Showing posts with label தசாம்சம். Show all posts
Showing posts with label தசாம்சம். Show all posts

Friday, 30 July 2021

இரவுப்பறவைகள்!

 


அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும்  அறிமுகமற்ற நபர்கள், மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர் இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில் செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை.  இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள் உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே இன்றைய பதிவு.

கீழே 1963 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.

 
மகர லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம். இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு. சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில் பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம் பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம் என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின் காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற  சந்திரனின் காரக  வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன் இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.

மேற்கண்ட ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக் குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும், 12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.


தசாம்சத்தில் புதன் தசாம்ச லக்னத்திற்கு 7 ல் நிற்பது ஜாதகரது ஜீவனத்துறை புதன் சார்ந்த பத்திரிக்கை துறை என்பதை உறுதி செய்கிறது. 1௦ ன் பாவத்பாவமான 7 ஆமதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து 12 ல் மறைவதும் லக்னாதிபதி சனியும் 1௦ ஆமதிபதி செவ்வாயும் புதன் வீட்டில் மிதுனத்தில் இணைவது ஜாதகர் ஈடுபடும் துறையையும் அதில் அவரது உழைப்பின் கடினத்தன்மையையும் குறிப்பிடுகிறது. 

12 ஆம் பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம் பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால் செவ்வாய் திசையில் தனது 25, 26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின் தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு  புதனின் வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது. தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

லக்னத்தில் அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில் நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ  தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும்.  இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25 ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1 ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர புக்தியில் தனது  55 ஆவது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

உண்மையில் ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர் லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.

இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின் வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில் ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது. அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால் அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501  

Tuesday, 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Tuesday, 29 December 2020

இன்னும் வாழ்க்கை மீதமிருக்கிறது!

 

அத்தப்பனும் அங்கயர்க்கன்னியும் பாரம்பரியமானதொரு சமூகத்தை சார்ந்தவர்கள். அத்தப்பன் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். இல்லறத்தை பொறுத்தவரை சிரமங்களற்ற வாழ்க்கை. அங்கயர்க்கன்னி தனது சமூகத்திற்கே உரிய வகையில் வீட்டை நிர்வகிப்பதில் நல்ல நிர்வாகியாக திகழ்கிறார். இவர்கள் இல்லறத்தில் விளைந்த முத்துக்களாக நல்ல குழந்தை செல்வத்தையும் பெற்றவர்கள். பொதுவாக ஒரு நல்ல சமூகத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறப்பதே ஒருவரது வாழ்வை பெரிய சிக்கலின்றி அனுபவித்துவிட பெரிதும் உதவும். இந்தக்கூற்று முழு உண்மையானால் இத்தகைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்வில் சிக்கலே இருக்கக்கூடாது. அப்படியானால் படைத்தவனுக்கு இவர்கள் வாழ்வில் என்ன வேலை?. நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாகவும் இருப்பது இன்றைய காலத்தில் அவசியம். நல்லவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிரார்கள். தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் அளிப்பது என்று நிம்மதியடைகிறார்கள்.   வல்லவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தங்களது வாழ்க்கைப்போராட்டத்தை துவங்குகிறார்கள். அவர்களுக்கு எந்தத்தோல்வி வந்தாலும் அது தங்களது இயலாமையினால் மட்டுமே என எண்ணித்துடிக்கிறார்கள். தங்களுக்கு மேலே ஒருவன் இருந்துகொண்டு தங்களை வழிநடத்துகிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதன் விளைவால் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்.



அத்தப்பன் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் நல்ல நிர்வாகியல்ல என்பதை திருமணமாகி சில நாட்களிலேயே அங்கயர்க்கன்னி உணர்ந்துவிட்டார். இதனால் குடும்ப நிர்வாகத்தோடு தங்களுக்கான வியாபாரத்தையும் தானே கவனிக்க வேண்டிய நிலையை அங்கயர்க்கன்னி உணர்ந்து அந்தப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார்.  இந்த சமயத்தில் ஒருவரது அறிவையும் பொறுப்புகளையும் மீறி விதி விளையாடும். அத்தப்பன்-அங்கயர்க்கன்னி வாழ்விலும் அது விளையாடியது. நல்லவர்களாக  இருந்துவிடுவதால் மட்டும் விதி மனிதர்களை விட்டு விடுவதில்லை. சோதனைகள் மூலம் அவர்களை வல்லவர்களாகவும் மாற்றுவதே அதன் வேலை. இப்படி வல்லவர்களாக மாறுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலைக்கு அனுபவம் என்று பெயர். அனுபவமே ஆசான். அனுபவமே இறை.

