Showing posts with label கிரக உறவுகள். Show all posts
Showing posts with label கிரக உறவுகள். Show all posts

Wednesday, 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Thursday, 7 October 2021

மீன ராசிக்கு சுக்கிர திசையில் திருமண யோகம்!

                           


மீன ராசியினருக்கு சுக்கிரன், ராசிக்கு 3 ஆமதிபதி என்ற வகையில் திருமண யோகத்தையும் 8 ஆமதிபதி என்ற வகையில் அவமானம், கண்டம், பிரிவினை, நிரந்தர குறைபாடுகளையும் தர வேண்டியவராகிறார். மீன ராசியினருக்கு 2023 முதல் ஏழரை சனி துவங்கவுள்ள நிலையில் சுக்கிர திசை நடக்கையில் திருமணம் செய்யலாமா? என கலக்கத்துடன் ஓரளவு ஜோதிட அறிவுகொண்டோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் எடுத்து வருகின்றனர். சுக்கிர திசை 2௦ வருடங்கள் எனும் நிலையில் அத்தனை வருடங்கள் பாதிப்பு ஏற்படும்  என்று திருமணத்தை தள்ளிப்போடுவது  மடமையாகும். மேலும் ராசி மீனமாயினும் லக்னம் என்ன என்பதையும் அளவிட்டே இதற்கு பதிலளிக்க இயலும். ராசியும் லக்னமும் மீனமாக அமைபவர்களுக்கு சுக்கிர திசை சற்று கடுமையை அதிகம் கட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதையும் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக்கொண்டே கூற வேண்டும். மேலும் ஒருவரது இல்லற கொடுப்பினைகளை கூற கால புருஷனுக்கு 7 ஆமதிபதி என்ற வகையில் சுக்கிரனை முதன்மையாக எடுத்துக்கொண்டாலும் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தையும் அதன் அதிபதி நிலையையும் கவனத்தில்கொள்வது அவசியம்.  இந்தச் சூழலில் சுக்கிர திசை மீன ராசினருக்கு என்னென்ன பலன்களை எவ்வெப்போது வழங்க இருக்கிறது என்று தகுந்த ஜோதிடரிடம் சென்று தெளிவு பெறுவது சுக்கிர திசையின் சாதக-பாதகங்களை எதிர்கொள்ள உதவியாய் அமையும். இதை உதாரண ஜாதகங்கள் மூலம் இன்றைய பதிவில் அலசுவோம்.  

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 26 வயது நிரம்பிய ஒரு ஆண். ஜாதகருக்கு 2015 முதல் சுக்கிர திசை நடப்பில் உள்ளது. சுக்கிரன் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி ராசிக்கு 8 ல் பாவிகள் தொடர்பில் ஆட்சி பெற்று வக்கிரமாகி நிற்கிறார். இந்நிலையில் சுக்கிரனுக்கு பாதக வலு கூடும். இதனால் சுக்கிர திசை ஜாதகருக்கு பெண்கள், இல்லற வகையில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கால புருஷனுக்கு 7 ஆமிடமாகிய துலாத்திலேயே சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது. சுக்கிர திசை ஜாதகருக்கு அவரது 41 ஆவது வயது வரை உள்ளது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போட இயலாது. சுக்கிரன் ரிஷபம், துலாம் ஆகிய இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் இரு வீட்டு பலனையும் வழங்குவார். ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் ஒற்றைப்படை பாவங்களிலுள்ள கிரக திசா-புக்திகள் நடக்க வேண்டும். குறிப்பாக காமத்திரிகோணங்கள் எனப்படும் 3, 7, 11 ஆமிட கிரகங்களின் திசா புக்தியோடு குடும்பம் அமைவதை குறிக்கும் 2 ஆமிடமும்  தொடர்பாக வேண்டும்.

களத்திர பாவாதிபதியும் ஆயுள்  காரகருமான சனி 8 ல் மூலத்திரிகோண வலு பெற்றது ஆயுள் ஸ்தானத்திற்கும் களத்திர வகைக்கும் சிறப்பே எனினும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணத்தை தாமதப்படுத்துவார் எனலாம். எனவே ஜாதகர் சுக்கிர திசையின் துலாம் ஆதிபத்திய காலம் முதல் 1௦ வருடம் முடிந்து 2 ஆவது ரிஷப ஆதிபத்திய காலத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் சில காலமுள்ளது. இப்போது அதற்கான முயற்சி எடுத்தால் ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரன் பிரிவினையையும் அவமானத்தையும் தருவார். லக்னத்திற்கு 8 ல் நிற்கும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பது திருமண தடையையும் மீறி முயன்றால் அவமானத்தை தரும். (8 ஆமிடம் அவமானம்). கோட்சார சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தை தாண்டி ஜென்ம சனியாக மீனத்தில் சஞ்சரிக்கும்போது, லக்னத்திற்கு 5 ல் நின்று லக்னத்தையும் 9,11 பாவங்களையும் பார்க்கும் குருவின் புக்தியில் திருமணம் செய்வதே நல்லது. தற்போது திருமண செய்வித்தால் அது அவமானத்தை ஏற்படுத்தி அதன்  விளைவாக பிரிவினையை தரும்.

