Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Saturday, 11 July 2020

இன்பக்கவி!



நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள் அனைவராலும் நினைவுகூறத்தக்கவர். தமிழகத்தில் அடையாளங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் கவிஞர் கண்ணதாசன் முக்கிய இடம் வகிப்பார். அவர் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அபூர்வு மலர் எனலாம். அண்ணாரது ஜாதகத்தை எனது பாணியில் இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன்.    


கவிஞரின் ஜாதகத்தில் மேஷச்சந்திரனும் கடக்கச்செவ்வாயும் பரிவர்த்தனை. கவிஞர் மேஷ ராசி என எடுத்துக்கொண்டால் ஜாதகர் முரட்டுப்பிடிவாதமும் மூர்க்கத்தனமும் முன்கோபமும் கொண்டவராக இருக்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களை சண்டைக்கோழி என குறிப்பிடுவது சரியாகப்பொருந்தும். பரிவர்தனைக்குப்பின் சந்திரன் கடகத்தில் ஆட்சி பெறுகிறது என எடுத்துக்கொண்டால் தாய்மை உள்ளம், கஷ்டத்தை கண்டு கண்ணீர் சிந்துவது, அழகியல், கற்பனைவளம், குடும்பப்பற்று, அபாரமான நினைவுத்திறன், அரசியல், உணர்ச்சித்தூண்டல் என சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞரின் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் நின்று செயல்பட்டுள்ளதை நாமறிந்த அவரது வாழ்க்கை அடிப்படையில் அனைவரும் உணரலாம். பரிவர்த்தனைக்குப்பிறகு சென்று அமரும்  இடத்திற்கே கிரகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்பதற்கு இவரது ஜாதகம் ஒரு மிகச்சிறத்த எடுத்துக்காட்டு. ராசி பரிவர்த்தனையாகி பரிவர்த்தனை கிரகத்தோடு திக்பலமடைவதால் லக்னத்தைவிட ராசி வலுவடைகிறது. லக்னம் செயல்பட்டால் ஜாதகருக்கான சூழல் தானாக அமையும். ராசி செயல்பட்டால் ஜாதகர் தனக்கான சூழலை தானே உருவாக்கிக்கொள்வார். கண்ணதாசன் தனது வாழ்க்கைக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.  

ஜாதகத்தில் சந்திரன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்கிறது. கேது சந்திரனுக்கு திரிகோணத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் கேதுவால் முழுமையாக பாதிக்கப்படும். ஆனால் பரிவர்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவின் நட்சத்திரத்தில் வந்து அமைவதால்   சந்திரனுக்கு ஏற்படவேண்டிய தோஷம் செவ்வாய்க்கு இடம் மாறுகிறது. செவ்வாய் தாய்,  தந்தை, பந்துக்களை குறிக்கும் 4, 9 க்குரிய பாவாதிபதியாவதால் ஜாதகர் இளம் வயதில் பெற்றோரால் உறவினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் முதலில் ஜாதகரை பரிதவிக்கவிட்டு பிறகே சிறப்பான பலன்களை வழங்கும். கண்ணதாசன் சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்து படிப்பை தொடர இயலாமல் பரிதவித்து பிறகே சென்னை வந்தார். சிறுவயதில் தான் கண்ணீர் சிந்திய அனுபவங்களையே பாடல்களாக்கி நமது கண்களை குளமாக்கினார். 2 ஆமதிபதி புதன் விரையத்திலும் 5 ஆமிடத்தில் கேதுவும் அமைந்ததால்  2, 5 ஆமிடங்கள் பாதித்தவர்கள் சொந்த ஊரின் இருந்தால் முன்னேற இயலாது என்ற விதியும் இங்கு செயல்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  

பரிவர்த்தனைக்குப்பின் பின் கால புருஷனுக்கு சுக ஸ்தானமான கடகத்தில், ஜாதகருக்கு படுக்கை சுகத்தை வழங்கவேண்டிய 12 ஆம் பாவத்தில், புதன்+சுக்கிரன் சேர்க்கையால் ஏற்படும் மதனகோபால யோகத்தின் மையத்தில் உணர்சிகளுக்குரிய சந்திரன் வந்து ஆட்சி பெறுகிறார். உணர்சிகளுக்குரிய பெண் கிரகமான சந்திரன் இரு காம-மோக கிரகங்களுடன் குருவின் பார்வையில் இணைகிறது. ஜாதகர் வாழ்க்கை பெண் இன்பத்தை அனுபவிப்பதற்கே என எண்ணி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக  தாசிப்பெண்களை நாடியவரே தவிர அடுத்தவர் மனைவியை அடைய எண்ணியவரில்லை. சந்திரன்+சுக்கிரன்+குரு இந்த மூன்று கிரக சேர்க்கை அளப்பரிய கற்பனைத்திறனை ஜாதகருக்கு கொடுத்தது. பெண்  இன்பம், வர்ணனை மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் இவரது கவிதைகளுக்குள் கைகட்டி நின்றது. குருவின் பார்வை பெரும் இடங்ககளான 2, 4 மற்றும் 12 ஆகிய பாவங்கள் சம்பாத்தியம், சுகத்திற்காக செலவுகள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கடகத்தில் அமைந்த கிரகச் சேர்க்கையை குரு பார்ப்பதால் கற்பனை ஊற்று பீய்ச்சி அடித்தது என்றால் அது மிகையல்ல. லக்னாதிபதி சூரியன் இசை ராசியான மிதுனத்தில் ராகுவோடு அமைந்ததால் ஜாதகர் இசையோடு தொடர்புகொள்ள அவதரித்தவர் என்பது புலனாகிறது. ராகு எதையும் அதிகப்படுத்தும் கிரகம் என்பதால் ஜாதகருக்கு லாப ஸ்தானத்தில் அமைந்த ராகு இசை வாழ்வில் அதீத பாண்டித்தியத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். இந்த முக்கிய அமைப்பே ஜாதகர்  உலகப்புகழ் பெற்றவராக தமிழ் இருக்கும் வரை நினைவு கூறத்தக்க கவிஞராக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

