Saturday 27 February 2021

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

 

கிரகப்பெயச்சிகள் நமது கர்மங்களை எப்போது நாம் அனுபவிக்கவிருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன. கிரகப்பெயர்ச்சிகளில் மனித வாழ்வை ஆளும் முக்கிய கிரகங்களான குரு மற்றும் சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியமானவை. சனி இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறையும் குரு வருடத்திற்கு ஒரு முறையும் பெயர்ச்சியாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.  ராகு-கேதுக்களின் பெயர்ச்சிகள் குரு மற்றும் சனிப்பெயர்ச்சிகளைவிட முக்கியத்துவம் குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. எப்படியாயினும் இவை குறிப்பிட்ட ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் அவர் அறியும் வண்ணமோ அறியா வண்ணமோ மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது. நாளிதழ்களில் பொதுவாக குறிப்பிடப்படும் கிரகபெயர்ச்சி ராசி பலன்களை விட தனி ஒருவருக்கான ஜாதகங்களை தேவைப்படின் தங்களது குடும்பத்திற்கான ஜாதகங்களை ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்வது  குறிப்பிட்ட கிரக பெயர்ச்சிகளால் நாம் எதை எதிர்கொள்கிறோம் என்பதறிந்து நம்மை தயார் படுத்திக்கொள்ள உதவும். இப்பதிவில்  ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயவிருக்கிறோம்.


2015 ல் பிறந்த மேற்கண்ட சிறுவனின் ஜாதகத்தில் ஜனன காலத்தில் ரிஷபத்தில் உச்சமான சந்திரனின் மீது, கோட்சாரத்தில் ராகு கடந்த 202௦ செப்டம்பரில் வந்து உச்சமாகி அமர்கிறார்.  கார்த்திகை-2 ஆம் பாதத்தில் பிறந்த இச்சிறுவனுக்கு தற்போது சந்திர திசையில் ராகு புக்தி இந்த 2021 ஆம் ஆண்டு இறுதிவரை நடப்பில் உள்ளது. ராகு கேதுக்கள் ஒரு ஜனன கால கிரகத்தை கோட்சாரத்தில் கடந்து செல்லும்போது தங்களது திசை, புக்தி, அந்தரங்ககள் அப்போது நடந்தால் அவை ஜாதகருக்கு நிச்சயம் வாழ்வில் மாற்றங்களை வழங்கும். மேலும் அவை செல்லும் நட்சத்திராதிபதியின் இதர நட்சத்திரங்களில் ஏதேனும் கிரகங்கள் அமைந்திருந்தாலும் அக்கிரகங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும். இவை கோட்சாரத்தில் தரும் மாற்றங்கள் ஒருவரது ஜாதக அமைப்பைப்பொறுத்து நன்மையாகவோ அல்லது தீமையாகவோ அமையும். இந்த சிறுவனுக்கு 6 வயதுதான் ஆகிறது எனவே தற்போதைய கோட்சார ராகு தரும் தாக்கத்தை சிறுவனால் பெரிய அளவில் உணர வாய்ப்பில்லை. ஆனால் கோட்சார ராகு தாயாரை குறிக்கும் சந்திரனின் மீது சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணி-4ல் தற்போது சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். இதனால் சிறுவனுக்குப்பதில் கோட்சார ராகு தரும் பாதிப்புகளை தாயார் ஏற்றுக்கொள்ள  வாய்ப்புண்டு.  

இப்போது சிறுவனின் தாயாரின் ஜாதகத்தை பார்ப்போம்.


இந்தப்பெண்மணி 1986 ல் பிறந்தவர். தற்போது இவருக்கு ராகு திசையின் சந்திர புக்திதான் நடக்கிறது. ராகு இவரது ஜாதகத்தில் எந்த கிரகத்தின் மீதும் கோட்சாரத்தில் செல்லவில்லை. இதனால் இந்தப்பெண்மணி மகனின் ஜாதகத்தில் தெரிந்தது போல மகனது சந்திரனின் மீது கோட்சார ராகு செல்வதன் பாதிப்பை உணரமாட்டார். இந்த ஜாதகிக்கு ராகுவால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் கோட்சார கேது இவரது ஜனன கால சனி மீதும் செவ்வாய் மீதும் செல்கிறது. தடைகளை குறிக்கும் கேது ஜனன கால சனி மீது செல்வதால் ஜாதகிக்கு தற்போது வேலை இல்லை. திறமை இருந்தும் தற்போதைய சூழலில் தன்னால் செயல்பட இயலவில்லையே என வருந்துகிறார். இதன் பாதிப்பு ஜாதகிக்கு குறைவே. ஆனால் கோட்சார கேது ஜனன கால செவ்வாய் மீதும்  செல்வதால் இந்த ஜாதகியின் கணவருக்கோ அல்லது சகோதரருக்கோ சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஜாதகியின் ஜாதகத்தில் இது தெரிந்தால் நிச்சயம் மகனின் ஜாதகத்திலும் தந்தைக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது தெரிய வேண்டும். மகனின் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் கோட்சாரத்தில் தந்தைக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என மீண்டும் ஒரு முறை ஆராய்வோம்.

சிறுவனின் ஜாதகத்தில் நாம் கவனிக்கத்தவறிய ஒரு விஷயம் ஒன்று உண்டு. அது தந்தையை குறிக்கும் சூரியன் மகரத்தில் திருவோணம்-2 ல் உள்ளது. தாயை குறிக்கும் ரிஷபத்தில் கார்த்திகை-2 ல் நின்று சூரியனும் சந்திரனும் நட்சத்திரப்பரிவர்தனை பெற்றுள்ளது. இதனால் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் கோட்சாரத்தில் இடம் மாறி செயல்படும். இதனடிப்படையில் சந்திரனின் இடத்திற்கு வரும் சூரியன் கோட்சார ராகுவோடு தொடர்பு பெறுகிறார். இதனால் சிறுவனுக்கு அல்லது சிறுவனின் தாய்க்கு கோட்சார ராகு தரும்  சிரமங்களை அவர்களுக்கு பதிலாக தந்தை ஏற்றுக்கொள்கிறார். எனவே தாயின் ஜாதகப்படி கணவனுக்கு சிரமங்கள் ஏற்படும் என்பது உறுதியாகிறது. இப்போது இவற்றை தந்தையின் ஜாதகம் காட்டுகிறதா என காண்போம். கீழே தந்தையின் ஜாதகம்.