சுக்கிர திசை சந்திர புக்தி நடக்கும் ஜாதகருக்கு தற்போது திருமண ஏற்பாடு நடந்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜாதகருக்கு தொழில் சிறப்பில்லை என பெண் வீட்டார் திருமணத்தை நிறுந்திவிட்டனர். ஜாதகர் இதனால் பெருந்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார். அவமான ஸ்தானமான ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரனும் சந்திரனும் தங்களுக்குள் சஷ்டாஷ்டகமாக (6-8 ஆக) அமைந்துள்ளனர். இதுவே ஜாதகருக்கு பெருந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனன சுக்கிரன் வக்கிரமாகி தற்போது கோட்சாரத்தில் லக்னத்தின் 7 ஆமதிபதி சனியும் வக்கிரத்தில் உள்ளதால் பெண் வீட்டார் பின்வாங்கிவிட்டனர். சுக்கிரன் மனைவியை குறிப்பதோடு மூத்த சகோதரியை குறிப்பவர். ஜாதகருக்கு அவரது மூத்த சகோதரிதான் பெண் பார்த்துள்ளார். இதனால் மூத்த சகோதரி ஏற்பாட்டாலும், திருமணதிற்கு பார்த்த பெண்ணின் மூலமும் ஜாதகருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் சுக்கிரனின் காரக உறவுகளான மூத்த சகோதரி, அத்தை ஆகிய சுக்கிரனின் காரக உறவுகள் ஜாதகரின் திருமண விஷயத்தில் தலைடாமல் பார்த்துக்கொள்வது பெருமளவு ஜாதகருக்கு ஏற்படும் அவமானங்களை குறைக்கும்.     

கீழே மற்றொரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 3௦ வயதான ஒரு பெண். இந்த ஜாதகிக்கு 2008 முதல் சுக்கிர திசை நடக்கிறது. தற்போது திசையின் இரண்டாவது பகுதியில் உள்ளார். ராசி மீனமானாலும் லக்னம் கும்பமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் முந்தைய ஜாதகம் போல சுக்கிரன் இங்கு கடுமை காட்ட மாட்டார். சுக்கிரன்  கும்ப லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாவதால் ராஜ யோகாதிபதியாவதுதான் காரணம். லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதியானாலும் அவர் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். மீன ராசிக்கு 3, 8 க்கு உரியவராகி ராசிக்கு 8 ல் நிற்பதுவும் சுக்கிரன் தனது திசையின் ஒரு பகுதியில் சிரமங்களை ஏற்படுத்துவார் எனலாம். சுக்கிரன் இங்கு முதலில் ஆராய்ந்த ஜாதகத்தில் போலன்றி பாவிகள் தொடர்பின்றி நிற்கிறார். இதனால் சுக்கிரன் ஏற்படுத்தும் சிரமங்கள் ஜாதகி பொருத்துக்கொள்ளுமளவு அல்லது வெளியில் தெரியாத அளவில் இருக்கும் எனலாம். களத்திர பாவாதிபதி சூரியன் ராகுவோடு லாபத்தில் தொடர்பு பெற்று 7 ல் நிற்கும் தனித்த குருவோடு பரிவர்த்தனை பெறுவதால், சுவாதி-4 ல் ராகு சாரத்தில் நிற்கும் சுக்கிரன் இந்த ஜாதகிக்கு பாதகத்தை, திருமண வாழ்வை தடைபடுத்துவதன் மூலமே தருகிறார். தாம்பத்ய ஸ்தானமான  12 ல் ஆட்சி பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் 2 ஆமிடத்தையும் 1௦ ஆம்  பார்வையால் திசாநாதன் சுக்கிரனையும் கட்டுப்படுத்துகிறார். இதனால் திருமணம் மூலம் ஜாதகிக்கு  பாதகம் ஏற்படுத்துவதை தவிர்க்க திசா நாதன் சுக்கிரனுக்கு சனி தனது 1௦ ஆம்  பார்வையால் உத்தரவிடுகிறார்.    

தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதியாக திசாநாதன் சுக்கிரனே வந்து, தந்தையை குறிக்கும் சூரியனே 7 ஆமதிபதியாகி 11 ஆமிட குருவோடு பரிவர்தனையாகவதால் இந்த ஜாதகிக்கு திருமண வாழ்வில்  ஏற்படவிருக்கும் சிரமங்களை கணவருக்குப்பதில் சூரியனாகிய தந்தை வாங்கிக்கொள்கிறார். எவ்வாறெனில், ஜாதகியின் தந்தைக்கு, குரு குறிக்கும் குடும்ப வகையிலும், பொருளாதார  வகையிலும் இழப்பு ஏற்பட்டது. சுக்கிர திசையில் 2 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் பெற்ற சனி புக்தியில் ஜாதகியின் 3௦ ஆவது வயதில் தற்போது தாமதமாக திருமண வாழ்வு கூடி வந்துள்ளது. மீன ராசி சுக்கிர திசை என்றாலும், சுக்கிரன் லக்னாதிபதி சனிக்கு நட்பென்பதால் தீவிர பாதகத்தை ஜாதகிக்கு ஏற்படுத்தவில்லை. அது தாங்கிக்கொள்ளும் அளவிலேயே இருந்தது. ஏழரை சனியில் களத்திர வகையில் ஜாதகிக்கு ஏற்படும் சிரமங்களும்  களத்திர பாவாதிபதி பரிவர்தனையாவதால் திசை மாறிவிடும்.  

