Showing posts with label சனி. Show all posts
Showing posts with label சனி. Show all posts

Sunday, 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Saturday, 7 August 2021

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்பது ஒருவருக்கு அமையும் அவர் நேசிக்கும் சிறப்பான வேலைதான். வாழ்க்கைக்கு ஆதாரமான வேலை சிறப்பாக அமைந்துவிடின் அது ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய இதர வகை சிரமங்களை பெருமளவு குறைத்துவிடும். ஆனால் அந்த வேலை அவரது அறிவுக்கும், திறமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதிஷ்டவசமாக சிலருக்குத்தான் அத்தகைய கனவு வேலையே கிடைக்கிறது. அதில் சென்று சேர்ந்த பிறகும் சிலருக்குத்தான் அந்த வேலையில் உரிய அங்கீகாரமும், உயர்வும் நிம்மதியான பணிச்சூழலும்  கிடைக்கிறது. இரயில்வே துறை வேலைக்காக தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் எனது வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று என்னை அனுகிய நபருக்கான அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து எனது கருத்துக்களை தெரிவித்தேன். எனது ஜோதிட கோணங்களால் ஈர்க்கப்பட்ட அவர், அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒரு பதிவாக எழுத வேண்டுகோள் விடுத்ததன் விளைவே இப்பதிவு.


ரயில்வே துறை வேலைக்கான ஜாதக அமைப்புகள்.

ராகு ரயிலின் காரக கிரகம் ஆகும். ஜீவன காரக கிரகம் சனியாகும். ரயில் போன்ற பெரிய இயந்திரங்களுடன் ஒருவரது வாழ்க்கை தொடர்பு ஏற்பட வேண்டுமெனில் வாகன காரகன் செவ்வாயும் சனியும் தொடர்பில் இருக்க வேண்டும்.  அரசுப்பணிக்குரிய காரக கிரகம் சூரியன் ஆகும். அரசுப்பணிக்குரிய காரக பாவங்கள் 5, 1௦ ஆகியவை ஆகும். சம்பாத்யத்திற்குரிய காரக பாவங்கள் 2, 6, 1௦ மற்றும் 1௦ ன் பாவத் பாவமான 7 ஆகும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி திசா புக்திகள் சாதகமாக வரும் காலம் ஒருவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1968 ல் பிறந்தவர். ரயிலை குறிப்பிடும் ராகு, லக்னாதிபதி சந்திரனோடும், ஜீவன காரகன் சனியோடும், 6 ஆமதிபதி குருவோடும், 1௦ ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்புகொள்கிறார். 2 ஆமதிபதி சூரியன் ராகு சாரமான சுவாதியில் நின்று 1௦ ஆவது பாவமான மேஷத்தை பார்க்கிறார். வித்யா காரகன் புதன் உச்சம் பெற்று, ஆதிக பாகை பெற்று ஆத்மா காரகனாக சிறப்பாக அமைந்ததால் கல்வி சிறப்பாக அமைந்தது. புதனுக்கு செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் பொறியியல் பயின்றார். பிறகு 1998 ல் 5 ல் நிற்கும் சுக்கிர திசையில் சனி சாரம் உத்திரட்டாதி-4 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி கிடைத்தது. தற்போது முதுநிலை பொறியாளராக பணிபுரிகிறார். ரயிலின் காரக கிரகம் ராகுவிற்கு ஜீவன காரகன் சனி மற்றும் 5,1௦ ஆமதிபதி செவ்வாய் தொடர்பு இருப்பதை கவனியுங்கள். இவை ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி அமைய காரணங்களாகும். ஒரு துறையில் ஒருவர் மதிப்பான உயர்ந்த நிலைக்கு  உயர வேண்டுமெனில் 9 ஆமிடம் சிறப்புற வேண்டும். இந்த ஜாதகத்தில் ராகு 9 ல் அமர்ந்து 9 ஆமதிபதி குரு பார்வை பெற்றது சிறப்பு. மேலும் ஜீவன காரகன் சனி உச்சம் பெற்ற புதனின் சாரத்தில் ரேவதி-4 ல் அமைந்திருப்பது ஜாதகரை தனது துறை சார்ந்த வகையில் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதை அறியலாம்.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகி 1952 ல் பிறந்து இரயில்வே துறையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருட்சிக லக்னத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தில் கேது நிற்கிறார். இதனால் இவர் அரசு மருத்துவரானார். கேது உயர்நிலை மருத்துவரை குறிக்கும் கிரகமாகும். சிம்மம் அரசுத்துறை என்பதை குறிக்கிறது. 12 ஆமிட செவ்வாய் ராகுவின் சுவாதி-2 ல் நின்று வேலை பாவமான 6 ஆம் பாவத்தையும், 1௦ ன் பாவத் பாவமான 7 ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் இவர் செவ்வாய் குறிப்பிடும் மருத்துவராகவும், லக்னாதிபதி செவ்வாய் ராகு சாரம் பெற்றதால் ரயில்வே துறை மருத்துவராகவும் செயல்பட வேண்டும் என்பது இவரது கர்மாவாகும்.

