Thursday 30 January 2020

கொரோனா கிருமியும் ஜோதிடமும்


இன்று கொரோனா விஷக்கிருமி சீனாவில் தோன்றி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுவும் மக்களின் தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்பட்டதாகவே அறியப்படுகிறது. பாம்பு மாமிசத்தை சரியாக சமைக்காமல் உண்டதால் ஏற்பட்ட  விளைவே இக்கொரோனா கிருமி என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சென்ற நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில்  துவங்கிப் பரவி ஆட்கொல்லி நோய்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்ட பால்வினை நோயான AIDS க்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. AIDS குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படும் நிலையில் ராட்சத பாம்பு வடிவில் பட்டங்கள் விடுவதும், ராட்சத பாம்பு பொம்மைகளைகொண்டு ஆடப்படும் நடனமும் சீனாவில் மிகப்பிரபலம். இதன் ஜோதிட அடிப்படை என்னவென்றால் சிவப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்தும் சீனா சிவப்பு நிறத்தை குறிக்கும் செவ்வாயின் அம்சமாக கருதப்படுகிறது. சீனாவின் செயல்பாட்டில் செவ்வாயின் ஆக்கிரமிப்புத்தனமும் போர்க்குணமும், கட்டுப்பாடுகளும் வெளிப்படுவதிலிருந்து இதை நாம் உணரலாம்.  சீனாவை பொறுத்தவரை அதன் ஜாதக அமைப்பின் செவ்வாய் தனது கடும் பகை கிரகமான ராகுவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். இதனை ராட்சத பாம்பு வடிவ பட்டங்களை பறக்கவிட்டு சீனர்கள் மகிழ்வதிலிருந்தும், ராட்சத பாம்பு வடிவங்களைக்கொண்டு ஆடப்படும் சீனர்களின் டிராகன் நடனங்களில் இருந்தும்,  பாம்பு மாமிசத்தை பிரதான உணவாக எடுத்துக்கொள்ளும் அவர்களின் உணவுப்பழக்கத்தில் இருந்தும் நாம் அறியலாம்.


ராகுவிற்கு செவ்வாய் கடுமையான பகைக்கிரகமாகும். ராகு கோட்சாரத்தில் தற்போது வாயு ராசியான மிதுனத்தில் தனது சுய சாரமான திருவாதிரையில் அமர்ந்து ரத்த அணுக்களை குறிக்கும் செவ்வாயின் மிருகசீரிச நட்சத்திரத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. அதே சமயம் தனது சொந்த வீடான விருட்சிகத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் மிதுன ராசியதிபதியும் தனது பகைக்கிரகமுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் தற்போது அமைந்துள்ள செவ்வாயை நோக்கி கேது நகர்ந்து வருவதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். இப்படி கால புருஷனுக்கு ஆயள் ஸ்தானமான விருட்சிகத்தில் அமைந்து கேதுவின் தீண்டலால் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் பாதிக்கப்படும் நிலையில் இந்த கொரோனா கிருமி பரவுவது கடுமையான விளைவுகளை உலகத்தில் ஏற்படுத்தும் எனலாம். ராகு குறிக்கும் கிருமி ராகுவின் பகைக்கிரகமான செவ்வாயின் அம்சமான சிவப்பு நிறத்தை பிரதானமாக பயன்படுத்தும் சீனாவில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உலகில் சிவப்பு  நிறத்தை பிரதானமாக பயன்படுத்தும் நாடுகளையும், சந்திரனின் அம்சமாகவும், ராசி லக்னமாகவும் குறிப்பிடப்படும் நாடுகளையும் இந்த கிருமி அதிகம் பாதிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் சிவப்பு நிறம் ஆட்சி செய்யும் (கம்யூனிஷம்) கேரளாவில் முதல் கொரோனா கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சிவப்பு நிறம் அதிகம் ஆட்சி செய்யும் செவ்வாயின் அம்சங்களான மணிப்பூர், மேற்கு வங்கம் இப்பகுதிகளிலும் இத்தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதன் பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட அதிகம் இருக்கக்கூடும். தமிழ்நாட்டை கேதுவின் அம்சம் கொண்ட ஆன்மீகம், கல்வி, மருத்துவத்திற்கு உரிய பூமியாக ஜோதிட ரீதியாக நான் கணிக்கிறேன். இதன் அடிப்படையில் ராகுவின் பாதிப்புகளை கேது சரிசெய்யும் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டுப்பண்டைய மூலிகை சிகிச்சை முறைகளால் இக்கிருமித்தொற்று  தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பலவீனச் சூரியன் நோய்த்தொற்றுக்கு உரிய கிரகமாக கூறப்படுகிறது. எனவே சூரியனின் கதிர்கள் அதிகம் ஆளுமை செலுத்தும் பாலைவனப்பகுதிகள், நிலநடுக்கோட்டு பகுதி நாடுகளான  ஆப்பிரிக்க கண்டத்திலும் இக்கிருமி அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை  என்பது எனது அனுமானம்.    
இனி இந்த கிருமி பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்வோம்.