எனவே சுக்கிர திசை மீன ராசிக்கு ஏழரை சனியில் திருமண வாழ்வில் பாதகத்தையே செய்யும் என்று பொதுவாக எண்ணி கலங்க வேண்டாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 8 July 2021

மணி அடிச்சா சோறு! இது மாமியாரு வீடு!

சமீபத்தில் திருமணத்திற்காக ஆராய்ந்த ஒரு ஜாதகத்தில் ஜாதகியின் பெற்றோர் தங்களது ஒரே மகளை பிரிய மனமின்றி, வீட்டோடு மாப்பிள்ளையாக வர வாய்ப்புள்ள வரனை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டு வரங்களின் ஜாதகங்களை கொடுத்தனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் இக்காலத்தில் பெண்களை இல்லத்து லக்ஷ்மிகளாக நடத்தாமல் வரதட்சினை உள்ளிட்ட பல வகைகளில் கொடுமைப்படுத்தும் குடும்பத்து வரன்களுக்கே இது போன்று நிலை ஏற்படும் என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெண் என்பவள் குடும்பத்தை வளர்ச்சியுறச் செய்பவள், இல்லத்து லக்ஷ்மி. “லக்ஷ்மியின் வடிவமான பெண்ணை பாதுகாக்காமல் தூஷிப்பவனில் இல்லத்திலிருந்து லக்ஷ்மி தேவி வெளியேறுகிறாள். பதிலாக அங்கு மூதேவி குடியேறுகிறாள்” என்று ஸ்ரீ தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.  பெண்கள் கல்வியில் முன்னேறி ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கும் இக்காலத்தில் ராமன் இருக்குமிடம் அயோத்தி எனும் பழங்கால நிலைகள் மாறிவருவது வருந்தத்தக்கது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளைகளாக செல்லும் ஆண்களுக்கான ஜாதக அமைப்பு என்ன? என ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.  

ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின் நிலையை சொல்லும் என்றால், 7 ஆமிடம் களத்திரத்தின் நிலையை சொல்லும். 2 ஆமிடம் ஜாதகரின் குடும்ப நிலையை  சொல்லும் என்றால், களத்திரத்தின் குடும்பத்தை பற்றிய விபரங்களை 7 க்கு 2 ஆமிடமான 8 ஆமிடம் சொல்லும். லக்னத்திற்கு 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திலும், ராசிக்கு 7 ஆமதிபதி சந்திரன் ராசியிலும் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது ஜாதகரின் மேல் மனைவியின், ஆளுமையும் ஆதிக்கமும் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் சூரிய சந்திரர்களே லக்னத்திற்கும் ராசிக்கும் 7 ஆமதிபதிகளாகி லக்னம், ராசியில் வந்து அமைவது, மனைவி வந்த பிறகு ஜாதகர் தாய், தந்தையை விட்டு விலகுவார் என்பதை குறிக்கிறது. லக்னத்தோடு தொடர்புடைய கிரக காரக உறவுகளை ஒரு ஜாதகர் எந்த சூழலிலும் இழக்க மாட்டார். ஆனால் அவை 7 ஆம் பாவாதிபதியாகி லக்னம், ராசியில் வந்து அமர்வதால் மனைவி வந்த பிறகு ஜாதகர் 7 ஆமதிபதியின் ஆளுகைக்கு ஜாதகர் முழுமையாக சென்றுவிடுவார். ஆனால் அந்த காரக உறவுகளை விட்டுகொடுக்க மாட்டார். இங்கு கடக ராசிக்குரிய சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 12 ல் சுக்கிரன், செவ்வாயோடு மறைகிறார். இது தாயாரையும், சகோதரனையும் விட்டு ஜாதகர் விலகுவதை குறிக்கும். சுக்கிரன் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் பாவாதிபதி சூரியன் லக்னத்தில் வந்து அமர்வதால் மனைவியையும், தந்தையையும் விட்டு ஜாதகர் பிரிய மாட்டார்.  ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் மனைவி வந்த பிறகு ஜாதகர் மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி சென்றுவிட்டார். ஒரே ஊரில் உள்ள தந்தை, தாயையும், சகோதரனையும் அவ்வப்போது வந்து கவனித்துக்கொள்கிறார்.  

