Showing posts with label திக்பலம். Show all posts
Showing posts with label திக்பலம். Show all posts

Saturday, 18 September 2021

மருத்துவ நுழைவுத்தேர்வு எதிர்பார்ப்பும் கொடுப்பினையும்!

 


மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி நிலையங்களை நாடுகின்றனர். இப்பயிற்சி நிலையங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் நிலை  சாமான்யர்களின் வாரிசுகளுக்கு கிடைப்பதில்லை. இதனாலும் சாமான்யர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இக்குறையை தீர்க்க மத்திய அரசு கல்வியில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து   இந்தியா முழுமையிலும் முதன்மை பாடங்கள் எனப்படும் (core subjects ) கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவைகளை அனைத்து மாநிலங்களிலும் CBSC, STATE BOARD,ICS போன்ற அனைத்து கல்வித்துறையிலும்  ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தலாம். மாநிலங்கள் தங்களது மொழி, கலாசாரம், வரலாறு போன்ற இதர பாடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என ஒரு நடைமுறையை கொண்டு வரலாம். தற்போது அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படி கொண்டுவந்தாலும் பாடத்திட்டத்தை விட்டு விலகிய கேள்விகள் நுழைவுத்தேர்வில் கேட்கப்படக்கூடாது என்ற நிலையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் OUT OF SYLLABUS எனும் கேள்விகள் மூலம் தனம் படைத்தோரின் வாரிசுகள் குறுக்கு வழியில் வாய்ப்பு பெற அது  வழி வகுக்கும். பயிற்சி தேவைப்படாமல் திறமையுள்ளோர் அனைவரும் பாடத்திட்டத்தின் மூலமே மருந்தவம் பயில வகை செய்தால் மட்டுமே அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பது சாத்தியமாகும். மாநில அரசுகள் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய கோருவது இத்தகைய முரண்பாடுகளாலும், தாங்கள் சம்பாதிக்கவுமே என்பதை அனைவரும் அறிவர். நமது இன்றைய பதிவில் மருத்துவராக ஜாதக அமைப்பு என்ன என்பதை நமது முந்தைய பதிவுகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் கூறுவதே. தங்களது வாரிசுகளுக்கு உள்ள கல்வி அமைப்பை அறிந்து பெற்றோர்கள்  செயல்பட்டால் பல மாணவ மணிகளின் உயிரை காப்பாற்றலாம் என்ற அடிப்படையில் இப்பதிவு வருகிறது.

 மருத்துவராவதற்குரிய கிரகங்கள்:

மருத்துவத்தின் காரக கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், ராகு-கேதுக்கள் ஆகியவை கூறப்பட்டாலும் சூரியனே மருத்துவத்தின் முதன்மை கிரகமாகும். ஒரு ஜாதகரை மருத்துவர் நிலைக்கு கொண்டு வருவதில் சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் பங்கு முக்கியமானது.

நோய் பாவம் 6 என்றால், நோயிலிருந்து மீழ்வதை 6 ன் விரைய பாவமான ஐந்தாம் பாவம் குறிப்பிடும். குறிப்பாக கால புருஷனின் 5 ஆம் பாவாதிபதி சூரியனின் வலுவே ஒருவர் நோயிலிருந்து குணமாவதை குறிக்கிறது. சூரியனே உயிர்களுக்கு சக்தி கேந்திரம். எனவே சூரியனின் அமைவு மருத்துவ துறைக்கு முதன்மையானது. சூரியனின் கதிர் வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

செவ்வாய் அறுவை சிகிச்சைக்கு அதிபதி என்பதோடு, செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியும், கால புருஷனின் ஆயுள் பாவமான விருட்சிகத்திற்கும் அதிபதியாகிறார். எனவே உயிர் காக்கும் துறையான மருத்துவத்திற்கு செவ்வாய் முக்கிய காரக கிரகமாகிறார்.

ஒருவர் துன்பங்களிலிருந்து விடுபடுவதை 5 ன் பாவத் பாவமான 9 ஆம் பாவம் குறிப்பிடும். மேலும் உயர் கல்வி பாவம் என்பது 9 ஆம் பாவமே. இதன் அடிப்படையில் ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் கால புருஷனின் 9 ஆமதிபதி குருவின் அருளாசி முக்கியம்.

சூரியன், செவ்வாய், குரு மூன்றும் நெருப்பு ராசிகளுக்கு அதிபதிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஒளியே ஆரோக்யத்தை வழங்குகிறது. மாறாக இருள் வியாதியை தருகிறது.

ஒருவர் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனே. எனவே சந்திரன் செவ்வாயுடன் அல்லது செவ்வாயின் வீட்டுடன் தொடர்பு பெறுவது நன்று.

மருத்துவராவதற்குரிய பாவங்கள்:

பாவங்களில் 1,6,1௦ ஆகிய பாவங்களிளோடு செவ்வாய், சூரியன், குரு ஆகிய நெருப்பு ராசி கிரகங்களின் தொடர்பு மருத்துவத்திற்கு சிறப்பான அமைப்பாகும்.

