Friday 30 October 2020

பாவகப்புள்ளி ஆச்சரியங்கள்

 

ஜாதகத்தில் ஒரு பாவக பலனை அல்லது ஒரு கிரகம் செயல்படுவதை நிர்ணயிக்க பல்வேறு யுக்திகள் ஜோதிட அறிஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொரு முறையும் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டிருக்கும். ஜாதக பலன்களை நிர்ணயிப்பதற்கு பல்வேறு முறைகளில் ஆராய்ந்து அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக  தெரியும் சூழலில் ஜோதிடர் திகைத்து நிற்பதும் உண்டு. பெரும்பாலான ஜோதிடர்கள் கையாள்வது திசா புக்தி நிலையோடு கோட்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து பலன் சொல்வதுதான். ஜாதகம் காட்டும் சூழலில் ஜாதகர் தோற்றம் அமைப்பு, வேலை போன்றவைகளை உறுதி செய்துகொண்டு ஜோதிடர்கள் பலன் கூறுவர். இதிலும் ஒரு சிக்கல் உண்டு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருக்காவிட்டாலும் ஜனன நேரம் தவறுதலாக குறிக்கப்பட்டிருந்தாலும் பலன் கூற முடியாத சூழலில் நாடி முறைகளை அனுசரித்து பலன் கூறுவது ஒரு முறை.



இப்பதிவில் நாம் பல்வேறு ஜாதக அலசல் யுக்திகளில் ஒன்றான ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி அமைந்த நட்சத்திர நாதனைக்கொண்டு அந்த பாவகத்தின் பலனை அலசும் முறை பற்றி காண இருக்கிறோம். K.P முறையில் உப நட்சத்திரத்தை கொண்டு பாவகப் புள்ளியை வைத்து பலன் நிர்ணயிப்பவர்கள் “சார ஜோதிடம்” என்று இம்முறையை அழைக்கிறார்கள்.  நாம் இங்கு K.P உப நட்சத்திர முறையை தவிர்த்து பாரம்பரிய முறையில் அதாவது பாவகப்புள்ளி விழுந்த நட்சத்திர நாதனைகொண்டு  பலன் நிர்ணயிக்கும் முறையை காண்போம்.



மேற்கண்ட ஜாதகர் ஒரு ஆண். இவருக்கு லக்னம் மகரத்தில் 12.21 பாகையில் திருவோணம் முதல் பாதத்தில் அமைந்துள்ளத்து. இவரது ஜீவன கர்மா என்னவென்று பார்ப்போம். இவருக்கு 10 ஆவது பாவகம் துலாமின் தொடக்கப்புள்ளி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைகிறது. ராகு கடக ராசியில் அமைந்துள்ளார். ஜாதகர் கடல் கடந்த தொடர்பில் ஜீவனம் செய்கிறார் என்பதை இது குறிக்கிறது. ராகு புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் ஜாதகர் புதன் குறிக்கும் தகவல் தொழில் நுட்பவியலாளராக பணிபுரிவதை இது குறிப்பிடும். சனியின் நிலையை கொண்டும் இதை அனுமானிக்கலாம் என்றாலும் இம்முறையால் சனியை தொடர்புபடுத்தி உறுதி செய்துகொள்ளலாம்.

இரண்டாவதாக கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


லக்னம் 23 பாகையில் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. எனவே இரண்டாவது பாவகப்புள்ளி சிம்மத்தில் 23 பாகை லக்ன பாதகாதிபதியான சுக்கிரனின் பூரத்தில்  அமையும். 2 ஆமிடத்தில் பிரிவினையை குறிப்பிடும் கேது அமைந்து விரையாதிபதி  புதனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. பாதகாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் சேர்ந்து விரையத்தில் அமைந்து 2 ஆமதிபதி சூரியன் 2க்கு விரையத்தில்  லக்னத்தில் விரையாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதும் 2 ஆமிடம் கடுமையாக இந்த ஜாதகிக்கு பாதிக்கும் எனவும் அது கர்ம வினை என்பதையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. எப்போது குடும்ப பாவம் பாதிக்கும் என்பதை திசா புக்திகளை கொண்டு அறியவேண்டும். இந்த ஜாதகிக்கு 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் சாரம் பெற்ற சனி திசையில் புதன் புக்தியில் திருமணம் நடந்து கேது புக்தியில் விவாகரத்தானது.

