Sunday 13 December 2015

வீடு பாக்கியம்....

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் அத்தியாவசிய தேவைகளாகின்றன.

உணவுத்தேவைக்கே அல்லல்படும் இன்றைய உலகில் வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு என்றுதான் கூறவேண்டும். சிலருக்கு அது மறுக்கப்பட்டிருக்கும் சிலருக்கு அளவுக்கு அதிகமாகவும் அது வழங்கப்பட்டிருக்கும். மறுக்கப்பட்ட பாக்கியங்களை ஒருவர் அடைய முயன்றால் அது ஒருவரது விதிக்கும் ஆசைக்குமான TUG OF WAR தான். பூர்வ பாராசரியம் போன்ற பண்டைய ஜோதிட நூல்கள்  ஜாதகப்படி ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும்  பாக்கியங்களை தெளிவாக விளக்குகின்றன.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
09.10.1972 – 7.10 PM, காக்கிநாடா.




வீடு பாக்கியத்திற்கு ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய கிரகங்கள் பூமிகாரகன் செவ்வாய் மற்றும் வீடு காரகன் சுக்கிரன் ஆகியோர். இவற்றோடு வீடு பாக்கியத்தை குறிக்கும் நான்காம் பாவம், அதன் பாவாதிபதி மற்றும் இக்கிரகங்களை பார்க்கும் ஏனைய கிரகங்களையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் கேது அமர்ந்துவிட்டார். கேது செவ்வாயைப்போன்று பலன் தருபவர் என்பதால் வீடுபாக்கியத்திற்கு கேது தடைசெய்யமாட்டார். மேலும் சுகஸ்தானமான சதுர்த்த கேந்திரத்தில் (நான்காமிடம்) அசுப கிரகமான கேது அமர்வது  ஆரோக்கியத்தில் வேண்டுமானால் சில பாதிப்புகளை தரலாம் ஆனால் கேது வீடுபாக்கியம் அமைய தடைசெயயமாட்டார். ஆனால் நான்காம் அதிபதி சந்திரன் ஆறாம் அதிபதி புதனுடன் இணைந்து 7ல் நின்றதுதான் தோஷம். பூமிகாரகன் செவ்வாய் 6 ஆம் பாவத்தில் பகைவீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனுடன் இணைந்து மறைந்துவிட்டார். “கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்” என்பது ஜோதிடப்பழமொழி. சுக்கிரனுக்கு இருபுறமும் பாவிகள் நின்றதால் கடும் பாவ கர்தாரி யோகத்தில் வீடுகாரகன் சுக்கிரன்.

நான்காம் பாவத்தை லக்ன பாதகாதிபதி சனி வக்கிரகதியில் ரிஷபத்தில் நின்று 3 ஆம் பார்வையாக பார்ப்பது இந்த ஜாதகத்தில் வீடு பாக்கியத்திற்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய கடுமையான தோஷம் ஆகும். இதன் பொருள் சனி அல்லது சனி பார்வை பெறும் கிரகங்களின் திசா-புக்திகளில் பாதிப்பு நான்காம் பாவத்திற்கு ஏற்ப்படும் என்பதே ஆகும்.

லக்னரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை ராசியைக்கொண்டு ஒப்புநோக்கினால், ராசிக்கு 4 ஆம் பாவாதிபதி சனி 8 ல் மறைந்துவிட்டார். அதோடு ராசினாதனும் வீடுகாரகனுமான சுக்கிரன் தனது பாவத்திற்கு பாதகஸ்தானத்தில் (11 ல்) நின்றுவிட்டார்.  ராசிக்கு பாதகாதிபதி சூரியனுடன் 12 ல் பூமிகாரகன் செவ்வாய் மறைந்துவிட்டார்.

இவை அனைத்தும் ஜாதகருக்கு வீடு பாக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகங்களை தெளிவாக உணர்த்துகின்றன.

ஜாதகருக்கு 2009 துவக்கத்திலிருந்து ஆறாம் அதிபதியான புதனின் திசை நடப்பில் உள்ளது. புதனின் வீட்டில் செவ்வாய் நின்றதாலும் புதன் 4 ஆம் அதிபதியுடன் இணைவு பெற்றதாலும் புதன் திசையில் ஜாதகர் பல்மாடி அடுக்குவீடு (APARTMENT) கட்டினார். (லக்னாதிபதி கிரகம் சூரியன் போன்ற ராஜ கிரகத்துடன் இணைந்தால் உயர்வாகத்தான் சிந்திப்பார்.)



16.09.2011அன்று ஆறாம் அதிபதி புதன் திசையில் லக்ன பாதகாதிபதி சனி பார்வை பெற்ற 4 ஆம் இடத்தில் சந்திரனின் வீட்டில் நின்ற கேதுவின் புக்தியில் சந்திரன் அந்தரத்தில் ஜாதகரின் வீடு இடிந்து விழுந்தது. பொதுவாக ராகு-கேதுக்கள் தாங்கள் நின்ற பாவாதிபதியின் செயலை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. சனி பார்வையால் கேது கெட்டுவிட்டதால் கேது நின்ற பாவாதிபதி சந்திரனும் பாதிப்பைத்தான் தரவேண்டும்.

