Sunday 20 October 2013

மாமா உன் பொண்ணக்கொடு

ஒருவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அவருக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணைவரின் லக்ஷணங்களை தெளிவாகக் கூற முடியும். அதற்கான தெளிவான வழிகாட்டு முறைகள் பண்டைய ஜோதிட நூல்களின் உள்ளன. இப்பதிவில் நாம் அதில் ஒருவகையான சொந்தங்களுக்குள் திருமண உறவு பற்றி ஆராய்வோம்.

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


குடும்ப ஸ்தானத்தில் மாதுல காரகன் (தாய் மாமாவைக் குறிக்கும் கிரகம்) புதன் உச்ச குருவின் நட்சத்திரம் பூரட்டாதியில் அமர்ந்து நீசபங்க ராஜ யோகத்தில் உள்ளார். புதனுடன் லக்னாதிபதியும் விரையாதிபதியுமான சனி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் அமைந்துள்ளனர். குடும்ப காரகனும் குடும்ப பாவாதிபதியுமான குரு தாய்   மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்தில் உச்சத்தில் உள்ளார். மாதுல காரகன் குடும்ப   ஸ்தானத்திலும் குடும்ப காரகன் தாய்மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்திலும் அமர்ந்ததால் இந்த ஜாதகிக்கு மாமன் வகையில்தான் திருமணம் அமையும் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. ஜாதகி அத்தை மகனை மணம் முடித்தவர்.

இது தவிர சூரியன் களத்திர பாவாதிபதியாகி குடும்ப பாவத்தில் அமர்ந்ததால் கணவர் அரசுத் துறையோடு தொடர்புடையவர். மேலும் சூரியன் புள்ளிவிவரம், விஷய, ஆவணத் தொகுப்பு போன்றவற்றைக் குறிப்பிடும் புதனுடன் இணைந்து தனகாரகனின் (குரு) வீட்டில் அமர்ந்ததால் கணவர் பணத்தோடு தொடர்புடைய விஷயத் தொகுப்பு தொடர்பான பணி புரியலாம் என அனுமானிக்கலாம். கணவர் கூட்டுறவு வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

தன, போதனை காரகன் குருவின் வீடு 2 வது பாவமாகி அதில் அரசுத் துறையைக் குறிப்பிடும் சூரியனானவர் வித்யாகாரகன் புதனுடன் அமர்ந்ததால் ஜாதகிக்கு கல்வித்துறையில் அரசுப்பணி அமையும் என அனுமானிக்கலாம். அதுவே உண்மையும் கூட. நான் மிகச்சரியாகவே இதைக்  குறிப்பிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சனி 2 வது பாவத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதபடலாம் என்பது ஜோதிட விதி. நடந்ததும் அப்படியே..

பின்வரும் இரண்டாவது ஜாதகத்தைக் கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்.
தாய் மாமனைக் குறிக்கும்  6 ஆம் பாவ அதிபதி சந்திரன் மாதுலகாரகன் புதனின் சாரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார். உச்சன் புதனின் சாரம் பெற்றதால் சந்திரன் நீச பங்க ராஜஜோகத்தில் உள்ளார். அது மட்டுமல்ல குடும்ப காரனும் குடும்ப பாவாதிபதியுமான குருவுடன் சந்திரன் இணைந்து உள்ளதால் மாமன் வகையில்தான் குடும்பம் அமையவேண்டும். இந்த ஜாதகியும் அத்தை மகனை மணம் முடித்தவர்தான்.

புதனும் சனியும் உச்சம். சந்திரன் உச்ச புதனின் சாரம் பெற்றதோடு குருவும் உச்சனான சனியின் சாரம் (அனுஷம்) பெற்றது சிறப்பு. சூரியன் வித்யாகாரனான உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து 2 வது பாவத்தைப் பார்ப்பதால் இவருக்கும் ஆசிரியர் பணி அரசுத்துறையில் அமையும் என்பது உறுதி. ஜாதகியின் உடல் எண் 1 ஆகவும் உயிர் எண் 5 ஆகவும் அமைந்தது ஜாதகிக்கு அமையவிருக்கும் அரசு ஆசிரியைப் பணியில் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறுவார் என்பதைக் குறிப்பிடுகிறது. உச்சம் பெற்ற சனியும் புத- ஆதித்ய யோகமும் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. புத-ஆதித்ய யோகம் மற்ற பாவங்களைவிட 1,4,8 பாவங்களில்தான் மிகச் சிறப்பான பலனை அளிக்கும் என்பது அனுபவ உண்மை.

முதல் மற்றும் இரண்டாம் ஜாதகத்திற்கு உள்ள ஒற்றுமை, இரண்டுமே கும்ப லக்னம் என்பதோடு புதனும் குருவும் 2,6 ஆம் பாவ சம்பந்தம் பெற்றதால் இரு ஜாதகியரும் அத்தை மகனைத் திருமணம் புரிந்துள்ளனர் என்பதோடு இருவருக்கும் அரசு ஆசிரியர் பணி அமைப்பு உள்ளது கவனிக்கத்தக்கது. முதலாம் ஜாதகிக்கு அரசு ஆசிரியர் பணி அமைந்துவிட்டது. இரண்டாமவருக்கு அமையும் வாய்ப்பு உறுதியாக உள்ளது.

பின்வரும் சற்று மாறுபட்ட மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள். இவரும் பெண்தான்.

லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானதிபதியுமான குரு, தாய் மாமனைக் குறிக்கும் 6 வது பாவத்தில் உள்ளார். குடும்ப காரனுமாக லக்னாதிபதி திகழ்வதால் குடும்பம் தாய் மாமன் வகையில் அமையும் என்பதை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. மாத்ரு (தாய்) ஸ்தானாதிபதி 6 வது பாவத்தில் அமர்ந்தால் தாய்மாமன்தான் கணவன் என்பதை அனுமானிக்கலாம். இது மட்டுமல்ல குரு நின்ற 6 வது பாவத்திற்கு 6 ல் மாதுல காரகன் புதன் நிற்பது இதனை உறுதிப்படுத்துகிறது.

குரு, புதன் மற்றும் செவ்வாய் மூன்றும் வக்ரகதியில் இருப்பதும், விருட்சிக-தனுசு ராசி சந்தியில் சனி நின்று களத்திர பாவத்தை பார்ப்பதும், நான் ஜாதகிக்கு தாய்மாமன் மணமகனாக வருவார் என்பதை கணக்கிடத் தவறினேன் என்பதை இவ்விடம் ஒப்புக் கொள்ள வேண்டும். மாதுல காரகன் புதன் பஞ்சமாதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்றது, ஜாதகிக்கு தாய்மாமனின் மேல் ஈர்ப்பு உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. சனி களத்திர பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத் துணைவர் வயது வித்தியாசமானவராக அமைவார் என்பதைக் குறிக்கிறது.

அடுத்த பதிவில் சந்திப்போம். 

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.

Thursday 17 October 2013

ஐப்பசியில் அற்புதங்களை நிகழ்த்தும் சூரியன்

ஐப்பசி மாதம் வானியல் சுற்று விதிகளின் படி சூரியனின் கதிர்வீச்சு பூமிக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் சூரியனைவிட்டு வெகு தொலைவில் பூமி தனது நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்.

சூரியனானவர்  தந்தை, உடல் வலு, அரசு விவகாரங்கள், அதிகார வர்க்கம், தமக்கு வேலையளித்துள்ள முதலாளி,முன்னேற்றத் துடிப்பு, முயற்சி வெற்றி போன்றவற்றிற்கு காரணமானவர். ஜனன ஜாதகத்தில் சூரியனின் பலத்தைப் பொறுத்து மேற்குறிப்பிட்டவற்றிலும் சூரியனின் ஆதிபத்திய வகையிலும் சாதக பாதக பலன்களை அளிப்பார்.

சூரியன் இயல்பில், ஜோதிட விதிகளின்படி பாதி சுபக்கிரகம் பாதி அசுபக்கிரகமாவார். மேலும் தனது சுபாவப்படி சூரியன் சந்நியாசக் கிரகமாவார். அதனால் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடைய பாவங்களான 2,4,7,8,12 ஆகியவற்றோடு தொடர்புகொள்ளும்போது குடும்ப வாழ்வில் சிக்கல்களைத் தருவார். எனினும் சில ஜோதிடர்கள் பயமுறுத்துவது போல் சூரியன் விவாகரத்துக்கு ஆதிபத்தியம் பெற்றவறல்ல

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.

குடும்பகாரகனும் 1,4க்கு உரியருமான குருவானவர் 7,10 பாவங்களுக்கு அதிபதியான புதனுடன் இணைந்து லக்னத்திற்கு  மூன்றில் மறைந்துள்ளார். மேலும் 6,11 பாவங்களுக்கு அதிபதியும் லக்னாதிபதிக்கு பகையானவருமான வக்ரகதியிலுள்ள சுக்கிரனுடன், பாக்யாதிபதியும் லக்னாதிபதிக்கு நண்பருமான சூரியன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்துள்ளார். களத்திர பாவம் சனி, கேது போன்ற பாவிகளால் கெட்டுள்ளது. இந்த ஜாதகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஜாதகரின் குடும்ப வாழ்வு சிக்கலை சந்திக்கும் என்பதுபோல் தோன்றும். குடும்ப, களத்திர பாவங்கள் கெட்டு சூரியன் 2ல் அமைத்தால் குடும்பம் கெடும் என்பது ஓரளவிற்கே உண்மை. காரணம் சூரியன் லக்னாதிபதிக்கு நண்பன் என்பது மட்டுமின்றி அவர் பாக்யாதிபதி என்பதால் ஜாதகருக்கு இல்லறத்தில் அதிக ஈடுபாடில்லாத சாதாரண இயல்பைக் கொடுத்ததோடு தனது கடுமையை குறைத்துக் கொண்டார்.மேலும் குரு உப ஜெய ஸ்தானத்தில் (3 ல்) அமைந்துள்ளார். புதன் குருவுடன் அதே உப ஜெய ஸ்தானத்தில் அமைந்து வக்ர சனியுடன் பரிவர்த்தனையில் உள்ளார். மேலும் இரு கேந்த்ராதிபதிகள் (குரு, புதன்) இணைந்து உப ஜெய ஸ்தானத்தில் அமைந்தது நன்மையையே தரும்.

களத்திர பாவாதிபதி பரிவர்த்தனையில் அமைந்து தனது பாவத்திற்கு 9 ல் நின்றது நன்மையை அளிக்கும் அமைப்பு. களத்திர பாவத்தில் அமைந்த சனி பரிவர்த்தனை பெற்று குரு பார்வையும் பெற்றதால் ஜாதகருக்கு களத்திர வகையில் அதிக சிரமங்களை தர முடியாதவராகிறார். லக்னத்தோடு ராகு – கேதுக்கள் தொடர்பு கொண்டதன் பலனாவது ஜாதகர் தேசாந்திரம் செல்வார் என்பதாகும். ஜாதகர் தமது தொழில் நிமித்தம் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு தேசங்களுக்கும் சென்று வருபவர்.

பின்வரும் ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கவனியுங்கள்.
லக்னம் மற்றும் குடும்ப பாவாதிபதி சனி வக்ரமாகி சனியின் பரம சத்ருவும் லக்னத்திற்கு பாதகாதியுமான வக்ர கதியிலிருக்கும் செவ்வாயுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். குடும்ப காரகன் குருவும் வக்ரமாகி மாந்தியுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். சந்திரன் 6 ஆம் அதிபதி புதனின் ஆயில்ய நக்ஷத்திரத்தில் அமர்ந்துவிட்டதால் கணவனே எதிரியானான். இந்த நிலையில் சூரியன் அஷ்டமாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்ததால் தயவு தாட்சன்யமின்றி குடும்ப பிரிவினையை விவாகரத்து மூலம் ஏற்படுத்திவிட்டார். 6, 9 ஆம் பாவங்கள் கெட்டு அதன் அதிபதி புதனுடன் சுக்ரன் சேர்ந்து 7 ஆம் பாவத்தை பார்த்ததால் சுக்கிரனால் திருமணத்தை மட்டுமே நடத்தி வைக்க முடிந்தது. திருமண உறவு நீடிக்க வைக்க இயலவில்லை.
  
கீழுள்ள மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்மணி.

இரண்டாம் பாவாதிபதி புதன் வக்ரமாகி கேந்திர பாவியான சூரியனுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து புத ஆதித்ய யோகத்தில் உள்ளார். சூரியன் கேந்திர பாவியானதால் இந்த லக்னத்திற்கு சுபத்தை செய்ய வேண்டியவராகிறார். சுக்கிரன் மூன்றில் அமர்ந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டதால் தாமத திருமணத்திற்கு வகை செய்தார். குடும்ப காரகன் குருவும் தர்ம கர்மாதிபதி சனியும் நல்ல நிலையில் உள்ளார்கள். சூரியன்  தனது இஷ்ட நண்பன் புதனை அஸ்தமனப்படுத்திவிட்டாலும் சிறிது தாமதத்துடன் திருமணத்தை சிறப்புற நடத்த வழிவிட்டார். அதுவும் எப்படி?. தான் ஒளி குறைந்து, கடுமை குறையும்  மாதமான ஐப்பசியில் திருமணத்தை நடத்திட வழிவிட்டார்.

மருத்துவ கிரகமான புதனுடன் ஆரோக்யத்திற்கு அதிபதியான சூரியன் இணைந்து வருமான ஸ்தானமான 2 ஆம் பாவத்தில் அமர்ந்ததால் ஜாதகியை மருத்துவத்துறையோடு தொடர்புபடுத்தினார்.  ஜாதகி ஒரு சிறந்த நர்ஸ் எனப் பெயரெடுத்தவர் ஆவார். இரண்டாவது பாவத்தில் சூரியன் அமர்ந்ததால் ஆண் வாரிசற்ற தனது வயோதிகப் பெற்றோரைப் பிரிய மனமின்றி தனக்கமைந்த முதலாவது திருமண முயற்சியில் அழைப்பிதழ்களை கிழித்தெறிந்து திருமணத்தை நிறுத்தினார். பிறகு நல்லோர் சிலரது முயற்சியில் மணமுடித்து பெற்றோர்களையும் கண்ணுற கவனித்துவரும் புண்ணியவதி இவர்.

முடிவாக இங்கு குறிப்பிடுவது எண்ணற்ற ஜாதகங்களை ஆராயந்தவகையில் என்னைப் பொருத்தவரை சூரியன் ஒருவரது ஜாதகத்தில் 2வது மற்றும் 7வது பாவங்களும் அவற்றின் பாவாதிபதிகளோடு முக்கியமாக சுக்கிரனும் குருவும் கெட்டிருந்தால் மட்டுமே விவாகரத்துக்கு துணை புரிகிறார்.சூரியனே திருமணத்தை நடத்திவைக்கும் கிரகமாக வந்து அவர் குடும்ப, களத்திர பாவங்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அவர் சாந்த சொரூபமாக விளங்கும் ஐப்பசி மாதம் திருமணத்தை நடத்திவைப்பதை பல ஜாதகங்களை ஆராயும்போது உணரமுடிகிறது.

இந்த ஐப்பசியில் துலாம் ராசியில் பிரவேசிக்கும் சூரியனால் நற்பலன்களை அடைய துலா ஸ்நானம் காவிரிக்கரையில் செய்வோம்.

மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்
பழனியப்பன்.