கீழே அங்கயர்க்கன்னியின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகம். லக்னாதிபதி ஆறாமிட தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இந்த ஜாதகத்தில்  இங்கு 6 ஆமிடாதிபதி சனியோடு லக்னாதிபதி புதன் பரிவர்தனையாகிறார். 6 , 1௦ இரண்டுமே பொருட்பாவங்கள் என்றாலும் தொழிலால் கடன் ஏற்படும் என்பதை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது.  லக்னத்திற்கு 7 ல் விரையாதிபதி சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெற்று நிற்கும் குரு, கணவர் வலுவற்றவர் என்பதை குறிக்கிறார். இப்படி களத்திராதிபதி அஸ்தங்கமாகி வலுவிழப்பது உபய லக்னத்திற்கு ஒருவகையில் நன்மையே. எப்படி எனில், 7 ல் சூரியன் குருவோடு இணைந்து லக்னத்தை பார்ப்பது, ஜாதகிக்கு திருமணமான பிறகு குடும்ப, தொழில்வகை நிர்வாகத்தையும் ஏற்பதால் லக்னாதிபதி வலுவடைவார். நவாம்சத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கடகத்தில் இணைந்து நிற்பது கணவன் மனைவி ஒற்றுமையை குறிக்கிறது. அதே சமயம் செவ்வாய் நீசம் பெற்று நீச சந்திரனோடு பரிவர்தனையாவதால் வலுவடைகிறது. நவாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை பெறுவதும் கணவனின் திறமை குறைவால் ஜாதகி நிர்வாகியாவார் என்பதை உறுதி செய்கிறது. லக்னப்புள்ளி உணவு காரகன் சந்திரனின் ஹஸ்தம்-4ல் அமைந்து,  சந்திரன் 1௦ ஆமிடத்தில் உள்ள சனியின் பூசம்-4 ல் நிற்கிறது. இதனால் இவர்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யும் இனிப்பு, காரம், சாக்லேட் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம். தசாம்சத்தில் 7 , 1௦ ஆமதிபதி புதன் நீசமாகி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து குரு, சூரியனின் பார்வையை பெறுகிறது. 1௦ ஆமதிபதி புதன் சந்திரனின் வீட்டில் சந்திரனுடன் இணைவதால் உணவு தொடர்புடைய தொழில் என்பதையும் சுக்கிரனும் குருவும் இணைந்த பார்வை புதனுக்கு கிடைப்பதால் இனிப்பு தொடர்புடைய தின்பண்டம் என்பதையும் இது குறிப்பிடுகிறது. கேதுவோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக புதனை பார்ப்பதால் கார வகைகளையும் இணைத்து விற்பனை செய்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது. (செவ்வாய்-காரம்). குரு நீசம் பெற்று சனியோடு பரிவர்த்தனை பெறுவதால் வருமானத்தில் தடைகள் ஏற்படும் என்பதும் இனிப்பை குறிக்கும் குரு பாதகாதிபதியானதும் மற்றொரு இனிப்பு கிரகம் சுக்கிரன் 8 ல் மறைந்ததும் இனிப்பு வகைகள் நஷ்டத்தை கொடுக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றன. ராசியிலும் தசாம்சதிலும் சந்திரன் கடகத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. குரு லக்ன பாதகாதிபதியாகி விரையாதிபதி சூரியனோடு இணைந்து 1௦ க்கு 1௦ ஆன 7 ல் நிற்கிறது. சுக்கிரன் ராசியின் பாதகாதிபதியாகி ராசிக்கு 1௦ ல் மேஷத்தில் நிற்கிறது. இதனால் இனிப்பு தொடர்புடைய வகையில் ஜாதகிக்கு லாபமிருக்காது என்பது தெளிவாகிறது.

2௦13 ல் ராசிக்கு 1௦ ல் நிற்கும் சுக்கிர திசையில் குரு புக்தியில் இந்தத்தொழிலை துவங்கி கடனுக்கு பொருள் கொடுத்து நெருக்கடிக்கிடையில்தான் இதுவரை தொழிலை செய்து வருகின்றனர். 6 ஆமதிபதியும் 1௦ ஆமதிபதியும் பரிவர்தனையாவதும் இவர் கடன் கொடுத்து வியாபரம் செய்ய காரணமாகிறது. வெளி நபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தங்கத்தின் காரக கிரகமான பாதகாதிபதி குரு 7ல் அஸ்தங்கமானதால் மாங்கல்யத்தைக்கூட அடமானம் வைத்துள்ளதாக ஜாதகி கண்ணீர் சிந்த தெரிவித்தார். வெளிநாட்டில் புகழ் பெற்ற இனிப்பு சாக்கலேட் ஒன்றிற்கு ஏஜென்சி எடுத்து அதில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் கார வகையை குறிக்கும் ராசியின் முதல்தர யோகாதிபதியான செவ்வாய்  ராசிக்கு 1௦ ஆமதிபதியாகிறார். அவர் மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் உச்சம் பெற்று ராசிக்கு 7 ல் நின்று சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு கார வகைகளில் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை என்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பூமிகாரகன் செவ்வாயால் இவர்களுக்கு 2 வீடுகளில் இருந்து வாடகை வருகிறது.