ஜாதகத்தில் 8 ஆமதிபதி புதன் லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் நீச நிலை பெற்று அமைந்துள்ளது. அதே சமயம் 2 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஜாதகரின் வீட்டின் பொருளாதார சூழலைவிட மனைவி வீட்டின் பொருளாதார சூழல் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. 2 ஆமிடத்தில் புதன் அமைந்துள்ளது ஜாதகர் புதனின் காரகதுவமான வியாபாரம் தொடர்புடைய கமிஷன், தரகு, ஏஜென்சி போன்றவற்றில் ஈடுபடுவதையும்  ஜாதகரின் வீட்டில் ஒரு கல்வியாளர் மூலம் வருமானம் வருவதையும் குறிப்பிடுகிறது. ஜாதகரின் தாயார் ஒரு ஆசிரியை. சிம்ம ராசியும் சூரியனும் சுயமாக தொழில் புரிபவர்களை குறிக்கும். சூரியன் லக்னத்தில் வந்து அமைந்ததால் ஜாதகருக்கு திருமணமான பிறகு இந்த அமைப்பு ஜாதகரை தொழில்களை நிர்வகிக்கும் நிர்வாகியாக உயர்த்துகிறது. நிர்வாகம் என்பது சூரியனின் காரகத்துவம். 7 ஆமதிபதி சூரியன் ஆனதால் திருமணமாகி மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாகிவிட்டார்.


நவாம்சத்தில் 7 ஆமிட குரு வர்கோத்தமமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இது குடும்பம் அமைத்தபின் பொருளாதாரத்தை முன்னிட்ட விஷயத்தில் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக ஜாதகர் தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகத்  தயங்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி குரு, 7 ஆமிடத்தை சிம்ம ராசியில் 3 ஆம் பாவத்தில் நின்று பார்க்கிறார். இதனால் களத்திர பாவம் வலுவடைகிறது. இது மனைவி ஆளுமையும், ஜாதகரை கட்டுப்படுத்தும் வல்லமையும் மிக்கவர் என்பதையும் தெரியப்படுத்துகிறது. 7 ஆமதிபதிக்கு வீடு கொடுத்த சூரியன் 1௦ ல் திக்பலம் பெற்று நிற்பது மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாக உயர்வார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.  

இந்த ஜாதகர் திருமணமான பிறகு மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி மனைவி வீட்டாரின் தொழில்களை நிர்வகிக்கிறார். நவாம்ச லக்னாதிபதி புதன், 2 ஆம் பாவமான கடகத்தில் சுக்கிரனோடு இணைவு பெற்றுள்ளது வருமான வகைகளில் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவார்கள் என்பதையும், இவற்றோடு சந்திரன் சேர்க்கை அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் தொடர்பான வியாபாரம் அது என்பதையும் குறிப்பிடுகிறது. (புதன்=தரகு,கமிசன், ஏஜென்சி & சந்திரன்=வியாபாரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்). ராகு இவைகளோடு சேர்க்கை  பெறுவது அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களோடு பலதரப்பட்ட நவீன சாதனங்களையும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. 

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 25 April 2021

எவனோ ஒருவன் வாசிக்கிறான்!

 


வாழ்வில் சில முறை நாம் சன்னியாசிகளை பார்த்து அவர்களால் சில எண்ணங்களை மனதில் பதிய வைத்திருப்போம். அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதன் மூலம் உலகத்தை காண்கிறார்கள். வட்டத்துக்குள் இருந்து உலகத்தை காண்பவர்களும் என்னதான் தனது முன்னோடிகளின் அனுபவ அறிவை புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் அவர்களுக்கும் நிதர்சனமான உலகியல் அறிவு தேவைப்படுகிறது. அதனால்தான் சன்னியாசிகள் தேசாந்திரம் செல்கிறார்கள். சாதாரண மனிதன் அலைந்து திரிந்து அனுபவங்கள் பல பெற்று அதன் பிறகே வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை உணர்கிறான். இந்தக்கருத்தைக்கொண்டு பார்த்தால் சன்னியாசிகளின் அறிவைவிட சாமான்யனின் அறிவே சிறந்தது என்பது தெளிவு. ஆனால் சாமான்யன் தனது இல்லற பொறுப்புகளால் தள்ளாடுகிறான் அதனால் தனது அனுபவத்தால் பெற்ற அறிவைக்கூட சில சமயம்  குடும்ப பொறுப்புகளால் செயல்படுத்த முடியாதபடி திணறுகிறான். இந்த விஷயத்தில் சன்னியாசிகளுக்கு சாமான்ய மனிதனைவிட சிறப்புண்டு எனலாம். ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்வை குறுக்கிக்கொண்டு வாழும் இந்த சன்னியாசிகளுக்கான ஜாதக அமைப்புகளை ஆராயவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஒரு எண்ணமிருந்தது. சன்னியாசம் எனும் புயலின் மையத்தில் தற்போது நிலைகொண்டுள்ள ஒரு ஜாதகம் மூலம் இது தொடர்பான  விஷயங்களை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். அதுவும் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர் பிறந்த நாளில் இப்பதிவு வருகிறது என்ன பொருத்தம் பாருங்கள்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


