Sunday 25 April 2021

எவனோ ஒருவன் வாசிக்கிறான்!

 


வாழ்வில் சில முறை நாம் சன்னியாசிகளை பார்த்து அவர்களால் சில எண்ணங்களை மனதில் பதிய வைத்திருப்போம். அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதன் மூலம் உலகத்தை காண்கிறார்கள். வட்டத்துக்குள் இருந்து உலகத்தை காண்பவர்களும் என்னதான் தனது முன்னோடிகளின் அனுபவ அறிவை புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் அவர்களுக்கும் நிதர்சனமான உலகியல் அறிவு தேவைப்படுகிறது. அதனால்தான் சன்னியாசிகள் தேசாந்திரம் செல்கிறார்கள். சாதாரண மனிதன் அலைந்து திரிந்து அனுபவங்கள் பல பெற்று அதன் பிறகே வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை உணர்கிறான். இந்தக்கருத்தைக்கொண்டு பார்த்தால் சன்னியாசிகளின் அறிவைவிட சாமான்யனின் அறிவே சிறந்தது என்பது தெளிவு. ஆனால் சாமான்யன் தனது இல்லற பொறுப்புகளால் தள்ளாடுகிறான் அதனால் தனது அனுபவத்தால் பெற்ற அறிவைக்கூட சில சமயம்  குடும்ப பொறுப்புகளால் செயல்படுத்த முடியாதபடி திணறுகிறான். இந்த விஷயத்தில் சன்னியாசிகளுக்கு சாமான்ய மனிதனைவிட சிறப்புண்டு எனலாம். ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்வை குறுக்கிக்கொண்டு வாழும் இந்த சன்னியாசிகளுக்கான ஜாதக அமைப்புகளை ஆராயவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஒரு எண்ணமிருந்தது. சன்னியாசம் எனும் புயலின் மையத்தில் தற்போது நிலைகொண்டுள்ள ஒரு ஜாதகம் மூலம் இது தொடர்பான  விஷயங்களை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். அதுவும் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர் பிறந்த நாளில் இப்பதிவு வருகிறது என்ன பொருத்தம் பாருங்கள்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


21 வயதான இந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் துறவியாக மாறி பாலைவன மாநிலமொன்றில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்.  தமிழ்நாட்டின் முதன்மை தென்மாவட்ட தலைநகரில் வசித்துவரும் ஒரு வட  மாநில குடும்பத்தை சார்ந்தவர் இப்பெண். மேஷ லக்னாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்று  அதன் அதிபதி குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது மோட்சம், நீண்ட சிறைவாசம், அடைபடுதல், நோயால் படுத்த படுக்கையாக பல நாள் இருத்தல் மற்றும் இல்லற இன்பத்தை அனுபவிப்பதையும் (படுக்கை சுகம்)  குறிப்பிடும் இடமாகும். 12 ஆமிடம் மோட்ச ராசியாகி 12 ஆமதிபதி லக்னாதிபதியோடு பரிவர்த்தனை பெற்றதால் இந்தப்பெண் சன்னியாச வாழ்வை விரும்புகிறார். 12 ஆமதிபதி குரு பாதகாதிபதி சனி தொடர்பு பெற்று லக்னத்தில் அமைந்ததும், 12 ல் ஒரு பாவி செவ்வாய் அமைந்து 12 ஆமிட செவ்வாயை கேது தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் இங்கே படுக்கை சுகம் என்ற இல்லற சுகம் அடிபட்டுவிடுறது. மோட்ச பாவமான 12 ஆமிடத்தில் அமைந்த லக்னாதிபதியை கேது பார்ப்பது மோட்சத்தை முன்னிட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது வாழ்வை குறுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அடைபடுதலையும் குறிப்பிடுகிறது.

