Showing posts with label சந்திரன். Show all posts
Showing posts with label சந்திரன். Show all posts

Sunday, 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Friday, 30 July 2021

இரவுப்பறவைகள்!

 


அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும்  அறிமுகமற்ற நபர்கள், மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர் இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில் செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை.  இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள் உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே இன்றைய பதிவு.

கீழே 1963 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.

 
மகர லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம். இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு. சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில் பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம் பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம் என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின் காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற  சந்திரனின் காரக  வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன் இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.

மேற்கண்ட ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக் குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும், 12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.


தசாம்சத்தில் புதன் தசாம்ச லக்னத்திற்கு 7 ல் நிற்பது ஜாதகரது ஜீவனத்துறை புதன் சார்ந்த பத்திரிக்கை துறை என்பதை உறுதி செய்கிறது. 1௦ ன் பாவத்பாவமான 7 ஆமதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து 12 ல் மறைவதும் லக்னாதிபதி சனியும் 1௦ ஆமதிபதி செவ்வாயும் புதன் வீட்டில் மிதுனத்தில் இணைவது ஜாதகர் ஈடுபடும் துறையையும் அதில் அவரது உழைப்பின் கடினத்தன்மையையும் குறிப்பிடுகிறது. 

12 ஆம் பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம் பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால் செவ்வாய் திசையில் தனது 25, 26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின் தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு  புதனின் வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது. தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

லக்னத்தில் அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில் நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ  தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும்.  இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25 ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1 ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர புக்தியில் தனது  55 ஆவது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

உண்மையில் ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர் லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.

இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின் வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில் ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது. அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால் அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501  

Tuesday, 22 June 2021

ஆழ்துளைக்கிணறு

 



“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர். அதற்கு முந்தைய மொழி  நீரில்லா ஊரில் வாழ்வு ஏது? என்பதாகும். “நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி. உலக நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரை நாகரீகங்களாகவே தோன்றியதிலிருந்து இச்சொல்லின் முக்கியத்துவத்தை உணரலாம். ஒருவரது வாழ்வை பாழ்படுத்த தண்ணியில்லா  காட்டுக்கு பணி மாறுதல் என்பது இன்றைய நிலை. நீரே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதார சக்தி. நிலத்திற்கு  தாய்போல வளங்களை ஊட்டுவது நீர்தான். நீரில்லா பூமி, உயிர்கள் ஜீவிக்க இயலாத பாலைவனம்தான். அது வெறும் தாதுதான். காட்டை சமன்படுத்தி விளைச்சல்  நிலங்களாக்கும்போது அது மூலமாக உருப்பெறுகிறது. மூலமாக மாறிய பூமியில் நீர் பாயும்போது அது ஜீவனாக உருப்பெற்று உயிர்கள் வாழ வழி ஏற்படுகிறது.


அதனால்தான் நீரை பூமியின் தாய் என்கிறோம். கடக ராசி மாத்ரு (தாய்) பாவம் எனப்படுகிறது. விலை நிலங்களை ஒட்டியே குடிகள் வாழ்விடம் அமையும். அதன் பிறகு குடிகள் வழிபட கோவில்கள் ஏற்படும். ஆனால் இன்றைய நிலையை நினைத்துப்பாருங்கள் நீர் ஆதாரங்களை பெருக்காமல், இருப்பதையும் பாழ்படுத்தி,  ஆக்கிரமித்து சீரழித்துவிட்டு நரக வாழ்வு வாழ்கிறோம். வாழ வழியற்று  புலம்புகிறோம். ஊருக்கு ஊர் இருந்த கண்மாய்களும், நீர்நிலைகளும் பெரிய பண முதலைகளின் பேராசைக்கு பலியாகிவிட்டன. நீருக்கு ஆதாரமாக விளங்கும் மரங்கள்  அரசியல் பின்புலம் கொண்டவர்களால் கடத்தப்படுவது அனைத்து ஆட்சியிலும் நடக்கிறது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் பழமையான மரங்கள் மொட்டையடிக்கப்பட்டு மரங்களுக்குப்பதில் கட்டுமானங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. பூமித்தாயின் மார்பை கிழித்தி எறிந்துவிட்டு பால் இனி இல்லை என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். இந்நிலையில் இருக்கின்ற நீர் ஆதாரங்களை பாதுகாக்க நல்லோர்களும் நீதிமன்றங்களும் போராடுகின்றன. இப்பதிவில் நாம் ஜாதக ரீதியான நீர் யோகத்தையும் பிரசன்ன ரீதியான ஆழ்துளைக்குழாய் கிணறு (Bore well) தொடர்பாகவும்  ஆராயவிருக்கிறோம். 