கீழே மற்றொரு நபரின் ஜாதகம்.


லக்னப்புள்ளி துலாத்தில் 26 பாகையில் அமைகிறது. ஜாதகருக்கு புதன் திசை நடக்கிறது. திசை பாவகப்புள்ளியை சார்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை இந்த ஜாதகம் கொண்டு ஆராய்வோம். ஜாதகருக்கு புதன் நிற்கும் 10 ஆவது பாவக துவக்கப்புள்ளி புதனின் சொந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் அமைகிறது. ஜாதகருக்கு திசை நடத்தும் கிரகமும் புதன் என்பதால் புதன் தனது திசா காலம் முழுவதும் தனது, காரக, ஆதிபத்திய பலன்களை தான் நிற்கும் 10 ஆவது பாவம் சார்ந்து அழுத்தம் திருத்தமாக வழங்கும் எனலாம். திசா நாதன் புதன்  சூரியனோடு இணைந்திருப்பதால் உயர்ந்த நிலையிலான பணி. உச்ச குருவோடு சேர்ந்திருப்பதால் நிறைந்த தனம் புழங்குமிடத்திலும் கடக ராசி என்பதால் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய  நிறுவனத்திலும் பணி. உச்ச குரு குறிப்பிடும் ஆயுள் காப்பீட்டுத்துறையில் உயர்நிலை வரவு செலவு தணிக்கையாளராக  ஜாதகர் பணிபுரிகிறார். 

புதன் கால புருஷனுக்கு 6 ஆமிடாதிபதி மற்றும் லக்னத்துக்கு 9 ஆமாதிபதி என்பதாலும் ஜாதகர் தந்தை வழி பூர்வீக பூமி வகையில் விவகாரங்களை சந்தித்தார். 9 ஆம் பாவாதிபதியான புதன் லக்ன பாதகாதிபதி சூரியன் குருவோடு இணைந்து திசை நடத்வதால் ஜாதகரின் தந்தைக்கு உயிர் கொல்லி நோயான புற்றுநோய்  வந்து மரணத்தை தந்தது. (9 ஆமதிபதி + குரு + சூரியன் இணைவு தந்தைக்கு புற்றுநோயை தரும்). கடக ராசியில் புதன் நின்று பாதகாதிபதி, ரோகாதிபதி தொடர்பு கொண்டு திசை நடத்துவதால் தந்தை வழி பாரம்பரிய ரத்த தொடர்புடைய வியாதியான சர்க்கரை வியாதிக்கு ஜாதகர் ஆட்பட்டார். 

புதன் இளைய சகோதரியையும் சுக்கிரன் மூத்த சகோதரியையும் குறிக்கும். புதன் பாதகாதிபதி சூரியன் மற்றும் சகோதர-சத்ரு ஸ்தானாதிபதி குருவோடு தொடர்புகொண்டு திசை நடந்துவதாலும் சகோதர சகோதரிகள் வகையில் ஜாதகருக்கு அதிருப்தி உண்டு. முதல் மகளை குறிப்பிடும் சுக்கிரன் பாதகம் பெற்று அமர்ந்ததாலும்  முதல் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 6 அமர்ந்து புதன் திசை நடத்துவதாலும் ஜாதகரின் முதன் பெண் மகளோடு ஜாதகருக்கு சரியான புரிதல் இல்லை.

ஒரு ஜோதிடர் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்ய எவ்வளவு முறைகளை பயன்படுதினாலும் எந்த அளவு அவற்றில் தனது திறமையை, சுய ஆய்வை, அனுபவத்தை பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவரை வெற்றிகரமான ஜோதிராக உருவெடுக்கிறார் என்பதை மறத்தல்  கூடாது.

இது ஒரு மீள்பதிவு.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


அதுவரை 

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Friday 16 October 2020

கடவுளைத்தேடி!

