Sunday 27 September 2020

கடனில் கரையும் கர்மவினைகள்!

 


வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை.  இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு. “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றொரு பிரபலமான ராமாயண வாசகம் கடனின் துயரை கூறுகிறது.   பேராசையைத்தவிர கடனுக்கு காரக கிரகங்கள் என்று கூறினால் அது ராகு-கேதுக்கள்தான். தன காரகன் குரு, ஜனன காலத்தில் கேதுவோடு தொடர்பாகி கோட்சாரத்திலும் குருவும் கேதுவும் தொடர்பாகும்போது  நிச்சயம் கடன் ஏற்படும். இதை தவிர்க்க இயலாது. கால புருஷனுக்கு 6 ஆம் அதிபதியான புதனின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து தன ஸ்தானமும் அதன் அதிபதியும் ஜனன ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போதும் கடன் ஏற்படும். கடனால் படும் நீடித்த துயரத்தை சனியும், அதீத துயரத்தை செவ்வாயும், கடனின் குரூரத்தன்மையை ராகுவும், கடனுக்கான சட்ட நடவடிக்கைகளை கேதுவும் சுட்டிக்காட்டும். கடன் கொடுக்கக்கூடாதவர்களுக்கான ஜாதக அமைப்பைப்பற்றி இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்திற்கு விரையத்தில் கால புருஷனுக்கு ஆறாம் அதிபதி புதன், கேது, 4 ஆமதிபதி நீச செவ்வாய் ஆகியோரோடு இணைந்துள்ளார். தன ஸ்தானாதிபதி புதனும் தன காரகன் குருவும் வக்கிரமானது பொருளாதார விஷயத்தில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற ஜாதகியின் தீவிர எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னாதிபதி இப்படி கடனின் காரக கிரகங்களோடு விரையத்தில் மறைந்து குருவும் வக்கிரமானதால் ஜாதகி கடனால் தனது வாழ்வில் நிம்மதி இழப்பார் என எதிர்பார்க்கலாம். லக்னபுள்ளி மகம்-3 ல் விழுந்துள்ளது ஜாதகி கடன், வழக்கு இவைகளோடு தொடர்புடையவாராக  வாழ்வில் தனது கர்மாவை கழிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜாதகி ஒரு வழக்கறிஞர். ஜாதகத்தில் குரு கேதுவின் மூலம்-2 லும், கேது குருவின் புனர்பூசம்-4 லும் நின்று சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். ஜாதகிக்கு தற்போது செவ்வாய் திசையில் சனி புக்தி கடந்த 2019 முற்பகுதியில் துவங்கியது. செவ்வாய் வியையத்தில் நீசமாகி கேதுவால் தீண்டப்பட்டுள்ளது. கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுக்கக்கூடியது. இந்த ஜாதகிக்கும் கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். பாதக ஆதிபத்யம் பெற்ற செவ்வாயின் திசையில் செவ்வாய்க்கு பாதகத்தில் செவ்வாயின்  மிருகசீரிஷம்-1 ல் நிற்கும் 6 ஆமதிபதி சனி புக்தி துவங்கியதும் ஜாதகி கேதுவின் ஆசை வலையில் விழுந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனது மிக கணிசமான தொகையை கடனாக அசையாச்சொத்து ஒன்றின் பெயரில் ஜாதகி ஒருவருக்கு கொடுத்தார். கோட்சாரத்தில் ஜனன காலத்தில் வக்கிரமான குருவோடும், கோட்சார குரு கோட்சார சனியோடும் கோட்சார கேது தொடர்புகொண்ட 2019 முன்பகுதியில் இது நடந்தது.  