அன்றைய கிரக நிலைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

திசா புக்திகள் பாதிப்பை எப்படி வழங்கின என்பதை அறிந்தாலும் கோட்சாரத்தில் இதனை உறுதி செய்துகொள்ளவேண்டும்.  கோட்சாரத்தில் பூமிகாரகன் செவ்வாயும் வீடுகாரகன் சுக்கிரனனும் நீசமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. ஜனன ஜாதகத்தில் 4 ஆம் பாவத்தை பார்வை செய்யும் சனி கோட்சாரத்தில் நீச சுக்கிரனுடன் இணைந்து வீடு பாதிப்படைய தனது பணியை துல்லியமாகச் செய்துள்ளது கவனிக்கத்தக்கது. லக்னாதிபதியும் ராசியதிபதியும் நீசமானதுடன் ஜாதகரை தாங்கிப்பிடிக்க வேண்டிய பாக்யாதிபதி குரு நின்ற பாவாதிபதி செவ்வாய் நீசமானதால் வலுவிழந்துவிட்டார் மேலும் வக்ரமும் அடைந்து மிக பலகீனமாகிவிட்டார். பூர்வ புண்யாதிபதி சூரியன் ஆட்சியில் இருந்தாலும்  ஆறாமதிபதியும் திசா நாதனுமான புதனுடன் இணைவு பெற்றதாலும் பாவகர்த்தாரி யோகம் பெற்றதாலும் கெட்டுவிட்டார்.

எனவே ஒரு அசாதரணமான செயலை செய்யத் துவங்குமுன் அது தொடர்புடைய கிரகங்களின் வலு ஜாதகத்தில் எவ்விதம் உள்ளது என்பதை அறிந்துகொண்டால் பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.

மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.

Sunday 22 November 2015

ஆறாம் பாவம்.

பளிங்கு போன்றதொரு நேர் சாலை.அதில் குழிகளும் மேடுகளும் கூட இல்லை.  அது ஒருவழிச்சாலையும் கூட. எதிரில் எந்த ஒரு நபரோ அல்லது வாகனமோ வராது.  உங்களிடம் இருப்பது நவீன வசதிகளுடன் கூடிய அற்புதமான BMW கார். அதுவும் சமீபத்திய மாடல். உங்கள் பயணத்தை கற்பனை செய்து பாருங்கள்.

மேகத்தில்  பறப்பது போன்று இருக்காதா?.

இன்றைய சராசரி இளைஞர்களின் கனவு இத்தகைய காரை வாங்கி அனுபவிக்குமளவு ஒரு அதிகாரம்மிக்க சௌகரியமான சம்பாத்யத்தில் ஒரு பணி.

ஆனால் உண்மையில் அத்தகைய ஒரு பயணம் சுகமாக இருக்க வாய்ப்பே இல்லை. சில நூறு கிலோ மீட்டர்கள் பயணத்திற்குப்  பிறகு பயணம் அலுப்புத்தட்டிவிடும்.என்பதே நிதர்சனம்.

மற்றொரு சாலை.

இது மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருவழிச்சாலை. உங்களிடம் இருப்பது பழைய அம்பாசிடர் கார். பல ஊசிக்கொண்டை வலைவுகளைக்கொண்ட மலைப்பாதை.

உங்கள் பயணத்தை இப்போது கற்பனை செய்து பாருங்கள்.

திடீரென்று திருப்பத்தில் அச்சுறுத்திய சக வாகன ஓட்டியின் பிறப்பை வசைபாடிய பிறகு இந்தப்பயணம் உங்களுக்கு அடுத்து என்ன எதிர்படும் என்ற ஒரு சுவாரஸ்யத்தை தருவது நிச்சயம்.

இத்தகைய பாதையில் பயணித்து முடித்த பிறகு நீங்கள் பண்பட்ட சிறந்த அனுபங்கள் கொண்ட மனிதராய் மாறியிருப்பீர்கள்.

மனித வாழ்வு இயந்திரத்தனமாகி வாழ்க்கை அலுப்புத்தட்டிவிடக்கூடாது என்பதற்காகவே வாழ்வில் எதிர்படும் சிரமங்கள்.

ஒருமனிதனின் வாழ்வில் இப்படிப்பட்ட எத்தகைய சிரமங்கள் எதிர்படும் என்பதை குறிப்பிடுவதே ஜாதகத்தில் ஆறாம் பாவம்.