 


வாழ்க்கை தன்னகத்தே பல்வேறு புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் போக்கில் சென்று அந்தப்புதிர்களை விடுவிக்க முயல்பவர்கள் சிலர். வாழ்வின் புதிர்களுக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் பெரும்பாலோனோர். அப்படி வாழ்வின் புதிர்களுக்கு விடைகாண முயன்ற ஒரு இளைஞன் தன்னால் ஈர்க்கப்பட்ட குரு தனக்கு வழிகாட்டுவார் என எண்ணுகிறான். அவர் மூலம் படைத்தவனை உணர அவனால் முடிந்ததா? அவனது ஞானத்தேடல்களுக்கு விடை கிடைத்ததா? அல்லது வாழ்வில் புதிர்களுக்குள் அவன் சிக்கிக்கொண்டுவிட்டானா? என இப்பதிவில் ஆராய்வோம்.

ஜாதகர் 1976 ல் பிறந்தவர். மேஷ லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ஞானகாரகன் கேது, மோட்ச ஸ்தானாதிபதி (12 ஆமதிபதி) குருவுடன் இணைந்துள்ளது. இவரது பிறப்பின் நோக்கத்தை, ஞானத்தேடல்களில் ஜாதகர் ஈடுபடுவார் என்பதை குறிப்பிடுகிறது. மனோ காரகன் சந்திரன் மறை பொருளை குறிக்கும் 8 ஆமிடத்தில் நீசமாகி, சந்திரனுக்கு 1௦ல், சந்திரனுக்கு திக்பலம் தரும் வகையில் அமைந்த செவ்வாயால் நீச பங்கமும் ஆகியுள்ளது. இதனால் இவரது மனம் மறைப்பொருள் சார்ந்த வகையில் சிந்திக்கும் என்பது புலனாகிறது. தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் மற்றொரு மறைபொருள் சார்ந்த மோட்ச காரகன் ராகு நிற்பதால் இவரது தொடர்புகள் ஞானம், மோட்சம், இறைவழி சார்ந்ததாகவே அமையும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ள கேது,குருவிற்கு திரிகோணத்தில் சூரியனின் வீட்டில் அமைந்து கேதுவோடு சேர்ந்த குருவின் பார்வையை பெறுவதால் ஒரு உயர்ந்த இடத்தில் (மடத்தில்)  ஞானத்தை தேடும் குருவின் தொடர்பு ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை .குறிப்பிடுகிறது. ராசியிலும் நவாம்சத்திலும் 7 ஆமிடம் பாவிகளால் கெட்டு, குருவின் பார்வையை பெறுகிறது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்வு சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஜாதகர் 1௦ ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க விருப்பமின்றி ஞானத்தேடலில் சனி திசையில் லக்னத்தில் நின்ற குருவின் புக்தியில் வீட்டை விட்டு கிளம்பி தன்னை ஈர்த்த குருவின் ஆசிரமத்தை அடைந்தார். குருவை தரிசித்த ஜாதகர். அங்கேயே தங்கிவிட எண்ணினார். ஆசிரமத்தில் தங்கி பயிற்சி பெற ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அதற்காக ஜாதகர் ஆசிரமம் இருந்த ஊரில் ஒரு குதிரை லாயத்தில் ஓரிரு வருடங்கள் சனி திசை முடியும் வரை வேலை பார்த்தார். ஜாதகரின் விருப்படியான விஷயங்களை ராசியைக்கொண்டே அளவிட வேண்டும். ஜாதகரின் கர்மவழி விஷயங்களை லக்னத்தை கொண்டு அளவிட வேண்டும். இந்த அடிப்படையில் ஜாதகரின் விருப்பத்தை குறிக்கும் ராசிக்கு 5 ஆமதிபதி குரு 6 ல் அமைந்து சனி பார்வை பெற்றதால் ஜாதகர் தனது விருப்பம் நிறைவேற வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை செய்து கிடைத்த பணத்தில் ஜாதகர் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக பயிற்சி பெற்றார். ஜாதகருக்கு புதன் திசை துவங்கி சுய புக்தி முடியும் வரை அது நீடித்தது.

