Sunday 21 December 2014

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும் விபரீதங்கள்.

விசித்திர ஜாதகங்கள்: பகுதி-1 

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும்  விபரீதங்கள்.

சிலவகை ஜாதகங்களை ஆராயும் போது ஜோதிடருக்கு இந்த ஜாதக அமைப்பு ஜாதகருக்கு என்ன கொடுமை செய்யுமோ என கவலை கொள்ளவைக்கும். ஜோதிடர்களால் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு ஏற்படுத்தும் பாதிப்பை சிலசமயம் துல்லியமாகக்கூட அளவிட இயலும் அதன் பாதிப்பை தடைசெய்ய ஜோதிடர்களால் மட்டுமல்ல யாராலும் இயலாது என்பதே உண்மை. துயரங்களைக் கலைய அதற்கு காரணமான படைத்தவனை சரணடைவதே சரியான முறை.

அந்தச் சரணாகதிகளும் படைத்தவனிடம் வைக்கப்படும் கோரிக்கை மனுக்களே. அனைத்து மனுக்களும் கனிவோடு பரிசீலக்கப்படும் என்பது உறுதியில்லை. காரணம் அவைகளும் கர்மவினைகளின்படியே பரிசீலிக்கப்படும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு இறுதியில் இறைவன் தங்களை வாழ்வை கடினப் படுத்துவான்  என ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொண்டு  கிரகப் பெயர்ச்சி காலங்களில் மட்டும் நீதிபதியின் முன்னாள் முறையிடும் வாதியைப்போல் பணிந்து வணங்குவது மட்டும்  பயன்தராது. இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம் கிரகப் பெயர்சிகளும் இன்றைய காலகட்டத்தில் காமர்ஷியலாகிவிட்டன என்பது வேதனைக்குரிய விஷயம். 

இந்து தர்மமும் அதன் பிரதான அங்கமான ஜோதிடமும்  சில விசேஷமான முறைகளின் மூலம் மனிதனது துயரங்களைக் குறைத்துக்கொள்ள வழிவகை செய்துள்ளது மறுக்க இயலாத உண்மை. ஆனால் இதைவைத்து நடக்கும் பொருளீட்டு முறைகள் இவற்றின் அற்புதங்களை சிதரடித்து வருவது வேதனை. நாத்திகர்களைவிட பொருளாதாரத்தை பிரதானமாக முன்னிறுத்தும் ஆத்திகர்களால் நமது மதம் மட்டுமல்ல ஜோதிடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுமே தவறானவை எனும் எண்ணம் கொள்ள வைக்கும். உண்மையான நமது இந்து தர்மத்தையும் அதன் அற்புதங்களையும் புரிந்துகொள்வோம். தவறான ஆத்திகன் மோசமான நாத்திகனைவிட வேகமாக மத-தர்ம நெறிகளை அழித்துவிடுவான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால கேது திசை இருப்பு: 2 வருஷம், 7 மாதம், 12 நாட்கள்.

ஜாதகத்திற்கு உரியவர் ஒரு பெண்.

இந்த ஜாதகத்தில் சூரிய சந்திரர்களும் அவர்களது வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கால சர்ப்ப தோஷ ஜாதகத்தில் 2 ஆம் வீட்டில் குரு உச்சமாகியுள்ளார். காரகன் பாவத்தில் இருப்பது பாதிப்பைத் தரும். “காரகோ பாவ நாசாய என்பது ஸ்லோகம். ஒரு கிரகம் எந்த வகையில் செயல்படும் என்பதை அக்கிரகத்தினது காரகத்துவங்கள், அதன் சுய பாவங்கள், அக்கிரகம் அமைந்த பாவம் மற்றும் அதன் பாவாதிபதி இவற்றுடன் அக்கிரகம் அமைந்த நட்சத்திராதிபதி & உப நட்சத்திராதிபதி போன்றவற்றைக் கொண்டு அறியலாம். (குறிப்பிட்ட கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் என்பதை அறியவேண்டும்.) 

மேற்கண்ட விதிகளின்படி குடும்பகாரகன் குரு குடும்ப பாவமான கடகத்தில் உச்சம் பெற்று அமைந்தது குடும்ப உறவில் ஏற்படும் சச்சரவைக் குறிப்பிடுகிறது. “அந்தணன் தனித்திருக்க அவனியில் அவதிகள் அதிகம் உண்டாம் என்பது ஜோதிடப் பழமொழி. குரு தனித்து உச்சமானது தனவரவில் சில நன்மைகளை தந்தது ஆனால் கணவருடனான் உறவில் அடிக்கடி சண்டைதான் ஏற்பட்டது. அதற்கு குரு ராசிக்கு 12ல் மறைந்ததும் ஒரு முக்கிய காரணம். 

5 ஆம் பாவாதிபதி புத்திரம், சிந்தனை மற்றும் பூர்வ புண்ணியத்தைக் குறிப்பவர். அந்த 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனானவர் எதிரியைக் குறிப்பிடும் 6 ஆம் பாவாதிபதியுடன் இணைந்தது ஜாதகியின்  சிந்தனையில் சண்டையிடும் மனோபாவத்தையும் நெருப்பு வார்த்தைகளையும் உமிழ வைத்தது. ஸ்திர ராசியான சிம்ம ராசிக்கு 9 ஆம் பாவமான மேஷம் பாதகஸ்தானமாகும். மேஷத்தில் சம வலுவுடைய சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து நின்றது தோஷம். இவ்விரு கிரகங்களும் சுக்கிரனின் சுய நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. செவ்வாய் 19.08 பாகை (பரணி-2) & சுக்கிரன் 24.48 பாகை (பரணி-4).

இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது என்னவெனில் சம வலுவுடைய இத்தகைய கிரகங்கள் 5 பாகை இடைவெளிக்குள் அமைந்துவிட்டால் கிரக யுத்தம் ஏற்பட்டு வென்ற கிரகம் தோல்வியுற்ற கிரகத்தை கொன்றுவிடும் அல்லது பிரிவினையை ஏற்படுத்திவிடும் (கணவன் – மனைவி இருவருள் ஒருவர் கொல்லப்படுவார் அல்லது பிரிவினை ஏற்படும்).

இந்த ஜாதகத்தில் 5 பாகை இடைவெளி உள்ளதால் இங்கு கிரக யுத்தம் பெரிய அளவில் இல்லை. மேலும் சுக்கிரன் சுய சாரத்தில் செவ்வாய்க்கு முன்னே உள்ளதால் சுக்கிரனை செவ்வாயைவிட வலுவுடையவராக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி சொந்த வீட்டில் சுக்கிரனுடன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்த 6 ஆம் பாவாதிபதி செவ்வாயானவர் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையில் ஜாதகியை கணவருடன் சண்டையிட தூண்டினார்.

