Monday 28 November 2016

கெட்டவன் எப்போது நல்லவனாகிறான்?

நல்லவர்களை பார்த்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீயவர்களை பார்த்து எப்படி வாழக்கூடாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பார்கள்.

ஜோதிடத்தில் இயற்கை சுபர்கள் மற்றும் இயக்கை பாவிகள் என்ற வரையறை அனைவரும் அறிந்த ஒன்று. அறியாதவர்களுக்காக அந்த வரையறை கீழே.

குரு         - முழுமையான சுபர்.
சுக்கிரன்     - முக்கால் பங்கு சுபர் கால் பங்கு பாவி.
சந்திரன்     – வளர்பிறையில் சுபர் தேய்பிறையில் பாவி.
புதன்        - தனித்த நிலையில் சுபர். ஆனால் சுபர்களோடு கூடின் சுபர்  பாவிகளோடு கூடின் பாவி.
சூரியன்     - பாதி பங்கு சுபர். பாதி பங்கு பாவி.
செவ்வாய்   - கால் பங்கு சுபர். முக்கால் பங்கு பாவி.
சனி        - முழுமையான பாவி.
ராகு-       - முழுமையான பாவி.
கேது       முழுமையான பாவி.

மேற்சொன்ன வரையறைகள் கிரகங்களின் சுபாவ குணங்கள் அவ்வளவே.

கிரகங்களின் சுபாவ குணங்கள் எப்படி இருப்பினும் ஜாதக கட்டத்தில் கிரகங்கள் பெறும் ஆதிபத்தியம் மற்றும் அமைவை பொறுத்தே பலன்களை வழங்கும்.

சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எதுவானாலும் நல்ல பலன்களை வழங்க முயலும். அது போன்றே தீய ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எதுவானாலும் தீய பலன்களை வழங்க முயலும்.

பாவ ஆதிபத்யம் பெற்ற ஒரு கிரகம் ஜாதகத்தில் கெட்டுவிட்டால் அது நன்மையை செய்யும் அமைப்பாக்கும். இத்தகைய அமைப்பைத்தான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்கின்றனர். எளிமையாக கூற வேண்டுமானால் உங்களை கொலை செய்ய வரும் ஒருவனுக்கு வழியில் நடந்த விபத்தில் கால்களை இழந்துவிட்டதைப்போல. இனி அந்த எதிரியால் உங்களுக்கு தொல்லை இல்லை. அவனது கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது என்று பொருள்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ராகு-கேதுக்களின் பிடியில் அனைத்து கிரகங்களும் அடைபட்டுவிட்டன. திருமணத்தோடு தொடர்புடைய 2,4,7,8,12 ஆமதிபதிகளும் அவர்களது பாவங்களும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. லக்னாதிபதி செவ்வாய் பாதகாதிபதியும் கடும் பகைவனுமான சனியுடன் சேர்ந்து நான்காம் பாவத்தில் நீசமாகி உள்ளார். மேஷ லக்னத்தவர்க்கு குரு சுப ஆதிபத்யம் பெற்ற கிரகமானாலும் சனி பார்வை பெற்றுவிட்டால் நல்லதை செய்ய மாட்டார். கால சர்ப்ப தோஷத்தில் இந்த ஜாதகம் ஒரு கடிமையான வகை.

ஜாதகருக்கு 1995 பிற்பகுதியில் லக்னத்திற்கு பாதகாதிபதியான சனியின் திசை துவங்கியது.

பொதுவாக ஜாதகத்தில் கெடுதலை செய்யும் நிலையில் அமைந்துவிட்ட கிரகத்தினது காரகத்தை அனுபவிக்கும் காலத்தில்தான் ஒரு ஜாதகர் சனியின் பிடியில் அகப்படுவார். சனி தண்டனைக்கு உரிய கிரகம் என்பதே இதற்கு காரணம்.

இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சுய சாரத்தில் பரணி நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் லக்னத்திற்கு பாதகாதிபதியும் கடும் பாவியுமான சனியின் பார்வைக்கு உள்ளானதால் சுக்கிரனின் காரகமான இல்லற இன்பத்தை அனுபவிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. 19 வருடங்களை கொண்ட சனி திசை,  திருமணம் செய்யவேண்டிய இளமை காலம் முழுவதையும் முழுமையாக ஆக்கிரமித்து திருமணத்தை தடை செய்தது. சுகஸ்தானத்தோடு தொடர்பு கொண்டதால் இல்லற வகையில் சுகம் கிடைக்கவிடாமல்  தடை  செய்தது.

ஜாதகத்தில் பாவ ஆதிபத்யமான 6 க்கு உடைய புதன் இரண்டாம் பாவத்தில் அமைந்துள்ளதை கவனியுங்கள். ஒரு பாவத்தில் அமையும் கிரகம் அந்த பாவத்தை கட்டுப்படுத்தும் தகுதியை பெறுகிறது. இரண்டாம் பாவத்தில் அமைந்துவிட்டதால் ஆறாம் பாவாதிபதி எனும் வகையில் ஜாதகருக்கு குடும்பம் அமையாமல் தடை செய்ய வேண்டும். ஆனால் புதன் இங்கு வக்ரகதிக்கு உள்ளாகிவிட்டதால் தனது ஆதிபத்ய கெடுபலனை செய்ய இயலாத நிலையில் உள்ளார். வக்ரகதிக்கு உள்ளாகிவிட்டதால் புதனின் செயல்பாடு இனி அது அமைந்த ரோகிணி நட்சத்திரத்திற்கு உடைய சுகஸ்தானாதிபதி சந்திரனை சார்ந்ததாகவே இருக்கும். புதனின் இந்த நிலையை கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற மொழிக்கு உதாரணமாகக்கொள்ளலாம். புதனை பொறுத்தவரை ஒரு கெட்டவன் இங்கு நல்லவனாகிறான் எனலாம்.