பொதுவாக விஷக்கிருமிகளை குறிக்கும் காரக கிரகங்கள் ராகுவும் கேதுவுமாகும். இவற்றை இனங்காண்பது எளிதல்ல. பல்வேறு நவீன முறைகளை கையாண்டுதான் கிருமிகளின் வகையை உறுதியிடமுடியும். கோட்சாரத்தில் ராகு வாயு ராசியான மிதுனத்தில் நிற்கிறது. காற்று ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்துகொண்டே இருப்பது. இதனால்தான் இக்கிருமி விரைவாக பரவுகிறது. கிருமிகள் ரத்தத்தில் எவ்வளவு விரைவாக  பரவி உடலில் மரபுக்கூறுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறதோ அவ்வளவு விரைவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

இத்தகையை கிருமிகளால் ஜோதிடப்படி யார் பாதிக்கபடுவர் என்பதை காண்போம். தொற்றுக்கிருமிகளால் மொத்தமாக உயிரிழப்புகள் ஏற்பட ராகு-கேதுக்களே ஜோதிடப்படி காரணமாகும். எனவே

1.பிறப்பு ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் கூட்டு மரண பாவம் எனக்கூறப்படும் 4 ஆம் பாவத்தில்  நிற்கும் ஜாதகர்கள்.

2.ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் தொடர்புடைய மாரக திசை நடப்பில் இருந்து அவை வாயு ராசிகளில் நிற்கும் ஜாதக அமைப்பினர். 

3.கிருமித்தொற்றுக்கு உரிய கிரகம் பலவீனமான சூரியனாகும். அதனால் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக அமைந்துள்ள ஜாதகர்கள் பொதுவாக எளிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4.ஜீவ காரக கிரகமான குரு ஜாதகத்தில் பாதகமாக அமைந்து குருவோடு ராகுவோ அல்லது கேதுவோ  இணைவு பெற்றவர்கள். மற்றும் குருவிற்கு திரிகோணத்தில் ராகு-கேது அமையப்பெற்றவர்கள்.

5.ரத்தத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். ரத்த அணுக்கள் உற்பத்தியை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். அந்த வகையில் பிறப்பு ஜாதகத்தில்  சந்திரனும் செவ்வாயும் ராகு-கேதுக்களால் தொடர்பு பெற்ற அமைப்பில் இருக்கும் ஜாதகர்கள். அல்லது சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு-கேதுக்கள் அமையப்பெற்ற ஜாதகர்கள் மற்றும் சந்திரனையோ அல்லது செவ்வாயையோ நோக்கி ராகு-கேதுக்கள் வரக்கூடிய அமைப்பின் பிறப்பு ஜாதகம் அமையப்பெற்றவர்கள்.