மேற்சொன்ன அனைத்தையும் விட மிக சாதகமான திசா-புக்திகள் உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் காலத்தில் வர வேண்டியது அவசியம்.  

கீழே  ஒரு ஜாதகம்.

 


ஜாதகி 1998ல் பிறந்தவர். 12 ஆம் வகுப்பு முடித்து NEET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஒதுக்கீட்டில் 2016 ஆமாண்டு மருத்துவக்கல்லூரி சென்றவர். இவ்வருடம் MBBS முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார். இதில் மேற்சொன்ன விதிகளின் செயல்பாடுகளை காண்போம்.  லக்னமே செவ்வாயின் விருட்சிகமாகி, குரு மற்றும் சந்திரனின் பார்வையை லக்னம் பெறுகிறது. உச்ச சந்திரன் 1௦ ஆமதிபதி சூரியனின் கார்த்திகை-4 ல் நிற்பதால் 1௦ ஆமதிபதி சூரியன் வலுவடைகிறார். சூரியனை குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜீவன பாவமான 1௦ ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-3 ல் செவ்வாய் நிற்கிறார். திசா நாதன் ராகுவே மருத்துவ காரக கிரகங்களில் ஒன்றாகி தனித்த நிலையில் சூரியனின் வீட்டில் நிற்பதால்  சூரியன் போன்றே செயல்படும். இந்த அமைப்பால் ஜாதகி மருத்துவரானார். குறிப்பாக கல்லூரி செல்லும் காலத்தில் ராகு திசையில் இருப்பதுதான் ஜாதக கொடுப்பினையை அனுபவிக்க முக்கிய காரணம்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.


இவர் 2000 ல் பிறந்த ஒரு மாணவி. இவர் கடந்த இரு வருடங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுகிறார். தற்போதும் எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார். ஜாதகிக்கு செவ்வாய் திசை கடந்த ஆண்டு இறுதிவரை நடந்தது. குரு செவ்வாயையோ, சூரியனையோ பார்க்கவில்லை. ஆனால் செவ்வாயின் வீடான விருட்சிகத்தை 12 ல் மறைந்த நிலையில் பார்க்கிறது. செவ்வாய் சந்திரனின் வீட்டில் நீசமாகி திசை நடத்துவதால் ஏற்பட்ட உந்துதலாலேயே ஜாதகி மருத்துவம் படிக்க எண்ணியுள்ளார். செவ்வாய் 1, 6, 1௦ பாவங்களோடு தொடர்புகொள்ளவில்லை. செவ்வாய், சூரியன், குரு ஆகியவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பாகவில்லை. தற்போது ஜாதகிக்கு செவ்வாய் திசை முடிந்து ராகு திசை துவங்கியுள்ளது. ஜாதக அமைப்பு சாதகமாக இல்லை என்பதால் ராகு திசையிலும் இந்த ஜாதகிக்கு மருத்துவம் பயில வாய்ப்பு இல்லை எனலாம்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1990 ல் பிறந்த ஒரு ஆண். இவர் MBBS முடித்து, மனநல மருத்துவத்தில் MD முடித்து அதிலேயே DM முடித்து அரசு மருத்துவராக பணிபுரிகிறார். ஜாதகத்தில் செவ்வாய் 1௦ ஆமதிபதி சந்திரனின் ரோஹிணி-2 ல் நின்று விருட்சிகத்தை பார்க்கிறார். உச்ச குருவும் விருட்சிகத்தை பார்க்கிறார். சூரியன் 1௦ ஆமதிபதி சந்திரனின் தொடர்புடன் 12 ல் சுய சாரத்தில் உத்திரம்-2 ல்  உள்ளார். இந்த அமைப்பால் இவருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு உள்ளது. இவர் மருத்துவம் பயில திசா-புக்திகள் எப்படி அனுமதித்தன என காண்போம். சந்திரன் ஹஸ்தம்-2 ல் சுய சாரம் பெற்றுள்ளார். எனவே பிறப்பு திசை சந்திர திசை. பிறகு செவ்வாய் திசை கடந்து 2003 முதல் 2021 வரை ராகுவின் திசை. இந்த ராகு திசையில்தான் ஜாதகர் மருத்துவம் பயின்றார். காரணம் ராகு 1௦ ஆமதிபதி சந்திரனின் திருவோணம்-1 நிற்கிறார். 1௦ ஆமிட தொடர்பு பெற்ற ராகு ஜாதகருக்கு மருத்துவம் கல்வியை வழங்கி மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது. மருத்துவத்தை பொறுத்தவரை ராகு-கேதுக்களின் பங்கு முக்கியமானது. சந்திரன் சாரம் பெற்றதால் ராகு, சந்திரன் குறிக்கும் மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது.

நான்காவது ஜாதகம் கீழே.