7 ஆமதிபதி சனி பரிவர்த்தனை செவ்வாயின் மற்றொரு வீடான விருட்சிகத்தில் வக்கிரம் பெற்று அமைந்ததால் ஜாதகருக்கு இல்லற வகையில் பல தொடர்புகள் அமைந்தது. விருச்சிகத்தை சாராயம் காயச்சுமிடம் என ஜோதிடம் வரையறுக்கிறது. சந்திரன் நீசமாகும் கால புருஷனுக்கு உடலுறவு ஸ்தானமான விருட்சிகத்தில் வக்கிர சனி அமைந்து அதன் திரிகோணம் கடகமாக வருவதால் ஜாதகர் மதுவோடு மாதுக்களின் தொடர்பிலும் இருக்க வேண்டும் என்பதன் விதிக்குட்பட்டு வாழ்ந்தார். சூரியன் ராகு தொடர்பு அரசியலிலும் இயக்கப்பணிகளிலும் ஈடுபடுத்தும் அமைப்பாகும். ஜாதகரின் அரசியல் தொடர்புகள் அனைவரும் அறிந்ததே. முக்கிய கிரக சேர்க்கைகள் அமைந்தது உணர்சிகளுக்குரிய நீர் ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதில் காம கிரகங்களோடு செவ்வாயும் தொடர்பானதால் இவர் தொட்டுப்பார்க்காத மது இல்லை என்றே கூறலாம். லக்னத்திற்கு வீழ்ச்சி ஸ்தானம் கடகம் என்பதால் இவரது மரணம் கூட வெளிநாட்டிலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. உடல் அளவில் அவர் மரணித்துவிட்டார். ஆனால் புகழ் அளவில் அவர் ஒரு சிரஞ்சீவி. அவர் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "நிரந்தரமானவர்கள் அழிவதில்லை."  