சந்திரனின் வீடு 2 ஆமிட  தனித்த குருவால் பாதிக்கப்பட்டது அறிந்ததே. ராசியாதிபதி சூரியனானவர் குரு அமைந்த சந்திரனின் வீடான கடக ராசிக்கு பாதகஸ்தானமான 11 ஆம் இடம் ரிஷபத்தில் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி-3 ல் அமைந்து கெட்டுவிட்டார். அது லக்னத்திற்கு விரய ஸ்தானமும் ஆகி லக்னாதிபதி புதனும் சந்திரனின் ரோகிணி-4 ல் அமைந்து கெட்டுவிட்டார். சூரியனது வீடும் சந்திரனுடன் அமைந்த  பாவிகளான ராகு மற்றும் சனியால் கெட்டுவிட்டது.

இங்கு மற்றோர் உபவிதி உள்ளது அது "ராகுவானவர் எந்த பாவத்தில் அமைந்துள்ளாரோ அந்த பாவாதிபதி சூரிய சந்திரர்களுக்கு எதிராக செயல்படுவார் என்பதே அது. (சூரிய சந்திரர்கள் இருவரும் அமுது உண்ணும்போது தேவர்களின் வரிசையில் மாறி அமைந்த ராகுவை காட்டிக் கொடுத்ததால் ராகு இவர்கள் இருவருக்கும் பாதகத்தை தருவார் என்பது  இதன் புராண பின்னணி).   இந்த ஜாதகத்தில் ராகு அமைந்த பாவாதிபதி சூரியனது வீடாகவே அமைந்தது சோகமே.

இப்படி இரண்டு கிரகங்களோடு (சந்திரன்-சூரியன்) அவற்றின் பாவங்களும் (கடகம்-சிம்மம்) கெட்டுவிட்டால் அவற்றிற்குரிய திசா புக்திகள் கடும் பாதிப்பைத் தரும்.

ஜாதகிக்கு 2008 பொங்கலன்று சந்திரனின் திசை துவங்கியது.

அது முதல் செவ்வாய்-சுக்கிரனின் நிலையினால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கணவன்-மனைவிக்குள் கடுமையான சண்டை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல சூரியன்-சந்திரர்களும் அவர்களது வீடும் கெட்டதால் சூரிய-சந்திரனின் கோட்சார நிலையால் நிகழும் ஒவ்வொரு அமாவாசையன்றும் தம்பதிகளுக்குள்  கடுமையான சண்டை ஏற்பட்டது. 

கணவர் சற்று பொறுமைசாளி. ஆண் கிரகங்கள் ஜாதகியில் ஜாதகத்தில் கெட்டுவிட்டதிலிருந்து இதை அறியலாம். கணவர் வெள்ளிக்கிழமையையும் அமாவாசையையும் நினைத்தாலே நடுங்க ஆரம்பித்துவிட்டார். சண்டை ஏற்பட்டால் கணவர் அதன் தீவிரத்தைத் தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். அதற்குக் காரணமும் உள்ளது.

அது

ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் ரத்தத்தை குறிக்கும் கிரகங்கள். ஜாதகத்தில் மோசமான நிலையில் அமைந்த இவையிரண்டும் ஜாதகிக்கு இரத்தக் கொதிப்பை உருவாக்கிவிட்டன. மேலும் செவ்வாய் பரம்பரை வியாதியைக் குறிப்பிடும் கிரகமாகும். (ஜாதகியின் தாயார் இரத்தக் கொதிப்பால் உயிரிழந்தவர்)

எனவே வாக்குவாதத்தில் ஜாதகிக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி ஜாதகிக்கு ஏற்படும்  உயிராபத்தை தவிற்கும் பொருட்டு கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்.   

ஆனாலும் கணவரால் ஜாதகியின் உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.

காரணம்.

ஜாதகிக்கு மாரக திசையான சந்திரனின் ஆதிக்க காலம் 2008 லேயே தொடங்கிவிட்டது. சந்திரன் மனோ காரகன் என்பதால் ஜாதகியின் மனோபாவத்தில் அலோபதி மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத எண்ணத்தை உருவாக்கிவிட்டார். ஜாதகி அக்குபங்சர் மருத்துவத்தையே நாடினார். மரண நாளில் அக்குபங்சர் டாக்டரையும் படைத்தவன் வெளியூர் செல்லும் அமைப்ப ஏற்படுத்தினான். கடைசி நேரத்தில் சுய நினைவற்ற நிலையில் அலோபதி மருத்துவர்களாலும் ஜாதகியைக் காப்பாற்ற இயலவில்லை.  சந்திரன் மனோகாரகன் என்பதால் மனோநிலையின் மூலம்  ஜாதகிக்கு மரணவாய்ப்பை வழங்கினான். அது மட்டுமல்ல சந்திரன் தாயாரைக் குறிக்கும் மாத்ருகாரகன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஜாதகியின் தாயாரும் ரத்தக் கொதிப்பால் இறந்தார் எனக் குறிப்பிட்டேனல்லவா? அவர் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மரணமடைந்தார். சந்திரன் மாரகாதிபதி என்பதால் தாயாரை இழந்த துயரில் ஜாதகியும் அதே நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அதே ரத்தக் கொதிப்பால் மரணமடைந்தார்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Sunday 30 November 2014

திசா-புக்தி நுட்பங்கள்

திசா-புக்தி நுட்பங்கள் - பகுதி 2.

ஒரு கிரகத்தின் திசை எவ்விதம் இருக்கும் என்பதை பல்வேறு ஜாதக காரணிகளைக் கொண்டு மதிப்பிடவேண்டும். இன்றைய பதிவில் அவற்றுள் ஒரு காரணியான ஒரு கிரகத்திற்கும் அதன் வீட்டிற்குமான தொடர்புகளைக் கொண்டு ஆராய்வோம்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.




ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண். 

சித்திரை மாதத்தில் பிறந்தவரின் ஜாதகத்தில் சூரியன் உச்சம். தனுசு லக்ன  ஜாதகருக்கு  பாக்யாதிபதி சூரியன் உச்சமானது சிறப்பு. சூரியனுடன் சுபக்கிரகங்களான சந்திரனும் புதனும் இணைந்தது மிகச்சிறப்பு. அவை இரண்டும் சூரியனுக்கு நட்புக் கிரகங்கள் என்பது கூடுதல் சிறப்பு. இக்காரணங்களால் ஜாதகருக்கு சூரிய திசை மிகச் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சூரிய திசை இறுதி வரையுமே ஜாதகர் எவ்வித நற்பலன்களையும் அடையவில்லை. சராசரியான பலன்களையே அடைந்தார். சூரிய திசை தனித்து ஆளுமையுடன் இயங்கவைக்கும் திசை. ஆனால் ஜாதகர் சூரிய திசையில் சுய தொழிலில் தோல்வியடைந்தார். அடிமை சேவகம் செய்தார்.