இவர் 2002 ல் பிறந்த ஒரு பெண். இவரும் இருமுறை மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி இரண்டாவது தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளார். லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று சூரியனும் செவ்வாயும் குருவோடு சிறப்பாக இணைவு பெற்று அமைத்துள்ளது. இது மருத்துவம் பயில சிறப்பான ஜாதக அமைப்பாகும். ஆனால் இவரால் இருமுறையும் சிறப்பாக தேர்வெழுத முடியவில்லை என்கிறார்.  காரணம் ஜாதகிக்கு இவ்வாண்டு ஜனவரி வரை சுக்கிர திசை நடைபெற்றுள்ளது. சுக்கிரன் லக்னத்திற்கு லாபத்தில் அமைத்திருந்தாலும் சுக்கிரன் 1௦ க்கு விரையத்தில் ரிஷபத்தில் நிற்கும் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. 1௦ ஆமிடாதிபதியோடுதான் சுக்கிரனுக்கு தொடர்புள்ளதே தவிர 1௦ ஆமிட கிரகங்களோடு அல்ல. ஜனன கால புதன் மீது கோட்சார ராகு அமர்ந்திருந்த நிலையில்  கடந்த ஆண்டு சுக்கிர திசையில் ஜாதகிக்கு மருத்துவ வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது சூரிய திசையில் ஜாதகி இரண்டாவது முறையாக தேர்வெழுதியுள்ளார். சூரியன் திக்பலம் பெற்று நிற்கும் நிலையில் தற்போது வாய்ப்பு உள்ளதை மறுக்க இயலாது. ஆனால் சூரியன் 10 ல் நின்று திசை நடத்தினாலும் அவர் 9 ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். எனவே சூரியன் தனது வலுவை 9 ஆமிடதிற்கே செயல்படுத்துவார் எனலாம். கன்னி லக்னத்திற்கு சூரியன் விரையாதிபதியாகி, 8 ஆமதிபதி செவ்வாய்  மற்றும் பாதகாதிபதி குருவின் இணைவில் உள்ளார். மேலும் செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதி என்பதோடு, ராசிக்கு விரையாதிபதியும் ஆவதால் திசாநாதன் சூரியனைவிட அதிக பாகை பெற்று நிற்கும் செவ்வாய் ஜாதகி மருத்துவராக அனுமதிக்க மாட்டார் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

விரைவில் மீண்டுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 20 August 2021

இரண்டாம் பாவத்தின் மறுபக்கம்!

 


ஜோதிடத்தில் இரண்டாவது பாவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் பொருளாதார வளத்தை குறிப்பது இரண்டாம் பாவமாகும். இரண்டாம் பாவம் ஒருவரது குடும்பத்தொடர்புகளை குறிக்கும். எனவே ஒருவருக்கு பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்றால் இரண்டாம் பாவம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும். தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும், வாழ்வில் தன்னோடு உடன் வரும் நபர்களுக்காகவுமே ஒருவர் பொருளீட்டுகிறார். பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்து அதற்காக அதிக நேரம் செலவிடுவோர் குடும்ப வாழ்வின் சிறப்புகளை புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். குடும்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர் பொருளாதரத்தின் சிறப்பை புரிந்துகொள்ள தவறிவிடுவது மட்டுமின்றி தனது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்துகிறார். உறவுகள் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் சரியாக கையாள்வது ஒரு கலை என்றே கூறலாம். பொதுவாக ராசிக்கட்டத்தில் அனைத்து பாவங்களுமே உறவுகளையும் பொருளாதாரத்தையும் குறிப்பிடும் என்றாலும் ஒரு பாவத்தின் உயிர் காரகம் அதீத வலுவடையும்போது பொருட்காரகமும், பொருட்காரகம் அதிக வலுவடையும்போது உயிர் காரகமும் பாதிக்கப்படும். இன்றைய பதிவில் உதாரணமாக 2 ஆம் பாவத்தை எடுத்துக்கொண்டு இக்கருத்தை ஆராய்வோம்.

