Tuesday 24 March 2020

புனர்பூ லீலைகள்.




ஒருவரது ஜாதகத்தில் விரைவாகச்சுழலும் சந்திரனும் மெதுவாகச் சுழலும் சனியும் தொடர்புகொள்ளும்போது புனர்பூ எனும் அமைப்பு செயல்படும்.  இதனால் ஒரு மனிதனின் சிந்தனை வேகமாகவும் செயல்கள் மெதுவாகவும் இருக்கும். சிந்தனையும் செயலும் ஒருங்கிணையாதபோது அங்கே மனிதன் குழம்பி விடுகிறான். அப்போதுதான் தன்னை மீறி ஒரு சக்தி தன்னை ஆட்டுவிக்கிறது என உணர்கிறான். இந்த பக்குவத்தை அடைவதற்கு ஒருவனது சிந்தனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மெதுவாகச் செயல்படும்  சனி பல காலம் எடுத்துக்கொள்கிறார். இந்த அமைப்பை பெற்றவர்கள் காலம் செல்லச் செல்ல சோம்பேறிகளாகிவிடுகின்றனர் என்பது இந்த அமைப்பின் குறைபாடு.  இந்தக்காலத்தில் சனி ஒருவனுக்கு போதிக்கும் பாடங்களே “அனுபவம்” என அழைக்கப்படுகிறது. இந்தப்புனர்பூ அமைப்பு கூட ஜாதக அமைப்பிற்குத்தக்கவாறுதான் செயல்படுகிறது. இதை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகத்தில் சனி லக்னதிலேயே ஆட்சியாக இருக்கிறார். லக்னத்திலேயே சனி இருப்பதால் ஜாதகி உழைக்கும் நபராக இருப்பார். 7 ஆமதிபதி சந்திரன் சனியோடு வந்து இணைந்துள்ளது. இதனால் புனர்பூ தோஷம் செயல்படும். இதனால் சந்திரனின் வேகம் ஜாதகிக்கும் சனியின் சோம்பல் சந்திரனுக்கும் சென்று சேரும். ஜாதகி தன் கணவர் வாழ்வில் முன்னேற எடுக்கும் முயற்சிகள் போதவில்லை. கணவர் தன்னைப்போல் அல்லாமல் சோம்பேறியாக இருக்கிறார் என்று சண்டையிடுகிறார். இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஜாதகி தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இங்கு 7 ஆமதிபதி சந்திரன் சனியோடு சேர்வதால் கணவர் நிதானப் போக்குடையவராகிறார். ஜாதகி போல கணவர் அவசரப்படாமல் ஜாதகியை விட்டுப்பிடிக்க எண்ணி அமைதியாக இருக்கிறார். 7 ஆமதிபதி லக்னத்திற்கு வந்துவிட்டதால் ஜாதகி கணவரை கட்டுப்படுத்த முயல்கிறார். ஆனால் சந்திரனைவிட இங்கு சனி வலுவுடையவராகிறார். கணவர் சனியின் குணம் கொண்டவராதலால் சனி நிதானித்து வெற்றி பெறும். 1 ம் 7 ம் இணைந்துள்ளதால் இங்கு இருவரின் பிரிவு தற்காலிகமானது. இதர கிரக அமைப்புகளும் திசா-புக்திகளும் பாதகமாக இருந்தாலன்றி இவர்கள் பிரியமாட்டார்கள்.  இங்கு கணவரின் நிதானம் இவர்களின் குடும்ப வாழ்க்கையை இழக்காமல் காப்பாற்றும்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.

சிம்ம லக்னத்தில் குரு லக்னதிலேயே திக்பலம் பெற்று அமைந்துள்ளது. குருவின் திக்பலத்தால் ஜாதகர் செயல் வேகம் கொண்டவராகிறார்.  7 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்று 8 ல் நிற்கிறார். விரையாதிபதி சந்திரன் கடகத்தில் சனியின் பூசம்-2 ல் நிற்கிறது. இதனால் இங்கும் புனர்பூ வேலை செய்கிறது. இங்கு புனர்பூ 8  மற்றும்  12 ஆம்  பாவ தொடர்பாவதால் இங்கு ஜாதகர் துணைவரின் செயல்களால் பாதிப்படைவார். ஜாதகரின் செயல்வேகத்திற்கு துணைவர் ஈடுகொடுக்க இயலாது. இந்த ஜாதகர் தன் மனைவி தனக்கு பொருத்தமானவரல்ல என்று கூறி விவாகரத்து கொடுத்துவிட்டார். இங்கே குருவிற்கு விரையதிலிருந்து சனியோடு தொடர்புகொள்ளும் சந்திரனால் ஏற்படும் எண்ணத்தின் வேகம் சனியால் பாதிக்கப்படுகிறது. விழைவு குடும்ப வாழ்வு பாதிப்படைகிறது.  

மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.


இந்த ஆணின் ஜாதகத்தில் சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் நீச சந்திரன் துலாம் லக்னத்திற்கு 2 ல் ராகுவோடு இணைந்து நிற்கிறது. சந்திரனின் சார நாதன் சனி 2 ஆம் பாவத்திற்கு 8 ல் வக்கிர கதியில் நிற்கிறது. புனர்பூவில் இது கடுமையான  நிலையாகும். 2 ஆம் பாவ நீச சந்திரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் குடும்பத்திற்கு குறையுள்ள துணைவர் வரவேண்டும். அப்படி வந்தால் குறையை சுட்டிக்காட்டும் சந்திரனும் ராகுவும் குடும்பத்தை பாதிக்காது. இல்லையேல் குடும்ப வாழ்வில் இழப்புகளை இவை ஏற்படுத்தும். ஜாதகரின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது திருமணம் சிறப்பாக உள்ளது. ஜாதகர் தற்போது வெளிநாட்டில் குடும்பத்தோடு வசிக்கிறார். இரண்டாவது திருமணம் பாதிக்காது என்று கூறக்காரணம் முதல் திருமணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் புனர்பூவும் பாதிப்பிற்குப்பின் வளர்ச்சியை ஏற்படுத்தும் ராகுவுமாகும். 

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்னத்திற்கு 2 ஆமதிபதி லக்னத்திற்கு 8 ல் லக்னாதிபதி உச்சமடையும் கடக ராசியில் பாக்யாதிபதி சூரியனோடு நின்று தனது பாவத்தை தானே பார்க்கிறார் சனி அஸ்தங்கமடையவில்லை என்பது சிறப்பு.  சனி மூன்றாவது பார்வையால் தனக்கு வீடளித்த சந்திரனை பார்ப்பதால் இங்கும்  புனர்பூ தோஷம் செயல்படுகிறது. இந்த ஜாதகரும் துவக்கத்தில் பல்வேறு தொழில்களை முயன்று பிறகு சிறப்பான நிலைக்கு வந்து தற்போது சில நூறு கோடிகளுக்கு அதிபதியாக தொழில் செய்து வருபவர். காரணம் ஜீவன காரகனும் 2 ஆம் பாவாதிபதியுமான சனி 1௦ ஆம் பாவத்தோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்புதான். லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதிகள் இருவரோடும் சனி இங்கு தொடர்புகொள்கிறார். ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்த தொடர்பு அமைவதால் இங்கு புனர்பூ தோஷம் புனர்பூ யோகமாக மாறி செயல்படுகிறது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Friday 13 March 2020

மாங்கல்ய பலம்!



திருமணப்பொருத்தம் பார்க்கையில் 2 மற்றும் 8 ஆம் பாவத்தைக்கொண்டே ஒர் திருமண உறவின் பலம் அளவிடப்படுகிறது.. 2 ஆம் பாவமும் 8 ஆம் பாவமும் பாவக் கிரகங்களால் முக்கியமாக சனி மற்றும் செவ்வாயோடு தொடர்புகொண்டதாயிருந்தால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் களத்திர தோஷம் என அழைக்கப்படுகிறது. ஆணுக்கு அது ஜீவன வகையில் கடும் சிரமங்களை ஏற்படுத்தி கணவனும் மனைவியும் இணைந்து இல்லறம் நடத்த கடும் தடைகளை உண்டுபண்ணுகிறது. பெண்ணைப் பொறுத்தவரை இது மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படுகிறது.  காரணம் கால புருஷ 8 ஆம் பாவமான விருட்சிகத்தில்தான் கால புருஷனின் பாதகாதிபதியான சனியின் அனுஷ நட்சத்திரம் உள்ளது. கால புருஷ அஷ்டமாதிபதியான விருட்சிகத்தின் அதிபதி செவ்வாய் கால புருஷனின் பாதகாதிபதி சனியோடு தொடர்புகொண்டு கால புருஷனுக்கு குடும்ப  பாவமான ரிஷபத்தையோ அல்லது விருட்சிகத்தையோ பார்த்தாலோ அல்லது ரிஷப, விருட்சிகத்தில் சேர்ந்திருந்தாலோ அல்லது பெண்ணின் லக்னத்திற்கு 2 மற்றும் 8 ஆம் இடங்களோடு தொடர்புகொண்டாலோ அது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது.  ஆனால் இக்கருத்தில் பல விதி விலக்குகளும் உள்ளன. அவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும் 

மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. கடக லக்னத்திற்கு பாதக ஸ்தானமான ரிஷபத்தில் லக்ன அஷ்டமாதிபதியும் ராசி அதிபதியுமான சனி விரையாதிபதி புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். இங்கு லக்னாதிபதி சந்திரன் லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் லக்னத்திற்கு அஷ்டமத்தில் மறைந்துள்ளனர். அஷ்டமத்தில் அமைந்த லக்னாதிபதி சந்திரனும் மாங்கல்ய காரகன் செவ்வாயும் மாங்கல்ய பாவத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் அமைந்துள்ளனர். இங்கு செவ்வாயும் சனியும் பரஸ்பர பார்வை பார்க்கின்றனர். இதனால் செவ்வாய் சனிக்கு தனது 4 ஆம்  பார்வையால் மாங்கல்ய பாவத்திற்கு தீங்கு செய்யக்கூடாது என கட்டளை இடுகிறது. பாதகத்தில் அமைந்த சனி நீதிமான் என்பதால் தனது கர்மங்களை நிச்சயம் கொடுத்தே ஆக வேண்டியவராகிறார். அதே சமயம் சனி ராசி அதிபதியும் ஆவதால் தண்டனை உண்டு ஆனால் மாங்கல்யத்தை பாதிக்க மாட்டேன் என தனது 1௦ ஆம் பார்வையால் செவ்வாய்க்கு பதிலனுப்புகிறார். புதனோடு சேர்ந்த சனி லக்னத்தையும் லக்னாதிபதியையும் பார்க்கிறது. இதனால் ஜாதகி புதனின் காரகத்துவமான ஆசிரியையாக வேலை செய்கிறார். கணவரை குறிப்பிடும் செவ்வாய் ஜலக்கிரகமான லக்னாதிபதி சந்திரனோடு இணைந்த நிலையில் செவ்வாயை திட்டமிடல் மற்றும் பசுமைக்கு உரிய புதனோடும் அரசாங்கத்தை குறிப்பிடும் சூரியனோடும் இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறது இதனால் ஜாதகியின் கணவர் மத்திய அரசின் வேளாண்மைத்துறையில் பணியாற்றுகிறார். இங்கு தன ஸ்தான அதிபதி சூரியனும் பாதகத்தில் அமைவதால் பெரும் தன வரவை இழக்க வேண்டியிருக்குமே என்பதற்காக வேலையை விட இருவருமே தயாராக இல்லாத சூழலில் வெவ்வேறு மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள். இங்கு மாங்கல்ய பாவத்தோடு தொடர்புடைய சனியும் செவ்வாயும் மாங்கல்யத்திற்கு பாதிப்பைத்தராமல் பிரித்து வைத்துள்ளது.



இரண்டாவதாக நீங்கள் காணும் மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ல் நிற்கும் வக்கிர சனியை 8 ஆமிடத்தில் நிற்கும் செவ்வாய் நேர் பார்வையாக பார்க்கிறது. இது கடுமையான அமைப்பாகும். லக்னத்திற்கு 2 லிலும் ராசிக்கு 6 லிலும் நின்று செவ்வாய் பார்வையை பெறும் சனி ஜாதகிக்கு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.    ராசிக்கு 1௦ ல் திக்பலத்தில்  உச்ச சூரியன் அமைந்துள்ளது. குரு வீட்டில்  நிற்கும் சனிக்கு திரிகோணத்தில் சூரியன் உச்சம் பெற்றுள்ளதாலும் ஜாதகி அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார். 7 ஆமிடத்திக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. இப்படிப்பட்ட ஜாதகங்களுக்கு குடும்ப அமையும் காலங்களின் சாதகமான திசா புக்திகள் பெரும்பாலும் வருவதில்லை. ஜாதகிக்கு தற்போது 7 க்கு விரையமான 6 ஆமிடத்தில் உச்சமான சூரியனின் திசை நடக்கிறது. 3௦ வயதை நெருங்கும் ஜாதகி கல்வியிலும் பணியிலும் அழகிலும் சிறந்தவரானாலும் உரிய வரன் இன்னும் அமையவில்லை. சனி கோட்சாரத்தில் தனது முதல் சுற்றை பூர்த்தி செய்துவிட்டது. ராசிக்கு 7 இல் உள்ள கோட்சார சனியோடு கோட்சார குரு இணையும் சூழலில் சனியின் வீரியம் தணிந்து திருமணம் நடக்க வேண்டும்.


