Showing posts with label புதன். Show all posts
Showing posts with label புதன். Show all posts

Wednesday, 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 14 September 2021

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்!

காதல் இன்றைய காலத்தில் நிறைய மாறிவிட்டது. புறா விடு தூதிலிருந்து குருஞ் செய்திகளில் பரிமாறிக்கொள்ளப்படும் காலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக பொருத்தம் பார்க்கத்தான் ஜோதிடரை நாடி வருவர். காதலிப்பவர் தனக்கு தகுந்தவரா? எனக் கேட்டு ஜோதிடரை அணுகுவோரும் உண்டு. சமீபத்தில் காதலை சொல்ல நல்ல நாள் கேட்டு ஒரு அன்பர் வந்தது ஆச்சரியமூட்டும் அனுபவம். வந்தவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்  அவருக்கு ஜாதகத்தை பெற்றோர் எழுதி வைக்கவில்லை. எனவே பிரசன்னம் பார்க்க வேண்டுமென்றார்.


அவரது கேள்வி நான்கு.
 

1..சக ஆசிரியையின் செயல்கள் என்னை கிளர்சியூட்டுகின்றன. அவரது செயல்கள் என்னை வசீகரிப்பதன் அறிகுறியா?

2. அல்லது “நான் தவறாக புரிந்துக்கொண்டுள்ளேனா?”

3. எனது எண்ணம் சரி எனில் அவரிடம் எனது காதலை சொல்ல நாள் குறித்து சொல்லவும்.

4. எனது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் எங்கள் மண வாழ்வு எப்படி இருக்கும்? என்று கேள்விகள் இருந்தன.

ஆசிரியருக்கு தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அடிவாங்காமல் அவமானப்படாமல் தனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலில் ஜோதிட ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.. அவரது பயத்திற்கு காரணம் அவர் விரும்புவதாக சொல்லும் சக ஆசிரியை வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதுதான்.

ஆசிரியருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயம் ஆரூடம் இரண்டும் ஒன்றாக உள்ளது. இது கேள்வியாளர் தனக்காகவே கேள்வியை கேட்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. உதயமும் ஆரூடமும் சிம்மமாகி அங்கு சூரியன் ஆட்சி பெற்றுள்ளது கேள்வியாளர் அரசுத் தொடர்புகொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது. உதயத்தை குரு பார்ப்பதும், உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உச்ச புதன் இருப்பதும் வந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை குறிப்பிடுகிறது. உதயம் கேள்வியாளர் என்றால் 7 ஆமிடம்  இவர் காதலை சொல்லவிருக்கும் ஆசிரியையைக் குறிக்கும். 7 ஆமிடத்தில் குரு இருந்து சூரியன் பார்வை பெறுவது எதிராளியும் ஆசிரியையே என கேள்வியாளர் கூறியது சரியே என்பதை தெரிவிக்கிறது. 

இப்போது இவர் காதலின் நிலை என்ன என்பதை காண்போம். உதயம் இரண்டாமிடத்தில் உள்ள உச்ச புதனையும், நீச சுக்கிரனையும், நோக்கி நகர்கிறது. புதன் காதலின் காரக கிரகம் என்பதோடு, அவர் தகவல் பரிமாற்றம், கடிதம் இவற்றின்  காரக கிரகமும் கூட. மேலும் உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சுக்கிரன் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாவது பாவத்தின் அதிபதியும் கூட. எனவே கேள்வியாளர் காதலை தெரிவிக்க  தயாராக இருக்கும் நிலையை இரண்டாமிட கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதன் காதலியையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். இவை இரண்டும் ஒன்றாய் உதயத்திற்கு இரண்டில் அமைவது, காதலிக்கவுள்ள பெண்ணை மனைவியாக அடையும் கேள்வியாளரது ஆசையை குறிப்பிடுகிறது. காதல் பாவமான உதயத்திற்கு 5 ஆமிடம் தனுசில் ஜாமச் சந்திரன் அமர்ந்து அதன் அதிபதி ஜாம குருவால்  உதயதிற்கு லாபத்தில் மிதுனத்தில் இருந்து பார்ப்பது சிறப்பு என்றாலும் வெளிவட்ட குருவிற்கு உள்வட்ட குருவே ஆதார சக்தி. உள்வட்ட குரு வக்கிரம் பெற்று 7 ல் அமர்ந்து உதயத்தை பார்க்கிறார். உதயத்தில் சூரியனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் காதலை சொல்ல துணிச்சல் ஜாதகருக்கு உண்டென்றாலும் வெளிவட்ட செவ்வாய் நீசம் பெற்று, துணிச்சல் ஸ்தானாதிபதி உள்வட்ட சுக்கிரனும் நீசம் பெற்று அமைந்தது ஆகியவற்றால் கேள்வியாளருக்கு சிறிது பயம் கலந்த ஆர்வம் இருப்பது தெரிகிறது. உச்ச, நீச கிரகங்களே கேள்வியாளரின் சிந்தனையில் மையம்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப களத்திர காரக கிரகங்களான சுக்கிரன், செவ்வாயோடு காதல் காரகன் புதனும் உச்சம் பெற்றது ஜாதகரின் சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது.   