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

Thursday, 21 May 2020

8 ஆமிட ரகசியங்கள்

ஜாதகத்தில் லக்ன பாவத்தின் ஆயுளை தீர்மானிப்பது எட்டாவது பாவம்தான். ஒரு பாவத்திற்கு அதன் எட்டாவது பாவம் சிறப்பாக இருந்தால்தான் அந்த பாவத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இதை கிரகம் நின்ற இடத்திற்கு எட்டாம் பாவத்தை அளவிட்டும்  கிரகத்தின் பலம், பலனத்தை அறியலாம். எட்டாவது பாவம் பல்வேறு ரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது. எட்டாவது பாவம் பொதுவாக நல்ல பலனை தர வாய்ப்பே இல்லை எனலாம். காரணம் எட்டாவது பாவத்தின் சக்தி ஜாதகரின் உயிரை தாங்கிப்பிடிக்க மட்டுமே செலவிடப்பட வேண்டும். எட்டாவது பாவம் ஒரு மனிதன் பிறரிடம் வெளிப்படுத்தக்கூடாத ரகசியங்களை குறிக்கும். அவை ஆயுள், அவமானங்கள், தண்டனைகள், உடலுறவு, மணமுறிவு, மறைப்பொருள், ஆன்மிகம், புதையல், பங்கு வணிகம், திடீர் பொருளாதாரங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை அடுத்தவரிடம்  வெளிப்படுத்தினால் ஜாதகர் தனது வாழ்வில் வீழ்ச்சியை சந்திப்பார் என்பது நமது தர்ம சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகம். ஆன்மிகம் என்பது மறைந்திருக்கும் இறை சக்தியை உணர்வதுதான். அதனால்தான் ஞான காரகன் கேது கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் உச்சமடைகிறார். மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமடைந்துள்ளார். ராசியதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் ராசிக்கு எட்டில் சிம்ம ராகுவிடம் தஞ்சமடைந்துள்ளார். லக்னத்தில் எட்டாமதிபதி புதன் அமர்ந்துள்ளார். இவை யாவும் மறைப்பொருளான பரம்பொருளை நாடும் நோக்கில் ஜாதகரின் கர்மா இயங்கும் என்பதை குறிப்பிடுகின்றன. சந்திரனை நோக்கி வரும் கேதுவும் இதை உறுதி செய்கிறது. லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்துள்ளதாலும் ராசியதிபதி சனி சூரியனின் வீட்டில் மோட்சகாரகன் ராகுவுடன் இணைந்துள்ளதாலும் ஜாதகர் சிவாச்சாரியராக (சிவன் கோவிலில் பூஜை செய்பவர்) உள்ளார். கால புருஷனுக்கு போக ஸ்தானாதிபதி (3 ஆமதிபதி) புதன் லக்னத்தில் அமர்ந்ததால் உடல் ரீதியான போகத்தை ஜாதகர் விரும்புகிறார். புதன் எட்டாமதிபதியாகி எட்டாமிடம் உடலுறவையும் மறைபொருளையும் ஒருங்கே குறிப்பதால் இவ்விரண்டையும் ஜாதகரின் மனம் நாடுகிறது. புதனுடன் இணைந்துள்ள 12 ஆமதிபதி சுக்கிரன் படுக்கை சுகத்தோடு மோட்ச நிலைக்கும் அதிபதியாகிறார். புதன் சுக்கிரன் இணைவது மதன கோபால யோகம் என்று சொல்லப்படும் சூழலில் ஜாதகருக்கு சிற்றின்ப ஆசையும் ஆன்மீகமும் ஒருங்கே எழுகிறது. ஆனால் இங்கு இருவரும் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகிவிட்டதால் லக்னாதிபதியை மீறி புதனும் சுக்கிரனும் எதுவும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையை வழங்கவேண்டிய குரு 2 க்கு 8 ல் உச்ச வக்கிரமடைந்து குடும்ப வாழ்வை தர இயலாத சூழலில் அமைந்துவிட்டார். 1978 ல் பிறந்த ஜாதகரின் திருமண முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ரிஷப லக்ன ஆணின் ஜாதகத்தில் தற்போது அஷ்டமாதிபதியான குருவின் திசை நடக்கிறது. குரு லக்னத்திற்கு 8, 11 க்கு உரியவராகி லக்னத்திற்கு 2 ல் நிற்கிறது. 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனம். இவர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். பங்கு வணிகம் நேரடி வருமானமல்ல. பாரம்பரிய தொழில் அல்ல. வணிக சந்தையில் மறைந்திருக்கும் தனத்தை தேடி முதலீடு செய்து பொருளீட்டுவதுதான். எனவேதான் லக்னத்திற்கு 8 ம் பாவம் பங்கு வணிகத்திற்கு உரிய பாவமாக பார்க்கப்படுகிறது. லக்னதிபதி சுக்கிரனும் பங்கு வணிகத்திற்கு உரிய கிரகங்களில் ஒன்றாகி அது பங்கு வணிகத்திற்கு மற்றொரு காரக கிரகமான புதனின் வீட்டில் தன ஸ்தானத்தில் நிற்பதால் ஜாதகர் பங்கு வணிகத்தில் பொருளீட்டுகிறார். இங்கு சுக்கிரனும் குருவும் இணைந்து ஜாதகருக்கு தனம் வரும் வழியை நிர்ணயம் செய்கின்றன.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி லக்னத்திற்கு 7 ல் திக்பலம் பெற்று நிற்கிறார். எனவே ஜாதகரை சனி எப்படியும் காப்பாற்றுவார் எனலாம். சனி ஆயுள் மற்றும் ஜீவன காரகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுள் என்பது சனியோடு 8 ஆமிடத்தையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகருக்கு லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின்  திசை கடந்த பதினேழரை வருடங்களாக நடக்கிறது. 8 ஆமிடம் என்பது ஆயுளோடு ஒரு ஜாதகர் படும் அவமானங்களையும் குறிப்பிடும். ராகு சனியை நோக்கி நகர்ந்து வருகிறது. சனி வக்கிரமில்லாத நேர்கதியில் உள்ளது. இதனால் ஜாதகரின் ஜீவனம் ராகுவால் பாதிக்கப்படும். ராகுவின் காரக தொழிலை செய்தால் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் எனலாம். ராகு சூரியனின் உத்திரம்-4 சாரம் வாங்கியுள்ளார். சூரியன் ரிஷபத்தில் நின்று ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தை பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு கெளரவதிற்கு உரிய சூரியனின் சாரம் வாங்கியுள்ளத்தால் இவர் வேலை செய்யுமிடங்களில் கௌரவம் பார்த்து வேலையோடு ஒன்ற இயலாமல் சண்டையிட்டு வந்துவிடுகிறார். சுய தொழிலை குறிக்கும் 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய், வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளதால் சுயதொழிலிலும் சோபிக்க இயலாமல் போராடுகிறார். இதனால் ஜாதகர் பெருத்த அவமானங்களை சந்திக்கிறார். வேலை மற்றும் சுய சம்பாத்தியம் எதற்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுகிறார். அவமானங்களை எதிர்கொள்ள இயலாமல் திசா நாதன் ராகு 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் மதுப்பழக்கதிற்கும் அடிமையாகிவிட்டார். இங்கே ஆயுள்காரகன் சனி திக்பலம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் ஆயுள் ரீதியாக ஜாதகரை காப்பாற்றுகிறார். எனவே ராகு ஜாதகருக்கு ஆயுள் கண்டத்தை தர இயலவில்லை. இதனால் திசா நாதன் ராகு 8 ஆமிடம் குறிப்பிடும் அவமானங்களை தருகிறார். குரு திசை துவங்கியதும் ஜாதகர் தெளிவான வாழ்க்கைப்பாதைக்கு மாறி தனது அவமானங்களிளிருந்து விடுபடுவார் எனலாம்.