ஆறாம் பாவம் கடன், (குணப்படுத்தக்கூடிய) வியாதிகள், எதிரிகள் போன்றவற்றைக் குறிப்பிடும் பாவமாகும்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 


மேஷ லக்னத்தில் ஆறாம் பாவாதிபதி புதன் வக்கிர கதியில் அமைந்துள்ளார். ஜாதகர் தனது வாழ்வில் ஆறாம் அதிபதியின் காரகத்துவத்தின் காரணமாக சிரமப்படுவார் என்பதை இது குறிக்கிறது.மகர ராசிக்கு ஆறாம் பாவாதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைந்துள்ளதன் மூலம் இதை உறுதி செய்துகொள்ளலாம்.

ஆறாம் பாவத்தின் பிரதான காரகங்கள் என்றால் அது கடன், வியாதி எதிரி எனில் இம்மூன்றில் எந்த வகையில் ஜாதகர் சிரமப்படுவார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?.

முதலாவதாக கடன்.

லக்னத்திற்கு 2 ஆமிடமான தனஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளதும் ராசிக்கு விரயத்தில் குரு உள்ளதும் ஜாதகருக்கு விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஜாதகன் இன்னும் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் ஒரு மாணவன். எனவே கடன் என்பது ஜாதகருக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இரண்டாவதாக எதிரி.

லக்னத்திற்கு ஆறாம் பாவத்தில் கடும் பாவிகளான சனி, ராகு, கேதுக்கள் அமைந்தால் எதிர்ப்பில்லாத வாழ்வு என்பது ஜோதிட விதி மட்டுமல்ல அனுபவ உண்மையும் கூட. லக்னத்தில் ஒரு உச்ச கிரகம் அதுவும் பஞ்சமாதிபதியான ராஜ கிரகம் சூரியனாக இருந்தால் எதிரி உதிரியாகிவிடுவான் என்பதும் ஒரு முக்கிய ஜோதிட விதியாகும். எனவே எதிரி வகையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

மூன்றாவதாக வியாதி.

லக்னத்திற்கு ஆறாம்பாவத்தை பிணிக்கு (வியாதிக்கு) காரகத்துவம் பெற்ற பாதகாதிபதி சனி பார்க்கிறார். ராசிக்கு ஆறாம் பாவத்தை குரு பார்த்து வளப்படுத்துகிறார்.எனவே ஜாதகர் வியாதியால் பாதிக்கப்படுவார் என்பதை தெளிவாக அனுமானிக்கலாம்.

சரி. ஆனால் எப்போது வியாதி வரும்.

வாழ்வின் அனைத்து சம்பவங்களும் திசா புக்திகளின் அடிப்படையில்தான் நடக்கும்.

ஜாதகருக்கு 10.02.2014 முதல் ராகு திசை நடக்கிறது.

ஆறாம் பாவத்தில் கடும் பாவியான ராகு இருப்பது விரும்பத்தக்கது என்றாலும் ராகு-கேதுக்கள் தாங்கள் இருக்கும் பாவாதிபதியின் செயலையே பிரதானமாக பிரதிபலிப்பர் என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் சுபாவ அடிப்படையில் ராகு பிணிகளுக்கு காரகத்துவம் பெற்றவர் சனி போன்று செயல்படுவார் என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. (கேது செவ்வாயை போன்று செயல்படுவார்).

ராகு திசை 18 ஆண்டுகள் எனில் ராகு தான் இருக்கும் பாவாதிபதி புதன் இரண்டு பாவங்களுக்கு (3 & 6) அதிபதி என்பதால் தனது 18 அண்டு பலனை 9 ஆண்டுகள் கொண்ட இரு பகுதிகளாக பிரித்து வழங்கும்.

இதில் ஆறாம் பாவம் கடன், வியாதி, எதிரி எனில் 3 ஆம் பாவமானது வெற்றி, வீரம், துணிவைக் குறிக்கும் உப ஜெய ஸ்தானமாகும்.

சரி.இரு பகுதி பலனில் எந்த பகுதிக்கான பலன் முதலில் நடக்கும் எது இரண்டாவது நடக்கும் என எப்படி காண்பது?

கோள்சாரத்தை கவனியுங்கள்.

ஜனன காலத்தில் பாதிப்பை அளிக்கும்படி அமையும் வருட கிரகம் கோள்சாரத்தில் அதே பாவத்தில் நிற்கும்போது உறுதியாக பாதிப்பை தரும்.  

இந்த விதியின் அடிப்படையல் ராகு ஜனன ஜாதகத்தில் தான் நின்ற கன்னி ராசியிலேயே தற்போது நிற்கிறது என்பதிலிருந்து பாதிப்பு தற்போது ஏற்படும் என அறியலாம்.   

ஜாதகர்  சென்ற மாதம் அக்டோபர் இறுதி வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மிகக் கடுமையான பாதிப்பு. ஜீவ மரண போராட்டத்திற்குப் பிறகு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தேறினார்.


ஜாதகர் பாதிக்கப்பட்ட காலத்தின் கோள்சாரம் கீழே.