கடன் பெற்றவர் தனது நிலப்பத்திரத்தை அடமானமாக வைத்தே கடனை பெற்றிருக்கிறார். சிறு விஷயங்களுக்கு ஜோதிடர்களை நாட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவரின் வாழ்நாள் ஆதாரமான விஷயங்களில் ஈடுபடும்போது தகுந்த தெளிந்த  ஜோதிடர்களின்  ஆலோசனையை நாட வேண்டியது அவசியம். ஒருவர் ஈடுபடும் செயலின் காரக கிரகம் அவரது ஜாதகத்தில் எந்த நிலையில் அமைந்துள்ளது மற்றும் நடக்கும் திசா-புக்திகள் அந்த காரக கிரகத்திற்கு எப்படி ஒத்துழைக்கும் என்று அறிந்து தனது செயல்களை திட்டமிடுவது அவரது வாழ்வின் பல சிரமங்களை குறைக்க வழிவகுக்கும். இந்த ஜாதகத்தில் நிலப்பத்திரத்தை ஈடாக பெற்று கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை (Unmovable Property) குறிக்கும் காரக கிரகமான செவ்வாயும், பத்திரத்தை குறிக்கும் காரக கிரகமான புதனும், லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் அமைந்துள்ளனர். அதிலும் செவ்வாய் அசையா சொத்தை குறிக்கும் 4 ஆவது பாவம் விருட்சிகத்திற்கு 9 ஆம் பாவம் கடகத்தில் நீசம் பெற்று அது லக்னத்திற்கு விரையமாகவும் அமைந்துள்ளது. கால புருஷனுக்கு 4 ல் கடகத்தில் இப்படி ஒரு சூழல் அமைவது ஜாதகி தனது வாழ்நாளின் செவ்வாய் திசா-புக்தி காலங்களில் பூமி வகைகளிலும், புதன் தொடர்பான திசா–புக்தி காலங்களில் பத்திரம் தொடர்பான கடன் வகைகளில் பாதகத்தையும் சந்திப்பார் என்பது ஜாதகத்தில் தெளிவாக உள்ளது. முக்கியமாக ஜாதகிக்கு செவ்வாய் திசை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தியில் கடந்த 2019 முற்பகுதியில் ஜாதகி கடன் கொடுத்துள்ளார். சனி புக்தியில் மிகப்பெரிய தனத்தை கடனாக கொடுத்ததற்கு காரணம், சனிக்கு திரிகோணத்திலும் திசா நாதன் செவ்வாய்க்கு 7ல் லக்னத்திற்கு 6 ல் ராகு நின்று திசா-புக்தி நாதர்களுக்கு ராகு இடும் கட்டளைதான். கடன் கொடுத்த பிறகு ஜாதகிக்கு ஓரிரு மாதங்கள் வட்டி வந்தது. தற்போது கொடுத்த பணமாவது வந்துவிடுமா என்ற நிலைதான். ஈடாக பெற்ற நில பத்திர வகையில் சில பாதகங்கள் இருப்பதை தற்போது அறிந்து ஜாதகி திகைத்து நிற்கிறார். திசா-புக்தி அடிப்படையில் அலசும்போது ஜாதகிக்கு வரவிருக்கும் ஏழரை சனியின் இறுதி காலத்தில்தான் அவரது பணம் பல போராட்டங்களுக்குப்பிறகு திரும்பக்கிடைக்கும் என்று தெரிகிறது.  

ஜாதகிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை 4 & 12 ஆமிடங்களும் அவற்றில் நின்ற கிரகங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 12 ஆமிடத்தில் 4 ஆமதிபதி நீசமானது ஜாதகிக்கு தாயாதிகள் வழியில் பூமிவகையில் எற்பட்ட இட தோஷம் சாபமாக மாறியுள்ளதையும் அதில் சூரியன் தொடர்பானது இது தலைமுறைகளாக தொடரும் சாபம் என்பதையும்,  புதன், கேது தொடர்பாகி 12 ல் நின்றது நில பத்திர வகைகள் மூலம் ஏற்பட்ட பாதிப்பே சாபத்திற்கு காரணம் என்றும் அறிய முடிகிறது.

ஒருவர் வட்டித்தொழிலில் பொருளீட்டவேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் வட்டித்தொழிலின் காரக கிரகங்களான ராகுவும் கேதுவும் பொருட்பாவங்களான 2,6,10,11 ஆகிய பாவங்களில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதில் ராகுவின் பங்கே பிரதானமானதாகும். கேது வட்டித்தொழிலில் ஏற்படும் சிரமங்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும். ராகு மூர்க்கக்குணத்தனத்தொடு எதிர்கொள்ளும். இவைகளுக்கு குரு சுக்கிரன், தொடர்பு ஏற்படின் வட்டித்தொழில் சிரமமின்றி நடைபெறும். இவைகளுக்கு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும். வரக்கூடிய பிரச்சனைகள் மிகுந்த குரூரத்தன்மையோடு அடிதடி, கடத்தல் என்ற வகையில் எதிர்கொள்ளவைக்கும். எனினும் வட்டித்தொழிலில் ஈடுபடுவோரை ஒருவகையில் மற்றவர்களின் கர்மாவை தீர்க்க உதவிடுபவராக கருதலாம். பிறரின் பாவ கர்மாவை இவர்கள் வட்டி என்ற வகையில் பெற்றுக்கொண்டு இவர்கள் கழித்துவிடுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது. இப்படி வட்டித்தொழிலில் சம்பாதிப்பவர்களுக்கு குடும்ப வகையில், சந்ததிகள் வகையில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