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
  
இந்த ஜாதகமும் முந்தைய ஜாதகத்திற்கு ஒப்பானதுதான். ஜாதகருக்கு நடந்தது சனி திசை. கும்ப லக்னாதிபதி சனி வக்கிர நிலை பெற்று லக்னத்திற்கு 11 லிருந்து திசை நடத்துகிறார். சனியும் 5 ஆமிட செவ்வாயும் நேர்பார்வை பார்த்துக்கொள்கின்றனர். சனி-செவ்வாய் தொடர்புகொள்பவர்கள் தங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் விபத்து, மணமுறிவு, கண்டம் போன்ற கடுமையான பாதிப்புகளை அடைகிறார்கள். லாபஸ்தான திசா நாதன் சனி தனது பகை கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சை வாங்கி 1௦ ஆவது பார்வையாக லக்னத்திற்கு 8 ஆவது பாவத்தை பார்க்கிறது. சாதாரணமாகவே சனியின் பார்வைக்கு கடுமை அதிகம் என்பது அனைவரும் அறிந்த நிலையில் செவ்வாயின் பார்வை பெற்ற சனிக்கு கடுமை மிக அதிகமாகும். சனி பார்க்கும் இடங்களுக்கு தனது பாதிப்பை தராமல் இருக்க மாட்டார். இந்நிலையில் சனியின் பார்வையை வாங்கும் செவ்வாயின் 4 ஆவது பார்வையும் 8 மிடத்தின் மீது விழுகிறது. ஜாதகர் தனது சனி திசையில்  ராகு புக்தியில் கொடுமையானதொரு வாகன விபத்தில் சிக்கி நீண்டதொடு மரணப்போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைத்தார். 8 ஆமிட ராகு வேகத்திற்கு உரிய சந்திரனோடும் ஆவேசத்திற்குரிய செவ்வாயோடும் கடுமைக்குரிய சனியோடும் தொடர்புகொண்ட நிலையில் புக்தியை நடத்துகிறது. சனி தான் பார்க்கும் இடத்திற்கு தனது சக்தியை தனது திசா புக்தியில் செலவிட்டே ஆக வேண்டும். இதனால் சனியால் விபத்தை தடுக்க இயலவில்லை. சனி லக்னத்தை 3 ஆம் பார்வை பார்த்ததால் கண்டத்தை கொடுத்து மரணத்தை தவிர்த்தாரா என்றால் அது குறைவே. ஏனெனில் சனி வக்கிரமாகி பின்னோக்கி வருகிறது. இதனால் சனியின் 3 ஆமிட பார்வை லக்னத்தை விட்டு விலகுகிறது. எனவே சனியால் ஜாதகரை காப்பாற்ற இயலாது. இங்கு ஜாதகரை காப்பாற்றியது சனி சாரம் அனுஷம்-1 பெற்ற விருட்சிக குருதான். குருவும் வக்கிரமாகி 9 ஆமிடத்தை நோக்கி போகிறார். இதனால் குருவின் அறை பங்கு பார்வை துலாத்திலிருந்து லக்னத்திற்கு கிடைக்கிறது. இதனால் ஆயுளை எடுக்க ஆயுள்காரகன் சனியின் சாரம் பெற்ற குருவின் அனுமதியும் திசா புக்தி நாதர்களுக்கு தேவை. குரு ஆயுளை எடுக்க அனுமதிக்கவில்லை.  இங்கு குரு ஜாதகரின் உயிரை காப்பாற்றினார் என்றால் அது மிகையல்ல. இங்கு குருவின் அமைப்பால் திசா புக்தி நாதர்கள் ஜாதகருக்கு 8 மிடம் குறிப்பிடும் கண்டத்தை மட்டுமே வழங்க முடிந்தது.

ஐந்தாவது ஆணின் ஜாதகம் கீழே.
.
விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். பொதுவாக ஒரு மறைவு ஸ்தான பரிவர்த்தனைகள் சிறப்பல்ல. ஏனெனில் பரிவர்த்தனைகளே பாதிப்பை ஒரு வகையில் வழங்கிவிட்டுத்தான் பலனளிக்கும் என்ற நிலையில் மறைவு ஸ்தானங்களுடனான பரிவர்த்தனை ஒரு பாதிப்பையும் இழப்பையும் வழங்காமல் பலனளிக்க வாய்ப்பே இல்லை. எப்போது அவை இரண்டும் ஏற்படும் என்றால் தொடர்புடைய திசா புக்திகளில்தான் ஏற்படும். 8 ஆமதிபதி புதன் புத்திகாரகனாகும். புதன் லக்னத்திற்கு திக்பலத்தை வழங்கும் 1௦ ஆமதிபதி சூரியனோடு இணைந்து லக்னத்தில் நிற்பது சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இவ்விரு கிரகங்களும் லக்னம், நான்கு மற்றும் 8 ஆகிய இடங்களில் இணைவதுதான் சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்தனையாவதால் ஜாதகருக்கு  பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். ஜாதகர் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இது நுட்ப அறிவால் ஏற்பட்டது. ஜாதகருக்கு 8 ஆமிடதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் சில வருட போராட்டமான வாழ்க்கைத்துனையுடனான மண வாழ்க்கை முறிவுக்கு வந்தது.

போராட்டமான மண வாழ்க்கைக்கு காரணம் சுக்கிரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் ஏற்பட்டது. இதனால் மனைவியின் குணம் ராகுவால் பாதிக்கப்படும். குடும்ப பிரிவினைக்கு அடித்தளமிட்டது கடந்து போன சந்திர திசையாகும். சந்திரன் விருட்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி குடும்ப பாவத்தில் வந்து அமர்ந்து திசை நடத்திய சூழலில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி அது முற்றிய நிலைக்கு தள்ளிவிட்டுத்தான் தனது திசையை முடித்திருக்கிறார். இந்நிலையில் மணமுறிவை குறிப்பிடும் 8 ஆம் பாவதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் மண வாழ்வு முறிவு பெற்றது. பரிவர்த்தனைச் செவ்வாய் குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் பரிவர்த்தனையாகி அமர்ந்ததும் லக்னம் வலுவடைகிறது. அதனால் லக்ன பாவ செவ்வாய் திசை துவங்கியதும் 2 ஆமிடம் வீழ்ச்சியடைகிறது. இங்கு பிரிவினையை லக்ன பாவம் மற்றும் 8 ஆம் பாவம் ஆகிய இரண்டுமே குறிப்பிடும் என்பது கவனிக்கத்தக்கது. அதே சமயம் இப்படி லக்னத்தில் பரிவர்த்தனையால் வந்து அமரும் செவ்வாய் தனது பார்வைகளால் சுகஸ்தானமான 4 ஐயும் களத்திர பாவமான 7 ஐயும் 8 ஆம் பாவத்தையும் பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு மறுதிருமணமும் அமைந்தது.  