மேற்கண்ட ஜாதகம் ஒரு 1990 ல் பிறந்த ஒரு பெண்ணுடையது. விருட்சிக லக்னத்திற்கு 7 ல் லக்னாதிபதி செவ்வாய் ராசியிலும் நவாம்சத்திலும் ரிஷபதிலேயே நின்று வர்கோத்தமம் பெறுகிறார். செவ்வாய் 1௦ ஆம் பாவமான சிம்மத்திற்கு 1௦ ல் நின்று 1௦ ஆம் பாவத்திற்கு திக்பலம் தருகிறார். 1௦ சூரியன் ஆட்சி பெற்று திக்பலத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகி பொருளாதார ரீதியாக நல்ல வேலையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இரண்டில் நிற்கும் வக்கிர சனிக்கு வீடு கொடுத்த குரு கடகத்தில் சனியில் சாரம் பூசத்திலேயே உச்சம் பெற்று நிற்கிறார். இதனால் இரண்டாம் பாவ சனி அதீத வலுவடைகிறார். அதே சமயம் இரண்டாம் பாவாதிபதி குரு இரண்டுக்கு 8 ல் தான் உச்சம் பெறுகிறார். இவ்வமைப்பு பொருளாதார சிறப்பை தருகிறது. ஆனால் இல்லறத்திற்கு சிறப்பல்ல. இரண்டாமிட சனி வேலையில் ஜாதகியை முழுமையாக ஈடுபடுத்தி குடும்ப வாழ்வை தாமதப்படுத்துகிறது. 3௦ வயதில் பொருளாதார வளத்தில் திளைக்கும் ஜாதகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2 ஆமிட வக்கிர சனி வேலையை உயிர் மூச்சாக நினைக்க வைக்கிறது ஆனால் தனக்கான குடும்பத்தை அமைத்துக்கொள்வதை தடுக்கிறது. இந்த ஜாதகி பொருளாதாரத்தைவிட குடும்ப வாழ்வு முக்கியம் என எப்போது கருதுகிறாறோ அப்போதுதான் திருமணம் நடக்கும்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகன் 1995 ல் பிறந்த ஒரு இளைஞன்.மிதுன லக்னாதிபதி புதன் நீசம் பெற்று திக்பல சூரியனுடன் 1௦ ல் வக்கிர குரு பார்வை பெற்று நிற்கிறார். குடும்ப காரகன் குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் குடும்ப பாவத்தில் நீசம் பெற்று, 11 ஆம் பாவமான மேஷத்தில் சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். ஜாதகருக்கு நடப்பது. 5 ல் சுய சாரம் பெற்று நிற்கும் ராகு திசை. 5 ஆம் பாவம் என்பது காதலுக்கு சிறப்பு. ஆனால் அது வேலை பாவமான 6 ன் விரைய பாவம் என்பதால் சம்பாத்யத்திற்கு சிறப்பை தராது. இந்த ஜாதகருக்கு சரியான வேலை இல்லை. சம்பாத்தியமும் இல்லை. ஆனால் 5 ஆமிட ராகு காதலை கொடுத்து திருமணத்தையும் செய்து வைத்துள்ளது. இந்த இளைஞர் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 ல் உள்ள 6 ஆமதிபதியான நீச செவ்வாய் 11 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதால் காதலை நிறைவேற்றி வைத்துள்ளது. ஆனால் பொருளாதாரத்திற்குரிய உகந்த வேலையை செவ்வாயால் தர இயலாது. குடும்பம் அமைந்த பிறகுதான் ஜாதகர் பொருளாதாரத்தை முன்னிட்ட முயற்சிகளை எடுக்கிறார். 1௦ ஆமிட திக்பல சூரியன் சுய தொழில் எண்ணத்தை தூண்டுவார். ஆனால் 1௦ க்கு 8 ல் இருந்து திசை நடத்தும் ராகு அதற்கு தடை போடுவார். அதே சமயம் ஜாதகரின் வேலைக்கும் ராகு சிறப்பை தரமாட்டார். இதனால் உரிய வயதில் குடும்பம் அமைந்துவிட்டது. காரணம் இரண்டாம் பாவத்திற்குரிய உயிர் காரகத்துவங்கள் 5, 7, 11 ஆகியவை வலுவடைந்துவிட்டன. ஆனால் நல்ல வேலையும், போதிய வருமானமும் இன்றி ஜாதகர் தவிக்கிறார். காரணம் உயிர் காரகத்திற்கு சிறப்பு சேர்ந்த கிரகங்கள் பொருட்காரகங்களுடன் கை கோர்க்கவில்லை என்பதே.

கீழே மூன்றாவது ஜாதகம்.

ஜாதகர் 1992 ல் பிறந்த ஒரு ஆண். கேது திசையில் பிறந்த ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திற்கு 5 ல் 7 ஆமிடத்தில் நிற்கும்  குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு திருமணமானது. தன காரகன் குரு, குடும்ப பாவமான 2க்கு 6ல் மறைந்து 7 ஆமிடத்தில் நின்றாலும் அவர் லக்னத்தின் மீது தனது கதிர்வீச்சை செலுத்துகிறார்.   இதனால் குரு குடும்பம், தனம் ஆகிய இரு அம்சங்களிலும் குறைவற்ற நிலையை  தருகிறார். திசா நாதன் சூரியன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் நின்றாலும், சூரியனின் வீட்டோன் புதன், 6 ல் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி குருவின் சார நாதன் சுக்கிரனும் கடகத்தில்தான் நிற்கிறார். ஜாதகர் வெளிநாட்டில் மனைவியோடு வசிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும்  இந்த அமைப்பு உதவுகிறது. இந்த ஜாதகத்தில்  தனகாரகனும் குடும்ப காரகனுமான குருவே இரண்டாம் பாவதிபதியுமாகி அவர் லக்னத்தை பார்வை செய்வதால் இந்த ஜாதகருக்கு குடும்பம், பொருளாதாரம் மற்றும் புத்திர வகையிலும் சிறப்பான பலனை தந்துள்ளது. ஆனால் இவ்வகை அமைப்பு அனைவருக்கும் எளிதாக ஏற்படுவதில்லை. இத்தகைய அமைப்புகள் ஜாதகத்தில் அபூர்வமானவையாகும்.