ஒருவருக்கு நீர் வகையில் பாக்கியம் இருக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சந்திரனும் கடக ராசியும் சிறப்பாக அமைய வேண்டும். லக்னத்திற்கு 4 ஆம் பாவமும் நீர் வளம் பற்றிக்கூறும்.  மேற்கண்ட ஜாதகத்தில் கடக ராசிக்கு இரு புறமும் புதனும் குருவும் அமைத்து சுப கர்த்தாரி யோகத்தை வழங்குகின்றனர். கடக ராசிக்கு பாவிகள் பார்வை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடக ராசி அதிபதி சந்திரன், லக்னத்திற்கு லாபத்தில் நீர்க்கிரகம் என்று ஜோதிடத்தில் அழைக்கப்படும் சுக்கிரனின் சாரத்தில் பரணி-2 ல் நிற்கிறார். சந்திரன் நின்ற வீட்டோ\ன் செவ்வாய், சந்திரன் உச்சமடையும் ரோஹிணி-3 ல் நிற்கிறார். செவ்வாய் நீர் ராசியான தன் வீடு விருட்சிகத்தை தானே பார்க்கிறார். இதனால் விருச்சிகம் சிறப்படைகிறது. ஜாதகத்தில் மீன ராசி மட்டுமே பாவிகளான ராகு, சனியால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு நீர் ராசிகள் கடகமும் விருட்சிகமும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நீர் கிரகமான சுக்கிர திசையில் பிறந்த இந்த ஜாதகர் சந்திரனின் சாரம் ரோஹிணியில் நிற்கும் சூரிய திசை கடந்து, சுக்கிரனின் சாரம் பெற்று லாபத்தில் நிற்கும் சந்திர திசை கடந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் செவ்வாய் திசை கடந்து தற்போது நீர் ராசியான மீனத்தில் நிற்கும் ராகுவின் திசையில் உள்ளார்.. சுக்கிரனும், செவ்வாயும் சூரியனை விட்டு 5 பாகைக்கு மேல் விலகி நிற்பதால் பெரிய அளவில் அஸ்தங்க தோஷம் இல்லை. மீனத்தில் நிற்கும் ராகுவும் குருவின் தன்மையிலேயே செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தில் 4 ஆம்  பாவம், 4 ல் நின்ற கிரகம், 4 ஆமதிபதி, 4 ன் எதிர் பாவமான 1௦ ஆம் பாவத்திலிருந்து 4 ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும் கிரகங்கள் இவைகளை வைத்து கிணற்றின் நீர் வளத்தை அறியலாம். இந்த ஜாதகத்தில் 4 ஆம் பாவம் தெற்கு திசையை குறிக்கும் கன்னி ராசியாகி, அதில் தென்மேற்கு திசையை குறிக்கும் கேது அமைந்து மேற்கு திசையை குறிக்கும் ராகு, சனியால் 1௦ ஆம் பாவத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பால் இந்த ஜாதகரின் நிலத்தில் தென்மேற்கு திசையில் இவரது கிணறு அமைந்துள்ளது.     மேற்கண்ட ஜாதகரின் நிலத்தில் உள்ள கிணற்றில் இதுவரை நீர் வற்றவில்லை. சந்திர திசை வரை நீர்வளம் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. அதனால் நெல் பயிரிட்டுள்ளனர். செவ்வாய் திசையில் நீர்வளம் சற்றே குறைந்தது. அதனால் செவ்வாய் திசையில் நெற்பயிர் பயிரிடாமல் இதர வகை பயிர்களை பயிரிட்டனர். பூமி காரகன் லக்னத்திற்கு 12 ல் மறைந்ததால் செவ்வாய் திசையில் நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு வேலை நிமித்தம் ஜாதகர் சொந்த ஊரைவிட்டு வெளியேறினார். தற்போது ராகு திசையிலும் கிணற்றில் நீர் வற்றிவிடவில்லை. ஓரளவு உள்ளது.

கீழே ஆழ்துளை கிணறு போட்டு போதிய நீர் கிடைக்காமல் அதையே பயன்படுத்தினால் நீர் ஊறுமா? அல்லது புதிய ஆழ்துளைக்கிணறு போட வேண்டி இருக்குமா? என்று கேட்ட அன்பருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம்.


ஜாமக்கோள் பிரசன்னத்தில் ரிஷப வீதிகளான கன்னி, துலாம், மீனம், மேஷம் ஆகியவை நீர் ராசிகள் எனப்படும். மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவை நீரில்லா ராசிகள் எனப்படும். உதயம் நீரற்ற ராசியான தனுசில் அமைந்துள்ளது. உதயத்திற்கு பாதகத்தில் நீரில்லா ராசியான மிதுனத்தில் ஆரூடம் அமைந்துள்ளது. இது ஜாதகர் செய்துவிட்ட செயலின் தன்மையை குறிக்கிறது. உதயத்திற்கு லாபத்தில் நீர் ராசியான துலாத்தில் கவிப்பு அமைந்தது சிறப்பே. எனினும் கவிப்பில், கடக ராசி அதிபதியும் பிரதான நீர் கிரகமுமான சந்திரன் உள்வட்டத்தில் அமைந்து, கவிப்பு உதயத்திற்கு 8 ல் கடகத்தில் நீசம் பெற்று நிற்கும் செவ்வாயின் சாரம் சித்திரை-4 ல் நிற்கிறது.  இவை அனைத்தும் ஜாதகர் துளையிட்ட ஆழ்துளை கிணற்றின் நீர் வளம் சிறப்பில்லை என்பதை   காட்டுகிறது.  குறிப்பாக கவிப்பில் உள்வட்ட சந்திரன் அமைந்தது நீர் வளம் பாதிக்கப்பட்டதை  தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் கவிப்பு உதயத்திற்கு 11 ல் நிற்பதால் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கிறது. உதயத்தில்  நீர்கிரகமான ஜாம சுக்கிரன் அமைந்துள்ளது ஓரளவு சிறப்பு என்றாலும் உதயாதிபதி குரு உள்வட்டத்தில் வக்கிரம் பெற்று மற்றொரு நீரில்லா ராசியான கும்பத்தில் அமைந்துள்ளது பாதிப்பே. உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் நீர் ராசியான கன்னியில் ஜாமச்சந்திரன் சுய சாரமான ஹஸ்தத்தில் அமைந்துள்ளார். இது நீர் பிரசன்னம் என்பதையும் கேள்வியின் தன்மையையும் கூறுகிறது.  கன்னி சந்திரன், நீர் ராசியான மீனத்தில் நிற்கும் ஜாம குருவை நேர் பார்வை செய்கிறார். உதயத்திற்கு 4 ஆமிடமான மீனத்தில், ஜாம குரு, ராகுவோடு இணைந்து வக்கிரம் பெற்று நிற்கும் பாதகாதிபதி புதனின் சாரத்தில் ரேவதி-2 ல் நிற்கிறார். இந்த அமைப்பும் கேள்வியாளருக்கு சிறந்த நீர் யோகத்தை காட்டவில்லை.