ஜாதகியை மோட்சத்தை நோக்கிய பாதையில் உந்தித்தள்ளிய காரணிகளை இப்போது ஆராய்வோம்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 அமைப்பில் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். இது பெற்றோர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பள்ளி செல்லும் காலத்தில் பெற்றோர்களின் தினசரி வாக்குவாதங்களை பார்க்கும் ஜாதகிக்கு குடும்ப வாழ்வின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது சாத்தியம். இதனால் இல்லறத்தை நினைத்து ஆசைகொள்ள வேண்டிய பருவ வயதில் ஜாதகிக்கு இல்லற வாழ்வின் மீது வெறுப்பு வந்தது நியாயமே. ஜாதகிக்கு கடந்த 2007 முதல் சுக்கிர திசை நடக்கிறது. ஜாதகி தனது நகரில் 8 ஆம் வகுப்பு வரை ஒரு உயர்தர ஆங்கிலப்பள்ளியில் படித்தார். அதன் பிறகு கும்பத்தில், லக்னத்திற்கு பாதகத்தில் நிற்கும் புதனின் சாரத்தில் கடகத்தில் ஆயில்யம்-4 ராகுவோடு இணைந்து நிற்கும் சந்திர புக்தியில் ஜாதகி தனது கல்வியை நிறுத்திவிட்டார். பாட்டியை குறிக்கும் கேது திசா நாதன் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். பெற்றோர்களின் சண்டையால் மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட ஜாதகிக்கு அவரது பாட்டி மன நிம்மதிக்காக மத நூல்களை படிக்கக்கொடுக்கிறார். பள்ளிக்கு செல்லாமல் மத நூல்களை படிக்கும் ஜாதகியை வீட்டில் யாரும் தொல்லை செய்யாதவாறு திசா நாதனை கட்டுப்படுத்தும் கேது கவனித்துக்கொள்கிறார். பாதக ஸ்தானத்தில் நிற்கும் 5 ஆமதிபதி சூரியனின் உத்திராடம்-4 ல் மகரத்தில் நின்று சுக்கிரன் திசை நடத்துகிறார். சுக்கிரனுடன் சன்னியாச கிரகம் கேது இணைந்துள்ளார். திசா நாதன் சுக்கிரனானாலும் அவர் தனது பகை கிரகமான சூரியனின் சாரம் பெற்று பாதக ஸ்தான தொடர்பும் பெற்றதால் ஒரு பருவ பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை கேது திசை மாற்றி அவருக்கு ஆன்மீக ஆசைகளை பாட்டி மூலம் தூண்டி விடுகிறார். இதனால் ஜாதகி தானொரு சன்னியாசி ஆக முடிவு செய்கிறார்.

தனது விருப்பத்தை ஜாதகி வீட்டில் தெரிவிக்கிறார். 5 ஆமிடம் ஒருவரின் ஆசையை குறிக்கும். அதனோடு தொடர்புடைய கிரக திசா-புக்திகள் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும். 5 ஆமதிபதி சாரம் பெற்ற சுக்கிர திசையில் இல்லற ஆசையை கேது தடை செய்தாலும் தனது காரகமான ஆன்மீக ஆசை நிறைவேற உதவுகிறார். கேதுவும் ஆசையை குறிக்கும் கிரகமாகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்பமாக வசிக்கும் ஜாதகியின் வீட்டில் ஏற்கனவே ஜாதகியின் பெரியப்பா ஒருவர் தனது இல்லறக்கடமைகளை நிறைவேற்றிய பிறகு சன்னியாசியாகி இருந்தார். இதனால் ஜாதகியின் சன்னியாசி ஆசைக்கு குடும்பத்தில் தாயாரைத்தவிர இதர அன்பர்கள் அனுமதி தந்தனர்.

ராகு-கேதுக்களின் அச்சும் – கிரகண தோஷமும்.