மீண்டும் உங்களை மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501   

Sunday, 6 October 2019

ராகு போடும் ரங்கோலிகள்.


ராகு – கேதுக்கள் நிழல் கிரகங்கள், மாய கிரகங்கள், பொய்யான தோற்றத்தையும் மாய வலைகளையும் வீசி அதில் மனிதர்களை சிக்கவைத்து அவர்களின் கர்மங்களை கழிக்க வைத்து ஒருவரது பூர்வ ஜென்ம கணக்கை நேர் செய்பவை. உண்மையில் மனிதர்களின் ஜென்மாந்திர கர்மங்களின் சாட்சி பூதங்கள் இவை. ஒருவரது ஜாதகத்தில் நல்ல முறையில் அமைத்தால் அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குபவை. மின்னியல், அணுவியல், மின்னணுப் பொறியியல், மருத்துவம், திரைத்துறை, தொலைக்காட்சி, ஜோதிடம் , ஆன்மிகம், விண்வெளி போன்ற பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துபவை. இத்துறைகள் இன்று முக்கிய பொருளாதாரத் துறைகள் என்பது கவனிக்கத்தக்கது.  ராகு-கேதுக்களின் சுப ஆதிக்கம் பெற்றவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துபவை.



ராகு-கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் தன, ஜீவன கிரகங்களுடனும் தன ஜீவன பாவங்களுடனும் அவற்றின் அதிபதிகளுடனும்  தொடர்புகொண்டால் ஒரு ஜாதகனுக்கு பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த உயர்வுகளை வழங்கும். பொருளாதாரம் என்பது உயிரற்ற ஜடக்காரணியாகும். என்பதால் நிழல் கிரகங்களான இவை  ஜடக்காரணிகளை பெரும்பாலும் கடுமையாக பாதிப்பதில்லை. அதே சமயம் இவை ஜாதகத்தில் தண்டனை வழங்கும் விதத்தில் அமைந்திருந்தால் பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம் என்பது போன்ற பல்வேறு மாய விஷயங்களை நினைத்து பயம்கொள்ள வைத்து பைதியக்காரர்களாக்குகின்றன  என்பதும் உயிர்க்காரணிகளான குடும்ப உறவுகளை  கடுமையாக பாதிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ராகு ஏற்படுத்தும் மாற்றங்களை கேது சீர்செய்யும் வல்லமை படைத்தது. இப்பதிவில் நாம் ராகுவில் செயல்பாடுகளை ஆராய்வோம்.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்ன ஜாதகத்தில் ஜீவன காரகன் சனி 12ஆமிடமும் ஜல ராசியுமான விருச்கிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்கிறது. லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. வேலை பாவம் எனப்படும் 6 ஆம் பாவத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் உச்சமாகி நிற்கிறது. சந்திரனின் சாரநாதன் சூரியன் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் சாரப் பரிவர்த்தனை பெற்று லக்னத்திற்கு திக் பலத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. லக்னாதிபதியும் முதன்மையான ஜலக்கிரகமான குரு கேதுவின் அஸ்வினி சாரம் பெற்று வக்கிர கதியில் நிற்கிறது. குரு வர்கோத்தமம் பெற்று நவாம்சத்தில் குருவின் வீட்டில் செவ்வாய் அமைந்தது சிறப்பு. நான்காவது பாவத்தில் ஜல ராசியான மீனத்தில் தனித்த நிலையில் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று ராகு திசை நடத்துகிறது.  சனி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாயின் வீட்டில்  நிற்பதால் புதன் சனி தொடர்பு குறிக்கும் கணினி மென்பொருளாளராக கர்ம ஸ்தானத்தில் நிற்கும் திக்பல சூரியன் குறிக்கும் அமெரிக்காவில் பணியாற்றுகிறார். கேந்திரப்பாவிகள் சிறப்பாக செயல்படுவர் என்ற விதிப்படி ராகு லக்ன கேந்திரத்தில் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டிலேயே அமைந்து திசை நடந்துவதால் சிறப்பான பலனை தற்போது தனது திசையில் அளித்து வருகிறது.

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


மிதுன லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ராகு உச்சத்திற்கு சமீபமாக நிற்கிறது. லக்னாதிபதி புதன் சுய சாரமான ரேவதியில் நீசம் பெற்று அமைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் சூரியன் லக்னத்திற்கு 1௦ ல்  திக்பலத்தில் அமைந்துள்ளார். செவ்வாயும் வர்கோத்தமம் பெற்ற குருவும் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளனர். சனி தனது மூலத்திரிகோண வீடான கும்பத்தில் ராகுவிற்கு திரிகோணத்தில் ராகு சாரம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமிட அமைப்பால் ஜாதகி நிலத் தரகராகவும்,  கல்விக்கூடங்களுக்கு நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து தரகு பெறுபவராகவும் செயல்படுகிறார். அதே சமயம் ஜீவன காரகன் சனி ராகுவுடன் தொடர்பு கொள்வதால் ரைஸ் புல்லிங், மண்ணுள்ளிப் பாம்பு போன்ற வகையிலும் தனது வருமானத்தை அடைய முனைகிறார். இதற்குக் காரணம் ராகுவே ஆகும்.