ஜாதகி தற்போது சுக்கிரதிசை புதன் புக்தியில் உள்ளார். 6 ஆமிடத்தோடு பரிவர்தனை பெறும் புதன், கடன் பாதிப்பை தருகிறார். லக்னாதிபதி புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகம் என்பதாலும் அது சனியோடு தொடர்பாவதாலும் ராசிக்கு 7 ல் சனியும் குருவும் தற்போது வந்துள்ளதாலும் தொழில் வகை ஆலோசனை கேட்டு ஜாதகி என்னை தொடர்புகொண்டார். செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக இருப்பதாலும் சுக்கிரனுக்கு 1௦ ல் செவ்வாய் இருப்பதாலும் இனிப்பு வகைகளில் முதலீடு செய்யாமல் காரவகை மட்டும் செய்து படிப்படியாக கொடுத்த கடனை வசூல் செய்துகொள்ளுமாறு சொல்லப்பட்டது. சந்திரன் மூன்று சக்கரங்களிலும் (நவாம்சத்தில் பரிவர்தனைக்குப்பிறகு) கடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் பேக்கரியை படிப்படியாக குறைத்துவிட்டு பதிலாக சந்திரன் குறிக்கும் மளிகை கடை (கடன் கொடுக்காமல்) நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செவ்வாயின் நிலையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் கடன் வசூலான பிறகு இருக்கும் இடத்தில் மேலும் இரு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் சொல்லப்பட்டது.   

ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவர் ஈடுபடும் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எத்தனை திறமை படைத்தவராயினும் ஒருவர் ஜாதகப்படி சாதகமற்ற தொழிலை தேர்ந்தெடுத்தால் தோல்வி நிச்சயம். ஜாதகரை வாட்டும் கிரகங்களைப்போலவே அவர்களை உயர்த்தும் கிரகங்களும் உண்டு. அத்தகைய கிரகங்களை அடையாளங்கண்டு அவை சார்ந்த வகைகளில் ஒருவர் ஈடுபடுவது அவரது வாழ்வை நிச்சயம் உயர்த்தும்.  


விரைவில் அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 6 December 2020

அப்பாவின் வேலை கிடைக்குமா?

 


திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை தற்போது கொண்டுவந்துவிட்டார்கள். இதுபோன்று வேலை அமைவது குரூரமான ஜாதக அமைப்பு என்றாலும் அதற்கும் ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஒருவரது லக்னாதிபதியை 9 ஆம் அதிபதி அல்லது சூரியன் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகர் தந்தையின் காலதிற்குப்பிறகே தனது வாழ்வில் முன்னேற முடியும். அத்தகையோர் தந்தையை விட்டு விலகி இருந்தால் பாதிப்பு குறையும். மேலும் தனது முன்னேற்றதிற்கான முக்கிய முடிவுகளை சனி ஜாதகத்தில் நன்றாக இருப்பின் சனிக்கிழமைகளிலும், சனி ஹோரைகளிலும் எடுத்தால் சிறப்பாக அமையும். மேலும்  ஞாயிற்றுக்கிழமையையும், சூரிய ஹோரையையும் தவிர்த்தால் சிறப்பு கூடும். சனியும் கெட்டிருந்தால் லக்னாதிபதி, லாபாதிபதியையும் மற்றும் ஜாதகத்தில் வலுவான கிரகம் இவற்றின் மூலம் தனது முயற்சிகளை மேற்கொள்வது சிறைப்பைத்தரும். எப்படியாயினும் சூரியனை தவிர்த்தல் நலம்.     