என்ன காரணம்?

காரணம் ஒரு கிரகத்தினது செயல்பாடுகளை அக்கிரகம் அமர்ந்த பாவாதிபதி கிரகமும்  அக்கிரகத்திற்கு  4 மற்றும் 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகமும் முதன்மையாகக் கட்டுப்படுத்தும். அதோடு அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகங்களும் கட்டுப்படுத்தும்.

மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றுள்ளது. மேலும் சூரியனது வீடு பாக்யஸ்தானமாக வந்து அங்கு லக்னாதிபதி குருவும் செவ்வாயுடன் இணைந்துள்ளார். குருவிற்கு 1, 5 மற்றும் 9 ஆமிடங்களில் வலு அதிகம் அதோடு குரு செவ்வாய் இணைவு குரு-மங்கள யோகத்தையும் கொடுத்திருக்கிறது. 

ஆனால் இவை அணைத்தையும் குரு செவ்வாயுடன் இணைந்த சனியும் ராகுவும் கெடுத்துவிட்டார்கள்.

சனி சர ராசியான மேஷ ராசிக்கு பாதகாதிபதி என்பதோடு லக்னாதிபதிக்கு குருவிற்கு சனி சம கிரகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ராகுவானவர் சனியைப்போல் பலனளிப்பவர் என்பதோடு கூட்டுக் கிரகச் சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலிமையானவர்கள் என்ற விதி இங்கு கவனிக்கத்தக்கது.

ஜாதகரின் தந்தையும் சாதாரண நிலையில் வாழ்பவர்தான் என்பதையும் இக்காரனங்களிலிருந்து உணரலாம்.

ஒரு கிரகத்தினது சுய பாவம் (வீடு) கெட்டுவிட்டால் அக்கிரகம் ஆட்சி, உச்சம், நட்பு, பரிவர்த்தனை போன்ற  வலுவான நிலைகளில் இருந்தாலும் அதன் திசாபுக்திகளில் சிறப்பாகச் செயல்படாது என்பது திசா-புக்திகளின் செயல்பாடுகளை அளவிடுதலில் முக்கியமான விதி.

ஜோதிட அன்பர்கள் இவ்விதியை முக்கியமாகக் கவனத்தில் கொண்டு திசா-புக்தி பலன்களை அளவிடவேண்டும்.


மற்றுமொறு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.

Sunday 9 November 2014

நீதியின் நாயகன் சனீஸ்வரன்


02.11.14 அன்று சனிப்பெயர்ச்சி. இந்த சனிப்பெயர்ச்சி நமது தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எண்ணற்ற வலைப்பூவினரும் பத்திரிகைகளும் எழுதி வருகின்றனர்.நமது வாழ்வின் நிம்மதியானது  நமது தேசம் மற்றும் உலகின் போக்கு ஆகியவற்றை சார்ந்தே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே அதனடிப்படையில் இந்தச் சனிப் பெயர்ச்சியில் நமது தேசத்திலும் உலகிலும் ஏற்படவிருக்கும் மாற்றங்களைக் இங்கு ஆராய்வோம். அரசியல் ஜோதிடம் என்ற கோணத்தில் நமது பண்டைய ஜோதிட நூல்களை ஆதாரமாகக் கொண்டு எனது கணிப்புகளை இங்கு பதிவிடுகிறேன்.

ராசிக்குப் பத்தில் நான்கு கிரகச் சேர்க்கை. சந்நியாசி யோகம். பி.ஜே.பி பிரதமர்களும் கட்சித் தலைவர்களும் குடும்பமில்லாதவர்களாக இருப்பதன் காரணம் புரிகிறதா.

ஒரு முட்டாள் மாணவன்.

அவனுக்கு படிப்பே வராது. ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து தேர்வாகாமல் யாரும் வெளியேற முடியாது. மாணவன் ஆசிரியர்களைக் கிண்டலடிப்பான். பாடத்தை கவனிக்காமல் உறங்குவான். அதனால் அணைத்து ஆசிரியப் பெருமக்களும் மாணவனைத் தேற்ற முடியாது எனும் சூழ்நிலையில் இவனைத் தேற்றுவது உனது பணி என ஒரு ஆசிரியரிடம் அந்த மாணவனை ஒப்படைக்கின்றனர். ஆசிரியர் எப்படி என்றால் பாடங்களைக் கவனிக்காவிட்டால் பட்டினி போட்டுவிடுவார். அதையும் மீறி  படிப்பில் நாட்டம் செலுத்தவிட்டால் கொன்றே போட்டுவிடுவார். அதனால் அணைவரும் அவரிடம் நடுங்குவர். நன்றாகப் படிக்கும் மாணவனானாலும் லொள்ளு பண்ணக் கூடாது. முதுகெலும்பை முறித்து விடுவார். ஆசிரியர் இரண்டு பாடப்பிரிவுகளில் வல்லவர். இப்போது அணைத்து பாடங்களையும் எடுத்து மாணவனைத் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.

அந்தப் பள்ளியின் பெயர் “வாழ்க்கை
அந்த ஆசிரியரின் பெயர் சனீஸ்வரன்.
அவரது விசேஷமான இரு பாடப்பிரிவுகள் ஆயுள் மற்றும் ஜீவனம்.

அணைவரையும் விட தகுதியில் ஒரு படி உயர்ந்தவர். அந்தத் தகுதி தனக்கு நிகரானவன் என்ற மதிப்பில் பரமேஸ்வரனால்  “ஈஸ்வரப்பட்டம். வழங்கப்பெற்ற ஒரே கிரகம்.
.
உலகில் யாவரும் கைவிட்டு விட்ட நிலையிலும் தனித்து இயங்கி தன்னை முன்னிலைப்படுத்தும் தகுதி சனி பகவான் ஜாதகத்தில் நன்கு அமைந்தவர்களுக்கு ஏற்படும். இத்தகைய ஜாதக அமைப்பினர் இளம் வயதிலேயே சோதனைகளை சந்தித்தவர்களாக இருப்பர். கல்வியோடு சிறுவயது முதல் வாழ்க்கையையும் படித்திருப்பர்.

மற்றோர் வகை முட்டாள் மாணவாகள். இவர்களுக்கு ஜாதகத்தில் சனி ஜனன காலத்தில் தோஷப்பட்டிருக்கும். சனி ஜாதகத்தில் எந்த பாவத்தில் தோஷப்பட்டிருக்கிறதோ அல்லது சனி எந்த பாவத்தை பார்க்கிறாரோ அந்த பாவங்கள் பாதிப்படையும். குறிப்பிட்ட திசா புதிகளில் கோட்சார சனி சாதகமான இடத்திற்கு வரும்வரை இவர்கள் சனி பகவான் எடுக்கும் பாடங்களைப் படிக்க வேண்டியதுதான். படிக்காவிட்டால் பாவங்களுக்கான பாக்கியங்களை அடையவே முடியாது என்பதே உண்மை.
  