இப்போது இவரது காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பார்ப்போம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் உதயத்திற்கு இரண்டாம் வீட்டில் நீசம் பெறுவது கேள்வியாளர் குறிப்பிடும் பெண்ணுக்கு உள்ள பாதிப்பை கூறும் அல்லது கேள்வியாளரின் எண்ணத்திலேயே உள்ள தகுதிக் குறைவை குறிப்பிடும். இதை தனது மதத்திற்கு மாறுப்பட்ட அளவிலான எண்ணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஜாம சுக்கிரன் உதயத்திற்கு எட்டாமிடமான மீனத்தில் உச்சம் பெற்று மறைவது, எதிராளி ஆசிரியை தற்போது வசதியாக இருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. சுக்கிரனும் புதனும் காதல் பாவமான 5 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளாமல் அவமான பாவமான எட்டாமிடத்தையே தொடர்புகொள்கின்றன.  மேலும் உதயத்திற்கு எட்டாம் அதிபதி 7 ல் இருப்பதால் எதிராளியால் கேள்வியாளருக்கு அவமானம் ஏற்பட இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. 7 ஆமிட குருவே உதயத்திற்கு 11 ல் இருப்பது கேள்வியாளரின் ஆவலை தூண்டுவதோடு முறையற்ற தொடர்பு குறித்த தகவலையும் தெரிவிக்கிறது. எனவே கேள்வியாளர், எதிராளியிடம் தனது காதலை தெரிவித்தால் அவமானப்பட நேரும். சக ஆசிரியையின் நடவடிக்கைகளை கேள்வியாளர் தவறாக புரிந்து கொண்டுள்ளதையே பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. 

காதல் காரகன் புதன் வெளிவட்டத்தில் உதயத்திற்கு பாதக ஸ்தானமாக மேஷத்தில் கவிப்புடன் உள்ளது இதனை உறுதி செய்வதாக உள்ளது. உதயதிற்கு 6 ல் இரு சனியும் உள்ளது, தவறாக எடுக்கப்படும் கேள்வியாளரின் ஒரு முன் முயற்சியால் அவரது வேலையில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஒரே கிரகம் உள்வட்டதிலும் வெளிவட்டதிலும் ஒரே ராசியில் இருப்பது அதன் காரகம் பாதிக்கப்படுவதை குறிக்கும். உதயத்திற்கு விரையத்தில் அமைந்த வெளிவட்ட நீச செவ்வாயை இரு சனியும் பார்க்கிறது. பாதகத்தில் கவிப்பு அமைந்து பாதகாதிபதியான செவ்வாய் உள்வட்டத்தில் உதயத்தில் அமர்ந்து 5, 8 அதிபதியான உள்வட்ட குரு  பாதகாதிபதி செவ்வாயின் அவிட்டத்தில் நின்று உதயத்தை பார்ப்பது ஆகியவை காதலைவிட பாதகமே கேள்வியாளரை தேடி வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. எனவே சக ஆசிரியையின் செயல்களை கேள்வியாளர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். காதல் கடிதம் கொடுத்தால் கேள்வியாளர் அவமானப்பட நேரும் என்பதோடு அவரது பணிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதை  பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனவே காதலை சொல்ல தற்போதைய சூழல் சாதகமில்லை என்று கேள்வியாளருக்கு கூறப்பட்டது. 

இந்த வகை பிரசன்னம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது என்பதோடு இவ்வகை கேள்விகளுக்கு எப்படி விடையளிக்கலாம் என்ற புரிதலையும் கொடுத்தது. இதை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசான்களுக்கு நன்றிகள் கோடி.

 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 30 July 2021

இரவுப்பறவைகள்!

 


அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும்  அறிமுகமற்ற நபர்கள், மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர் இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில் செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை.  இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள் உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே இன்றைய பதிவு.