மூன்றாவதாக கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் அமைந்து 7 ல் நிற்கும் சனியை பார்வை செய்கிறார். மீனத்தில் உச்ச குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமைந்த சனியுடன் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் அமைந்துள்ளார். சந்திரன் ராசியாதிபதி குருவுடன் லக்னத்திற்கு 11 ல் உச்ச நிலை பெற்ற குருவுடன் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளார். குரு சனியின் பூச நட்சத்திரத்தில் அமைந்து சனியுடன் சாரப்பரிவர்தனை பெற்றுள்ளது. இத்தகைய அமைப்பால் ஜாதகி அரசுப்பணியில் உள்ளார். ஜாதகி தனது வேளையில் சிறப்பாக செயல்படுபவர். தைரிய ஸ்தானாதிபதியும் தைரிய காரகனுமான செவ்வாய் நீச பங்கம் பெற்றதால் துணிச்சல் நிறைந்தவர். ஜாதகிக்கு தற்போது சந்திரதிசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜாதகத்தில் ராகுவுக்கு முன்னால் அமைந்த சந்திரனை நோக்கி ராகு வரும் நிலையில் அமைந்துள்ளது. ராகு லக்னத்திற்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துகிறது. இந்த அமைப்பால் தைரியம் நிறைந்த ஜாதகி தற்போது மனோ ரீதியாக மிகுந்த பயம் கொண்டவராக உள்ளார். அந்த பயமும் ராகு அமைந்த 8 ஆம் பாவத்தால் தனது ஆயுள் பற்றியதாகவும், பரிவர்தனைக்குப்பின் மீனதிற்கு வரும் குருவால் தனது குழந்தையின் மீதானதாகவும் உள்ளது.  தைரியம் நிறைந்த ஜாதகியின் மனோபலத்தை ராகு உலுக்குகிறார் என்றால் அது மிகையல்ல.

நான்காவதாக ஒரு சிறுவனின் ஜாதகம் கீழே.


துலாம் லக்ன ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியன் சந்திரனின் திருவோணம் சாரம் பெற்று மகரத்தில் நிற்கிறார். சூரியனை ஜல ராசியான கடகத்தில் வக்கிர கதியில் அமைந்த குரு பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு திசையில்  சூரிய புக்தி நடக்கிறது. சூரியனுக்கு திரிகோணத்தில் அமைந்த ராகுவும் சூரியன் அமைந்த அதே சந்திரனின் ரோகிணி சாரம் பெற்று நிற்கிறார். ராகுவோடு வக்கிர சனியும் இணைந்து 8 ல் நிற்கும் அமைப்பை சாக்கடை, சாராயம் காய்ச்சுமிடம் போன்றவற்றை குறிப்பிடும் விருசிகத்திலிருந்து  செவ்வாயும் கேதுவோடு இணைந்த சுக்கிரனும் பார்க்கின்றன. ஜாதகத்தில் சுக்கிரன் விருச்சிகத்தில் தந்தையை குறிப்பிடும் 9 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று புதன் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் நின்று சாரப்பரிவர்த்தனை பெறுகிறது. 

ஜாதகரின் தந்தை மதுவெனும் புதை குழியில் விழுந்து எழுந்து நிற்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரை மதுவிலிருந்து விடுவித்து அவரது உயிரை காப்பாற்ற உறவுகள் முனைகின்றன. ஆனால் ஜாதகரின் தந்தை அதிலிருந்து வெளியே வர முடியாதவராக காட்சியளிக்கிறார்.  இந்த ஜாகதகத்தில் ராகுவும் சூரியனும் நின்ற நட்சத்திராதிபதி ஒருவரே ஆகி  ராகு சூரியனுக்கு திரிகோணத்தில் உச்சம் பெற்றதாலும் ஜாதகரின் தந்தை மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. ராகு இங்கு முன்னர் கண்ட ஜாதகங்கள் போல் தனித்த நிலையில் அமையாமல் கிரக சேர்க்கையில் அமைந்து பாவிகள் பார்வை பெறுகிறது. இதனால் இங்கு ராகுவிற்கு பாவ வலு கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அடுத்த வாரப்பதிவில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 08300124501.

Thursday, 2 October 2014

செவ்வாயும் புதனும் சேர்ந்தால் செம கூட்டணியாமே?

எப்படியோ எனது தந்தைக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போதுபோல நாற்பது வருடங்களுக்கு முன் மதுவில் இத்தனை வகை இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பட்டை சாராயம், கள்ளு போன்றவை அப்போதைய பிரபலங்கள். அப்போது எனக்கு 5 வயது இருந்திருக்கலாம். அப்போது முதலே 30 வயது வரை நான் சற்று ஒல்லியான உடல்வாகுடையவனே. பள்ளியிலேயே எனக்கு ‘புல்தடுக்கி பயில்வான் என்றொரு பட்டப்பெயருண்டு.