ஜோதிடத்தில் ஜாதக அரசவை என்றொரு வகைப்பாடு உண்டு. அதில் ராஜா-சூரியன், ராணி-சந்திரன், செவ்வாய்-சேனாதிபதி, புதன் – இளவரசன், குரு & சுக்கிரன் – நிதி மற்றும் வெளியுறவு, சனி – பாதுகாப்பு, ராகு-கேதுக்கள் அந்நியர்கள் மற்றும் எதிரிகள். (இதில் விசேஷமாக ராகுவை இஸ்லாமியர்களாகவும் கேதுவை கிறிஸ்தவர்களாகவும் ஜோதிடம் வகைப்படுத்துகிறது.)

பாதுகாப்புத் துறைக்கு காரகம் பெற்ற சனிபகவான் தனது உச்ச வீட்டிலிருந்து சேனாதிபதியும் பகைவனுமான செவ்வாயின் விருச்சிக ராசிக்கு 02.11.14 அன்று பெயர்ச்சியாகிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 16.12.2014 ல் பெயர்ச்சி.அடுத்த 2 ½  ஆண்டுகளுக்கு சனி விருச்சிகத்தில் இருப்பார். செவ்வாயின் வீட்டிலிருக்கும் சனி செவ்வாயின் குணத்தை ஒட்டியே (அதாவது தனது சுபாவத்திற்கு மாறுபட்ட விரைவான) நிகழ்வுகளையே வழங்குவார். இந்த 2 ½ ஆண்டு  காலத்தில் குருவானவர் தற்போதிருக்கும் கடக ராசியிலும் பிறகு முதன்மைக்கிரகமும்  ராஜ கிரகமான சூரியனின் சிம்ம ராசியிலும் பிறகு புதனின் கன்னி ராசியிலும் சஞ்சரிப்பார். இதில் சிம்மத்தில் ராகுவுடன் குரு சேரக்கை இந்த சனிப்பெயர்ச்சி காலத்திலேயே ஏற்படும் என்பது முக்கியமான பல விஷயங்களை உணர்த்துகிறது என்பதன் அடிப்படையில் இந்த சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.      

தமிழ்நாடு:
சூரியனின் சிம்ம ராசிக்கு சுகஸ்தானமான  4 ஆமிடத்திற்கு பெயர்ச்சியாகி வரும் சனி சிம்ம ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறது. குருப்பெயர்ச்சி பதிவிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா பதவியை இழக்கும் வாய்ப்புள்ளதை குறிப்பிட்டிருந்தேன். ஜெயலலிதா தனது வழக்குகளில் இருந்து மீண்டுவருவார். ஆனால் அடுத்த இரண்டரை வருடங்கள் அவருக்கு கடினமானதாக இருக்கும். அதன் பிறகு அவர் பி.ஜே.பியையும் காங்கிரஸ்சையுமே எதிர்க்க வேண்டியதிருக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சியில் தமிழக மக்கள் தவறான அரசியல்வாதிகளை புரந்தள்ளுவார்கள். பி.ஜே.பி நேரடியாகவும் காங்கிரஸ் மறைமுகமாகவும் வளர்ச்சிபெறும். இவ்விரு கட்சிகளும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமையிலும் உள்ள ஜாதீய மதவாத சக்திகளை வளரவிடாமல் கட்டுப்படுத்தும். ஆனால் சில அவசியம் கருதி இவை முழுமையாக அழிக்கப்படாது. தமிழக அரசியல் சூழ்நிலையில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் மக்களைப்பொறுத்தவரை முக்கியமான கால கட்டமாகும்.இலங்கையை மையப்படுத்தி தங்களால் இனி பிழைப்பு நடத்த இயலாது என்பதை தமிழக அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்வார்கள். பி.ஜே.பி ஜோதிட அடிப்படையில் பெண்  தலைவரை தமிழகத்திற்கு நியமித்துள்ளதை அறிய முடிகிறது.



இந்தியா:
இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இனிவரும் கால கட்டம்தான் அதுவும் அடுத்த பத்தாண்டுகள் மிக முக்கியமானவை. எதிரி நாடுகள் பி.ஜே.பியும் காங்கிரசும் இணைந்து செயல்படுவதைக் கண்டு திகைப்பார்கள். பி.ஜே.பி நேரடியாகவும் காங்கிரஸ் மறைமுகமாகவும் தேச ஒற்றுமையில் இணைந்து செயல்படும். இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நேச நாடுகள் இந்தியாவால் முழுமையாக பாதுகாக்கப்படும்.பாதுகாப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள் நவீன மயமாகும். கூகுல் போன்ற இணைய அமைப்புகளைப் பயன்படுத்தி இந்தியாவை கண்காணிக்கும் அமெரிக்காவின் ஜம்பம் இனி பலிக்காது. இந்தியாவிலேயே அதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும். மேற்கு வங்கம், திரிபுரா, நாகலாந்து மற்றும் கேரளாவின் சில பகுதிகள் இந்திய ஜாதகத்தில் செவ்வாயின் அம்சங்களாக அரசியல் ஜோதிட ஆராய்ச்சியாளர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதிகள் தீவிரவாத பாதிப்பு உள்ளாகும். எனினும் இவை எளிதாகக் கட்டுப்படுத்தப்படும்.  பிரதமர் மோடியின் செயல்பாடு இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும். இந்தியாவிற்கு தற்போது நடக்கும் சூரிய திசை  முடிந்து 2015 மத்தியில் ராசியாதிபதி சந்திரனின் திசை துவங்குவது மற்றும் கோட்சார நிலைகள் இந்தியாவிற்கு வளமான எதிர்காலத்தை அளிக்க உள்ளன.

உலகம்:
ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளைப் பயன்படுத்தி இதியாவையும் அதன் நேச நாடுகளையும் இனியும் கட்டுப்படுத்த இயலாது என்பதை தெளிவாக மேலை நாடுகள் புரிந்துகொள்ளும்.ஆனால் இனி வரும் காலங்களில் வீட்டோ அதிகாரத்தைவிட இந்தியாவின் அனுமதி உலக நடப்புகளுக்கு முக்கியம் என்ற நிலை ஏற்படும்.பாகிஸ்தானின் மறைமுகப் போர் இந்தியாவின் நேரடிப் போரால் முடிவுக்கு வரும். பாகிஸ்தானின் சுதந்திர ஜாதகத்தில் சுக்கிர திசையில் கடந்த ஜூலை மாதம் துவங்கிய சனி புக்தி இதை உறுதி செய்கிறது. பாகிஸ்தானின் சிம்ம லக்னத்திற்கு 12 ஆவது பாவத்தில் சனி உள்ளதை கவனியுங்கள். 12 ஆம் இடம் இழப்பு, தண்டனை போன்றவற்றைக் குறிக்கும் அதோடு 12 ல் இருந்து தனது புக்தியை நடத்தும் சனி தண்டனையை வழங்கியே தீரும்.(இது போன்ற கோணத்தில்தான் ஜெயலலிதாவின் ஜனன ஜாதகத்தில் ராசிக்கு 12 ல் இருந்து துவங்கிய சனி புக்தியும் கோட்சார சனியும் பதவி இழப்பை ஏற்ப்படுத்தும் எனக் கணித்து குருப்பெயர்ச்சி பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.) அதனால் பாகிஸ்தான் சிதைவுறும். ஒரு தீவிரவாத அமைப்பை நம்பி தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு பாதுகாப்பான வாழ்விடம் தேடி உலகெங்கும் அலையும் ஈழத்தமிழர்களின் நிலை பாகிஸ்தானிய மக்களுக்கு ஏற்படும். பாகிஸ்தான் சிதைவுருவதால் அதன் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு மற்றுமன்றி இந்திய, சீனா, பங்களாதேஷ் போன்றவற்றிற்கு புலம்பெயர முனைவர். இந்தியா இவற்றைக் கட்டுப்படுத்த மிகவும் மெனக்கெடும். இதன் பாதிப்பு மேலைநாடுகளிலும் சீனாவிலும் கடுமையாக இருக்கும். இந்தியாவில் பாகிஸ்தானால் ஏற்பட்ட கடந்தகால பாதிப்புகளைக் கண்டு பெயருக்கு அனுதாபப்பட்ட மேலை நாடுகள் தற்போது தங்கள் நாடுகளில் ஏற்படும் குண்டுவெடிப்புகலைக் கட்டுப்படுத்த இந்தியாவின் அனுபவத்தைக் கேட்டுக் கெஞ்சும். உலக நன்மையின் பொருட்டு இந்தியா அவசியமான சில  தகவல்களை மட்டும் அளிக்கும். 

சீனாவில் வளர்ந்துவாரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்படும்.குண்டுவெடிப்புகளைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் விழிக்கும் நிலை சீனாவிற்கு ஏற்படும் என்றாலும் செவ்வாயின் அம்சமாக உலக அரசியல் ஜோதிடத்தில் மதிப்பிடப்படும் சீனா கொடூரமான முறைகளையும் கொண்டு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும். ஆனால் முழுமையாக அழிக்க முடியாமல் அரசியல் ராஜதந்திர நடைமுறைகளையும் செயல்படுத்தும். இதன் பாதிப்பால் சீன பாகிஸ்தான் உறவு சீர்கெடும். இந்தியா உதைக்குபோது உதவிக்கு அமெரிக்காவும் சீனாவும் வராததைக் கண்டு பாகிஸ்தான் பாடம் கற்கும்.

ரஷ்யா, இந்தியா, சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவால் பாகிஸ்தானில் வைக்கப்பட்ட தீவிரவாதம் என்ற நெருப்பு இப்போது தன்னையே எரிப்பதைக் கண்டு தீவிரவாதத்திற்கு எதிராக முழுமையான நேரடிப்போரில் அமெரிக்கா  இறங்கும்.  மகாகவி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் மற்றும் சாராவளி ஜோதிட நூல்களின் குறிப்புகளின்படி தனுசு ராசியாக மதிப்பிடப்படும் பாரசீக வலைகுடாவிற்கு தற்போது ஏழரைச் சனி துவங்கியுள்ளது. அமெரிக்கா தனது படைப்பிரிவின் முக்கிய அணியை வளைகுடாப் பகுதியில் நிலைநிறுத்தும். இஸ்லாமியத் தீவிரவாதத்தை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கடுமையான தாக்குதல் மூலம் அழிக்கும். இந்தியாவையும் ரஷ்யா, சீனாவையும் தங்களுடன் இணைந்து செயல்பட மேலை நாடுகள் அழைக்கும். அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகளுடனான  மறைமுக தீவிரவாதத்தால் தாங்கள் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டதை மறவாது என்பதால் போரில் பங்கேற்காது. ஆலோசனைகளை மட்டுமே வழங்கும். இந்தியா தனது செயற்கைக் கோள் மற்றும் உளவுத் தகவல்களை மட்டுமே அளிக்கும்.


ஆப்பிரிக்கத் தீவிரவாதம் அழிக்கப்படும். ஐ.நா அமைப்பு ஆப்பிரிக்கா தொடர்பாக முக்கிய பங்காற்றும். மேலைநாடுகளின் கனிவான பார்வை. ஆப்பிரிக்க மக்களுக்கு தற்போது கிடைக்கும். அங்கு மக்களின் பாதுகாப்பிற்க்கான ஐ.நா வின் படை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்யப்படும்.இந்தியாவின் பங்கு அதில் முக்கியமாக இருக்கும்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

அன்பன்,
பழனியப்பன்.

Tuesday 21 October 2014

இன்பம் பொங்கும் தீபாவளி!






வாசகர்கள் அணைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.



அடுத்த பதிவு : நீதியின் நாயகன் சனீஸ்வரன்.

அன்பன்,

பழனியப்பன்.

Thursday 2 October 2014

செவ்வாயும் புதனும் சேர்ந்தால் செம கூட்டணியாமே?

எப்படியோ எனது தந்தைக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போதுபோல நாற்பது வருடங்களுக்கு முன் மதுவில் இத்தனை வகை இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பட்டை சாராயம், கள்ளு போன்றவை அப்போதைய பிரபலங்கள். அப்போது எனக்கு 5 வயது இருந்திருக்கலாம். அப்போது முதலே 30 வயது வரை நான் சற்று ஒல்லியான உடல்வாகுடையவனே. பள்ளியிலேயே எனக்கு ‘புல்தடுக்கி பயில்வான் என்றொரு பட்டப்பெயருண்டு.

அந்தப் பால்ய வயதில் ஒரு புண்ணியவானின் (!) ஆசைகேற்ப எனது தந்தையும் என்னை காலையில் எழுந்திருக்குமுன்பே பனை மரத்திலிருந்து கள் இறக்கும் இடத்திற்கு என்னை தரதரவென்று அழைத்துச் செல்வார். அங்கே ஒரு மரத்திலிருந்து இறக்கி தனியாக வைக்கப்பட்ட கள் எங்களுக்குத் தயாராக இருக்கும். ஒரு மரத்துக்கள் உடம்பைக் குண்டாக்கும் என்பதை கூறி ‘நீ மட்டுமல்ல உனது பரம்பரையே துக்கமற்ற வாழ்வில் திளைக்க வேண்டும் என்று படிப்பறிவில்லாத எனது தந்தைக்கு கவலையை மட்டுமல்ல உலகையே மறக்கும் காலாமிர்தத்தை அறிமுகப்படுத்தியவரும் அதே புண்ணியவான்தான். என்ன ஒரு உயர்ந்த குணம். கிட்டத்தட்ட 8  மாதங்கள் கள்ளைத்தான் நான் காப்பியாக எண்ணிக் குடித்தேன் என்றால் அது பொய்யல்ல. நல்ல வேலையாக ‘ஜல்லிபட்டி என்ற அத்தக்கிராமத்திலிருந்து ‘வெள்ளியணை அக்ரகாரத்திற்கு எங்களை இடம்பெயர வைத்து என்னைக் காப்பாற்றினான் என் இறைவன் முருகன்.

முதலில் மதுவை எனது தந்தை குடித்தார். பிறகு மது எனது தந்தையை குடிக்க ஆரம்பித்தது. நான் வளர்ந்து கல்வி முடித்து பணிக்குச் சென்ற பிறகும் அவர் இறக்கும்வரை என்னை குடிக்காதே எனக் கூறவேயில்லை. மது மனிதனை எப்படி அனு அனுவாகக் கொல்கிறது என்பதை  எனது பால்ய வயது முதல் அருகிலிருந்து பார்த்தவன் நான். எனது தந்தை அதிக மதுவருந்தியதன் விளைவாக போதையிலேயே போய்ச் சேர்ந்தார். தான் இறப்பது தெரியாமலேயே நினைவில்லாமலேயே இறந்தார் எனது தந்தை. அது ஒன்று வேண்டுமானால் மது எனது தந்தைக்குச் செய்த நன்மையாக இருக்கலாம்.

தீய பழக்க வழக்கங்களுக்கு காரகன் செவ்வாய் ஆவார்.

செவ்வாய் ஜாதகத்தில் கெட்டு அதனுடன் புதன் சம்பந்தம் பெற்றால் புகைப்பிடித்தல், புகையிலை உண்ணுதல், கஞ்சா, மது உள்ளிட்ட அணைத்து போதை வஸ்த்துக்களின் பழக்கம் ஏற்படும். புதன் செவ்வாய் இவற்றுடன் இரண்டாம் பாவமும் தீய பழக்க வழக்கக்களுக்குரிய 6 ஆம் பாவமும் சம்பந்தம் பெறவேண்டும். இந்த அமைப்பில் ராகு சேர்ந்தால் கூட்டாக மதுவருந்துதல், போதை ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விபரீதங்களின் எல்லைக்கு கிரகங்கள் இட்டுச் செல்லும்.

தீய பழக்கங்கள் மற்றும் தொடர்புகள் ஏற்படும் காலத்தையும் அவை முடிவுறும் காலத்தையும் செவ்வாய் மற்றும் 6 ஆம் இடம் இவைகளோடு தொடர்புடைய கிரகங்களின் நிலையைக் கொண்டு துல்லியமாக அளவிட முடியும்.


பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால புதன் திசை இருப்பு: 1 வருடம் 6 மாதம் 23 நாட்கள்.

லக்னாதிபதி செவ்வாயானவர் லக்னத்திற்கு 6 ஆமதியான வக்ர கதியிலுள்ள  புதனின் ஆயில்ய நட்சதிரத்தில் லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் நீசம். நீச செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் அதே புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நீசம் உடன் ராகு சேர்க்கை. செவ்வாயும் சந்திரனும் நீசப் பரிவர்த்தனை. சர ராசியான விருச்சிகத்திற்கு பாதக ஸ்தானத்தில் (9 ஆம் பாவம்) லக்னாதிபதி. ராசியும் லக்னமும் சஷ்டாஷ்டக (6 – 8) அமைப்பில் உள்ளது. ஜாதகரைக் காப்பாற்ற வேண்டிய குரு லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 11 ஆமிடத்தில் உள்ளது. மேலும் விருச்சிக ராசிக்கு ஒரு விசேஷ குணம் உள்ளது அது என்னவெனில் ஒரு விஷயத்தில் அதீத விருப்பையும் இல்லாவிட்டால் அதீத வெறுப்பையும் கொள்ள வைக்கும் ராசி அது. ஜாதகர் கொண்டது மதுவின் மீதான அதீத விருப்பு என்பதுதான் சோகம்.

இவையனைத்தும் கடுமையான ஜாதக அமைப்புகள்.

ஜாதகருக்கு 2009 துவக்கத்தில் சந்திர திசை துவங்கியது. அதுமுதல் ஜாதகர் மதுவின் கோரப்பிடியில் அகப்பட்டுவிட்டார். ஜாதகர் இன்னும் மதுவின் பிடியிலிருந்து மீளவில்லை.

அம்ச சக்கரத்தில் செவ்வாய் உச்சமானதால் நீச பங்கப்படுள்ளது தெரியும். இது ஒரு நல்ல அம்சம். செவ்வாய் இப்படி நீசபங்கப்பட்டது செவ்வாய் அமைந்த வீட்டதிபதி சந்திரனின் நீசத்தையும் பங்கப்படுத்தும். ஆனால் இவை இரண்டும் ராசியில் நீச பரிவர்த்தனை ஆனதால் அம்சத்தினால் இக்கிரகங்களுக்கு ஏற்பட்ட வலுவானது தாமதமாகவே வேலை செய்யும்.

இப்படி ஒரு கிரகம் ராசியில் நீசமாகி அம்சத்தில் உச்சமானதன் பலனாவது ராசியில் அந்தக் கிரகம் நீசமானதன் பலன் முதலிலும் இரண்டாவதாக அம்சத்தில் உச்சமானதன் பலனும் கிடைக்கும் என்பதாம். எனவே சந்திர திசையின் பிற்பகுதியில்  ஜாதகர் படிப்படியாக மீண்டு வருவார் எனலாம். இதை மற்றொரு வழியிலும் அனுமானிக்கலாம். சந்திர திசை 10 வருடங்கள் என்பதும் சந்திரன் செவ்வாயின் வீட்டில் உள்ளதும் தெரிந்ததே. எனவே சந்திரன் தான் அமர்ந்துள்ள பாவத்தின் அடிப்படையிலும் தனது திசையில் பலனளிக்க வேண்டும். இதில் சந்திரன் அமர்ந்த செவ்வாயின் ஒரு வீடுதான் நீச சந்திரனால் கெட்டுள்ளது மற்றோர் வீடான மேஷம் கெடவில்லை எனவே சந்திர திசையின் முதன் 5 வருடங்களில் பாதிப்பு விருச்சிக ராசிக்குரியபடி கடுமையாகவும் மற்றோர் பகுதி மேஷ ராசிக்குரியபடி அதிக பாதிப்பின்றியும் அமையும்.  

கீழே மற்றோர் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால செவ்வாய் திசை இருப்பு: 3 வருஷம் 11 மாதம் 22 நாட்கள்.

மேஷ லக்னத்திற்கு 4 ல் லக்னாதிபதி நீசமாகி வக்ரமாகியுள்ளார்.நீச செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் தீய தொடர்புகளைக் குறிக்கும் 6 ஆமிடத்தில் நீசன் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். அதனுடன் முந்தைய ஜாதகத்தைப் போலவே ராகு சேர்க்கை. 

இப்படி மனோகாரனான சந்திரன் கெட்டு அதனுடன் ராகு சேர்வது ஜாதக அமைப்பில் ஏற்படும் கெடுபலன்களை தீவிரப்படுத்தும்.

ஜாதகருக்கு 1999 ல் துவங்கிய குரு திசை ஜாதகருக்கு வெளிநாட்டு வேலையை வழங்கி வெளிநாடு அனுப்பியது. காரணம் குரு ஒரு ஜலக்கோள் என்பதும்  வெளிநாடு தொடர்பை ஏற்படுத்தும் 9 ஆம் பாவாதிபதியாக வருவது ஒரு காரணம். மற்றொன்று  லக்னாதிபதி ஜல ராசியான 4 ஆமிடத்தொடு தொடர்பு கொண்டதும் ஆகும். ஆனால் குருவும் மது பழக்கத்தைக் குறிக்கும் புதனின் வீடான மிதுனத்துடன் தொடர்பு பெற்றது ஜாதகரை மதுவுக்கு அடிமையாக்கியது.

குரு பாக்யாதிபதி (9 ஆமதிபதி) என்பதால் பாக்கியங்களைக் கொடுத்தது ஆனால் விரயாதிபதி (12 ஆமதிபதி) என்பதால் புத்திர வகையில் ஜாதகருக்கு விரையத்தை அதாவது புத்திர மறுப்பை கொடுத்தது. இதற்கு லக்னத்திற்கு 5 ல் அமைந்த சனியும் முக்கிய காரணம். ஜாதகர் செயற்கை முறையில் புத்திர பாக்கியத்திற்கு முயன்றார். ஆனால் மருத்துவர்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமிருப்பதால் செயற்கை முறை பலனளிக்காது என தெரிவித்துவிட்டனர். அம்சத்திலும் ஐந்தாமதிபதி நீசமானதை கவனியுங்கள். முந்தைய ஜாதகம் ராசியில் கெட்டு அம்ச வலுவால் தரக்கூடியது. மூன்று கிரகங்கள் (குரு, செவ்வாய் , சனி) வக்ர கதியிலமைந்த  இந்த ஜாதகத்தில் மூன்றுமே தண்ணியடித்துவிட்டு அமர்ந்திருக்கும் நிலைதான்.

மது ஜாதகரின் வாழ்வை மட்டும் சீரழிக்கவில்லை அவரது வம்ச விருத்தியையும் தடை செய்துவிட்டது.

வளரும் சமுதாய அமைப்பில் பல்வேறு சீர்கேடுகள் அதிகரித்துவிட்டன. அதில் முதன்மையானது மதுவின் மீதான மோகம்.

இன்று மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அது காவல் துறைக்கும் (செவ்வாயின் அம்சம்) ஜாதீய  அமைப்புகளுக்கும் (ராகுவின் அம்சம்) வருமானம் ஈட்டும் அற்புதமான வழியாகிவிடும். ஜாதீயக் கயவர்கள் தேசாபிமானிகள் போல நடிப்பது இதற்காகத்தான். அரசு மதுவை வருமானம் ஈட்டும் பொருளாகப் பார்க்காமல் இதர வழிகளில் பொருளீட்ட முனைய வேண்டும். மதுவின் மீதான கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அணைவரும் இணைந்து போராடினால் மதுவின் பயன்பாட்டை முடக்கிவிடலாம்.

நினைவில் கொள்ளுங்கள் அபினுக்காக தங்கள் தேசத்தின் (ஹாங்காங்) ஒரு பகுதியையே ஆங்கிலேயர்களிடம் இழந்தவர்கள் சீனர்கள்.

நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் இழக்கவிருப்பது நமது வாழ்வை, நமது சமுதாயத்தை.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்

Thursday 11 September 2014

பாதாள லோக யோகம்

ஜோதிட யோகங்களில் இந்த பாதாள லோக யோகமும் ஒன்று. பண்டைய நாளில் இந்த பாதாள லோக யோகம் மிக கொடுமையான ஒரு யோகமாகக் கருதப்பட்டது. காரணம் இதன் பலன்கள்.

இதற்கான ஜோதிட அமைப்பு என்னவெனில் லக்னத்திற்கு 7 ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து நின்றால் அத்தகைய அமைப்பு பாதாள லோக யோகம் எனப்படும். லக்னம் சரமாகவும் அமைந்து  இவ்விரு கிரகங்களும் கேந்திராதிபதிகளுமாகி இப்படி 7 ஆமிடத்தில் இணைந்து நின்றால் இந்த யோகம் இன்னும் தீவிரமாக செயல்படும்.

எல்லாம் சரி இதன் பயன் என்ன? ஏன் இந்த யோகம் கொடியது?

இந்த யோகம் ஜாதகத்தில் அமையப்பெற்றவர் தான் பிறந்த மண்ணை, பெற்றோரை, உறவுகளை விட்டு திரும்பி வர இயலாத பாதாலத்திற்குச் சென்றிடுவார் என்பதே இதன் பயன்.

பண்டைய மனிதன் பூமி உருண்டை என்பதை ஒரு வழியாக உறுதி செய்துகொண்டபின். தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவிலும் தங்களைபோன்றே மனிதர்கள் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழும் பகுதி தாங்கள் வாழும் பூமிப் பந்தின் கீழ்பகுதியில் இருக்கும் என்பதையும் அனுமானித்ததார்கள். தாங்கள் வாழும் பகுதியை பூலோகம் (பூமி உலகம் – லோகம் என்றால் உலகம்) என அழைத்த அவர்கள் பூமியின் மறுபகுதியையே பாதாளலோகம் என அழைத்தனர். வாகன வசதிகளற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்நாளில் அப்படி பூமிப் பந்தின் மறுபகுதிக்குச் சென்றவர் திரும்ப வர இயலாது என்பதாலேயே இந்த யோகம் கொடுமையானது என அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் சென்னையில் இருந்து இந்த யோகத்தை கணக்கிட்டால், சென்னைக்குக் கீழே அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் வருகிறது. இன்று இந்த யோகம் வாய்க்கப்பெற்ற ஜாதகர் எளிதாக தனது வாழிடத்தை வெளிநாட்டில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அமைத்துக்கொள்வார் எனலாம். அதற்கான சூழ்நிலை ஜாதகப்படி ஜாதகருக்கு வாய்க்கும்.