21 வயதான இந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் துறவியாக மாறி பாலைவன மாநிலமொன்றில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்.  தமிழ்நாட்டின் முதன்மை தென்மாவட்ட தலைநகரில் வசித்துவரும் ஒரு வட  மாநில குடும்பத்தை சார்ந்தவர் இப்பெண். மேஷ லக்னாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்று  அதன் அதிபதி குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது மோட்சம், நீண்ட சிறைவாசம், அடைபடுதல், நோயால் படுத்த படுக்கையாக பல நாள் இருத்தல் மற்றும் இல்லற இன்பத்தை அனுபவிப்பதையும் (படுக்கை சுகம்)  குறிப்பிடும் இடமாகும். 12 ஆமிடம் மோட்ச ராசியாகி 12 ஆமதிபதி லக்னாதிபதியோடு பரிவர்த்தனை பெற்றதால் இந்தப்பெண் சன்னியாச வாழ்வை விரும்புகிறார். 12 ஆமதிபதி குரு பாதகாதிபதி சனி தொடர்பு பெற்று லக்னத்தில் அமைந்ததும், 12 ல் ஒரு பாவி செவ்வாய் அமைந்து 12 ஆமிட செவ்வாயை கேது தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் இங்கே படுக்கை சுகம் என்ற இல்லற சுகம் அடிபட்டுவிடுறது. மோட்ச பாவமான 12 ஆமிடத்தில் அமைந்த லக்னாதிபதியை கேது பார்ப்பது மோட்சத்தை முன்னிட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது வாழ்வை குறுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அடைபடுதலையும் குறிப்பிடுகிறது.

ஜாதகியை மோட்சத்தை நோக்கிய பாதையில் உந்தித்தள்ளிய காரணிகளை இப்போது ஆராய்வோம்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 அமைப்பில் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். இது பெற்றோர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பள்ளி செல்லும் காலத்தில் பெற்றோர்களின் தினசரி வாக்குவாதங்களை பார்க்கும் ஜாதகிக்கு குடும்ப வாழ்வின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது சாத்தியம். இதனால் இல்லறத்தை நினைத்து ஆசைகொள்ள வேண்டிய பருவ வயதில் ஜாதகிக்கு இல்லற வாழ்வின் மீது வெறுப்பு வந்தது நியாயமே. ஜாதகிக்கு கடந்த 2007 முதல் சுக்கிர திசை நடக்கிறது. ஜாதகி தனது நகரில் 8 ஆம் வகுப்பு வரை ஒரு உயர்தர ஆங்கிலப்பள்ளியில் படித்தார். அதன் பிறகு கும்பத்தில், லக்னத்திற்கு பாதகத்தில் நிற்கும் புதனின் சாரத்தில் கடகத்தில் ஆயில்யம்-4 ராகுவோடு இணைந்து நிற்கும் சந்திர புக்தியில் ஜாதகி தனது கல்வியை நிறுத்திவிட்டார். பாட்டியை குறிக்கும் கேது திசா நாதன் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். பெற்றோர்களின் சண்டையால் மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட ஜாதகிக்கு அவரது பாட்டி மன நிம்மதிக்காக மத நூல்களை படிக்கக்கொடுக்கிறார். பள்ளிக்கு செல்லாமல் மத நூல்களை படிக்கும் ஜாதகியை வீட்டில் யாரும் தொல்லை செய்யாதவாறு திசா நாதனை கட்டுப்படுத்தும் கேது கவனித்துக்கொள்கிறார். பாதக ஸ்தானத்தில் நிற்கும் 5 ஆமதிபதி சூரியனின் உத்திராடம்-4 ல் மகரத்தில் நின்று சுக்கிரன் திசை நடத்துகிறார். சுக்கிரனுடன் சன்னியாச கிரகம் கேது இணைந்துள்ளார். திசா நாதன் சுக்கிரனானாலும் அவர் தனது பகை கிரகமான சூரியனின் சாரம் பெற்று பாதக ஸ்தான தொடர்பும் பெற்றதால் ஒரு பருவ பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை கேது திசை மாற்றி அவருக்கு ஆன்மீக ஆசைகளை பாட்டி மூலம் தூண்டி விடுகிறார். இதனால் ஜாதகி தானொரு சன்னியாசி ஆக முடிவு செய்கிறார்.

தனது விருப்பத்தை ஜாதகி வீட்டில் தெரிவிக்கிறார். 5 ஆமிடம் ஒருவரின் ஆசையை குறிக்கும். அதனோடு தொடர்புடைய கிரக திசா-புக்திகள் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும். 5 ஆமதிபதி சாரம் பெற்ற சுக்கிர திசையில் இல்லற ஆசையை கேது தடை செய்தாலும் தனது காரகமான ஆன்மீக ஆசை நிறைவேற உதவுகிறார். கேதுவும் ஆசையை குறிக்கும் கிரகமாகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்பமாக வசிக்கும் ஜாதகியின் வீட்டில் ஏற்கனவே ஜாதகியின் பெரியப்பா ஒருவர் தனது இல்லறக்கடமைகளை நிறைவேற்றிய பிறகு சன்னியாசியாகி இருந்தார். இதனால் ஜாதகியின் சன்னியாசி ஆசைக்கு குடும்பத்தில் தாயாரைத்தவிர இதர அன்பர்கள் அனுமதி தந்தனர்.

ராகு-கேதுக்களின் அச்சும் – கிரகண தோஷமும்.

தாயார் மறுக்கக்காரணம் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு வெளியே சந்திரன் நிற்பதுதான். ராகுவை விட்டு சந்திரன் பாகை அடிப்படையில் விலகி இருந்தாலும் சந்திரன் ராகுவுடன் மோட்ச ராசியான கடகத்திலேயே நிற்பது அதன்  வலுவற்ற தன்மையை குறிக்கிறது. ஜாதகி பௌர்ணமியில் பிறந்துள்ளார். ராகுவுடன் சந்திரன் பௌர்ணமியில் இணைந்திருப்பது கிரகண தோஷமாகும். மனதை குறிக்கும் சந்திரனின் ராசியில் ராகு-கேதுக்களின் தொடர்பில் சந்திரன் நிற்பதால், ஜாதகியின் மனதை ஆளும் தகுதியை ராகு-கேதுக்கள் பெற்றுவிடுகின்றன. ஆனால் ஆட்சி பெற்று நிற்கும் சந்திரன் ஜாதகியின் வாழ்க்கையை காப்பாற்ற தன் மீது விழுந்துவிட்ட ராகு-கேதுக்களின் நிழலை மீறி போராடுகிறார். சந்திரன் ஜாதகத்தின் அதிக பாகை பெற்று (29 பாகை) நிற்கிறார். இதனால் அவர் ஆத்ம காரகனாகி வலுவுள்ளவராகவே உள்ளார். ஆனால் சந்திரனின் வலுவை கிரகண தோஷம் தவிடு பொடியாக்குகிறது. இதனால் சந்திரனின் காரக உறவான ஜாதகியின் தாயாரின் வார்த்தையை வீட்டில் அனைவரும் நிராகரிக்கின்றனர். அனைத்து கிரகங்களும் ராகு-கேதுக்களின் அச்சுக்குள் நிற்கும்போது சந்திரன் மட்டும் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி நிற்கிறார். இதன் பொருளாவது ஜாதகியின் உலகத்திற்குள் தாய் செல்ல முடியாது என்பதாகும்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 ஆக அமைந்த சூழலில் சந்திரன் அதிக பாகை பெற்று ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவும் சூரியன் குறைந்த பாகை (6 பாகை) பெற்று தாரா காரகனாகவும் உள்ளனர். இதனால் தந்தை தாய்க்கிடையே கடும் மனப்பிரிவினை. சூரியன் பாதக ஸ்தானத்தில் 12 ல் நிற்கும் லக்னாதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு உள்ளே  உள்ளார். இதனால் தந்தையை மீறி தாயின் சொல்லை ஜாதகி ஏற்றுக்கொண்டுவிட இயலாது. சுக்கிர திசையில் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கும் குருவின் புக்தியில் ஜாதகிக்கு உள்ளூரில் சன்னியாச சடங்குகள் கடந்த 2019 இறுதியில் கேது, சனி, குரு ஆகியவை கோட்சாரத்தில் தனுசு ராசியில் ஒன்றாக இணைந்திருந்தபோது  நடந்தன. புக்தி நாதன் குரு குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் கேது சாரம் பெற்று நிற்பதை கவனியுங்கள். இது சன்னியாச வாழ்வுக்காக குடும்பத்தை ஜாதகி பிரிவதை குறிப்பிடுகிறது.

தற்போது ஜாதகி தங்களது மதத்தின் தலைமை இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாதகியின் தாய் தனது மகளை சன்னியாச வாழ்விலிருந்து மீட்கப்போராடுகிறார். ஜாதகி தற்போது சற்றே தனது மாயையிலிருந்து விடுபட்டு தனது தாயின் கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார். சன்னியாச வாழ்வை முழுமையாக்கும் முடி பிடுங்குதல் எனும் முக்கிய சடங்கு தற்போதைய கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜாதகியின் மத சம்பிரதாயப்படி முடியை மழிக்கமாட்டார்கள். முழுமையாக பிடுங்கிவிடுவார்கள். தலை முடியை பிடுங்கிவிட்டால் மீண்டும் சன்னியாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இல்லற எண்ணம் வராதபடி அது தவிர்த்துவிடும் என்பதே அதன் அடிப்படை. தற்போது ஜாதகி தன்னை யாராவது காப்பாற்றி மீட்டுச்செல்வார்களா என தனித்து விடப்பட்ட நிலையில் காலம் கடந்து தனது செயல்களை எண்ணி வருந்துகிறார். ஜாதகியின் தாய் தன் மகளை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா? என தமிழ்நாட்டிலிருந்துகொண்டு கதறுகிறார். தாய் தனது குடும்பத்தை மீறி, தனது சமுதாய விதிகளை மீறி தனது மகளை காப்பாற்ற செயல்பட்டால் தனது மதம் மற்றும் குடும்பத்திலிருந்து  தன்னை  ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அறிந்து மனதுக்குள் கதறிக்கொண்டுள்ளார். ஜாதகத்தில் லக்னாதிபதி 12 ஆமிடத்தில் அதன் அதிபதியோடு பரிவர்தனையானது ஜாதகி குடும்ப வாழ்வுக்கு திரும்ப முடியாது என்பதையே குறிப்பிடுகின்றன.

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 11 April 2021

திருமண உறவில் சூரியன்!

 


சூரியன் தனது சுய கர்மங்களில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்தும் கிரகம் ஆகும். இதன் பொருளாவது எதன் பொருட்டும் ஒருவர் தான் விரும்பி ஈடுபட்டுள்ள செயலை நிறுத்தமாட்டார் என்பதாகும். சூரியன் சீரான மற்றும் நிரந்தரமான இயக்கத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஒருவரை புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் தனது செயலை செய்யவைக்கும் கிரகம்  சூரியனாகும். இதனால் சூரியனின் ஆதிக்கம் உடையோர் பிறரிடம் எளிதில் ஒன்றிவிட  மாட்டார்கள். அப்படியெனில் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களின் திருமண வாழ்வு என்னவாவது? என்றொரு கேள்வி எழும். திருமண உறவிலும் சூரியன் கௌரவம் பார்க்கும். ஒருவரது கௌரவம் பங்கப்பட்டால் அங்கே அவரது திருமண உறவு முறிகிறது என்பது பொருளாகும். தனது கௌரவத்திற்காக எதையும் இழக்கத்துணியும்  கிரகம் சூரியனாகும். இதனால் சூரியன் பொதுவாக திருமண உறவிற்கு எதிரான கிரகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சூரியன் கால புருஷனுக்கு களத்திர பாவமான துலாத்தின் பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் ஆதிக்கம் கொண்டவர்கள் கௌரவத்திற்காக தங்களது குடும்ப வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைத்துனைவர்களிடம் கிடைக்காத அன்பையும் நிம்மதியையும் குழந்தைகளிடம் பெறுகிறார்கள். காரணம் புத்திர காரகன் குரு, சிம்மத்தின் 8 ஆமிடமான மீனத்தின் அதிபதியாவதால் குடும்ப வாழ்வில் சிரமத்தை கொடுத்து சிம்மத்தின் 5 ஆமிடமான தனுசுவின் அதிபதியாவதால் குழந்தைகளால் நிம்மதியை தருகிறார். சூரியன் குடும்ப வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என்பதை ஆராய்வதே இன்றைய பதிவாகும்.


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் செவ்வாயுடன் 4 ஆம் பாவத்தில் இணைந்துள்ளனர். சுக ஸ்தானத்தில் இரு பாவிகள் இணைவது சுகத்திற்கு சிறப்பல்ல ஆயினும் கேந்திர பாவிகள் பொருளாதார வகையில் சிறப்பை தருகின்றனர். இங்கு செவ்வாய், சூரியனுக்கு பின்னால் 5 பாகை விலகி உள்ளது. இதனால் இது செவ்வாய்க்கு  கடுமையான அஸ்தங்கமல்ல. ஆயினும் செவ்வாயும்  சூரியனும் ஒன்று சேர்வதே இல்லறத்திற்கு சிறப்பல்ல. இக்கிரகச்சேர்க்கை பெற்றோர், தனது கௌரவம் பாதிக்கப்பட்டால் நல்ல சம்பாத்தியம் உள்ள வேலையைக்கூட எளிதில் உதறிவிடுவதை காண முடிகிறது. லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற சூரியன் ஜாதகரை எப்போதும் தனது வாழ்வின் உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே முன்னோக்கி நகர்த்தும். எந்த தோல்வியிலும் ஜாதகருக்கு பின்வாங்காத நிலையைத்தரும். சூரியன் செவ்வாய்  சேர்க்கை ஜாதகருக்கு தகுதிக்குறைவை அது எந்த வடிவமானாலும்  அல்லது உறவானாலும் உதறிவிடும் மனநிலையைத்தரும். ஆனால் சூரியன் செவ்வாய் சேர்க்கை நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்ததும் ஒரு நீர்க்கிரகம் சந்திரன் லக்னத்தில் அமைந்ததும் சூரியன் செவ்வாய் இணைவு தோஷத்தை பெருமளவு குறைத்துவிடுகிறது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் 6 ல் மகரத்தில் அமைந்து, அதற்கு பாதகமான விருட்சிகத்தில் செவ்வாயும் சூரியனும் அமைவது மனைவிக்கு பாதகத்தை செய்யும் அமைப்பாகவே தோன்றுகிறது. மனைவி தனது தகுதிக்கு குறைவானவராக இருந்தால் மனைவியோடு நல்லுறவு இருக்காது. தனது தகுதிக்கு நிகரானாவராக இருப்பின் மனைவியை  ஜாதகர் விட்டுத்தர மாட்டார்.