விரைவில் மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501

Wednesday 16 September 2020

அகதியின் மகன்

198௦களில் இலங்கையில் உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த சூழலில் போர் முனையில் இருந்து தனது மனைவி குழந்தைகளை வெளி தேசங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு ,இலங்கையில் இருக்கும் தனது சொத்துக்களை இழந்து வெளியேற மனமின்றி,வாழவும் மனமின்றி தவித்தோர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள். போராளிக்குழுக்கள் ஒருபுறம்அரசுப்படை ஒருபுறம் என்று தங்கள் நிம்மதியை இழந்து தவித்தவர்கள் அவர்கள். அதைவிடக்கொடுமை, முறையான ஆவணங்களின்றி அந்நிய தேசங்களில் குடியுரிமை அதிகாரிகளிடம் அகப்பட்டு, தண்டிக்கப்பட்ட சூழலில் தனது குடும்பத்தவர்களின் நிலை என்ன? அவர்கள் வாழ்கிறார்களா? மரணித்துவிட்டார்களா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனரா? என தெரியாது அலைந்த மனிதர்களின் மனோ நிலைதான். சற்று கற்பனை செய்து பாருங்கள். அது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.நாம் இங்கு அலசவிருக்கும் ஜாதகமும் அப்படியான ஒரு மனிதரின் மகனது ஜாதகம்தான்..

இந்த ஜாதகரின் பெயர் கதிர்காமம் என்றும் அவரது தந்தையின் பெயர் மயில்வாகனம் என்றும் கற்பனையான பெயரில் கருதுவோம். மயில்வாகனம் 1983 ல் பிறந்து இரண்டே வயதான தனது மகனையும் தனது இளம் மனைவியையும் அப்படி இத்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் அனுப்பிவிட்டு, இலங்கையில் வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.மயில்வாகனம் தனது மகன் கதிர்காமம் கருவில் இருக்கும்போதே தனது தம்பி வேலாயுதத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தார். இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஒன்று இந்தியாவிற்கு தப்பிச்செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது ராணுவத்துடனோ, போராளிக்குழுக்களுடனோ இணைந்துவிட வேண்டும் என்ற நிலையே அப்போது நீடித்தது.

தனது மகன் குடும்பம் பிரிந்துவிட்டதன் பாதிப்பு மயில்வாகனத்தின் பெற்றோர் வாழ்விலும் எதிரொலித்தது. அது அவர்களது வாழ்வையும் புரட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும். பேரன் கதிர்காமம் பிறந்த 5 வருடம் சென்ற பிறகு மயில்வாகனத்தின் பெற்றோர் இருவரும் தங்களது குடும்ப வாழ்வை முறித்துக்கொண்டனர்.குடும்பத்தை பிரிந்த மயில்வாகனதிற்கு தற்போது பெற்றோர் வழி ஆதரவோ, சகோதர வழி உதவியோ இன்றி தனித்து விடப்பட்டார். சகோதரன், தாய், தந்தை, குடும்பத்தை இழந்த நிலை, போர்ச்சூழல் ஆகியவை தனி ஒருவனின் வாழ்வை தவிடுபொடியாக்கிவிட்டன. அன்றைய சூழலில் பல்வேறு தேசங்களுக்கு உயிர்பிழைக்க தங்களது குடும்பங்களை அனுப்பிவிட்டு இலங்கையில் அப்படி நடைப்பிணங்களாக வாழ்ந்த மயில்வாகனங்கள் ஆயிரமாயிரம். உரிய ஆவணங்களோ அனுமதியோ இன்றி இந்தியா வந்து, தன் மொழி பேசிய மக்களாலேயே ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் .9௦களின் மத்தியில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்தமைக்காக மயில்வாகனத்தின் மனைவியும் மகனும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்படிசொந்த தேசத்தில் வாழ முடியாமல் உறவுகளை உதறிவிட்டு வெளியேறி அந்நிய தேசத்தில் அகதிகளாக, குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக பார்க்கப்படும் மனிதர்களுக்கும் ஒரு ஜாதக  அமைப்பிருக்க வேண்டுமல்லவா, அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே நீங்கள் காண்பது மயில்வாகனத்தின் மகன் கதிர்காமத்தின் ஜாதகம்.