புதனுக்கு சனி தொடர்பு எதுவும் இல்லை என்பது ஒரு நல்ல அம்சம். புதன் நின்ற நட்சதிராதிபதி சந்திரன் திருமணம் தொடர்புடைய ஏழாம் பாவத்தில் ராகுவோடு இணைந்துள்ளார். எனவே சனி திசை முடிந்து புதன் திசை சுய புக்தியில் ஏழரை சனியின் நிறைவு கட்டத்தில் ஜாதகருக்கு தான் நின்ற பாவம் மற்றும் நட்சத்திர அடிப்படையில் ஜாதகரின் நாற்பதாவது வயதில் திருமணம் செய்வித்தது.

திருமணத்திற்கு அவசியம் ஆராய வேண்டிய நவாம்சத்திலும் புதன் குடும்பத்தை குறிக்கும் இரண்டாம் பாவாதிபதியாகி தாம்பத்யத்தை குறிக்கும் 12 ஆம் பாவத்தில் அமைந்துள்ளது திருமணத்தை செய்விக்கும் வாய்ப்பு புதனுக்கு உள்ளதை குறிப்பிடுகிறது.

திருமண நாளின் 02.05.2016 கிரக நிலைகள் கிழே.


லக்னத்திற்கு பாவியான ஆறாமதிபதி புதன் வக்கிரமாகி லக்னத்திற்கு 2 ல் உச்ச சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் நின்று சுபனாகி தனது கேட்டை நட்சத்திரத்தில் நின்ற சனி மற்றும் செவ்வாயையும் தனது பார்வையால் சாந்தப்படுத்துகிறார். தனது வீட்டில் நின்ற உச்சன் சூரியனால் வக்ரமானாலும் வலுவடைந்த செவ்வாய் சனியின் அனுஷ நட்சத்திரத்தில் நின்று சனியை அமைதிப்படுத்துவதும் முக்கிய காரணம். பகை வீட்டில் வக்கிரமடையும் கிரகங்கள் நன்மையை செய்ய வேண்டும் என்ற விதியும் சனிக்கு பொருந்துகிறது.  

சூரியன் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் உச்சமாகி சுக்கிரனையும் சுக்கிரனின் சுய பாவங்களான ஜனன லக்னத்திற்கு 2 & 7 ஆகிய ரிஷப – துலாத்தையும் வலுவூட்டுகிறார். அதோடு சுக்கிரனின் நட்சத்திரத்தில் பூரத்தில் தனது வீட்டில் ராகுவோடு இணைந்து நின்ற குருவையும் சூரியன் வலுவூட்டுகிறார். இதனால் பலம் பெற்ற குரு, ராகு-கேதுக்களால்  ஜாதகருக்கு ஜனன காலத்தில் ஏற்பட்ட கால சர்ப்ப தோஷத்தை நிவர்திசெய்கிறார். எனினும் குருவோடு இணைந்து சூரியனின் உச்ச பலத்தை கிரகிக்கும் ராகு மனைவியை தனது அம்சமாக அதாவது வேற்று ஜாதியை சேர்ந்தவராக அமைத்துக்கொடுத்து அதை குடும்ப காரகன் குரு ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்கிறார்.

லக்னத்திற்கு லாபத்தில் ராசிக்கு 5 ல் சனி வீட்டில்  ராகு-கேதுக்களின் தொடர்பில் நின்று குரு பார்வை பெறும் சுக ஸ்தானாதிபதி சந்திரன் ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி வைத்து குடும்ப சுகம் கிடைத்திட வழி செய்கிறார்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501

Tuesday 15 November 2016

கரை சேர்க்கும் தோணிகள்

ஜாதகத்தில் ஆச்சார்ய கிரகங்கள் என அழைக்கப்படும் குருவும் சுக்கிரனும் வலுவோடிருப்பது அவசியம். இவற்றில் ஒன்று தோஷப்பட்டிருந்தாலும் மற்றொன்றாவது  தோஷப்படாமல் அமைவது அவசியம். இல்லையேல் ஜாதகரது வாழ்வு சிரமம்தான். காரணம் இவ்விரு கிரகங்களிடம்தான் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான காரகங்கள் உள்ளன.

குருவும் சுக்கிரனும்தான் ஆச்சார்ய கிரகங்கள் என்பதால்  ஒன்றின் காரகத்தை மற்றொன்று எடுத்துச் செய்யும் என்றாலும் ஜாதகத்தில் வாழ்க்கைக்கு ஆதாரங்களான பாக்கியங்களை குருவைக்கொண்டும் அதை அனுபவிக்கும் பாக்கியத்தை சுக்கிரனை கொண்டும் அளவிடலாம். இவை இரண்டும் ஜனன ஜாதகத்தில் தோஷப்பட்டிருந்தால் அவை நீங்க வாய்ப்புள்ளதா எனவும் உள்ளதெனில் தோஷ நிறைவு காலத்தையும் கணக்கிட்டு ஜோதிடர்கள் பலன் கூறுவது மிக முக்கியம். இதற்கு தண்டனை கிரகமான சனியின் நிலையையும் திசா புக்திகளையும் நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகத்தில் குடும்ப பாவமான 2 ஆமிடத்தில் ஒரு நீச கிரகம் சந்திரன் அமைந்துள்ளது. 2, 7 க்குரிய செவ்வாய் 7 ஆமிடத்தில் தனது வீட்டிலேயே வக்கிரமாகியதால் வலுவிழந்துவிட்டது. குடும்ப காரகன் குரு சுகஸ்தானமான நான்காமிடத்தில்  நீசமாகி மாந்தியுடன் சேர்க்கை. சர லக்னமான துலாத்திற்கு பாதகாதியான சூரியன் தாம்பத்யத்தை குறிக்கும் 12 ஆமிடத்தில் அமைந்துள்ளது. இவை அனைத்துமே ஜாதகத்தில் குடும்ப வாழ்க்கைக்கு கடும் பாதகத்தை ஏற்படுத்துபவை. இவற்றில் குடும்ப பாவமும் குடும்ப காரகனும் கடுமையாக பாதிக்கப்பட்டதிலிருந்து படைத்தவன் ஜாதகருக்கு குடும்ப வாழ்வில்தான் தண்டனையை வைத்துள்ளார் என்பதை கூறிவிடலாம்.