தாயார் மறுக்கக்காரணம் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு வெளியே சந்திரன் நிற்பதுதான். ராகுவை விட்டு சந்திரன் பாகை அடிப்படையில் விலகி இருந்தாலும் சந்திரன் ராகுவுடன் மோட்ச ராசியான கடகத்திலேயே நிற்பது அதன்  வலுவற்ற தன்மையை குறிக்கிறது. ஜாதகி பௌர்ணமியில் பிறந்துள்ளார். ராகுவுடன் சந்திரன் பௌர்ணமியில் இணைந்திருப்பது கிரகண தோஷமாகும். மனதை குறிக்கும் சந்திரனின் ராசியில் ராகு-கேதுக்களின் தொடர்பில் சந்திரன் நிற்பதால், ஜாதகியின் மனதை ஆளும் தகுதியை ராகு-கேதுக்கள் பெற்றுவிடுகின்றன. ஆனால் ஆட்சி பெற்று நிற்கும் சந்திரன் ஜாதகியின் வாழ்க்கையை காப்பாற்ற தன் மீது விழுந்துவிட்ட ராகு-கேதுக்களின் நிழலை மீறி போராடுகிறார். சந்திரன் ஜாதகத்தின் அதிக பாகை பெற்று (29 பாகை) நிற்கிறார். இதனால் அவர் ஆத்ம காரகனாகி வலுவுள்ளவராகவே உள்ளார். ஆனால் சந்திரனின் வலுவை கிரகண தோஷம் தவிடு பொடியாக்குகிறது. இதனால் சந்திரனின் காரக உறவான ஜாதகியின் தாயாரின் வார்த்தையை வீட்டில் அனைவரும் நிராகரிக்கின்றனர். அனைத்து கிரகங்களும் ராகு-கேதுக்களின் அச்சுக்குள் நிற்கும்போது சந்திரன் மட்டும் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி நிற்கிறார். இதன் பொருளாவது ஜாதகியின் உலகத்திற்குள் தாய் செல்ல முடியாது என்பதாகும்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 ஆக அமைந்த சூழலில் சந்திரன் அதிக பாகை பெற்று ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவும் சூரியன் குறைந்த பாகை (6 பாகை) பெற்று தாரா காரகனாகவும் உள்ளனர். இதனால் தந்தை தாய்க்கிடையே கடும் மனப்பிரிவினை. சூரியன் பாதக ஸ்தானத்தில் 12 ல் நிற்கும் லக்னாதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு உள்ளே  உள்ளார். இதனால் தந்தையை மீறி தாயின் சொல்லை ஜாதகி ஏற்றுக்கொண்டுவிட இயலாது. சுக்கிர திசையில் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கும் குருவின் புக்தியில் ஜாதகிக்கு உள்ளூரில் சன்னியாச சடங்குகள் கடந்த 2019 இறுதியில் கேது, சனி, குரு ஆகியவை கோட்சாரத்தில் தனுசு ராசியில் ஒன்றாக இணைந்திருந்தபோது  நடந்தன. புக்தி நாதன் குரு குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் கேது சாரம் பெற்று நிற்பதை கவனியுங்கள். இது சன்னியாச வாழ்வுக்காக குடும்பத்தை ஜாதகி பிரிவதை குறிப்பிடுகிறது.

தற்போது ஜாதகி தங்களது மதத்தின் தலைமை இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாதகியின் தாய் தனது மகளை சன்னியாச வாழ்விலிருந்து மீட்கப்போராடுகிறார். ஜாதகி தற்போது சற்றே தனது மாயையிலிருந்து விடுபட்டு தனது தாயின் கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார். சன்னியாச வாழ்வை முழுமையாக்கும் முடி பிடுங்குதல் எனும் முக்கிய சடங்கு தற்போதைய கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜாதகியின் மத சம்பிரதாயப்படி முடியை மழிக்கமாட்டார்கள். முழுமையாக பிடுங்கிவிடுவார்கள். தலை முடியை பிடுங்கிவிட்டால் மீண்டும் சன்னியாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இல்லற எண்ணம் வராதபடி அது தவிர்த்துவிடும் என்பதே அதன் அடிப்படை. தற்போது ஜாதகி தன்னை யாராவது காப்பாற்றி மீட்டுச்செல்வார்களா என தனித்து விடப்பட்ட நிலையில் காலம் கடந்து தனது செயல்களை எண்ணி வருந்துகிறார். ஜாதகியின் தாய் தன் மகளை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா? என தமிழ்நாட்டிலிருந்துகொண்டு கதறுகிறார். தாய் தனது குடும்பத்தை மீறி, தனது சமுதாய விதிகளை மீறி தனது மகளை காப்பாற்ற செயல்பட்டால் தனது மதம் மற்றும் குடும்பத்திலிருந்து  தன்னை  ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அறிந்து மனதுக்குள் கதறிக்கொண்டுள்ளார். ஜாதகத்தில் லக்னாதிபதி 12 ஆமிடத்தில் அதன் அதிபதியோடு பரிவர்தனையானது ஜாதகி குடும்ப வாழ்வுக்கு திரும்ப முடியாது என்பதையே குறிப்பிடுகின்றன.