ஜனனத்தில் ராகு நின்ற அதே ஆறாம் பாவத்தில் ராகுவுடன் ஆறாமதிபதி புதன் உச்சமடைந்துள்ளார்.

ஜாதகரை தாங்கிப்பிடிக்க வேண்டிய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன் நீசமாகியுள்ளார். 

சூரியன் நீசமானதால் சூரியனின் பாவத்தில் நின்ற லக்னாதிபதி செவ்வாயும் பாக்யாதிபதி குருவும் சுக்கிரனுடன் சேர்ந்து சனி பார்வை பெற்று வலுவிழந்துவிட்டனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் வியாதி தாக்கும்.

அதே போன்றுதான் பாதிப்பை தரக்கூடிய கிரகங்கள் ஜாதகரைத் தாங்கிப்பிடிக்கும் கிரகங்கள் வலுவிழந்ததும் தனது பாதிப்பை வழங்குகின்றன.

ராகு விஷத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் விஷ ஜூரமான டெங்குவால் பாதிப்பு. (மருத்துவ ஜோதிட முறையில் இதுபற்றி விரிவாக எழுதினால் பதிவு மிக நீளும்.எனவே இத்துடன் பதிவு நிறைவு செய்யப்படுகிறது.)

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி: 7871244501.  

Wednesday 11 November 2015

இறைவனின் விளையாட்டு பொம்மைகள்

மனிதன் வாழ்வில் துயரங்களை தாங்கமுடியாதபோது கடவுளே என்று கதறுகிறோம். என்னை பைத்தியமாக்கிவிடேன் எந்த மனோ வலிகளையும் உணரமாட்டேன் என மன்றாடுகிறோம்.

உடல் ரீதியான வேதனைகளைக்கூட பொறுத்துக்கொள்ள இயலும் மனிதனால் மனோ ரீதியான வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

மனிதன் கர்ம வினைகளை அனுபவித்துத்தீர்க்க பிறவி எடுக்கிறான் என நமது தர்மங்கள் கூறுகின்றன. அப்படியானால் சராசரி மனிதன் உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவிக்கிறான். முற்றிய நிலையிலுள்ள பைத்தியங்கள் உடல் ரீதியான வேதனைகளை மட்டுமே உணர்கிறார்கள்.

கடவுள் சராசரி மனிதனுக்கு செய்த ஒர வஞ்சனை இது எனக்கொள்ளலாமா?.

இந்தச் சிந்தனையில் விளைவே இப்பதிவு.

மனித வாழ்வில் மிகக் கடுமையான பாதிப்புகளை தரவல்லவை பாபக்கிரகங்கள். அவை கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருப்பது நல்லது. சுபர் பார்வை சேர்க்கை இருந்தால் நலம். இல்லாவிட்டால் கேந்திரமாக இருந்தாலும் அவை அமைந்த பாவம் மற்றும்  காரக அடிப்படையில் பாதிப்புகளை தரும்.

மனித மன நிலையை  நிர்ணயிப்பதில் பின்வருபவை ஜாதகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

1.மனோ காரகன்           – சந்திரன்
2.புத்திகாரகன்              - புதன்
3.மேற்சொன்ன இருவரின் வீடுகள் கடகம், மிதுனம், கன்னி.

மேலும் லக்னம், ஐந்தாம் பாவம், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி.

மனோ நிலையில் பாதிப்புகளைத் தரும் கிரகங்களில் முக்கியமான கிரகங்கள் பின்வருமாறு.

1.சந்திரனின் சக்தியை பிரதிபலிக்கும் கேது. இவர் சந்திரனுடன் சேர்ந்திருந்து சிந்தனை தொடர்புடைய இதர பாவங்கள் பாதிப்படைந்தால் மனோ நிலை பாதிப்படைவது நிச்சயம்.
2.சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் ராகு. இவர் மனோ நிலை தொடர்புடைய கிரகங்களுடனும் பாவங்களுடனும் சேர்ந்திருந்தால் அது தொடர்புடைய தீவிரத் தன்மையை தூண்டிவிடும். உதாரணமாக ஐந்தாமிடத்தில் ராகு நட்பில் அமர்ந்து சுபர் பார்வை பெற்று ஐந்தாம் பாவாதிபதி வலுப்பெற்றால் ஜாதகர் விஞ்ஞானியாகவும் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இருப்பார்.
3.சகல துன்பங்களுக்கும் காரகத்துவம் பெற்ற சனி.      
சனி – சந்திரனுடன் இணைந்தால் ஞானி. சனி-சந்திர யோகம் என்று இதற்குபெயர். துறவு மனோபாவம் ஏற்படும். ஞானிகளின் ஜாதகங்களில் சனி-சந்திர யோகம் இருப்பதை காணலாம்.  

சனி-சந்திர இணைவு, பார்வை, பரிவர்த்தனை & சந்திரன் சனியின் நட்சத்திரங்களிலும் சனி சந்திரனின் நட்சத்திரங்களிலும் அமைவது போன்றவை புனர்பூ தோஷம் எனப்படும். திருமணத்தடை, திருமண வாழ்வில் பிரச்சனைகளை இதனால் ஏற்படும்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
5.10.1986 -  12.25 PM சென்னை.