ஜாதகரின் குரு  காமத்தை நுகர்ந்து கடந்து பிறகு ஆன்மீகப்பாதைக்கு திரும்புமாறு போதித்தார். ஏனெனில் காமம் கொண்ட மனம் எப்போதும் தெளிவடையாது. எனவே காமத்தை எதிர்கொண்டு அதை கடந்து வருமாறு தன்னை பின்பற்றுபவர்களுக்கு கூறினார். இதனால் ஜாதகர், தன்னைப்போன்று ஆஸ்ரமத்திற்கு வந்த சக ஆசிரம வாசிகளுடன் காமத்தை நுகர்ந்தார். சுகஸ்தானாதிபதியான சந்திரன் உடலுறவை குறிக்கும் 8 ஆமிடத்தில்  சுகஸ்தானத்தில் அமைந்த சனியின் அனுஷம்-1 ல் அமைந்துள்ளது. சனி திருட்டு, குறை, முறையற்ற விஷயங்களுக்கும், சந்திரன் முறையற்ற உறவிற்கும் காரக கிரகங்களாகும். புதன் காமத்திரிகோணமான மிதுனத்தில் நண்பர்கள் சூரியனோடும் சுக்கிரனோடும் அஸ்தங்கமடையாமால் சிறப்பாக அமைந்துள்ளது. புதன் தனது திசையில் ஜாதகரின் மனம் காமத்தின்பால் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் என்றால் அது மிகையல்ல.சிந்தனை ஸ்தானமான 5 ஆமதிபதி சூரியன், திசாநாதன் புதனோடு இணைந்ததால் ஜாதகரின் மனம் காமத்தில் திளைத்தது.

ஜாதகரின் காம ஸ்தானமான 7 ஆமிடத்தில் ராகு நிற்கிறார். இதனால் 7 ஆமிட தொடர்புகள் வளரும். ஜாதகர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலம் ஒன்றில், ஒரு மகனோடு உள்ள விதவை ஒருவருடன் திருமணமாகாமால் இணைந்து வாழ்கிறார். ராகு விதவையையும் குரு ராகுவை பார்ப்பதால் அவர் குழந்தை உள்ளவராகவும் இருந்தார். 7 ஆமிட ராகு 7 ஆமதிபதி சுக்கிரன் போலவே செயல்படுவார். புகன் திசையில் குருவின் சாரம் புனர்பூஷம்-3 ல் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் அந்த தொடர்பு அமைந்தது. சுக்கிரன் அஸ்தங்கமாகியுள்ளது குறையுள்ள அதாவது விதவையான பெண்மணி என்பதையும், குரு சாரத்தில் அமைந்ததால் அவர் குழந்தையுடனும் இருந்தார் என்பதையும் தெரிவிக்கிறது. குரு திசையில் ஜாதகருக்கு ஏற்பட்ட ஞானத்தேடலை புதன் திசை தனது தன்மையோடு இணைந்து ஜாதகருக்கு புகட்டினார். எனினும் ஞானத்தேடலை ஜாதகர் கைவிடவில்லை. காரணம், புதன் ராசிக்கு 8 ஆமதிபதி. அதே சமயம் புதன் காம திரிகோணாதிபதியாகி காதல் ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்ததால் ஞான அனுபவத்திலும், தன் மீது காதல்கொண்டு தன்னை நாடிவந்த பெண்களால் காம அனுபவத்திலும் ஒன்றுபட்ட சூழல்களால் ஜாதகர் திக்குமுக்காடினார். சில காலங்களுக்குப்பிறகு மீண்டும் பழைய ஆசிரமத்திற்கு திரும்பினார். அதன்பிறகு ஆசிரமத்தில் தவிர்க்க முடியாத முதன்மை நபர்களில் ஒருவரானார். ராஜ கிரகமானா சூரியனோடு திசா நாதன் புதன் சேர்ந்ததால் ஜாதகரின் ஞானத்தேடலில் ஒரு உயர்ந்த தன்மை வெளிப்பட்டது. அதே சமயம் காமமும் ஜாதகரை வழிய வந்து அணைத்துக்கொண்டது.