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 


  

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு, உச்சமான ராசியாதிபதி செவ்வாயுடன் இணைந்து நீச பங்கமாகிறார். ஜாதகத்தில் 9 மற்றும் 1௦ அதிபதிகள் சூரியனும் புதனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றனர். இது தந்தை வழி வந்த கொடுப்பிணை என்று கூறலாம். இதைத்தவிர கால புருஷனுக்கு 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குருவும் சனியும் இணைந்துள்ளதால் மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. இரண்டாவது யோகமே இதில் முதன்மையானது. சூரியன் 1௦ ஆமதிபதியோடு இணைந்து 2 ல் நின்றதால், தந்தை ஜாதகருக்கான வருமான வாய்ப்பை தமயனுக்கு வழங்குகிறார் என அனுமானிக்கலாம். சிம்மத்திற்கு 5 ஆமிடம் தனுசின் அதிபதி குருவோடு இணைவது மற்றொரு கோணத்தில் இதை தெளிவாக்குகிறது. ஜாதகர் விருட்சிக ராசிக்காரர் என்பது கவனிக்கத்தக்கது. இது ஜாதகரின் முன்னேற்றத்தைக்காண தந்தை உயிரோடு இருக்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. அப்படி எனில் தந்தை இறந்த பிறகே அவரது வேலை தமயனுக்கு கிடைக்கும். இது பாதகமான அமைப்பே. விருட்சிக ராசி இல்லை என்றால் தனது வேலையை தொடர இயலாத சூழலில் தந்தை வேலையை தமயனுக்கு விட்டுத்தருவார் எனலாம்.

1962 ல் அனுஷம்-3 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகருக்கு 1971 முதல் 7 & 1௦ க்குரிய புதன் திசை நடக்கிறது. புதன் 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையை வழங்க வேண்டும். 7 ஆம் அதிபதி என்பதால் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும். 9 ஆம் அதிபதி சூரியன் தனது வீட்டிற்கு 6 ல் பகை வீட்டில் தனது பகை கிரகங்களான சனி, கேது, லக்ன விரையாதிபதி செவ்வாயுடனும், பாதகாதிபதி புதனுடனும் இணைந்து நிற்கிறார். இது சூரியனுக்கு வலுவற்ற அமைப்பாகும். ஜாதகத்தில் ராசியாதிபதி செவ்வாய் உச்சமாகியுள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமாகவில்லை என்ற நிலையில் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியே வலுவானதாகிறது. புதன் செவ்வாயின் சாரம் அவிட்டம்-2 ல் நிற்கிறார். செவ்வாய் சிம்மத்தின் பாதகாதிபதி குறிப்பிடத்தக்கது. இதனால் ராசிக்கு 8 ஆமிடமான புதன் திசையில் ஜாதகரின் தந்தைக்கு பாதகம் ஏற்படும். ஜாதகரின் 2௦ ஆவது வயதில் ராசிக்கு 8 ஆமதிபதியான புதனின் திசையில் ராசிக்கு 9 ஆமிடத்தில் புதனின் ஆயில்யம்-3 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகர் தனது தந்தையை இழந்தார். ராகு தந்தையை குறிக்கும் சிம்மத்தின் விரையத்தில் நின்று தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தினார். 

தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்திய அதே ராகு, 1௦ ஆமிட தொடர்பையும் பெற்று 1௦ ஆமிடமான கன்னிக்கு லாபத்தில் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வேலையையும் வாங்கிக்கொடுத்தது. தந்தைக்கு திடீர் மரணம் ஏற்பட்டதால் கருணை அடிப்படையில் தந்தையின் வேலை தமயனுக்கு கிடைத்தது. 2 ஆமிடத்தில் சூரியன் அமைந்தால் அரசு வகை வருமானம் குடும்பத்திற்கு ஏற்படும். அந்த வகையில் அரசுத்துறை வங்கியில் பணிபுரிந்த தந்தை மூலமும் தந்தைக்குப்பிறகு அவரது வேலையை பெற்ற ஜாதகருக்கும் அரசு வகை வருமானம் வருகிறது. தசாம்ச லக்னம் தனகாரகன் குருவின் வீடாகி அதில் சனி நிற்பதால் தனம் சார்ந்த பணி. தசாம்ச 1௦ ஆமிடமான கன்னியை தங்களுக்குள் பரிவர்தனையான இரு தன காரக கிரகங்கள் சுக்கிரனும் குருவும் பார்க்கின்றனர். தசாம்ச பரிவர்த்தனை பாதகதிற்குப்பின் சாதகம் என்ற நிலையை குறிப்பிடுகிறது. தசாம்ச 1௦ ஆமதிபதியான புதன், லக்னத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்ப்பதால் கணக்கு, ஆவணம், பதிவுகள் தொடர்புடைய பணி என்பதை குறிப்பிடுகிறது. 


மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திப்போம்,


அதுவரை வாழ்த்துக்களோடு,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501.

Monday, 23 November 2020

முயல் வளர்ப்பு லாபம் தருமா?

 


அன்பர் ஒருவர் முயல் பண்ணை வைத்து சம்பாதிக்க ஆசைப்படுகிறேன். எனது ஜாதகப்படி அது லாபகரமானதாக இருக்குமா? என்ற கேள்வியுடன் தொடர்புகொண்டார். இது ஒரு சாதாரண தொழில் ரீதியான கேள்விதான் எனினும் தொடர்புகொண்ட நபர் தன்னை ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். பொதுவாக ஆசிரிய தொழில் புரிவோர் குருவின் ஆதிக்கத்தில் வருபவர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் என்றால் ஜாதகத்தில் ஜீவன பாவங்களுடன் குருவும் சூரியனும் தொடர்புகொண்டிருக்க வேண்டும். குருவும் சூரியனும் சத்வ குணத்தை சேர்ந்த கிரகங்களாகும். அப்படி இருக்கையில் இவர் எப்படி முயல் பண்ணை வைத்து அதை மாமிசமாக்கி உண்ணக்கொடுத்து தனது கர்மாவிற்கு பாதகத்தை உண்டாக்கிக்கொள்கிறாரே என்று எண்ணினேன். முன்பொரு முறை என்னை தொடர்புகொண்ட தென்மாவட்டத்தை சார்ந்த பிராமண வகுப்பை சார்ந்த நபர் தனது நிலத்தில் மீன் வளர்ப்பு செய்யலாமா? என்று கேள்வி கேட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார். கலிகாலத்தில் இவை சாதாரணம் என்று எண்ணியபடி ஜாதகத்தை ஆராய்ந்தேன்.

கீழே ஜாதகம்.


1) ஜாதகத்தில் வருமானத்தை தரும் 2 ஆம் பாவத்தில் குரு, ஜீவன காரகன் சனி சாரத்தில் அனுஷம்-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகரின் ஜீவன வகையில் குருவின் தன்மை இருக்கும்.

2) குரு 1௦ ஆமிடத்தையும், சனி 1௦ க்கு 1௦ ஆன 7 ஆமிடத்தை பார்ப்பதாலும் ஜாதகர் ஆசிரியராக பணிபுரிய ஜாதக அமைப்பு உள்ளது.

3) புதன் 1௦ ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் ரோஹிணி-2 ல் நின்று,  2 & 7 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து குரு பார்வை பெற்று 2, 7, 1௦ ஆமிடத்தோடு தொடர்புகொண்டு வர்கோத்தமம் பெற்றதால் ஜாதகர் ஆசிரியர் பணி புரிவார் என்பதை அனுமானிக்கலாம்.

4) 1௦ ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் புதனின் ஆயில்யம்-1 பெற்று, 1௦ ஆமதிபதி சந்திரன் புதன் வீட்டில் கன்னியில் 2 ஆம் பாவத்திற்கு லாபத்தில்  அமைந்ததாலும், இப்படி அமைந்த 1௦ ஆமதிபதி சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் சந்திரனின் சாரத்தில் அமைந்ததாலும் ஜாதகரின் பணி கல்வி தொடர்பானது என்பது தெளிவாகிறது. 1௦ ஆமிட கிரகமான சுக்கிரன் நவாம்சத்தில் குரு வீட்டில் நிற்பது கவனிக்கத்தக்கது.  

5) ராசிக்கு 1௦ ல் ராசியாதிபதி புதனின் வீட்டில் திக்பலத்தில் அமைந்த சூரியனால் ஜாதகர் கல்வி தொடர்பான அரசுத்துறையில் பணிபுரிகிறார் என்பதை அனுமானிக்கலாம். இந்த சூரியன் நவாம்சத்தில் சனியோடு இணைந்து நிற்பதும் ஜீவனம் அரசுவகை என்பதை குறிப்பிடுகிறது.

6) இன்னும் எளிமையாக தசாம்சத்தில் 1௦ ஆம் அதிபதி சந்திரன் குரு வீட்டில் அமைத்து, 1௦ ஆமிடத்தில் சூரியன் அமைந்து, 1௦ க்கு 1௦ ஆமிடமான (பாவத்பாவம்) 7 ஆமிடத்தை அதன் அதிபதி செவ்வாயோடு இணைந்த குரு பார்ப்பதாலும் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை அருதியிட்டுக்கூறுகின்றன.  

ஒருவரது தொழிலை அனுமானிக்க எத்தனை உபாயங்கள் பாருங்கள். இங்கு கூறியுள்ளவை சில மட்டுமே. இப்படி ஜாதகம் அமையப்பெற்றவர் ஏன் தற்போது முயல் பண்ணை வைக்க எண்ணுகிறார் என ஆராய்வோம் வாருங்கள்.

ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. குரு ஜாதகத்தில் உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் குரு வக்கிரம் பெற்று அதன் அதிபதி செவ்வாயால் கால புருஷனுக்கு உணவு ஸ்தானமான ரிஷபத்தில் இருந்து பார்க்கப்படுகிறார்.  குரு செவ்வாய் பார்வை பெற்றதால் தோஷமான நிலையில்தான் உள்ளார். அதுவும் விருட்சிகத்தில் அமையும் பாதிக்கப்பட்ட குரு வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக கெடு செயல்களில் ஜாதகரை ஈடுபட வைக்கும். ஏனெனில் விருச்சிகம் கால புருஷனுக்கு 8 ஆமிடமான மறைவு ஸ்தானமாகும். பாவியின் வீட்டில் பாவியின் பார்வையில் குரு உச்சமாகி வக்கிரமானதால்  நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற சனியின் சாரமும் பெற்று அது 2 ஆம் பாவமும் ஆனதால் ஜாதகர் இப்படி ஒரு கொலைக்கு உயிர் பிராணியை வளர்த்துக்கொடுக்கும் தொழில் செய்வார் என்பது புலனாகிறது. 2 ஆம் பாவம் என்பது 1௦ அதிபதி சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் ஜாதகர் இப்படி ஒரு நீசத்தொழிலுக்கு எண்ணம்கொண்டுள்ளார். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது பசு, யானை, எருமை, குதிரை போன்று வாழ்க்கைக்கும் ஜீவனத்திற்கும் உறுதுணையாக இருக்கும் பிராணிகளை 4 ஆமிடத்தைக்கொண்டும் இதர வகை பிராணிகளை அதாவது உணவுக்காக வளர்ப்பது, பாதுகாப்பிற்காக நாய் வளர்ப்பது போன்றவற்றை 6 ஆமிடத்தைக்கொண்டும் அறியவேண்டும். பொதுவாக பண்ணை வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் பிராணிகளை 4 ஆமிடம் குறிப்பிடும்.

இந்த ஜாதகத்தில் நீச்சதிற்கொப்பான நிலை பெற்ற 4 ஆமதிபதி சனியின் சாரம் அனுஷத்தில் வக்கிரமான 6 ஆமதிபதி குரு நிற்கிறார். இதனால் ஜாதகர் வியாபாரத்திற்காக பிராணிகளை பண்ணை முறையில் வளர்க்க எண்ணுகிறார் என்பது தெரிகிறது. இதில் ஜாதகர் ஏன் முயல் வளர்க்க எண்ணுகிறார் என்ற கேள்வி எழுகிறது. முயலை குறிக்கும் காரக கிரகம் சந்திரனாகும். ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் முயல் வளர்க்க எண்ணுகிறார். புதனின் வீட்டில் சந்திரன் 2 க்கு லாபத்தில் அமைந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் புதனாலும் ஜாதகரின் வியாபர நோக்கம் புலனாகிறது. எப்படிப்பார்த்தாலும் குருவின் அம்சத்தில் போதனை செய்து சம்பாத்தியம் செய்யும் ஒருவர் உணவிற்காக பிராணிகளை வளர்த்துக்கொடுப்பது பாதகமே என்றொரு நெருடல் எழுகிறது. சரி இதன் விழைவு என்ன என ஆராய்வோம். ஜாதகத்தில் சந்திரன் விரைய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்துள்ளார். இதனால் சுய தொழில் செய்தால் ஜாதகர் தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதி. மேலும் 12 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் ஒருவர் தனது கர்மாவின் அடிப்படையில் பெற்ற சாபத்தை குறிப்பிடும் கிரகமாகும். ஜாதகருக்கு சந்திரனின் காரகமான மாத்ரு வகை சாபம் உள்ளது. ஜாதகர் இந்த தொழிலை செய்தால் அது அதிகமாகி ஜாதகரை பழிவாங்கும். இதை தவிர்க்க ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா? என காண்போம்.

ஜாதகத்தில் 2 ல் நிற்கும் 6 ஆமதிபதி குரு வக்கிரமாகி, குருவின் சார நாதனும் ஜீவன காரகனுமான சனியும் வக்கிரமாகியுள்ளதால் ஜாதகர் தொழில் விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்க மாட்டார். இதனால் ஜாதகர் ஜோதிடர்கள் மட்டுமல்ல நண்பர்களிடமும் ஆலோசனை மட்டுமே கேட்பார். ஆனால் முடிவை ஜாதகர் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். எனிவே இந்த பாதக தொழிலை செய்யாதீர்கள் என்று இவருக்கு ஆலோசனை சொல்வது வீண். மேலும் கால புருஷனுக்கு 8 ஆமதிபதியான, செவ்வாய், லக்னத்திற்கு 8 ஆமிடதிலிருந்து திசா நாதன் குருவை பார்ப்பதால் ஜாதகர் இந்த தொழிலை உறுதியாக மற்றும் பிடிவாதமாகச்செய்வார். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும், சாபத்தில் விளைவையும் ஜாதகர் அனுபவிப்பார். 1௦ க்கு பாதகத்தில் நிற்கும் அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தியில் அது நடக்கும். தற்போது ஜனன செவ்வாய் மற்றும் குரு மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகு-கேதுக்களும், லக்னத்திற்கு 4 ல் இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்க்கும் குருவும் சனியும் இதை உறுதி படுத்துகின்றன.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

