Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, 14 November 2025

Make in India

 


தாது ராசிகளான சர ராசிகள் போர்க்குணம் மிக்கவை. புத்தி சாதுர்யமற்றவை. பிறர் அறிவு புகற்றினாலன்றி தனது அறியாமையை மாற்றிக்கொள்ளாது பிடிவாதமாக, முட்டாள்தனமாக செயல்படும் இயல்புடையவை. படைப்பாற்றல் அற்றவையும் கூட. அனைவருக்காகவும் கடுமையாக உழைக்கக் கூடியது. பிறருக்காகவும் போரிடக்கூடியது. செவ்வாய் தாது ராசிகளின் காரக கிரகமாகும். மூல ராசிகளுடன் இணைந்து செயல்படும். ஜீவ ராசிகளை வெறுக்கும். இவற்றை கற்களுக்கு ஒப்பிடலாம்.  

மூல ராசிகளான ஸ்திர ராசிகள் சொந்த அனுபவத்தால் ஓரளவு சாதுர்யத்தை பெற்றிருக்கும். சுய லாபத்தை முன்னிலைப்படுத்தி செயல்படக் கூடியது. போர்க்குணம் குறைவு என்றாலும் தனக்கு பாதிப்பு வந்தால் மட்டும் போர் செய்யும். படைப்பாற்றல் குறைவு. தாது ராசிகளுடன் இணைந்து செயல்படும் என்றாலும் மூல ராசிகளை அதிகம் விரும்பும். சுக்கிரன் மூல ராசிகளின் காரக கிரகமாகும். மூல ராசிகளை மண்ணுக்கு ஒப்பிடலாம்.  

உபய ராசிகளான ஜீவ ராசிகள் புத்தி சாதுர்யம் மிக்கவை. போர்க்குணம் குறைவு. ஆனால் அதை தனது புத்திசாலித்தனத்தால் சரி செய்துவிடும் இயல்புடையவை. மூல ராசிகளே படைப்பாற்றலின் காரக ராசிகளாகும். தங்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவை. இவை தாது ராசிகளின் இயல்பு குணமான கல்லையும், மூல ராசிகளின் இயல்பு குணமான மண்ணையும் விவசாயத்திற்கேற்றபடி உருவாக்கம் செய்து பயிர் விளைவித்து உயிரூட்டும் வல்லமை மிக்கவை.  அதனால்தான் இவற்றை ஜீவ ராசிகள் என்கிறோம். ஜீவ என்றால் உயிர் என்று பொருள். ஜீவ ராசிகள் மூல ராசிகளுடன் இணைந்து செயல்படும். தாது ராசிகளை வெறுக்கும். புதன் மூல ராசிகளின் காரக கிரகமாகும்.

இன்று உலகில் பல புதுமையான தொழில்நுட்பங்களை படைக்கும் அமெரிக்கா உலகியல் ஜோதிடத்தில் ஜீவ ராசியான மிதுன ராசி அமைப்பில் வரும் ராசி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தாது ராசி அமைப்பில் வரும் ராசியாகும். இதுவே இரு நாடுகளுக்கும் உழைப்பு மற்றும் படைப்பு ரீதியிலான வேறுபாட்டிற்கும் பகைக்கும் காரணமாகும். இப்பகை எப்போதும் தீராதது. அதாவது இரு நாடுகளும் தங்கள் நட்பில் ஒருபோதும் ஒன்றை ஒன்று நம்பாது.

இன்று அமெரிக்கா இந்தியர்களை அதிக பயத்துடன் பார்க்கின்றனர். காரணம் அமெரிக்கர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை இந்திய இளைஞர் அறிவு இன்று நிர்வகிக்கிறது. இன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே பணிபுரிகின்றனர். இவர்களால் இந்தியாவின் வருமானமும் உயர்ந்தது. பாரதமும் தொழில்நுட்ப அறிவை அமெரிக்கர்களிடமிருந்து பணி அறிவின் மூலம் பெற்றுள்ளது. இன்னும் பலகோடி மென்பொருள் அறிவுடைய இந்திய இளைஞர்கள்  தங்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர் என்பதும் அவற்றால் இந்தியா விரைவில் மேற்குலக நாடுகளை தொழில்நுட்பத்தில் மிஞ்சிவிடும் வாய்ப்பு இருப்பதால் அவை இன்று தூக்கத்தை தொலைதுவிட்டு இந்தியர்களை வெறுப்புடன் பார்ப்பவர்களாக உள்ளனர். இந்நிலையில் நமது அறிவை நம்மை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலக நாடுகளுக்கு விற்கும் சாதாரண பணியாட்களாக அன்றி, தொழில் நுட்பங்களை உருவாக்கி விற்கும் முதலாளிகளாக மாற வேண்டியதன் அவசியத்தை இன்றைய பதிவு வலியுறுத்துகிறது.

பின்வரும் ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.

Screenshot 2025-11-13 104157.png

ரிஷப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஜீவ ராசியான மீனத்தில் உச்சம். உச்ச சுக்கிரனால் நீச புதன் பங்கப்படுகிறார். வித்யா காரகர் புதனின் சேர்க்கையால் ஜாதகர் பொறியியலில் மின்னணு தகவல்தொடர்புக் கல்வி (BE-Electonics & Communication) படித்தார். கால புருஷ வித்யா ஸ்தானாதிபதியும் லக்னத்திற்கு மூன்றாமதிபதியுமான சந்திரன், 12 ஆமதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையாகிறார். உயர்கல்வி பாவகமான 9 ஆமிடமான மகரத்தை பரிவர்த்தனைக்குப் பிறகு கடக சந்திரன் பார்ப்பார். மகரத்தை கால புருஷ 9 ஆமதிபதி குரு 5 ஆம் பார்வையாக கன்னியில் இருந்து பார்க்கிறார். இதனால் இவர் உயர் கல்விக்கு வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். இதன்படி பரிவர்த்தனை செவ்வாய் தசையில் ஜாதகர் அமெரிக்கா சென்றார். புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு மீனம் வரும் குரு, அதே பரிவர்த்தனையால் மீனத்திலிருந்து கன்னிக்கு வந்து உச்சம் பெறும் புதனை நேர் பார்வை பார்ப்பார். இவ்வமைப்புகள் ஜாதகர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று சிறப்பாக கல்வியை முடிப்பார் என்பதும் புரிகிறது. இதன்படி தாய் நாடான இந்தியாவின் பொறியியலில் இளங்கலை கல்வியை முடித்தவர். முதுகலையில் கணினி அறிவியலை அமெரிக்காவில் முடித்து, அங்கேயே ஒரு நிறுவனத்தில் தரவு மேலாண்மையில் முதல் நிலை பணியாளராக பணிபுரிகிறார்.