நான்காவது ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். 7, 1௦ ஆமதியும், தன புத்திர காரகருமான குரு லக்னத்தில் திக்பலம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமதிபதி குரு லக்னத்தில் அமைந்து, ஜீவன காரகரான 7 ல் திக்பலம் பெற்ற சனியை பார்ப்பதால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். குரு களத்திர பாவாதிபதியாகி, 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணமும் ஆகிவிட்டது. இவருக்கு  பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் திக்பல குருவின் வலுவை, குருவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் கேது பாதிக்கிறார். ஜோதிட விதிகளின்படி இதை குரு, கேது சேர்க்கையாகவே பாவிக்கலாம். இரண்டில் அமைந்த கேது ஜாதகரது குடும்பம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. ஆனால் புத்திரத்தை பாதிக்கிறார். காரணம் கேது 5 ன் விரையாதிபதி புதனின் சாரம் ஆயில்யம் பெற்று 6 ல் மறைந்த 5 ஆமதிபதி சுக்கிரனுக்கு பாதகத்தில் அமைந்துள்ளார். இதனால் குடும்பத்திற்கு குழந்தை வருவதை 2 ஆமிட கேது தடை செய்கிறார். இந்த வகை அமைப்பை பெற்ற ஜாதகர்கள் குழந்தை அமையுமுன் தனது பொருளாதாரத்தை உயர்த்த முயலாமலிருப்பது நன்று. ஏனெனில் குடும்பம், பொருளாதாரம் இரண்டும் நிறைவாக கிடைத்துவிட்டால் 2 ஆமிட கேது குழந்தை பாக்கியத்தை தடுத்துவிடுவார். இதனால் ஜாதகர் தீவிர மருத்துவம் மற்றும் இறை சக்தியின் துணைகொண்டு முதலில் புத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் 5, 7, 9 ஆகிய பாவங்களை குரு பார்வை புனிதப்படுத்தினாலும் குரு அவ்விடங்களை கேதுவின் தடைகளோடுதான் பார்க்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.   

அனைத்து பாவங்களுமே வாழ்வின் அனைத்து விஷயங்களோடும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு பெறும் என்றாலும், அனைத்து பாவங்களின் உயிர் மற்றும் பொருள் காரணிகளை ஒருவர் எந்த அளவு சமநிலைப்படுத்தி    தனது வாழ்வை கொண்டு செலுத்துகிறாரோ அந்த அளவு அவர் இரு காரணிகளையும் தனது வாழ்வில் திறம்பட அனுபவிக்கிறார் எனப்பொருள்.  இதில் சமநிலை தவறும் பட்சத்தில் அவரது வாழ்வில் இவ்விரு காரணிகளில் ஒன்றை பாதிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் எனப்பொருள்.  

மீண்டும் உங்களை விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைப்பேசி: 8300124501

Thursday, 8 July 2021

மணி அடிச்சா சோறு! இது மாமியாரு வீடு!

சமீபத்தில் திருமணத்திற்காக ஆராய்ந்த ஒரு ஜாதகத்தில் ஜாதகியின் பெற்றோர் தங்களது ஒரே மகளை பிரிய மனமின்றி, வீட்டோடு மாப்பிள்ளையாக வர வாய்ப்புள்ள வரனை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டு வரங்களின் ஜாதகங்களை கொடுத்தனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் இக்காலத்தில் பெண்களை இல்லத்து லக்ஷ்மிகளாக நடத்தாமல் வரதட்சினை உள்ளிட்ட பல வகைகளில் கொடுமைப்படுத்தும் குடும்பத்து வரன்களுக்கே இது போன்று நிலை ஏற்படும் என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெண் என்பவள் குடும்பத்தை வளர்ச்சியுறச் செய்பவள், இல்லத்து லக்ஷ்மி. “லக்ஷ்மியின் வடிவமான பெண்ணை பாதுகாக்காமல் தூஷிப்பவனில் இல்லத்திலிருந்து லக்ஷ்மி தேவி வெளியேறுகிறாள். பதிலாக அங்கு மூதேவி குடியேறுகிறாள்” என்று ஸ்ரீ தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.  பெண்கள் கல்வியில் முன்னேறி ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கும் இக்காலத்தில் ராமன் இருக்குமிடம் அயோத்தி எனும் பழங்கால நிலைகள் மாறிவருவது வருந்தத்தக்கது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளைகளாக செல்லும் ஆண்களுக்கான ஜாதக அமைப்பு என்ன? என ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.  

ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின் நிலையை சொல்லும் என்றால், 7 ஆமிடம் களத்திரத்தின் நிலையை சொல்லும். 2 ஆமிடம் ஜாதகரின் குடும்ப நிலையை  சொல்லும் என்றால், களத்திரத்தின் குடும்பத்தை பற்றிய விபரங்களை 7 க்கு 2 ஆமிடமான 8 ஆமிடம் சொல்லும். லக்னத்திற்கு 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திலும், ராசிக்கு 7 ஆமதிபதி சந்திரன் ராசியிலும் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது ஜாதகரின் மேல் மனைவியின், ஆளுமையும் ஆதிக்கமும் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் சூரிய சந்திரர்களே லக்னத்திற்கும் ராசிக்கும் 7 ஆமதிபதிகளாகி லக்னம், ராசியில் வந்து அமைவது, மனைவி வந்த பிறகு ஜாதகர் தாய், தந்தையை விட்டு விலகுவார் என்பதை குறிக்கிறது. லக்னத்தோடு தொடர்புடைய கிரக காரக உறவுகளை ஒரு ஜாதகர் எந்த சூழலிலும் இழக்க மாட்டார். ஆனால் அவை 7 ஆம் பாவாதிபதியாகி லக்னம், ராசியில் வந்து அமர்வதால் மனைவி வந்த பிறகு ஜாதகர் 7 ஆமதிபதியின் ஆளுகைக்கு ஜாதகர் முழுமையாக சென்றுவிடுவார். ஆனால் அந்த காரக உறவுகளை விட்டுகொடுக்க மாட்டார். இங்கு கடக ராசிக்குரிய சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 12 ல் சுக்கிரன், செவ்வாயோடு மறைகிறார். இது தாயாரையும், சகோதரனையும் விட்டு ஜாதகர் விலகுவதை குறிக்கும். சுக்கிரன் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் பாவாதிபதி சூரியன் லக்னத்தில் வந்து அமர்வதால் மனைவியையும், தந்தையையும் விட்டு ஜாதகர் பிரிய மாட்டார்.  ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் மனைவி வந்த பிறகு ஜாதகர் மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி சென்றுவிட்டார். ஒரே ஊரில் உள்ள தந்தை, தாயையும், சகோதரனையும் அவ்வப்போது வந்து கவனித்துக்கொள்கிறார்.  

ஜாதகத்தில் 8 ஆமதிபதி புதன் லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் நீச நிலை பெற்று அமைந்துள்ளது. அதே சமயம் 2 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஜாதகரின் வீட்டின் பொருளாதார சூழலைவிட மனைவி வீட்டின் பொருளாதார சூழல் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. 2 ஆமிடத்தில் புதன் அமைந்துள்ளது ஜாதகர் புதனின் காரகதுவமான வியாபாரம் தொடர்புடைய கமிஷன், தரகு, ஏஜென்சி போன்றவற்றில் ஈடுபடுவதையும்  ஜாதகரின் வீட்டில் ஒரு கல்வியாளர் மூலம் வருமானம் வருவதையும் குறிப்பிடுகிறது. ஜாதகரின் தாயார் ஒரு ஆசிரியை. சிம்ம ராசியும் சூரியனும் சுயமாக தொழில் புரிபவர்களை குறிக்கும். சூரியன் லக்னத்தில் வந்து அமைந்ததால் ஜாதகருக்கு திருமணமான பிறகு இந்த அமைப்பு ஜாதகரை தொழில்களை நிர்வகிக்கும் நிர்வாகியாக உயர்த்துகிறது. நிர்வாகம் என்பது சூரியனின் காரகத்துவம். 7 ஆமதிபதி சூரியன் ஆனதால் திருமணமாகி மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாகிவிட்டார்.


நவாம்சத்தில் 7 ஆமிட குரு வர்கோத்தமமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இது குடும்பம் அமைத்தபின் பொருளாதாரத்தை முன்னிட்ட விஷயத்தில் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக ஜாதகர் தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகத்  தயங்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி குரு, 7 ஆமிடத்தை சிம்ம ராசியில் 3 ஆம் பாவத்தில் நின்று பார்க்கிறார். இதனால் களத்திர பாவம் வலுவடைகிறது. இது மனைவி ஆளுமையும், ஜாதகரை கட்டுப்படுத்தும் வல்லமையும் மிக்கவர் என்பதையும் தெரியப்படுத்துகிறது. 7 ஆமதிபதிக்கு வீடு கொடுத்த சூரியன் 1௦ ல் திக்பலம் பெற்று நிற்பது மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாக உயர்வார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.  

இந்த ஜாதகர் திருமணமான பிறகு மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி மனைவி வீட்டாரின் தொழில்களை நிர்வகிக்கிறார். நவாம்ச லக்னாதிபதி புதன், 2 ஆம் பாவமான கடகத்தில் சுக்கிரனோடு இணைவு பெற்றுள்ளது வருமான வகைகளில் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவார்கள் என்பதையும், இவற்றோடு சந்திரன் சேர்க்கை அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் தொடர்பான வியாபாரம் அது என்பதையும் குறிப்பிடுகிறது. (புதன்=தரகு,கமிசன், ஏஜென்சி & சந்திரன்=வியாபாரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்). ராகு இவைகளோடு சேர்க்கை  பெறுவது அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களோடு பலதரப்பட்ட நவீன சாதனங்களையும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. 