ஜாதகர் மனோ நிலை பாதித்த திருமணமாகாத ஒரு ஆண். சில சமயம் கடுமையாக (சங்கிலியால் கட்டப்படுமளவு) நடந்துகொள்வார். அவ்வப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிவரும். பெரும்பாலான சமயங்களில் பயந்த சுபாவம். குழந்தை மனம்.


தனுசு லக்னம் இருபுறங்களிலும் பரிவர்த்தனை பெற்ற பாவிகள் சனி-செவ்வாயால் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. ஐந்தாமதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. லக்னாதிபதியின் மற்றோர் வீடான மீனத்தில் ராகு நின்றுவிட்டார். அதற்கு 12 ஆமிடமான கும்பத்தில் குரு பாவி வீட்டில் வக்கிரகதியில் மாந்தியுடன் நின்று கெட்டுவிட்டார். குரு நின்ற இடம்,  சிந்தனை ஸ்தானமான ஐந்தாமிடம் மேஷத்திற்கு பாதகஸ்தானம் என்பதை கவனிக்கவும்.   

பாக்யாதிபதி சூரியன் சிறப்பாக கேந்திர பலம் பெற்றாலும் கேது இணைவு கெடுத்துவிட்டது.

6, 8 ஆமதிபதிகள் இணைந்து 11 ல் நிற்பது சிறப்பென்றாலும் இவர்களுடன் 7 ஆமதிபதியான புத்திகாரகன் புதன் இணைவு புத்தி பேதலிப்பதையும் திருமண வாழ்வு  கேள்விக்குறியாவதையும் குறிப்பிடுகிறது.   

பாவத்தில் சந்திரன் கேதுவுடன் இணைவு கவனிக்கத்தக்கது. 

முழுமையான கால சர்ப்ப தோஷ ஜாதகம் இது. ஜாதகரின் கர்மவினையை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஜாதகருக்கு 5 க்கு 11 ல் நின்ற குரு திசையில் 6 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியில் மனோ நிலை பாதிப்பு துவங்கியது. அப்போதைய கிரக நிலைகள் கீழே.





1.கோட்சார குரு லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் (ராசிக்கு 7 ல்) 6 ஆமிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நின்று வக்ரமடைகிறது.

ஜனன ஜாதகத்தில் ஒரு பாவத்திற்கு பாதகத்தில் வக்கிரகதியில் நிற்கும் கிரகம் கோட்சாரத்தில் அக்குறிப்பிட்ட பாவத்தில் நின்று வக்ரகதியை பெறும்போது பாதகத்தை உறுதியாக செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   

2.கோட்சார ஏழரை சனி முன்பே துவங்கிவிட்டாலும் சனி ஐந்தாமதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்திற்கு வந்ததும்தான் மனோநிலை பாதிப்பு துவங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.  

3.கோட்சார செவ்வாயான ஐந்தாமதிபதி நீசமடைகிறார் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.

4.புக்தியை நடத்தும் சுக்கிரன் ஆட்சியடைந்து  அதனிருபக்கமும் கடுமையான பாவகர்த்தாரி யோகம்.

5. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன நிலையை ஒட்டியே அமைந்துள்ளன.
ஜனனத்தில் கால சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி கர்மவினையை அனுபவிக்கும்படி அமைந்துள்ள ராகு-கேதுக்கள் கோட்சாரத்தில் அதே ஸ்தானங்களுக்கு வரும்போது அதை அனுபவிக்கும்படி செய்யும். (இது மிக முக்கிய ஜோதிட விதி. ஜோதிடம் பயில்வோர் குறிப்பெடுத்துக்கொள்ளவும்.)

ஜாதகர் தேறுவாரா?

கோட்சார ஏழரை சனி தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

எப்படிப்பட்ட தோஷங்களானாலும் பெரும்பாலும் சனி தனது முதல் சுற்றிலேயே அதை அனுபவிக்கும்படி செய்துவிட்டால் இரண்டாவது சுற்றில் வேதனைப்படுத்தமாட்டார். ஜாதக தோஷங்களை சனியின் முதல் சுற்றில் அனுபவிக்க விடாமல் நல்ல திசா-புக்திகள் வந்து தடுத்துவிட்டால் சனியின் இரண்டாம் சுற்று கடுமையைத்தரும் என்பதே இதில் உள்ள சூட்சுமம்.

தற்போது ஜனனத்தில் நின்ற விருச்சிக ராசியை சனி கடந்துகொண்டிருக்கிறது.