மோட்சத்திரிகோணமான 4 ஆமிட சனியின் பிற்பகுதியில் ஜாதகரின் மனம் ஞானத்தை நோக்கி கடினத்துடன் திரும்பியது என்றால் புதன் திசை அதை காதலுடன் உயர்த்தியிருந்தது. ஒரு வழியாக ஜாதகருக்கு புதன் திசை முடிந்து ஞான காரகன் கேதுவின் திசை 2012 முற்பகுதியில் துவங்கியது. ஞான காரகனானாலும் காமத்திரிகோணத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-2 ல் நின்ற கேது ஞானத்தோடு காமத்தொடர்புகளையும் ஜாதகருக்கு வழங்கியது கேது திசையில் ஜாதகர் ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாக, தியானப்பயிற்சியாளராக உயர்ந்தார். அதே சமயம் கிறிஸ்தவர்களை குறிக்கும் கேது திசையில் அயல் தேச பெண்மணி ஒருவருடன் ஜாதகர் திருமணம் செய்துகொள்ளாமல் ஓரிரு வருடங்கள் இணைந்து வாழ்ந்தார். கேதுவின் திரிகோணத்தில் காதல் பாவமான 5 ல் லக்னாதிபதி செவ்வாய் அமைந்தது அதற்கு காரணம். பிற்பாடு தன்னை மிகவும் நேசித்து, தன்னை திருமணம் செய்துகொண்டு தனது தேசத்திற்கு வந்துவிடுமாறு மன்றாடிய அப்பெண்ணின் வேண்டுகோளை கனத்த இதயத்துடன் நிராகரிக்கிறார். கேது திசையில் குரு புக்தியில் அது நிகழ்ந்தது. குரு ஜாதகரின் பிறப்பின் நோக்கம் என்ன என்று தெளிவுபடுத்தி அந்த தொடர்பை துண்டிக்க வைக்கிறார். ராகு-கேதுக்களின் இணைவில் அவைகளை மீறி செயல்படக்கூடிய ஒரே கிரகமாக திகழ்வது கிரகங்களிலேயே குரு ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேது திசை முடிந்து ஜாதகர் சுக்கிர திசையில்தான் உள்ளார். சுக்கிரன் காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில்தான் உள்ளார். 5 பாகை இடைவெளியில் சுக்கிரனுக்கு அஸ்தங்கம் பெரிதாக பாதிப்பைத்தராது. சுக்கிர திசையிலும் ஜாதகர் ஆன்மீக மற்றும் காம ரீதியான தொடர்பில்தான் தற்போதும் இருப்பார்.

பொத்திப்பொத்தி வளர்த்த சித்தார்த்தனை புத்தனாக்கியதும், செல்வத்தில் திளைத்த பட்டினத்தாரை திருவோடேந்த வைத்ததும் கிரகங்களின் லீலைகளே. கடவுளைதேடிச்சென்ற நமது ஜாதகரை ஞானத்திலும் காமத்திலும் திளைக்கவைத்துக்கொண்டிருப்பதும் அதே கிரகங்களே. நாம் எதை அடைய வேண்டும், யாரை எப்போது தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் கிரகங்களே. இது புரிந்தால் இறை புரியும், இயற்கை புரியும், ஞானம் சித்திக்கும், மனம் அமைதி பெறும். ஜோதிடம் அதற்கு ஒரு வழிகாட்டி. ஜாதகம் அதற்கொரு சாட்சி பூதம்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501.  

Thursday 8 October 2020

நம்ம முதலாளி நல்ல முதலாளியா?

 


இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு தொழிலை செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது. இன்று தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது ஒரு புறம் இருக்க, வேலைக்குச்சென்றுதான் தனது வாழ்வாதாரத்தை அடையமுடியும் என்ரு இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அரசு வேலை பார்ப்பவர்கள் இதில் தப்பித்துவிடுகின்றன்றனர். அவர்களின்றி அரசு நிர்வாகம் இயங்காது என்பதுதான் காரணம். ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்கும் உதவாத பணியாளர்கள்கூட அங்கீகாரம் பெறுகின்றனர். அதே நிறுவனத்தில் சகல தகுதியோடும் நேர்மையோடும் பணிபுரிந்தாலும் சிலருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஏன் இந்த முரண்பாடு என ஆறாய முற்பட்டதே இப்பதிவுக்கு காரணமாகிறது.  

