களுக்குப்பிறகு மீண்டும் பழைய ஆசிரமத்திற்கு திரும்பினார். அதன்பிறகு ஆசிரமத்தில் தவிர்க்க முடியாத முதன்மை நபர்களில் ஒருவரானார். ராஜ கிரகமானா சூரியனோடு திசா நாதன் புதன் சேர்ந்ததால் ஜாதகரின் ஞானத்தேடலில் ஒரு உயர்ந்த தன்மை வெளிப்பட்டது. அதே சமயம் காமமும் ஜாதகரை வழிய வந்து அணைத்துக்கொண்டது.

மோட்சத்திரிகோணமான 4 ஆமிட சனியின் பிற்பகுதியில் ஜாதகரின் மனம் ஞானத்தை நோக்கி கடினத்துடன் திரும்பியது என்றால் புதன் திசை அதை காதலுடன் உயர்த்தியிருந்தது. ஒரு வழியாக ஜாதகருக்கு புதன் திசை முடிந்து ஞான காரகன் கேதுவின் திசை 2012 முற்பகுதியில் துவங்கியது. ஞான காரகனானாலும் காமத்திரிகோணத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-2 ல் நின்ற கேது ஞானத்தோடு காமத்தொடர்புகளையும் ஜாதகருக்கு வழங்கியது கேது திசையில் ஜாதகர் ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாக, தியானப்பயிற்சியாளராக உயர்ந்தார். அதே சமயம் கிறிஸ்தவர்களை குறிக்கும் கேது திசையில் அயல் தேச பெண்மணி ஒருவருடன் ஜாதகர் திருமணம் செய்துகொள்ளாமல் ஓரிரு வருடங்கள் இணைந்து வாழ்ந்தார். கேதுவின் திரிகோணத்தில் காதல் பாவமான 5 ல் லக்னாதிபதி செவ்வாய் அமைந்தது அதற்கு காரணம். பிற்பாடு தன்னை மிகவும் நேசித்து, தன்னை திருமணம் செய்துகொண்டு தனது தேசத்திற்கு வந்துவிடுமாறு மன்றாடிய அப்பெண்ணின் வேண்டுகோளை கனத்த இதயத்துடன் நிராகரிக்கிறார். கேது திசையில் குரு புக்தியில் அது நிகழ்ந்தது. குரு ஜாதகரின் பிறப்பின் நோக்கம் என்ன என்று தெளிவுபடுத்தி அந்த தொடர்பை துண்டிக்க வைக்கிறார். ராகு-கேதுக்களின் இணைவில் அவைகளை மீறி செயல்படக்கூடிய ஒரே கிரகமாக திகழ்வது கிரகங்களிலேயே குரு ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேது திசை முடிந்து ஜாதகர் சுக்கிர திசையில்தான் உள்ளார். சுக்கிரன் காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில்தான் உள்ளார். 5 பாகை இடைவெளியில் சுக்கிரனுக்கு அஸ்தங்கம் பெரிதாக பாதிப்பைத்தராது. சுக்கிர திசையிலும் ஜாதகர் ஆன்மீக மற்றும் காம ரீதியான தொடர்பில்தான் தற்போதும் இருப்பார்.

பொத்திப்பொத்தி வளர்த்த சித்தார்த்தனை புத்தனாக்கியதும், செல்வத்தில் திளைத்த பட்டினத்தாரை திருவோடேந்த வைத்ததும் கிரகங்களின் லீலைகளே. கடவுளைதேடிச்சென்ற நமது ஜாதகரை ஞானத்திலும் காமத்திலும் திளைக்கவைத்துக்கொண்டிருப்பதும் அதே கிரகங்களே. நாம் எதை அடைய வேண்டும், யாரை எப்போது தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் கிரகங்களே. இது புரிந்தால் இறை புரியும், இயற்கை புரியும், ஞானம் சித்திக்கும், மனம் அமைதி பெறும். ஜோதிடம் அதற்கு ஒரு வழிகாட்டி. ஜாதகம் அதற்கொரு சாட்சி பூதம்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501.