கோட்சார குருவானவர் ஜனனத்தில் தாங்கள் நின்ற இடத்தில் தற்போது நின்றுகொண்டிருக்கும் ராகு-கேதுக்களை கடந்து போகும்போது ஜாதகரின் மனோ நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டும். ராகு-கேதுக்களால் ஜனன காலத்தில் ஏற்பட்ட கால சர்ப்ப தோஷம் விலக வேண்டும். அதன் பிறகே ஜாதகர் ஓரளவு நல்ல தெளிவை பெற இயலும்.



மீண்டும் மற்றொரு பதிவில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Thursday 8 October 2015

கொலைகார கிரகங்கள் காட்டும் கருணை!

ஒரு ஜாதகர் திருமண வயதில் மாரக திசையை எதிர்கொள்ளும் சூழலில் மாரகத்தைத் தரும் கிரகங்கள் தாங்கள் நின்ற  சார அடிப்படையில்  ஜாதகருக்கு திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வைத்து பிறகே ஜாதகரை கொல்கின்றன. மாரகர்கள் என்பதற்காக தாங்கள் தொடர்புடைய எதையும் ஜாதகருக்கு மறுப்பதில்லை. இது ஒரு ஆச்சரியமான உண்மை. கிரகங்கள் எந்த விதத்திலும் தங்கள் கடமையில் தவறுவதில்லை. முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வெட்டப்படுபவனால் வளர்க்கப்படும் ஆடு திருவிழா நாள் வரும் வரை சரியாகத் தீனியிட்டு வளர்க்கப்படுவது போன்றது இது.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.  


ஜாதகிக்கு 03.02.2002 ல் சந்திர திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியான (9 ஆமதிபதி) சந்திரன், 7 ஆம் ஆதிபத்தியம் பெற்ற களத்திர காரகன் சுக்கிரனின் சாரம் பெற்றதால் சந்திர திசையில் திருமணம் நடக்க வேண்டும். சுக்கிரன் தனது பாவம் மற்றும் காரக அடிப்படையிலும் சுகஸ்தானாதிபதியான சனியின் சாரம் பெற்றதனாலும் தனது புக்தியில் திருமணத்தை நடத்தினார்.

9 ஆம் பாவாதிபதி திசையில் சுய புக்தியிலும்  4 & 12 ஆமதிபதிகளின் புக்தியிலும்  ஒருவர் வெளிநாடு செல்வார். 9 ஆம் பாவமே ஜல ராசி என்பதாலும் 4 ஆமதிபதி சனியின் சாரத்தில் நின்ற 12 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியிலேயே ஜாதகி திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வெளிநாடு சென்றார். 7 ஆமதிபதி 9 ஆம் பாவத்தில் நின்று அது ஜல ராசியுமாகி திசா நாதன் அதே 9 ஆம் பாவாதிபதியானால் ஒரு ஜாதகரின் வாழ்க்கைத்துனைவர் வெளிநாட்டுடன் தொடர்புடையவராக இருந்தே ஆக வேண்டும். (வெளிநாட்டு வரன் பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் வதுவின் (பெண்ணின்) ஜாதகத்தில் இத்தகைய அமைப்பு உள்ளதா என கவனித்து அதன்படி வரனை தேர்ந்தெடுக்க இது போன்ற குறிப்புகள் உதவியாக இருக்கும். திருமணத்தில் நேரும் தாமதத்தை இதனால் தவிர்க்கலாம்).

வெளிநாடு சென்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஜாதகிக்கு மூலையில் புற்றுநோய்கட்டி (Brain Tumor) இருப்பது கண்டறியப்பட்டு மூன்று மாத சிகிச்சைக்குப்பின் இந்திய திரும்பினார். இந்தியாவிலும் தொடர்ந்த சிகிச்சை தொடர்ந்தது. 2௦௦2 டிசம்பர் நான்காம் வாரத்தில் ஜாதகிக்கு செவ்வாய் திசை துவங்கியது. தொடர்ந்த சிகிச்சையில் பலனளிக்காமல் செவ்வாய் திசை சுய புக்தியில் 2௦௦3 ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு பிறந்ததும் காலமானார். 

லக்னத்தை அஸ்டமாதிபதியுடன் சேர்ந்ததால் கெட்டுவிட்ட சுக ஸ்தானாதிபதியான சனி மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார். லக்னம் என்பது தலையை குறிக்கும். எனவே தலையில் வியாதி. ஸ்திர லக்னத்திற்கு பாதகஸ்தானமான 9 ஆமிடத்திற்கு உரிய சந்திரன் பாதகத்தை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வியாதி மூலம் அந்த பாதகம் ஏற்பட்டது. சந்திரன் இரத்தம் மற்றும் உடலில் உள்ள திரவ இயக்கங்களை கட்டுப்படுத்தும் கிரகம் என்பதால் மூலையில் கட்டி.  சனி, ராகு & செவ்வாய் இவர்களே புற்று நோய்க்கு காரகத்துவம் வகிப்பவை. ராகு திசா நாதனின் வீட்டில் பாதகஸ்தானத்தில் சந்திரனின் வீட்டில் நிற்கிறது. ராகு-கேதுக்கள் எந்த வீட்டில் நிற்கிறார்களோ அந்த வீட்டோனின் காரணிகளை தாங்கள் எடுத்துச் செய்வார்கள். இந்த அடிப்படையில் சந்திர திசை வியாதியை கொடுத்தாலும் மரணத்தை தரவில்லை. அடுத்துவந்த 6 ஆமதிபதி செவ்வாய் இரத்தத் திசுக்களின் (Bone Marrow) உற்பத்தி மற்றும் இயக்கங்களுக்கு காரகம் வகிப்பது. செவ்வாய் பாதக ஸ்தானத்தில் நின்ற ராகுவின் சாரம் பெற்றதால் தனது சுய புக்தியிலேயே மரணத்தை தந்தது.

இந்த ஜாதகத்தில் சந்திரன் ஜாதகிக்கு மரணத்தை வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தாலும் மரணம் உறுதி எனும் சூழ்நிலையில் ஜாதகிக்கு தான் நின்ற சாரத்தினடிப்படையில் (சுக்கிரன் சாரம்) திருமணம் மற்றும் பாவ அடிப்படையில் வெளிநாட்டு பயண வாய்ப்பையும் வழங்கி கருணை காட்டிவிட்டு அதே நேரம் மரணத்தை உறுதி செய்யும் வியாதியை தந்ததோடு விலகிவிட்டது கவனிக்கத்தக்கது.

அடுத்து மற்றோர் பெண்ணின் ஜாதகம். 


ஜாதகத்தில் திருமண தொடர்புடைய 2 மற்றும் 7 ஆமிடங்களை விரயாதிபதி குரு சாரத்தில் நின்று செவ்வாய் பார்வை செய்வதால் கெட்டது. செவ்வாய்க்கு வீடுகொடுத்த  7 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்ன பாதகாதிபதி சனியுடன் இணைவு பெற்றதால் கெட்டுவிட்டார். குடும்ப காரகனும் 9 & 12 பாவங்களுக்குரிய குரு மூன்றில் பகை வீட்டில் வக்கிர கதியில் நின்று பாதகாதிபதி சனி பார்வை பெற்றதால் கெட்டுவிட்டார். மேஷ லக்னத்திற்கு குரு சுபனானாலும் சனியுடன் இணைந்தாலோ அல்லது சனி பார்வை பெற்றாலோ பாதகத்தையே செய்வார் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.சுகஸ்தானமான நான்காமிடத்தில் கேது நின்று அதன் பாவாதிபதி சந்திரன் நீசமானதால் சுகஸ்தானமும் கெட்டது. ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான 8 ஆமிடம் இரு பக்கமும் பாவிகளால் சூழப்பட்டு பாவ கர்தாரி தோஷத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் அங்கு நீச சந்திரன், சுபாவ பாவியான சூரியன் மற்றும் 6 ஆமதிபதி புதன் ஆகியோர் அந்த இடத்தை கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளனர். ஜாதகிக்கு ஆயுள் பலமில்லை என்பதை இது குறிக்கிறது.

குடும்ப வாழ்க்கை தொடர்புடைய 2,4,7,8,12 ஆகிய அனைத்து பாவங்களும் அதன் அதிபதிகளும் ஜாதகத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுக்கிரன் லக்ன பாதகாதிபதி சனியுடன் இணைவு பெற்றதால் ஜாதகிக்கு மரணத்தை வழங்கவேண்டிய பொறுப்புக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் சனி 7 ஆமதிபதியான தனது (சுக்கிரனின்) சாரம் பெற்றுவிட்டதால் அதற்கு முன்னர் ஜாதகிக்கு தனது காரகம் மற்றும் பாவ அடிப்படையில் இல்லற இன்பத்தை வழங்கிவிட கருணை காட்டினார்.

ஜாதகிக்கு 26.01.2015 அன்று சுக்கிர திசை சனி புக்தியில்  திருமணம் நடந்தது. திசா நாதன் சுக்கிரன் எழாமதிபதி என்பதும் தனது சுய சாரத்திலே (பூராட நட்சத்திரத்தில்) நிற்பதாலும் சுக்கிர திசையில் திருமணம் என்பது ஜாதகிக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புத்தி நாதன் சனி சுக்கிரனுடன் இணைவு பெற்று அதே சுக்கிரன் சாரம் பெற்றதாலும் சனி புக்தியில் திருமணம் நடந்தது.