ஜாதகரின் இல்லறம் சிறக்க இங்கு மற்றொரு காரணி உதவுகிறது. 7 ஆமதிபதி சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தனது மனைவியை விட்டுத்தர மாட்டார். ஆனால் இந்த விதியையும் ஜாதகரின் தகுதிக்கு மனைவி குறைந்த தகுதி பெற்றராயின் செயல்பட வாய்ப்பு இல்லை எனலாம். இவர் மனைவி இவருக்கு இணையான தகுதி வாய்ந்தவராக உள்ளார். இதனால் கடும் போராட்டமான காலங்களிலும் தனது தகுதியை உயர்த்திக்கொண்டு மனைவியோடு இன்று சிறப்பான இல்லறம் நடத்துகிறார். ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் அரசுப்பணியில் உள்ளார். 7 ஆமதிபதி சனி 12 ல் மறைந்து வக்கிரம் பெற்று, வேலை பாவமான 6 ல் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறார். இதனால் இவரது மனைவியும் பணி புரிபவராக இருக்கிறார். சுக்கிரனுக்கு பாதகத்தில் நிற்கும் சூரியனும் செவ்வாயும் களத்திர பாவமான 7 ஆமிடத்திற்கு திக்பலத்தை தருவதை கவனியுங்கள் இதனால் இவரது மனைவியும் அரசுத்துறையில் பணிபுரிகிறார். எனவே ஜாதகருக்கும் மனைவிக்குமான சம தகுதி இங்கு இவர்களின் குடும்ப வாழ்வை சிறப்படைய வைக்கிறது. இதில் திசா புக்திகளின் பங்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்து ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னதிலேயே செவ்வாய். இதனால் ஜாதகிக்கு நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் அதிகம். ஜாதகிக்கு சுக்கிர திசை முடிந்து தற்போது சூரிய திசையில் ஒரு வருடம் முடிந்துள்ளது. சுக்கிரன் வித்யா காரகன் புதனுடனும் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று திசை நடத்திய காலத்தில் 2016 ல் ஜாதகி உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை உலகின் முதன்மையான தேசத்தில் முடித்தால்தான் தனக்கு மதிப்பு என ஜாதகி எண்ணினார். காரணம் திசா நாதன் சுக்கிரன் 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியனின் காரகமான இருப்பதிலேயே உயர்வான எனும் காரகத்தை தனதாக்கிக்கொண்டார். சுக்கிரன் சூரியனின் அஸ்தங்கமாகவில்லை எனினும் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனின் காரகங்களை தனதாக்கிக்கொண்டார். மேலும் ராகுவை முதலில் எதிர்கொள்ளும் சுக்கிரன் ராகுவின் காரகங்களையும் தனதாக்கிக்கொள்கிறார். இந்த ஜாதகி திரைத்துறையில் இயக்குனர் தொடர்புடைய உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். திரைத்துறையை சுக்கிரன் புதன் சேர்க்கை குறிக்கிறது. அதில் இயக்குனர் எனும் நிலையை சூரியன் குறிக்கிறார். அதில் பிரம்மாண்டமான நவீன நுட்பங்களை ராகுவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் கனவுகள் கற்பனைகளை குறிக்கும் காரக கிரகமாகும் இவற்றோடு ராகு தொடர்பாகும்போது அது பிரம்மாண்டமானதாக உருவெடுக்கும்.

இந்த ஜாதகி அமெரிக்காவில் வரும் திரைப்படங்களைப்போன்று வேற்றுகிரக வாசிகளோடு தொடர்புடைய பிரம்மாண்டமான திரைப்படங்களை இந்திய மொழிகளில் எடுக்க விரும்புபவர். தற்போது ஜாதகி சுக்கிர திசை முடிந்து திக்பலம் பெற்ற சூரிய திசையில் இருக்கிறார். 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்ற சூரியன் பணிக்கு சிறப்பு. ஆனால் திருமண வாழ்விற்கு சிறப்பை தராது. 1௦ ஆமிட திக்பல சூரியன் மேலும் மேலும் புகழ் மற்றும் உயர்வையே எண்ண வைக்கும். சூரியன் இங்கு ஜாதகிக்கு ஒருவித புகழ்,  உயர்வு எனும் மன போதையை ஊட்டி திருமண வாழ்வை தடை செய்கிறார். 1992 ல் பிறந்த ஜாதகிக்கு தற்போது வயது 32. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர் கல்வி பாவமான 9 ல் லக்ன பாதகாதிபதி சனி அமைந்ததால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர் இன்னும் கல்வியை முடித்து திரும்ப மனமின்றி மேலும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவே விரும்புகிறார். இது சூரியனால் உண்டாகும் ஒருவித புகழ் போதை மனநோய் எனலாம். சுக ஸ்தானாதிபதியும் மனோ காரகனுமான சந்திரனும் நீசம் பெற்றதால் ஜாதகி உடல் ரீதியாக விரும்பும் சுகத்தை சூரியன் ஏற்படுத்தும் புகழ் போதை எண்ணம் மழுங்கடித்துவிடுகிறது. 2 ல் நின்று கல்வி கற்க பொருளைத்தரும் குரு குடும்பத்தை எளிதில் தரமாட்டார். காரணம் 5 ல் கேது நிற்பதையொட்டிய புத்திர தோஷமும் திருமண தடைக்கு முக்கிய காரணம். இந்த ஜாதகி திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள முதலில் மனநல சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நன்று.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501