கீழே 1963 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.

 
மகர லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம். இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு. சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில் பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம் பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம் என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின் காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற  சந்திரனின் காரக  வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன் இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.

மேற்கண்ட ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக் குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும், 12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.


தசாம்சத்தில் புதன் தசாம்ச லக்னத்திற்கு 7 ல் நிற்பது ஜாதகரது ஜீவனத்துறை புதன் சார்ந்த பத்திரிக்கை துறை என்பதை உறுதி செய்கிறது. 1௦ ன் பாவத்பாவமான 7 ஆமதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து 12 ல் மறைவதும் லக்னாதிபதி சனியும் 1௦ ஆமதிபதி செவ்வாயும் புதன் வீட்டில் மிதுனத்தில் இணைவது ஜாதகர் ஈடுபடும் துறையையும் அதில் அவரது உழைப்பின் கடினத்தன்மையையும் குறிப்பிடுகிறது. 

12 ஆம் பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம் பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால் செவ்வாய் திசையில் தனது 25, 26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின் தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு  புதனின் வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது. தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

லக்னத்தில் அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில் நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ  தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும்.  இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25 ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1 ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர புக்தியில் தனது  55 ஆவது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

உண்மையில் ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர் லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.

இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின் வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில் ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது. அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால் அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501  

Monday, 19 July 2021

நுண்ணுயிரியல் கல்வி

 


நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி வாய்ப்புகளும் அதற்கேற்ப பெருகிவிட்டன என்றுதான் கூற வேண்டும். வருடா வருடம் புதிய பிரிவுகள் கல்வித்துறையில் அறிமுகமாகின்றன. பழைய காலத்திற்கு ஒவ்வாத துறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய  காலத்திற்கேற்ப நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தரக்கூடிய பிரிவுகளை பலர் அறிந்திருந்தாலும் அதன் எதிர்கால நிலையையும் கணிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தங்கள் மன ஆர்வத்தை பூர்த்தி செய்யக்கூடிய கல்வியாக தாங்கள் தேர்ந்தேடுக்கும் கல்வி அமைய வேண்டும் என்று எண்ணுவது இயற்கையே. அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி தனது திறமைக்கு உட்பட்டதாகவும், பொருளாதார சூழலுக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டியதும் அவசியமாகிறது. இவை அனைத்தும் ஒருங்கே தரும் கல்விப்பிரிவை ஒரு மாணவன் இனங்கண்டு கொண்டால் மட்டும் போதாது, அதில் சேர வைக்கப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அதில் சேர முடியும் என்ற நிலை இன்று ஏறக்குறைய அனைத்து கல்விப்பிரிவிலும் உள்ளது. இந்நிலையில் உயர் கல்வி வாய்ப்பில் ஒரு பிரிவான நுண்ணுயிரியல் (Micro Biology) பிரிவில் தனது மகளுக்கு வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் என்னை ஒரு தாய் அணுகியதன் விளைவே இன்றைய பதிவு.

ஜோதிடத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் சிறப்பாக அமைய வேண்டுமெனில் கிரகிப்புத் திறனுக்கும் நினைவுத் திறனுக்கும் உரிய சந்திரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்களின் தொடர்பு எந்த கிரகங்களுக்கும் நல்லதல்ல என்றாலும் தீவிரமான நுட்பத்திறனை வழங்குவது ராகு-கேதுக்கள்தான். குறிப்பிட்ட வகை கல்வியில் நவீனத்துவத்தை (advanced level) குறிக்கும் ராகு-கேதுக்களின் தொடர்பு விரும்பத்தக்கது. கல்வியின் காரக கிரகம் புதனும், பாக்ய, லாப ஸ்தானங்களும் அவற்றின் அதிபதிகள் நிலையும் சிறப்புற அமைய வேண்டியது அவசியம். குறிப்பாக உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவம் ஆகியவை சிறப்பாக அமைவது நன்று. ஒருவர் தனக்கான உயர் கல்வியில் சிறப்புற பயின்று தேர்ச்சி பெறுவாரா அல்லது பாதிப்படைவாரா என்பதை கோட்சாரமும் திசா-புக்திகளும் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டும்.   