அந்தப் பால்ய வயதில் ஒரு புண்ணியவானின் (!) ஆசைகேற்ப எனது தந்தையும் என்னை காலையில் எழுந்திருக்குமுன்பே பனை மரத்திலிருந்து கள் இறக்கும் இடத்திற்கு என்னை தரதரவென்று அழைத்துச் செல்வார். அங்கே ஒரு மரத்திலிருந்து இறக்கி தனியாக வைக்கப்பட்ட கள் எங்களுக்குத் தயாராக இருக்கும். ஒரு மரத்துக்கள் உடம்பைக் குண்டாக்கும் என்பதை கூறி ‘நீ மட்டுமல்ல உனது பரம்பரையே துக்கமற்ற வாழ்வில் திளைக்க வேண்டும் என்று படிப்பறிவில்லாத எனது தந்தைக்கு கவலையை மட்டுமல்ல உலகையே மறக்கும் காலாமிர்தத்தை அறிமுகப்படுத்தியவரும் அதே புண்ணியவான்தான். என்ன ஒரு உயர்ந்த குணம். கிட்டத்தட்ட 8  மாதங்கள் கள்ளைத்தான் நான் காப்பியாக எண்ணிக் குடித்தேன் என்றால் அது பொய்யல்ல. நல்ல வேலையாக ‘ஜல்லிபட்டி என்ற அத்தக்கிராமத்திலிருந்து ‘வெள்ளியணை அக்ரகாரத்திற்கு எங்களை இடம்பெயர வைத்து என்னைக் காப்பாற்றினான் என் இறைவன் முருகன்.

முதலில் மதுவை எனது தந்தை குடித்தார். பிறகு மது எனது தந்தையை குடிக்க ஆரம்பித்தது. நான் வளர்ந்து கல்வி முடித்து பணிக்குச் சென்ற பிறகும் அவர் இறக்கும்வரை என்னை குடிக்காதே எனக் கூறவேயில்லை. மது மனிதனை எப்படி அனு அனுவாகக் கொல்கிறது என்பதை  எனது பால்ய வயது முதல் அருகிலிருந்து பார்த்தவன் நான். எனது தந்தை அதிக மதுவருந்தியதன் விளைவாக போதையிலேயே போய்ச் சேர்ந்தார். தான் இறப்பது தெரியாமலேயே நினைவில்லாமலேயே இறந்தார் எனது தந்தை. அது ஒன்று வேண்டுமானால் மது எனது தந்தைக்குச் செய்த நன்மையாக இருக்கலாம்.

தீய பழக்க வழக்கங்களுக்கு காரகன் செவ்வாய் ஆவார்.

செவ்வாய் ஜாதகத்தில் கெட்டு அதனுடன் புதன் சம்பந்தம் பெற்றால் புகைப்பிடித்தல், புகையிலை உண்ணுதல், கஞ்சா, மது உள்ளிட்ட அணைத்து போதை வஸ்த்துக்களின் பழக்கம் ஏற்படும். புதன் செவ்வாய் இவற்றுடன் இரண்டாம் பாவமும் தீய பழக்க வழக்கக்களுக்குரிய 6 ஆம் பாவமும் சம்பந்தம் பெறவேண்டும். இந்த அமைப்பில் ராகு சேர்ந்தால் கூட்டாக மதுவருந்துதல், போதை ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விபரீதங்களின் எல்லைக்கு கிரகங்கள் இட்டுச் செல்லும்.

தீய பழக்கங்கள் மற்றும் தொடர்புகள் ஏற்படும் காலத்தையும் அவை முடிவுறும் காலத்தையும் செவ்வாய் மற்றும் 6 ஆம் இடம் இவைகளோடு தொடர்புடைய கிரகங்களின் நிலையைக் கொண்டு துல்லியமாக அளவிட முடியும்.


பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால புதன் திசை இருப்பு: 1 வருடம் 6 மாதம் 23 நாட்கள்.

லக்னாதிபதி செவ்வாயானவர் லக்னத்திற்கு 6 ஆமதியான வக்ர கதியிலுள்ள  புதனின் ஆயில்ய நட்சதிரத்தில் லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் நீசம். நீச செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் அதே புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நீசம் உடன் ராகு சேர்க்கை. செவ்வாயும் சந்திரனும் நீசப் பரிவர்த்தனை. சர ராசியான விருச்சிகத்திற்கு பாதக ஸ்தானத்தில் (9 ஆம் பாவம்) லக்னாதிபதி. ராசியும் லக்னமும் சஷ்டாஷ்டக (6 – 8) அமைப்பில் உள்ளது. ஜாதகரைக் காப்பாற்ற வேண்டிய குரு லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 11 ஆமிடத்தில் உள்ளது. மேலும் விருச்சிக ராசிக்கு ஒரு விசேஷ குணம் உள்ளது அது என்னவெனில் ஒரு விஷயத்தில் அதீத விருப்பையும் இல்லாவிட்டால் அதீத வெறுப்பையும் கொள்ள வைக்கும் ராசி அது. ஜாதகர் கொண்டது மதுவின் மீதான அதீத விருப்பு என்பதுதான் சோகம்.

இவையனைத்தும் கடுமையான ஜாதக அமைப்புகள்.

ஜாதகருக்கு 2009 துவக்கத்தில் சந்திர திசை துவங்கியது. அதுமுதல் ஜாதகர் மதுவின் கோரப்பிடியில் அகப்பட்டுவிட்டார். ஜாதகர் இன்னும் மதுவின் பிடியிலிருந்து மீளவில்லை.

அம்ச சக்கரத்தில் செவ்வாய் உச்சமானதால் நீச பங்கப்படுள்ளது தெரியும். இது ஒரு நல்ல அம்சம். செவ்வாய் இப்படி நீசபங்கப்பட்டது செவ்வாய் அமைந்த வீட்டதிபதி சந்திரனின் நீசத்தையும் பங்கப்படுத்தும். ஆனால் இவை இரண்டும் ராசியில் நீச பரிவர்த்தனை ஆனதால் அம்சத்தினால் இக்கிரகங்களுக்கு ஏற்பட்ட வலுவானது தாமதமாகவே வேலை செய்யும்.

இப்படி ஒரு கிரகம் ராசியில் நீசமாகி அம்சத்தில் உச்சமானதன் பலனாவது ராசியில் அந்தக் கிரகம் நீசமானதன் பலன் முதலிலும் இரண்டாவதாக அம்சத்தில் உச்சமானதன் பலனும் கிடைக்கும் என்பதாம். எனவே சந்திர திசையின் பிற்பகுதியில்  ஜாதகர் படிப்படியாக மீண்டு வருவார் எனலாம். இதை மற்றொரு வழியிலும் அனுமானிக்கலாம். சந்திர திசை 10 வருடங்கள் என்பதும் சந்திரன் செவ்வாயின் வீட்டில் உள்ளதும் தெரிந்ததே. எனவே சந்திரன் தான் அமர்ந்துள்ள பாவத்தின் அடிப்படையிலும் தனது திசையில் பலனளிக்க வேண்டும். இதில் சந்திரன் அமர்ந்த செவ்வாயின் ஒரு வீடுதான் நீச சந்திரனால் கெட்டுள்ளது மற்றோர் வீடான மேஷம் கெடவில்லை எனவே சந்திர திசையின் முதன் 5 வருடங்களில் பாதிப்பு விருச்சிக ராசிக்குரியபடி கடுமையாகவும் மற்றோர் பகுதி மேஷ ராசிக்குரியபடி அதிக பாதிப்பின்றியும் அமையும்.  

கீழே மற்றோர் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால செவ்வாய் திசை இருப்பு: 3 வருஷம் 11 மாதம் 22 நாட்கள்.

மேஷ லக்னத்திற்கு 4 ல் லக்னாதிபதி நீசமாகி வக்ரமாகியுள்ளார்.நீச செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் தீய தொடர்புகளைக் குறிக்கும் 6 ஆமிடத்தில் நீசன் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். அதனுடன் முந்தைய ஜாதகத்தைப் போலவே ராகு சேர்க்கை. 

இப்படி மனோகாரனான சந்திரன் கெட்டு அதனுடன் ராகு சேர்வது ஜாதக அமைப்பில் ஏற்படும் கெடுபலன்களை தீவிரப்படுத்தும்.

ஜாதகருக்கு 1999 ல் துவங்கிய குரு திசை ஜாதகருக்கு வெளிநாட்டு வேலையை வழங்கி வெளிநாடு அனுப்பியது. காரணம் குரு ஒரு ஜலக்கோள் என்பதும்  வெளிநாடு தொடர்பை ஏற்படுத்தும் 9 ஆம் பாவாதிபதியாக வருவது ஒரு காரணம். மற்றொன்று  லக்னாதிபதி ஜல ராசியான 4 ஆமிடத்தொடு தொடர்பு கொண்டதும் ஆகும். ஆனால் குருவும் மது பழக்கத்தைக் குறிக்கும் புதனின் வீடான மிதுனத்துடன் தொடர்பு பெற்றது ஜாதகரை மதுவுக்கு அடிமையாக்கியது.

குரு பாக்யாதிபதி (9 ஆமதிபதி) என்பதால் பாக்கியங்களைக் கொடுத்தது ஆனால் விரயாதிபதி (12 ஆமதிபதி) என்பதால் புத்திர வகையில் ஜாதகருக்கு விரையத்தை அதாவது புத்திர மறுப்பை கொடுத்தது. இதற்கு லக்னத்திற்கு 5 ல் அமைந்த சனியும் முக்கிய காரணம். ஜாதகர் செயற்கை முறையில் புத்திர பாக்கியத்திற்கு முயன்றார். ஆனால் மருத்துவர்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமிருப்பதால் செயற்கை முறை பலனளிக்காது என தெரிவித்துவிட்டனர். அம்சத்திலும் ஐந்தாமதிபதி நீசமானதை கவனியுங்கள். முந்தைய ஜாதகம் ராசியில் கெட்டு அம்ச வலுவால் தரக்கூடியது. மூன்று கிரகங்கள் (குரு, செவ்வாய் , சனி) வக்ர கதியிலமைந்த  இந்த ஜாதகத்தில் மூன்றுமே தண்ணியடித்துவிட்டு அமர்ந்திருக்கும் நிலைதான்.

மது ஜாதகரின் வாழ்வை மட்டும் சீரழிக்கவில்லை அவரது வம்ச விருத்தியையும் தடை செய்துவிட்டது.

வளரும் சமுதாய அமைப்பில் பல்வேறு சீர்கேடுகள் அதிகரித்துவிட்டன. அதில் முதன்மையானது மதுவின் மீதான மோகம்.

இன்று மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அது காவல் துறைக்கும் (செவ்வாயின் அம்சம்) ஜாதீய  அமைப்புகளுக்கும் (ராகுவின் அம்சம்) வருமானம் ஈட்டும் அற்புதமான வழியாகிவிடும். ஜாதீயக் கயவர்கள் தேசாபிமானிகள் போல நடிப்பது இதற்காகத்தான். அரசு மதுவை வருமானம் ஈட்டும் பொருளாகப் பார்க்காமல் இதர வழிகளில் பொருளீட்ட முனைய வேண்டும். மதுவின் மீதான கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அணைவரும் இணைந்து போராடினால் மதுவின் பயன்பாட்டை முடக்கிவிடலாம்.

நினைவில் கொள்ளுங்கள் அபினுக்காக தங்கள் தேசத்தின் (ஹாங்காங்) ஒரு பகுதியையே ஆங்கிலேயர்களிடம் இழந்தவர்கள் சீனர்கள்.

நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் இழக்கவிருப்பது நமது வாழ்வை, நமது சமுதாயத்தை.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்