தனுசு உதய கதிர்கள் 6. உதயத்தில் நிற்கும் சுக்கிரனின் கதிர்கள் 2௦. எனவே உதயத்திற்கு மொத்தம் 26 கதிர்கள். 26 ன் மூன்று மடங்கு 78 ஆகும்.. 780 அடி ஆழ்துளை போட்டிருக்க வேண்டும். கேள்வியாளர் 785 அடி போட்டதாக கூறினார். உதயத்திற்கு மிதுன ராசி கிரகங்களின் பார்வை கிடைக்கிறது. மிதுன ராசியில் உள்ள இரண்டு சூரியனுக்கும் 5X2 = 1௦ கதிர்கள். மிதுனத்தில் உள்ள சுக்கிர கதிர்கள் 2௦. ஆக மொத்த மிதுன கதிர்கள் 3௦. உதயத்தை துலாத்தில் இருந்து சனி 3 ஆம் பார்வையாக பார்க்கிறது. சனிக்கு கதிர்கள் 4. உச்ச சனிக்கு கதிர்கள் 3 மடங்கு என 12 கதிர்கள் எடுத்துக்கொண்டால் மிதுன கிரக கதிர்கள் 3௦+உச்ச சனி கதிர் 12 என மொத்தம் 42 வருகிறது. எனவே கூடுதல் தேவைக்கு 420  அடி போட்டுக்கொள்ளலாம் என்று பொதுவாக கூறலாம். ஆனால் இந்த பிரசன்னத்தில் மிதுனம் நீரற்ற ராசியாகவும் உதயத்திற்கு பாதகமாகவும் வருவதால் மிதுனத்திற்காக 3௦௦ அடிகள் போடுவது வீண். துலா சனி கவிப்பில் இருந்து உதயத்தை பார்ப்பதால் சனி பார்வைக்கு கதிர்கள் இல்லை. எனவே கூடுதலாக துளையிடுவது பயனற்ற செலவாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. அப்படி எனில் புதிதாக ஒரு ஆழ்துளைக்கிணறு  போடலாமா? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டது. தற்போதைக்கு குறைவாக நீர் வரும் ஆழ்துளைக்கிணற்று நீரையே பயன்படுத்துமாறும், உள்வட்டத்தில் நீரற்ற கும்ப ராசியில் நிற்கும் குரு உதயத்திற்கு 4 ல் நீர் ராசியான மீனத்திற்கு தனது ஆட்சி வீட்டிற்கு வரும் காலம் வரை பொறுத்திருக்குமாறும், அப்போது கடக ராசிக்கும் உள்வட்ட குரு பார்வையும் கிடைக்கவிருப்பதால் நீர் ஊறும். அப்போதும் கேள்வியாளரின் நீர்த்தேவை பூர்த்தியாகவில்லை எனில் மற்றொரு பிரசன்னம் மூலம் புதிதாக ஆழ்துளைக்கிணறு தொடர்பான சாத்தியக்கூறுகளை பார்ப்போம் என்று கூறினேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 28 January 2021

பால் வளத்துறை பலன் தருமா?

 


நமக்கு சம்பாத்தியம் வரும் வழிகளை ஒருவர் தெரிந்துகொண்டு அதில் ஈடுபட்டால் வருமானம் பற்றிய கவலைகள் மறைந்துவிடும். சம்பாத்தியம் சுகமானால் வாழ்வில் பாதிப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சம்பாத்தியத்திற்குரிய சரியான துறையை தேர்ந்தெடுப்பதில்தான் மனித வாழ்வின் பாதி வெற்றியே அடங்கியுள்ளது. பொருளாதாரத்தால் முடங்கிய இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தங்களுக்கான துறையை நாடியே ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் துறைகளை தெரிந்துகொண்டு அந்த திசையில் ஓடுபவர்கள் பொருளாதார ரீதியாக விரைவில் வெற்றிபெறுகிறார்கள். இன்றைய பதிவில் நாம் பால் வளத்துறையில் சம்பாதிக்கும் ஜாதக  அமைப்பு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.

கீழே 1996 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகர் குஜராத் அரசின் பால் வளத்துறையில் பணிபுரிகிறார்.



கடக லக்னம் ஒரு நீர் ராசியாகும். அதில் வருமான ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் நின்று தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தை பார்க்கிறார். வேலைவாய்ப்பு பாவமான 6 ஆமதிபதி குரு நவாம்சத்தில் சூரியன் வீட்டில் நிற்கிறார். இதனால் ஜாதகரின் வேலை அரசு வேலையாகும். ஜீவன காரகன் சனி வேலை பாவமான 6 ஆமிடதிலுள்ள அதன் அதிபதி குருவை 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கிறார். சனி தனது 1௦ ஆம் பார்வையாக 6 ஆமிடத்தையும் 6 ஆம் பாவதிபதியையும் பார்ப்பதால் ஜாதகர் சுயதொழிலைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு என இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லாபாதிபதியுடன் இணைந்து விரையத்தில் நிற்கிறார். செவ்வாய் வியாபர கிரகமான புதனின் வீட்டில் நிற்பதால் ஜாதகர் பாலை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாய் உணவு பாவமான கடக லக்னத்திற்கு விரையத்தில் நிற்பதால் ஜாதகர் சார்ந்துள்ளது உணவை நுகர்ந்து விரையம் செய்யும் துறையாகும். கடகத்தின் யோகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான செவ்வாய் நவாம்சத்தில் லக்னத்தில் உச்சமாகி கடக ராசியை பார்ப்பதால் அந்த வேலை கடகம் குறிக்கும் திரவம் சார்ந்தது என்பது புரிகிறது. இரண்டாம் அதிபதி சூரியனும் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். புதன் வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கும் துறை புதன் குறிப்பிடும் வியாபரத்துறையேயாகும். விரையாதிபதியே வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் விரையம் செய்வதன் மூலமே பொருளீட்டும் துறையாகும். புதன் கேதுவின் மகம்-3 ல் நிற்பதால் ஜாதகர் பால் பதப்படுத்தும் துறையில்  Lab Chemist ஆக பணிபுரிகிறார்.

லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் பூர்வீக பூமியை விட்டு வெகுதொலைவில் சென்று வேலை பார்ப்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. சந்திரன் நீர் ராசியான மீனத்தில் ஜீவன காரகன் சனியோடு அமைந்துள்ளார். நீர் ராசியான மீனம் கால புருஷனுக்கு விரைய ராசியாகும். இதனால் ஜாதகர் குடித்துத்தீர்க்கும் பால் வளத்துறையில் பணிபுரிகிறார். (சனி-மக்கள். சந்திரன்-பால், மீனம்-நுகர்தல், அழித்தல், கேது- Chemist). ராகு கன்னியில் ஹஸ்தம்-3 ல் நிற்கிறார். இது பாலை பதப்படுத்தும் துறையில்  ஜாதகர் ஈடுபடுவதை குறிக்கிறது. (ராகு/கேது-பதப்படுத்துதல்) லாபாதிபதியும் பாதகாதிபதியுமான சுக்கிரன் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் நிற்கிறார். இதனால் பாதகாதிபதி சுக்கிரன் லக்ன யோகாதிபதி செவ்வாய்க்கு கட்டுப்பட்டவராகிறார். சந்திரன் உச்சமாகும் பாதகாதிபதி சுக்கிரன் விரையத்தில் நிற்பதால் பால் உணவால் ஜாதகருக்கு லாபம் வரும். 1௦ ஆமதிபதி செவ்வாயை ஒன்பதாம் அதிபதி குரு பார்க்கிறார். இதனால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஜாதகருக்கு உண்டு.

உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் அமைந்த  கேது 2 ஆம் பாவத்தில் நிற்கும் புதனோடு சாரப்பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் உயர்கல்வியில் ஜாதகர் B.Tech – (Dairy Tech) படித்தார். ஜாதகர் தற்போது புதன் திசை ராகு புக்தியில் உள்ளார். புதன் இரண்டாம் இடத்தில் நிற்பதால் ஜாதகருக்கு புதன் திசையில் 1௦ ஆம் அதிபதி செவ்வாயில் புக்தியில் வேலை கிடைத்தது. அப்போது கோட்சார சனி தனுசுவில் ஜனன கால 6 ஆமதிபதி குருவின்மேல் இருந்தது. கோட்சார குரு துலாத்தில் இருந்து 1௦ ஆம் பாவமான மேஷத்தையும் மிதுனத்தில் நின்ற 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயையும் பார்த்த காலத்தில் வேலை கிடைத்தது. அடுத்தடுத்து திசை நடத்தும் கிரகங்களான புதன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வருமானத்தை தரும். இம்மூன்று கிரகங்களும் ஜாதகர் தொலை தூர இடத்தில் இருப்பதையே குறிப்பிடுகின்றன. 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமர்ந்த சூரிய திசையில் ஜாதகரின் வேலை, வருமானம் தடைபடும். அப்போது ஜாதகர் ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார். சூரியன் லக்னத்தில் நிற்பதால் ஜாதகர் தனது வேலையில் முதன்மையான இடத்தை அடைவார். லக்னாதிபதி சந்திரனும் ஜீவன காரகன் சனியும் உபய ராசியில் அமைந்திருப்பதால் ஜாதகர் வேலையில் பல மாறுதல்களை சந்திப்பார் எனலாம்.

இன்றைய தேவை ஒரு வேலை. கிடைக்கும் வேலையை செய்யும் கூலியாட்களைவிட வாழ்வில் பொருளாதார வகையில் உயர வேண்டுமானால் தகுந்த துறையை ஜோதிடத்தின் வாயிலாக அடையாளம் கண்டு முயல்வது மிகுந்த பயனைத்தரும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துகளுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Wednesday, 20 January 2021

வேகத்தடைகள் விபத்தை தவிர்ப்பதற்கே!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் ஒரு கிரகம் தனது தனித்துவத்தை இழக்காது. உதாரணமாக தாய்மை உணர்வுக்குரிய சந்திரனே வேகத்திற்குரிய முதன்மை கிரகமாகும். கிரகங்களில் விரைவாக ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக்கூடியது. இதற்கு மாறான கிரகம் சனி. ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சம்பவ கால கிரகங்களுடன் சந்திரன் தொடர்பாகும்போது சம்பவங்கள் மிக விரைவாக நடந்துவிடுகின்றன. சனி தொடர்பாகும் சம்பவங்கள் நீண்ட இழுபறிக்குப்பிறகே நடக்கின்றன. செவ்வாய் துடிப்புக்கும் ஆவேசத்திற்கும் உரிய கிரகமாகும். சந்திரன் செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு எளிதில் வாகன விபத்துக்களோ, நீரில் மூழ்கி இறப்பதோ அல்லது இதர வகை துர்மரணங்கள் நடக்க வாய்ப்பு அதிகம். நிதானமற்று யோசிக்காமல் செயல்களில் ஈடுபடும் குணமும் தெரிந்தே தவறு செய்யும் குணமும் சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்ற ஜாதகர்களுக்கு இருக்கும். இந்த கிரக சேர்க்கையில் ராகுவும் இணைந்திருப்பின் இவர்களுது செயல்கள் தறிகெட்ட வகையில் இருக்கும். அப்போது இவர்களது வேகத்திற்கு தடைபோடுவது சனியும் கேதுவுமாகும். ஜோதிடத்தில் நீர் ராசிகளும் சந்திரனும் பேச்சுக்கு காரக கிரகங்களாகின்றன. புதன் நாவன்மையை அதாவது பேச்சின் குணத்தை & சாதுரியத்தை குறிக்கும். இதில் சனியும் கேதுவும் சம்மந்தமுறும்போது பேச்சில் தடையை, நிதானத்தை அல்லது தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தான் நாம் இன்றைய பதிவில் ஆராயவிருக்கிறோம். 

கீழே 2008 ல் பிறந்த ஒரு சிறுவனின் ஜாதகம்.

வாக்கு ஸ்தானமான 2 ஆம் இட அதிபதி குரு வக்கிரமாகியுள்ளார். இரண்டாமிடத்தை நோக்கி ராகு வருகிறார் . இதனால் இச்சிறுவனுக்கு பேசுவதில்  தடை ஏற்படும். குரு வர்கோத்தமம் பெற்றுள்ளது ஒரு நல்ல அமைப்பு. பேச்சுக்கு காரக கிரகமான சந்திரன் தாமததிற்குரிய சனியோடு இணைவு பெற்றுள்ளார். இவை பேச்சில் தடை ஏற்படும் என்பதை குறிக்கிறது. பேச்சின் காரக கிரகமான சந்திரனின் வீட்டில் நீசமான லக்னாதிபதியுடன் செவ்வாயுடன் இணைந்த கேது, பாவ சக்கரத்தில் சந்திரன், சனியோடு இணைந்துள்ளார். சந்திரனின் கடக ராசி பாதிக்கப்பட்டதோடு நவாம்ச லக்னத்திற்கு 2 ல் சந்திரன் நீசமானது ஒரு கடுமையான அமைப்பாகும். ஜனன திசா-புக்தி நாதர்கள் அனுமதியின்றி ஒருவருக்கு பிறவிக்குறைபாடு ஏற்படாது. பூரம்-4 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகனுக்கு சுக்கிரனும் சூரியனும் ஒரே பாகையில் நின்று அஸ்தங்கமடைகிறது. கால புருஷனுக்கு 2 ஆம் இடத்தில் அதன் அதிபதி சுக்கிரன் கடக செவ்வாயின் சாரத்தில் அஸ்தங்கமடைவது, மரபு வழியாக தொடர்ந்து வரும் சுரப்பிவகை குறைபாட்டை குறிக்கிறது.   சூரியனும் சுக்கிரனும் பாதக ஸ்தானத்தில் நீச்சமாகியுள்ள செவ்வாயின் மிருக சீரிஷம்-1 ல் நிற்கின்றன. இதனால் சுக்கிர திசையிலும் சூரிய திசையிலும் செவ்வாயின் வெளிப்பாடு இருக்கும். கடகத்திற்கு பாதகத்தில் சூரியன், சுக்கிரன், புதன் அமைவது சந்திரனின் செயல்பாட்டை பாதிக்கும் அமைப்பே. சுக்கிரன் அஸ்தங்கமானதால் பிறப்பிலேயே பையனுக்கு பேச்சில் திக்குவாய் ஏற்பட்டது. காரணம் சுக்கிரனின் சார நாதன் நீச செவ்வாயே. செவ்வாய் சிறுவனின் பேசும் ஆர்வத்தை வேகமாக தூண்டுகிறது. ஆனால் சுரப்பி காரகன் சுக்கிரன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் மனதின் கட்டளைகள் குரல்வளை போன்ற உறுப்புகளுக்கு தாமதமாகவே செல்கின்றன. செவ்வாயுடன் இணைந்த கேதுவும் செவ்வாயின் தீய செயல்களை அதிகப்படுத்தவே செய்யும்.  