குடும்ப வாழ்க்கை தொடர்புடைய ஸ்தானங்கள் என்றால் அவை குடும்ப ஸ்தானமான 2, சுக ஸ்தானமான 4, களத்திர ஸ்தானமான 7, உடல் ரீதியான உறவை குறிக்கும் 8, தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடம் ஆகியவைகளாகும். எனவேதான் இவ்விடங்களில் அமையும் செவ்வாயை கவனித்து செவ்வாய் தோஷம் அளவிடப்படுகிறது.

எனவே இந்த பாவங்களுடன் இவற்றின் பாவாதிபதிகள் மற்றும் இந்த பாவங்களில் அமைந்த கிரகங்கள் இவற்றோடு இந்த பாவங்களை பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து பிறகே குடும்ப வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க இயலும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஒரே ஆறுதல் களத்திர காரகனும் லக்னாதிபதியுமான சுக்கிரன் விரையாதிபதியான புதனுடன் இணைந்து லக்னத்திலேயே ஆட்சியில் அமைந்ததுதான். மேலும் குரு நவாம்சத்தில் மீனத்தில் ஆட்சி பெற்றதும் ஒரு நல்ல அம்சம். திருமணத்திற்கு நவாம்சத்தை கண்டிப்பாக ஆராய்ந்தே பலன் கூற வேண்டும். பாவத்தில் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் விருச்சிகத்தில்  உள்ளதால் ஜாதகருக்கு சுக்கிரன் தொடர்புடைய (சுக்கிர திசை அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகத்தின்) திசைகளில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு சிறிதளவு உண்டு என்பதை அறியலாம்.

ஜாதகர் அனுஷம்-2 ஆம் பாதத்தில் விருச்சிக ராசியில் பிறந்துள்ளார். எனவே 12 வயது வரை சனி திசை. அதன் பிறகு 9, 12 க்குரிய புதன் திசை 29 வயது வரை. புதன் 2, 7 க்குரிய செவ்வாயின் நட்சத்திரத்தில்  அமைந்திருந்தாலும் செவ்வாய் வக்கிரமாகிவிட்டதாலும் புதனின் பாவங்களான மிதுனமும் கன்னியும் பாவிகளான சனி, கேது, சூரியனால் கெட்டுவிட்டதாலும் ஜாதகருக்கு திருமணம் செய்துவைக்க இயலவில்லை. அதனை அடுத்து பாக்ய, விரைய ஸ்தானத்தில் அமைந்த ஞானகாரகன் கேதுவின் திசை. கேது ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்து அந்த ராகு லக்னத்திற்கு 3 , 6 க்குரிய நீச குருவின் வீட்டில் அமைந்துவிட்டதால் வலுவிழந்து போனது.

கேது சுக ஸ்தானாதிபதி சனியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகஸ்தானத்தில் நீச குரு அமைந்து சுகஸ்தானாதிபதி சனி 4 க்கு 6 ல் அமைந்துவிட்டதால்  கேதுவால் சனியின் பாவ காரகத்தை எடுத்து செய்ய இயலவில்லை.

இவற்றை அடுத்து லக்னத்தில் ஆட்சியில் அமைந்த லக்னாதிபதியும் களத்திர காரகனுமாக சுக்கிரனின் திசை ஜாதகருக்கு 2௦௦9 ஜனவரியில் துவங்கியது. சுக்கிரனின் சுய புக்தியான 40 மாதங்களில் திருமணம் கை கூட வில்லை. இதற்கு கிரகங்கள் சுய புக்தியில் நன்மையை செய்தால் அது ஆயுளுக்கு தோஷத்தை தர வாய்ப்புள்ளது என்பதும் ஒரு காரணம். லக்னத்திற்கும் சுக்கிரனுக்கும் இரு புறமும் நீச சந்திரனும் பாவியான சூரியனும் அமைந்து கடும் “பாவ கர்த்தாரி” யோகத்தை வழங்கிக்கொண்டிருப்பதும் மற்றொரு காரணம்.

சுக்கிர திசையில் சுய புக்தியை கடந்து பாதகாதிபதி சூரியனின் புக்தி. பாதகாதிபதி 12 ல் மறைந்தாலும் அது தாம்பத்ய ஸ்தானம் என்பதால் அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அந்த பாக்கியம் கிடைக்காமல் தடுத்துவிட்டார். சுக்கிர திசையில் சூரிய புக்தியை கடந்து வந்த நீச சந்திரனின் புக்தி சுக ஸ்தானாதிபதியான சனியின் அனுஷம் – 2ல் அமைந்ததால் ஜாதகருக்கு குடும்ப சுகம் அமைய வழி செய்து ஜாதகருக்கு 02.07.2014 ல் ஜாதகரின் நாற்பத்து ஒன்றாவது வயதில் திருமணம் செய்வித்தார். பாவ அடிப்படையில் சுக்கிரன் சந்திரனோடு தொடர்புகொண்டது முக்கிய காரணம். சுக்கிர திசையில் பாதகாதிபதியான சூரியனின் புக்தி முடியும் வரை ஜாதகருக்கு குடும்ப வகையில் பாதகம் ஏற்படாமல் ஏழரை சனியாக வந்து திருமணத்தை தடை செய்த சனி. சந்திர புக்தியில் ஜென்ம சனியாக வந்து ஜாதகரின் வாழ்வில் குடும்பம் அமைய காரணமாக நின்றது.

துலாம் லக்னத்திற்கு 4, 5 ஆதிபத்தியம் பெறுவதால் பரம யோகாதிபதி என்பதுடன் விருட்சிக ராசிக்கும் சனி காம ஸ்தானமான 3 க்கும் சுக ஸ்தானமான 4 க்கும் அதிபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனி தடுப்பதற்கும் காரணமுண்டு கொடுப்பதற்கும் காரணமுண்டு என்பதை இதன் மூலம் அறியலாம். 

முப்பது வயதிற்கு மேல் வரும் சனியின் இரண்டாவது சுற்று ஏழரை பொங்கு சனி என அழைக்கப்படும். இது போராட்டத்திற்கு இடையில் ஜாதகரை வாழ்வில் முன்னேற வைக்கும்.

ஜாதகரின் திருமண நாளின் கிரக அமைப்புகள் கீழே.

               

ஜனன ஜாதகத்தில் நீசமான குரு கோட்சாரத்தில் உச்சமடைந்ததால் ஜனனத்தில் இருந்த நீச தோஷம் நீங்கியது. சந்திரனின் வீட்டில் குரு உச்சமடைந்ததால் ஜனன காலத்தில் நீசமடைந்திருந்த சந்திரனும் வலுவடைந்தது. பூச நட்சத்திரத்தில் குரு உச்சமானதால் நட்சத்திராதிபதி கிரகமான சனியும் வலுவடைந்தது.பாதகாதிபதியான சூரியன் ஆட்சியில் அமைந்த புதனுடன் மிதுனத்தில் இணைவு பெற்று  அதன் இரு புறமும் சுபர்களான குருவும் சுக்கிரனும் வலுவுடன் நின்றதால் சூரியன் தனது பாதக நிலையில் இருந்து மாற்றம் பெற்று சாந்தமானார். ஜனன காலத்தில் வலுகுன்றி நின்ற 2, 7 ஆமதிபதி செவ்வாய் தனது சொந்த சித்திரை நட்சத்திரத்தில் புதனின் வீட்டில் நின்று அந்த புதனும் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நின்றதால் வலுவடைந்தது. ராகுவும் கேதுவும் லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்பு என்பதுடன் ராகு சனி போன்றும் கேது செவ்வாய் போன்றும் பலன் தரும் என்ற விதிப்படி ராகு கேதுக்களும் திருமணத்திற்கு சாதகமான நிலையிலேயே அமைந்துள்ளனர்.

ஒருவரது ஜாதகத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ஒரு நல்ல திசை அதுவும் ஆட்சார்யர்கள் என வருணிக்கப்படும் குரு மற்றும் சுக்கிரனின் திசைகளோ அல்லது இவற்றின் நட்சத்திரங்களில் நின்ற கிரகத்தின் திசைகளோ வந்துவிட்டால் அது ஜாதகரை கடைத்தேற்றிவிடும். 

இக்கிரகங்களே திக்குத்தெரியாத வாழ்க்கை எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மனிதனை கடைத்தேற்றும் தோணிகள் என்றால் அது மிகையல்ல.

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501.

Sunday 6 November 2016

சந்திராஷ்டமம் - சில சந்தேகங்கள்

நமது வாசகர் திரு.முத்துராமன் சந்திராஷ்டமம் பற்றிய சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நுட்பமான கேள்விகள் அவை. வாசகர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே பதிவிடப்படுகிறது.

1அமாவாசை திதியன்று வரும் சந்திராஷ்டமத்துக்கும், பௌர்ணமி திதியில் வரும் சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா?

வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி. எனவே இரண்டிற்கும் கண்டிப்பாக வேறுபாடு உண்டு. மேலும் வளர் பிறையில் சுபாவ சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் & ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேராத தனித்த மற்றும் சுபர்களோடு சேர்ந்த புதன் ஆகியோர் சுபாவ பாவக்கிரகங்களைவிட வலுவோடிருப்பர்.

தேய்பிறையில் சுபாவ பாவிகளான செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன்  மற்றும் ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேர்ந்த புதன் ஆகியோர் முதலில் சொன்ன சுபாவ சுபர்களைவிட  வலுவோடிருப்பர்.

இதில் புதன் ஜனன காலத்தில் அமைந்த நிலையை பொறுத்தும் சந்திரன் இரு பிறை காலங்களிலும் மாறுபட்ட பலன்களை வழங்க வல்லன என்பது கவனிக்கத்தக்கது
 
2. நட்சத்திர சந்தி என்று நீங்கள் குறிப்பிட்டபடி எனக்கு எப்போதும் ரேவதி நட்சத்திரத்துக்குக் காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் என்று சொன்னால் அது அஸ்வினிக்கு சந்திராஷ்டமம் ஆகி பாதி நாள் கழிந்த பிறகே சரியானதுபோல் உணர்கிறேன்.

ஜனன காலத்தில் இரு நட்சத்திரங்களுக்கான சந்தியில் சந்திரன் நின்றால் இரு நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகளும்  சந்திரன் மேல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரு நட்சத்திரங்களின் பாதிப்பைக்கொண்ட கலவையான பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். இதில் குறிப்பிட்ட இரு நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை சந்திரன் அதிகம் கிரகிக்கிறதோ அதையே பிரதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திராஷ்டமம் அக்குறிப்பிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டே பிரதானமாக பார்க்கப்படவேண்டும்.  

3. கே.பி.வித்யாதரன் தினப்பலன் கூறும்போது சந்திரன் நிற்கும் நட்சத்திர கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் பிற நட்சத்திரங்களையும்  சந்திராஷ்டமத்துக்குச் சமமாகச் சொல்கிறார். அதாவது சந்திரன் அஸ்வினியில் இருந்தால் சிம்ம ராசிக்குச் சொல்லும்போது மகம் நட்சத்திரக்காரர்களையும் தனுசில் மூல நட்சத்திரக்காரர்களையும் எச்சரிக்கை செய்கிறார்.

வேறு சிலர் சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தை நல்லவிதமாகவே பலன்  சொல்கிறார்கள்.

சந்திரன் நின்ற நட்சத்திர நாளும் சந்திராஷ்டமம் போல் கஷ்டப்படுத்துமா? நான் கவனித்த வரையில் தேய்பிறையில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் (ரேவதியிலிருந்து அஸ்வினிக்கு மாற்றம் பெறும் நாள்) என்னைப் படுத்தி எடுத்திருக்கிறது. வளர்பிறையில் வந்த ஜென்ம நட்சத்திர நாளில் ஏதும் பெரிதாகக் கஷ்டப்படவில்லை..

கே.பி.வித்யாதரன் சொல்வது சரியாக இருக்கக்கூடும். நான் இது பற்றி ஆய்வு செய்து பிறகு எனது கருத்தை பதிவு செய்கிறேன். இதர ஜோதிடர்கள் சொல்வது பொதுவானது. வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி என்பது உங்களது கேள்வியின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

4. உச்ச வீட்டிலும், நீச வீட்டிலும் இருக்கும்போது பலன் மாறுமா? மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் வரும்போது சந்திரன் நீசமாகிறது. அப்போதும் சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்குமா? அப்படியானால் துலாம் ராசிக்காரர்கள் நிலை?

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் நீசமாகி ஏற்படுகிறது. இதனால் இதர ராசியினரைவிட பாதிப்பு அதிகமாகவே ஏற்பட வாய்ப்புண்டு. துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் உச்சமாக அமைகையில் ஏற்படுகிறது. பொதுவாக பார்க்கையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனலாம். ஆனால் துலாம் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடம் கடகத்திற்கு பாதகஸ்தானமான 11 ல் உச்சமான சந்திரன் அமைவது தொழில் வகையில் அவசர முடிவெடுத்து அதனால் சிரமப்பட நேரிடுகிறது. தொழில்வகையில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தும்.  

5. சந்திராஷ்டம் போலவே அஷ்டம சனி காலமும் ஜோதிடத்தில் மிக முக்கியமானது. மீனத்துக்கு உச்சமான அஷ்டம சனி, கன்னிக்கு நீசமான அஷ்டம சனி. இதற்குப் பலன் எப்படி இருக்கும்?

ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு சனியின் அமைவிடம், ராசிக்கு சனியின் அமைவிடம் மற்றும் ஜனன ஜாதகத்தில் சனி அமைந்த இடத்திற்கு கோட்சார அஷ்டம சனி எந்த இடத்தில் அமைகிறது என்பதையும்  கவனிக்க வேண்டும். மேலும் சனியின் சுற்றுகளையும் அதாவது ராசி மண்டலத்தில் அஷ்டம சனி முதல் சுற்றாக வருகிறதா அல்லது இரண்டு மூன்றாவது சுற்றில் வருகிறதா என்பதோடு திசா புக்திகளையும் கவனிக்க வேண்டும்.

இதில் திசா புக்திகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
 
6. ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு சந்திரன் மறைவுஸ்தான அதிபதி. கோச்சாரத்தில் மறைவுஸ்தான அதிபதி இன்னொரு மறைவுஸ்தானமான எட்டாம் இடத்துக்கு வருவதால் இந்த நான்கு ராசியினருக்கு சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்காதா? பெரிய பாதிப்பைத் தராதா?

கண்டிப்பாக பாதிப்பை தரும். குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும்.

7. ராகு, கேதுவுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும், குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்களுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? தற்போது மகரத்துக்கு ராகுவுடன் சந்திரன், கடகத்துக்கு கேதுவுடன் இணைந்த சந்திரன் சந்திராஷ்டமத்தைக் கொடுக்கிறது. கும்பத்துக்கு குருவுடன் இணைந்த சந்திராஷ்டமம்.

சுபர்களுடன் இணைந்த சந்திராஷ்டமம் மனோ ரீதியில் சிறிதாக சிரமப்படுத்தும். ராகு கேதுக்களுடன் சேர்ந்த சந்திராஷ்டமம் அதீத மனக்குழப்பத்தையும் எதிலும் பிடிப்பற்ற ஞான நிலையையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக சந்திராஷ்டமத்தின் பதிப்பை துல்லியமாக அளவிட இதர கிரகங்களுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை கொண்டு அளவிடுவதே சிறப்பாக இருக்கும். உதாரணமாக கடகத்தில் நீச செவ்வாயுடன் சந்திரன் அமைந்துவிட்டால் அது தனுசு ராசிக்கு பாதிப்பை தராது (திசா புக்திகள் மோசமாக இருந்தாலன்றி).

மேலும் ஒரு கிரகத்தில் செயல்பாட்டை அதற்கு கேந்திரங்களின் அமைந்த கிரகங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஒரு கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் அமைந்த கிரகங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் செயல்பாட்டை பாதிப்பதில் முக்கிய பங்குவகிக்கும். .மேலும் அஷ்டம சந்திரனுடன் ராசியாதிபதி அல்லது ஜனன லக்னாதிபதி அமைத்தால் சந்திரனால் ஏற்படும் மனோ ரீதியிலான  தடுமாற்றம் வெகுவாக குறையும். 

ஆய்வுகள் தொடரும்.

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி  எண்:  7871244501

Friday 21 October 2016

செவித்திறன்

மருத்துவ ஜோதிடம் - பகுதி1
ஜோதிடத்தில் பல வகைகள்.

நிமித்தம்
சகுனம்
சாமுத்ரிகா லக்ஷணம்
மச்ச சாஸ்திரம்
கௌரி சாஸ்திரம்
கைரேகை
எண் கணிதம் என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

இவற்றுள் இயற்கை & அரசியல் நிகழ்வுகளை கணித்தல், மருத்துவ ஜோதிட முறைகள் முக்கியமானவை.

இப்பதிவில் நாம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவ ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

மருத்துவ ஜோதிட முறை பாரம்பரிய ஜோதிடத்தில் முக்கியமானது. ஒருவரது உடலில் என்ன வகையான நோய் ஏற்படும் அது எந்த திசா-புக்தி & கோட்சாரத்தில் ஏற்படும். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.

பெற்றோரின் சர்க்கரை வியாதி தனக்கு வர வாய்ப்புள்ளதை அறிந்து உணவுக்கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலும் அதை தள்ளிப்போட தவிர்க்க முயற்சி செய்வது போலத்தான் இதுவும்.

பொதுவாக சூரிய கிரகணங்கள் பூமியில் அதிகமாக விழும் உத்ராயணத்தில் பிறந்தவர்கள் சூரிய ஒளி குறைவாக பூமியில் விழும் தக்ஷிணாயனத்தில் பிறந்தவர்களைவிட நல்ல உடல்கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பர். நமது அணியில்தான் இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற ஒல்லிப்பிச்சான்கள். மேற்கிந்திய அணியில் மட்டுமல்ல பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் உள்ள மேற்கிந்திய தீவுகளில் ஒல்லிப்பிச்சான்களே இல்லை என்பதை அறியவும். அதுபோல் சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.

ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.

கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. சனியின் ஆதிக்க காலங்களான திசா-புக்திகள், கோட்சாங்களில்தான் வியாதியின் வெளிப்பாடு தெரிகிறது. வயதில் மூத்தோர் உடல் ரீதியான சிரமங்களையும் வியாதிகளையும் கொண்டிருப்பதால்தான் அவர்களை சனியின் அம்சங்களாக குறிப்பிடுகிறோம். ராகு நோயின் தீவிரத்தையும் குரு நோயிலிருந்து விடுபடுவதையும் குறிப்பிடுகிறது.

ராசிக்கட்டத்தில் சர ராசிகள் உடலையும், ஸ்திர ராசிகள் உயிரையும், உபய ராசிகள் ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 



ஜாதகத்தில் இரண்டாம் பாவமும் கிரகங்களில் புதனும், ராகுவும் காதுகளை குறிப்பிடுகின்றன. மேற்கண்ட ஜாதகத்தில் புதனின் உச்ச ராசியான கன்னியில் ராகு அமைந்துள்ளது. இரண்டாமிடத்தில் மாந்தி அமைந்து இரண்டாம் வீட்டிற்குரிய சுக்கிரன் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியுடன் இணைந்து தன் 2ஆம் வீட்டிற்கு 8ல் அமர்ந்துள்ளார். இத்தகைய அமைப்பு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் காரக கிரகமும் லக்னாதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பாதிப்பு குணமடையும் வாய்ப்பும் உள்ளது. லக்னாதிபதிக்கு உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டிக்காக்கும் சக்தி உண்டு என்பது முக்கியமாக அறிய வேண்டிய ஒன்று. 

ஜாதகருக்கு 1996 பிற்பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.

செவிக்கு உரிய பாவமான இரண்டாம் பாவாதிபதி சுக்கிரனின் திசையில் செவித்திரனுக்கு காரக கிரகமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்துவிட்ட பிணி காரகனும் வியாதியை குறிப்பிடும் பாவமான ஆறாம் பாவாதிபதியுமான  சனியின் புக்தியில் லக்னத்திற்கு பாதகாதிபதியும் அஷ்டமாதிபதியான அறுவை சிகிச்சை காரகன் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் அந்தரத்தில் ஜாதகருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இங்கு குரு லக்னத்திற்கு பாதகாதிபதியாகி லக்னாதிபதி புதனுக்கு 12 ல் மறைவு பெற்று கேந்திரத்தில் அமர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டு தோஷத்தை கொடுத்தாலும் வியாதியிலிருந்து குணமடைவதற்கு காரகத்துவம் பெற்றதால் குணமடையவும் வைத்துவிட்டார். அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சைக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்ததால் அறுவை சிகிச்சை குரு அந்தரத்தில் நடந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. லக்னாதிபதியின் வீட்டில் அமரும் கிரகம் தோஷத்தை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் லக்னாதிபதியின் பணியையும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதியாகும்.

சனி புக்தி துவங்கிய 1993 பிற்பகுதி முதல் ஜாதகர் செவித்திரனால் பாதிக்கப்பட்டிருந்தார். சனி வியாதியை குறிப்பிடும் ஆறாம் பாவாதிபதி மட்டுமல்ல, வியாதி குணமடைவதை குறிக்கும் ஐந்தாம் பாவத்திற்கும் அதிபதி ஆவதால் குணமடையவும் வைத்தார். நீதிமான் அல்லவா தனது பணியை இரு வகையிலும் செவ்வனே செய்துள்ளார். அது மட்டுமல்ல இரு பாவங்களுக்கு அதிபதியாகும் ஒரு கிரகம் அதன் திசா - புக்தி காலங்களில் இரு பாவ பலன்களையும் கலந்து வழங்காது. முதலில் ஒரு பாவ பலனையும் பிறகு மற்றொரு பாவத்தின் பலனையும் தனித்தனியாகவே வழங்கும். இது பற்றிய எனது பதிவை கீழ்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம்

.கிரகங்கள் ஆடும் இரண்டாவது இன்னிங்க்ஸ் 

ஆராய்ச்சி அன்பர்களுக்கு

ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் இணைந்து இரண்டிற்கு எட்டில் மறைந்துள்ள அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சை காரகனுமான செவ்வாயின் திசை  சென்ற மாதம் (செப்டம்பர்-2016) முதல் துவங்கியுள்ளது. தற்போது ஜாதகர் செவித்திரனில் சில சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாதிகளுக்கு ஜோதிட பரிகாரமாக
குறிப்பிட்ட வியாதிக்கான காரக கிரகம் மற்றும் பாவாதிபதி கிரகங்களுக்கான அதிதேவதைகளை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது மிகுந்த உதவியாக இருக்கும். இந்த வகையில் குறிப்பிடப்படும் கிரகங்களின் அதிர்வலைகள் கிடைக்கும் திருக்கோவில்களுக்கு  சென்று அவற்றை பெறுவதும் உதவிகரமாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட வியாதியை அதிகப்படுத்தும் காரணிகளை தவிர்த்து குணப்படுத்தும் காரணிகளை நோக்கி நாம் உணவு, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் என்ற வகையில் சென்றால் வியாதியிலிருந்து விடுபடவும் வியாதியின் தீவிரத்தை குறைக்கவும் அவை உதவும். 

"அம்மா"வின் ஜாதகத்தை அலசி ஆராயும்படி அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஜோதிடரின் முதுகை பிராண்டிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு,

அடியேன் சிறை செல்ல தயாரில்லை என்பதை அறியவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
அலை பேசி எண்:7871244501.

Wednesday 12 October 2016

லக்ன நட்சத்திராதிபதி

ஜோதிட பலன்களை வரையறுப்பதில் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. லக்ன நட்சத்திராதிபதி கிரகத்தையும் ஜாதகத்தில் அது தொடர்புகொண்ட பாவங்களையும் அலசினால் ஜாதகரின் ஒட்டுமொத்த இயல்பையும் மற்றவற்றை ஆராயுமுன் அனுமானித்துவிடலாம். ஒரு உயிர் என்ன காரணத்திற்காக பிறவி எடுத்திருக்கிறது என்பதையும் அது என்ன கர்மங்களில் ஈடுபடும், அனுபவிக்கும் என்பதையும் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகம் தெளிவாய் கூறிவிடும். தேர்ந்த ஜோதிடர்கள் லக்ன நட்சத்திராதிபதி கிரகம் முதற்கொண்டே ஒருவரது ஜாதகத்தை ஆராய்வர்.    

மகாபாரதத்தின் நாயகன் தருமபுத்திரரின் ஜாதகம் கீழே.

                 


லக்னம் ஞான காரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது ஏழாமிடத்தில் அமைந்த குருவை கெடுத்து குடும்ப வாழ்வில் குளறுபடிகள் ஏற்பட வழிசெய்துவிட்டார். ஆனால் அதே கேது நுட்ப அறிவுக்குரிய 5 ஆம் பாவாதிபதியும் காரகனுமான குருவுடன் இணைந்ததால் ஜாதகருக்கு பகைவனும் போற்றும் தரும சிந்தனையை கொடுத்தது. 7 க்கு சுகஸ்தானமான 1௦ ஆம் பாவத்தில் நான்கு கிரக சேர்க்கை என்பது ஏழாமிட தோஷம் எத்தனை   இணைவுகளுடன் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.. தர்மரின் 4 சகோதரர்களுக்கும் ஜாதகரின் மனைவியான திரௌபதி குடும்ப வாழ்வில் இணைந்து பாஞ்சாலியாக வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.

இவ்விடத்தில் வேறு சில விஷயங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். லக்னத்திற்கு 10 ஆமிடத்தில் ஏற்பட்டுள்ள 4 கிரக சேர்க்கை சன்யாச யோகமாகும்.  குரு, 12 ஆமிடம் ஆகியவை வலுவிழந்து இருப்பது இல்லற வாழ்வில் பிடிப்பற்ற நிலையை குறிப்பிடுகிறது. துவாபர யுகம் வரை மனிதர்கள் இத்தகைய அமைப்புகளிலேயே பிறப்பார்கள் என்று சுக்ர நீதி போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த யுகங்களில் மனிதர்களில் பெரும்பான்மையினர் நற்குணவான்களாக (ரஜோ குணம்) இருந்தனர். கலி யுகத்தில் பிறக்கும் மனிதர்களில் பெரும்பான்மையோர் ராக்ஷச குணம் கொண்டவர்களாக அதாவது  சனி,செவ்வாய், ராகு-கேது போன்ற கிரகங்கள் மனிதர்களை தவறாக வழிநடத்தும் ஜாதக பாவங்களில் கலி புருஷனின் கட்டளைப்படி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இரண்டாவதாக மற்றுமொரு ஜாதகம்.

              
சுக்கிரனின் பூராடம் – 4 ல்   லக்னம் அமைந்துள்ளது. சுக்கிரன் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில் அமைந்துள்ளது. ஜாதகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். மருத்துவ கிரகங்கள் சூரியன், கேது, செவ்வாய், புதன் ஆகியவர்களின் நிலையை ஆராய்ந்தால் ஜாதகி ஒரு மருத்துவர் என்பதை அறியலாம்.

இரண்டாமிடத்தில் கேது நின்று 2 க்கு எட்டாமதிபதியான சூரியனுடன் சனி தொடர்புகொண்டதால் ஜாதகி சனியின் காரக அடிப்படையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் அவர் சொந்த ஊரில் இருந்தால் வருமானம் பாதிப்படையும் என்பது ஒரு முக்கிய ஜாதக விதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஜாதகர்கள் சொந்த ஊரைவிட்டு முடிந்தவரை விலகிச்சென்று வருமானம் ஈட்ட முயலவேண்டும். 

மூன்றாவதாக அறிஞர் அண்ணாவின் ஜாதகம் கீழே.

                 
லக்னம் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. ராகுவிற்கு வீடு கொடுத்த லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சியில் உள்ளார். உச்சமான வாக்கு காரகன் புதனின் கன்னி ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2 ஆமிடத்தில் ராகு தொடர்பில் இருப்பது ஜாதகர் பேச்சுத்திறமையில் வல்லவர் என்பதை குறிக்கிறது. ராகு ராஜ்ய ஸ்தானமான பத்தாம் அதிபதியும் அரசியல் தொடர்புகளுக்கும் உரிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்ததும். பத்தாம் அதிபதி சந்திரன் ராஜ்யாதிபதி எனப்படும் அரசாங்கத்திற்கு காரகத்துவம் பெற்ற சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்ததும் ஜாதகரின் கர்மா அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பதை குறிப்பிடுகிறது. 

லக்னம் அமைந்த நட்சதிராதிபதி ராகு ஆயுள் ஸ்தானமான 8 ஆமிடத்துடன் தொடர்பு கொண்டதும் ராசிக்கு எட்டில் நீசம்பெற்று வக்கிரமடைந்த சனியும், சனிக்கு 12 ல் ராசிக்கு  ஏழில் அஷ்டமாதிபதியான செவ்வாய் வக்கிர நிலையில் அமைந்ததும் ஜாதகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவார் என்பதை குறிப்பிடுகிறது. புற்றுநோய்க்கு ராகு,சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் கதிர்வீச்சுகளே காரணமென்பது ஜோதிடம் ஆராய்ந்து அறிந்த உண்மை. ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பில் அடுத்தடுத்த ராசிகளில் அமைந்தது கவனிக்கத்தக்கது.

கீழே தமிழர்கள் இன்னும் இயந்திரங்களாக மாறிவிடாமல் தனது இசையால் தடுத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்.



                    
விரயாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்துள்ளது. செவ்வாய் சிம்ம ராசிக்கு எட்டில் மறைந்துள்ளார். மேலும் சூரியன் அமைந்த ரிஷப ராசிக்கு செவ்வாய் விரயாதிபதியாகிறார். தந்தையின் பாக்கியத்தை பெற இயலாத நிலையை இது குறிப்பிடுகிறது. லக்னத்தில் பித்ரு காரகன் சூரியன் மாத்ரு காரகனான உச்ச சந்திரனுடன் சேர்ந்து சனியுடன் இணைவு பெற்றது தந்தையின் பாக்கியங்களை தனது சுய அனுபவங்களின் மூலமே பெற்று உயர வேண்டும் என்பது ஜாதகறது கர்மா. சனி சூரிய புத்திரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஒருவரது ஜாதகத்தில் இசைத்துறை தொடர்பை குறிப்பது மூன்றாமிடமாகும். இசைத்திரையில் ஒருவர் கோலோச்ச வேண்டுமானால் லக்னத்திற்கு மூன்றாமிடம், சுக்கிரன், புதன் ஆகியவை வலுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமதிபதி சந்திரன் லக்னத்தில் உச்சம். கலை மற்றும் திரைத்துறைக்கு காரகத்துவம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரன் உச்ச சந்திரனின் வீட்டில் அமர்ந்ததால் உச்ச வலு பெற்றதோடல்லாமல் பரிவர்த்தனையும் பெற்றதால் ஜாதகர் உலகம் போற்றும் உன்னத இசை வல்லுனராக ஒளிர்கிறார்.



வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

எனது பதிவுகள் சாமான்யர்களுக்கும், ஜோதிட நேசர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை.. எனது சுய ஆய்வு கொண்டு வரும் கருத்துக்கள் இப்பதிவுகள். அதனால்தான் பிற ஜோதிட வலைப்பதிவுகளுக்கும் எனது பதிவுகளுக்கும் வித்தியாசங்கள் காணப்படும். ஜோதிட விதிகளை புத்தகங்களில் இருந்து வலை ஏற்றுபவை அல்ல எனது பதிவுகள். உதாரண ஜாதகங்கள் மூலம் ஜோதிட விதிகளை பூப்போல எனது பதிவுகளில் தூவியிருப்பேன். எனது ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் தங்களது ஜோதிட அறிவை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதோடல்லாமல் பதிவுகளில் தவறிருப்பின் பின்னூட்டங்கள் மூலமும் என்னை செம்மைப்படுத்தவும் உதவலாம். எனது ஆய்வுக்கருத்துகளை பலர் தங்களது ஜோதிட மாணவர்களுக்கு பாடங்களாக்கி பயன்படுத்துகின்றனர் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதில் எனது ஆக்கம் என்பதை மறைத்து பயன்படுத்துவது வேதனைப்படுத்துகிறது. எனது ஆய்வுக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி பல வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  நூல்வடிவில் கொண்டுவர இருக்கிறேன். ஜோதிடம் பயில வேண்டும் என்பவர்களுக்காக தங்களுக்கு இயன்ற நேரத்தில் இயன்ற வகையில் கட்டுப்பாடுகள்;;இல்லாமல் மின்னஞ்சலில் ஜோதிட ஜோதிட பாடங்கள் நடத்திடவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எனது ஆக்கங்களை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?, தசாம்சமும் தொழிலும் போன்ற சில பதிவுகளை PDF கோப்புகளாக மாற்றி எனது பெயரை மறைத்து வெளியிட்டிருக்கும் ஒரு வலைப்பூ..

https://vedicfastro.blogspot.in/p/pdf-tamil-books.html


மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

அன்பன்,


பழனியப்பன்.     .