  

Sunday, 1 February 2015

உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும்

சுற்றுலாத்துறை:

ஜோதிட நுணுக்கங்கள் வலைப்பூ கடந்த ஜனவரி 23 முதல் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துககொள்கிறேன்.  பணிச்சுமை காரணமாக அடிக்கடி எழுத இயலாவிட்டாலும் உபயோகமாக மற்றும் ஆய்வுப்பூர்வமான பதிவுகள் தொடர்ந்து வரும் என்பதை உறுதியளிக்கிறேன். ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கான பதிவு இது. புரியாதவர்கள் அடிப்படையைப் புரிந்துகொண்டு தொடரவும்.

பாவச் சக்கரத்தைப் பற்றி எழுதிய போதே வர்க்கச் சக்கரங்களைப்பற்றி எழுதுமாறு பல்வேறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கிரகங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் எப்படி செயல்படும் என்பதை அளவிடவே வர்க்கச் சக்கரங்கள். இவற்றில் 16 வகை  சக்கரங்கள் முதன்மையானவை. இவற்றை சோடசாம்சம் என்பர். ஒரு குறிப்பிட்ட சக்கரத்திலிருந்து அது தொடர்புடைய  விஷயத்தை மட்டுமே ஆராயவேண்டும் என இச்சக்கரங்களின் பயன்பாட்டை வரையறுத்த மகரிஷி பராசரர் தனது பராசர ஹோராவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமணம் தொடர்புடையவற்றிற்காக மட்டும் ஆராய வேண்டிய நவாம்சத்தை கிரக வலுவை மதிப்பிட இன்று ஜோதிடர்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். (பயன்பாட்டிலும் இது சரியாகவே வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.)

பத்தாமிடாதிபதியின் வலுவை அளவிட நவாம்சச் சக்கரத்தோடு தசாம்சச் சக்கரத்தையும் கவனிக்கவேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் மகிழ்ச்சியையும் ஜாதகரது கர்மாவையும் குறிப்பிடும்.

தசாம்சச் சக்கரத்தின் விசேஷங்கள்.

1.தசாம்ச சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாவது பாவமும் அதன் கேந்திரங்களான 6, 9, 12 ஆம் பாவங்களும் முக்கியமானவை. இதன் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10 ஆமதிபதிகளும் மிகுந்த நன்மையைச் செய்யும்.

2.தசாம்சக் கட்டத்தில் 10 ஆமிடத்தில் அமையும் கிரகங்கள் அவை சுபக்கிரகங்களானாலும் பாவக் கிரகங்களானாலும் நன்மையையே செய்யும்.

3. கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் சுகஸ்தானமான  நான்காமிடம் தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமதத்தையும் உருவாக்குவதாகும். காரணம் நான்காமிடம் சுகத்தைக் குறிப்பது 10 ஆமிடம் செயலைக் குறிப்பது. ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்பாடு பாதிக்கப்படும் என்பது இதன் அடிப்படையாகும். தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமையும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.


16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களில் எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை காண்போம்.

1.ராசி                 -    மெய், நிறம், தோற்றம்
2.ஹோரா             -    செல்வநிலை
3.திரேக்காணம்        -    சகோதரன், சகோதரி
4.சப்தாம்சம்           -    குழந்தைகள்
5.நவாம்சம்           -     கணவன் அல்லது மனைவி
6.தசாம்சம்            -    தொழில்
7.துவாதசாம்சம்       -    பெற்றோர்
8.திரிம்சாம்சம்         -    விதி
9.சோடசாம்சம்        -    வாகனம்
10.சஷ்டியாம்சம்       -    பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
11.சதுர்த்தாசம்         -    அதிஷ்டம்
12.விம்சாம்சம்         -    கடவுள் நம்பிக்கை, குலதெய்வம், பக்தி
13.சதுர்விம்சாம்சம்     -    கல்வி
14.பம்சாம்சம்          -    உடல் வலிமை
15.சுவேதாம்சம்        -    சுகம்
16.அக்ஷவேதாம்சம்    -    குணம்


நான்காமிடம் ஒருவரின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. 12 ஆமிடம் அயனம் எனப்படும் நகர்தலைக் குறிப்பிடும். மேற்கண்ட ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் 12 ஆமிடாதிபதி செவ்வாய் வாகன காரகன் சுக்கிரனோடு சேர்ந்து நான்காமிடத்தில் சிம்மத்தில் உள்ளது. இதனால் ஜாதகர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தொழிலை செய்ய இயலாது என்பது இதன் பொருளாகும்.  ஜீவன காரகன் சனி விரைவான செயல்பாட்டைக் குறிக்கும் சர ராசியாதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளார். ஜாதகர் வாகனச் சுற்றுலா தொழிலை மேற்கொண்டுள்ளார்.

இதை தசாம்சச் சக்கரத்தை வைத்து ஆராய்வோம்.

தசாம்சச் சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாமிடத்தில் ஆன்மீகக் கிரகங்களான குருவும் கேதுவும் நன்கு அமைந்துள்ளனர். (ஜாதகர் திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும்  ஆன்மீக சுற்றுலா நிறுவனம் நடத்துகிறார். மேலும் குரு ராசி, நவாம்சம் & தசாம்சத்திலும் வர்கோத்தமத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. மூன்றாமதிபதி செவ்வாய் ஆட்சியில் உள்ளது சிறப்பு.  6 ஆமதிபதி சனி பகவான்  6 க்கு 12 ல் அமர்ந்தாலும் ஆட்சியில் உள்ளார். 2 மற்றும் 9 ஆமதிபதியும் வாகனம், சுற்றுலா இவற்றிற்கு காரகனுமான சுக்கிரன் பணவரவைக் குறிக்கும் இரண்டாவது பாவமான துலாத்தில் ஆட்சியில் உள்ளது இந்த வகையில் வருமானம் வரவேண்டும் என்பதை உறுதி செய்கிறது. துலாராசியும் ஒரு சர ராசி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 12 ஆமதிபதியும் விரையாபதியுமான சூரியன் 3 ஆவது பாவத்திற்கு கேந்திராதிபதியாவதால் நன்மையைச் செய்யவேண்டும் ஆனால் தசாம்சத்தில் 4 ஆவது பாவத்தில் அமையும் பாவக்கிரகம் தீமையைச் செய்ய வேண்டும் என்பதால் சூரியன் தீமையையும் கலந்தே செய்யவேண்டியவராகிறார். 

ராசிச்சக்கரத்தின்  3 ஆம் பாவாதிபதி சந்திரன் தசாம்சத்தில் 8ல் மறைந்தாலும் சுக்கிரனின் பார்வை பெறுவது சிறப்பு அத்துடன் சந்திரனுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதியும் 10 ஆமதியுமான புதன் அமைந்தது ஜாதகரின் தொழில் ரீதியிலான முயற்சி, விருப்பம் மற்றும் கர்மாவையும் தெளிவாக விளக்குகிறது.

வர்க்கச் சக்கரங்களைப் போடவும் ஆராயவும் மிகுந்த நேரம் பிடிக்கும் என்பதாலும் அப்படி கால அவகாசமெடுத்து கணிக்குமளவுக்கு ஜோதிடனுக்கு தட்சிணை தரப்படுவதில்லை என்பதாலும் 90 சதவீத ஜோதிடர்கள் ராசி மற்றும் நவாம்சத்தோடு நின்றுவிடுகின்றனர். இன்று ஜாதகங்களைக் கணிக்க கணினிகள் பயன்படுகின்றன என்பதால் ஜோதிடர்கள் இனி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இப்படி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் உண்டு. ராசிக்கட்டதில் ஒரு லக்னம் மாறும் கால இடைவெளி தோராயமாக 2 மணி நேரமாகும். நவாம்ச சக்கரத்தில் 12 நிமிடத்திற்கு ஒருமுறை லக்னம் மாறும். ஆனால் வர்க்கச் சக்கரங்களில் ஓரிரு நிமிடங்களிலேயே லக்னமும் கிரகங்களும் மாறும். எனவே ஜனன நேரம் துல்லியமான ஜாதகங்களுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது பயன் தரும். இதில் ஜனன நேரத்தில் வித்தியாசமிருக்குமென சந்தேகமேற்பட்டால்  அதை சரிசெய்ய (For birth time rectification) தசாம்ச சக்கரத்தை ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எப்படியெனில் ஜாதகர் முப்பது முப்பத்தைந்து வயதில் தொழில் ரீதியாக நிலைத் தன்மை பெற்று இருப்பார். அப்போது அவரது தொழிலுக்கேற்ப தசாம்ச சக்கரம் பொருந்தும் வகையில் ஒருசில நிமிடங்களை முன்னும் பின்னும் சரி செய்து துல்லியமான ஜனன நேரத்தை காண்பது என்பது வழக்கமாகிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.