பொதுவாக அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக சுக்கிரன் அமைகிறார் எனினும் Biology எனும் உயிரியலுக்கு காரக கிரகங்களாக ஜீவ கிரகங்கள் புதனும் குருவும் அமைகின்றன. அடிப்படை உயிரியல் கல்வியை புதனும் மேம்பட்ட உயிரியல் கல்வியை குருவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உயிரியல் பிரிவின் மேம்பட்ட Micro Biology எனும் நுண்ணியிரியலிலுக்கு காரக கிரகம் குருவாகும். குருவோடு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ளும் போது அது இயந்திரங்களைக் கொண்டு கையாளும் technology எனும் நுட்பவியலாகிறது. குருவோடு ராகு-கேதுக்கள் தொடர்பாகும்போது அது நவீன தொழில்நுட்பமாக (Advanced Technology) மாற்றமடைகிறது.  

கீழே ஒரு 1999 ல் பிறந்த ஒரு மாணவியின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் விருச்சிகம்  மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவமான கடகத்தையும் குரு பார்க்கவில்லை. ஆனால் அதன் அதிபதிகளான செவ்வாயையும் சந்திரனையும் பார்க்கிறார். இந்த ஜாதகி முதுகலை உயிரி தொழில் நுட்பவியல் (Msc-Bio Technology) பட்டம் பெற்றவர். ஜாதகிக்கு  இக்குறிப்பிட்ட கல்வியை படிக்கும் காலத்தில் நடப்பில் இருந்தது 5 ஆம் பாவத்தில் இருந்த சுக்கிர திசையாகும். சுக்கிரனும் ராகுவும் வித்யா ஸ்தானமான 4 ல் ஆட்சி பெற்று சூரியனோடு சேர்க்கை பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்துள்ள புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் நட்சத்திர சாரம் கொடுத்த புதன் குரு சாரம் (புனர்பூசம்) பெற்றதே இந்த ஜாதகி உயிரி தொழில்நுட்பம் படிக்க காரணமாக அமைந்துள்ளது. இவரது கல்வியில் technology என்ற பெயர் அமையக் காரணம் ராகுவே ஆவார். திசா நாதன் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு கல்வி போன்ற உயிரற்ற காரணிகளை தடுக்க மாட்டார். எனவே ஜாதகியின் கல்விக்கு அவர் உதவினார் என்றே சொல்ல வேண்டும். சுரப்பி காரகன் சுக்கிரனோடு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு ஜாதகிக்கு உடல் ரீதியாக சில சிரமங்களை கொடுத்துள்ளதை மறுக்க முடியாது. 9 ஆமதிபதியை  (செவ்வாய்) குரு பார்த்தது ஜாதகி இரட்டை பட்டம் பெற காரணமாக அமைகிறது.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயின்று கொண்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் தனக்கு நுண்ணுயிரியியல் (Micro Biology) கிடைக்குமா என கேட்கும் மாணவிக்கான ஜாதகம் கீழே.


சிம்ம லக்ன ஜாதகம் வித்யா ஸ்தானமான நான்காம் பாவத்தில் புதனும் சூரியனும் புத்த-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளனர். பால்ய கல்வியை குறிக்கும் 2 ஆம் பாவத்தில் குரு, 4 ஆம் பாவம் புத-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளது. உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் தனித்த ராகு அந்த ராசியாதிபதி செவ்வாயைப் போன்றே செயல்படுவார் எனலாம். சந்திரனை குரு பார்ப்பது சிறப்பு எனலாம். எனினும் 8 ல் மறைந்த சந்திரனை நோக்கி ராகு வருவது சிறப்பல்ல. ஜாதகிக்கு தற்போது கேது திசை நடப்பில் உள்ளது. ஜாதகி கல்லூரி செல்லும் காலத்தில் கேது திசையில் புதன் புக்தி நடப்பில் இருக்கும். இந்நிலையில் இந்த மாணவிக்கு கல்லூரியில் நுண்ணுயிரியியல் பயில வாய்ப்பு கிடைக்குமா என காண்போம்.

ஜாதகத்தில் கேது செவ்வாயை கடந்திருப்பது சிறப்பான அமைப்பே.  நுண்ணுயிரியலின் காரக கிரகமான குரு, இந்த லக்னத்திற்கு 5 மற்றும் 8 ஆம் பாவாதிபதியாகிறார். எனவே 5 ஆமதிபதி எனும் நிலையில் உயர் கல்வியை தரும்போது 8 ஆமதிபதி எனும் நிலையில் அதை தடை செய்ய அமைப்புள்ளது. குரு 8 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் ஹஸ்தம் பெற்றுள்ளார் எனவே உயர் கல்வியில் நிச்சயம் தடைகளும் விரையங்களும் ஏற்படும். கல்லூரிக் காலத்தில் புதன் புக்தியில் ஜாதகி இருப்பார். புதன் ஆத்ம (அதிக பாகை பெற்ற கிரகம்) காரகனாக உள்ளார். அது சிறப்பு என்றாலும் புதன் 9 க்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துவதும் எண்ணிய பாடப்பிரிவை அடைவதில் தடைகள் ஏற்படும். 3 ஆமிட கேது 2 ஆமிடத்தில் விரயாதிபதி சந்திரன்  சாரம் பெற்ற குருவை நோக்கி வருகிறார். திசா நாதன் கேது கோட்சாரத்தில் தற்போது 4 ஆம் பாவத்தில் விருட்சிகத்தில் நிற்பது கல்வியை பாதிக்கும் அமைப்பாகும். இந்த பாதிப்பு இந்த ஜாதகிக்கு மட்டுமல்ல தற்போதைய கொரோனா காலத்தில் அனைத்து மாணவர்களுக்குமான அமைப்பாகும். கோட்சார கேது 3 ஆம் பாவத்திற்கு செல்கையில் ஜாதகியின் கல்விச் சூழலில் நல்ல வகையான மாறுதல் ஏற்படும் என்றாலும் உயர்கல்விக் காலத்தில் ஏழரை சனியில் பயிலும் இந்த ஜாதகத்தில் ஜாதகி குறிப்பிட்ட வகை பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில் எளிதாக கிடைக்காமல் அதற்காக கணிசமான பொருளாதாரத்தை செலவு செய்துதான் பெற வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 2 May 2021

வட்டித்தொழிலில் வளர்ச்சி உண்டா?

ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின் அதிபதி ஆவது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் குரு தனது மூலத்திரிகோண வீடான தனுசுவிற்கு மறைவதே ஒரு வகையில் பொருளாதார சிரமங்களை குறிக்கும். அப்படி குரு தனுவிற்கு 6, 8, 12 ல் மறைந்தால், லக்னத்திற்கு மறையாமல் இருப்பது நன்மை. இரண்டு விதங்களிலும் குரு சாதகமாக அமையாவிடில் அந்த ஜாதகர் பொருளாதார வகையில் பாதிக்கப்படுவார். குறிப்பாக லக்னத்தை குரு பார்ப்பது பொருளாதார வகையில் மட்டுமல்ல ஏனைய அனைத்து  வகையிலும் ஒரு மேம்பட்ட நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவமும் அதன் எதிர்பாவத்தை சார்ந்தே இயங்குகிறது. உதாரணமாக கணவன்-மனைவி, வியாபாரி-வாடிக்கையாளர், முதலாளி-பணியாள். குருதான் கால புருஷனுக்கு விரைய பாவம் மீனத்தின் அதிபதியும் ஆகிறார். செலவிற்கு பணம் இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் மீனத்தின் எதிர்பாவம் கன்னி கால புருஷ தத்துவப்படி கடன் பாவம் எனப்படுகிறது. ஒருவர் உழைக்காமல் பொருளீட்டுவதை உபய ராசிகள் நான்கும் குறிப்பிடும். உபய ராசிகளுக்கு அதிபதிகள் குருவும் புதனும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் நாம் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபட ஜாதக ரீதியான அமைப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் கடனை குறிக்கும் பாவம் 6 என்றால், கடனை வசூலிப்பது 5 ஆம் பாவமாகும். எனவே கடன்னை வசூலிப்பதை 5 ஆம் பாவமும் அதையே தொழிலாக செய்ய 5 மற்றும் 1௦ ஆம் பாவங்களும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகரான ஆண் வங்கிகளுக்கு கடன் வசூல் செய்து தரும் நிறுவனத்தை (Loan collection agency) நடத்தி வருபவர்.  சந்திரனும் 5 ஆம் பாவமும் ஒருவரது எண்ணங்களையும் ஆசைகளையும் குறிப்பிடும். அது 1௦ ஆம் பாவ தொடர்பு பெறுவது எண்ணத்தையே தொழிலாக்குவதை குறிப்பிடுகிறது. ஜோதிடத்தில் கேது கடனை நேரடியாக குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். கேது லக்னத்திற்கு 2 ல் அமைந்துள்ளது கடனை முன்னிட்டு வருமானம் பெறுவதை குறிக்கிறது. தடைகளுக்குரிய கேது தன பாவமான 2 ல் அமைவது இல்லறம், உறவுகள் வகைக்கு சிறப்பல்ல. ஆனால் கடன் என்ற தனது காரகம் செயல்படுவதால் பொருளாதார வகையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். பொதுவாகவே ராகு-கேதுக்கள் உயிர் காரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமளவு பொருட்காரகத்திற்கு பாதிப்பை தரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்துப்பொருளீட்ட ஜீவன காரகன் சனி ,இரட்டைப்படை பாவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும். இந்த ஜாதகத்தில் கடன் வசூல் செய்வதை குறிக்கும் ஒற்றைப்படை பாவம் 5 ல் சனி அமைந்திருப்பது ஜாதகர் செய்யும் தொழிலுக்கு உகந்த ஒரு அம்சமாகும். லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 3 ல், தனுசுவிற்கு 6 அமைந்தாலும் அவர் வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய) நிலையில் உள்ளதால் தனுசு ராசியின் மீது குருவின் அறைப்பங்கு பார்வை விழுகிறது.

ஜாதகத்தில் 8 ஆமிடம் என்பது 7 க்கு 2 ஆக அமைவதால் அது அடுத்தவர் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்து 2 ஆம் இடத்தை பார்வை செய்வதால் அடுத்தவர்கள் தனம் ஜாதகரிடம் அதிகம் புழங்கும் எனலாம். ஜாதகருக்கு 8 ல் வட்டி காரகன் ராகுவின் சுவாதி-1 ல் மறைந்த 2 ஆமதிபதி செவ்வாய் திசை துவங்கியவுடன் கடன் வசூல் செய்யும் நிறுவத்தை துவங்கி இன்று பல வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து கடனை வசூல் செய்து தருகிறார். அதற்கான தனது  தரகுத்தொகையை பெற்றுக்கொள்கிறார். பல வங்கிகள் இவரது சேவையை நாடிப்பெறுகின்றன. இவரது கடன் வசூல் நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தன ஸ்தானமான 2 ஆமிடத்தை சூரியன், புதன், சனி ஆகியவை இணைந்து பார்வையிடுவது வங்கிகளுக்கு கடன் கடன் வசூல் செய்து தருவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் 2 ஆம் பாவத்தோடு தொடர்பாவது கடனுக்கான வட்டியை குறிக்கிறது. பொதுவாக தனுசி ராசி அதுவும் மூல நட்சத்திரத்தில் சந்திரன் அமைவது இரக்கமற்ற முறையில் வட்டி வாங்குவதை குறிப்பிடும். ஜாதகர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  


இவரும் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளார். தொடர்பு ஸ்தானமான 7 ஆமிட குரு, கடனை வசூல் செய்யும் 5 ஆம் அதிபதி புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் இவர் இந்த வேலையில் உள்ளார். 5 ஆமதி புதனும் 1௦ ஆமதிபதி சனியும் இணைந்து 1௦ ஆம் பாவத்தில் நிற்பதால் இவர் இத்துறையில் உள்ளார். 5 ஆமதிபதி புதனும் 6 ஆமதிபதி சுக்கிரனும் 1௦ ஆம் பாவத்தில் இணைந்து நிற்பது, கடன் கொடுத்து வசூல் செய்வதையே தொழிலாக செய்யும் நிதி நிறுவனத்தில் பணி புரிவதை குறிக்கிறது. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும் என்றேன். சனி இந்த ஜாதகத்தில் 1௦  ல் நிற்பதால் இவர் மற்றொருவரிடம் வேலை செய்கிறார். தனது மூலத்திரிக்கோண வீட்டில் நிற்கும் சனியின் திசை துவங்கினால் ஜாதகர் சுய தொழிலில் இறங்குவார்.   சூரியன் 11 ல் நின்று 5 ஆம் பாவத்தை பார்ப்பது இவரது முதலாளி இவர் மீது மிகுந்த மதிப்பைக்கொண்டிருப்பதை காட்டுகிறது. குரு புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகத்தில் புதனுக்கும் குருவிற்கும் நட்சத்திரப்பரிவர்த்தனை ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி உபய ராசி அதிபதிகளான குரு-புதன் தொடர்பு கடன் மற்றும் கடன் வசூல் செய்யும் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. 8 ஆமதிபதி குரு லக்னத்தை பார்ப்பது ஜாதகரிடம் அடுத்தவர் பணம் வருவதை குறிக்கிறது. 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.