6. ரத்த காரகன் சந்திரனோடு தொடர்புடைய ரிஷபம் (சந்திரன் உச்சமாகும் ராசி) , கடகம், விருட்சிகம் மற்றும் இவற்றுக்கு அடுத்த ராசிகளான மிதுனம், சிம்மம், தனுசுவில் ராகு கேதுக்கள் அமைந்து முன்சொன்ன ராசிகளை நோக்கி ராகு-கேதுக்கள் வரும் அமைப்பில் பிறப்பு ஜாதகம் அமையப்பெற்றவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புண்டு என ஜோதிட ரீதியாக அறியமுடிகிறது.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள ஜோதிடம் ஏதேனும் வழிகளை கூறுகிறதா எனக்கேட்டால் ராகுவின் பாதிப்புகளை கேதுவின் துணைகொண்டு சரி செய்யலாம் என்பதற்கேற்ப மக்கள் அதிகம் கூடுமிடங்களில் உலாவுவதை கூடுமானவரை தவிர்ப்பது நலம். இதனால் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு. ஜோதிட ரீதியாக கேது தனிமை விரும்பி என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப்பழக்கத்தை சீராக வைத்துக்கொள்வது முடிந்தவரை எளிதில் செரிமானமாகும் உணவுவகைகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். புலனடக்க பயிற்சிகளையும், யோகாசனம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றையும் கடைபிடிக்கலாம். ஆதித்ய ஹிருதயம் பிடிப்பது நன்மை பயக்கும். ராகு-கேதுக்களின் பாதிப்புகளால்தான் இத்தகைய கிருமிகள் பாதிப்பை தரும் எனவே ராகு-கேதுக்களின் பாதிப்புகளை விஷ்ணுவை வழிபடுவதன் மூலமாக குறைத்துக்கொள்ளலாம். ராகு-கேதுக்களுக்கு கிரக பதவியை பெற்றுத்தந்தவர் என்பதால் சர்ப்ப கிரக தோஷத்திற்கு விஷ்ணுவை வழிபடுவது நலம்பயக்கும். இதன் அடிப்படையில் பாற்கடலில் ஆதிசேஷனோடு பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், தும்பிக்கையாழ்வார், சரபேஸ்வரர்  போன்ற தெய்வங்களோடு கோவிலில் சென்று துர்க்கை, பகவதி, மாசாணியம்மன் மற்றும் சர்ப்ப வழிபாடுகளையும் செய்து வரலாம்.

கொரோனா கிருமிக்கு என்றில்லாமல் பொதுவாக மருத்துவ சிகிச்சைக்கு ஒருவரின் பிறப்பு ராகு-கேதுக்களின் மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்தில் செல்வது நன்மை தரும். வியாதிகள் விரைவில் தீரவும் நல்ல மருத்துவர் கிடைப்பதற்கும் இது உதவும். ராகு தொடர்புடைய தோல் வியாதிகளுக்கு எனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களில் பிறப்பு ராகு மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்தில் இதை பரிந்துரைத்து சிறப்பாக செயல்பட்டதை கண்டிருக்கிறேன். மேலும் ராகுவினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் ஒருவரின் பிறப்பு கேதுவின் மீது கோட்சார சந்திரன் செல்லும் நாளிலும், கேது தொடர்புடைய நோய் பாதிப்பிற்கு ஒருவரின் பிறப்பு ராகுவின்மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்திலும் செல்வது சிறப்பாக இருக்கும். ராகுவும் கேதுவும் ஒன்றுக்கொன்று ஏழாமிடமான நிவர்த்தி ஸ்தான அதிபதிகளாக அமைவதே காரணமாகும். 
மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501.

Thursday 23 January 2020

கிரகங்கள் தரும் தொழில்கள்



சென்ற பதிவில் நாடி ஜோதிட முறையில் தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி ஆராய்ந்தோம். இப்பதிவில் ஜாதகத்தில் கிரகங்களின் அடிப்படையில் எப்படி ஒருவர் தனக்கான தொழிலை தேர்வு செய்வது எனக்காண்போம். ஆண்டு இறுதித்தேர்வு நெருங்கி வரும் சூழலில் ஒருவர் ஜீவனதிற்காண கல்வியை தேர்ந்தெடுக்கவும், வேலையை, தொழிலை தேர்ந்தெடுக்கவும் இப்பதிவுகள் உதவும் என்பது திண்ணம்.
  
கீழே காண்பது ஒரு பெண்மணியின் ஜாதகம்.

கன்னி லக்னம் புதனின் லக்னம். புதன் பதிவுகள், ஆவணங்கள் போன்றவற்றைக் குறிக்கும் காரக கிரகமாகும். லக்னாதிபதி புதன் 5, 6 க்குரிய சனியின் வீட்டில் பரிவர்த்தனையாகி நிற்கிறார். 6 ஆமதிபதியின் வீட்டில் புதன் நிற்பதால் ஜாதகி வேலைக்குச் செல்ல வேண்டும். சூரியனோடு லக்னாதிபதி புதன் இணைவதால் ஜாதகர் அரசாங்கத்தோடு தொடர்புகொள்ளவேண்டும். சூரியனோடு சுக்கிரன் இணைவதால் ஜாதகிக்கு வருமானம் அரசு வகையில் வரவேண்டும். சூரியன் 5 ஆமிடத்தில் நிற்பதால் அரசு வகை ஆதாயங்களை ஜாதகி அடைய வேண்டும். பரிவர்த்தனைக்குப்பின் சனி சூரியனோடு இணைவதால் ஜாதகரின் ஜீவனம் அரசு வகையை சார்ந்து அமையும். லக்னத்தில் புதன் பரிவர்த்தனைக்குப்பின்  உச்சமாவதால் புதன் சார்ந்த விஷயங்களுக்காகவே ஜாதகி இயங்குவார். செவ்வாய் கன்னியில் அமைவது பூமி வகைகளோடு ஜாதகர் தொடர்பு கொள்வதைக் குறிக்கிறது. 

சந்திரன் பரிவர்த்தனைக்குப்பின் உச்ச புதனோடு இணைவதால் ஜாதகி கல்வியில் சிறந்து விளங்கி தனது ஜீவன வகை எண்ணங்களை அடைவார். வருமான ஸ்தானமான 2 ஆமிடத்தில் தன காரகர் குரு ராகுவின் சுவாதியில் நின்று கர்ம ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் குருவின் புனர்பூசத்தில்  நிற்கும் ராகுவோடு சார பரிவர்த்தனை பெற்று நிற்கிறார். 1௦ ஆவது பாவமும் புதனின் வீடாவதால் ஜாதகிக்கு வருமானம் புதன் சார்ந்த துறைகளில் இருந்து வரவேண்டும். ராகு  1௦ ஆமிடத்தில் தனித்து நிற்பதால் புதனின் வேலையைச் செய்ய வேண்டும். சார பரிவர்தனைக்குப்பின் புதனைப்போன்று செயல்பட வேண்டிய ராகு 2 ஆமிடத்திற்கு வருவதால் ஜாதகி புதனின் காரக தொழிலைச் செய்து  பொருளீட்ட வேண்டும் என்பது கர்மாவாகும்.   ஜாதகி அரசுத்துறையில் பத்திர பதிவுத்துறையில் தலைமைப்  பொறுப்பில் பணிபுரிகிறார்.

இரண்டாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.
கடக லக்னத்தில் கண் பார்வையை குறிப்பிடும் காரக கிரகமான சூரியன்(வலது கண்) நிற்கிறது. 2 ஆவது பாவம் வலது கண்ணையும் 12 ஆமிடம் இடது கண்ணையும் குறிப்பிடும் பாவங்களாகும். இரண்டாவது பாவத்தில் 12 ஆவது பாவாதிபதி புதன் நிற்கிறார். புதன் நரம்புகளை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி செவ்வாய் 2 ஆமிடத்தில் நிற்கிறார். செவ்வாய் அறுவைச் சிகிச்சையை குறிப்பிடும் காரக கிரகமாகும். கண் பார்வையில் ஏற்படும் குறைபாடுகளை குறிப்பிடும் கிரகமான பாதகாதிபதி சுக்கிரன்  2 ஆமிடத்தில் நிற்கிறார். சுக்கிரனின் நட்சத்திரம் பூராடத்தில் 6 ஆமிடத்தில் ஜீவன காரகன் சனி வக்கிர நிலையில் நிற்கிறார். இது ஜீவன வகையில் தெளிவான நிலைப்பாட்டில் தனக்கான துறையை ஜாதகர் தெரிவு செய்வதை குறிக்கிறது. 

6 ஆமதிபதி குரு 12 ல் மறைந்து யோகம் தரும் நிலையில் அமைந்து சனியை பார்த்து லக்னாதிபதி சந்திரனையும் பார்ப்பது ஜீவன வகை சிறப்பை குறிப்பிடுகிறது.  கண் பார்வையை குறிப்பிடும் மற்றொரு காரக கிரகமான லக்னாதிபதி சந்திரன் (இடது கண்) லக்னத்திற்கு 4ல் திக்பலத்தில் நின்று தொழில் பாவமான 1௦ ஆமிடத்தை பார்வை செய்கிறார். வருமான ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்கிரனோடு இணைந்து நிற்கும் கேது சிக்கலான நரம்புகளை குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். முக்கியமாக சூரியன், புதன், செவ்வாய், கேது ஆகிய 4 கிரகங்களும் மருத்துவத்துறையை குறிக்கும் காரக கிரகங்களாகும். இதனால் ஜாதகியின் தனவரவு இந்த கிரகங்களை சார்ந்ததாகவே இருக்க வேண்டும். ஜாதகி கண் மருத்துவத்தில் உயர் கல்வி பயின்ற கண்ணொளி மருத்துவர்.  

மூன்றாவது பெண்ணின் ஜாதகம் பின்வருமாறு.

 விருட்சிக ராசியில் நீச நிலை பெற்ற சந்திரனை தொடர்பு ஸ்தானமான 7 ஆம் பாவத்திலிருந்து ராசிக்கு 1௦ ஆமதிபதி சூரியனும் ராசியாதிபதி செவ்வாயும் சுக்கிரனுடன் பரிவர்த்தனையடையும் வக்கிர புதனும்  பார்க்கிறார்கள். நீச சந்திரனை அதன் சப்தம கேந்திரத்திலிருந்து வீட்டதிபதி செவ்வாய் பார்ப்பதால் சந்திரனுக்கு நீச பங்கம் ஏற்படுகிறது.  ராசியுடனும் ராசி அதிபதியுடனும் 1௦ ஆமதிபதி சூரியன் தொடர்புகொள்வதால் ஜாதகியின் கர்மா சூரியன் மற்றும் செவ்வாய் சார்ந்ததாகும். ராசிக்கு 2 ஆமதிபதியும் தன காரகனுமான குரு நீச வக்கிரம் பெற்று சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் நின்று சூரியனையும் செவ்வாயையும் பார்ப்பது ஜாதகிக்கு வருமானம் அரசுவகையை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. 

உச்சனும் நீசனும் ஒரு ஜாதகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற விதிப்படி சனியின் அனுஷத்தில் அமைந்த சந்திரனின் சார நாதன் சனி சூரியனின் வீட்டில் அமைவதால் சந்திரன் ஜாதகிக்கு அரசு வகை வேலை சிந்தனையை ஏற்படுத்துவார் எனலாம். ராசிக்கு 1௦ ல் சூரியனின் வீட்டில் சனி அமைவதே அரசு வகை வேலை சிந்தனையை ஏற்படுத்தும் என்பதோடு சனிக்கு 1௦ ல் சனியின் வீட்டதிபதி சூரியனும் செவ்வாயும் அமைவது சனிக்கு திக்பலத்தை தரும் எனலாம். ஜாதகி, இந்திய காவல்துறையின் உயர் பதவிக்கான IPS தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்தியாவின் முதல் பெண் IPS  ஆனவரும் தனது பணிக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக தற்போது பாண்டிச்சேரியின் மேதகு ஆளுநராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் திருமதி.கிரண் பேடி IPS ஆவார்.

இறுதியாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
துலாம் லக்ன ஜாதகத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியான விருச்சிகமாகும். விருச்சிகம் சாராயம்  காய்ச்சுமிடத்தை நேரடியாகக் குறிப்பிடும் ராசியாகும். வருமான ஸ்தானமான 2 ஆமதிபதி செவ்வாய் மற்றொரு நீர் ராசியான மீனத்தில் நட்பு வீட்டில் நிற்கிறார். ஜீவன காரகன் சனி வக்கிரமடைந்த நிலையில் நீர் ராசியும் தொழிலை குறிப்பிடும் 1௦ ஆமிடத்திற்கு அதிபதியும் முக்கிய நீர் கிரகமுமான உச்ச சந்திரனுடன் லக்னத்திற்கு 8 ல் நின்று 2 ஆமிடத்தை பார்க்கிறார்.  இதனால் ஜாதகர் மதுபானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். சனி, செவ்வாய், சந்திரனை குரு பார்வை செய்தால் ஜாதகர் விஷ முறிவு, மற்றும் திரவ மருந்துகள் சார்ந்த மருத்துவத்துறையில் இருப்பார். இங்கு சனி, செவ்வாய், சந்திரனுக்கு குரு தொடர்பு இல்லாததால் ஜாதகர் மதுபானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிற்கும் நிலைகளை கூர்ந்து ஆராய்ந்தால் ஜாதகர் எந்தத் துறையில் ஈடுபடுவார் என்பதை கண்டுபிடித்துவிட முடியும். பிறகு அத்துறையில் ஜாதகரின் கல்வியையும் அறிவையும் வளர்த்துக்கொள்வது ஜாதகரின் ஜீவனத்திற்கு நலம் பயக்கும்.  இப்பதிவில் கிரகங்கள் தரும் தொழில்களைப் பார்த்த நாம் அடுத்த பதிவில் பாவங்கள் தரும் தொழில்களைப் பற்றி ஆராய்வோம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Friday 17 January 2020

நாடி ஜோதிட முறையில் தொழில்.


இன்றைக்கு ஒருவர் வாழ்வாதாரத்திற்கு ஜாதக அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுப்பது நலம். தனது தொழில் கர்மா என்னவென்று தெரியாமல் பல்வேறு துறைகளில் நுழைந்து பிறகு ஒரு துறையில் நிலை பெறுவது என்பது பல காலம் பிடிக்கும். அந்த சிரமத்தை குறைப்பதற்கு ஜாதகம் உதவுகிறது. இதனால் ஒருவர் தனது தொழில் சார்ந்த வகையில் விரைவாக முன்னேற வாய்ப்புண்டு. இன்றைய பதிவில் பிருகு நாடி அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்.

பிருகு நாடி முறையில் ஜீவனத்திற்கு சனியை முதன்மையாகக்கொண்டு ஜீவனம் தொடர்பான விஷயங்கள் ஆராயப்படுகிறது. பிருகு நாடி முறையில் ஒரு கிரகத்திற்கு 1,5,9 ல் நிற்கும் கிரகங்கள் முதல் தர கிரகச்சேர்க்கையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்ததாக இரண்டாம் தர கிரகச்சேர்க்கையாக ஒரு கிரகத்திற்கு 3,7,11 ல் நிற்கும் கிரகங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூன்றாவதாக ஒரு கிரகத்திற்கு 2,12 ல் நிற்கும் கிரகங்கள் கிரக சேர்க்கையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்று ஒருவரது தொழிலை ஆராயலாம்.

முதலாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.  

கன்னி லக்ன ஜாதகத்தில் சனி சுக்கிரனோடு கூடி ரிஷபத்தில் நிற்கிறது. சனிக்கு 9 ல் ராகுவோடு கூடி சந்திரன் நிற்கிறது. சனிக்கு 5ல் கிரகம் ஏதும் இல்லை. சனியோடு சுக்கிரன் கூடியுள்ளதால் ஜாதகர் திரைத்துறையில் சம்பாதிக்கிறார். ராகுவோடு சந்திரன் கூடி சனிக்கு 9 ல் நிற்பதால் ஜாதகர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் நெகிழிக்குடுவைகள் (Plastic bottles) உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்தார். ராகு இயற்கை அல்லாத செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சந்திரன் நீரையும் குறிக்கும் காரக கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கு 3 ல் நிற்கும் கிரகங்களை 2 ம் தர இணைவாக எடுத்துக்கொள்ளலாம் என்றபடி ஜல ராசியில் கடகத்தில் உள்ள கேது, ராகு போன்றே செயற்கை பொருள்களையும் செவ்வாய் உஷ்ணத்தில் செய்யப்படும் பொருளையும் புதன் விற்பனையையும் (புதன் – வியாபாரம்) குறிக்கிறது. சனிக்கு 2 ல் சூரியனை மூன்றாம் தர இணைவாக எடுத்துக்கொள்ளலாம். சனிக்கு 2 ல் உள்ள சூரியன் சுய தொழில், நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கிறது.