காலபுருஷனுக்கு குரல்வளையை குறிக்கும் மிதுனத்தின் அதிபதி புதன், சந்திரன் சாரத்தில் ரோஹிணி-4 ல் மிதுனதிற்கு 12 ல் மறைந்து வக்கிரமாகிறார் என்பது கவனிக்கத்தக்கது. சுக்கிர திசைக்கு அடுத்து வந்த சூரிய திசையும் செவ்வாயின் சாரத்தையே பெற்றுள்ளது. இதனால் சூரிய திசையிலும் சிறுவனுக்கு திக்குவாய் குறைபாடு தொடர்ந்தது. இங்கு சூரியன் ராசிக்கு திக்பலத்தில் நின்றாலும், அவர் கடகத்தில் அமைந்த நீச செவ்வாய் மிருக சீரிஷம்-1 ல் நிற்பதால் பாதக ஸ்தான செவ்வாயின் பலனையே தந்துள்ளது கவனிக்கத்தக்கது. சூரிய திசைக்கு அடுத்து வந்த சந்திர திசை சிறுவனுக்கு 2017 ல் துவங்கியது. சந்திரன் பேச்சின் காரக கிரகம் என்றாலும் அவர் உடன் அமைந்த சனியின் குணத்தையும் சேர்த்தே செயல்படவேண்டும். வேகத்திற்குரிய செவ்வாய் மனோகாரகன்  வீட்டில் பாதிக்கப்பட்ட நிலையின் அமைந்ததால் சிறுவனுக்கு மனோவேகம் அதிகம். மனத்தின் வேகத்திற்கு தக்கபடி பேச்சு விரைவாக வரவில்லை. இந்நிலையில் சனி தொடர்புபெற்ற சந்திரன், சனியைப்போன்றே நிதானமாக செயல்பட வேண்டும். சந்திரன் சிறுவனின் எண்ண அலைகளை இப்போது நிதானப்படுதுகிறது. மட்டுப்பட்ட மனதின் வேகத்தோடு இப்போது வார்த்தைகள் சரியாக ஒருங்கிணைகின்றன. இதனால் சிறுவனுக்கு பேச்சில் இருந்த திக்குவாய் குறைபாடு நீங்குகிறது.

பொதுவாகவே விரைந்த செயல்பாடுகொண்ட செவ்வாயின் குணத்தை கேதுவின் தொடர்பு அதிகப்படுத்தியதால் சிறுவனுக்கு பேச்சில் பாதிப்பு ஏற்பட்டது. கேதுவும் செவ்வாய் போன்ற செயல்பாடுகொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது சந்திர திசை துவங்கியதும் 2017 ல் ராகு கடகத்திற்கு வருகிறார். கேது செவ்வாய் போன்றவர் என்றால் ராகுவிடம் சனியின் குணம் இருக்கும். மேலும் ஒரு பாதிப்பை ராகு துவக்கினால் கேதுவும், கேது துவக்கினால் ராகுவும் முடித்துவைப்பர்.  இதனடிப்படையில் செவ்வாய் கேது இருவரின் செயல்பாட்டையும் ராகு சரிசெய்கிறார். காரணம் ஜனன காலத்தில் செவ்வாயின் அவிட்டம்-2 ல் ராகு நின்றதே. ஆனால் திசா நாதனின் ஒத்துழைப்பு இன்றி ராகுவால் செயல்படமுடியாது. திசா நாதன் சந்திரன், சுரப்பி காரகன் சுக்கிரனின் பூரம்-4 ல் நின்று சுக்கிரனின் செயல்பாட்டை சரியான பாதைக்கு திருப்புகிறார். சூரியன் சுக்கிரனை  அஸ்தங்கப்படுதினாலும் ராசிநாதன் என்பதாலும், ராசிக்கு திக்பலத்தில் நிற்பதால்   சந்திரனின் செயல்பாட்டை ஆமோதித்து சுக்கிரன் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார். தற்போது சுரப்பி காரகன் சுக்கிரன் இயல்பாக செயல்படுகிறார். தனது சாரத்தின் நின்று தனக்கு கட்டளைடும் திசாநாதன் சந்திரனின் கட்டளையை ஏற்று சுரப்பிகள் நன்கு செயல்பட சுக்கிரன் சம்மதிக்கிறார். கிரகங்களுக்கிடையேயான இந்த ஒருங்கிணைவு சிறுவனை தடைகளற்று பேசவைத்தது. செவ்வாயின் வேகமான எண்ணங்களுக்கு சனி சந்திரன் இணைவு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தி சிறுவனின் பேச்சை சரிசெய்துள்ளது என்றால் அது மிகையல்ல.

இப்போது தலைப்பை மீண்டுமொருமுறை படியுங்கள்.

 

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Wednesday, 13 January 2021

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன?

தனது கர்மா என்ன?

தன்னை எது வழிநடத்துகிறது?


என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய அனைவரிடமும் இக்கேள்வி ஒருநாள் கண்டிப்பாக எழுந்தே தீரும். அதனால்தான் மனிதர் மனம் வயது செல்லச்செல்ல ஆன்மீகத்தின்பால் திரும்புகிறது. ஒருவரது பிறப்பின் சூழலை லக்னமும் லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் வாழும் சூழலை பூர்வ புண்ணியம் எனும் அவரது ஐந்தாம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் ஆன்மா இறுதியாக எதில் நிறைவு பெறும் என்பதையும் அவரது கடந்த பிறவியின் கொடுப்பினைகள் என்ன என்பதையும் 9 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களுமே முடிவு செய்கிறது. அவரின் வாழ்வின் முடிவை 12 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் முடிவு செய்கின்றன. எளிமையாக சொல்வதென்றால் வாழ்வின் துவக்கத்தை லக்னமும், மத்திய காலத்தை 5 ஆம் பாவமும் இறுதிக்காலத்தை 9 ஆம் பாவமும் குறிப்பிடும்.  இவற்றின் ரகசியங்களை தெரிந்துகொண்டால் ஒருவரின் வாழ்க்கைப்பயணம் தவிப்பாக இருக்காது. இப்பதிவில் நாம் ஒரு மனிதனின் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளையும் ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.