1986 ல் பிறந்த ஜாதகர். இவரது ஜனன கால லக்னாதிபதி புதன் மற்றும் சூரியன் மீது கோட்சார ராகு நிற்கிறது. இது இந்த ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படுவதை தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார கேது ஜனன கால வக்கிர சனி மீது நிற்கிறது. ஜனன காலத்தில் வக்கிரமடைந்த கிரகங்கள் கோட்சார நேர்கதி கிரகங்களோடு இணைந்து செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி கேதுவினால் ஜீவன காரகன் சனி பாதிப்படையாது. ஜனன புதன், சூரியன் மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகுதான் பாதிப்பை தர வேண்டும். ஜாதகருக்கு ராகுவால் ஏற்படும் பாதிப்பை திசா-புக்திகள் அனுமதிக்கின்றனவா என காண்போம். ஜாதகருக்கு கேது திசையில் புதன் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கிறது. ஜனன கால புதனை கோட்சாரத்தில் ராகு கடந்தாலும் பாதிப்பின் தீவிரம் குறையுமே தவிர பாதிப்பு இல்லாமல் இராது. கோட்சார ராகு ஜனன கால புதனை கடந்து சூரியனை நெருங்கிக்கொண்டுள்ளார். சூரியன் தந்தை, மாமனாரையும் கால புருஷனுக்கு வயிறு மற்றும் முதுகை குறிக்கும் சிம்மத்தின் அதிபதி என்பதால் இந்த வகைகளில்தான் ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்பட வேண்டும். தந்தையை குறிக்கும் லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் சூரியன் மீது கோட்சார ராகு செல்வதால் இவரது தந்தைக்கு கடும் கண்ட காலமாகும். மேலும் சூரியன் கால புருஷனின் ரோகாதிபதியும் லக்னாதிபதியுமான புதனோடு இணைந்து உள்ள நிலையில் கோட்சாரத்தில் இவைகளின் மீது ராகு செல்கையில் ஜாதகருக்கும் பாதிப்புகள் ஏற்பட விதியுண்டு. ஜாதகருக்கு ஏற்கனவே முது வலி உள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து  வருகிறார். கோட்சார ராகு சூரியனை நெருங்கிக்கொண்டுள்ளது. இந்தக்காலத்தில் இவர் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

கீழே ஒரு இளைஞனின் ஜாதகம்.


1997 ல் பிறந்த இளைஞனின் ஜாதகம். இது. இவர் தற்போது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். இரண்டாம் இடத்திற்கு கோட்சார ராகு-கேதுக்கள் வரும் சூழலில் திசா-புக்தி அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி நடக்கிறது. ஜோதிடத்தில் 9 ஆமிடம் நீண்ட தொலைவு பயணங்களையும் 12 ஆமிடம் வெளிநாட்டு பயணங்களையும் குறிப்பிடும். இந்த இளைஞனுக்கு சனி திசையில் ராகு புக்தி தற்போது நடக்கிறது. ஜனன கால சனி கால புருஷனுக்கு 12 ல் நிற்க ராகு லக்னத்திற்கு 12 ல் நின்று புத்தி நடத்த இவர் தற்போது வெளிநாடு செல்கிறார். இவர் கல்விக்காகவே வெளிநாடு செல்கிறார் என்பதை ஜனன காலத்தில் கல்வியை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனியோடு பரிவர்த்தனை ஆகி நிற்கும் குருவும் சனியும் கோட்சாரத்தில் 4 ஆம் பாவத்தில் தற்போது இணைந்திருப்பது சுட்டிக்காட்டுகிறது.

மகனின் இந்த சூழல் இதர குடும்ப உறுப்பினர்களில் ஜாதகங்களிலும் எதிரொலிக்கிறதா என காண்போம்.

இளைஞனின் தந்தையின் ஜாதகம்.


லக்னத்திற்கு 5 ஆவது பாவம் முதல் குழந்தையையும், சூரியனும் முதல் மகனையும் குறிப்பவை. முன் பார்த்த இளைஞன் ஜாதகரின் முதல் மகனாவார். தனுசு லக்னத்திற்கு 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் ராகுவோடு இணைவு பெற்று ரிஷபத்தில் நிற்பதும் முதல் மகனை குறிக்கும் சூரியன் கோட்சாரத்தில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் நிற்பதும் ஜாதகரின் முதல் மகன் வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது. ஜாதகருக்கு சுக்கிர திசை புதன் புக்தி தற்போது நடப்பில் உள்ளது. இவை இரண்டும் முதல் மகனை குறிக்கும் 5 ஆம் பாவத்திற்கு விரையத்தில் நின்று திசை நடத்துகிறது. 5 க்கு விரைய பாவமான 4 ஆம் பாவம் செயல்படுவதால் 5 ஆம் பாவ உறவான மகன் விடுபட்டுச்செல்கிறார். மேலும் திசா-புக்தி கிரகங்கள் கல்வி பாவமான 4 ஆம் பாவத்தில் ஜல ராசியான  மீன ராசியில் நிற்பது மகன் கல்விக்காக கடல் கடந்து வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது.

இப்போது இளைஞனின் தாயார் ஜாதகத்தில் மகன் வெளிநாடு செல்வது சுட்டிக்காட்டப்படுகிறதா என காண்போம்.


இதுவும் தனுசு லக்ன ஜாதகம் என்பதால் முதல் மகனை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் கோட்சார ராகுவின் மீது செல்வதும் முதல் மகனை குறிக்கும் சூரியன் கோட்சாரத்தில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் செல்வதும் மகன் வெளிநாடு செல்வதை குறிக்கிறது. ஜாதகிக்கு நடக்கும் திசா நாதன் ராகு முதல் மகனை குறிக்கும் சூரியனின் உத்திராடம்-2 நின்று திசை நடத்துகிறது. புக்தி நாதன் சனி 5 ஆம் பாவாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம்-1 ல் நின்று புக்தி நடத்தும் வேளையில் சனி  மீது கோட்சார ராகு செல்வதும், புத்திரகாரகன் குரு கோட்சாரத்தில் ஜனன கால ராகுவின் மீது கோட்சார சனியோடு இணைந்து செல்வதும் மகன் கல்விக்காக வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது.

கிரகங்கள் மாற்றங்களை தந்துகொண்டே இருக்கின்றன. உணர்வதற்கு மனமிருந்தால் மாற்றங்களை எதிர்கொள்வது எளிதாகும். அதற்கு ஜோதிடம் உறுதுணை புரிகிறது.  

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Wednesday 17 February 2021

குறை தீர்க்க வரும் தெய்வம்!

 

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை.

தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு விலங்குகளின் மீதுள்ள பயத்தால் குரூர விலங்குகளையும், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றையும் வணங்கியிருக்கிறான். இன்றைய நமது தெய்வங்களின் காலடியில் சிங்கங்களும், புலிகளும், யானைகளும், பாம்புகளும் இருப்பதன்  காரணம் இதுதான். பண்டைய மனிதர்கள் தனித்தனி கூட்டங்களாக வசித்தபோது எதிரிக்கூட்டத்தினரால் பாதிக்கப்பட்டபோது, தாங்கள் வணங்கும் தெய்வம் எதிரிகளிடம் இருந்து தன்னை காக்கும் என்று நினைத்ததன் விளைவே நமது தெய்வங்களின் காலடியில் அரக்கர்கள் என்ற எதிரிகளின் தலைகள் இருப்பது. பிறகு தங்களுக்கு நிழல் தரும், கனி தரும், ஆரோக்கியம் தரும், பால் தரும் பசுக்களையும், மரங்களையும், செடிகளையும், நதிகளையும், சூரிய, சந்திரர்களையும் வணங்கி இருக்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்த மகா பெரிய பிரபஞ்ச சக்தியை நமது மனதின் எண்ண அலைகளின் மூலம் தொடர்புகொள்ள ஒரு வடிவம் சாமான்ய மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வடிவம் தேவைப்படுபவர்களுக்கு அது தெய்வம் தேவைப்படாதவர்களுக்கு அது இயற்கை என்பதே உண்மை. நமது எண்ண அலைகளை ஒரு வடிவத்தின் மீது குவிக்கும்போது இயற்கையுடன் மனிதன் அந்த வடிவத்தின் மூலம் தொடர்புகொள்கிறான் என்பதை சில அபூர்வமான அறிவியல் ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.    

குல தெய்வம்.

குல தெய்வம் என்பது பயத்தின் பொருட்டு உருவான கதைகளின் அடிப்படையில் மேலே கூறப்பட்டவை போன்று உருவானதல்ல. குல தெய்வம் என்பது தனித்துவமானது.  குல தெய்வம் என்பது தங்கள் கூட்டத்தின் பொருட்டு எதிரிகளோடு நடந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களையும், தனது குலத்திற்கு, தனது குடும்பத்தின் நலனின் பொருட்டு தனது உயிரை, வாழ்வை தியாகம் செய்தவர்களே அந்த குலத்தின் (கூட்டத்தின்) தெய்வங்கள் என அழைக்கப்படுகிறது. குல தெய்வத்தோடு அந்த குலம் காக்க உயிர்நீத்த வீரர்களையும் காவல் தெய்வங்கள்  என்று வணங்குவது நடைமுறை. இந்த தெய்வங்கள் நமது வாழ்வோடு ஒன்றியவை. எனவே இவைகளின் ஆன்மாவிற்கு அந்த குலத்தை காக்கும் சக்தி உண்டு. முறையாக வழிவழியாக ஏற்படுத்தப்பட்ட வழிபாடுகளின் அடிப்படையில் நன்றி செலுத்தும் உணர்வோடு குல தெய்வத்தை வணங்கினால்  ஒருவரின் துயர் தீர்க்க விரைந்து வரும் தெய்வம் குல தெய்வமாகும். ஒருவரின் துயர் தீர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் தெய்வம் குல தெய்வமாகும்.

தமிழர்களின் தெய்வம் முருகன்.

நமது தமிழ் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவான தெய்வமாக முருகன் வழிபடப்படுகிறார். ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் பண்டைய காலாசாரத்தின் விடிவெள்ளியாக விளங்கிய தன்னிகரற்ற தலைவனே முருகன் ஆவார். மலைகளிலும் காடுகளிலும் தமிழர்கள் குழுக்களாக வசித்த பண்டைய காலத்தில் தோன்றியவராக முருகன் இருந்திருக்க வேண்டும். அப்போது தமிழ் பேசும் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரே  குடையின்கீழ் கொண்டுவர முயன்றவராக முருகன் இருந்திருக்கலாம். அதனால்தான் முருகன் குறிஞ்சி நிலத்தின் (மலையும் மலை சார்ந்த இடம்) கடவுளாக கூறப்படுகிறார். முருகன் தமிழர்களின் கலாச்சார தெய்வமாகும். குல தெய்வம் தெரியாத தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தை நாடி பிழைக்க வரும் குல தெய்வம் தெரியாத ஏனையயோரும் முருகனை குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடமாறு கூறுவதன் அடிப்படை இதுதான். மனினாக  பிறந்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த முருகனை பிற்பாடு சிவனின் மகனாக உருவகம் செய்துள்ளனர். முருகனின் வரலாற்றை நமது பண்பாட்டுக்கூறுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு ஒப்பற்ற தமிழர்களின் தெய்வ வரலாறாக தொகுத்து எழுதும் முயற்சியில் தமிழறிஞர்கள்  சிலர் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன். அரசியல் தொடர்பற்று அது நடந்தால் அது தமிழ்  சமூகத்திற்கு நல்லது. காரணம் இன்று அரசியலுக்காக தங்கள் மதத்தையும், இனத்தையும் வழிபாடுகளையும் இழிவுபடுத்திக்கொண்டு பிற மதத்திற்கு வால் பிடிப்பவர்களே தங்களை தமிழக தலைவர்களாக காட்டிக்கொள்கின்றனர். முருகன் மனிதனாக பிறந்து வாழ்ந்து மறைந்தவர். தனது வாழ்வின் சொகுசுக்காக முருகனை சந்திர குப்த விக்ரமாதித்தனின் மகனாக அவதானித்து காளிதாசர் “குமார சம்பவம்” எழுதிச்சென்ற நகைச்சுவைகளெல்லாம் வரலாற்றில் இருக்கிறது. 

கால மாற்றத்தில் குல தெய்வ வழிபாடுகள்.

இன்றைய நவீன யுகத்தில் தங்கள் வாழிடத்தை விட்டு சம்பாத்தியத்திற்காக வெளி தேசம் செல்வோர் தங்களது மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவைகளையும் இழந்துவிட்டே செல்கின்றனர். முந்தைய காலங்களில் இலங்கை, பர்மா, மலேசிய, சிங்கப்பூர் சென்றோர் அங்கெல்லாம் நமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை பரப்பினர். ஆனால் இன்று பொருளாதாரத்தின் பொருட்டு உலக மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கலந்து செயல்படும் சூழ்நிலையில் நமது இனத்தின் அடையாளம் மாறிவருகிறது. உலகின் முதன்மையான கலாச்சார தொட்டில்களில் ஒன்று தமிழ்நாடு எனும் நிலையில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காது பேணுவதற்கு பொறுப்பு உள்ளது. நமது வழிபாட்டுமுறைகளை குறிப்பாக தங்கள் துயர்தீர்க்கும் முதன்மை தெய்வமாகிய குல தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பது அவசியம்.

இன்று தங்கள் குல தெய்வம் தெரியாது ஜோதிடம் பார்க்க வருபவர்களை காணும்போது பரிதாபமாகவுள்ளது. இத்தகையவர்களுக்கு உதவ ஜோதிடம் கைகொடுக்கிறது. குலதெய்வத்தை அறிய ஜாதகத்தைவிட பிரசன்னமே மிகச்சிறந்தது என்பது எனது கருத்து.

ஜாதகம் மூலம் குல தெய்வம் அறிதல்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். 9 ஆம் பாவமும் கிரகங்களில் சனியும் (குருவும் கூட)  குல தெய்வ அனுக்கிரகத்தை கூறுகிறது. மேற்கண்ட ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆம் பாவம் பெண் ராசியாகி அதில் சூரியன் அமைந்துள்ளார். இதனால் இவரது குல தெய்வம் ஒரு பெண் தெய்வமாகும். சூரியன் 5 ல் அமைந்துள்ளதால் குல தெய்வம் ஆளுமை மிக்க தெய்வமாகும். உச்ச ராகு சூரியனின் நட்சத்திரம் கார்த்திகை-4 ல் நின்றதால் 5 ஆம் பாவத்தோடு தொடர்பாகிறார். மேலும் ராகு 5 ஆம் பாவத்தை கட்டுப்படுத்தும் பாவத்தில் உள்ளார். இதனால் ராகுவின் ஆதிக்கம் 5 ஆமிடத்தில் அதிகம். ராகு ஒரு மூர்க்க கிரகமாகும். ராகு செவ்வாயின் பார்வையை பெறும்போது அதற்கு மூர்க்க குணம் அதிகமாகும். இந்த ஜாதகரின் குல தெய்வம் பழனி  அருகிலுள்ள வீரமாத்தி அம்மன் என்பதாகும். குல தெய்வத்தில் உச்ச ராகுவின் ரௌத்ர குணம் தெரிகிறது. 5 ல் அமைந்த கிரகமே குல தெய்வத்தின் நிலையை சொல்லும் என்றாலும் ராகு சூரியன் சாரம் பெற்றதால் சூரியன் இங்கே தனது ஆதிக்கத்தை ராகுவிடம் இழந்துவிடுகிறார். குல தெய்வ பாக்கியத்தை குறிக்கும் 9 ஆமிடத்தில் வீரத்தை குறிக்கும் செவ்வாயின் பார்வையை வாங்கும் ராகு, குலதெய்வத்தின் பெயரிலேயே செவ்வாயின் தன்மையை ஏற்றுக்கொள்கிறார். ராகு தனித்திருப்பதால் அது பார்க்கும், சேரும் கிரகங்களின் நிலையையே வெளிக்காட்ட வேண்டும் என்ற விதி  இங்கு செயல்படுகிறது.

சூரியன் இரட்டைத்தன்மையை குறிக்கும் புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். எனவே குல தெய்வ வழிபாட்டில் மற்றொரு அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த ஜாதகர் பாரம்பரையில் குழந்தை பிறந்ததும் குழந்தையை சூரியனுக்கு முன் வைத்து வணங்கி ஆசி பெற வேண்டும் என்ற மற்றொரு வழிபாட்டு முறையையும் காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஜாதகம் இதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

பிரசன்னம் மூலம் குல தெய்வம்  அறிதல்.

குல தெய்வம் என்னவென்று உறுதியாக தெரியாமல் இரண்டு தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். இதுபற்றி விபரமறிந்த எங்கள் முன்னோர்கள் வழியில் தெளிவான நபர்கள் யாரும் இல்லை. எனவே வழிகாட்டுங்கள் என்று எங்கள் ஊர் நண்பர் வந்தார். ஜாதகம் இல்லாத சூழலில் அவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.



ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ அனுக்கிரகத்தை உதயத்தில் இருக்கும் கிரகம் சொல்லிவிடும். ஆனால் குல தெய்வத்தை கூறுமிடம் 5 ஆமிடமும் 9 ஆமிடமும் ஆகும். ஒன்பதாமிடம் ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ நிலையை தெளிவாகக்காட்டும். இந்த பிரசன்னத்தில் உதயத்தில் உள்ள உதயாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக உள்ளார். எனவே ஜாதகருக்கு குல தெய்வ பாக்கியம் சிறப்பாக உள்ளது. ஆரூடம் இரட்டைக்கிரகம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் இருவித  தெய்வங்களை  வணங்கி வருவதாக ஜாதகர் கூறியது சரியாகும். ஒன்பதாம் பாவத்தில் பாம்பு, குருவின் சாரம் புனர்பூசம்-2 பெற்று  பாம்பின் சாரநாதன் குரு உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் நீசமாகியுள்ளது ஜாதகருக்கு குலதெய்வத்தின் பொருட்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ஆம் பாவத்தை ஜாம மற்றும் ஜாதக புதன் ஆகிய இரண்டும் பார்ப்பதால் குல தெய்வ வழிபாடு தொடர்வதையும் அதில் இருவித வழிபாடுகளாக இருப்பதையும் அறிய முடிகிறது. புதனுடன் பாதகாதிபதி சூரியன் உள்ளதாலும் உதயத்தை உச்சம் பெற்ற பாதகாதிபதி சூரியன் பார்ப்பதும் குழப்பத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இந்த பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களான சூரியன் மற்றும் குரு ஆகியவை ஜாதகரின் சந்தேக மன  நிலையை தெளிவாக காட்டுகிறது.

இந்த பிரசன்னத்திற்கு நான் கூறிய பதிலானது.

9 ஆம் பாவத்தில் உள்ள பாம்பு வடிவமே குல தெய்வத்தின் அம்சமாகும். 9 ஆமிடத்தை இரு புதனும் பார்வையிடுவதால் பெருமாளையும் வழிபடுகிறீர்கள். எனினும் 9 ல் உள்ள பாம்புதான் குல தெய்வம் எனக்காட்டுகிறது என்று கூறினேன்.

நண்பர் தாராபுரம் அருகிலுள்ள பாம்பலத்தம்மனை தங்கள் பங்காளிகளுடன் இன்றும் வழிபட்டு வருவதாகவும் தற்போது உள்ள ஊரின் (கரூர் அருகிலுள்ள வெள்ளியணை)  பிரதான தெய்வமாகிய பெருமாளையும் வழிபட்டு வருவதாகவும் கூறினார்.

நண்பர் பாம்பலத்தம்மன் என்று கூறியதும் அடியேன் சிலிர்த்துப்போனேன். பிரசன்னம் துல்லியமாக பதிலை கூறிவிட்டது. சொந்த ஊரை விட்டு விலகி பிழைக்க வந்த ஊரைத்தான் 3 ஆமிடம் குறிக்கிறது. எனவே ஒரு ஊரை நம்பி வாழ வந்தவர்கள் அந்த ஊர் தெய்வத்தை முக்கியமாக வழிபட வேண்டும் என்ற வகையில் பெருமாளை வழிபடுவதை மூன்றாமிடம் கூறுகிறது. எனவே உங்களுக்கு இரு தெய்வ அனுக்கிரகமும் உண்டு. இரு வழிபாடுகளையும் தொடர்வது நன்மையே எனினும்  பாம்பலத்தம்மனே குல தெய்வம் என்பதை உங்கள் தலைமுறையினருக்கு சொல்லி வழிபட்டுவர சொல்லுங்கள் அதன் நன்மை அளப்பரியது என்று கூறி அனுப்பிவைத்தேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday 12 February 2021

CURRENCY TRADING

 



பங்குச்சந்தையைப்பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியிருந்தாலும் அதில் உள்ள பல வகைப்பாடுகளை ஆராய்ந்து எழுதுமாறு அவற்றில் ஈடுபட்டிருக்கும் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பங்கு வணிகத்தின் ஒரு பிரிவான பண மதிப்பில் முதலீடு செய்யும் Currency Trading  பற்றி இப்பதிவில் நாம் ஆராயவிருக்கிறோம்.

பொதுவாக பங்கு வணிகத்திற்கு அனைத்து கிரகங்களுமே ஒரு வகையில் தொடர்பு பெறுகின்றன.

1)பங்கு வணிகத்தில் உறுதியாக, தெளிவாக, பதட்டமும் பயமும் இன்றி முடிவுகளை எடுக்க சூரியன் சிறப்பாக அமைந்திருப்பது முக்கியம். சூரியன் நீசமானவர்கள் துணிச்சலான முடிவெடுக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்கவே மாட்டார்கள். எனவே லாபமும் மிக சொற்பமே..

2)ஜாதகத்தில் சந்திரன் வலுவாக அமைந்தவர்கள் விரைந்து சிறந்த முடிவுகளை  எடுக்கிறார்கள் என்ற வகையில் சந்திரன் சிறப்பாக, குறிப்பாக வளர்பிறை சந்திரனாக அமைவது நல்லது. தினசரி வணிகத்தில் சில சமயம் வினாடிகளில் எடுக்கும் முடிவுகள் லாப நஷ்டங்களை தீர்மானிக்கின்றன. எனவே ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி வணிகத்தில் ஈடுபடாமல் நீண்ட கால வணிகத்தில் ஈடுபடுவது சிறந்தது.

3)வேகமும் கோபமும் கொண்ட செவ்வாய் ஜாதகத்தில் திட்டமிடலுக்குரிய புதனின் தொடர்பற்று அமைவது நன்று. செவ்வாய் சேர்க்கையால் புதனின் திட்டமிடல் அங்கு சிதறிவிடும். ஆனால் மிதுன லக்னத்திற்கு புதனும் செவ்வாயும் மேஷத்தில் அமையலாம். ஆனால் புதன் செவ்வாயைவிட அதிக பாகையில் நிற்க வேண்டும். இத்தகையோர் விரைவாகவும் சாதுர்யத்துடனும் செயல்படுகிரார்கள். ஆனால் இவர்களுக்கு திருமண வாழ்வு இல்லை என்பது வருத்தமான செய்தி. இதே மிதுன லக்னத்திற்கு புதன் மேஷத்திலும் செவ்வாய் மிதுனத்திலும் பரிவர்தனையாகியிருக்க சிறப்பு. இவர்களின் திருமண வாழ்வு கடுமையாக பாதிப்பதில்லை. பொதுவாக மிதுன லக்னம் தவிர ஏனையோருக்கு குரு செவ்வாய் இணைவு நன்று. இதிலும் குருவே செவ்வாய்க்கு முன்னால் நிற்க வேண்டும். சனி தொடர்பு செவ்வாய்க்கு எப்போதும் கூடாது..   

4)வணிகம் என்றாலே அது திட்டமிட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்ற வகையில் சரியான அணுகுமுறைக்கு புதன் காரக கிரகமாகிறது. ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு வணிகத்தை விட்டு விலகி இருப்பது நன்று.

5)குரு பெரிய அளவிலான முதலீட்டிற்கு காரக கிரகமாகிறது. குரு பாதிக்கப்பட்டவர்கள் சிறிய அளவில் வணிகத்தில் இதர கிரக சிறப்புகளைப்பொருத்து ஈடுபடலாம். குரு பாதகாதிபதியாக இல்லாமல் அமைவது நன்று. மேஷ லக்னத்திற்கு சனி தொடர்பு குருவிற்கு கூடாது.

6)சிறிய வகை பங்கு வணிகத்திற்கு சுக்கிரன் காரக கிரகமாகிறது. சிறிய அளவிலான  தினசரி வணிகத்திற்கு சுக்கிரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். புதனும் சுக்கிரனும் பங்கு வணிகத்தின் காரக கிரகங்களாகின்றன. இவ்விரு கிரகங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு வணிகத்தின் பக்கம் தலை வைத்துப்படுக்காமல் இருப்பது நல்லது.

7)சனி லக்னத்தில் கெடாமல், வக்கிரமின்றி அமைவது நிதானமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். மெதுவாகச் சுற்றும் சனி உச்சம் பெற்றவர்களும் புனர்பூ (சனி+சந்திரன் இணைவு) தோஷம் கொண்டவர்களும் விரைந்து முடிவெடுக்கும் தினசரி வணிகத்தில் ஈடுபட லாபமில்லை.  ஆனால் நீண்டகால முதலீட்டிற்கு சனி நன்று. அதாவது எதிர்காலத்தில் லாபம் தரும் சிறந்த துறை பங்குகளை வாங்கி வைத்து பிறகு லாபம் பார்க்க மட்டுமே சனி சிறப்பு. எந்த அமைப்புகள் சாதகமாக இருந்தாலும் கோட்சாரத்தில் ஏழரை சனி, அர்தாஷ்டம (4 ஆமிட சனி) சனி நடப்பவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடக்கூடாது. மூன்றாமிடச் சனி ஓரளவு நன்மை தருகிறது.

8)மிக பிரம்மண்ட வகை அதாவது பல கோடிகளை முதலீடு செய்ய ராகு காரக கிரகமாகிறது. ராகு-கேதுக்கள் இருவரும் 2 & 8 பாவங்களோடு சுபர் தொடர்பில், பார்வையில் இருப்பது பங்கு வணிகத்திற்கு மிகச்சிறப்பு. ஆனால் இது குடும்ப வகையில் பாதகத்தையும் சேர்த்தே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளின் 2 & 8  பாவ தொடர்பில் பங்குச்சந்தையில் நன்கு சம்பாதிப்பவர்களும் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வாழ்பவர்களாகவும் அல்லது சொந்த இனம், குலம் கலாசாரம் விட்டு வேறு கலப்பில் மணம் புரிந்தவர்களாகவும் அல்லது மண வாழ்வில் தோல்வியை சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்  

9)கேது பங்கு வணிகத்திற்கு எதிரான கிரகமாகும். திடீர் லாபங்களை கொடுத்து பிறகு பிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுகிறது என்றாலே அங்கே கேது செயல்படுகிறார் எனப்பொருள். ராகு சாதகமற்று ஜாதகத்தில் அமைந்திருந்தாலும் இதே விதி செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க.  கேது சிறப்பாக லாப ஸ்தானத்தில் அமைத்திருப்பின் கடன் பத்திரங்களில் முதலீடு, கணினி, மென்பொருள் துறை பங்குகள் லாபம் தரும்.  

அதிசயமாக 8 ஆமிடமும் அதன் பாவாதிபதியும் தன லாப பாவங்களோடு, அவற்றின் அதிபதிகளோடு தொடர்பு கொள்ளும் ஜாதக அமைப்பு உள்ளோர் பங்கு வணிகத்தில் மிகச்சிறப்பாக சம்பாதிக்கிறார்கள். எனவே பங்கு வணிகத்தை பொருத்தவரை  எட்டாமிடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எட்டாமிடம் என்பது மறைந்திருக்கும் தனம் என்பதை கவனத்தில் கொள்க.

கீழே ஒரு ஆணி ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகம். பணத்தை நேரடியாக குறிக்கும் கிரகம் புதனாகும். லக்னப்புள்ளி பூரம்-2 ல் அமைந்து சுக்கிரன் 8 ஆமிடத்தில் உச்சமாகியுள்ளது. இதனால் இவர் பங்கு வணிகத்தில் ஈடுபடுவார் என்பது இவரது லக்ன புள்ளியே சுட்டிக்காட்டுகிறது. சிம்ம லக்னாதிபதி சூரியனுக்கு சுக்கிரன் பகை கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுக்கிரன் சிம்மத்திற்கு நன்மை செய்ய மாட்டார். ஆனால் 8 ல் மறைந்து உச்சமான சுக்கிரன் நன்மை செய்தே ஆக வேண்டும். சுக்கிர திசையில் ஜாதகர் பாங்கு வணிகத்தில் ஈடுபட நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். ஆனால் இந்த ஜாதகத்தில்  1௦ ஆமதிபதி சுக்கிரன் 8 ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆகியுள்ளது. இதனால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். சுக்கிரன் பரிவர்த்தனை ஆகாமல் இருந்தால் மட்டுமே இவர் பங்கு வணிகத்தில் நல்ல லாபம் பார்ப்பார். ஏனெனில் பரிவர்த்தனை என்பது ஜாதகருக்கு உயர்வையும் தாழ்வையும் இணைத்தே வழங்கும்.

இந்த ஜாதகர் பணத்தின் மதிப்பில் முதலீடு செய்யும் Currency Trading செய்கிறார்.  Currency Trading க்கு சூரியன் காரக கிரகமாகிறார். ஏனெனில் பணத்தின் மதிப்பை கட்டுப்படுத்துவது அரசாங்கமே. சூரியன் லக்னத்தை பார்ப்பதால் இவருக்கு Currency Trading செய்ய எண்ணம் வந்துள்ளது. உச்ச கிரகமும் Currency Trading செய்ய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தகத்தில் Currency Trading என்பது பங்கு வணிகத்தில் ஒரு உயர்வான நிலை என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச கிரகமும் சூரியனைப்போல உயர்வையே சிந்தித்து Currency Trading ல் ஈடுபட வைக்கும். ஆனால் சூரியனது துணிவு ஆளுமை ஆகியவை இதர உச்ச கிரகங்களிடம் இருக்காது. ஜாதகர் உச்ச கிரகமான செவ்வாய் திசையில்தான் Currency Trading செய்தார். செவ்வாய் லக்ன பாதகாதிபதி என்பதோடு அவர் பாதக ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து நிற்கும் விரையாதிபதி சந்திரனின் (திருவோணம்-3) நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே இவருக்கு பாதகம் விரையம் என்ற வகையில் வரும். செவ்வாய் திசையின் குரு புக்தியில்தான் ஜாதகர் Currency Trading ல் ஈடுபட்டார். காரணம் குரு Currency Trading ன் காரக கிரகமான சூரியனின் (கார்த்திகை-2)  நட்சத்திரத்தில் நிற்பதுதான்.

திசா நாதன் செவ்வாய் புதனோடு இணைவு பெற்றதால் இவர் நண்பரின் வற்புறுத்தலால்தான் இதில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்களை குறிக்கும் 7 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் விரையத்தில் நின்று நண்பர்களை குறிக்கும் புதனையும் திசா நாதன் செவ்வாயையும் பார்க்கிறது. இதனால் இந்த ஜாதகர் நண்பர்களால் விரையத்தை சந்திப்பார் என்பது தெளிவாக உள்ளது. ஜாதகர் செவ்வாய் திசையில் குரு புக்தியில் குரு மற்றும் சனியின் அந்தரத்தில், Currency Trading ன் காரக கிரகம் சூரியன் கோட்சாரத்தில் ஜனன ராகு மற்றும் கோட்சார கேதுவின் மேல் சென்றபோது அதாவது கடந்த ஐப்பசி, கார்த்திகை  மாதங்களில் (November& December) Currency Trading ல் ஈடுபட்டார். திசா புக்தி கிரகங்கள் ஒருவர் ஈடுபடும் செயலை தெளிவாக குறிப்பிடுகிறது என்றால் கோட்சார கிரகங்கள் அதன் தாக்கத்தை தெளிவாக உணர்த்துகின்றன.  Currency Trading ன் காரக கிரகம் சூரியன் கோட்சாரத்தில் ராகு-கேதுவோடு தொடர்பானதால் இந்த இரு மாதங்களில் ஜாதகர் லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை இழந்தார். புதன் செவ்வாய்க்கு முன்னால்தான் நிற்கிறது. திட்டமிடலை மீறி இதர அம்சங்கள் ஜாதகரை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பங்கு வணிகத்தில் மட்டுமல்ல அவர் ஈடுபடும் தொழில் எதுவாயினும் அந்த காரக கிரகத்தின் நிலையை ஜாதகத்திலும் கோட்சாரத்திலும் அறிந்து செயல்படுவது எப்போதும் நன்மை பயக்கும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday 2 February 2021

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

 


சொந்த வீடு என்பது அனைவரது பெரும் கனவான ஒன்று. சிலர் வீட்டை கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டிவிட்டு அதில் வசிக்க இயலவில்லையே என்று புலம்புவர். பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்தமாதிரி அமையவில்லை என புலம்புபவர்கள் சிலர். இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தங்கள் எண்ணப்படி மேலும் வசதி கூடிய வீட்டை அமைத்துக்கொள்பவர் சிலர். இப்படி வீடு வகை சிரமங்களை இன்று பெரும்பாலோரிடையே காணமுடிகிறது. நகர்ப்புறத்தில் இன்று வீடு என்பது பல லட்சங்கள் பிடிக்கும் ஒரு சொத்தாகும். கணிசமான தொகையில் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளையும் மீறி கடன்பெற்று கட்டிவிட்டு அதில் வசிக்க இயலாமை விரக்தியைத்தரும். இதனை தவிர்க்க சரியான திட்டமிடல் வீடு கட்டுவதற்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவு கட்டிய தங்கள்  சொந்த வீட்டில் வாழ்ந்து மகிழ முடியுமா என தகுந்த ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் அவசியம். இது தொடர்பானதே இன்றைய பதிவு.

முதலாவாதாக ஒரு ஆணின் ஜாதகம்.                    

ஜாதகர் 1955 ல் பிறந்தவர். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சூரியன் லக்னத்திலேயே உள்ளார். சூரியனுக்கு அஷ்டமாதித்ய தோஷம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் வலுவடையும் உத்திராயணத்தில் பிறந்து லக்னத்தில் சூரியன் உள்ளதால் ஜாதகருக்கு தந்தை வழி பாக்கியங்கள் உண்டு. லக்னாதிபதி சனி உச்சமாகி குரு பார்வை பெறுகிறார். வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்தை பூர்வீகத்தை குறிக்கும் சனி பார்த்ததால் ஜாதகருக்கு தந்தை வழி பூர்வீக வீடு கிடைத்தது. ஸ்திர லக்னமாகி உச்ச சனி லக்ன கேந்திரம் பெற்றதால் ஜாதகர் ஜனனம் முதல் இன்று வரை தனது பூர்வீக வீட்டிலேயே வசிக்கிறார். நான்காம் அதிபதி செவ்வாய் 3ல் குரு வீட்டில் பாவர் தொடர்பற்ற நிலையில் உள்ளதால் இவருக்கு வீடு தொடர்பான பாதிப்புகள் எப்போதும் இல்லை. பாக்ய ஸ்தானமான கன்னியில் அமைந்த சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் இவருக்கு செவ்வாய் வகை பாக்கியங்கள் உண்டு. செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெற்ற சனி 4 ஆம் வீட்டை உச்ச கதியில் பார்த்ததால் பழைய வீடு அவ்வளவுதான்.

இரண்டாவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.                

இந்தப்பெண்மணிக்கு 4 ஆம் அதிபதி குரு, தனது 4 ஆம் பாவத்திற்கு 8 ஆம் பாவமான கடகத்தில் பூமி காரகன் செவ்வாயுடன் இணைந்து உச்சமாகியுள்ளார். உச்ச குருவுடனான இணைவால் செவ்வாய் நீசபங்கம் பெறுகிறார். இப்படி 4 ஆமதிபதியும் பூமிகாரனும் லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் அமையும் சிறப்பான அமைப்பால் ஜாதகி தனது உழைப்பால் வீடு கட்டினார். ஜாதகத்தில் சந்திரனும் குருவும் பரிவர்தனையாகியுள்ளனர். கன்னி லக்ன பாதகாதிபதி குரு சந்திரனுடன் பரிவர்தனைக்குப்பிறகு பாதக ஸ்தானம் மீனம் சென்று அங்குள்ள வக்கிர சனியோடு இணைகிறார். இதனால் ஜாதகிக்கு சனி மற்றும் குருவால் பாதகம் ஏற்பட வேண்டும். இந்த வகையில் பணிக்கு செல்லும் ஜாதகி பணி மாறுதல்களின் பொருட்டு சொந்த இருப்பிடத்தில் வாசிக்க இயலாமல் மன  உலைச்சலுக்கு ஆளாகியுள்ளார். (சனி-வேலை, சந்திரன்-இட மாறுதல்கள், குரு-பதவி).  இவருக்கு வீடு பாக்கியம் உள்ளது. ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியம் இல்லை.  பாக்கியாதிபதி சுக்கிரன் நீசமாகியுள்ளது இதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

கீழே மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.                    

ஜாதகத்தில் தனது நான்காம் பாவத்தை அதன் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். இதனால் இவருக்கு வீடு அமைந்தது. ஆனால் ராகு 2 ஆம் இடத்தில் நின்று லக்னத்தில் உள்ள செவ்வாயை நோக்கி வருகிறது. இதனால் செவ்வாயின் காரகங்கள் பாதிப்படையும். ராகு இரண்டாமிடத்தில் நிற்பது ஜாதகரின் வருமான வகைகள் வெளிநாடு, வெளியூர் ஆகியவற்றில் அமையும் என்பதை குறிக்கிறது. ஜாதகர் தனது வாழ்வின் பெரும் பகுதியை வெளிநாட்டில் செலவழித்தவர். தற்போது தாய்நாடு திரும்பினாலும் வெளிமாநிலத்தில் குடும்ப சூழலின் பொருட்டு வாடகைக்கு வசிக்கிறார். சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். சிம்மம் உயர்ந்த வீடுகளை குறிக்கும். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் வீடு மூன்று தளங்களைக்கொண்டது. செவ்வாய் சிம்ம லக்னத்திற்கு 4 ஆமதிபதியும், பாக்ய & பாதகாதிபதியுமாகி ராகுவால் முதலில் தீண்டப்படுவதால் ஜாதகருக்கு கட்டிய வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் குறைவு.   

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.                   

ஜாதகர் மெத்தப்படித்தவர். நிரம்ப சம்பாதிப்பவர். கும்ப லக்னத்திற்கு 4 ல் திக்பலத்தில் அமைந்த சுக்கிரனுடன் லக்னாதிபதி சனி நட்பு பெற்று இணைந்து வக்கிர குரு பார்வை பெறுகிறார்.  உடன் புதனும் சூரியனும் உள்ளதால் ஜாதகரின் வீடு புதன், சுக்கிரன் குறிக்கும் கலை நயம் மிக்கது. சூரியன் குறிக்கும் அடுக்குமாடியில் ஒரு தளத்தில் வசிக்கிறார். எந்த கிரகமும் சூரியனால் அஸ்தங்கமடையவில்லை. பூமி, அசையா சொத்துக்களுக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றாலும், 12 ல் மறைந்து ராகுவுடன் ஒரே பாகையில் நின்று ராகுவால் அஸ்தங்கப்படுத்தப்படுகிறார். இதனால் செவ்வாயை ராகு கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு போதிய தன வசதி இருந்தாலும் வீடு கட்ட விருப்பமின்றி இருக்கிறார். பாக்யாதிபதி சுக்கிரன் திக்பலம் பெற்றதால் ஜாதகருக்கு வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் உண்டு. செவ்வாயின் நிலையால் வீடு கட்டும் பாக்கியம் இல்லை.  

பெரும் பொருளாதரத்தை எடுத்துக்கொள்ளும் வீடு அனைவருக்கும் அவசியமும் தேவ்வையுமான ஒன்று என்றாலும் அதை அனுபவிக்கும் சூழல் உள்ளதா என்று தெரிந்துகொண்டு வீட்டின் யோக திசை, பணிச்சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றை ஆராய்ந்து வீடு கட்டிக்கொள்வதே சிறப்பு.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501