 

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 

லக்னத்தில் தலைமைப்பண்பை குறிப்பிடும் சூரியன், நண்பன் புதனின் வீட்டில் தனது சிம்ம ராசிக்கு 11 ல் லக்னத்திலேயே  அமைவது மிகச்சிறப்பான அமைப்பாகும். லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதிகளான (9, 1௦ அதிபதிகள்) சனியும் குருவும் இணைந்து தைரிய ஸ்தானத்தில் அமைந்து, தைரிய ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் அமைவதால் ஜாதகர் தொழிலில் துணிச்சலாக முடிவெடுத்து அதை வெற்றிகரமான செயல்படுத்துவார் எனலாம். ராகு 2 ஆமிடத்தில் அமைந்து சனி குருவோடு இணைந்துள்ளதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை. மூன்றில் சனி அமைவது சிறப்பே. அதைவிட மூன்றில் பாதகாதிபதி குரு மறைவது மிகச்சிறப்பு. 6 ஆமிடம் என்பது ஒருவர் பணிபுரிவதையும், 1௦ ஆமிடம் என்பது தொழில் செய்வதையும் குறிக்கும். சூரியனும், 1௦ ஆமதிபதியும் முதலாளியை குறிக்கும் கிரகங்களாகும். ஜாதகர் வளைகுடா நாடு ஒன்றில் ஒரு நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கிறார். 6 ஆமிடமான விருட்சிகத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தின் அதிபதி சூரியனாகி, அவர் லக்னத்தில் அமைவதும், 1௦ ஆமிடமான மீனத்தின் அதிபதி குரு, 1௦ ன் உப ஜெய ஸ்தானத்தில் 1௦ க்கு 6 ல் சிம்மத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் பெற்று அமைவது மிகச்சிறப்பு. பணியை குறிக்கும் 6 ஆமதிபதி செவ்வாய் சதுர்த்த கேந்திரத்தில் சூரியனின் உத்திரம்-2 ல் அமைந்து 1௦ ஆமிடத்தை பார்ப்பது மிகச்சிறப்பு. செவ்வாய்க்கு திக்பலம் தரும் வகையில் செவ்வாயின் சார நாதன் சூரியன் செவ்வாய்க்கு 1௦ ல் அமைந்திருப்பது ஆகியவை செய்தொழிலை பொறுத்தவரை மிகச்சிறப்பு. 

இந்த அமைப்புகளால் இந்த ஜாதகர் இவரது முதலாளியால் மிக விரும்பப்படுகிறார். ஜாதகருக்கு வேலையில் மட்டுமல்ல சொந்த விஷயங்களில் சிரமங்கள் வந்தபோதும் கூட ஓடோடி வந்து உதவுகிறார். முதலாளியை குறிக்கும் 1௦ ஆமதிபதி குரு கேதுவின் மகம்-4 ல் அமைந்துள்ளதால் ஜாதகரின் முதலாளி ஒரு கிறிஸ்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நவாம்சத்தில் 1௦ ஆமதிபதி குரு உச்சமாகியுள்ளது. உச்ச குருவின் மூலத்திரிகோண வீடான தனுசுவில் ஜீவன காரகன் சனி அமைந்துள்ளார். ராசியின் 6 ஆமதிபதி செவ்வாய் நவாம்சத்தில் உச்சமாகியுள்ளார். இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 7 க்கும் ஜீவன ஸ்தானமான 1௦ க்கும் உரிய குரு  திசைதான் நடக்கிறது. கூடவே ஏழரை சனி வேறு. பாதக ஸ்தானமான ஏழாமிடத்தை அதன் அதிபதி குரு பார்ப்பதால் ஜாதகருக்கு குடும்ப வாழ்வில், சம்பாத்தியத்தில் சில இடர்பாடுகள் ஏற்படும். ஆனால் தொழிலில் பெரிய பாதிப்பு இருக்காது. ஜாதகரும் இவரது முதலாளியும் பரஸ்பரம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.  இவர்களிடையே தொழிலில் பிரிக்க முடியாததொரு பந்தம் நிலவுகிறது. ஜாதகருக்கு தொழிலில் சிரமங்கள் ஏற்பட்டாலும் தாங்கிப்பிடிக்க முதலாளி இருக்கிறார் என்ற நம்பிக்கை ஜாதகரிம் எப்போதுமே காணப்படுகிறது. ஜாதக அமைப்பால் ஜாதகரின் குடும்ப வாழ்வில் பல பாதிப்புகள் உண்டு. அதே அமைப்பால் ஜீவனத்தை பொறுத்தவரை சிறப்படைந்துகொண்டிருக்கும் ஜாதகம் இது.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


உண்மையில் மோசமான முதலாளி யாருக்கு அமைவார் என்றால் துலாம் லக்னம், ராசியினருக்குத்தான். அதைத்தவிர ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டோ அல்லது சூரியன் குறைந்த பாகை பெற்று தாரா காரகனாகவோ அமைந்தவருக்குத்தான். துலாத்திற்கு சூரியன் பாதகாதிபதி என்பதால் எப்போதுமே  துலாம் லக்னம், ராசியினருக்கு முதலாளிகளால் பாதிப்பு உண்டு. துலாமிற்கு உச்ச சூரியன் ஜீவன வகையில் சிறப்பை கொடுத்தாலும்கூட பாதகாதிபதி 7 ல் அமைவதால் பாதகத்தை களத்திர வகையில் கொடுத்துவிடும். சூரியன் லக்ன யோகரான சனியின் வலுவான தொடர்பில் அமைந்து, சனியும் சூரியனும்  பாதிக்கப்படாத குரு, சுக்கிரனின் தொடர்பு பெற்றால் மட்டுமே இந்த லக்னத்தாற்கு சூரியனின் அம்சமான அரசு வகையாலோ அல்லது முதலாளி வகையாலோ நன்மை ஏற்படும். நேர்மைக்கு உரியவர்களான இவர்களுக்கு சுக்கிரனும், சனியும் பாதிக்கப்பட்ட அமைப்பில் நேர்மை தவறி, அரசு வேலைக்கு குறுக்கு வழியில் முயற்சி செய்தால் தண்டனை அடைவது உறுதி. இந்த ஜாதகத்தில் லக்னமும் ராசியும் துலாமாகவே அமைந்தது சாதகமான அமைப்பல்ல. ஆனால் பாதகாதிபதி சூரியன் 1௦ ஆமிடத்தில் திக்பலத்தில் உச்ச 6  ஆமதிபதி குருவோடு இணைந்து அமைந்துள்ளார். சூரியனும் குருவும் புதனின் ஆயில்யத்தில் அமைந்துள்ளனர். ஜீவன காரகன் சனி 6 ஆமிடத்தில் உச்ச குருவின் வீட்டில் குரு பார்வையில் அமைந்தது சிறப்பான அமைப்புதான். சனி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்து புதனோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இதனால் 1௦ ஆமிடத்தில் பரிவர்தனைக்குப்பிறகு வந்து அமரும் சனி உட்பட 1௦ ஆமிட கிரகங்கள் அணைத்தும் புதனின் சாரம் பெறுகின்றன. 

இந்த அமைப்பால் ஜாதகர் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் முதன்மை கணக்கராக (Chief Accounts Executive) ஆக பணியாற்றுகிறார். சூரியன் திக்பலம் பெற்றதால் மிகப்பெரிய நிறுவனத்தில் தலைமை கணக்காளர் பதவி. உச்ச குரு தொடர்பானதால் நிதி சார்ந்த துறை. சனி தொடர்பானதால் கடுமையான பணி. பாவத்பாவம் எனும் 1௦ க்கு 1௦ ஆமிடமான 7 ஆமிடத்தில் ராகு நிற்பதால் ஜாதகர் வரவு செலவுகளை தணிக்கை செய்து குறைகளை கண்டுபிடிக்கும் (Vigilance) துறையில் பணியாற்றுகிறார். ஜாதகருக்கு 9, 12 ஆமதிபதி புதனின் திசை நடப்பதால் ஜாதகர் இந்தியா முழுமைக்கும் தணிக்கை செய்ய விமானத்தில் பறந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார். ஜாதகத்தில் முதலாளியை குறிக்கும் 1௦ ஆமதிபதி சந்திரன் துலாம் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டு. சந்திரன் பயண காரகன் என்பதால் அடிக்கடி தொழில் விஷயமாக பயணிக்கிறார். நேர்மைக்கு உரிய துலாம் ராசி ஜாதகரது லக்னம், ராசியாகி அதில் வழக்கு காரகன் கேது இருப்பதால் ஜாதகர் கணக்கு தணிக்கையில் தவறுகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தருகிறார். லக்னத்தில் கண்டிப்புக்கு உரிய செவ்வாயும் அமைந்திருப்பதால் ஜாதகர் தொழிலில் கண்டிப்பு காட்டுகிறார். 

இப்போது சூரியனின் நிலையை அதாவது இவரது முதலாளியின் நிலையை ஆராய்வோம். சூரியன் திக்பலம் பெற்றதால் ஜாதகருக்கு முதலாளி பெரிய பொறுப்பை அவரது தகுதியின் பொருட்டு அளித்துள்ளார். அதே சூரியன் பாதகாதிபதி என்பதால் பாதகத்தையும் சேர்த்தே செய்யவேண்டிய நிலை உள்ளது. ஜாதகர் தனது பணியில் கொலை மிரட்டல்களை, உயிராபத்துகளை சந்தித்துள்ளார். இருந்தும் முதலாளியிடம் ஜாதகரின் தனது பணிக்கு போதிய ஆதரவோ, அங்கீகாரமோ கிடைக்காது. ஜாதகத்தில் சனி – புதனின் சாரப்பரிவர்தனையை தவிர ராகு-கேதுக்களுக்கிடையே மற்றொரு சாரப்பரிவர்தனையும் உள்ளது. இதனால் கேது திசா-புக்தி-அந்தரங்களில் கேதுவின் இடத்தில் ராகுவே செயல்படுவார். ஜாதகருக்கு புதனின் திசையில் சனியின் புக்தியை கடந்துகொண்டுள்ளார். கொரானாவின் பாதிப்பால் ஜாதகரும் வீட்டிலிருந்துதான் பணியாற்றுகிறார். ஜாதகர் புதன் திசையில் சனி புக்தியில் கேது அந்தரத்தை சந்தித்தபோது தனது வேலையில் கடும் பாதிப்பை எதிர்கொண்டார். ஜாதகர் வெளியே சென்று பணிபுரிய முடியாது. அதே சமயம் தனது தனிக்கைப்பொறுப்புகளை நிறைவேற்றியாக வேண்டும் என்ற காட்டாயமானதொரு சூழல். இந்தக்காலகட்டத்தில் ஜாதகர் ஏறக்குறைய 24 மணி நேரமும் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலுக்கு தள்ளப்பட்டார். காரணம் அந்தர நாதன் கேதுவினிடத்தில் நின்று செயல்படும் ராகு, பரிவர்தனைக்குப்பிறகு லக்னத்தில் 1௦ ஆமதிபதி சந்திரனோடும் 7 ஆமதிபதி செவ்வாயோடும் வந்து இணைகிறார். 

ராகு செவ்வாயோடு இணையும்போது செவ்வாயின் போர்க்குணம் அனைத்தையும் தனதாக்கிக்கொள்வார். ஜாதகர் தனது பணி அறிக்கைகளை சபர்ப்பிக்கவேண்டிய உயரதிகாரி இரவு பகல் பாராது ஜாதகரை வேலை வாங்கினார். ஜாதகரின் உடலும் மனமும் இதனால் பாதிக்கப்பட்டன. உயரதிகாரியிடம் ஈவு, இரக்கமற்ற தன்மையே அப்போது வெளிப்பட்டது. ராகு முஸ்லீம்களை குறிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகரின் உயரதிகாரி ஒரு முஸ்லீம். என்னே கிரக லீலைகள். ராகு செவ்வாயை தவிர சந்திரனோடும் இணைகிறார் இதனால் செவ்வாயின் போர்க்குணம் வெளிப்பட்டது. அதே சமயம் சந்திரனின் தாய்மை குணமும் வெளிப்பட வேண்டும் அது வெளிப்பட்டதா எனில் ஆம் வெளிப்பட்டது. வேலையில் குரூரத்தன்மை காட்டிய அதே உயரதிகாரி வேலையை தவிர ஜாதகரின் தனிப்பட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பிற்கு மட்டும் நன்மைகளை தற்போதும் செய்கிறார். இங்கு ராகு எப்படி சூரியனுக்கு ஒப்பாகும் என்றொரு கேள்வி எழும். ராகு ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்திற்கு 1௦ ல் லக்னத்திற்கு 7 ல் அமைந்து சூரியனுக்கும் 1௦ ஆமிடத்திற்கும் திக்பலத்தை தருகிறார். எனவே இயல்பாகவே சூரியன், குரு, சனியை ஒத்த தன்மையோடு செயல்படும் ராகு இங்கு சூரியனின் காரகத்தை தான் எடுத்துச்செயல்படுகிறார். எனவே ராகு முதலாளி மற்றும் உயரதிகாரியாக இங்கு செயல்படுவார்.  

 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 08300124501