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Tuesday 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday 11 April 2021

திருமண உறவில் சூரியன்!

 


சூரியன் தனது சுய கர்மங்களில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்தும் கிரகம் ஆகும். இதன் பொருளாவது எதன் பொருட்டும் ஒருவர் தான் விரும்பி ஈடுபட்டுள்ள செயலை நிறுத்தமாட்டார் என்பதாகும். சூரியன் சீரான மற்றும் நிரந்தரமான இயக்கத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஒருவரை புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் தனது செயலை செய்யவைக்கும் கிரகம்  சூரியனாகும். இதனால் சூரியனின் ஆதிக்கம் உடையோர் பிறரிடம் எளிதில் ஒன்றிவிட  மாட்டார்கள். அப்படியெனில் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களின் திருமண வாழ்வு என்னவாவது? என்றொரு கேள்வி எழும். திருமண உறவிலும் சூரியன் கௌரவம் பார்க்கும். ஒருவரது கௌரவம் பங்கப்பட்டால் அங்கே அவரது திருமண உறவு முறிகிறது என்பது பொருளாகும். தனது கௌரவத்திற்காக எதையும் இழக்கத்துணியும்  கிரகம் சூரியனாகும். இதனால் சூரியன் பொதுவாக திருமண உறவிற்கு எதிரான கிரகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சூரியன் கால புருஷனுக்கு களத்திர பாவமான துலாத்தின் பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் ஆதிக்கம் கொண்டவர்கள் கௌரவத்திற்காக தங்களது குடும்ப வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைத்துனைவர்களிடம் கிடைக்காத அன்பையும் நிம்மதியையும் குழந்தைகளிடம் பெறுகிறார்கள். காரணம் புத்திர காரகன் குரு, சிம்மத்தின் 8 ஆமிடமான மீனத்தின் அதிபதியாவதால் குடும்ப வாழ்வில் சிரமத்தை கொடுத்து சிம்மத்தின் 5 ஆமிடமான தனுசுவின் அதிபதியாவதால் குழந்தைகளால் நிம்மதியை தருகிறார். சூரியன் குடும்ப வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என்பதை ஆராய்வதே இன்றைய பதிவாகும்.


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் செவ்வாயுடன் 4 ஆம் பாவத்தில் இணைந்துள்ளனர். சுக ஸ்தானத்தில் இரு பாவிகள் இணைவது சுகத்திற்கு சிறப்பல்ல ஆயினும் கேந்திர பாவிகள் பொருளாதார வகையில் சிறப்பை தருகின்றனர். இங்கு செவ்வாய், சூரியனுக்கு பின்னால் 5 பாகை விலகி உள்ளது. இதனால் இது செவ்வாய்க்கு  கடுமையான அஸ்தங்கமல்ல. ஆயினும் செவ்வாயும்  சூரியனும் ஒன்று சேர்வதே இல்லறத்திற்கு சிறப்பல்ல. இக்கிரகச்சேர்க்கை பெற்றோர், தனது கௌரவம் பாதிக்கப்பட்டால் நல்ல சம்பாத்தியம் உள்ள வேலையைக்கூட எளிதில் உதறிவிடுவதை காண முடிகிறது. லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற சூரியன் ஜாதகரை எப்போதும் தனது வாழ்வின் உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே முன்னோக்கி நகர்த்தும். எந்த தோல்வியிலும் ஜாதகருக்கு பின்வாங்காத நிலையைத்தரும். சூரியன் செவ்வாய்  சேர்க்கை ஜாதகருக்கு தகுதிக்குறைவை அது எந்த வடிவமானாலும்  அல்லது உறவானாலும் உதறிவிடும் மனநிலையைத்தரும். ஆனால் சூரியன் செவ்வாய் சேர்க்கை நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்ததும் ஒரு நீர்க்கிரகம் சந்திரன் லக்னத்தில் அமைந்ததும் சூரியன் செவ்வாய் இணைவு தோஷத்தை பெருமளவு குறைத்துவிடுகிறது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் 6 ல் மகரத்தில் அமைந்து, அதற்கு பாதகமான விருட்சிகத்தில் செவ்வாயும் சூரியனும் அமைவது மனைவிக்கு பாதகத்தை செய்யும் அமைப்பாகவே தோன்றுகிறது. மனைவி தனது தகுதிக்கு குறைவானவராக இருந்தால் மனைவியோடு நல்லுறவு இருக்காது. தனது தகுதிக்கு நிகரானாவராக இருப்பின் மனைவியை  ஜாதகர் விட்டுத்தர மாட்டார்.