தசாம்சத்தில் தரவுகளை (Datas) குறிப்பிடும் புதன், மேலாண்மையை குறிப்பிடும் செவ்வாயுடன் இணைவு பெற்றதால் ஜாதகர் தரவு மேலாண்மைத் துறையில் பணிபுரிகிறார். தாது ராசியான மேஷத்தில் ஜீவ ராசியாதிபதி புதன் தொடர்பு பகையானது. மேஷ ஆட்சி செவ்வாயின் அதிகாரம் புதனின் அறிவை கட்டுப்படுத்திவிடும். இங்கு அதிகாரமே பேசும். அறிவிற்கு இரண்டாமிடமே. ஆனால் அறிவை நிர்வகிக்க மட்டும் ஜாதகருக்கு கொடுப்பிணை உள்ளது. ஜீவ ராசிக்குரிய புதியன படைத்தல் என்பது இங்கு இருக்காது. இத்தகைய ஜாதகர்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்குச் சென்றாலும் அங்கு அவர்களின் அடிமைகளாக மட்டுமே பணிபுரிவர். இவர்களால் புதியனவற்றை உருவாக்க எந்த தசா-புக்தியிலும் முடியாது. Make in India உருவாக்கத்திற்கு இவர்கள் பயனற்றவர்கள்.

கீழே இரண்டாவதாத ஒரு பெண்ணின் ஜாதகம்.

DHAKSHANA.png

கும்ப லக்ன ஜாதகத்தில் 6 ஆமதிபதி சந்திரன் அமைவு ஜாதகிக்கு உள்ள தாய்நாட்டுப் பற்றையும், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் ஒருங்கே குறிப்பிடுகிறது. ஆரோக்கிய ஸ்தானமான 5 ஆமிடத்தில் கால புருஷ ஐந்தாமதிபதி சூரியனுடன் புதனும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். சூரியனை விட்டு பல பாகைகள் விலகியுள்ளதால் புதனும் சுக்கிரனும் அஸ்தங்கமடையவில்லை. விருட்சிக குரு சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து, மீனச் சனி குருவின் பூரட்டாதியில் நின்று நட்சத்திரப் பரிவர்த்தனையில் உள்ளனர். குரு உயிரியலை குறிப்பிடும் கிரகம். சனி தசையில்  குருவின் புனர்பூஷத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் ஜாதகி இளங்கலையில் பொறியியலில் Bio Medical Engineering படித்தார். (குரு உயிரியல், 5 ஆமிடம் மருத்துவம், சனி வக்கிரம் பொறியியல்)  உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமதிபதி சுக்கிரன் அமெரிக்காவை குறிப்பிடும் மிதுன ராசியில் அமைந்ததால் இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்று முதுகலையில் நிர்வாகவியல் (MBA) படித்தார். சூரியனுடன் 9 ஆமதிபதி இணைந்துள்ளதாலும் சூரியனே பாகை அடிப்படையில் புதன், சுக்கிரனைவிட அதிக பாகை சென்றுள்ளதாலும் ஜாதகிக்கு சுக்கிர புக்தி முடிந்து சூரிய புக்தி வந்தவுடன் முதுகலையில் சூரியன் குறிப்பிடும் நிர்வாகவியல் படித்தார்.

தசாம்சத்தில் சனி, குரு, புதன் ஆகியவை நீர் ராசியான விருட்சிகத்தில் நிற்பது ஜாதகிக்கு கடல் கடந்த தேசத்தில் பணிபுரியும் வாய்ப்பை குறிக்கிறது. ஜாதகிக்கு சனி தசை முடிந்து புதன் தசையில் அமெரிக்காவிலேயே புதன் குறிப்பிடும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைத்தது.

ஜாதகிக்கு ராசிச் சக்கரப்படி ஜீவ ராசியான மிதுன ராசியில் தனது நட்புக் கிரகங்களுடன் இணைந்து ஆட்சி பெற்ற புதனின் தசை 2௦39 வரை உள்ளது. அதுவரை ஜாதகிக்கு புதியன படைக்கும் ஆற்றல் சிறப்பாக இருக்கும். இத்தகைய ஜாதகர்களை அடையாளம் கண்டு இவர்களது மேலை நாட்டு தொழில்நுட்ப அனுபவங்களை இந்தியாவிற்கு பயன்படும்படி வாய்ப்புகளை பாரதத்திலேயே அமைத்துக்கொடுத்தால் இவர்களால் இந்தியா மாபெரும் வல்லரசாக உருவாகும் வாய்ப்புண்டு. தசாநாதர் புதன், அரசாங்கத்தை குறிக்கும் சூரியனுடன் இணைந்துள்ளதால் இவர் நமது இந்திய அரசாங்கத்திற்கு சேவை செய்ய தயாராக இருப்பார். தாய் நாட்டை குறிக்கும் சந்திரன் லக்னத்திலேயே அமைந்ததால் ஜாதகிக்கு தாய் நாட்டுப் பற்றும் அதிகமிருக்குக்கும். இத்தகைய தகுதியும், தேசப் பற்றும் மேலைத் தொழில் நுட்ப அனுபவ அறிவும் உள்ள பாரதத் தாயின் தவப் புதல்வர்களை Make in India திட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளை தொழில் நுட்பங்களுக்காக சார்ந்திராமல், இந்தியாவிலேயே அவற்றை உருவாக்கம் செய்ய இயலும்.

                      

                             ஜெய் ஹிந்த்!

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Monday, 9 March 2020

விதி, மதி, கதி!




ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்துவிட்டால் ஒருவருக்கான வாழ்க்கை நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நிறைவேறிவிடும். ஜாதகர் வாழத் துவங்குமுன்பே அவருக்கான  பாதையை படைத்தவன் வகுத்து வைத்திருப்பான் எனலாம். இரண்டாவதாக மதி எனப்படுவது  சந்திரனை குறிப்பிடும் சொல் ஆகும். ஒருவரது லக்னம் வலு குறைவாக அமைந்திருந்து ராசியும் ராசி நாதனும் வலுவாக அமைந்துவிட்டால் ஜாதகர் தனது சுய முயற்சியால் தன் விருப்பப்படி தனக்கான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுப்பார் எனலாம்.  நிறைவாக கதி என்பது சூரியனை குறிப்பிடும் சொல் ஆகும். ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத்தவிர சூரியனின் கதிர்வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதால் ஒருவருக்கு லக்னமும் ராசியும் பாதிக்கப்பட்டிருந்து சூரியன் சிறப்பாக அமைந்திருந்தால் சூரியன் அமைந்துள்ள பாவமே ஜாதகரை இயக்கும் பாவம் என பிரதானமாக எடுத்துக்கொண்டு பலன்சொல்வது ஒரு முறை. இதன் அடிப்படையின் இப்பதிவை சில உதாரண ஜாதகங்களுடன் காண்போம்.

விதி

மேற்கண்ட  ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. மிதுன லக்னத்தில் லக்ன சுபரும் சுபாவ பாவருமான சனி அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் வக்கிர நிலை பெற்ற குருவின் பார்வையை பெறுகிறார். லக்னாதிபதி ராசியில் உச்சமாகி பாவிகள் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். லக்னாதிபதி உட்பட எந்த கிரகமும் அஸ்தங்கம் அடையவில்லை என்பது சிறப்பே. இதனால் மதி எனப்படும் ராசியை விட விதி எனப்படும் லக்னமே வலுப்பெறுகிறது.  இதனால் ஜாதகரை ராசியை விட லக்னமே வழிநடத்தும். தனக்கு இயல்பாக அமையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் துணைவரை கரம்பிடிக்க வேண்டியிருக்கும். காரணம் ராசியில் அமைந்துள்ள புதனை சூரிய-சந்திரனும்  செவ்வாயும் கட்டுப்படுத்துவதே ஆகும். பாக்யாதிபதி சனி லக்னத்தில் தன் நண்பனின் வீட்டில் நேர்கதியில் வலுவாக அமைந்துள்ளதால் ஜாதகருக்கு எதிலும் தெளிவான நிதானமான போக்கு இருக்கும். 7 ஆமதிபதி குரு வக்கிரமடைந்து செவ்வாயும் சூரிய, சந்திர, புதனோடு சேர்க்கை பெற்றதால் கணவர் நிர்வாகத்திறனுடையவராகவும், பொறுமை அற்றவராகவும், அடிக்கடி பயணங்கள் செய்பவராகவும் , கோபம் மிகுந்தவராகவும் இருப்பார் எனலாம். 7 ஆமதிபதியான நீர்க்கோள் குரு 9 ஆம் பாவத்தில் நிற்பதாலும் லக்னத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியாகி சந்திரன் லக்னாதிபதி சேர்க்கை பெற்றதனாலும் ஜாதகிக்கு கணவரின் சூழலை முன்னிட்டு வெளிநாட்டு வாழ்வு அமையும் எனலாம்.  ஜாதகி வெளிநாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். ஜாதகிக்கு நடப்பவை அனைத்தும் அவரது விதிப்படி நடப்பவை. லக்னாதிபதி ராசியில் பாவிகளோடு சேர்ந்து விட்டதால்  ஜாதகர் போராடி தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி அமைத்துக்கொள்ள இயலாது.

மதி

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகத்தில் உச்ச நீச்சமாக அமையப்பெற்ற கிரகங்களே ஜாதகருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மையாகும். இந்த ஜாதகத்தில் கடக ராசியில் அமையப்பெற்ற குருவும் கடக ராசி அதிபதி சந்திரனும் உச்சமாக அமைந்துள்ளனர். சுக்கிரனும் செவ்வாயும் ஆட்சி. சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் அமைந்துள்ளதால் நீச பங்கமடைந்துள்ளார். ராகு கேதுக்கள் தனித்த நிலையில் இதர கிரகங்களோடு சேர்க்கை பெறாமல் அமைந்துள்ளது சிறப்பே. இப்படி பல சிறப்புகள் பெற்ற ஜாதகம் நிச்சயம் ஒரு யோக ஜாதகமாகத்தான் இருக்கும். ஜாதகர் உலகப்புகழ் பெற்ற தமிழர். ஜாதகத்தில் லக்னம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்திரனும் அதன் வீடும் வலுவடைந்ததால் இந்த ஜாதகரை ராசியே வழிநடத்தும் எனலாம். அதாவது லக்னப்படி தனக்கு அமையப்பெறும் சூழ்நிலைகளை ராசி வலுவாடைந்ததால் தன் எண்ணப்படி போராடி மாற்றியமைத்துக்கொள்ள இயலும். பிராமண ராசியான கடகத்தில் பிராமண கிரகம் குரு  உச்சமாகி அதன் அதிபதி சந்திரனும் உச்சமானதால் ஜாதகர் பிராமண வர்கத்தில் பிறந்தவர். சந்திரன் மாற்றங்களை குறிக்கும் கிரகம் என்பதால் தான் சார்ந்த வைணவ சம்பிரதாய நெறிக்கு எதிராக சைவ சம்பிரதாயப்படி தன் நெற்றியில் திருநாமத்திற்கு பதிலாக தன் எண்ணப்படி திருமண் (விபூதி) இட்டுக்கொண்டவர். சைவ நெறிகளை குறிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை வைணவ நெறிகளை குறிக்கும் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களைவிட வலுவாக அமைந்ததே இதற்கு காரணமாகும். 