ஜாதகர் 1968 ல் பிறந்த ஒரு ஆண். லக்னம் மோட்ச ராசியான கடகத்தில் அமைந்து அதன் அதிபதி சந்திரன் வளர்பிறையான காலத்தில் பிறந்தவர். இதனால் ஜாதகருக்கு இயல்பாகவே ஒரு அறம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும் எனலாம். லக்னம் பூசம்-3 ல் அமைந்துள்ளது. சந்திரன் பூசம்-2 ல் அமைந்துள்ளது. பூச நட்சதிராதிபதி சனி, கால புருஷனின் மூன்றாவது மோட்ச ராசியான மீனத்தில் மோட்ச காரகன் ராகுவுடன்  அமைந்துள்ளார். இவரது சிந்தனை வாழ்வின் பிற்காலத்தில் எதை நோக்கிய நிலையில் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இவரது ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்னத்திற்கு 3 ல் அமைந்து அதன் அதிபதி புதன் மீனத்தில் அமைந்துள்ளார். மீனத்தின் அதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனையாகி நிற்கிறார். இந்நிலையில் கடக லக்னத்தின் யோகாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு திக்பலத்தை தரும் நிலையில் அமைந்து மீனத்தில் உச்சமாகியுள்ள சுக்கிரனின் சாரம் பரணி-1 பெற்றுள்ளார். செவ்வாய் கடகத்தையும் மற்றொரு மோட்ச ராசியாகிய விருட்சிகத்தையும் பார்வை செய்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.  இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மீன ராசியையே தொடர்புகொள்கின்றன. லக்னத்தின் போக ஸ்தானாதிபதி (3 ஆம் அதிபதி) புதனே கால புருஷனுக்கும் போக ஸ்தானமான மிதுனதிற்கும் அதிபதியான நிலையில் அவர்  லக்னத்தின் மோட்ச பாவமான 12 ஆம் அதிபதியுமாகி, அவர் கால புருஷனின் மோட்ச பாவமாகிய மீனத்தில் அமைகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜாதகரின் பிறப்பு விபரங்களை காண்போம். லக்னமும் லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்ததால் ஜாதகர் ஒரு நல்ல ஆன்மீக  நாட்டம் கொண்ட ஒரு உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தார். பிறப்பு திசை சனி திசை என்பதும், சந்திரன் சனி சாரம் பெற்றதும் இதற்கு காரணமாகும். பிறவியிலேயே சனி திசை வந்து சிரமங்களை சிறு வயதிலேயே அனுப்பவிப்பவர்கள் பிற்கால வாழ்வில் தடம் மாறுவது குறைவு. காரணம் சனி கற்றுத்தரும் பாடங்கள் அப்படி. சனி திசைக்குப்பிறகு ஜாதகருக்கு சனியோடு சாரப்பரிவர்த்தனை பெற்ற (புதன் உத்திரட்டாதி-2, சனி ரேவதி-2) புதன் திசை வந்தது. வித்யா ஸ்தானமாகிய 4ஆம் பாவத்தின் அதிபதியாகிய உச்ச சுக்கிரனால் நீச பங்கப்பட்ட புதன் வித்யா காரகன் என்பதால் சிறந்த கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். ஜீவன காரகன்  சனியோடு புதன் தொடர்பாவதால் கல்விக்கேற்ற வேலையையும் கிடைக்கப்பெற்றார். 7 ஆம் அதிபதி சனியோடு தொடர்பானதால் ஜாதகருக்கு திருமணமும் தக்க வயதில் நடந்தது. பாதகாதிபதியான மனைவி வந்ததும் வாழ்வில் வசந்தகளும் கூடவே  பாதகமான சில மாற்றங்களும் வரவேண்டும். ஆனால் இங்கு பாதகங்கள் ஏதும் பெரிய அளவில்  நடக்கவில்லை. மனைவியும் ஜாதகரைப்போலவே நல்ல ஆன்மீக சிந்தனை வாய்க்கப்பெற்றவராகவே இருக்கிறார். காரணம் சுக்கிரனுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்ப்படுவதால் தனது இயல்பான பலன்களை வழங்க முடியவில்லை.

இரண்டாவதாக ஜாதகரின் மத்திய வயது வாழ்வியலை ஆராய்வோம். ஜாதகருக்கு இப்போது பூர்வ புண்ணிய பலன்கள் செயல்படத்துவங்குகின்றன. 31 ஆவது வயதில் ஜாதகருக்கு புதன் திசை முடிந்து கேது திசை துவங்கியது. ஞான காரகன் கேது தனது காரக அடிப்படையிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் கேதுவின் சாரநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானதாலும் பூர்வ புண்ணிய அடிப்படையில் ஜாதகருக்கான பலன்கள் நடந்தன. செவ்வாய் லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்த்ததால் வீடு, வாகன பாக்கியங்களை குறைவின்றி வழங்கினார். 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கினார். ஞான காரகன் கேது தற்போது கட்டுமான காரகன் செவ்வாய்க்கு தனது காரக அடிப்படையில் தான் விரும்பும் “அடியார்க்கு எளியர்” (சிவன்)  கோவில் கட்டும் சிந்தனையை ஏற்படுத்துகிறார். பொதுமக்களிடம் ஜாதகருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் தனது வீட்டின் ஒரு பகுதியையே கோவிலாக மாற்றுகிறார் ஜாதகர். ஞான காரகன் கேது, பிடிவாதகாரகன் செவ்வாய் தொடர்பால் தன் முயற்சியில் ஜாதகர் பின்வாங்கவில்லை. உரிய காலம் வரும் வரை காத்திருக்கிறார். ஜாதகர் 2௦ வருடங்களாக தனது வீட்டில் வழிபாடுகள் செய்து இப்படி காத்துக்கொண்டுள்ளார். தற்போது 52 வயதான நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை முடிய இன்னும் உத்தேசமாக 5 வருடங்கள் உள்ளது. சுக்கிரன் பாதகாதிபதி என்பதோடு கால புருஷனின் குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் அதுவரை ஜாதகருக்கு தடை நீடிக்கும்.

இறுதியாக ஜாதகரின் கடைசி காலங்களிலாவது அவரது விருப்பங்கள் நிறைவேறுமா எனக்காண்போம். சுக்கிர திசைக்கு அடுத்து வரும் சூரிய திசை ஜாதகரின் எண்ணங்களை நிறைவேற்றும். காரணம் சூரியன் குருவோடு பரிவர்தனையாவதுதான். சூரியனுடன் பரிவர்த்தனையாகி மோட்சகாரகன் ராகுவோடு இணையும் கால புருஷனின் மோட்ச ஸ்தானாதிபதி குரு, ஞானகாரகன் கேதுவின் மகம்-1 ல் நிற்கிறார். இப்படி சூரியன், குரு, ராகு-கேதுகளுடன் ஏற்படும் தொடர்பால் ஜாதகர் கோவில் கட்டுவார். குருவிற்கும் கேதுவிற்கும் ஆன்மீக ரீதியாக இயல்பாக உள்ள புரிதலால் சூரிய திசையில் ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறும். அப்போது கோவில் கட்ட ஜாதகருக்கு அரசின்  பின்புலத்தில் இயங்கும் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பு ஒன்றின் மூலம் உதவிகள் கிடைக்கும் என்பது ஜாதக ரீதியாக தெரிகிறது. சூரிய திசையை அடுத்து வரும் சந்திரன் அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெறுவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் ஜாதகரின்  வாழ்வு சந்திர திசையில் இறையோடு கலந்து நிறைவுபெறும். கடகத்தில் பிறந்து விருட்சிகத்தில் பொங்கி பிரவாகமெடுத்த நதி இறுதியாக மீனத்தில் கடலில் கலக்கும் எனலாம். ஜாதகத்தில் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதகரின் நோக்கத்தை தெளிவாகத்தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Tuesday, 15 December 2020

ஊமையை பேச வைத்த குரு சனி சேர்க்கை!

 


சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஊமையான சிவாஜிகணேசன் அன்னை சரஸ்வதி அருளால் திடீரென பேசத்துவங்கி அற்புதமான பாடல் ஒன்றையும் பாடுவார். நிஜத்தில் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் தெய்வ சக்தி மூலம் இது சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட அதிசய நிகழ்வொன்றை ஜோதிட ரீதியாக இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன். முடிவுகள் ஆச்சரியமானவை என்றாலும் ஊமைகள் பேசவும் கிரகங்கள் சம்மதிக்க வேண்டும். இப்பதிவில் நாம் ஆராயவிருக்கும் ஜாதகி 1981 ல் பிறந்தவர். பிறவி ஊமை. ஆனால் தனது 14 ஆம் வயதிற்குப்பிறகு பேச்சு வந்தது. தற்போது சிறந்ததொரு குடும்பத்தலைவியாக திகழும் இவரா சிறுவயதில் ஊமையாக இருந்தார்? என நம்ப முடியாதவராக காட்சியளிக்கிறார். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.


ஜோதிடத்தில் பேச்சுக்கு உரிய காரக கிரகம் சந்திரன். பேச்சுத்திறமைக்கு உரிய காரக கிரகம் வாக்கு காரகன் என அறியப்படும் புதன். கால புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் ரிஷபம் பாவ கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது நல்ல நாவன்மைக்கு அவசியம். சந்திரன் மட்டுமல்ல சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். மேலும் சந்திரன் நீசமடையும் விருட்சிக ராசி, கடகத்தில் உச்சமடையும் குருவின் மீன ராசி ஆகிய மூன்று நீர் ராசிகளும் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருப்பது ஒருவரின் பேச்சு பாதிக்கப்படாமல் இருக்க உதவும். அதனால்தான் மூன்று நீர் ராசிகளும் ஜோதிடத்தில் ஊமை ராசிகள் என அழைக்கப்படுகின்றன. புதனும் சுக்கிரனும் அடுத்ததாக ஜாதகத்தில் சிறப்பாக அமையப்பெற்றிருப்பது நாவன்மைக்கு சிறப்பு. காரணம் சுக்கிரன் காலப்புருஷனுக்கு வாக்கு ஸ்தானாதிபதி என்பதோடு அவர் சுரப்பிகளுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் சிந்தனையில் எழும் எண்ணங்கள் பேச்சு வடிவம் பெற எண்ணச்சமிக்கைகள் காலபுருஷனின் குரல்வளையை குறிக்கும் மிதுனத்திற்கு தடையின்றி செல்ல ரிஷப ராசியும் சுரப்பிகாரகன் சுக்கிரனும் உதவ வேண்டும். நாவன்மைக்கு உரிய புதனும் மிதுன ராசியும் அதன் பகை கிரகமான செவ்வாயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.  

மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் நின்று தன் வீட்டில் நீசம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதி சந்திரனை பார்க்கிறார். ரிஷப ராசி பாதிக்கப்பட்டாலும் செவ்வாய் ராசி அதிபதி ஆவதால் சந்திரனுக்கு நீச பங்கம் கொடுத்தாக வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரனும் சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு காரகன் புதன், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்கிரமாகியுள்ளார். மிதுன ராசிக்கு பாவகர்த்தாரி யோகம் உள்ளது. மிதுன ராசியை பாதகாதிபதி குருவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். வாக்கு ஸ்தானாதிபதியும் பேச்சு காரகனுமான நீசம் பெற்ற சந்திரனை சனி மூன்றாம் பார்வையாகவும், செவ்வாய் 7 ஆம் பார்வையாகவும் பார்கின்றனர். சனி செவ்வாய் பார்வை பெற்ற பாவங்களும் அதில் இருக்கும் கிரகங்களும் பாதிப்படைய வேண்டும். சுக்கிரனும் புதனும் அஸ்தங்கமடையாவிட்டலும் சுக்கிரனனும் புதனைப்போலவே ராகுவின் திருவாதிரை சாரம் பெற்று பாதிக்கப்பட்டுள்ளார். லக்னாதிபதியும் வாக்கு காரகனுமான புதன் வக்கிரமாகியுள்ளார். அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் திருவோணம்-1 ல் நின்று சந்திரனை முதலில் தொடவிருக்கும் கேதுவும் சந்திரனின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளார்.  

இவை யாவும் ஜாதகிக்கு பேசும் திறன் பாதிக்கப்படும் என்பதை குறிக்கின்றன. இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள செவ்வாயால் ராசி வலுவடைகிறது. செவ்வாய் சந்திரனை நீசபங்கப்படுத்துவதோடு ராசிக்கு 2 ஆம் இடத்தையும் தனது 8 ஆம் பார்வையால் பார்ப்பதை கவனிக்க வேண்டும். மேலும் சந்திரன் பாதகாதிபதி குருவின் விசாகம்-4 ல் நின்று நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். சனியும் குருவும் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். ராசியாதிபதி செவ்வாய், ராசியின் யோகாதிபதியும் லக்னாதிபதி புதனின் நண்பருமான சூரியனின் சிம்ம ராசியை தனது நான்காம் பார்வையாக பார்க்கும் சூழலில் சூரியனும் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் அமைந்துள்ளார். இதனால் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் ஒரு இணைந்து செயல்படும் தன்மை ஏற்படும்.

ஜாதகி பிறந்தது முதல் 2 வயதுவரை பாதகாதிபதி குருவின் திசையில் பேசவில்லை. அதன்பிறகு 1983 முதல் 2002 வரை சனி திசை. லக்னத்திற்கு 8 & 9 ஆம் அதிபதியாக சனி வருகிறார். சனிக்கும், சூரியனுக்கும் அஷ்டமாதித்ய தோஷமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாதகாதிபதி தொடர்பால் தோசமுண்டு. 19 வருட சனி திசையின் முதல் ஒன்பதரை வருடங்கள் முடிந்து இரண்டாவது பகுதி 1995  ல் வந்தது. அப்போது சனி திசையின் சந்திர புக்தியில் ஜாதகி இருந்தார். சந்திரன் செவ்வாயால் நீசபங்கப்படுதப்பட்டுள்ளார். சந்திரன் தந்து புக்தியில் 6 ஆமிட பலனையும் 11 ஆமிட பலனையும் வழங்க வேண்டும். சந்திர புக்தியில் இரண்டாம் பகுதியான லாப ஸ்தான பலனை சந்திரன் வழங்கத்துவங்கிய காலம். ஜாதகிக்கு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரிரு வார்த்தைகள் பேசத்துவங்கினார். சந்திரனை நீச பங்கப்படுத்திய செவ்வாய் புக்தி துவங்கிய பிறகு ஜாதகி எல்லோரையும் போல சாதாரணமாக பேச ஆரம்பித்தார். அப்போதைய கோட்சார நிலை (1997 துவக்கம்) கீழே.

ஒரு நல்ல திசா-புக்திகள் வரும்போது சர்ப்ப கிரகங்கள் ஜாதகருக்கு இருக்கும் பிரச்னையை கோட்சாரத்தில் அவை தொடர்புகொள்ளும் பாவங்கள் மற்றும் கிரகங்களின் மூலம் தீர்த்து வைக்கும். அதே போன்று ஒரு மோசமான திசா – புக்தி காலங்களில் அவை வரும் ராசியை சார்ந்து அதிலுள்ள கிரகங்களை சார்ந்து இல்லாத பிரச்னையை ஜாதகருக்கு உருவாக்கி  விட்டுச்செல்லும். ஜனன காலத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துவிட்ட ராகு அந்த பாவ பலனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது கோட்சார ராகு ராசிக்கு லாபத்தில் ஜனன சனி-குரு மீது வந்து நிற்கிறது. பாதகாதிபதி குருவை கட்டுப்படுத்தும் கோட்சார ராகு, திசா நாதன் சனியின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார். ராகு-கேதுக்கள் மருத்துவ ஜோதிடத்தில் மிகச்சிறந்த பலன்களை வழங்குபவை என்பது யாவரும் அறிந்ததே. லக்னத்திற்கு சுகஸ்தானத்தில் மருத்துவ கிரகம் புதனின் மூலத்திரிகோண வீட்டில் வந்தமரும் ராகு, திசா நாதன் சனிக்கு புதனின் மருத்துவ குணத்தையும் தனது நுட்பத்தையும் சேர்த்து வழங்கி தற்போது செயல்பட வைப்பார். கோட்சாரத்தில் குரு நீசமாகி சனியோடு பரிவர்த்தனை பெறுகிறது. இதனால் குருவும் சனியும் சம கிரகங்களானாலும் சனியின் தயவில்தான் பரிவர்த்தனையால் குரு நீச பங்கம் அடையவேண்டும். எனவே குரு தனது பாதகாதிபத்தியத்தை இழப்பார். ஜனன சனி, குருவிற்கு திரிகோணத்தில் அமர்ந்த கேது கோட்சாரத்திலும் இவ்விரு கிரகங்களோடு தொடர்புகொள்வதை கவனிக்கவேண்டும். இதனால் இவை கேதுவின் மருத்திவ நுட்பத்தை கோட்சாரத்தில் பெறுகின்றன. 

அதே சமயம் கோட்சாரத்தில் பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் கேதுவின் பிடியில் சிக்குவதால் குரு தனது பாதகாதிபத்திய தோஷத்தை இழபார். சனியும் குருவும் கோட்சாரத்தில் கடக ராசியை பார்வை செய்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குரு ஜனன காலத்தில் கேது நின்ற சந்திரனின் அதே திருவோண நட்சத்திரத்தில் கோட்சாரத்தில் சென்ற போது ஜாதகி முழுமையாக பேசத்துவங்கினார். ஜாதகி சனி திசையின் செவ்வாய் புக்தியில் பரிபூரணமாக பேசத்துவங்கினார். ஜனன காலத்தில் சனி,குருவிற்கு திரிகோணத்தில் செவ்வாய் நின்றதால் புக்தினாதனின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சனி திசை சந்திர புக்தியில் ஜாதகி பேச முயற்சித்தார் என்றால் செவ்வாய் புக்தியில் தெளிவாக தங்குதடையின்றி பேசத்துவங்கினார். இதற்கு ஜனன காலத்தில் சேர்க்கை பெற்ற வருட கிரகங்களான சனியும் குருவும் காரணம். திசா புக்தி கிரகங்கள் இவ்விரு கிரகங்களோடு தொடர்பானது மிக முக்கிய காரணம். இவ்விரு கிரகங்களுக்கும் தங்களது மருத்துவ குணத்தை அதிசய மாற்றத்தை கோட்சாரத்தில் வழங்கிய ராகுவும் கேதுவும் மிக மிக முக்கிய காரணம். ராகு-கேதுக்களின் ஒப்புதலின்றி ஒருவர் கடும் சோதனைகளை சந்திக்கவும் முடியாது. அதிலிருந்து விடுபடவும் முடியாது. ஜனன  காலத்தில் லக்னத்தை நோக்கி நகரும் ராகு ஜாதகியின் வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கோட்சாரத்தில் ஜாதகியின் பிரச்னையை சீராக்கினார் என்றால் அது மிகையல்ல.

பேசா ஊமை ஒருவர் திடீரேன பேசம் அதிசயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. அதற்கும்  ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டு.

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.