மேற்கண்ட மூன்றாவது ஜாதகப்பெண்மணியின் ஜாதகத்தில் கன்னி லக்னத்திற்கு மாங்கல்ய ஸ்தானாதிபதியும் மாங்கல்ய காரகனுமான செவ்வாய் நீச நிலை பெற்று லாப ஸ்தானத்தில் அமைந்திருப்பது தோஷமே. ஆனால் பாதகாதிபதியே ராசி அதிபதியாக வந்து லக்னத்திற்கு 11 ல் உச்சமாகி அங்கு நீச நிலை பெற்ற செவ்வாயை நீசதிலிருந்து காப்பாற்றி நீச பங்கப்படுத்துகிறார். ஜாதகத்தில் சனி செவ்வாய் தொடர்பும் இல்லை. சனிக்கு வீடு கொடுத்த குரு செவ்வாய்க்கு நண்பராகி லக்னத்திற்கு 11 ஆம் பாவத்தில் இணைவு பெறுவதும் இந்த ஜாதகத்தில் செவ்வாய் நீச பங்கம் பெற்ற நிலையில் 2 ஆம் பாவத்தை நான்காம் பார்வையாக பார்ப்பதும் தோஷமில்லை. ஆனால் குரு சனியின் பூசம்-2 ல் நின்று மீனச்சனி குருவின் உத்திரட்டாதி-4 ல் நின்று சாரப்பரிவர்தனை பெறுவதால் தோஷம் ஏற்படும். சாரப்பரிவர்தனையால் சனி கடகத்திற்கும் குரு மீனதிற்கும் இடம் மாறிச்செல்வர். இப்போது லாப ஸ்தானத்தில் பரிவர்த்தனைக்குப்பின் இடம்பெயர்ந்து வரும் சனியோடு சேர்ந்து லக்னத்திற்கு 2 ஆமிடத்தை செவ்வாய் பார்வை செய்கிறது. இதனால் இந்த ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் செயல்படும். இந்த ஜாதகி செவ்வாய் சாரத்தில் நின்ற புதனின் திசையில் சனியில் புக்தியில் தன் துணைவரை இழந்தார்.



மேற்கண்ட நான்காவது ஜாதகம் ஒரு ஆணினுடையது. தனுசு லக்ன ஜாதகத்தில் 2 ஆம் பாவத்தில் உச்சமான செவ்வாயை மேஷத்தில் நீசமாகி வக்கிரமடைந்த கேதுவோடு இணைந்த சனி தனது 10 ஆம் பார்வையாக பார்க்கிறது. வருமான வகையைக்கூறும்  2 ஆமிடத்தில் ஒரு உச்ச கிரகம் நின்று அது பரிவர்தனைக்குப்பின் கேதுவோடு தொடர்பாவதால்  ஜாதகர் தன் வாழ்வில் இறைச்சேவை செய்து அரசுத்துறையில் திருக்கோவில் ஒன்றில் அறநிலையத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். லக்னத்திற்கு 10 ல் திக்பலம் பெற்று அமைந்த சூரியன் அதற்கு உதவியது என்றால் அது மிகையல்ல. ஓரளவு வசதி வாய்ப்புகளை கொண்டவர். 2 ஆமிடத்தில் செவ்வாய் உச்சமானதால் ஜாதகருக்கு வீடு அமைந்தது. சனி செவ்வாய் இரண்டும் சட்டம் ஒழுங்கை குறிப்பிடும் கிரகங்களாவதால் ஜாதகருடைய வீடு காவல் நிலையத்தை ஒட்டி அமைந்திருந்தது. கோபக்கார செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் உச்சமானாலும் பரிவர்த்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவோடு சேர்வதால் ஜாதகர்  கோபம் என்பதையே மிக மிகக்குறைவாகவே அறிந்தவர். 7 ஆமதிபதி உச்சமாகி 6 ஆமதிபதி சுக்கிரனை நீச பங்கமடையச் செய்வதால் ஜாதகரின் மனைவியும் பணிக்குச்சென்றார். கன்னியில் சூரியன் 4 பாகையில் நிற்கிறது. புதன் சூரியனுக்கு பின்னால் 1 பாகையில்  அஸ்தங்கமடைகிறது. சுக்கிரன் சூரியனுக்கு முன்னாள் 4  பாகை சென்று குறைவான அஸ்தங்க தோஷத்தை பெற்றுள்ளது.   7 ஆமிடத்தை வளர்பிறைச்சந்திரன் பார்ப்பதால் ஜாதகரின் மனைவி தாய்மையுள்ளம் கொண்டவர். ஜாதகருக்கு ஒரு பாதிப்பு என்றால் தாய்மை உணர்வோடு கவனித்துக்கொள்பவர். இந்த ஜாதகத்தில்  சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையாகின்றன. எனவே இந்த ஜாதகத்தில் மாங்கல்ய தோஷமோ பிரிவினை தோஷமோ  வேலை செய்யவில்லை.

தோஷ அமைப்புகளை ஆராய்ச்சி செய்கையில் விதிகளைவிட விதி விலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும். யோக ஜாதகங்களில் யோகத்தை செய்யும் திசை வந்தால்தான் யோகம் வேலை செய்யும்.  தோஷ ஜாதகங்களில்  தோஷத்தை செயல்பட வைக்கும் திசைகள் வருகிறதா என்பதையும் அவை எந்த வயதில் வருகின்றன என்பதையும் முக்கியமாக கவனித்தே யோகத்தையும் தோஷத்தையும் கூற வேண்டும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501.

Monday 9 March 2020

விதி, மதி, கதி!




ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்துவிட்டால் ஒருவருக்கான வாழ்க்கை நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நிறைவேறிவிடும். ஜாதகர் வாழத் துவங்குமுன்பே அவருக்கான  பாதையை படைத்தவன் வகுத்து வைத்திருப்பான் எனலாம். இரண்டாவதாக மதி எனப்படுவது  சந்திரனை குறிப்பிடும் சொல் ஆகும். ஒருவரது லக்னம் வலு குறைவாக அமைந்திருந்து ராசியும் ராசி நாதனும் வலுவாக அமைந்துவிட்டால் ஜாதகர் தனது சுய முயற்சியால் தன் விருப்பப்படி தனக்கான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுப்பார் எனலாம்.  நிறைவாக கதி என்பது சூரியனை குறிப்பிடும் சொல் ஆகும். ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத்தவிர சூரியனின் கதிர்வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதால் ஒருவருக்கு லக்னமும் ராசியும் பாதிக்கப்பட்டிருந்து சூரியன் சிறப்பாக அமைந்திருந்தால் சூரியன் அமைந்துள்ள பாவமே ஜாதகரை இயக்கும் பாவம் என பிரதானமாக எடுத்துக்கொண்டு பலன்சொல்வது ஒரு முறை. இதன் அடிப்படையின் இப்பதிவை சில உதாரண ஜாதகங்களுடன் காண்போம்.

விதி

மேற்கண்ட  ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. மிதுன லக்னத்தில் லக்ன சுபரும் சுபாவ பாவருமான சனி அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் வக்கிர நிலை பெற்ற குருவின் பார்வையை பெறுகிறார். லக்னாதிபதி ராசியில் உச்சமாகி பாவிகள் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். லக்னாதிபதி உட்பட எந்த கிரகமும் அஸ்தங்கம் அடையவில்லை என்பது சிறப்பே. இதனால் மதி எனப்படும் ராசியை விட விதி எனப்படும் லக்னமே வலுப்பெறுகிறது.  இதனால் ஜாதகரை ராசியை விட லக்னமே வழிநடத்தும். தனக்கு இயல்பாக அமையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் துணைவரை கரம்பிடிக்க வேண்டியிருக்கும். காரணம் ராசியில் அமைந்துள்ள புதனை சூரிய-சந்திரனும்  செவ்வாயும் கட்டுப்படுத்துவதே ஆகும். பாக்யாதிபதி சனி லக்னத்தில் தன் நண்பனின் வீட்டில் நேர்கதியில் வலுவாக அமைந்துள்ளதால் ஜாதகருக்கு எதிலும் தெளிவான நிதானமான போக்கு இருக்கும். 7 ஆமதிபதி குரு வக்கிரமடைந்து செவ்வாயும் சூரிய, சந்திர, புதனோடு சேர்க்கை பெற்றதால் கணவர் நிர்வாகத்திறனுடையவராகவும், பொறுமை அற்றவராகவும், அடிக்கடி பயணங்கள் செய்பவராகவும் , கோபம் மிகுந்தவராகவும் இருப்பார் எனலாம். 7 ஆமதிபதியான நீர்க்கோள் குரு 9 ஆம் பாவத்தில் நிற்பதாலும் லக்னத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியாகி சந்திரன் லக்னாதிபதி சேர்க்கை பெற்றதனாலும் ஜாதகிக்கு கணவரின் சூழலை முன்னிட்டு வெளிநாட்டு வாழ்வு அமையும் எனலாம்.  ஜாதகி வெளிநாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். ஜாதகிக்கு நடப்பவை அனைத்தும் அவரது விதிப்படி நடப்பவை. லக்னாதிபதி ராசியில் பாவிகளோடு சேர்ந்து விட்டதால்  ஜாதகர் போராடி தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி அமைத்துக்கொள்ள இயலாது.

மதி

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகத்தில் உச்ச நீச்சமாக அமையப்பெற்ற கிரகங்களே ஜாதகருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மையாகும். இந்த ஜாதகத்தில் கடக ராசியில் அமையப்பெற்ற குருவும் கடக ராசி அதிபதி சந்திரனும் உச்சமாக அமைந்துள்ளனர். சுக்கிரனும் செவ்வாயும் ஆட்சி. சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் அமைந்துள்ளதால் நீச பங்கமடைந்துள்ளார். ராகு கேதுக்கள் தனித்த நிலையில் இதர கிரகங்களோடு சேர்க்கை பெறாமல் அமைந்துள்ளது சிறப்பே. இப்படி பல சிறப்புகள் பெற்ற ஜாதகம் நிச்சயம் ஒரு யோக ஜாதகமாகத்தான் இருக்கும். ஜாதகர் உலகப்புகழ் பெற்ற தமிழர். ஜாதகத்தில் லக்னம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்திரனும் அதன் வீடும் வலுவடைந்ததால் இந்த ஜாதகரை ராசியே வழிநடத்தும் எனலாம். அதாவது லக்னப்படி தனக்கு அமையப்பெறும் சூழ்நிலைகளை ராசி வலுவாடைந்ததால் தன் எண்ணப்படி போராடி மாற்றியமைத்துக்கொள்ள இயலும். பிராமண ராசியான கடகத்தில் பிராமண கிரகம் குரு  உச்சமாகி அதன் அதிபதி சந்திரனும் உச்சமானதால் ஜாதகர் பிராமண வர்கத்தில் பிறந்தவர். சந்திரன் மாற்றங்களை குறிக்கும் கிரகம் என்பதால் தான் சார்ந்த வைணவ சம்பிரதாய நெறிக்கு எதிராக சைவ சம்பிரதாயப்படி தன் நெற்றியில் திருநாமத்திற்கு பதிலாக தன் எண்ணப்படி திருமண் (விபூதி) இட்டுக்கொண்டவர். சைவ நெறிகளை குறிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை வைணவ நெறிகளை குறிக்கும் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களைவிட வலுவாக அமைந்ததே இதற்கு காரணமாகும். 

ராசியாதிபதி சுக்கிரன் சூரியனோடு சேர்ந்ததால் அரசியல் அரசாங்கத்தொடர்புகளும் ஜாதகரை தேடி வந்தன. கற்பனைக்கிரகம் சூரியனும் திரைத்துறைக்கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் வலுவாக அமைந்ததால் திரைத்துறையில் கோலோச்சியவர். ராசிக்கு இரண்டாமிடம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைகிறது. அதுவும் 2 ஆமிடதிற்கு சுபகர்த்தாரி யோகத்தை வழங்கும் இரு கிரகங்களும் உச்ச கதியில் அமைந்துள்ளன. இதனால் 2 ஆமிடதிற்கு உச்ச சுபகர்த்தாரி யோகம் அமைகிறது. அன்னை சரஸ்வதி இவர் நாவில் குடியிருந்தாள் என்பது தமிழகம் கண்ட உண்மை. இவரது நாவிலிருந்து விழுந்த பாடல் வரிகள் சாமான்யனை குதூகலிக்க வைத்தன. ஆட்சியாளர்களை பிரமிக்க வைத்தன. இனி இதுபோன்ற கவிஞர்கள் திரைத்துறைக்கு வரமாட்டார்களா என நம் எல்லோரையும் ஏங்க வைக்கின்றன. ராசிக்கு 5 ஆமிடத்தில் ஆன்மீக கிரகம் கேது அமைந்ததனால் திரைப்படக் கவிஞராக இருந்தாலும் ஆன்மீகத் துறைக்கும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜாதகர் ஸ்ரீரங்கத்தில் பிறந்த மறைந்த திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் வாலி ஆவார். பலநாள் போராடி விடாப்பிடியாக முயன்று தன் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டதற்கு இந்த ஜாதகத்தில் மதி என அழைக்கப்படும் மாற்றங்களுக்குரிய சந்திரனின் வலுவே காரணமாகும்.

கதி

மேற்கண்ட ஜாதகம் இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலினுடையது. ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் விருண யோகம் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்திலும் ராசிக்கு 3 லும்  அமைகிறது. விருண யோகத்தால் வாழ்வில் பல போராட்டமான சூழல்களை சந்திக்க வேண்டும். லக்னாதிபதி பகை கிரகங்களோடு 6 ல் அமைந்த நிலையில் ராசியாதிபதி செவ்வாய் சனியோடு  கிரக யுத்தத்தில் தோற்றுவிட்ட நிலையில் லக்னதிற்கு யோகாதிபதியான சனியும் ராசியதிபதியான செவ்வாய் இருவருமே ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவராகின்றனர். இவ்விருவருக்கும் 1௦ ல் திக்பலத்தில் சூரியன் நீச பங்கமடைந்த நிலையில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகரை கதி எனப்படும் சூரியனே இயக்கும் சக்திபெற்றவராகிறார்.


சட்டம் ஒழுங்கை குறிக்கும் சனி-செவ்வாய் சேர்க்கையால் ஜாதகர் வக்கீலுக்கு படித்தார். லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் இச்சேர்க்கை அமைந்ததால் ஜாதகர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். சனி அடித்தட்டு மக்கள் என்பதாலும் செவ்வாய் போராட்டங்களுக்குரிய கிரகம் என்பதாலும் இவ்விரு கிரக சேர்க்கையால் ஜாதகர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இவர் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் இவரது போர்க்குணத்தையும் கண்டு மிரண்ட  ஆங்கிலேய அரசு மக்களுக்காக இறங்கி வந்து பல சலுகைகளை அளித்தது.  பூமிகாரகன் செவ்வாயோடு உழைப்புகாரகன் சனி இணைந்து ஜாதகத்தில் செயல்படுவதால் இவர் “இந்திய விவசாயிகளின் ஆன்மா” என அழைக்கப்பட்டார்.

காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இவரை நாடி வர சனி+செவ்வாய் நிலையே காரணமாகும். தேச விடுதலைக்கான போராட்டங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது.  அதற்காக பலமுறை சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை தனது உறுதிமிக்க செயல்களால் ஒருங்கிணைத்ததற்காக தேசம் இவரை “இந்தியாவின் இரும்பு மனிதர்” எனப்போற்றுகிறது. சூரியனின் நிலையால் முதல் துணை பிரதமராகவும் சனியின் நிலையால் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய சாமான்ய விவசாயிகள் இப்படி ஒரு மனிதர் மீண்டும் பிறந்து தங்கள் வாழ்வை காக்க வரமாட்டார்களா என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் இவருடையது. இவை அனைத்திற்கும் காரணம் இவரது ஜாதகத்தில் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் உச்சமடைந்து கர்ம காரகன் சனியோடு சேர்க்கை பெற்றதே ஆகும். இந்த சேர்க்கைக்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியன் அமைவது “அழியாப்புகழைத்தரும்” அமைப்பாகும். இத்தகைய ஜாதக அமைப்பினர் அவர்களுக்கான காலகட்டத்தில் மட்டுமே அபூர்வமாக பிறவி எடுக்கிறார்கள். அழியாப்புகழை அடைகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.  படேலின் புகழ் என்றும் அழியாதது. கட்டுமானத்திற்கு காரகன் செவ்வாய் உச்சமானதால் குஜராத்தில் அமைந்துள்ள இவரது சிலையே உலகில் இன்று உயரமான சிலையாகும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501