ராசியாதிபதி சுக்கிரன் சூரியனோடு சேர்ந்ததால் அரசியல் அரசாங்கத்தொடர்புகளும் ஜாதகரை தேடி வந்தன. கற்பனைக்கிரகம் சூரியனும் திரைத்துறைக்கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் வலுவாக அமைந்ததால் திரைத்துறையில் கோலோச்சியவர். ராசிக்கு இரண்டாமிடம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைகிறது. அதுவும் 2 ஆமிடதிற்கு சுபகர்த்தாரி யோகத்தை வழங்கும் இரு கிரகங்களும் உச்ச கதியில் அமைந்துள்ளன. இதனால் 2 ஆமிடதிற்கு உச்ச சுபகர்த்தாரி யோகம் அமைகிறது. அன்னை சரஸ்வதி இவர் நாவில் குடியிருந்தாள் என்பது தமிழகம் கண்ட உண்மை. இவரது நாவிலிருந்து விழுந்த பாடல் வரிகள் சாமான்யனை குதூகலிக்க வைத்தன. ஆட்சியாளர்களை பிரமிக்க வைத்தன. இனி இதுபோன்ற கவிஞர்கள் திரைத்துறைக்கு வரமாட்டார்களா என நம் எல்லோரையும் ஏங்க வைக்கின்றன. ராசிக்கு 5 ஆமிடத்தில் ஆன்மீக கிரகம் கேது அமைந்ததனால் திரைப்படக் கவிஞராக இருந்தாலும் ஆன்மீகத் துறைக்கும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜாதகர் ஸ்ரீரங்கத்தில் பிறந்த மறைந்த திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் வாலி ஆவார். பலநாள் போராடி விடாப்பிடியாக முயன்று தன் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டதற்கு இந்த ஜாதகத்தில் மதி என அழைக்கப்படும் மாற்றங்களுக்குரிய சந்திரனின் வலுவே காரணமாகும்.

கதி

மேற்கண்ட ஜாதகம் இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலினுடையது. ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் விருண யோகம் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்திலும் ராசிக்கு 3 லும்  அமைகிறது. விருண யோகத்தால் வாழ்வில் பல போராட்டமான சூழல்களை சந்திக்க வேண்டும். லக்னாதிபதி பகை கிரகங்களோடு 6 ல் அமைந்த நிலையில் ராசியாதிபதி செவ்வாய் சனியோடு  கிரக யுத்தத்தில் தோற்றுவிட்ட நிலையில் லக்னதிற்கு யோகாதிபதியான சனியும் ராசியதிபதியான செவ்வாய் இருவருமே ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவராகின்றனர். இவ்விருவருக்கும் 1௦ ல் திக்பலத்தில் சூரியன் நீச பங்கமடைந்த நிலையில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகரை கதி எனப்படும் சூரியனே இயக்கும் சக்திபெற்றவராகிறார்.


சட்டம் ஒழுங்கை குறிக்கும் சனி-செவ்வாய் சேர்க்கையால் ஜாதகர் வக்கீலுக்கு படித்தார். லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் இச்சேர்க்கை அமைந்ததால் ஜாதகர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். சனி அடித்தட்டு மக்கள் என்பதாலும் செவ்வாய் போராட்டங்களுக்குரிய கிரகம் என்பதாலும் இவ்விரு கிரக சேர்க்கையால் ஜாதகர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இவர் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் இவரது போர்க்குணத்தையும் கண்டு மிரண்ட  ஆங்கிலேய அரசு மக்களுக்காக இறங்கி வந்து பல சலுகைகளை அளித்தது.  பூமிகாரகன் செவ்வாயோடு உழைப்புகாரகன் சனி இணைந்து ஜாதகத்தில் செயல்படுவதால் இவர் “இந்திய விவசாயிகளின் ஆன்மா” என அழைக்கப்பட்டார்.

காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இவரை நாடி வர சனி+செவ்வாய் நிலையே காரணமாகும். தேச விடுதலைக்கான போராட்டங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது.  அதற்காக பலமுறை சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை தனது உறுதிமிக்க செயல்களால் ஒருங்கிணைத்ததற்காக தேசம் இவரை “இந்தியாவின் இரும்பு மனிதர்” எனப்போற்றுகிறது. சூரியனின் நிலையால் முதல் துணை பிரதமராகவும் சனியின் நிலையால் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய சாமான்ய விவசாயிகள் இப்படி ஒரு மனிதர் மீண்டும் பிறந்து தங்கள் வாழ்வை காக்க வரமாட்டார்களா என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் இவருடையது. இவை அனைத்திற்கும் காரணம் இவரது ஜாதகத்தில் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் உச்சமடைந்து கர்ம காரகன் சனியோடு சேர்க்கை பெற்றதே ஆகும். இந்த சேர்க்கைக்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியன் அமைவது “அழியாப்புகழைத்தரும்” அமைப்பாகும். இத்தகைய ஜாதக அமைப்பினர் அவர்களுக்கான காலகட்டத்தில் மட்டுமே அபூர்வமாக பிறவி எடுக்கிறார்கள். அழியாப்புகழை அடைகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.  படேலின் புகழ் என்றும் அழியாதது. கட்டுமானத்திற்கு காரகன் செவ்வாய் உச்சமானதால் குஜராத்தில் அமைந்துள்ள இவரது சிலையே உலகில் இன்று உயரமான சிலையாகும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Wednesday, 18 September 2019

அரசியல் யாரை அரவணைக்கும்


கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ரகு Vs ராகு பதிவு மற்றொரு நாளில் வெளிவரும். வாசகர்கள் பொருத்தருள்க. 

அரசியலில் சதிராட்டங்கள் நிறைந்த மோசமான காலத்தில் இருக்கிறோம். இந்நிலை மேலும் வருங்காலத்தில் தாழ்வடையவே செய்யும்.  ஆனால் இந்திய அரசியல் இனிமேல்தான் தன்னை நிலை நிறுத்தி தேசம் முன்னேற பெரும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை இனி வருங்கால அரசியல் சிறப்பாகவே இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.


அரசியலில் ஈடுபட்டு பெரும் தனம் ஈட்ட முடியுமா? .பெரும் புகழைடைய முடியுமா? என்பது போன்ற கேள்விகளால் ஜோதிட உலகம் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக தமிழக தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வருடங்களே உள்ள நிலையில் , உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு செலவு செய்தால் போட்ட முதலை எடுத்துவிடலாமா? என்பது போன்ற கேள்விகள் ஜோதிடர்களின் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலே இந்த பதிவை எழுத தோன்றியது.

கீழே நேற்று பிறந்தநாள் கண்ட நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்.

சனியின் அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கிறார். சனி ராசிக்கு 1ல் ராஜ்ய ஸ்தானம் சிம்மத்தில் நிற்கிறார். இதனால் இவரது கர்மம் என்பது ராஜ கர்மம் என்பதாகிறது. கர்ம  காரகன் சனிக்கு 2 ல் சூரியன் நிற்பது இதற்கு மற்றொரு காரணம். ஜல ராசியில் பிறந்தவர். நடப்பது சந்திர திசை. சந்திரன் விரைவாக  சுற்றும் கிரகம். சுதந்திரமடைந்து இவரது ஆட்சியில் தான் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. துணிச்சலுக்கு காரணம் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து நீச பங்கப்படுவது. உலகம் சுற்றும் வயோதிகராக திகழ்கிறார். காரணம் 9 ஆம் அதிபதி சந்திரன் நீர் ராசியில் அமைந்து திசை நடத்துவதே. 7 ஆமதிபதி கர்ம காரகன் சனியுடன் ராசிக்கு 1௦ ல் அமைந்து நீசம் நோக்கி செல்வதால் குடும்ப வாழ்வு சிறப்பில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார். காரணம் சந்திர திசை முடிந்தாலும் அடுத்து வரும் ராசி அதிபதி செவ்வாய் திசையும் தனது முதல் பகுதியில் நன்மையை செய்யும் என்பதே.

அடுத்து கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



சூரியன் லக்னத்தில் நிற்கிறார். சூரியனுக்கு திரிகோணத்தில் ராகு உள்ளார். அதனால் சிந்தனை அரசியலின் பக்கம் உள்ளது. சூரியன் சனியின் நட்சத்திரத்தில் நிற்கிறார். சனி சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதாலும் சனிக்கு 2 ல் சுக்கிரன் நிற்பதாலும் அரசியல்வாதிகளுக்கு வாகன ஓட்டியாக செயல்படுகிறார். 12 ஆமிடத்திற்கு, சுக்கிரனுக்கு, 2 ஆமிடதிற்கு  பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. சுக்கிரன் 8 ஆமதிபதியோடும் மாந்தியோடும் இணைந்து நிற்கிறார். நடப்பது 7 க்கு விரையமான 6 ஆம் பாவத்தில் நிற்கும் சந்திரனின் திசை. ஜாதகருக்கு 38 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இவருக்கு லக்னத்தில் சனியின் நட்சத்திரத்தில் சனி பார்வை பெற்று நிற்கும் சூரியனால் திருமண எண்ணமே பெரிதாக இல்லை என்பதுதான்.  சனி சூரிய தொடர்பால் ஜாதகர் பிரபல ஜாதிக்கட்சி ஒன்றை சார்ந்து செயல்படுகிறார். சிம்ம ராசிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. அரசியலில் ஜாதகர் ஜொலிக்க வாய்ப்பில்லை. ஜாதகர் அடியாளாகவே செயல்படுவார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே .


ஜாதகர் சிம்ம ராசி என்பதும்.  ராகு சூரியன் சேர்க்கை பொதுச் சேவையில் ஈடுபடுத்தும் என்ற அமைப்பு மட்டுமே அரசியலுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது.  ராகு திசையில் லாப ஸ்தானத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு பணப்பட்டுவாடா செய்யும் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து ஓரளவு பொருளீட்டினார்.


பின்வரும் ஜாதகம் மற்றுமொரு ஆணினுடையது.

இந்த ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை இல்லை. ஆனால் சூரியனுக்கு திரிகோணத்தில் 5 ஆமிடத்தில் ராகு உள்ளது. கடக ராசி அரசியலுக்கு உரியது இந்த இரு அமைப்புகளால் இவர் ஒரு அரசியல் கட்சியில் தீவிர ஆதரவாளராக உள்ளார். சந்திரனுக்கு  1௦ ல் நான்கு கிரக சேர்க்கை என்பதால் இது ஒரு சன்யாச யோக ஜாதகம். 38 வயதாகியும் ஜாதகருக்கு திருமண எண்ணம் இல்லை.  குடும்பததை குறிக்கும் குரு வக்கிரமாகிவிட்டதால் குடும்பம் பற்றி இவர் வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. சுக்கிரன் அஸ்தங்கமாகிவிட்டதும் இதை உறுதி செய்கிறது. தன கார கிரகங்கள் குருவும் சுக்கிரனும் தோஷம் பெற்றதாலும் சன்யாச யோகத்தாலும் இவரால் அரசியலில் பொருளீட்டவும் முடியாது. லாபத்திலிருந்து திசை நடத்தும் சனி 1௦ ஆமதிபதி சூரியனின் சாரம் பெற்றுள்ளதால் ஓரளவு பிரபலமாக வாய்ப்புண்டு.

அரசியலில் சேவை செய்ய ராஜ கிரகங்களான சூரியன், சந்திரன், சனி, குரு  ஆகியவை சிறப்பாக ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்து திசாபுக்திகள் சாதகமாக வரவேண்டும். அரசியலில் சதிராட்டங்களில் ஈடுபட்டு பொருளீட்ட (கொள்ளையடிக்க) ராகு, சுக்கிரனின் வலு ஜாதகத்தில் இருக்க வேண்டும். இவற்றை தவிர ராஜ்ய ஸ்தானம் எனப்படும் 1௦ ஆமிடமும், சூரியனும் வலுவடைந்து சாதகமான திசை வந்தாலும் அரசியலில் ஈடுபடலாம். பொதுவாக நெருப்பு ராசிகள் 3 ம் (மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை), கடகம், கும்பம் ஆகியவையும் அவற்றின் அதிபதிகளும் சாதகமாக அமைந்த ஜாதகர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

அரசியலில் ஈடுபட சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு ஆகியவை இளம் வயதில் கடும் சோதனைகளையும் இழப்புகளையும் ஒருவருக்கு கொடுத்து, பல தியாகங்களை செய்ய வைத்து அவற்றில் அவர் தேரிய பிறகே இக்கிரகங்கள் அரசியலில் வெற்றிகரமாக உலா வர உதவுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் சரி, கடந்த காலங்களிலும் சரி நமது மாபெரும் அரசியல் தலைவர்களின் வரலாற்றை கவனித்தால் இவ்வுண்மை புரியவரும். அரசியல்வாதியின் வாரிசாக பிறந்துவிட்டால் மட்டுமே ஒருவர் அரசியல்வாதியாகிவிட முடியாது.

இப்போது கூறுங்கள் நீங்கள் அரசியலுக்கு வரத் தயாரா.?

தன்னலமற்ற தியாகிகளை இன்றைய அரசியல் எதிர்பார்க்கிறது.


மீண்டும் அடுத்த வாரத்தில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்
கைபேசி: 08300124501



Sunday, 8 June 2014

குருப்பெயர்ச்சி – என் தேசம் என் மக்கள்

கருணைக் கடல் களங்கமற்ற முழுமையான ஒரே சுபன் குருபகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்கு இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறார்.

உலக மக்கள் அணைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும். மனித வாழ்வை இயக்கும் இரு மகத்தான மாபெரும் சக்திகள் இவை இரண்டும் என்றால் அது மிகையல்ல. இதை ஜோதிடர்கள் நன்கறிவர். இந்த இரண்டு கிரகங்களுமே தனது உச்ச வீட்டில் இந்த வருடத்தில் நிலைகொள்வது அரிதான செயல்.

இதன் தாக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதில்தான் சாமான்யனுக்கு ஆவல்.

இனி பலன்களைக் காண்போம்.


இந்தியா :


இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ரிஷப லக்னத்திற்கு பாக்யாதிபதி சனி பகவான் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருக்கிறார். பாக்யாதிபதி உச்சத்திலிருக்கும் போது பாக்யங்களை தரத் தவறாது என்பது ஜோதிட உண்மை. நீதிமான் சனியும் தனது பணியை செவ்வனே செய்துள்ளார். ஆம் இந்தியாவை அதன் மக்களை கொடூர அரசியல்வாதிகளிடமிருந்து காத்துவிட்டார். இந்தப் பணியை தன்னுடன் கோச்சாரத்தில் உடனிருக்கும் ராகுவின் கடும் எதிர்ப்பையும் மீறி செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ராகுவின் அம்சமே இந்தியாவை ஆட்சி செய்யும் என்று கடந்தவருட குருப்பெயர்ச்சி பற்றிய பதிவிலேயே  பார்த்தோம். ராகு சனியைப் போல செயல்படுபவர் என்பதால்தான் 17 ஆம் தேதி பிறந்து (17.09.1950) எண் ஜோதிடப்படி சனியின் ஆதிக்கத்தில் வரும் 8 ஆம் எண்ணுக்குரியவரும் சனியின்  நட்சத்திரத்தில் (அனுஷம்) பிறத்தவருமான மோடி  தேசத்தை வழி நடத்துபவராக ஆகியிருக்கிறார்.

ராகு விதவைப் பெண்ணை குறிக்கும் என்பதால் விதவையை (சோனியா காந்தியை) தலைவியாகக் கொண்ட காங்கிரஸ் ராகுவின் அம்சம். ராகு நிழல்கிரகம் என்பதால்தான்  காங்கிரஸ் பின்னாலிருந்துதான் தேசத்தை இயக்கியது. சனியின் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் மோடி. எனவே மோடி  சனியின் அம்சம். சனி முழுமையான முக்கிய கிரகம் ஆகும்.எனவே பி.ஜே.பி தேசத்தை நேரடியாக இயக்குவதை காணலாம். ஆனால் சனிக்கு  ராகு (பி.ஜே.பி க்கு காங்கிரஸ்) முழுமையாக துணை நிற்கும்.

கடலில் மூழ்கும் மனிதனின் கடைசி  நேரக் கூக்குரல்போல பிரிவினைவாதிகள் 2016 மத்திவரை கூச்சலிடுவார்கள்  பிறகு காணாமல் போவார்கள் என்று சென்ற வருட குருப்பெயர்ச்சி பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவை படிப்படியாக  காங்கிரசின் சதிராட்டங்களுக்குமுன் அழிவதை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும்  என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தேர்தலில் அதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரிந்தது. தி.மு.க, ம.தி.மு.க , சமாஜ்வாடி , பா.மா.கா, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற அத்தகைய கட்சிகளை காங்கிரஸ் கட்டம்கட்டி காணாமல் போகச் செய்ததை கண்கூடாகக் காண முடிந்தது . இதில் கம்யுனிஸ்டுகளும் காணாமல்போனதுதான் வேதனை. இனி வரும் காலங்களில் இந்தக் கட்சிகளை பி.ஜே.பி கையாளும் விதத்தைப் பார்த்து  இக்கட்சிகள்,  காங்கிரசும் பி.ஜே.பியும் இரட்டைக்குழாய்  கொண்ட ஒரே துப்பாக்கிதான் என்பதை உணரும் .

தற்போது இந்தியாவின் ராசியான கடக ராசிக்கு பாக்யாதிபதியான குருவும் தனது உச்ச வீட்டிற்கு வருகிறார். மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுக்கவிருக்கிறார் என்பதை அறிந்து கிரகங்கள் அதன் உச்ச வீட்டிற்கு விரைந்தன என்பது புராண கதை (ஸ்ரீராமனின் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம்). தற்போது சுதந்திர இந்தியா தனது ஜாதக தோஷங்கள் அணைத்திலும் இருந்து விடுபட்டு சரியான பாதைக்குத் திரும்பியுள்ள சூழ்நிலையில் இந்த குருப்பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்தது.கோவர்த்தனகிரியை தனது சுண்டுவிரலால் தூக்கி மக்களைக் காத்த அந்த கோபாலனைப் போல நம் இந்தியாவைக் காக்க மோடியை அனுப்பி வைத்தான் இறைவன்.
படம் உதவிக்கு நன்றி: இஸ்கான்.


சனியைப் போல் ராசிக்கு பக்யாதிபதி குருவும் நமது தேசத்திற்கு பாக்யங்களை தரத் தயங்கமாட்டார் என்பது உறுதி. கடந்த வருட குருப்பெயர்ச்சி பற்றிய பதிவில் நான் குறிப்பிட்டவற்றை இங்கு நினைவு கூர்வோம்.

அதில் முக்கியமானவை, நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது, தேசம் இருகட்சி ஜனநாயக முறைக்குத் திரும்புவது, ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள், தமிழகமின்வெட்டு  போன்றவை. குறிப்பாக பாதுகாப்பு, ராணுவம்  மற்றும் அது தொடர்புடைய வின்வெளி &  ஏவு சாதனங்கள் போன்றவற்றில் எப்போதும் இல்லாத பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.  சென்ற வருட குருப்பெயர்ச்சி பதிவில் நான் மேலும் சிலவற்றை  குறிப்பிட்டிருந்தாலும்  அவை அணைத்தையுமே நேரடியாக மக்கள் உணர முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரிவிணைவாதிகள் மற்றும் தேசவிரோத, சுயநல அரசியல்வாதிகள் சூழ்ச்சிக்காரர்கள் மக்களால் ஒதுக்கப்படுவர் என்றது நடந்தது என்றாலும் காங்கிரசும் பி.ஜே.பியும் வெளிப்படையாகக் கூறமுடியாத சில அவசியத்தின் பொருட்டு இவர்களை இன்னும் சில ஆண்டுகள் முழுமையாகக் அழித்துவிடாது கட்டுப்படுத்தி மட்டுமே வைத்திருக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

உலகம்:
உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு உயரும். அதன் பொருளாதாரம் மேம்படும். ஆனால் அமெரிக்கா இனி இந்தியாவின் உதவியின்றி உலக அரங்கில் தன்னால் கோலோச்ச முடியாது என்ற உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளும்.

சீனாவிற்கும் இந்தியாவிற்குமான உறவு சீரடையும் என்றாலும் சில மறைமுகமான விரும்பத்தகாத விளைவுகள் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைந்து விருச்சிகச் சனியால் பார்க்கப்படுபோது (மார்கழி மாதம்) ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது  டெல்லி, ஸ்வீடன், பிரசில், மொராக்கோ, நார்வே போன்றவை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

சீனா தனது நாட்டில் வளர்ந்துவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒடுக்க ஈவிரக்கமற்ற முறைகளைக் கையாளும்  என்றாலும் சில குண்டுவெடிப்புகளை தடுக்க இயலாது. ஆனால் குரு பார்வை செவ்வாய்க்கும் விருச்சிக ராசியிலிருக்கும் சனிக்கும் ஏற்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் பெரும் சீரழிவைக் கொண்டுவரும். அமெரிக்கா மட்டுமின்ற சீனா மற்றும், ரஷ்யாவும் அதை ஒடுக்க முன்வரும் என்றாலும் அது உடனடியாக முடியாது. ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாவர் என்பதை சனி, ராகு, செவ்வாயின் நிலை குறிப்பிடுகிறது.

தனுசு ராசி அமைப்பில் வரும் அரேபிய தீபகர்ப்பத்தில் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் அதிகமாகும். காரணம் தனுஷு ராசிக்கு நவம்பர் மாதம் ஏழரை சனி துவங்குகிறது.  அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவிற்கும் கருத்துவேறுபாடு அதிகமாகும். அதனால் அவ்விரு நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகவிருப்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. டிசம்பர் மாதம் தனது உச்ச வீட்டில் வக்கிரமடையும் குரு அப்படி ஒரு சூழ் நிலையை ஏற்படுத்துவார்.

மீன ராசி அமைப்பில் வரும் இலங்கை சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மதிப்பான நிலைக்கு மாறும். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே செயல்படும். மீனவ மற்றும் கச்சத்தீவு பிரச்சனைகளைப் பொறுத்தவரை அவை இரு நாட்டு நல்லுறவைப் பாதிக்காது. காரணம் அது அரசியல் காரணங்களுக்காக இந்திய இனவாத அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படும் ஒரு மாயையே.

பாகிஸ்தானின் சுதந்திர ஜாதகம்.

பாகிஸ்தான் உள்நாட்டுத் தீவிரவாதத்தால் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்படும் என்பதை பாகிஸ்தானின் ஜாதகத்தில் சுக்ரதிசையில் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் சனி புக்தி மற்றும் கிரக சஞ்சார நிலைகளில் இருந்து அறியமுடிகிறது. பாகிஸ்தான் விரித்த வலையில்  பாகிஸ்தானே விழுந்து தப்பிக்க வழியின்றி தவிக்கும். மக்கள் பாகிஸ்தானில் பிழைத்திருக்க எத்தகைய செயலுக்கும் துணிவர். ஆளும் தலைவர்களை நம்பிப் பயனில்லை எனும் சூழ்நிலையில் மக்கள் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. மக்களின் ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராகப் போராடாமல் அதன் ராணுவத்திற்கு எதிராகப் போராடும் அதிசய நிகழ்வை வரும் மாதங்களில் அங்கு  காணலாம். ஆளுபவர்கள் மக்களுக்காக இல்லாமல்  தங்களைக் காத்துக்கொள்ள ராணுவத்துடன் இணைந்து செயல்படுவர். அதனால் ஆள்கடத்தல் மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல் மரணங்கள் பாகிஸ்தானில் சர்வ சாதாரணமாகிவிடும்.

மனிதனை அழிக்க மனிதனே கருவியாகும் தற்கொலைப்படை தாக்குதலை ராஜீவ்காந்தி மரணம் மூலம் உலகிற்கு விடுதலைப்புலிகளால் அறிமுகப்படுத்தியவன்  தமிழன் என்ற முறையில் ஒரு தமிழன் என்று கூறுவதற்கே நான் வெட்கப்படுகிறேன்.


தமிழ்நாடு:
சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே 90%  மின்வெட்டு இருக்காது என்று கடந்த ஆண்டு எழுதியிருந்தேன். அதன்படியே நடக்கிறது. ராகு கேதுப் பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சிகள் தமிழக அரசின் மின்திட்டங்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வர வருட இறுதியாகும் என்பதைக்  குறிப்பிடுகின்றன. திட்டங்களை தீட்டுவது மனிதர்கள்தான் எனினும் அவை செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் கால கட்டத்தை கிரக நிலைகளைக் கொண்டு தெளிவாக அறியலாம்.

அரசியலில் இது ஜெயலலிதாவின் காலமே. அரசை ஜெயலலிதா மிகச் சிறப்பாகவே வழிநடத்துவார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலும் அவருக்கு சாதகமே என்பதை அவருக்கு நடக்கும் குரு திசையின் வலிமையை வைத்து தெளிவாக அறியலாம். மூன்று கிரகங்கள் உச்சமான  கருணாநிதியின் ஜாதக வலு தற்போது செயலிழந்துவிட்டது.

பி.ஜே.பிக்கு தமிழ் நாட்டிலிருந்து முக்கியமான உதவிகள் கிடைக்கும் என்பதை கிரகச் சூழ்நிலைகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

மோடியின் முன் உள்ள சவால்கள்:
உள் நாட்டுப் பாதுகாப்பு.
நக்சலைட்டுகளை வேரறுப்பது.
இயற்கைவளங்களை அழிக்காது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது.
விவசாயத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பது.
உற்பத்தி, வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம்.
ராணுவ பாதுகாப்புக் கட்டமைப்பை பலப்படுத்துவது, அவற்றிற்குத் தேவையான நவீன தளவாடங்களை தடையின்றி கிடைக்கச் செய்வது.
வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது.
நீராதாரங்களை பாதுகாப்பது மற்றும் நதி நீர் மேலாண்மையை சீரமைப்பது.
மதமாற்றத்தை ஒழிப்பது. முக்கியமாக கிறிஸ்தவத்தின் மூலம் நமது பண்பாட்டை சிதைக்க முயலும் அந்நிய சக்திகளை அழிப்பது. அதாவது கிறிஸ்தவத்தை வேரறுப்பது.
கூடங்குளம் போன்று தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவைகளை தடைசெய்திட முயன்ற வெளிநாட்டு சதிக்குத் துணை நிற்பவர்களை பைத்தியக்காரர்களாக்குவது. அதன் மூலம் அத்தகைய அந்நிய சக்திகள் இந்தியாவைக் கண்டு நடுநடுங்கச் செய்வது.
தேச வளர்ச்சிக்கு தேவையான சிறந்த தலைவர்களை உருவாக்குவது.
மதம், இனம், மொழி,பிராந்திய, ஜாதீயவாதிகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது. இவைதொடர்பான சமுதாய மற்றும் அரசியல் அமைப்புகளை கட்டுப்படுத்துவது.
செயலற்றுவிட்ட நீதித்துறையை வலுப்படுத்துவது. (ஆனால் இவற்றிற்கு சுயாச்சி அளித்தால் இத்துறையினருக்கு சம்பளம் அமெரிக்காவிலிருந்துதான் வரும் என்பதால் சுயாச்சி கூடாது.)
கல்விக்கு, சுற்றுப்புற சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது. (சீனாவில் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடுவிளைவிப்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது).
வளர்ச்சிக்குத் தேவையான எரிபொருள், மின்சாரம் போன்றவற்றில் அதிக ஆய்வும் முதலீடும் தேவை. இல்லையேல் வளர்ச்சி தடைபடும்.
வனவளங்களை பாதுகாப்பது. மரம் வெட்டுபவர்களையும் மரக்கடத்தலுக்கு துணை புரிபவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை அளிப்பது.
இவை எல்லாவற்றையும்விட தவறு செய்துவிட்டு மத, மொழி, இன, பிராந்திய, ஜாதீயப் போர்வைக்குள் ஓடி ஒளியும் பாதகர்களை கடுமையாகத் தண்டிப்பது அவசியம். இதற்கு பொது சிசில் சட்டம் அவசியம்.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரஸ் வகுத்துச் சென்ற பாதை சிறப்பானதே. அவசியம் ஏற்பட்டாலன்றி அதில் மாற்றம் கூடாது.
அண்டை நாடுகளுடன் உறவுகளை மோடி எப்படி கையாள்கிறார் என்பதிதான் பி.ஜே.பி யின் வெற்றி உள்ளது. எனவே அண்டை நாடுகளுடனான உறவில் மிகுந்த கவனம் தேவை.

இந்தியாவின் இறையாண்மை என்பது பாகிஸ்தானைச் சார்ந்தே உள்ளது.
காஷ்மீரைப் பொறுத்தவரை அங்கு அரசியலைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவில் பல மாற்றங்கள் தேவை. ஆனால் அதை நீக்குவது கூடாது என்பது எனது தனிப்பட்ட அபிமானம். அதாவது காஷ்மீரில் அங்கு பூர்வ குடிமக்களான பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். காஷ்மீரில் திருமணம், குடியுரிமை போன்றவற்றில் இந்தியாவின் உரிமை முழுமையாக நிலை நாட்டப்பட வேண்டும். இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பிரிவினைவாதிகளின் ஆணிவேர்கள் இந்தியாவின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இயங்கவேண்டும். மறுப்பவர்கள் ஒழித்துக் கட்டப்படவேண்டும். ஆனால் அங்கு பிற மாநிலத்திவர்கள் குடியேற, நிலம் வாங்கும் உரிமைகளில் நீடித்த நடைமுறை தேவை. அவசரகதியில் இவற்றை செயல்படுத்தக் கூடாது. ஏனெனில் அது எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.  


விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

குறிப்பு: 
ஆய்வுக்கு உதவிய ஆதார நூல்கள்; சாராவளி, உத்திர காலமிர்தம்.

குறிப்பிட மறந்த பிற்சேர்க்கை:
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இவ்வருட பின்பகுதியில் குரு திசையில் துவங்கும் சனி புக்தி சில இடர்பாட்டைத் தர உள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சியாகி வரும் அஷ்டமாதிபதி குருவும் ராசிக்கு 4 ல் (அர்தாஷ்டமத்தில்) விருச்சிக ராசியில்  நிலை கொண்டு சிம்ம ராசிக்கு ராஜ்ய ஸ்தானமான 10 ஆமிடத்தைப் பார்க்கும் சனியும் அவரது பதவிக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனினும் சனி லக்னாதிபதி புதனின் சாரத்தில் உள்ளதாலும் குருவின் வீட்டில் நிலைகொண்டுள்ள கேதுவாலும் இது தவிர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு. கேது 11 ஆம் பார்வையாகவும் விருச்சிக சனி 3 ஆம் பார்வையாகவும் சிம்ம ராசிக்கு 6 ஆமிடத்தை (எதிரி ஸ்தானத்தை) பார்ப்பதாலும்  இது தவிர்க்கப்படக்கூடும். நாட்டில் நல்லாட்சி தொடரவேண்டும் என்ற ஆவலில் இது எச்சரிக்கையாக முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது.