Tuesday 31 August 2021

கட்டம் பார்த்து திட்டம் போடு!


வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து  முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும் வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்றாலும் அவர்கள் முந்தைய வகையினரைவிட மெதுவாகவே முன்னேறுகிறார்கள். “எண்ணித் துணிக கருமம்” என்பார் வள்ளுவர். குழப்பமான சூழலில் எடுக்கும் முடிவு சாதகமாக இருப்பதில்லை. குறிப்பிட்ட விஷயத்தில் தெளிவு பெற்றவர்கள் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த விஷயத்தில் தைரியமாக முடிவெடுகிறார்கள். தாங்கள் எடுக்கும் முடிவு சாதகமற்றுப் போகும்போது தங்களது விஷய ஞானத்தால் அம்முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்  அல்லது  பாதகத்தின் விகிதத்தை குறைத்துக் கொள்கிறார்கள். மற்றொரு வகையினர் உண்டு. முடிவெடுக்க வேண்டிய விஷயத்தின் மீது தெளிந்த அறிவு இல்லாமல், உரிய விஷய ஞானம் கொண்டவர்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு அவ்விஷயம் சாதகமற்றுப் போகும்போது மற்றவர்களை துணைக்கு அழைப்பார்கள். இவர்களை சொதப்பல் திலகங்கள் எனலாம். இன்றைய பதிவில் ஜோதிடத்தின் துணைகொண்டு முடிவெடுப்பதில் கோட்சார கிரகங்கள் எப்படி பயன்படுகின்றன என்பதை ஆராய்வோம்.


மேற்கண்ட ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். பிறப்பு ஜாதகம் இடது பக்கமும், கோட்சார ஜாதகம் வலது பக்கமும் உள்ளது. கோட்சார சந்திரன் ரிஷபத்தில் உச்ச கதியில் சுய சாரத்தில் செல்கிறார். பொதுவாகவே சந்திரன் ஸ்திர ராசியின் ரிஷபத்தில் உச்சம் பெற்ற நிலையில் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் நிதானமானவர்கள். தெளிவான முடிவெடுப்பவர்கள். தாங்களால் முடிவெடுக்க இயலாவிட்டால் தகுந்த ஆலோசனையை நாடிப்பெற தயங்காதவர்கள். ஜனன கால சனியும், புதனும் கோட்சார சந்திரனை பார்க்கிறார்கள். எனவே ஜாதகர்  புதன், சனி ஆகிய இரு கிரகங்களின் காரகங்கள், பாவங்கள் தொடர்பான விஷயத்திற்காகத்தான் ஜாதகம் பார்க்க வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜோதிடத்தில் இம்முறை “சந்திர நாடி “ என அழைக்கப்படுகிறது. ஜனன ஜாதகத்தில் விருட்சிக சனி மகர செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். எனவே ஜாதகர் கேட்க வந்துள்ள விஷயத்தில் செவ்வாயின் காரகத்துவமும் கலந்திருக்கும்.

கோட்சார சந்திரனை ஜனன கால சனி பார்ப்பதால் ஜாதகர் சனியின் காரகமான வேலை தொடர்பான விஷயதிற்கு தெளிவு பெற வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜனன கால சனி மீது கோட்சார கேது நிற்பதால் ஜாதகருக்கு வேலையில் தடையா? அல்லது வேலை இல்லையா? என்பதை முதலில் அனுமானிக்க வேண்டும். ஜனன காலத்தில் நீசமான 6 ஆமதிபதி சூரியன், கோட்சாரத்தில் ஆட்சி பெற்று ஜனன கால மற்றும் கோட்சார வக்கிர குருவின் நேர் பார்வையில் உள்ளார். தன பாவாதிபதியான செவ்வாயும் 6 ல் சூரியனோடு இணைந்து குரு பார்வை பெறுவதால் ஜாதகர் வேலையில் இருக்கிறார் என்பதை அனுமானிக்கலாம். அதே சமயம் 6 ஆமதிபதி சூரியன் அடுத்து மாற்றத்தின் காரகரான ஜனன கால சந்திரனையும், ஜனன கால கேதுவையும் நோக்கி சென்றுகொண்டிருப்பதாலும், ஜனன கால ஜீவன காரகன் சனி மீது கோட்சார கேது நிற்பதாலும் வேலையில் சிரமங்கள் உண்டு என அனுமானிக்கலாம். எனவே உங்களுக்கு வேலையில் சிரமங்கள் தற்போது உண்டு. அதை பொறுத்துக்கொண்டு பணி செய்யவும். வேலை சிரமங்களை பொறுத்துக் கொள்ளாவிட்டால் வேலை இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது என அறிவுரை வழங்கப்பட்டது. “மிக்க நன்றி சார். வேலைப்பழு விஷயமாகத்தான் உங்களிடம் ஆலோசனை பெற வந்தேன்” என்று ஜாதகர் கூறினார்.

கோட்சார சந்திரனோடு தொடர்புகொள்ளும் மற்றொரு ஜனன கால கிரகம் புதன் ஆவார். புதன் லக்னத்திற்கு 4 ஆம் அதிபதியாகிறார். மேலும் ஜனன கால சனியோடு பரிவர்தனையாகும் உச்ச செவ்வாயும் விருட்சிகத்திற்கு வந்து கோட்சார சந்திரனை பார்க்கிறார். இதனால் ஜாதகர் 4 ஆமிட புதன் குறிக்கும் நிலம், செவ்வாயின் காரகமான வீடு தொடர்பான சிந்தனையில் உள்ளது தெரிகிறது. கோட்சாரத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து 4 ஆம் பார்வையாக பரிவர்த்தனை செவ்வாயை பார்ப்பதாலும், 4 ஆமதிபதி புதன் கோட்சாரத்தில் உச்சமானதும் இதை உறுதி செய்கிறது. “இடம், வீடு வாங்கும் சிந்தனையும் உங்களுக்கு உள்ளது. தற்போது ஜனன கால பரிவர்த்தனை செவ்வாய் மற்றும் புதனின் மீது கோட்சார கேது நிற்பதால் தற்போது அதற்குரிய காலமல்ல. எனவே இது தொடர்பான விஷயத்தை ஒத்திப்போடவும் என்று கூறினேன்”. ஜாதகர் தற்போது "கடன் பெற்று இடம் வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் அது உதவுமா? என்று கேள்வி எனக்கிருக்கிறது" என்றார். கோட்சார சந்திரன் அடுத்து 4 ஆம் பாவத்திற்கு சென்று ஜனன கால குருவின் 5 ஆம் பார்வையை பெறவுள்ளது. அதே சமயம் ஜனன கால புதன், பரிவர்த்தனை செவ்வாயை விட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ராகு-கேதுக்கள் விலகுகின்றன. அதன் பிறகு அது பற்றி முடிவு செய்யலாம். தற்போது வேண்டாம் என்று கூறினேன்.

மூன்றாவது கேள்வியாக ஜாதகர் தனக்கு 2 ஆவது குழந்தை வாய்ப்பைப் பற்றி கேட்டார். இரண்டாவது குழந்தையை குறிக்கும் பாவம் 5 க்கு 3 ஆன 7 ஆம் பாவமாகும். கோட்சார குரு லக்னத்திற்கு வந்து 5, 7 ஆகிய பாவங்களை பார்க்கும்போது அதற்குரிய காலம் உள்ளது. திசா புக்திகளும் கோட்சாரத்துடன் அதற்கு பொருந்தி வர வேண்டும். ஜாதகருக்கு அந்த அமைப்பு அடுத்த 2022 பிற்பகுதியில் வருகிறது” என்று கூறப்பட்டது. கோட்சார சந்திரனை பார்த்த 7 ஆமதிபதி புதனாலும், கும்பத்தில் குரு வக்கிரமாகி பின்னோக்கிய நிலையில் மகரத்தை நோக்கி வருகிறார். இப்படி அரைப்பங்கு  மகர தொடர்பு பெற்ற வக்கிர குருவின் 5 ஆம் பார்வை  கோட்சார சந்திரனுக்கு கிடைக்கிறது. எனவே ஜாதகர் குழந்தை பற்றிய விஷயத்தை இறுதியாக கேட்டார்.

ஜாதகரின் நிலையை ஜனன & கோட்சார கிரகங்கள் ஒரு ஊடுகதிர் படம் போல (Scan report) தெளிவாக உணர்த்துகின்றன. இனி முடிவெடுப்பதில் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த தெளிவை தருவது ஜோதிடம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்!

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Friday 20 August 2021

இரண்டாம் பாவத்தின் மறுபக்கம்!

 


ஜோதிடத்தில் இரண்டாவது பாவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் பொருளாதார வளத்தை குறிப்பது இரண்டாம் பாவமாகும். இரண்டாம் பாவம் ஒருவரது குடும்பத்தொடர்புகளை குறிக்கும். எனவே ஒருவருக்கு பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்றால் இரண்டாம் பாவம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும். தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும், வாழ்வில் தன்னோடு உடன் வரும் நபர்களுக்காகவுமே ஒருவர் பொருளீட்டுகிறார். பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்து அதற்காக அதிக நேரம் செலவிடுவோர் குடும்ப வாழ்வின் சிறப்புகளை புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். குடும்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர் பொருளாதரத்தின் சிறப்பை புரிந்துகொள்ள தவறிவிடுவது மட்டுமின்றி தனது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்துகிறார். உறவுகள் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் சரியாக கையாள்வது ஒரு கலை என்றே கூறலாம். பொதுவாக ராசிக்கட்டத்தில் அனைத்து பாவங்களுமே உறவுகளையும் பொருளாதாரத்தையும் குறிப்பிடும் என்றாலும் ஒரு பாவத்தின் உயிர் காரகம் அதீத வலுவடையும்போது பொருட்காரகமும், பொருட்காரகம் அதிக வலுவடையும்போது உயிர் காரகமும் பாதிக்கப்படும். இன்றைய பதிவில் உதாரணமாக 2 ஆம் பாவத்தை எடுத்துக்கொண்டு இக்கருத்தை ஆராய்வோம்.

மேற்கண்ட ஜாதகம் ஒரு 1990 ல் பிறந்த ஒரு பெண்ணுடையது. விருட்சிக லக்னத்திற்கு 7 ல் லக்னாதிபதி செவ்வாய் ராசியிலும் நவாம்சத்திலும் ரிஷபதிலேயே நின்று வர்கோத்தமம் பெறுகிறார். செவ்வாய் 1௦ ஆம் பாவமான சிம்மத்திற்கு 1௦ ல் நின்று 1௦ ஆம் பாவத்திற்கு திக்பலம் தருகிறார். 1௦ சூரியன் ஆட்சி பெற்று திக்பலத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகி பொருளாதார ரீதியாக நல்ல வேலையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இரண்டில் நிற்கும் வக்கிர சனிக்கு வீடு கொடுத்த குரு கடகத்தில் சனியில் சாரம் பூசத்திலேயே உச்சம் பெற்று நிற்கிறார். இதனால் இரண்டாம் பாவ சனி அதீத வலுவடைகிறார். அதே சமயம் இரண்டாம் பாவாதிபதி குரு இரண்டுக்கு 8 ல் தான் உச்சம் பெறுகிறார். இவ்வமைப்பு பொருளாதார சிறப்பை தருகிறது. ஆனால் இல்லறத்திற்கு சிறப்பல்ல. இரண்டாமிட சனி வேலையில் ஜாதகியை முழுமையாக ஈடுபடுத்தி குடும்ப வாழ்வை தாமதப்படுத்துகிறது. 3௦ வயதில் பொருளாதார வளத்தில் திளைக்கும் ஜாதகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2 ஆமிட வக்கிர சனி வேலையை உயிர் மூச்சாக நினைக்க வைக்கிறது ஆனால் தனக்கான குடும்பத்தை அமைத்துக்கொள்வதை தடுக்கிறது. இந்த ஜாதகி பொருளாதாரத்தைவிட குடும்ப வாழ்வு முக்கியம் என எப்போது கருதுகிறாறோ அப்போதுதான் திருமணம் நடக்கும்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகன் 1995 ல் பிறந்த ஒரு இளைஞன்.மிதுன லக்னாதிபதி புதன் நீசம் பெற்று திக்பல சூரியனுடன் 1௦ ல் வக்கிர குரு பார்வை பெற்று நிற்கிறார். குடும்ப காரகன் குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் குடும்ப பாவத்தில் நீசம் பெற்று, 11 ஆம் பாவமான மேஷத்தில் சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். ஜாதகருக்கு நடப்பது. 5 ல் சுய சாரம் பெற்று நிற்கும் ராகு திசை. 5 ஆம் பாவம் என்பது காதலுக்கு சிறப்பு. ஆனால் அது வேலை பாவமான 6 ன் விரைய பாவம் என்பதால் சம்பாத்யத்திற்கு சிறப்பை தராது. இந்த ஜாதகருக்கு சரியான வேலை இல்லை. சம்பாத்தியமும் இல்லை. ஆனால் 5 ஆமிட ராகு காதலை கொடுத்து திருமணத்தையும் செய்து வைத்துள்ளது. இந்த இளைஞர் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 ல் உள்ள 6 ஆமதிபதியான நீச செவ்வாய் 11 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதால் காதலை நிறைவேற்றி வைத்துள்ளது. ஆனால் பொருளாதாரத்திற்குரிய உகந்த வேலையை செவ்வாயால் தர இயலாது. குடும்பம் அமைந்த பிறகுதான் ஜாதகர் பொருளாதாரத்தை முன்னிட்ட முயற்சிகளை எடுக்கிறார். 1௦ ஆமிட திக்பல சூரியன் சுய தொழில் எண்ணத்தை தூண்டுவார். ஆனால் 1௦ க்கு 8 ல் இருந்து திசை நடத்தும் ராகு அதற்கு தடை போடுவார். அதே சமயம் ஜாதகரின் வேலைக்கும் ராகு சிறப்பை தரமாட்டார். இதனால் உரிய வயதில் குடும்பம் அமைந்துவிட்டது. காரணம் இரண்டாம் பாவத்திற்குரிய உயிர் காரகத்துவங்கள் 5, 7, 11 ஆகியவை வலுவடைந்துவிட்டன. ஆனால் நல்ல வேலையும், போதிய வருமானமும் இன்றி ஜாதகர் தவிக்கிறார். காரணம் உயிர் காரகத்திற்கு சிறப்பு சேர்ந்த கிரகங்கள் பொருட்காரகங்களுடன் கை கோர்க்கவில்லை என்பதே.

கீழே மூன்றாவது ஜாதகம்.

ஜாதகர் 1992 ல் பிறந்த ஒரு ஆண். கேது திசையில் பிறந்த ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திற்கு 5 ல் 7 ஆமிடத்தில் நிற்கும்  குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு திருமணமானது. தன காரகன் குரு, குடும்ப பாவமான 2க்கு 6ல் மறைந்து 7 ஆமிடத்தில் நின்றாலும் அவர் லக்னத்தின் மீது தனது கதிர்வீச்சை செலுத்துகிறார்.   இதனால் குரு குடும்பம், தனம் ஆகிய இரு அம்சங்களிலும் குறைவற்ற நிலையை  தருகிறார். திசா நாதன் சூரியன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் நின்றாலும், சூரியனின் வீட்டோன் புதன், 6 ல் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி குருவின் சார நாதன் சுக்கிரனும் கடகத்தில்தான் நிற்கிறார். ஜாதகர் வெளிநாட்டில் மனைவியோடு வசிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும்  இந்த அமைப்பு உதவுகிறது. இந்த ஜாதகத்தில்  தனகாரகனும் குடும்ப காரகனுமான குருவே இரண்டாம் பாவதிபதியுமாகி அவர் லக்னத்தை பார்வை செய்வதால் இந்த ஜாதகருக்கு குடும்பம், பொருளாதாரம் மற்றும் புத்திர வகையிலும் சிறப்பான பலனை தந்துள்ளது. ஆனால் இவ்வகை அமைப்பு அனைவருக்கும் எளிதாக ஏற்படுவதில்லை. இத்தகைய அமைப்புகள் ஜாதகத்தில் அபூர்வமானவையாகும்.

நான்காவது ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். 7, 1௦ ஆமதியும், தன புத்திர காரகருமான குரு லக்னத்தில் திக்பலம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமதிபதி குரு லக்னத்தில் அமைந்து, ஜீவன காரகரான 7 ல் திக்பலம் பெற்ற சனியை பார்ப்பதால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். குரு களத்திர பாவாதிபதியாகி, 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணமும் ஆகிவிட்டது. இவருக்கு  பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் திக்பல குருவின் வலுவை, குருவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் கேது பாதிக்கிறார். ஜோதிட விதிகளின்படி இதை குரு, கேது சேர்க்கையாகவே பாவிக்கலாம். இரண்டில் அமைந்த கேது ஜாதகரது குடும்பம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. ஆனால் புத்திரத்தை பாதிக்கிறார். காரணம் கேது 5 ன் விரையாதிபதி புதனின் சாரம் ஆயில்யம் பெற்று 6 ல் மறைந்த 5 ஆமதிபதி சுக்கிரனுக்கு பாதகத்தில் அமைந்துள்ளார். இதனால் குடும்பத்திற்கு குழந்தை வருவதை 2 ஆமிட கேது தடை செய்கிறார். இந்த வகை அமைப்பை பெற்ற ஜாதகர்கள் குழந்தை அமையுமுன் தனது பொருளாதாரத்தை உயர்த்த முயலாமலிருப்பது நன்று. ஏனெனில் குடும்பம், பொருளாதாரம் இரண்டும் நிறைவாக கிடைத்துவிட்டால் 2 ஆமிட கேது குழந்தை பாக்கியத்தை தடுத்துவிடுவார். இதனால் ஜாதகர் தீவிர மருத்துவம் மற்றும் இறை சக்தியின் துணைகொண்டு முதலில் புத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் 5, 7, 9 ஆகிய பாவங்களை குரு பார்வை புனிதப்படுத்தினாலும் குரு அவ்விடங்களை கேதுவின் தடைகளோடுதான் பார்க்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.   

அனைத்து பாவங்களுமே வாழ்வின் அனைத்து விஷயங்களோடும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு பெறும் என்றாலும், அனைத்து பாவங்களின் உயிர் மற்றும் பொருள் காரணிகளை ஒருவர் எந்த அளவு சமநிலைப்படுத்தி    தனது வாழ்வை கொண்டு செலுத்துகிறாரோ அந்த அளவு அவர் இரு காரணிகளையும் தனது வாழ்வில் திறம்பட அனுபவிக்கிறார் எனப்பொருள்.  இதில் சமநிலை தவறும் பட்சத்தில் அவரது வாழ்வில் இவ்விரு காரணிகளில் ஒன்றை பாதிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் எனப்பொருள்.  

மீண்டும் உங்களை விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைப்பேசி: 8300124501

Saturday 14 August 2021

இரிடியத்தில் இன்வெஸ்ட் பண்ணலாமா?

 



மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ்ந்த பண்டைய காலத்தில் சக மனிதர்களிடம் நேசம் அதிகம் இருந்தது. அதன் காரணமாக சக மனிதரை ஏமாற்றுவதும் குறைந்திருந்தது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாக தனிமைப்பட்டு நிற்கும்  இன்றைய காலத்தில் சக மனிதன் மீதான நேசம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் சக மனிதனை ஏமாற்றிப்பிழைக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டனர். அரசே மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் சக மக்களை ஏமாற்றுகின்றனர். அதுவும் நவீன மின்னணு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துவிட்ட இக்காலத்தில் இவற்றை சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை காணலாம். பல்வேறு வகையான மோசடிகள் பல்வேறு பெயர்களில் பிரபலமாகிவிட்டன. இரிடியம் மோசடி, மண்ணுள்ளிப்பாம்பு மோசடி, ஈமுக்கோழி மோசடி, இணைய வழி மோசடிகள், கைபேசி வழி மோசடிகள், முகநூல் வழி மோசடிகள் என்று இப்பட்டியல் நீளுகிறது. காலத்திற்குக்காலம் இத்தகைய மோசடிகள் புதிய அவதாரங்கள்  எடுக்கின்றன. தற்போது நடப்பில் உள்ளது அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் அரசியல் ஏஜெண்டுகளின் மோசடிகள்தான். பொதுவாக வங்கியை தவிர்த்து தனி நபர்களிடம் சேமிக்கும் சேமிப்பில்தான் மோசடிகள் நடக்கும் என்றால் தற்போது வங்கியில் பணியாற்றுவோரே மோசடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவை எல்லாவற்றையும் பார்த்து சாதாரண மனிதன் திகைத்து நிற்கிறான். பணம் கொடுத்து  அரசு வேலைக்கு முயற்சிக்கலாமா?, இரிடியம் நபர்களிடம் பணம் கொடுக்கலாமா? என்று என்னிடமும் பலர் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். நமது இன்றைய பதிவு இவற்றை ஆராய்வதே.

இரிடியம் 

பொதுவாக மோசடிகளுக்கு முதன்மை காரக கிரகம் என்று ராகுவை சொல்லலாம். மனிதனின் ஆசையை தூண்டிவிட்டு பிறகு இழப்பை கொடுத்து இறுதியாக உண்மையை உணர்த்துவது ராகு-கேதுக்களின் பணி. கேதுவின் மோசடியில் ஒரு தனித்துவம் இருக்கும். கேது ஆசை காட்டி இழப்பை கொடுத்து பிறகு ஜாதகரை நெறிப்படுத்தும். ஆனால் ராகு,  வகை தொகையற்ற மோசடிகளுக்கு காரக கிரகமாகும். ராகு கொடுக்கும் பாதிப்பிலிருந்து ஒருவர் விரைவில் மீளமுடியாது. சுக்கிரன் வளமையை நேசிக்கும் கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனுக்கு  ராகு-கேதுக்களின் தொடர்பு ஏற்படும் போது அந்த ஜாதகர் பண மோசடியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ராகு-கேதுக்கள் இருவருமே ஆசையை தூண்டி தண்டிக்கும் கிரகங்கள் என்றாலும் தொடர்புடைய திசா புக்தி வரும் வரை இவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராகு-கேதுக்கள் குறுக்கு வழியில் கொடுக்கும் தனத்தை ஒருவர் அனுபவித்து விட்டால் அதன் பிறகு அந்த ஜாதகர் அவற்றின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை எனலாம். அல்லது ஒரு இழப்பை ஜாதகருக்கு கொடுத்துவிட்ட பிறகு அவருக்கு முறையான மற்றும் முறையற்ற வகைகளில் உதவி புரிகிறது.  ஆனால் அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. ராகு-கேதுக்களுக்கு குருவின் தொடர்பு ஏற்பட்டால் அந்த ஜாதகர் ராகு-கேதுக்களின் மூலம் நேர் வழியில் சிறப்பான தனம் ஈட்டுகிறார். உதாரணமாக கைராசி மருந்துவர், மிக நேர்மையான குற்றம் கண்டுபிடிக்கும் அதிகாரி, நேர்மையான நீதிபதி ஆகியோர் இவற்றின் அம்சங்களாகும். இப்படி குரு தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களுடைய ஜாதகர்களுடன், ராகு-கேதுக்கள் ஒரு தெய்வீக சக்தியாக உடன் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த வகை ஜாதகர்கள் மற்றவர்களின் கர்மாவை அவர்களை தண்டிப்பதன் மூலம் தீர்க்க அவதாரம் எடுத்தவர்கள் எனலாம்.

கீழே ஒரு ஜாதகம்.


இந்த ஜாதகி 1964 ல் பிறந்தவர். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மாங்கல்ய பாவமான 8 ஆமிடம் பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துள்ளது.. இதனால் இந்த ஜாதகிக்கு மாங்கல்ய பலமில்லை. கேது சாரத்தில் மேஷத்தில் குரு நிற்கிறார். களத்திர பாவத்தில் சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது முதலில் மாங்கல்ய, பாக்ய ஸ்தானாதிபதியான சனியையும் லக்னத்தில் நிற்கும் ராகு முதலில் 5 ஆம் பாவாதிபதியான சுக்கிரனையும் முதலில் தொடுகின்றனர். ஜாதகிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுக்கிரனை கடக்கும் ராகு அடுத்து தொடுவது களத்திர பாவாதிபதியான குருவைத்தான். இத்தகைய அமைப்புகளால் விதவையானவர் ஜாதகி. 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது நிற்பதால் இவரது மகள் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்துள்ளார். இந்த ஜாதகிக்கு ராகு-கேதுக்கள் தீய பலனை ராகு மற்றும் கேதுவோடு தொடர்புடைய குரு திசையில் கொடுத்துவிட்டன. தற்போது ஜாதகிக்கு பாக்ய ஸ்தானமான கும்பத்தில் மூலத்திரிகோணம் பெற்று நிற்கும் சனியின் திசை 2010 முதல் நடக்கிறது.  

மிதுனத்தில் அமைந்த லக்ன ராகு குறுக்கு வழி சிந்தனையை தூண்டுவார். கேது சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். பணத்தின் மீதான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் தன காரக கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஆத்ம அல்லது தாரா காரகர்களாக இருக்க வேண்டும் அல்லது ராகு-கேதுக்கள் தொடர்பு பெறவேண்டும். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நிற்பது கவனிக்கத்தக்கது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட வலையில் சிக்க வைத்து  ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அந்த குறிப்பிட்ட விஷத்யத்தின் மீது அவரது ஆசையை தூண்ட வேண்டும். ராகு முதலில் தொடப்போவது சுக்கிரனைத்தான். மேலும் ஆசையை தூண்டி சிக்க வைக்கும் காரக கிரகமான கேது பாதக ஸ்தானத்தில் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். எனவே ராகுவும்-கேதும்  ஜாதகிக்கு பணத்தின் மீதான ஆசையை தூண்டுவர். இந்த ஜாதகியை 9 ல் ராகு சாரம் சதையத்தில் நிற்கும் சனியின் திசையில், கேது புக்தியில் இரிடியம் மோசடியாளர்கள்  தொடர்புகொண்டனர். சனி பாக்ய ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினாலும் அவர் திடீர் அதிஷ்டத்தை குறிக்கும் 8 ஆம் பாவத்திற்கும் அதிபதி என்பதாலும் சனி ராகு சாரம் பெற்றதாலும் ஜாதகிக்கு இத்தகைய வாய்ப்பு வந்தது. ஜாதகி அவர்களிடம் பணம் கொடுக்குமுன் என்னை ஜாதகத்துடன் அணுகினார். ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் மிதுனத்தில் ஜனன கால ராகு மீது சென்றுகொண்டிருந்தது.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Saturday 7 August 2021

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்பது ஒருவருக்கு அமையும் அவர் நேசிக்கும் சிறப்பான வேலைதான். வாழ்க்கைக்கு ஆதாரமான வேலை சிறப்பாக அமைந்துவிடின் அது ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய இதர வகை சிரமங்களை பெருமளவு குறைத்துவிடும். ஆனால் அந்த வேலை அவரது அறிவுக்கும், திறமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதிஷ்டவசமாக சிலருக்குத்தான் அத்தகைய கனவு வேலையே கிடைக்கிறது. அதில் சென்று சேர்ந்த பிறகும் சிலருக்குத்தான் அந்த வேலையில் உரிய அங்கீகாரமும், உயர்வும் நிம்மதியான பணிச்சூழலும்  கிடைக்கிறது. இரயில்வே துறை வேலைக்காக தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் எனது வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று என்னை அனுகிய நபருக்கான அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து எனது கருத்துக்களை தெரிவித்தேன். எனது ஜோதிட கோணங்களால் ஈர்க்கப்பட்ட அவர், அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒரு பதிவாக எழுத வேண்டுகோள் விடுத்ததன் விளைவே இப்பதிவு.


ரயில்வே துறை வேலைக்கான ஜாதக அமைப்புகள்.

ராகு ரயிலின் காரக கிரகம் ஆகும். ஜீவன காரக கிரகம் சனியாகும். ரயில் போன்ற பெரிய இயந்திரங்களுடன் ஒருவரது வாழ்க்கை தொடர்பு ஏற்பட வேண்டுமெனில் வாகன காரகன் செவ்வாயும் சனியும் தொடர்பில் இருக்க வேண்டும்.  அரசுப்பணிக்குரிய காரக கிரகம் சூரியன் ஆகும். அரசுப்பணிக்குரிய காரக பாவங்கள் 5, 1௦ ஆகியவை ஆகும். சம்பாத்யத்திற்குரிய காரக பாவங்கள் 2, 6, 1௦ மற்றும் 1௦ ன் பாவத் பாவமான 7 ஆகும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி திசா புக்திகள் சாதகமாக வரும் காலம் ஒருவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1968 ல் பிறந்தவர். ரயிலை குறிப்பிடும் ராகு, லக்னாதிபதி சந்திரனோடும், ஜீவன காரகன் சனியோடும், 6 ஆமதிபதி குருவோடும், 1௦ ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்புகொள்கிறார். 2 ஆமதிபதி சூரியன் ராகு சாரமான சுவாதியில் நின்று 1௦ ஆவது பாவமான மேஷத்தை பார்க்கிறார். வித்யா காரகன் புதன் உச்சம் பெற்று, ஆதிக பாகை பெற்று ஆத்மா காரகனாக சிறப்பாக அமைந்ததால் கல்வி சிறப்பாக அமைந்தது. புதனுக்கு செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் பொறியியல் பயின்றார். பிறகு 1998 ல் 5 ல் நிற்கும் சுக்கிர திசையில் சனி சாரம் உத்திரட்டாதி-4 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி கிடைத்தது. தற்போது முதுநிலை பொறியாளராக பணிபுரிகிறார். ரயிலின் காரக கிரகம் ராகுவிற்கு ஜீவன காரகன் சனி மற்றும் 5,1௦ ஆமதிபதி செவ்வாய் தொடர்பு இருப்பதை கவனியுங்கள். இவை ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி அமைய காரணங்களாகும். ஒரு துறையில் ஒருவர் மதிப்பான உயர்ந்த நிலைக்கு  உயர வேண்டுமெனில் 9 ஆமிடம் சிறப்புற வேண்டும். இந்த ஜாதகத்தில் ராகு 9 ல் அமர்ந்து 9 ஆமதிபதி குரு பார்வை பெற்றது சிறப்பு. மேலும் ஜீவன காரகன் சனி உச்சம் பெற்ற புதனின் சாரத்தில் ரேவதி-4 ல் அமைந்திருப்பது ஜாதகரை தனது துறை சார்ந்த வகையில் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதை அறியலாம்.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகி 1952 ல் பிறந்து இரயில்வே துறையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருட்சிக லக்னத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தில் கேது நிற்கிறார். இதனால் இவர் அரசு மருத்துவரானார். கேது உயர்நிலை மருத்துவரை குறிக்கும் கிரகமாகும். சிம்மம் அரசுத்துறை என்பதை குறிக்கிறது. 12 ஆமிட செவ்வாய் ராகுவின் சுவாதி-2 ல் நின்று வேலை பாவமான 6 ஆம் பாவத்தையும், 1௦ ன் பாவத் பாவமான 7 ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் இவர் செவ்வாய் குறிப்பிடும் மருத்துவராகவும், லக்னாதிபதி செவ்வாய் ராகு சாரம் பெற்றதால் ரயில்வே துறை மருத்துவராகவும் செயல்பட வேண்டும் என்பது இவரது கர்மாவாகும்.

சனி வீட்டில் நிற்கும் 1௦ ஆமதிபதி சூரியன் மருத்துவ கிரகம் புதனுடன் இணைந்து சனி நிற்கும் சந்திரனின் சாரத்தையே பெறுகிறார். (சூரியன்-திருவோணம்-3, சனி-ஹஸ்தம்-4. மேலும் 6 ஆமதிபதி செவ்வாய், 1௦ ஆமதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகி அரசுத்துறையில் ரயில்வே மருத்துவராக பணியாற்றியுள்ளார்.  


தொழிலை சுட்டிக்காட்டும் தசாம்சத்தில் லக்னம் கால புருஷனின் 6 ஆமிடமாகி, லக்னாதிபதி புதன் கேதுவுடன் இணைவதும், 1௦ ன் பாவத்பாவம் 7 ல் இருந்து சூரியனோடு சேர்ந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாய் பார்ப்பதிலிருந்து ஜாதகி ஒரு அரசு மருத்துவர் என்பதையும் குரு உச்ச ராகுவோடு இணைந்ததிலிருந்து ஜாதகி ரயில்வே துறை சார்ந்தவர் என்பதையும் உணரலாம்.  

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1994 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ரயில்வே துறையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். விருட்சிக லக்னதிலேயே ராகு அமர்ந்து தனது ஆதிக்கத்தை ஜாதகரின்மேல் செலுத்துகிறார். இதனால் ரயில்வே துறை தொடர்பு. 4 ஆம் பாவத்தில் சனி,செவ்வாய், புதன் ஆகியவை ஒருங்கிணைந்து 1௦ ஆமிடமான சிம்மத்தை பார்ப்பதால் இவரது ஜீவனம் சுகாதாரத்துறை ஆகும். 1௦ ஆம் அதிபதி சூரியன் 5 ஆம் பாவத்தில் மீனத்தில் அமர்ந்ததால் இவருக்கு அரசு தொடர்பான பாக்கியம் ரயில்வே மூலமாக கிடைத்துள்ளது.


தசாம்ச லக்னத்திலும் ராகு-கேதுக்கள் தொடர்பாகியுள்ளதை கவனியுங்கள். தசாம்சத்தில் உணவு காரகன் சந்திரன் உச்சம். இதனால் இவர் ரயிலில் வழங்கப்படும் உணவு தொடர்பான விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவார் எனலாம்.    

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501