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday, 11 April 2021

திருமண உறவில் சூரியன்!

 


சூரியன் தனது சுய கர்மங்களில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்தும் கிரகம் ஆகும். இதன் பொருளாவது எதன் பொருட்டும் ஒருவர் தான் விரும்பி ஈடுபட்டுள்ள செயலை நிறுத்தமாட்டார் என்பதாகும். சூரியன் சீரான மற்றும் நிரந்தரமான இயக்கத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஒருவரை புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் தனது செயலை செய்யவைக்கும் கிரகம்  சூரியனாகும். இதனால் சூரியனின் ஆதிக்கம் உடையோர் பிறரிடம் எளிதில் ஒன்றிவிட  மாட்டார்கள். அப்படியெனில் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களின் திருமண வாழ்வு என்னவாவது? என்றொரு கேள்வி எழும். திருமண உறவிலும் சூரியன் கௌரவம் பார்க்கும். ஒருவரது கௌரவம் பங்கப்பட்டால் அங்கே அவரது திருமண உறவு முறிகிறது என்பது பொருளாகும். தனது கௌரவத்திற்காக எதையும் இழக்கத்துணியும்  கிரகம் சூரியனாகும். இதனால் சூரியன் பொதுவாக திருமண உறவிற்கு எதிரான கிரகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சூரியன் கால புருஷனுக்கு களத்திர பாவமான துலாத்தின் பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் ஆதிக்கம் கொண்டவர்கள் கௌரவத்திற்காக தங்களது குடும்ப வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைத்துனைவர்களிடம் கிடைக்காத அன்பையும் நிம்மதியையும் குழந்தைகளிடம் பெறுகிறார்கள். காரணம் புத்திர காரகன் குரு, சிம்மத்தின் 8 ஆமிடமான மீனத்தின் அதிபதியாவதால் குடும்ப வாழ்வில் சிரமத்தை கொடுத்து சிம்மத்தின் 5 ஆமிடமான தனுசுவின் அதிபதியாவதால் குழந்தைகளால் நிம்மதியை தருகிறார். சூரியன் குடும்ப வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என்பதை ஆராய்வதே இன்றைய பதிவாகும்.


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் செவ்வாயுடன் 4 ஆம் பாவத்தில் இணைந்துள்ளனர். சுக ஸ்தானத்தில் இரு பாவிகள் இணைவது சுகத்திற்கு சிறப்பல்ல ஆயினும் கேந்திர பாவிகள் பொருளாதார வகையில் சிறப்பை தருகின்றனர். இங்கு செவ்வாய், சூரியனுக்கு பின்னால் 5 பாகை விலகி உள்ளது. இதனால் இது செவ்வாய்க்கு  கடுமையான அஸ்தங்கமல்ல. ஆயினும் செவ்வாயும்  சூரியனும் ஒன்று சேர்வதே இல்லறத்திற்கு சிறப்பல்ல. இக்கிரகச்சேர்க்கை பெற்றோர், தனது கௌரவம் பாதிக்கப்பட்டால் நல்ல சம்பாத்தியம் உள்ள வேலையைக்கூட எளிதில் உதறிவிடுவதை காண முடிகிறது. லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற சூரியன் ஜாதகரை எப்போதும் தனது வாழ்வின் உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே முன்னோக்கி நகர்த்தும். எந்த தோல்வியிலும் ஜாதகருக்கு பின்வாங்காத நிலையைத்தரும். சூரியன் செவ்வாய்  சேர்க்கை ஜாதகருக்கு தகுதிக்குறைவை அது எந்த வடிவமானாலும்  அல்லது உறவானாலும் உதறிவிடும் மனநிலையைத்தரும். ஆனால் சூரியன் செவ்வாய் சேர்க்கை நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்ததும் ஒரு நீர்க்கிரகம் சந்திரன் லக்னத்தில் அமைந்ததும் சூரியன் செவ்வாய் இணைவு தோஷத்தை பெருமளவு குறைத்துவிடுகிறது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் 6 ல் மகரத்தில் அமைந்து, அதற்கு பாதகமான விருட்சிகத்தில் செவ்வாயும் சூரியனும் அமைவது மனைவிக்கு பாதகத்தை செய்யும் அமைப்பாகவே தோன்றுகிறது. மனைவி தனது தகுதிக்கு குறைவானவராக இருந்தால் மனைவியோடு நல்லுறவு இருக்காது. தனது தகுதிக்கு நிகரானாவராக இருப்பின் மனைவியை  ஜாதகர் விட்டுத்தர மாட்டார்.