ஜாதகரின் இல்லறம் சிறக்க இங்கு மற்றொரு காரணி உதவுகிறது. 7 ஆமதிபதி சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தனது மனைவியை விட்டுத்தர மாட்டார். ஆனால் இந்த விதியையும் ஜாதகரின் தகுதிக்கு மனைவி குறைந்த தகுதி பெற்றராயின் செயல்பட வாய்ப்பு இல்லை எனலாம். இவர் மனைவி இவருக்கு இணையான தகுதி வாய்ந்தவராக உள்ளார். இதனால் கடும் போராட்டமான காலங்களிலும் தனது தகுதியை உயர்த்திக்கொண்டு மனைவியோடு இன்று சிறப்பான இல்லறம் நடத்துகிறார். ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் அரசுப்பணியில் உள்ளார். 7 ஆமதிபதி சனி 12 ல் மறைந்து வக்கிரம் பெற்று, வேலை பாவமான 6 ல் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறார். இதனால் இவரது மனைவியும் பணி புரிபவராக இருக்கிறார். சுக்கிரனுக்கு பாதகத்தில் நிற்கும் சூரியனும் செவ்வாயும் களத்திர பாவமான 7 ஆமிடத்திற்கு திக்பலத்தை தருவதை கவனியுங்கள் இதனால் இவரது மனைவியும் அரசுத்துறையில் பணிபுரிகிறார். எனவே ஜாதகருக்கும் மனைவிக்குமான சம தகுதி இங்கு இவர்களின் குடும்ப வாழ்வை சிறப்படைய வைக்கிறது. இதில் திசா புக்திகளின் பங்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்து ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னதிலேயே செவ்வாய். இதனால் ஜாதகிக்கு நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் அதிகம். ஜாதகிக்கு சுக்கிர திசை முடிந்து தற்போது சூரிய திசையில் ஒரு வருடம் முடிந்துள்ளது. சுக்கிரன் வித்யா காரகன் புதனுடனும் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று திசை நடத்திய காலத்தில் 2016 ல் ஜாதகி உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை உலகின் முதன்மையான தேசத்தில் முடித்தால்தான் தனக்கு மதிப்பு என ஜாதகி எண்ணினார். காரணம் திசா நாதன் சுக்கிரன் 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியனின் காரகமான இருப்பதிலேயே உயர்வான எனும் காரகத்தை தனதாக்கிக்கொண்டார். சுக்கிரன் சூரியனின் அஸ்தங்கமாகவில்லை எனினும் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனின் காரகங்களை தனதாக்கிக்கொண்டார். மேலும் ராகுவை முதலில் எதிர்கொள்ளும் சுக்கிரன் ராகுவின் காரகங்களையும் தனதாக்கிக்கொள்கிறார். இந்த ஜாதகி திரைத்துறையில் இயக்குனர் தொடர்புடைய உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். திரைத்துறையை சுக்கிரன் புதன் சேர்க்கை குறிக்கிறது. அதில் இயக்குனர் எனும் நிலையை சூரியன் குறிக்கிறார். அதில் பிரம்மாண்டமான நவீன நுட்பங்களை ராகுவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் கனவுகள் கற்பனைகளை குறிக்கும் காரக கிரகமாகும் இவற்றோடு ராகு தொடர்பாகும்போது அது பிரம்மாண்டமானதாக உருவெடுக்கும்.