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் சனி சூரியன் புதனோடு இணைந்து குரு வீட்டில் குருவின் பார்வையில் நிற்கிறது. சனிக்கு 5 ல் குரு மட்டுமே உள்ளார். ஜாதகி அரசுப்பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். சனியோடு சூரியன் அரசுப்பணியையும் புதன்  கல்வித்துறையையும் குறிக்கிறது. சனிக்கு திரிகோணத்தில் உச்சமான குரு போதனையை குறிக்கிறது. சனிக்கு 3 ல் சுக்கிரன் நிற்கிறது. 7 , 11 ல் எந்த கிரகமும் இல்லை. எனவே இதை 2 ம் தர சனி-சுக்கிர இணைவாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஜாதகி வாகன பயணத்தின் மூலம் பணிக்கு சென்று வருகிறார் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. (சுக்கிரன் – வாகனம்).


சனிக்கு 12 ல் எந்த கிரகமும் இல்லாத சூழலில் 2 ல் ராகுவோடு சந்திரன் இருக்கிறது. இதனால் ஜாதகி சில காலம் தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றினார்.  வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக ராகு குறிக்கும் வளைகுடாவும் சென்று வந்தார். ஜாதகி ஆங்கில மொழி ஆசிரியை. ராகு ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளை குறிக்கும். ராகுவும் – சந்திரனும் வெளிநாட்டையும் சனி நிற்கும் மீன ராசி வெளிநாட்டையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்றாவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.

கும்ப லக்ன ஜாதகத்தில் சனிக்கு 5 ல் ராகு நிற்கிறார். சனியோடும் சனிக்கு 9 லும் எந்த கிரகமும் இல்லை. இதனால் ஜாதகர் ராகு குறிக்கும் ஏற்றுமதித்துறையில் பணி புரிகிறார். சனியும் ராகுவும் நீர் ராசியில் நிற்பதால் ஜாதகர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சனிக்கு 3 ல் கிரகம் இல்லை.  7 ல் உள்ள உச்ச சந்திரனும் 11 ல் புதன், கேது, சூரியன் ஆகியார் உள்ளனர். இவற்றை இரண்டாம் நிலை தொடர்பாக எடுத்துக்கொள்ளலாம். சனிக்கு 7 ல் உச்ச சந்திரன் உள்ளதால் ஜவுளி ஏற்றுமதி துறையில் ஜாதகர் உள்ளார். (சந்திரன் – ஜவுளித்துறை). சனிக்கு 11 ல் உள்ள கேது நூல், நெசவு மற்றும் பின்னலை குறிக்கும் காரக கிரகமாகும். புதன் வணிக தொடர்பை குறிக்கும் காரக கிரகமாகும். சூரியன் தலைமைப்பண்பை குறிக்கும் காரக கிரகமாகும். இதனால் ஜாதகர் வெளி நாடு ஒன்றில் ஒரு ஜவுளி  ஏற்றுமதி நிறுவனம் சார்பில் வணிக தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

4 ஆவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.

சனி வக்கிர நிலையில் துலாத்தில் உள்ளார். சனி வக்கிரமடைந்து இங்கு பின்னோக்கிச் செல்கிறது. இதனால் சனி கன்னியில் உள்ளதாக கருத வேண்டும். இதனால் கன்னியில் உள்ள சனிக்கு 5 மற்றும் 9 ல் எந்தக்கிரகமும் இல்லை எனக்கருத வேண்டும். 2 ஆம் நிலை இணைவாக கன்னியில் உள்ள சனிக்கு 3 ல் குரு உள்ளார். 7 ல் சுக்கிரனும் செவ்வாயும் உள்ளனர். கன்னிச்சனிக்கு 11 ல் கடகத்தில் எந்த கிரகமும் இல்லை. இதனால் குரு குறிக்கும் கோவில் அர்ச்சகராக உள்ளார். விருச்சிக ராசி கால புருஷனுக்கு 8 ஆவது ராசி என்பதால் அங்கு குரு அமர்ந்தது மறைபொருளை அதாவது கடவுளை ஆராதிக்கும் பணி என எடுத்துக்கொள்ளலாம். மீனத்தில் உள்ள சுக்கிரன் மற்றும் செவ்வாய் குறிப்பிடும் வீடு மற்றும் கட்டுமானப்பணி நிறுவனங்களில் ஜாதகர் பணியாற்றுகிறார்.  நீர் ராசிகளான விருசிகத்திலும் மீனத்திலும் சனியுடனான கிரக இணைவுகள் அமைந்ததால் பணி தொடர்பாக சில ஆண்டுகள் வெளிநாட்டிலும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு ஜாதக அமைவிற்கு தக்கவாறு தொழிலை தேர்ந்தெடுத்துவிட்டால் சரியான தொழிலை கண்டுபிடிக்கும்வரை தடுமாறுவது தவிர்க்கப்படும். இப்பதிவில் நாடி அடிப்படையில் தொழிலை அலசினோம் அடுத்த பதிவில் கிரகங்கள்  அடிப்படையில் நமக்கான தொழிலை இனங்காண்பது எப்படி என காண்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501.

Sunday 12 January 2020

உடற்பருமன்


இன்றைக்கு மக்களை வருத்தும் ஒரு பாதிப்பு உடற்பருமன். சீரான அளவைவிட உடலின் அங்கம் ஒன்று பெரிதாக அமைகிறதென்றால் அந்த அங்கத்தை குறிக்கின்ற பாவம் ஜாதகத்தில் வலுவாக அமைந்திருக்கிறது என்று பொருள். ஒரு உறுப்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறதென்றால் அந்த உறுப்பைக் குறிக்கின்ற பாவாதிபதி கிரகமும்  உறுப்பின் காரக கிரகமும் சிறப்பாக இருக்கிறார்கள் எனப்பொருள்.  ஆனால் ஒட்டுமொத்த உடலின் தோற்றத்தை லக்னமும்  உடலின் கட்டமைப்பை அதாவது உடலின் அளவை கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடக ராசியும் மற்றும் லக்னத்திற்கு நான்காம் பாவமும் குறிக்கின்றன. நான்காம் அதீத வலுப்பெற்றால் உடற்பருமன் ஏற்படும். மூன்றாம் பாவம் வலுப்பெற்றால் தோற்றம் சீராக இருக்கும். ராகு அதீத வளர்ச்சியை குறிக்கும் கிரகமாவதால் ராகு திசா நாதனோடும் 4 ஆம் பாவத்தோடும் தொடர்பாகும்போது அதீத உடலமைப்பை ஏற்படுத்தும். உதாரணமாக நடிகை நமீதா மற்றும் நகைச்சுவை நடிகர்  யோகிபாபு போன்றோர் ராகுவின் தாக்கம் நிரம்பப்பெற்றவர்கள். 


உதாரணமாக கடக ராசி நான்காம் பாவமாக வந்து அங்கு ராகு நின்று திசை நடத்தினால் உடற்பருமன் ஏற்படும். அது மரபணு குறைபாட்டோடு (Hormone imbalance) தொடர்புடையதாகவும் இருக்கும். ராகு வளர்ச்சியை குறிக்கும் கிரகமாகி இரத்த ரீதியான பாரம்பரிய கூறுகளை குறிக்கும் கடக ராசியில் ராகு தொடர்புகொள்வதால் இது ஏற்படும். ஆனால் மிதுன ராசி கடக ராசிக்கு விரைய ராசி ஆவதால் திசா புக்தி  ரீதியாக மிதுன ராசி செயல்பட்டால் உடற்பருமன் குறையத்துவங்கிவிடும். அப்போது உடற்பருமனை குறைக்க எடுக்கும் பயிற்சிகள் பலனளிக்கும்.  கால புருஷனுக்கு 3 ஆம் பாவமான மிதுன ராசியில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடானது ஒருவரின் உடற்பருமனை அதிகப்படுத்தவும்  ஒல்லியாக்கிவிடவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக மூன்றாம் பாவமாக மிதுன ராசியில் அமைந்து அதிலுள்ள ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் சூழலில் ராகு நான்காம் பாவமான கடகத்தில் அமைந்திருந்தால் மூன்றாம் பாவத்திலிருந்து  திசை நடத்தும் கிரகத்தின் திசையில் உடற்பருன்மன் குறைவதற்குப்பதில் அதிகமாகும். காரணம் திசை நடத்தும் கிரகம் சார ரீதியாக நான்காம் பாவ ராகுவோடு தொடர்புகொள்வதே .

கீழே ஒரு இளைஞனின் ஜாதகம்.

 1997 ல் பிறந்த இளைