Saturday 29 February 2020

திசா புக்தியும் கோட்சாரமும்.



ஒருவர் தனது வாழ்வில் எவ்விதமான சம்பவங்களை எதிர்கொள்வார் என்பதை அவரது ஜாதகம் தெரிவிக்கும். எப்போது எவ்விதமான சம்பவங்களை எதிர்கொள்வார் என்பதை திசா  புக்திகள் தெரிவிக்கும். இதில் கோட்சாரத்தில் நிகழ்வுகளை நடத்த உரிமை பெற்ற கிரகங்கள் திசா புக்தி கிரகங்களோடு இணைந்து அதில் குறிப்பிட்ட பாவங்களும் தொடர்பாகும்போதுதான் சம்பவங்கள் நடக்கின்றன. திசா புக்தி தொடர்பில்லாமல் குறிப்பிட்ட பாவத்தில் சம்பவங்களை நடத்த உரிமை பெற்ற கிரகங்கள் மட்டும் இணைவதால் சம்பவங்கள் நடக்காது. உதாரணமாக கோட்சார குரு 2 & 7 ஆவது பாவத்தோடு தொடர்புகொள்ளும்போது திருமணம் நடக்கவில்லை எனில் குருவோடு திசா-புக்தி கிரகங்களும் பாவங்களும் தொடர்பற்று இருக்கும் என்பதே உண்மையாக இருக்கும். 


கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

குரு மிதுன லக்னத்தில் திக் பலத்தில் உள்ளார். திக்பல குரு 5,7,9 ஆகிய பாவங்களை பார்ப்பதால் ஜாதகிக்கு கண்டிப்பாக திருமண வாழ்வும் புத்திர பாக்யமும் உண்டு எனலாம். பாவச்சக்கரத்தில் கேது 2 ஆம் பாவத்தில் நிற்கிறது. எனவே 2 ஆம் பாவம் கேதுவின் கட்டுப்பாட்டில் வருகிறது.. ஜாதகிக்கு தற்போது ராகு திசையில் கேது புக்தி நடக்கிறது. ஜாதகிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. தற்போது குழந்தைப்பேற்றை எதிர்நோக்கியுள்ளார். இரண்டாம் பாவ பலன் என்றால் வீட்டிற்கு புது நபர் வந்து இணைவதை குறிக்கும். ஒரு பாவத்தில் நின்று திசா  புக்தி நடத்தும் கிரகம் அந்த பாவக பலனை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் தடைகளை குறிக்கும் கேது 2 ஆம் பாவத்தில் நிற்கையில் 2 ஆம் பாவ பலன் தடைபடும்.  கேது மகம் – 1 ல் சுய சாரம் பெற்று நிற்கிறார்.  கேது குருவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளார். கேதுவிற்கு முன் லக்னத்தில் உள்ள குருவோடு கேது தொடர்புகொண்டாலும் லக்னம் 2 க்கு விரையம் என்ற வகையில் புத்திர பேற்றை தடை செய்யும் அமைப்பாகும். அதே சமயம் புத்திர காரகனை நோக்கி நகரும் கேது புத்திர பாக்கியத்தை தர வேண்டும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளால் கேது குழந்தைப்பேற்றை கொடுப்பாரா? அல்லது தடை செய்வாரா? என்ற குழப்பம் ஜோதிடர்களுக்கு வரும். லக்னத்தில் நிற்கும் குருவிற்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் வக்ர சனியின் பார்வை கிடைக்கிறது. சனி வக்கிரமாகிவிட்டதால் அதன் திக்பலம் அடிபடுகிறது. அதே சமயம் பாதக ஸ்தானத்தில் நின்று புத்திர காரகன் குருவை பார்க்கும் சனி குரு கொடுக்கும் புத்திரப்பேற்றை கண்டிப்பாக தடைசெய்வார். ஏனெனில் இங்கு சனி மந்தன் என்பதையும் மீறி  பாதக ஸ்தானத்தில் நிற்பதால் பாதக வலுவே கூடுதலாக இருக்கும். இங்கு குருவும் பாதகாதிபதி என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. ஆனால் பாதகாதிபதி சுபர்கள் திரிகோணம் ஏறினால் பாதிகாதிபத்திய தோஷம் அடிபடும் என்ற விதி ஒருபுறமிருக்க குரு திக்பலம் பெறுவது அதனினும் முதன்மையானது என்பதால் இங்கு குருவிற்கு பாதகாதிபத்திய தோஷம் கிடையாது. ஆனால் பாதகத்தில் இருந்து பார்க்கும் சனியினால் தடை உண்டு.


இப்போது கேள்விக்கு வருவோம். கேது புக்தியில் புத்திரம் அமையுமா? என்பதே கேள்வி. இப்போது நான் ஜாதகத்தை ஆய்வு செய்த நாளின் கோட்சாரத்தை காண்போம்.

கோட்சார லக்னம் கடகமாக வருவது நாம் ஆராயும் விஷயம் ஜனன ஜாதகத்தில் கடகத்தோடு தொடர்புடையது என்பதை குறிக்கிறது.


ராகு ஜனன ஜாதகத்தின் 2 ஆம் பாவமான கடகத்தை தாண்டி மிதுனத்தில் உள்ளார். ஜனன லக்னப்பாகை 26 ஆகும். தற்போது ராகு கோட்சாரத்தில் ஜனன லக்னப்பாகையை கடந்து 11 ஆம் பாகையில் உள்ளார். எனவே தற்போது கோட்சார  ராகு-கேதுக்கள் ஜனன 2 ஆம் பாவத்தையும் லக்னத்தையும் தாண்டி ஜனன லக்னத்திற்கு 6 - 12 ல் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சர்ப்பக்கிரகங்கள் இப்படி  6-12 ஆக அமைவது ஜாதகரை ஆசீர்வாதிக்கும் அமைப்பாகும். 2 ஆம் பாவத்திற்கு தற்போது ராகு-கேதுக்களால் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்ததாக புக்தி நாதன் கேதுவிற்கு புத்திரத்தை கொடுக்கும் தகுதி உள்ளதா என்பதை கோட்சாரத்தில் கவனிப்போம். கேது தற்போது கோட்சார குருவோடு இணைந்துள்ளதால் குருவின் சக்தியை தனதாக்கிக்கொண்டு செயல்படும். எனவே தற்போது கேது குருவின் தன்மையோடு செயல்பட்டு ஜாதகிக்கு புத்திரப்பேற்றை கொடுக்க தகுதி உள்ளதாகிறது. ஆனால் இங்கு ஜனன ஜாதகத்தில் பாதக ஸ்தானத்தில் அமைந்து குருவின் காரகங்களை பாதிக்கும் அமைப்பில் அமைந்த சனி தற்போது அந்த பாதிக்கும் அமைப்பில் இருந்து விலகிவிட்டாரா என்பதை கவனிக்காமல் பலன் சொல்லிவிடக் கூடாது. தற்போது சனி கோட்சாரத்தில் குரு மற்றும் கேது தொடர்பிலிருந்து விலகி மகரத்திற்கு சென்றுவிட்டது. எனவே சனியால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது விலகிவிட்டது என எடுத்துக்கொள்ளலாம்.


தற்போது கேது தனது புக்தி முடிவிற்குள் இரண்டாமிட பலனான வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்து சேர்க்குமா என்பதை காண்போம். ராகு திசையில் கேது புக்தி தோராயமாக ஒரு வருடம்தான். சரியாகச் சொல்வதானால் கேது புக்தி ஜாதகிக்கு இந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மத்தியில் முடிகிறது. தற்போது பிப்ரவரி. எனவே தற்போது ஜாதகி கருத்தரித்தால்தான் புக்தி முடிவிற்குள் புத்திரம் அமையும். ஜனன மற்றும் கோட்சார குரு வக்கிரமில்லை. எனவே ஜாதகி தானாக புதிரப்பேற்றை தள்ளிப்போட வழியில்லை. தடைகள் விலகிய நிலையில் தற்போது புக்தி நாதன் கேதுவும் 2 ஆம் அதிபதி சந்திரனும் குருவை சேர்ந்துள்ளதாலும் ஜாதகி தற்போது கருவுற்றிருக்க வேண்டும் அல்லது கருவுறும் நிலையில் இருக்க வேண்டும். காரகன் குருவும் 2 ஆம் அதிபதி சந்திரனும் 5 ஆம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் நின்று சுக்கிரன் கோட்சாரத்தில் உச்சமாகியுள்ளதால் ஜாதகி கருவுற்றுள்ளார். அது பெண்குழந்தை என்பது தெரிகிறது.


மேற்கண்ட கர்ப்ப நிச்சயத்தை உறுதி செய்ய ஜாமக்கோள் பிரசன்னத்தை பயன்படுத்தலாம்.

 .
உதயம் குருவின் தனுசு வீடாகிறது. உதயாதிபதி குரு கடகத்தில் உச்சமடைகிறார். இதனால் கேள்வியாளர் பலனடைவார். கவிப்பு லாபத்தில் அமைவது சிறப்பு. உதயாதிபதி கிரகமும் உதயதிலிருக்கும் கிரகமும் ஜாதகரின் நிலையை தெளிவாகச் சொல்லும். உச்ச கிரகமான குருவே தற்போது கேள்வியாக (குழந்தை விஷயமாக)  ஜாதகரை இயக்குகிறது. இங்கு உதயாதிபதி ஜனன ஜாதகத்தில் கேள்வியின் பாவமான கடகத்திலேயே உச்சமாகி அந்த பாதிபதி சந்திரனை பார்ப்பது கேள்வியின் நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.  உதயம் 2 ஆம் பாவமான மகரத்தை  நோக்கி நகருகிறது. மகரத்திற்கு உச்ச ஜாம குருவின் பார்வை உள்ளதால் ஜாதகிக்கு குழந்தைப்பேறு கிட்ட உள்ளது. முக்கியமாக கர்ப்ப நிச்சயத்திற்கு மட்டும் உதயத்தில் பாம்பு இருப்பது சிறப்பான அமைப்பாகும். இது ஜாதகி தற்போதே கற்பமுற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. ஜாதகத்தை ஆய்வு செய்துவிட்டு ஜாதகி தற்போது கற்பமுற்றிருக்க வேண்டும் என அலைபேசியில் கூறினேன். எதிர்முனையில் அன்றே அதை உறுதி செய்து தகவல் தெரிவித்தனர்.

ஜாதகத்தை திசாபுக்தி ரீதியாக அலசும்போது கோட்சார ஜாதகத்தை துணைகொண்டு பலன்கூற தெளிவு கிடைக்கும் என்றாலும் அதை உறுதி செய்ய ஜாமக்கோள் ஆருடத்தையும் பயன்படுத்துவது ஜோதிடர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் நிச்சயம் பெற்றுத்தரும்.

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,


பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Friday 21 February 2020

வைரச் சுரங்கத்தில் சில வானம்பாடிகள்!


இந்து தர்மம் கோலோச்சிய அன்றைய மன்னர்கள்  காலத்தில் மனிதர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வாழ்வியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், மந்திர, தந்திர ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியுள்ளனர். உளவியல் ரீதியாக மதிப்பு வாய்ந்த பொருட்கள் சுபிட்சத்திற்கு அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் அவற்றை வசதி படைத்தோர் தேடி சேகரித்து தங்களிடம் மதிப்பு வாய்ந்த பொருட்கள் இருப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம் தங்களையும் மதிப்புமிக்கவர்களாக மற்றையோர் கருத முடியும் என்று எண்ணினர். சாமான்ய மனிதன் தங்கத்தில் மன நிறைவை அடைகிறான்.  சற்று மேம்பட்ட மனிதன் ரத்தினங்களில் மன  நிறைவை அடைகிறான் என்றால் அதனினும் மேம்பட்டவர்கள் விசித்திர பொருட்களில் தங்கள் மன நிறைவை அடைகிறார்கள். இரத்தின மணிகளில் பெருமிதம்கொள்வோர் இன்று அதிகம். காரணம் நல்ல ரத்தினங்கள் அபூர்வமானவை. இந்த அபூர்வ ரத்தினங்களை தனதாக்கிக்கொண்டு தங்களையும் அபூர்வ பிறவிகளாக கருதிக்கொள்பவர்களுக்காகவே ஒரு பெரிய கூட்டம் சுரங்கங்களில் ரத்தினங்களை தேடிக்கொண்டிருக்கிறது. இப்பதிவில் நாம் காணவிருப்பது இத்தகையோருக்கான ஜாதக நிலையைத்தான்.


நூதனப்பொருள் என்ற வகையில் ரத்தினங்களுக்குரிய காரகன் கிரகங்களாக இருப்பவை ராகுவும் கேதுவுமாகும். ரத்தினத்தொழிலில் கோலோச்ச ராகு-கேதுக்களோடு வியாபரக்கிரகம் புதனும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்களால் லாபங்களை அடைய வேண்டும் என்றால் அதற்கு  செவ்வாயில் கருணை அவசியம் தேவை. ரத்தினங்களில் சூரியன் மாணிக்கத்தையும், சந்திரன் முத்தையும், செவ்வாய் பவழத்தையும், புதன் மரகதத்தையும், குரு புஷ்பராகத்தையும், சுக்கிரன் வைரத்தையும், சனி நீலத்தையும், ராகு கோமேதகத்தையும், கேது வைடூரியத்தையும் ஆளுகிறது. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் கேது அமைந்திருப்பது ஜாதகர் ரத்தினத்தொழிலில் ஈடுபட முக்கிய காரணமாகிறது. லக்னமே புதனின் லக்னமாக அமைந்துள்ளது சிறப்பு. தன ஸ்தானமான 2 ஆவது பாவத்தில் ஆட்சியில் உள்ள சுக்கிரனோடு பூமி காரகன் செவ்வாய் உள்ளார். இதனால் இவர்  பூமியில் இருந்து எடுக்கப்படும் சுக்கிரன் குறிக்கும் வைர விற்பனையில் பிரதிநிதியாக உள்ளார். லக்னாதிபதி புதன் தலைமைப்பண்பை குறிக்கும் 12 ஆமதிபதியுடன் இணைந்து நீர் ராசியில் இருப்பதால்  ஜாதகர் வெளிநாட்டில் இந்திய வைர வியாபார நிறுவனம் ஒன்றின் தலைமை விற்பனைப்பிரதிநிதியாக பணியாற்றுகிறார். சனி சுக்கிரனின் வீட்டில் ரிஷபத்தில் அமைந்து சனிக்கு 2 ல் கேது இருப்பது ஜாதகரின் தொழில் சூழல் ரத்தினவகை என்பதை உறுதி செய்கிறது.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.


லக்னத்திற்கு 2 லிலும் சனிக்கு 2 லும் ரத்திரனங்களுக்குரிய ராகு-கேதுக்கள் நிற்பதால் இவரும் இரத்தினத்தொழிலில் உள்ளார்.  லக்னாதிபதி சூரியன் உச்ச குருவின் விசாகம் -2 ல் நிற்பதால் லக்னாதிபதி நீசபங்கமடைகிறார். ஜீவன காரகன் சனி பகை வீட்டில் அமர்ந்து லக்னாதிபதியை பார்ப்பதால் சில சிரமங்கள் உண்டு எனினும் லக்னாதிபதி உச்சன் சாரம் பெற்று வலுவடைந்ததாலும் ராசியதிபதி ராசிக்கு 7 ல் லக்னத்தில் திக்பலம் பெற்றதாலும் இது ஒருவகையில் யோக ஜாதகமே. புதன் தனது பகை கிரகம் செவ்வாயுடன் இணைந்து பகைவனின்  வீட்டில் விருட்சிகத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் புதன் ஆளுமை செய்யும் மரகத இரத்தின வியாபாரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார். காரணம் ஜாதகத்தில் செவ்வாயைவிட அதிக பாகை சென்று செவ்வாயை வென்று வலுவுடன் புதன் இருந்தாலும் உச்சன் சாரம் பெற்ற சூரியனை புதனைவிட வலுவானதாக கருதவேண்டும். இதனால் சூரியன் குறிக்கும் மாணிக்கக்கற்களே ஜாதகருக்கு நீடித்த வருவாயை தருகிறது. புதனுக்குரிய மரகதகற்கள் வியாபாரம் மாணிக்கக்கற்கள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட அதிகம் என்றாலும் அதில் நீடித்த வருவாய் இல்லை. காரணம் புதனுக்கு விரையத்தில் நீசபங்கம் பெற்று வலுவடைந்த சூரியனின் நிலையே ஆகும்.

மூன்றாவதாக ஒரு ஜாதகம் கீழே.



இந்த ஜாதகருக்கு ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தில் ஜீவன காரகர் சனியுடன் இரத்தின காரக கிரகம் ராகு உள்ளது. இதனால் இந்த ஜாதகரும் இரத்தின தொழிலில் ஈடுபட்டுள்ளார். சிம்ம ராசி தந்தையை குறிக்கும் சூரியனுடைய ராசியாகும். அதில் அமரும் ராகு தந்தையின் தந்தையை (தாத்தாவை) குறிக்கும் கிரகமாகும். ஜாதகரின் தாத்தாவும் பிறகு தந்தையும் செய்த இரத்தின தொழிலையே ஜாதகரும் தொடர்ந்து செய்து வருகிறார். சிம்ம ராசி சூரியனின் ராசி என்பதால் தொழிலில் சக போட்டியாளர்களைவிட தனித்துவமான துணிச்சலான முடிவுகள் எடுத்து ஜாதகர் தனது தொழிலை  நடத்திக்கொண்டிருக்கிறார். மரகதப்பச்சையை குறிக்கும் புதன் 8 ஆவது பாவமான மிதுனத்தில் தன் ஆட்சி வீட்டில் உள்ளார். 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் இருக்கும் சுக்கிரனும் புதனும் தன ஸ்தானமான 2 ஆவது பாவத்தை பார்ப்பதால் குறிப்பாக புதன் ஆட்சி பெற்று பார்ப்பதால் ஜாதகருக்கு தனவரவு புதன் குறிக்கும் மரகதப்பச்சை இரத்தின வகையில் வருகிறது.  

இவரது தாத்தாவும் தந்தையும் இந்தவகை  ரத்தினத்தின வியாபாரதிற்காகவே புகழ்பெற்றதனால் “பச்சைக்கல்” என்பது இவர்களது குடும்பத்திற்கு ஒரு அடைமொழியாகவே இன்றும் தொடர்கிறது.  தன வரவை குறிப்பிடும் 2 ஆவது பாவத்தில் பாதகாதிபதி சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திரன் மூலம்-2 ல் நிற்பதால் நவாம்சத்தில் உச்சமாகிறார். இதனால் பாதகமும் உச்சமாகவே இருக்கும்.  ஜாதகருக்கு கடந்த 1௦ ஆண்டுகளாக நடந்த சந்திர திசையை சமீபத்தில் முடிந்தது. தனுசு ராசிக்கு ஏழரை சனி நடந்துகொண்டிருக்கும்  சூழலில் பாதகாதிபதி திசையில் ஜாதகர் இந்தத் தொழிலில் மிகக்கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார். ஜாதகரின் முயற்சிகள் சிறப்பென்றாலும் தனஸ்தானத்தில் நின்ற வலுவான  பாதகாதிபதி திசை இவரது முயற்சிகளை பலனடைய விடாமல் தடுத்துவிட்டது.

நான்காவதாக மற்றொரு ஜாதகம்.


இந்த ஜாதகம் முந்தைய ஜாதகத்தை ஒத்ததாகவே இருக்கிறது. சந்திர ராசிக்கு 2 ஆமிடத்தில் ரத்தினங்களை குறிப்பிடும் கேது நிற்கிறது. 1௦ ஆவது பாவத்தை புதன் 4 ஆவது பாவத்திலிருந்து பார்க்கிறது. 1௦ ஆவது பாவாதிபதி சூரியன், பூமிகாரகனும் லக்னாதிபதியுமான  செவ்வாயுடனும் உச்ச சுக்கிரனுடனும் இணைந்து 5 ஆவது பாவத்தில் நிற்கிறார். செவ்வாயும் சுக்கிரனும் சூரியனால் அஸ்தங்கமாகியுள்ளன. இதனால் இந்த ஜாதகர் 3 ஆவது ஜாதகத்தை ஒத்த அமைப்பை பெற்றிருந்தாலும் முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கிறார். லக்னாதிபதி அஸ்தங்கமானது இந்த ஜாதகருக்கு தனது முயற்சிகளில் வெற்றியடைய போதிய தகுதி இல்லை என்பதை குறிப்பிடுகிறது.   இந்த ஜாதகத்திலும் பாதகாதிபதி சந்திரன் தன ஸ்தானத்தில் இருந்து திசை நடத்திக்கொண்டிருக்கிறார். சந்திரன் மூலம்-1 ல் அமைந்துள்ளதால் 3 ஆவது ஜாதகத்தை போல நவாம்சத்தில் உச்சமடையாமல் மேஷ நவாம்சத்தில் அமைகிறார். இந்த ஜாதகரும் பாதகாதிபதி சந்திர திசையில் ஏழரை சனியை கடந்துகொண்டிருக்கிறார். ஆனால் 3 ஆவது ஜாதகரை போல கடுமையை அனுபவிக்கவில்லை. காரணம் திசா நாதன் சந்திரன் நவாம்சத்தில் உச்சம்டையவில்லை என்பதே. ராசி கிரகத்தின் செயல்படும் நிலையை நவாம்சம் தெளிவாகக்காட்டும்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Friday 14 February 2020

பயமும் ஜோதிடமும்

துணிந்தவர்களுக்கு துக்கமில்லை என்பது முன்னோர் வாக்கு. துணிந்தவர்கள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அச்சமின்றி செயல்பட்டு எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறிச் செல்வர். அதே சமயம் அவர்கள் இழப்புகளை சந்திக்கவும் தயங்குவதில்லை. பாதிப்புகளை மட்டுமே பார்ப்பவர்கள் வாழ்வில் ஒருநாளும் முன்னேற முடியாது. ஜோதிடத்தில் பயம் என்பது ஒரு தண்டனை என்றுதான் கூற வேண்டும். ஜனன ஜாதகத்தில் சந்திரன் பாதித்தவர்கள்  பயத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.
இத்தகையவர்களுக்குத்தான் 
எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் குறைவு. செவ்வாய் வலுவடைந்தவர்களும் தைரியம், துணிவு, ஆண்மை, வீரியம் ஆகியவற்றிற்குரிய   3 ஆவது பாவம் வலுவடைந்தவர்களும் பொதுவாகவே துணிச்சல் மிகுந்தவர்களாக காணப்படுவர். ஆனால் லக்னாதிபதி மற்றும் சந்திரனின் நிலையைக்கொண்டுதான் ஒருவரின் துணிச்சலை தெளிவாக அறிய முடியும். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் சனி,ராகு-கேது போன்ற பாவிகள் தொடர்பு ஏற்படும் போது இவ்விரு கிரகங்களுக்கும் மிகுந்த பய உணர்ச்சி ஏற்படும். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளூர பயந்துகொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிப்பார். 
இயல்பாகவே தைரியம் மிக்கவை நெருப்பு ராசிகள் எனப்படும் மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை. மேஷம், சிம்மம் தவிர்த்து மற்றோர் நெருப்பு ராசியான தனுசுக்கு அதிபதி குருவிற்கு சனி சமக்கிரகமாக வருவதாலும். கேது குருவின் தன்மையை ஒத்த ஞானியாக வருவதாலும், குரு இவ்விரு கிரகங்களோடும் சூரியன், செவ்வாயைப்போன்று அல்லாமல் அஞ்சாது எதிர்த்துநின்று செயல்படும். ராகுவோடு சேர்ந்தால் மட்டும் தனது நற்குணங்களை ராகுவிடம் இழந்து அதை சமாதானப்படுத்திவிட்டு தான் வழுவிழந்து நிற்கும். அதனால்தான் சனி, ராகு-கேதுக்களோடு இணையும் குரு இவைகளால் ஏற்படும் தோஷங்களை பெருமளவில் குறைத்துவிடுகிறார்.  ராகு செவ்வாயோடு சேர்ந்தவர்களுக்கும் 3 ஆம் பாவத்தில் ராகு-கேதுகள் இருக்கப்பெற்றவர்களுக்கும் அசட்டுத்துணிச்சல் இருக்கும். எந்த இடத்தில் நிதானிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்காது. ராகு-சந்திரன் சேர்க்கை உள்ளவர்களுக்கும் ராகுவுக்கு திரிகோணத்தில் சந்திரன் அமையப்பெற்றவர்களுக்கும், சந்திரனுக்கு அடுத்த பாவத்தில் ராகு இருப்பவர்களுக்கும் வாய்ச்சவடால் அதிகம். இத்தகையவர்களை வாய்ச்சண்டையால் வெல்லவே முடியாது. ஆனால் பயமுறுத்தி இவர்களை பணிய வைக்க முடியும்.    
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் நெருப்பு ராசியும் ராஜ ராசியுமான சிம்மமே ராசியும் லக்னமுமாக அமையப்பெற்றவர். முக்கிய ஒளிக்கிரகமும் மனோ காரகனுமான சந்திரனை நோக்கி நிழல் கிரகமான கேது  வருகிறது. இதனால் ஜாதகரின் மனம் பதட்டமடைகிறது. 2 ஆமிட கேது பொருளாதரத்தை பாதிக்கவில்லை. ஆனால் மனதை பாதிக்கிறார். சந்திரன் உடலையும் உணவையும் குறிப்பவர். அதனால் உடலின் மீதும் உண்ணும் உணவின் மீதும் மிகுந்த கவலை கொள்கிறார். சந்திரனை நோக்கிய நிலையில் கேது உள்ளதால் ஜாதகருக்கு பேய் பற்றிய பயமுண்டு. நல்ல துறையில் நல்ல சம்பாத்தியத்தில் உள்ள ஜாதகருக்கு இரவில் தனியாக வெளியே செல்ல   பயம். கேதுவின் நிழல் சந்திரனின் மீது படிவதால் இந்நிலை ஏற்படுகிறது. 
இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  
மீன லக்ன ஜாதகத்தில் நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் 1 – 7 ல் அமைந்துள்ளன. இதனால் ஜாதகருக்கு நிழல் கிரகங்களின் தாக்கம் அதிகம். உடல், மனோ காரகன் சந்திரன் 8 ல் மறைந்துவிட்டதால் ஜாதகருக்கு இவை இரண்டைப்பற்றியும் பயம் மிகவும் அதிகம். சந்திரனின் வீட்டில் சந்திரனின் பகை கிரகமான சுபாவ பாவி சனி அமைந்துவிட்டதால் பயத்தில் மனம் குழம்பியுள்ளார். சந்திரனும் கடக ராசியும் ஜோதிடத்தில் மார்பை குறிப்பிடும். 1977 ல் பிறந்த ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 1998 ல் ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் திசை துவங்கியது. குரு கடக ராசிக்கு விரையத்தில் கேந்திராதிபத்திய தோஷத்தில் பகை கிரகம் சுக்கிரனுடன் அமைந்துள்ளார். குரு மார்பை ஆளுமை செய்யும் கிரகமாகும்.  மார்பு ராசியான கடக ராசிக்கு விரையத்தில் குரு கடகத்திற்கு பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து கடகத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் நிற்கும் செவ்வாயின் மிருக சீரிஷம் – 4 ல் நிற்கிறார். செவ்வாய் மிருக சீரிஷம் – 2 ல் அமைந்து நவாம்சத்தில் கன்னியில் நிற்கிறார். இந்த அமைப்பால் குரு திசை துவங்கியது முதல் தனக்கு மார்பில் பாதிப்பு இருப்பதாக எண்ணி பதட்டமடைகிறார். 
கடக ராசி அதிபதி சந்திரனுக்கு 8 ல் மாந்தியுடன் இணைந்து நிற்கும் செவ்வாயால் இந்த பதட்டம் அதிகமாகி தனக்கு மாரடைப்பு உள்ளதாக எண்ணிக்கொள்கிறார். இதனால் திருமணத்தை தவிர்த்து வருகிறார். தற்போது ஜாதகர் சனி திசையில் உள்ளார். சனி பாவத்தில் கன்னியில் உச்சமடையும் புதனின் ஆயில்யம்-4 ல் நின்று மீன நவாம்சம் பெற்று கன்னி நவாம்சத்தில் உள்ள செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் ஜாதகருக்கு தனக்கு இருப்பதாக எண்ணும் மார்பு நோய் பற்றிய பயம் மிக மிக அதிகம். மருத்துவர்கள் ஜாதகருக்கு மார்பில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறிவிட்டாலும் ஜாதகர் தனது பயத்தால் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். கால புருஷனுக்கு ரோக ஸ்தானாதிபதியான புதனே களத்திர பாவாதிபதியாகி பாவத்தில் உச்சமடைவதால் நோய் பயத்தால் ஜாதகர் திருமணம் செய்துகொள்ள மாட்டார்.   
மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
துலாம் லக்னத்திற்கு ரோக ஸ்தானமான 6 ஆமிடாதிபதி குரு லக்னத்தில் வக்கிரமடைந்த நிலையில் அமைந்துள்ளார். வக்கிர குருவால் அதன் திக்பலம் பாதிக்கப்படும். 4 ஆம் பாவம் உடலின் கட்டமைப்பை சொல்லும். 4 ஆமிடத்திற்கோ, 4 ஆம் பாவாதிபதிக்கோ குரு தொடர்பு ஏற்படும்போது ஒருவருக்கு உடற்பருமன் ஏற்படும். இந்த ஜாதகத்தில் வக்கிர குருவின் பார்வை நான்காம் அதிபதியான நீச சனியின்மீது படுகிறது. மேலும் குரு வக்கிரமடைந்து 12 ஆமிடம் நோக்கி செல்வதால் 12 ஆமிடத்திற்கும் அரைப்பங்கு குருவின் ஆதிக்கம் ஏற்படும். இதனால் 12 ஆமிட குருவின் அரை பங்கு பார்வை 4 ஆமிடத்திற்கும் ஏற்படுகிறது. இதனால் ஜாதகருக்கு உடல் பருமன் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் லக்ன பாதகத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் தொடர்புடைய திசா-புக்திகள் வந்தால் உடலும், மனம் பாதிக்கப்படும் எனலாம். ஜாதகருக்கு ராசிக்கு பாதகத்தில் லக்ன பாதகாதிபதி சூரியனுடன் இணைந்த செவ்வாய் திசை கடந்த 2018 இறுதிவரை நடந்தது.  செவ்வாய் பாதகாதிபதி சூரியனோடு இணைந்த நிலையில் மேஷத்தில் நீசமடைந்த சனியின் மூன்றாவது பார்வையை பெற்ற நிலையில் சந்திரனை பார்க்கிறது. 
உடற் பருமனுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டவர் ஒரு கட்டத்தில் உடல் மிகவும் மெலிந்துவிட்டதாக சக நண்பர்கள் கூற மிகுந்த மன பாதிப்புக்குள்ளானார். நீச சனி உடல் மெலிவுக்கு ஒரு முக்கிய காரணம்.  ஜாதகர் சிறுநீரகத்துறையில் தலைமை மருத்துவராக இருந்து ஏனையோருக்கு பாடம் நடத்துபவர். எனினும் செவ்வாய் திசையில் பாதகாதிபதி சூரியனின் புக்தியிலும் அடுத்து வந்த சந்திர புக்தியிலும்  மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் வரை சென்று மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரோக ஸ்தானமான 6 க்கு விரையத்தில் 5 ல் நிற்கும் ராகு திசை துவங்கியவுடன் ஜாதகர் தனது பாதிப்பிலிருந்து மீண்டார்.  ரோகம் 6 ஆமிடம். குணம் 5 ஆமிடம்.  

மீண்டும் விரைவில் இதுபோல் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன். 
கைபேசி: 8300124501.

Monday 3 February 2020

குறுக்கு வழியில் அரசு வேலையா?


குறுக்கு வழியில் அரசு வேலை வாய்ப்புகளை அடைந்தவர்களும் அடைய முயற்சித்தவர்களும் இன்று படும் பாடு அனைவரும் அறிந்ததுதான். திறமை உள்ளவன் தனது கல்வியும் திறமையையுமே தனது வாழ்க்கைக்கான முதலீடாக பயன்படுத்துகிறான். திறமை இல்லாதவன்தான் தான் சார்ந்த ஜாதி , மதம், மொழி, இனம் என்று பாகுபாட்டிற்குள் செல்கிறான். இவற்றையும் மீறி இத்தகையோர்தான் தங்கள் இலக்கை அடைய குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார்கள். இதனால் நேர்மையாக தனது கல்வியையும் திறமையையும் தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும் சாமான்யன் விரக்தியடைகிறான். இந்தகைய விஷ வித்துக்கள் மட்டுமல்ல இவர்களின் பின்னணியில் உள்ளோரும் அகற்றப்படவேண்டியவர்கள். இப்படிப்பட்டோரின் குறுக்கு வழி முயற்சிகளை ஜோதிட ரீதியாக அலசுவதே இப்பதிவின் நோக்கம்.


கிரகங்களில் சுக்கிரனே லஞ்சத்திற்கு காரக கிரகமாகிறது. தராசு ராசிக்குரிய சுக்கிரன் நேர்மையை எண்ணினாலும் குரு பார்வையையோ அல்லது நீதிமான் சுபச்சனியின் பார்வையையோ பெறாது பாதிக்கப்பட்ட சனி உள்ளிட்ட பாவ கிரகங்களின் தொடர்பு சுக்கிரனுக்கு ஏற்படும்போதும் தீய ஆதிபத்தியம் பெற்றாலும் சுக்கிரன் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் மன நிலையை ஏற்படுத்துவார்.  எனது கணிப்பின் துலாம் ராசியை தமிழகதிற்கு உரிய ராசியாக நான் மதிப்பிடுகிறேன். சமீபத்தில் தனுசுவில் இருந்து மகரத்திற்கு பெயர்சியான சனியின் 1௦ ஆம் பார்வை தற்போது துலாம் ராசிக்கு  கிடைக்கத் துவங்கியிருக்கிறது. சுக்கிரனின் மற்றொரு ராசியான ரிஷபத்தை கோட்சார ராகு நெருங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் லஞ்சம் கொடுத்து தனது தகுதிக்கு மீறிய விஷயங்களை அடைய கடந்த காலங்களிலும் தற்போதும் முயற்சி செய்தோர்  தண்டனைக்குள்ளாவார்கள். துலாம் ராசியை எப்போது சனி பார்த்தாலும் கோட்சாரத்தில் இந்த நிலை ஏற்படும். தங்களது ஜாதகத்தில் பாதிக்கப்பட சுக்கிரன் அமையப்பெற்றவர்களும், சுக்கிர சனி சேர்க்கை பெற்றவர்களும், ஏமாற்றத்தை குறிக்கும் சனி புதன் சேர்க்கை பெற்றவர்களும் தற்போதைய கோட்சாரத்தினால் தண்டனை பெறுவார்.

புதன் இடைத்தரகரை குறிக்கும் காரக கிரகமாகும். பிறப்பு ஜாதகத்தில் புதன் பாதகாதியாகவோ அல்லது புதன் பாதிக்கப்பட்ட அமைப்பிலோ உள்ளவர்களும் இந்த ஏமாற்றுக்காரர்களின் வழியில் விழுந்து தங்களது பொருளாதாரத்தை இழக்கின்றனர். தன காரகன் குரு தற்போது தனது நீச்ச ராசியான மகரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். அங்கு சென்று சனியோடு குரு இணையும் போது இந்தகைய குறுக்குவழி ஆசாமிகளின் தோலை உரித்து உலகத்திற்கு சனி காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


மீன லக்ன ஜாதகத்தில் வேலையை குறிக்கும் 6 ஆமதிபதி சூரியன் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி-4 ஆம் பாதத்தில் நிற்கிறது. இதனால் ஜாதகருக்கு அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. லக்னாதிபதி குருவிற்கு பகை கிரகமும்  3 மற்றும் 8 க்கு உரியவருமான சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரமான நிலையில் தனது பகை கிரகமான சூரியனோடு இணைந்து லக்ன பாதகாதிபதியும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமுமான புதனின் சாரத்தில் ரேவதி-2 ல் நிற்கிறார்.     நீதிமான் சனி ராசியில் விரையத்தில் பாதகாதிபதி புதனோடு இணைந்து நிற்பதால் ஜாதகர் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதியாகிறது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கை தன ஸ்தானமான மேஷத்திற்கு பாதக ஸ்தானம் என்பது கவனிக்கத்தக்கது. லக்னாதிபதி குரு வக்கிரமாகி பாதிக்கப்பட்ட நிலையின் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். தன காரகன் குரு  வக்கிரமாகி பாதக ஸ்தானம் பெற்றதால் ஜாதகருக்கு பாதகம் லக்னாதிபதி என்பதால் ஜாதகரின் தவறான செயலாலும், தன காரகன் என்பதால் தன வகையிலும் ஏற்படும்.  அரசு வகை ஆதாயங்களை குறிக்கும் 5 ஆம் அதிபதி சந்திரன் உச்சமானாலும் தனது 5 ஆவது பாவத்திற்கு பாதகத்தில் உச்சமாகி கேதுவோடு இணைந்துவிட்டதால் இந்த ஜாதகர் அரசு வகை ஆதாயங்களை அடைய தடை உண்டு. சந்திரன் கார்த்திகை – 3 ல் நின்று, கேது சந்திரனின் ரோகிணி – 4 ல் நிற்பதாலும் தடைகளுக்குரிய கேது லக்னதையும் சூரியனையும் தனது 3 ஆவது பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் ஜாதகர் அரசு வகை பயன்களை அடைய முடியாது. 3 ஆமிடத்தில் மனோ காரகன் சந்திரனோடு தொடர்புடைய கேது ஜாதகருக்கு துணிச்சலை மட்டுமே கொடுக்கும். இடத்தரகர்களோடு புதன் நண்பர்களுக்கும் காரக கிரகமாகிறது. இதனால் ஜாதகர் இடைத்தரகர்களாலும் நண்பர்களாலும் பாதிப்படைவார்.

ஜாதகரும் அவரது நண்பர்கள் ஐவரும் கணிசமான தொகையை இடைத்தரகரிடம் கொடுத்துவிட்டு  அரசு வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். அதுவும் புதனைக்  குறிக்கும் 5 என்ற எண்ணிக்கையில் பெரிய 5 எண் கொண்ட தொகையை ஜாதகரம் நண்பர்களும் கொடுத்துள்ளனர்.  ஜாதகருக்கு ராகு திசை நடக்கிறது. ராகு 9 ஆவது பாவத்தில் பாதகாதிபதி புதனின் கேட்டை – 2 ல் நின்று திசை நடத்துகிறது. ராகு ஜீவன பாவமான 1௦ க்கு விரையத்தில் இருந்து திசை நடத்துவதால் ஜாதகருக்கு ஜீவனம் தொடர்பான வகையில் விரையங்களும், புதனின் சாரத்தில் நிற்பதால் நண்பர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமும்  அவ்விரையம் ஏற்படவேண்டும். ஜாதகர் ராகு திசை சனி புக்தியில் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து  இடைத்தரகரிடம் பணம் கொடுத்துள்ளார்.

பாதகாதிபதியை நன்கு ஆராய்ந்தால் ஒருவருக்கு எந்த வகையில் பாதகம் ஏற்படும் என்பதை தெளிவாக அறியலாம். சனி அடித்தட்டு மக்களையும் நேர்மையையும் குறிக்கும் கிரகமாகும். சாமான்ய மனிதர்கள் நேர்மையாக அடைய வேண்டிய பாக்கியங்களை குறுக்கு வழியில் சென்று அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்களை அபகரிக்க முயல்பவர்களுக்கு சனி கடுமையான விளைவுகளை ஜாதகர்களுக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் தருவார் என பல மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. நான் அப்படி சந்தித்த சில அன்பர்கள் ஜாதகத்தில், சனி அவர்களது இறுதிக்காலத்தில் கடுமையாக செயல்படத்தக்க வகையில் அமைந்திருந்ததையும், அவர்களின் புத்திரர்களின் ஜாதகங்களின் சனி-செவ்வாய் சேர்க்கை இருந்ததையும் காண முடிகிறது. ஒரு அன்பர் அரசுப்பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர். தனது வாழ்க்கைத்துணையை இழந்தவர்.  வசதியாக இருக்கிறார். சர்க்கரை வியாதியில் தவிக்கிறார். ஒரே மகனும் அமெரிக்காவில் சென்று தங்கிவிட்ட நிலையில் தனது சொத்துக்களை யாருக்காக பாதுகாக்கிறோம் எனத்  தெரியாமல் உறவுகளையும் நம்பாமல் தனிமையில் மன உழைச்சலில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார். 

எச்சரிக்கை சனி நேர்மை. நேர்மையானவர்களுக்கு செல்லவேண்டிய பாக்கியங்களை தடுத்து குறுக்கு வழியில் அடைபவர்களை சனி காலம் பார்த்து தண்டிப்பது உறுதி. சனி கொடுக்கும்போதும் சரி, தண்டிக்கும்போதும் சரி யாரும் அதை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501.