சனி வீட்டில் நிற்கும் 1௦ ஆமதிபதி சூரியன் மருத்துவ கிரகம் புதனுடன் இணைந்து சனி நிற்கும் சந்திரனின் சாரத்தையே பெறுகிறார். (சூரியன்-திருவோணம்-3, சனி-ஹஸ்தம்-4. மேலும் 6 ஆமதிபதி செவ்வாய், 1௦ ஆமதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகி அரசுத்துறையில் ரயில்வே மருத்துவராக பணியாற்றியுள்ளார்.  


தொழிலை சுட்டிக்காட்டும் தசாம்சத்தில் லக்னம் கால புருஷனின் 6 ஆமிடமாகி, லக்னாதிபதி புதன் கேதுவுடன் இணைவதும், 1௦ ன் பாவத்பாவம் 7 ல் இருந்து சூரியனோடு சேர்ந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாய் பார்ப்பதிலிருந்து ஜாதகி ஒரு அரசு மருத்துவர் என்பதையும் குரு உச்ச ராகுவோடு இணைந்ததிலிருந்து ஜாதகி ரயில்வே துறை சார்ந்தவர் என்பதையும் உணரலாம்.  

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1994 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ரயில்வே துறையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். விருட்சிக லக்னதிலேயே ராகு அமர்ந்து தனது ஆதிக்கத்தை ஜாதகரின்மேல் செலுத்துகிறார். இதனால் ரயில்வே துறை தொடர்பு. 4 ஆம் பாவத்தில் சனி,செவ்வாய், புதன் ஆகியவை ஒருங்கிணைந்து 1௦ ஆமிடமான சிம்மத்தை பார்ப்பதால் இவரது ஜீவனம் சுகாதாரத்துறை ஆகும். 1௦ ஆம் அதிபதி சூரியன் 5 ஆம் பாவத்தில் மீனத்தில் அமர்ந்ததால் இவருக்கு அரசு தொடர்பான பாக்கியம் ரயில்வே மூலமாக கிடைத்துள்ளது.


தசாம்ச லக்னத்திலும் ராகு-கேதுக்கள் தொடர்பாகியுள்ளதை கவனியுங்கள். தசாம்சத்தில் உணவு காரகன் சந்திரன் உச்சம். இதனால் இவர் ரயிலில் வழங்கப்படும் உணவு தொடர்பான விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவார் எனலாம்.    

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Friday, 30 July 2021

இரவுப்பறவைகள்!

 


அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும்  அறிமுகமற்ற நபர்கள், மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர் இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில் செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை.  இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள் உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே இன்றைய பதிவு.

கீழே 1963 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.

 
மகர லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம். இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு. சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில் பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம் பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம் என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின் காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற  சந்திரனின் காரக  வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன் இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.

மேற்கண்ட ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக் குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும், 12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.


தசாம்சத்தில் புதன் தசாம்ச லக்னத்திற்கு 7 ல் நிற்பது ஜாதகரது ஜீவனத்துறை புதன் சார்ந்த பத்திரிக்கை துறை என்பதை உறுதி செய்கிறது. 1௦ ன் பாவத்பாவமான 7 ஆமதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து 12 ல் மறைவதும் லக்னாதிபதி சனியும் 1௦ ஆமதிபதி செவ்வாயும் புதன் வீட்டில் மிதுனத்தில் இணைவது ஜாதகர் ஈடுபடும் துறையையும் அதில் அவரது உழைப்பின் கடினத்தன்மையையும் குறிப்பிடுகிறது. 

12 ஆம் பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம் பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால் செவ்வாய் திசையில் தனது 25, 26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின் தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு  புதனின் வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது. தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

லக்னத்தில் அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில் நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ  தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும்.  இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25 ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1 ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர புக்தியில் தனது  55 ஆவது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

உண்மையில் ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர் லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.

இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின் வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில் ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது. அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால் அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501  

Sunday, 2 May 2021

வட்டித்தொழிலில் வளர்ச்சி உண்டா?

ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின் அதிபதி ஆவது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் குரு தனது மூலத்திரிகோண வீடான தனுசுவிற்கு மறைவதே ஒரு வகையில் பொருளாதார சிரமங்களை குறிக்கும். அப்படி குரு தனுவிற்கு 6, 8, 12 ல் மறைந்தால், லக்னத்திற்கு மறையாமல் இருப்பது நன்மை. இரண்டு விதங்களிலும் குரு சாதகமாக அமையாவிடில் அந்த ஜாதகர் பொருளாதார வகையில் பாதிக்கப்படுவார். குறிப்பாக லக்னத்தை குரு பார்ப்பது பொருளாதார வகையில் மட்டுமல்ல ஏனைய அனைத்து  வகையிலும் ஒரு மேம்பட்ட நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவமும் அதன் எதிர்பாவத்தை சார்ந்தே இயங்குகிறது. உதாரணமாக கணவன்-மனைவி, வியாபாரி-வாடிக்கையாளர், முதலாளி-பணியாள். குருதான் கால புருஷனுக்கு விரைய பாவம் மீனத்தின் அதிபதியும் ஆகிறார். செலவிற்கு பணம் இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் மீனத்தின் எதிர்பாவம் கன்னி கால புருஷ தத்துவப்படி கடன் பாவம் எனப்படுகிறது. ஒருவர் உழைக்காமல் பொருளீட்டுவதை உபய ராசிகள் நான்கும் குறிப்பிடும். உபய ராசிகளுக்கு அதிபதிகள் குருவும் புதனும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் நாம் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபட ஜாதக ரீதியான அமைப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் கடனை குறிக்கும் பாவம் 6 என்றால், கடனை வசூலிப்பது 5 ஆம் பாவமாகும். எனவே கடன்னை வசூலிப்பதை 5 ஆம் பாவமும் அதையே தொழிலாக செய்ய 5 மற்றும் 1௦ ஆம் பாவங்களும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகரான ஆண் வங்கிகளுக்கு கடன் வசூல் செய்து தரும் நிறுவனத்தை (Loan collection agency) நடத்தி வருபவர்.  சந்திரனும் 5 ஆம் பாவமும் ஒருவரது எண்ணங்களையும் ஆசைகளையும் குறிப்பிடும். அது 1௦ ஆம் பாவ தொடர்பு பெறுவது எண்ணத்தையே தொழிலாக்குவதை குறிப்பிடுகிறது. ஜோதிடத்தில் கேது கடனை நேரடியாக குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். கேது லக்னத்திற்கு 2 ல் அமைந்துள்ளது கடனை முன்னிட்டு வருமானம் பெறுவதை குறிக்கிறது. தடைகளுக்குரிய கேது தன பாவமான 2 ல் அமைவது இல்லறம், உறவுகள் வகைக்கு சிறப்பல்ல. ஆனால் கடன் என்ற தனது காரகம் செயல்படுவதால் பொருளாதார வகையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். பொதுவாகவே ராகு-கேதுக்கள் உயிர் காரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமளவு பொருட்காரகத்திற்கு பாதிப்பை தரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்துப்பொருளீட்ட ஜீவன காரகன் சனி ,இரட்டைப்படை பாவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும். இந்த ஜாதகத்தில் கடன் வசூல் செய்வதை குறிக்கும் ஒற்றைப்படை பாவம் 5 ல் சனி அமைந்திருப்பது ஜாதகர் செய்யும் தொழிலுக்கு உகந்த ஒரு அம்சமாகும். லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 3 ல், தனுசுவிற்கு 6 அமைந்தாலும் அவர் வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய) நிலையில் உள்ளதால் தனுசு ராசியின் மீது குருவின் அறைப்பங்கு பார்வை விழுகிறது.

ஜாதகத்தில் 8 ஆமிடம் என்பது 7 க்கு 2 ஆக அமைவதால் அது அடுத்தவர் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்து 2 ஆம் இடத்தை பார்வை செய்வதால் அடுத்தவர்கள் தனம் ஜாதகரிடம் அதிகம் புழங்கும் எனலாம். ஜாதகருக்கு 8 ல் வட்டி காரகன் ராகுவின் சுவாதி-1 ல் மறைந்த 2 ஆமதிபதி செவ்வாய் திசை துவங்கியவுடன் கடன் வசூல் செய்யும் நிறுவத்தை துவங்கி இன்று பல வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து கடனை வசூல் செய்து தருகிறார். அதற்கான தனது  தரகுத்தொகையை பெற்றுக்கொள்கிறார். பல வங்கிகள் இவரது சேவையை நாடிப்பெறுகின்றன. இவரது கடன் வசூல் நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தன ஸ்தானமான 2 ஆமிடத்தை சூரியன், புதன், சனி ஆகியவை இணைந்து பார்வையிடுவது வங்கிகளுக்கு கடன் கடன் வசூல் செய்து தருவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் 2 ஆம் பாவத்தோடு தொடர்பாவது கடனுக்கான வட்டியை குறிக்கிறது. பொதுவாக தனுசி ராசி அதுவும் மூல நட்சத்திரத்தில் சந்திரன் அமைவது இரக்கமற்ற முறையில் வட்டி வாங்குவதை குறிப்பிடும். ஜாதகர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  


இவரும் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளார். தொடர்பு ஸ்தானமான 7 ஆமிட குரு, கடனை வசூல் செய்யும் 5 ஆம் அதிபதி புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் இவர் இந்த வேலையில் உள்ளார். 5 ஆமதி புதனும் 1௦ ஆமதிபதி சனியும் இணைந்து 1௦ ஆம் பாவத்தில் நிற்பதால் இவர் இத்துறையில் உள்ளார். 5 ஆமதிபதி புதனும் 6 ஆமதிபதி சுக்கிரனும் 1௦ ஆம் பாவத்தில் இணைந்து நிற்பது, கடன் கொடுத்து வசூல் செய்வதையே தொழிலாக செய்யும் நிதி நிறுவனத்தில் பணி புரிவதை குறிக்கிறது. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும் என்றேன். சனி இந்த ஜாதகத்தில் 1௦  ல் நிற்பதால் இவர் மற்றொருவரிடம் வேலை செய்கிறார். தனது மூலத்திரிக்கோண வீட்டில் நிற்கும் சனியின் திசை துவங்கினால் ஜாதகர் சுய தொழிலில் இறங்குவார்.   சூரியன் 11 ல் நின்று 5 ஆம் பாவத்தை பார்ப்பது இவரது முதலாளி இவர் மீது மிகுந்த மதிப்பைக்கொண்டிருப்பதை காட்டுகிறது. குரு புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகத்தில் புதனுக்கும் குருவிற்கும் நட்சத்திரப்பரிவர்த்தனை ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி உபய ராசி அதிபதிகளான குரு-புதன் தொடர்பு கடன் மற்றும் கடன் வசூல் செய்யும் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. 8 ஆமதிபதி குரு லக்னத்தை பார்ப்பது ஜாதகரிடம் அடுத்தவர் பணம் வருவதை குறிக்கிறது. 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Tuesday, 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Friday, 26 March 2021

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

 

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது புதியவர்களுக்கு புதிய கோணங்களில் வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நீண்ட காலம் ஒரு துறையில், ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து ஒரு சூழலில் பணிமாறுதலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  காரணம் பணி மாறுதல் என்பது தனி மனிதனுக்கு சாதாரண மாறுதல் மட்டுமல்ல அது ஒருவரது வாழ்க்கையின் சூழலையே மாற்றியமைக்கக்கூடியது. அத்தகைய மாறுதலின் பொருட்டு ஒருவர் தனது உழைப்பை, சம்பாத்தியத்தை, குடும்பத்தை பணயம் வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு பாதுகாப்பான எந்த சூழலும் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிரந்தரமான ஊதியத்தை தரும் என்று சொல்லப்படும் அரசு உத்யோகத்தில் கூட லஞ்ச, லாவண்யங்களாலும், பாலியல் சீண்டல்களாளும், திறமையின்மையினாலும் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது தனது வேலையை அல்லது வேலை சூழலை ஒருவர் மாற்றவேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நிலையில் வேலையில்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மன நிலையில் இருப்போர்க்கு ஜோதிடம் எவ்வாறு உதவ முடியும் என்பதை அலசுவதே இப்பதிவின்  நோக்கம்.

ஜோதிடத்தில் மாற்றத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாவார். சந்திரன் சனியோடு தொடர்புகொள்ளும் சூழலில் ஒருவர் பணி மாற்றத்தை சந்திக்கிறார். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த திசை, புக்தி நடந்தாலும் ஏழரை சனியில் குறிப்பாக ஜென்மச்சனியில் ஒருவர் தனது ஜீவன சூழலை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஜீவன காரகன் சனி  தனது ஆதிக்க காலத்தில் மாற்றத்தின் காரகன் சந்திரன் மேல் கோட்சாரத்தில்  செல்லும் காலம் தரும் பணி மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.




1973 ல் பிறந்த இவர் தன் பணியில் தனக்குள்ள தனித்திறமையால் தன் திறமைக்கேற்ற நல்ல சூழலில் வேறு ஒரு நாட்டில் பணிபுரிய விரும்புகிறார். இதற்கேற்ற சூழல் ஜாதகத்தில் உள்ளதா என ஆராய்வோம். ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் நீசமாகி சனியோடு இணைந்து நீச பங்கமும் ஆகியுள்ளார். இது பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியை தரும் அமைப்பே ஆகும். எனவே ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர இன்னும் சில காலமாகும். ஜாதகருக்கு சுக்கிர திசையில் குரு புக்தி 2022 இறுதி வரை நடக்கிறது.  சுக்கிரன், குரு இருவரும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திசா நாதனை மீறி புக்தி நாதன் செயல்பட இயலாது. சுக்கிரனும் குருவும் சந்திரனின் சாரத்திலேயே (சுக்கிரன் ரோஹிணி-1, குரு திருவோணம்-3)  உள்ளதால் இவர் பணி மாறுதலை விரும்புகிறார். மேலும் முதலாளி அல்லது முதன்மை நிர்வாகியை குறிக்கும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் குறைந்த பாகை  பெற்று (சூரியன் 3 பாகை 1௦ விகலை) நிற்கும் ஜாதகத்தினருக்கு தனது நிர்வாகியிடம் எவ்வளவு சிறப்பாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாவச்சக்கரத்தில் சுக்கிரன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் மேஷத்தில் நிற்பதால் இவருக்கு தான் பணிபுரியுமிடத்தில் அதிருப்தி உள்ளது. ஆனால் திசை மற்றும் புக்தி நாதர்கள் தற்போது சிறந்த பொருளாதார உயர்வை வழங்கும் நிலையில் இல்லை. எனவே ஜாதகர் அவசரப்பட்டு வேலையை விடுவது நன்மை அளிக்கும் முடிவல்ல.

ஒரு நேர்முகத்தேர்வின் முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளேன். அந்த வேலை கிடைக்குமா என கேட்ட நபருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் ஆரூடமும் கவிப்பும் உள்ளது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமாகியுள்ளது. இது ஜாதகர் வேலையில் ஒரு உயர்வான நிலையை நோக்கி செல்லும் எண்ணத்தில் உள்ளதை காட்டுகிறது. வேலை கேட்பவர் உதயாதிபதி என்றால் வேலை கொடுப்பவர் 7 ஆமதிபதி ஆவார். உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் தடையை குறிக்கும் ராகுவிற்கு நெருக்கமாக சென்றுகொண்டுள்ளார். அதே சமயம் ஜாம செவ்வாய் (வெளி வட்ட செவ்வாய்)   வேலை பாவமான 6 க்கு விரையத்தில் மீனத்தில் நிற்பது ஆகியவை சிறந்த அமைப்பல்ல. வேலை தர தயாராக இருப்பதாக சொல்லும் 7 ஆமதிபதி சுக்கிரன் வெளி வட்டத்தில் விரையத்தில் உள்ளது. உள்வட்டத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 1௦ ஆமதிபதி சூரியனுடன் நெருக்கமாக அஸ்தங்கமாகி நிற்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதி சுக்கிரன் ஆகிய இருவருக்கும் இடமளித்த மீனத்தில் அதிபதி குரு உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நீசம் பெற்று நிற்பது, வேலை தருபவர் இவர் எதிர்பார்க்கும் சிறந்த சம்பளத்தை தர மாட்டார் என்றே குறிப்பிடுகின்றன. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமானாலும் உள்வட்ட சூரியனின் பலமே ஜாம சூரியனுக்கு செயல்பாட்டு வலுவைத்தரும். உள்வட்ட சூரியன் வேலை பாவத்திற்கு விரைய  பாவத்தில் நிற்கிறது. இந்த நிலை ஜாதகருக்கு ஊதிய உயர்வை தர தங்கள் நிறுவனத்திற்கு மாறுதலாகி வந்தால் சாத்தியம் என சொல்லும் நபர் ஜாதகரை வேலையை இழக்க வைத்து பிறகு தங்கள் எண்ணப்படி சொல்லும் ஊதியத்திற்கு இணங்க வைக்கும் முயற்சி உடையவராக  இருக்ககூடும் என்பதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடத்தில் உள்ள கவிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே வேலை அளிப்பதாக சொல்லும் நிறுவனத்தை நம்பி பார்க்கும் வேலையை விட்டுவிட்டால் பிறகு பாதிப்படைவது உறுதி என்பது புலனாகிறது. உச்சமான ஜாம சூரியன் உதயத்தை தொடும் காலத்தில் ஜாதகருக்கு உத்யோக உயர்வு காத்துள்ளது. அதுவரை ஜாதகர் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்க சொல்லப்பட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501