இரண்டாம்பாவம் சொந்த பூமியில், சொந்த ஊரில்ஒருவர் வாழும் நிலையையும், நான்காவது பாவம் சொந்த பந்தங்களோடு குறிப்பாக தந்தை வழி ரத்த உறவுகளோடு அதாவது பங்காளிகளுடன் உள்ள உறவுப்பினைப்பையும் குறிப்பிடும். லக்னம் ஒருவரின் தனித்தன்மையையும், ஐந்தாவது பாவம் அவரது பூர்வீகத்தின் தன்மையையும், 9 ஆவது பாவம் அவரது முன்னோர்களின் செயல்பாட்டையும், சனியின் நிலை ஒருவரது முன்னோர்களின் ஒழுக்கத்தையும் குறிப்பிடும்.. இந்த ஜாதகத்தில் 2 ஆமிடத்தோடு 5 &8 ஆமதிபதி குரு தொடர்பாகி, அங்கு6& 7 ஆமதிபதி சனியோடு 2 ஆமதிபதி புதன் பரிவர்தனையாகியுள்ளது. 5&8 ஆமதிபதி தொடர்பாகும் இந்தப்பரிவர்தனையால் ஜாதகர் பூர்வீகத்தை, சொந்த பூமியைவிட்டு வெளியேறுவார். ஏனெனில் 9 என்பது முன்னோர் வாழ்ந்த பூமி, குரு 8 ஆமிடாதிபதி ஆகையால் பூர்வீகத்தை விட்டு வெளியேறுதலை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. குரு, சனி,ஆகியவை வக்கிரமாகியுள்ளதும் 4 & 9 பாபங்களுக்குரிய செவ்வாய் அஸ்தங்கமாகியுள்ளதும் ஜாதகரது முன்னோர்கள் அடைந்த பாதிப்பை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஜாதகத்தில் 12 ஆமதிபதி சந்திரன் 8ல் சனியின் உத்திரட்டாதி-2 ல் நின்று 2 ஆமிடத்தில் தனது நட்சத்திரம் ஹஸ்தம்-2 ல் அமைந்த சனியோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இந்த இரு பரிவர்த்தனைகளும் ஜாதகரது தந்தைவழி முன்னோர்கள் அடைந்த பாதிப்புகளால் ஜாதகர் தனது தாயகத்தைவிட்டு வெளியேறுவதை தெளிவாக எடுத்துரைக்கிறது. லக்னாதிபதி சூரியன், சனி வீட்டில் நின்று லக்னத்தை பார்ப்பதால் இந்த ஜாதகரின் வாழ்வு சிறப்படைகிறது.. எனினும் சனியின் வீட்டில் அஸ்தங்க செவ்வாயோடும் சுக்கிரனோடும் சூரியன் நிற்பது, ஜாதகருக்கு அதீத கோபத்தையும், பொறுமையின்மையையும், நேர்மையாளனாக, பிடிவாதமுள்ளவனாக, குறைகளை சகித்துக்கொள்ள இயலாதவராக ஒரு மனோநிலையை உருவாக்கும். ஜாதகரின் இந்த குணம் பணியிடத்தில் சிறப்பைத்தந்தாலும், 7 ஆமிடம் இப்படி அதீத உஷ்ணமடைவதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.

தாயை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி, தந்தையை குறிக்கும்9  ஆம் பாவாதிபதி இருவரும் செவ்வாய் ஒருவரே ஆகி அஸ்தங்கமாகியுள்ளது. சனி திசை சுக்கிர புக்தியில் பிறந்த ஜாதகர், அதே சுக்கிர புக்தியில் இலங்கையை விட்டு கள்ளத்தோணி மூலம் தந்தையை பிரிந்து தாயோடு இந்தியா வருகிறார். திசா நாதன் சனி,8 ஆமிட சந்திரனோடு சாரப்பரிவர்தனை பெற்றதும்,புக்தி நாதன் சுக்கிரன் 12 ஆமிட ராகுவின் சதயம்-3 ல் நின்றதும் இதற்கு காரணமாகும். 12 ஆமிடம் வெளிநாட்டில் குடியேறுவதை குறிக்கும். சுக்கிரன் சட்டவிரோத குடியேற்றதிற்குரிய ராகு சாரம் பெற்று 12ல் நின்றதால் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறினர்.ராஜீவ்காந்தி மரணதிற்குப்பிறகு இந்திய அரசு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கிறது. 6 ஆமிடத்தில் நிற்கும் புதனின் திசையில் தண்டனை, அவமானங்களை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரன் சாரம் பெற்ற கேது புக்தியில் 1996-97 ல் ஜாதகரும் தாயும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிற்பாடு விடுதலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2௦௦1ல், 18 வருடங்களுக்குப்பிறகு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வந்து இணைகிறார் மயில்வாகனம்