விருச்சிக ராசிக்கு நடக்கும் ஏழரை சனியின் கடுமையான கட்டத்தில் லக்ன பாதகாதிபதி சனி புக்தியில் ஜாதகிக்கு திருமணம். திருமண தேதியும் அதன் கூட்டுத்தொகையும் 8 ஆகவே அமைந்துவிட்டதை கவனியுங்கள். சனியின் கோரப்பிடியில் ஜாதகி இருக்கிறார் என்பதை இது குறிப்பிடுகிறது. எந்த ஒரு விபரமறிந்த ஜோதிடரும் கோடிகளை தட்சினையாகப் பெற்றாலும் இதுபோன்ற சூழலில் திருமணத்தை தவிர்த்துவிட அறிவுரை கூற வேண்டும். ஆனால் ஜோதிடர்களைவிட சனி வலுவானவர். மனித சக்தியால் சம்பவங்களை தவிர்த்துவிட இயலாது என்பதால்தான் படைத்தவனிடமே நமது குறைகளை கூறுகிறோம்.

ஜாதகிக்கு மரணம் குடும்ப வாழ்க்கை வடிவில் வந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 7 ஆமிடாதிபதி சனியுடன் சேர்க்கை என்பதாலும்  7 ஆமிடத்தில் செவ்வாய் என்பதாலும் குடும்ப பாவங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டதாலும் கணவன் வடிவில் மரணத்தை சனி வழங்கியிருக்க வேண்டும். சனியும் செவ்வாயும் மாரக பாவங்களுடன் தொடர்புகொண்டால் மரணம் குரூரமாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. ஜாதகியின் இறுதி நேரம் முதலையின் வாயில் சிக்கிய ஜீவனைப் போன்றதாக இருந்திருக்க வேண்டும். நினைத்துப் பார்க்க நெஞ்சம் நடுங்குகிறது.

மாங்கல்ய காரகன் செவ்வாய் 7 ஆமிடத்தோடு தொடர்புகொண்டுள்ளதால் கணவனால் ஜாதகி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என அனுமானிக்க வாய்ப்புள்ளது. மரணம் எப்படி நிகழ்ந்தது என அறியப்படவில்லை. ஜாதகி கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்ற கோணத்தில் காவல்துறையின் விசாரணை வலையத்தில் கணவன் உள்ளார்.

மேற்கண்ட இரு ஜாதகங்களிலும் மாரகத்தை தரும் கிரகங்களாக இருந்தாலும் தங்களது காரக, பாவ தொடர்புகள் அடிப்படையில் ஜாதகருக்கு நடக்கும் நிகழ்வுகளை குறைவின்றி நடத்தி விடுகின்றன. தங்கள் பணியை செவ்வனே செய்கின்றன. மனிதர்களுக்குத்தான் சாக்குப் போக்கு.

மரணம் தொடர்புடைய நுட்பமான சில விபரங்களை இங்கு நான் அவசியம் கருதி குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன். அதனை சாதாரண மனிதர்கள் தெரிந்துகொள்வது பல வேதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதே காரணம்.  நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை குறிப்பிட்டதுபோல “சாகர நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள் நரகமாயிடும்” என்பதுபோல்தான்.

ஒரு முக்கிய அறிவிப்பு:

ஜோதிடத்தில் நிகழ்வுகளின் காரணங்களை துல்லியமான அளவிட  பல்வேறு அறிஞர்கள் பலவிதங்களில் ஆராய்ந்துகொண்டிருக்கிரார்கள். அடியேன் K.P அயனாம்சத்தை பயன்படுத்தினாலும் அதன் அனைத்து முறைகளையும் அப்படியே பயன்படுத்துவதில்லை. பாரம்பரிய முறையை (TRADITIONAL VEDIC METHOD) சார்ந்தே எனது ஜோதிட பயணம் இதுவரை வந்துள்ளது. உதாரணமாக K.P முறையில் யோகங்கள் மற்றும் அஷ்ட வர்க்கங்களுக்கு இடமே இல்லை. ஆனால் இவற்றின் பயன்கள்  நிராகரிக்க முடியாதவை.

தற்போது நான் ஆய்வு நோக்கில் நமது பாரம்பரிய அயனாம்சமான சூரிய சித்தாந்த அயனாம்சத்தின் திருத்தப்பட்ட நவீன அயனாம்சத்தை இந்தப் பதிவிலிருந்து பயன்படுத்த துவங்கியுள்ளேன். பழைய சூரிய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட அயனாம்சமே வாக்கிய அயனாம்சம் எனப்படுகிறது. திருத்தப்பட்ட சூரிய சித்தாந்த அயனாம்சமானது அயனாம்சத்தில் மட்டுமல்லாது தற்கால கிரக சஞ்சார விதிகளுக்கேற்ப கிரகங்களின் திசா புக்தி காலங்களிலும் சிறிய மாறுதல்களைக்கொண்டிருக்கும். வாக்கிய மற்றும் திருக்கணித முறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி இது. கணினியை கொண்டு ஜோதிட ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் இதை பயன்படுத்திப்பாருங்கள்   பல ஆச்சரியங்களை அடைவீர்கள். ஜெகன்நாத ஹோரா மென்பொருளில் இந்த திருத்தப்பட்ட சூரிய சித்தாம்ச அயனாம்சம் கிடைக்கிறது.

விரைவில் மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.