இந்த ஜாதகி அமெரிக்காவில் வரும் திரைப்படங்களைப்போன்று வேற்றுகிரக வாசிகளோடு தொடர்புடைய பிரம்மாண்டமான திரைப்படங்களை இந்திய மொழிகளில் எடுக்க விரும்புபவர். தற்போது ஜாதகி சுக்கிர திசை முடிந்து திக்பலம் பெற்ற சூரிய திசையில் இருக்கிறார். 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்ற சூரியன் பணிக்கு சிறப்பு. ஆனால் திருமண வாழ்விற்கு சிறப்பை தராது. 1௦ ஆமிட திக்பல சூரியன் மேலும் மேலும் புகழ் மற்றும் உயர்வையே எண்ண வைக்கும். சூரியன் இங்கு ஜாதகிக்கு ஒருவித புகழ்,  உயர்வு எனும் மன போதையை ஊட்டி திருமண வாழ்வை தடை செய்கிறார். 1992 ல் பிறந்த ஜாதகிக்கு தற்போது வயது 32. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர் கல்வி பாவமான 9 ல் லக்ன பாதகாதிபதி சனி அமைந்ததால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர் இன்னும் கல்வியை முடித்து திரும்ப மனமின்றி மேலும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவே விரும்புகிறார். இது சூரியனால் உண்டாகும் ஒருவித புகழ் போதை மனநோய் எனலாம். சுக ஸ்தானாதிபதியும் மனோ காரகனுமான சந்திரனும் நீசம் பெற்றதால் ஜாதகி உடல் ரீதியாக விரும்பும் சுகத்தை சூரியன் ஏற்படுத்தும் புகழ் போதை எண்ணம் மழுங்கடித்துவிடுகிறது. 2 ல் நின்று கல்வி கற்க பொருளைத்தரும் குரு குடும்பத்தை எளிதில் தரமாட்டார். காரணம் 5 ல் கேது நிற்பதையொட்டிய புத்திர தோஷமும் திருமண தடைக்கு முக்கிய காரணம். இந்த ஜாதகி திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள முதலில் மனநல சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நன்று.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday 4 April 2021

ஜனன ஜாதக திருத்தங்கள்!

 


ஜாதகத்தை ஆய்வு செய்யும் சில ஜோதிடர்கள் ஜாதகப்படியான சில விளக்கங்களை வந்தவரிடம் கேட்டு ஜாதகத்தை உறுதி செய்துகொண்டு பலன் சொல்வதை கவனித்திருக்கலாம். இது பொதுவாக ஜாதகத்தின் உண்மைத்தன்மையை அறிய பயன்படுத்தப்படும் ஒரு யுக்திதான். சில ஜாதகங்கள் உத்தேச ஜாதகங்களாகவும் சில லக்னம் மாறியோ அல்லது சந்தி லக்ன ஜாதகங்களாகவும் அமையும்போது ஜோதிடர்களுக்கு பலன் சொல்வதில் தடுமாற்றங்கள் எழத்தான் செய்கின்றன. அதற்காகவே மேற்கண்டவாறு சில கேள்விகளை ஜோதிடர்கள் கேட்பர். ஜோதிடர்களிடம் அளிக்கபடும் ஜாதகங்களில் ஜாதக கணிதங்களுக்கேற்ப தவறுகளும் இருப்பது உண்டு. அவற்றை எல்லாம் சரிசெய்துதான் ஜோதிடர்கள் பலன் சொல்ல வேண்டியிருக்கும். எனது ஜாதகத்தில் நேரத்தவறு இருக்கலாம் அதை சரி செய்து தர இயலுமா என நேரடியாக கேட்போரும் உண்டு. அப்படியானவர்களிடம் ஜாதக விபரங்களோடு அவர்கள் வாழ்வில் நடந்த திருமணம், வேலை கிடைத்த நாள் போன்ற சில முக்கிய சம்பவங்களின் நாட்களை பெற்றுக்கொண்டு  ஜாதகத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி சில நேர திருத்தங்களை செய்யலாம். இப்பதிவில் இன்று ஜனன நேரத்தை சரி செய்வது பற்றி ஆராயவிருக்கிறோம். ஜனன நேரத்தை திருத்த பல முறைகள் உண்டு என்றாலும் நம்பகமான ஒரு முறை என நான் கருதுவது பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு சரி செய்வதே ஆகும்.

எது சரியான பிறந்த நாள்?

தனது உறவுப்பெண்ணின் ஜாதகத்தை கடந்த வருடம் அளித்திருந்த ஒரு நண்பர் மீண்டும் சில நாட்களுக்கு முன் அதே ஜாதகத்தை முன்னிட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். முன்னதாக அனுப்பியிருந்த பிறந்த நாளானது 23.08.91 என அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிறந்த நாள் 28.03.91 என குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இது போன்ற சூழ்நிலைகள் ஒரு ஜோதிடருக்கு விரக்தியை ஏற்படுத்துபவையாகும். வருடம் ஒன்றுதான் ஆனால் பிறந்த நாள் மற்றும் மாதம் ஆகியவை மாறுபட்டிருந்தன. 23.08 மற்றும் 28.03 என்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும் என கருதி இதில் எது சரியான பிறந்த தேதி என ஆய்வு செய்தேன். எனது “ஜோதிட சாகர” WhatsApp குழுவிலும் இதை ஆய்வுக்கு பதிவிட்டிருந்தேன்.

பெண்ணின் இரு வேறு ஜாதகங்கள்

  

   


பிறந்த நாள் A படி ஜாதகி பிறந்தது சூரியன் சிம்மத்தில் இருக்கும் ஆவணி மாதமாகும். ஜாதகம் B படி ஜாதகி பிறந்தது சூரியன் மீனத்தில் இருக்கும்  பங்குனி மாதமாகும். மூன்றாவதாக மேலே குறிப்பிட்டிருப்பது ஆய்வு நாளின் கோட்சார நிலையாகும். ஆய்வு நாளின் மாதம் சூரியன் மீனத்தில் இருக்கும் பங்குனி மாதமாகும். இது பிறந்த நாள் B உடன் ஒத்துப்போகிறது. இதனால் இரண்டாவதாக அளிக்கப்பட்ட ஜாதகம்-B தான் சரியானதாகும். எனவே ஜாதகியின் பிறந்தநாள் 28.03.1991 தான் என கணித்தோம். பிற்பாடு இதை தொடர்புடைய நபர் உறுதி செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.   

எது சரியான பிறந்த லக்னம்?

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம் கீழே.

இந்த ஜாதகத்தை பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் விபரங்களை குறிப்பிட்டு அனுப்பிய நபர். ஜனன நேரம் உத்தேசமாக இருக்கும் எனவே நேரத்திருத்தம் செய்து ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகம் இது.  லக்னப்புள்ளி மிதுனத்தின் இறுதிப்பாகையை ஒட்டி சந்தியில் இருப்பதாலும் நேரம் உத்தேசமானது என்பதாலும் கடக லக்னமாக ஜாதகி  இருக்கக்கூடும் என அவர் அனுமானித்திருந்தார். 

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த நேரத்திற்கான ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

லக்னம் கன்னியில் 00.16 பாகையில் இருப்பதாக பிரசன்னம் காட்டுகிறது. லக்னம்  புதனின் வீடுகளில் ஒன்றுதான் என்பதை இது உறுதி செய்வதோடு லக்னப்புள்ளி சந்தியில் அமைத்திருப்பதால் ஜனன ஜாதக லக்னமும் சந்தியில் அமையும் என்பதை சாதாரண பிரசன்னமே சுட்டிக்காட்டுகிறது. கடகத்தை கோட்சார சந்திரன் தொடர்புகொண்டால் கடக லக்னம் என ஐயம் எழலாம். இங்கு கோட்சார சந்திரனும் கன்னியில்தான் உள்ளது எனவே லக்னம் புதனுடைய மிதுனம் அல்லது கன்னி ஆகும். கடகம் அல்ல என்பது உறுதியாகிறது.  ஆனால் மிதுனம் கன்னி இரண்டில் எனது லக்னம் என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால் இங்கு கேள்வியே லக்னம் மிதுனமா? அல்லது கடகமா என்பதுதான். எனவே லக்னம் மிதுனமாகும்.

இதை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் உறுதி செய்வோம் வாருங்கள். 

ஜாமக்கோள் பிரசன்னைத்தில் கும்ப உதயத்தில் உள்வட்டத்தில் புதன் அமைந்துள்ளதால் புதனின் லக்னமே ஜாதகருடையது என்பது புலனாகிறது. உதயம் கன்னி லக்னத்திற்கு 6/8 ஆக (சஷ்டாஷ்டகத்தில்) அமைகிறது. எனவே கன்னி லக்னமல்ல. அதே சமயம் மிதுனத்திற்கு திரிகோணத்தில் அமைந்த புதன் மிதுனத்தில் உள்ள ஜாம (வெளிவட்ட) சனியோடு   பரிவர்த்தனை ஆகிறார். மிதுன சனியோடு பரிவர்தனையாகும் புதன் உதயத்தையும் பரிவர்த்தனை ஆக்குகிறார். எனவே உதயமும் மிதுனத்திற்கு செல்கிறது. ஜாம சனி கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி வரும். உதயமும் உதய தொடர்புகளும் நமது ஐயப்பாட்டிற்கான விடைகளைக்கொண்டிருக்கும். எனவே பரிவர்த்தனைக்குப்பிறகு மிதுனத்திற்கு செல்லும் உதயம் ஜாதகியின் ஜனன லக்னம் மிதுனம் என்பதை உறுதி செய்கிறது. கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி செல்லும் சனியும் மிதுனத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் புதனும் ஜனன ஜாதகத்தில் அமைந்த நிலையிலேயே பிரசன்னத்திலும் அமைவதை கவனியுங்கள். இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் உன்னதம். சாதாரண பிரசன்னத்தில் இந்த நுட்பம் வெளிப்படாது. எனவே ஜாதகியின் லக்னம் மிதுனமே ஆகும். கடகம் அல்ல என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. மிதுனம் இரட்டை ராசி என்பதால் பிறப்பு விபரங்களையும் இருவேறு சூழல்களை ஒப்பிடும்படி பிரசன்னம் காட்டியது கண்டு அதிசயயித்தேன். இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திலும் (04.04.2021 – மதியம் 12:26 மணி) கோட்சார லக்னம் மிதுனத்தில் செல்வது பிரம்மிக்க வைக்கிறது. எனது ஜோதிட ஆய்வுக்கான இப்பெருமைகள் யாவும் எனது ஜோதிட ஆசான்களையே சாரும்.

எது சரியான பிறந்த நட்சத்திரம்?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நட்சத்திர சந்தி உள்ளது. இதனால் சில கணிதங்களில் பெண்ணின் நட்சத்திரம்  பூசம்-4 ஆம் பாதம் எனவும் சில கணிதங்களில் ஆயில்யம் முதல் பாதம் எனவும் வருவதாக என்னிடம் கொடுக்கப்பட்டது. சில அயனாம்ச மாறுதல்களாலும், கணித மாறுதல்களாலும் இரு நட்சத்திரங்களின்  சந்தியில் ஜனன கால சந்திரன் செல்லும்போதும் இந்நிலை ஏற்படும். இதனால் எந்த நட்சத்திரம் கொண்டு ஜாதகிக்கு நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு எனை நாடி வந்திருந்தனர்.

கீழே பெண்ணின் ஜாதகம்.


கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் 16.39 பாகையில் பூச நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் உள்ளதாகவே எனது கணினி மென்பொருள் காட்டியது. ஆனால் சில நிமிட மாறுதல்களில் அது ஆயில்யம் முதல் பாதம் என காட்டுகிறது. எனவே வந்தவர்களின் நிலை புரிந்தது. இதனால் பிரசன்னம் மூலம் இதை அறிய முயன்றேன்.

கீழே ஆய்வு நேரத்திற்கான பிரசன்ன ஜாதகம்.


கோட்சார சந்திரன் விருட்சிகத்தில் 2.43 பாகையில் கடகத்தின் திரிகோணத்தில் விசாகம்-4 ஆம் பாதத்தில் செல்கிறது. ஒரு பாதம் மாறினால் நட்சத்திரமும் மாறிவிடும். கேள்வி பூசத்தின் 4 ஆம் பாதமா? அல்லது ஆயில்யத்தின் முதல் பாதமா? என்பதே. விசாகம் குருவின் நட்சதிரமானாலும் நட்சத்திர பாதம்-4 தான். கோட்சார சந்திரன் கேட்டையில் இருந்தால் ஜனன நட்சத்திரம் ஆயில்யம் என கூறலாம். எனவே பாத அடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின்  ஜென்ம நட்சத்திரம் பூசம்-4 தான் ஆயில்யம் அல்ல என்பதை கோட்சார சந்திரன் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார சந்திரன் ஆத்மார்த்தமான நம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கண்ணாடி ஆகும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501