இப்போது துவதசாம்சத்திற்கு வருவோம்.துவாதசாம்ச சக்கரம் பெற்றோர் நிலையை ஆராய உதவுவதாகும். லக்னத்திற்கு 12 ல் சூரியன் மறைந்து, லக்னத்திற்கு 7 ல் சூரியனுக்கு 8 சந்திரன் நிற்கிறது. சூரிய சந்திரர்கள் 6 – 8 ஆக அமைந்ததிதிலிருந்து பெற்றோர் இருவரும் ஒருங்கிணைந்து வாழும் சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்பதை இது குறிக்கிறது. லக்னத்திற்கு 6, 11 ஆமதிபதி சுக்கிரன் 9 ஆமிடத்தில்தனது புக்தியில் தந்தையைகுடும்பத்தைவிட்டு விலக்குகிறார். இதனால் 6–8 ஆக அமைந்த பெற்றோர் பிரிகின்றனர். அப்போது திசா நாதன் சனி, புக்தி நாதன் சுக்கிரன் இருவருமே சூரியனுக்கு எதிரிகளாவர். ஆனால் 2௦௦1 ல் சூழல் மாறுகிறது. புதன் சனி, சுக்கிரனுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் நண்பனாவார். புதன் லக்னத்தில் அமைந்து 7 ஆமிடத்தில் தன் வீட்டில் அமைந்த சந்திரனை பார்க்கிறார். இதனால் 2௦௦1 ல் புதன் திசையில், சந்திர புக்தியில் பெற்றோர் ஒன்று சேர்கின்றனர்.

 

தந்தை குடும்பத்துடன் இணைந்த பிறகு ஜாதகருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஜாதகர் கணினிக்கல்வியில் முதுநிலை பட்டம் பெற்று தேர்வாகிறார். 2004ல் ஜாதகரின் வாழ்வில் ஒரு பொற்காலம். புதன் திசை ராகு புக்தி அப்போது நடப்பு. ராகு ஜல ராசியில் நின்றாலும் அவர் ஜீவன காரகன் சனியின் சாரம் பூசத்தில் நிற்கிறார். ராகு சூதாட்டம், லாட்டரி, பிரம்மாண்டமான கனவு போல நம்ப முடியாத சம்பவங்களுக்கும் காரக கிரகம் ஆகிறார். அமெரிக்கா எப்போதுமே படித்த, தகுதி வாய்ந்த, திறன்மிகு உழைப்பாளிகளை கடந்த காலங்களில் இருகரங்கள் கொண்டு வரவேற்றிருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் வந்து பணிபுரிய விரும்பும் படித்த, தகுதி வாய்ந்த நபர்களுக்காக நடத்தப்படும் லாட்டரியில் பரிசு பெற்று அமெரிக்காவில் நுழையும்போதே பரிசின் மூலம் பச்சைப்பட்டயம் ( Green card) பெற்று அமெரிக்கா சென்று பணிபுரிகிறார்.

2006ல் இந்தியாவில் புதன் திசையில் குரு புக்தியில் கதிர்காமம் பெற்றோர்களுக்காக ஒரு வீடு வாங்கித்தருகிறார். புதன்4 ஆம் பாவதிபதி செவ்வாயின் சாரம் பெற்று (அவிட்டம்-2)  புக்தி நாதன் குருவின் சாரத்தில் (பூரட்டாதி-3 ல்) செவ்வாய் அமைந்ததால் அது சாத்தியமாயிற்று. ஜாதகருக்கு  பரிவர்த்தனைக்கு உள்ளான புதனின் திசையில் 2 ஆமிடத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் 20௦9ல் திருமணம் நடந்தது .ஒரு ஆண்டிற்குப்பிறகு களத்திர பாவமான 7 க்கு விரையத்தில் 6 ஆமிடத்தில் நிற்கும் வழக்கு பிரிவினை காரகன் கேதுவின் திசை துவங்கியதும் ஜாதகருக்கு வழக்கும் வந்தது, திருமண வாழ்வும் முடிவிற்கு வந்தது. எனினும் மணமுறிவு என்பதை 6 ஆமிடம் குறிப்பிட்டாலும் 8 ஆமிடமே சட்டப்படியான முறையான பிரிவினையை குறிப்பிடும் என்பதால் 4 வருட வழக்குக்குப்பிறகு 2௦15 ல் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் சாரம் (ஹஸ்தம்-2) பெற்ற 8 ஆமதிபதி குருவின் புக்தியின் சந்திரனின் அந்தரத்தில் வழக்கு முடிவுற்று சட்டப்படி விவாகரத்து பெற்றனர். (கேது – வழக்கு, சட்டப்பதியான பிரிவினை) அதே ஆண்டின் பிற்பகுதியில் கேது திசையில்,2 ஆமிடத்தில் ,2 ஆமிடத்ததிபதி புதனோடு பரிவர்த்தனையாகி நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. இங்கு திசாநாதன் கேது (திருவோணம்-2)  மற்றும் சனி (ஹஸ்தம்-2)  ஆகியோர் 8 ஆமிட சந்திரனோடு நட்சத்திர அடிப்படையில் தொடர்புகொண்டதால் ஜாதகருக்கு மணமுறிவு ஏற்பட்டு பிறகு மறுதிருமணம் நடக்கவேண்டும் என்பது கர்மவினை என்று தெளிவாகிறது.

இதனிடையே ஜாதகருக்கு 2017 மற்றும்2019ல்ராசிக்கு 5 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற சுக்கிர திசையில் சுய புக்தியில் ஜாதகருக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். செவ்வாய் அஸ்தங்கமானது ஜாதகருக்கு உறவுகள், பங்காளிகள் வகையில் நன்மையில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் ஜாதகரின் தந்தை தனது சகோதரனை விட்டு விலகினார். உறவுகள் விலகினர், பங்காளிகள் விலகினர். செவ்வாய் அஸ்தங்கமானதால்தான் இந்தியாவில் தங்களது வீட்டில் குடியேரியவர்களிடம்கூட முறையான வாடகை வசூல் செய்ய ஜாதகரால் இயலவில்லை. பெற்றோரை ஜாதகர் தனது முதல் திருமணம் விவாகரத்தான பிறகு அமெரிக்கா அழைத்து வந்தார். எனினும் வீடு மற்றும் சொத்துகள்  வகை பிரச்சனைகளை சரிசெய்ய தந்தை தனது மனைவியை ஜாதகரிடமே விட்டுவிட்டு இந்தியா வந்து தங்கினார். நீண்டதொரு போராட்டதிற்குப்பிறகு 2020 ல் தற்போது சுக்கிர திசையில்  சுய புக்தியில் செவ்வாய் சாரம் பெற்ற புதன் அந்தரத்தில் வீட்டை விற்றனர் எனினும் சிறிது மீத தொகை வரவேண்டியுள்ளது. இங்கே அஸ்தங்க செவ்வாயின் பாதகம் அதீதம் என்பது தெளிவாகிறது.

சூரியன் பாரம்பரியத்தைகுறிக்கும் காரக கிரகம் என்பது தெரியும். ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது ஒரு தலைமுறை தோஷம் என்பது சூரியனின் நிலைகொண்டு அறியலாம். சூரியன்7 ஆமிடத்தில் செவ்வாயோடு இணைந்து நின்றதால் தற்போது ஜாதகர் தனது இரண்டாவது மனைவியோடுகூட இனிமையான இல்லறம் நடத்த இயலவில்லை. ஜாதகரால் மட்டுமல்ல ஜாதகரின் தந்தை,பாட்டன் ஆகியோரின் குடும்ப வாழ்வும் பாதித்துள்ளது. தற்போதும் ஜாதகரின் தந்தை இந்த கொரானா காலத்தில் அமெரிக்கா செல்ல வழியின்றி இந்தியாவில்தான் இருக்கிறார். இத்தகைய கடுமையான தோஷங்களை முறையான வழிகளில் குறைத்துக்கொள்ள ஜோதிடம் நமக்கு வழிகாட்டுகிறது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி:8300124501 

Friday 4 September 2020

நிகழ்நிலை வகுப்புகள் ஒரு ஜோதிடக்கண்ணோட்டம்

 


இன்றைய மாணவர்களை நிகழ்நிலை வகுப்புகள் (Online Classes) பாடாய்ப்படுத்துகிறது. ராகு-கேதுக்கள் தங்களது உச்ச வீட்டில் நிலைகொள்ளும் இன்றைய காலத்தில், காலத்திற்கேற்ற நவீனத்தை நோக்கி உலகை நகர்த்திச்செல்ல வைப்பவை இந்த சர்ப்பக்கிரகங்கள்தான். இவை இல்லாவிட்டால் உலகம் தனது இருப்பை மாற்றிக்கொள்ளாமல் முன்னேற்றமின்றி பின் தங்கிவிடும். அதிலும் ராகு, கலியின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய முனிவர்கள் தமக்கு முன்னேற்றம் எதுவும் வேண்டாம். உடுத்த ஒரு முழ துணிகூட வேண்டாம் என்று வைராக்கியத்துடன் ராகுவை புறந்தள்ளி மனதை இறையில் நிறுத்தி தவமியற்றினர். ஆனால் இந்தக்காலத்தில் இவை எல்லாம் ராகுவிடம் எடுபடாது.ராகு-கேதுக்கள் ஆதிக்கம் செலுத்தும் கணினி மென்பொருள் சார்ந்த துறையினர் வீட்டிலிருந்தே தங்களது பணியை தற்போது செய்து வருகின்றனர். இன்று மாணவர்கள் நிகழ்நிலை வகுப்புகள் மூலம் தங்கள் கல்வியை தொடரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காரணம், கால புருஷனுக்கு கல்வி பாவமான கடகத்திற்கு விரையத்தில் வித்யா காரகன் புதனின் வீட்டில் அமர்ந்த ராகு இந்நிலையை உருவாக்கினார். இப்போது ராகு-கேதுக்கள் நகர்ந்துவிட்டாலும் கடகத்திற்கு பாதக ஸ்தானமான ரிஷபத்தில்தான் ராகு நிலைகொள்கிறார். இதனால் ராகு குறிக்கும் நிகழ்நிலை வகுப்புகள் போன்ற நவீனங்களை கைக்கொள்ளாவிட்டால் உலக அளவிலேயே கல்வி பாதிப்படையும். இது காலத்தின் கட்டாயம். இதை ஜோதிட ரீதியாக யார் சிறப்புற பயன்படுத்திக்கொள்வர். யார் பாதிக்கப்படுவர் என்பதற்கான வழிகாட்டல்தான் இப்பதிவு.


மேற்கண்ட மக நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்த மாணவன் தற்போது சூரிய திசையில் உயர்கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் தனது கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளார். ராகு சூரியனின் சாரத்தில் உத்திராடம் முதல் பாதத்தில் நிற்கிறது. இவருக்கு தற்போது நிகழ்நிலைக்கல்வி வகுப்புகள் எடுக்கப்படுகிறது. உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் நீசம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். லக்னதிற்கும் ராசிக்கும் கோட்சார குருவின் பார்வை விலகுகிறது. உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் ஜனன கால ராகு நிற்பதால் இவருக்கு நிகழ்நிலை கல்வியை உள்வாங்குவதில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் கோட்சார ராகு,செவ்வாயின் மிருக சீரிச நட்சத்திரத்தை கடந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு வரும் காலம் இது சரியாகிவிடும். அதற்குள் நிகழ்நிலை வகுப்புகளின் ஆதார சுருதியை ஜாதகர் அடையாளம் கண்டிருப்பார். ஜாதகருக்கு இவ்வித வகுப்புகளின் ஆரம்ப காலத்தில் மட்டுமே தடுமாற்றமிருக்கும். காரணம் கோட்சார ராகு உயர் கல்வியை குறிக்கும் 9 க்கு விரையத்தை குறிப்பிடும், 8 மற்றும் 1 க்குரிய செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும் தற்காலம் ஜாதகரின் கிரகிப்புத்திறனில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்திற்கு கோட்சார ராகு வந்ததும் நிலை மாறிவிடும். காரணம், எதையும் தூண்டிவிடக்கூடிய ராகு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் செல்லும்போது ஜாதகரின் கிரகிக்கும், புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவார். ஜனன காலத்தில் சந்திரனின் திரிகோணத்தில் ராகு நிற்பதால், கோட்சாரத்தில் சந்திரனின் சாரத்தில் செல்லும்போதும் சந்திரனோடு ஒருங்கிணைந்து செயல்படுவார்.

கீழே மற்றொரு ஜாதக அமைப்பு.

இந்த மாணவன் தற்போது பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரிக்கு செல்லும் நாளை எதிர்நோக்கியுள்ளான். இந்த மாணவனுக்கு தற்போது ராகு, திசை புதன் புக்தி நடக்கிறது. உயர் கல்வி பாவத்தில் குரு உச்சம் பெற்று வக்கிரமாகி வலு குன்றியுள்ளார். ஆனால் 9 ஆம் அதிபதி சந்திரன் தனது சுய சாரம் திருவோணம்-4 ல் நின்று தனது பாவத்தை பார்க்கிறார். இதனால் 9 ஆம் பாவம் வலுவடைகிறது. திசா நாதன் ராகு 9 ஆமதிபதி சந்திரனின் ரோகிணி-2ல் நிற்கிறார். சுய சாரம் பெற்ற சந்திரனும், சந்திரனின் சாரம் பெற்ற ராகுவும் இப்போது ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். ஆனால் சந்தினுக்கு வீடு கொடுத்த சனி உயர்கல்வி பாவமான கடகத்திற்கு 12 ல், லக்னத்திற்கு 8ல் வக்கிரம் பெற்று மறைந்த நிலையில் மாணவனின் உர்யர் கல்வியில் தடைகளை ஏற்படுத்துவார். புத்தி நாதன் புதன்,உயர்கல்வி பாவமான 9 க்கு விரைய பாவாதிபதியாகி, 9 ஆம் பாவாதிபதி சந்திரனுக்கு விரையத்தில் நிற்பது இதை உறுதி  செய்கிறது. ஜனன காலத்தில் 8 ஆமிடத்தில் நின்ற சனி, கோட்சாரத்தில் ஜனன சந்திரன் மேல் நிற்பதிலிருந்து இதனை புரிந்துகொள்ளலாம். எனினும் கோட்சார குரு, சனியோடு இணைந்து 9 ஆம் பாவத்தை பார்ப்பதால் ஓரளவு சமாளிப்பார் எனலாம். இந்த நிலையில் இந்த மாணவனுக்கு நிகழ்நிலை வகுப்புகள் புரிபடாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். இத்தகையோருக்கு நேரடி வகுப்புகள் மட்டுமே பலனளிக்கும். அதிலும் பயிற்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்கப்படும் வகுப்புகள் (Practical classes) மட்டுமே பெரிய அளவில் உதவும். 

கீழே மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.

இந்த மாணவன் தற்போது புதன் திசை சுக்கிர புக்தியில் உள்ளான். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். ஜாதகத்தில் சந்திரனும் சனியும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இப்போது கோட்சார ராகு ரிஷபத்தில் வந்து நிற்கிறார். சனியின் இடத்தில் பரிவர்த்தனையாகி வரும் சந்திரன், ராகு சனிக்குத்தரும் பாதிப்பை தான் வாங்கிக்கொள்கிறார். லக்னாதிபதி சந்திரன் லக்ன பாதகத்திற்கு பரிவர்த்தனையாகி வந்து அங்கு பாதகாதிபதி சுக்கிரனோடும் கோட்சார ராகுவோடும் இணைகிறார். இதனால் சந்திரன், சுக்கிரன் ஆகிய இருவரும் கோட்சார ராகுவால் பாதிக்கப்படுவர். இந்நிலையில் ஜாதகருக்கு நிகழ்நிலை வகுப்புகள் குழப்பத்தை நிச்சயம் ஏற்படுத்தும். கோட்சாரத்தில் சிந்தனை ஸ்தானமான 5 ஆவது பாவத்தில் விருட்சிகத்திற்கு வரும் கேதுவும் ஜாதகரை குழப்புவார் எனலாம். கவனமாக இல்லாவிட்டால் நிகழ்நிலை வகுப்புகள் புரியாமையால் ஜாதகருக்கு மன உழைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை கூட உருவாகலாம். சுக்கிரனும் கோட்சார ராகுவும் சந்திரனோடு ஏற்படுத்திக்கொள்ளும் உறவால் அவ்வெண்ணம் உருவாக வாய்ப்புண்டு. இத்தகைய ஜாதக அமைப்புக்கொண்ட சில மாணவர்கள்தான் தற்போது நிகழ்நிலை வகுப்புகள் புரியாமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது ஜோதிட ரீதியாக அனுமானிக்கக்கூடிய உண்மை. ராகு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் செல்லும் காலத்திலும் நிகழ்நிலை வகுப்புகள் நீடித்தால், இந்த அபாயம் அதிகமாகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இத்தகைய மாணவர்களுக்குத்தான் மனத்தேற்றல் அவசியம். தேவைப்படின் மனநல சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம். இன்றையசூழலில் அதற்கான அமைப்புகளை அரசு ஏற்படுத்துவது நல்லது. ஆனால் இந்த மாணவருக்கு இவ்வருட இறுதியில் மகரத்திற்கு பெயர்ச்சியாகி வரும் கோட்சார குரு ரிஷபத்தையும் கடகத்தையும் பார்ப்பார். இதனால் அவை புனிதமடைகின்றன. இதனால் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஜாதகருக்கு நிகழ்நிலை வகுப்புகள் புரிதலை ஏற்படுத்தும். அதுவரை மட்டுமே ஜாதகர் தாற்காலிகமாக தடுமாறுவர்.

மீண்டும் விரைவில் மற்றொருபதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501