அமெரிக்காவிற்கு தற்காலத்தில் விமானப்பயணம் செய்து ஓரிரு நாளில் சென்றுவிடலாம். திரும்புவதும் அவ்வாறே.

இன்று இந்த யோகம் எனக்கு இருக்கிறதா சொல்லுங்கள் என ஆர்வத்துடன் சிலர் ஜோதிடரிடம் வருகின்றனர். பாதாளத்திற்குப் போவதற்கு அப்படி என்னய்யா ஆர்வம் என விளையாட்டாய் நான் கேட்பதுண்டு.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் கொடுமையாகப் பார்க்கப்பட்ட ஒரு ஜாதக அமைப்பு, வாகன வசதிகள் வளர்ந்தவிட்ட தற்காலத்தில் விரும்பத்தக்கதாக மாறிவிட்டது காலத்தின் அதிசயம்.

பின்வரும் ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகர் பிறந்த ஆண்டு 1984.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 2 வருடம், 4 மாதங்கள், 0 நாள்.


மேஷ லக்னத்திற்கு 7 ல் உச்ச சனியுடன் செவ்வாய் சேர்க்கை. எனவே பாதாள லோகம் உள்ளது. யோக பலனின்படி ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஜாதகர் மலேசியாவில் வசிக்கிறார். இந்த யோகத்திற்கு துணை செய்யும் இதர அமைப்புகளும் ஜாதகத்தில் உண்டு. அவை பின்வருமாறு.

லக்னத்திற்கு 2 ல் அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்தை உறுதிப்படுத்துகிறது.

வெளிநாடு செல்லும் அமைப்பிற்கு 4 மற்றும் 9 ஆகிய பாவங்கள் ஜலராசிகளாகவோ அல்லது ஜலக் கோள்களுடனோ தொடர்புகொண்டிருக்க வேண்டும் என நான் முந்தைய பதிவில்  குறிப்பிட்டேன். இந்த ஜாதகத்தில் நான்காமிடம் ஜலராசியான கடக ராசியாகி அதன் அதிபதி சந்திரன் லக்னத்துடன் தொடர்புகொண்டது ஜாதகர் வெளிநாடு வாசம் செய்வார் என்பதை அறிவிக்கிறது. மேலும் 9 ஆமிடத்தில் ஜலக்கோளான குரு ஆட்சியில் நின்றது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்திற்கு உறுதுணை புரியும் அமைப்பு.

(பாண்டியராஜன் – புதுக்கோட்டை) போன்ற சில வாசகர்கள் 3 மற்றும்  12 ஆமிடத் தொடர்பு வெளிநாடு செல்ல எவ்விதம்  உதவும் எனக் கேட்டுள்ளனர். 3 ஆமிடம் தாற்காலிகப் பயணத்தையும் 12 ஆமிடம் பரதேசம் செல்வதையுமே குறிக்கும். 12 ஆமிடம் இழப்புகளைக் குறிப்பிடும் இடம் என்பதால் அவ்விடத்தோடு தொடர்புகொள்ளும் ஜலக்கோள்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பை வழங்கினாலும் அவை தொடர்புடைய காரகங்களில் இழப்பையும் கூடவே வழங்கிவிடும்.

உதாரணமாக குரு 12 ல் அமைந்தால் ஜாதகர் வெளிநாடு சென்றாலும் குருவின் காரகப்படி ஜாதகருக்கு தகுந்த ஊதியமின்மை, குடும்பம் அமைவதில் தடை, குடும்பம் அமைந்தாலும் மனைவியைப் பிரிந்திருப்பதால் புத்திர பாக்கியத்தடை போன்றவற்றை உருவாக்க வாய்ப்புண்டு. வளைகுடா சென்ற பல அன்பர்களின் ஜாதகத்தில் இத்தகைய அமைப்புகள் காணப்படுவதை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம்.


பின்வரும் மற்றொரு ஜாதகம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணினுடையது.    

இந்த ஜாதகியும் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர்தான்.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 1 வருடம், 0 மாதம், 23 நாட்கள். 

இந்த ஜாதகத்தில் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கை உள்ளது அதனால் இதுவும் பாதாள லோக யோக ஜாதகமே.

ஒரு ஜாதகத்தில் லக்னம் உயிர் என்றால் ராசியானது உடலை, மனதைக் குறிக்கும். ராசியும் லக்னமும் நட்பு, பகை அல்லது சமம் போன்ற எத்தகைய உறவுகளைக் கொண்டிருந்தாலும் அவை இரண்டும் ஜாதகத்தில் இணைந்தே செயல்படும். அதனால்தான் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி சாரத்தில் நிற்கும் கிரகங்களும் ஜாதகருக்கு நன்மையே செய்ய விளையும் என்கிறோம். இத்தகைய ஜோதிட விதிகள் மிக நுட்பமானவை. ஜோதிடம் பயிலும் அன்பர்கள் இவற்றை குறித்து வைத்துகொள்ளவேண்டும்.

லக்னத்தை முதன்மையாகக் கொண்டே பலன்களை கணிக்க வேண்டும் என்றாலும்.லக்னம் அல்லது ராசியில் எது வலிமை உடையதோ அதை முதன்மையாகக் கொண்டு கணிப்பதும் ஒரு முறை. இதில் மேலோட்டமாக சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் உள்ளார்ந்து ஜாதகத்தை ஆராயும்போது இரு சக்கர வாகனத்தின் இரு சக்கரங்களைப் போல லக்னம், ராசி இரண்டும் ஒரே மாதிரியான பலன்களையே குறிப்பிடும். லக்னத்தைக் கொண்டு கணிக்க இயலாத சில விபரங்களை ராசியைக் கொண்டு கணிக்கலாம். இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்வதால் அதிகப்படியான விளக்கங்கள் கிடைக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி அம்சத்தில் நீசமாகி வலு குன்றியுள்ளது கவனிக்கத்தக்கது. அதனால் இங்கு ராசியை முதன்மையாக எடுத்துக் கொண்டால் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கையால் பாதாள லோக யோகம் உள்ளதை கவனிக்கலாம்.

இந்த யோகத்திற்கு துணைபுரியும் அமைப்புகள் என்றால் லக்னத்திற்கு 4 ல் அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது மற்றும் ராசிக்கு 9 ல் ஒரு ஜலக்கோள் குரு ஆட்சியில் உள்ளதைக் குறிப்பிடலாம்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.