ஜாதகரின் இல்லறம் சிறக்க இங்கு மற்றொரு காரணி உதவுகிறது. 7 ஆமதிபதி சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தனது மனைவியை விட்டுத்தர மாட்டார். ஆனால் இந்த விதியையும் ஜாதகரின் தகுதிக்கு மனைவி குறைந்த தகுதி பெற்றராயின் செயல்பட வாய்ப்பு இல்லை எனலாம். இவர் மனைவி இவருக்கு இணையான தகுதி வாய்ந்தவராக உள்ளார். இதனால் கடும் போராட்டமான காலங்களிலும் தனது தகுதியை உயர்த்திக்கொண்டு மனைவியோடு இன்று சிறப்பான இல்லறம் நடத்துகிறார். ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் அரசுப்பணியில் உள்ளார். 7 ஆமதிபதி சனி 12 ல் மறைந்து வக்கிரம் பெற்று, வேலை பாவமான 6 ல் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறார். இதனால் இவரது மனைவியும் பணி புரிபவராக இருக்கிறார். சுக்கிரனுக்கு பாதகத்தில் நிற்கும் சூரியனும் செவ்வாயும் களத்திர பாவமான 7 ஆமிடத்திற்கு திக்பலத்தை தருவதை கவனியுங்கள் இதனால் இவரது மனைவியும் அரசுத்துறையில் பணிபுரிகிறார். எனவே ஜாதகருக்கும் மனைவிக்குமான சம தகுதி இங்கு இவர்களின் குடும்ப வாழ்வை சிறப்படைய வைக்கிறது. இதில் திசா புக்திகளின் பங்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்து ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னதிலேயே செவ்வாய். இதனால் ஜாதகிக்கு நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் அதிகம். ஜாதகிக்கு சுக்கிர திசை முடிந்து தற்போது சூரிய திசையில் ஒரு வருடம் முடிந்துள்ளது. சுக்கிரன் வித்யா காரகன் புதனுடனும் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று திசை நடத்திய காலத்தில் 2016 ல் ஜாதகி உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை உலகின் முதன்மையான தேசத்தில் முடித்தால்தான் தனக்கு மதிப்பு என ஜாதகி எண்ணினார். காரணம் திசா நாதன் சுக்கிரன் 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியனின் காரகமான இருப்பதிலேயே உயர்வான எனும் காரகத்தை தனதாக்கிக்கொண்டார். சுக்கிரன் சூரியனின் அஸ்தங்கமாகவில்லை எனினும் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனின் காரகங்களை தனதாக்கிக்கொண்டார். மேலும் ராகுவை முதலில் எதிர்கொள்ளும் சுக்கிரன் ராகுவின் காரகங்களையும் தனதாக்கிக்கொள்கிறார். இந்த ஜாதகி திரைத்துறையில் இயக்குனர் தொடர்புடைய உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். திரைத்துறையை சுக்கிரன் புதன் சேர்க்கை குறிக்கிறது. அதில் இயக்குனர் எனும் நிலையை சூரியன் குறிக்கிறார். அதில் பிரம்மாண்டமான நவீன நுட்பங்களை ராகுவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் கனவுகள் கற்பனைகளை குறிக்கும் காரக கிரகமாகும் இவற்றோடு ராகு தொடர்பாகும்போது அது பிரம்மாண்டமானதாக உருவெடுக்கும்.

இந்த ஜாதகி அமெரிக்காவில் வரும் திரைப்படங்களைப்போன்று வேற்றுகிரக வாசிகளோடு தொடர்புடைய பிரம்மாண்டமான திரைப்படங்களை இந்திய மொழிகளில் எடுக்க விரும்புபவர். தற்போது ஜாதகி சுக்கிர திசை முடிந்து திக்பலம் பெற்ற சூரிய திசையில் இருக்கிறார். 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்ற சூரியன் பணிக்கு சிறப்பு. ஆனால் திருமண வாழ்விற்கு சிறப்பை தராது. 1௦ ஆமிட திக்பல சூரியன் மேலும் மேலும் புகழ் மற்றும் உயர்வையே எண்ண வைக்கும். சூரியன் இங்கு ஜாதகிக்கு ஒருவித புகழ்,  உயர்வு எனும் மன போதையை ஊட்டி திருமண வாழ்வை தடை செய்கிறார். 1992 ல் பிறந்த ஜாதகிக்கு தற்போது வயது 32. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர் கல்வி பாவமான 9 ல் லக்ன பாதகாதிபதி சனி அமைந்ததால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர் இன்னும் கல்வியை முடித்து திரும்ப மனமின்றி மேலும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவே விரும்புகிறார். இது சூரியனால் உண்டாகும் ஒருவித புகழ் போதை மனநோய் எனலாம். சுக ஸ்தானாதிபதியும் மனோ காரகனுமான சந்திரனும் நீசம் பெற்றதால் ஜாதகி உடல் ரீதியாக விரும்பும் சுகத்தை சூரியன் ஏற்படுத்தும் புகழ் போதை எண்ணம் மழுங்கடித்துவிடுகிறது. 2 ல் நின்று கல்வி கற்க பொருளைத்தரும் குரு குடும்பத்தை எளிதில் தரமாட்டார். காரணம் 5 ல் கேது நிற்பதையொட்டிய புத்திர தோஷமும் திருமண தடைக்கு முக்கிய காரணம். இந்த ஜாதகி திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள முதலில் மனநல சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நன்று.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501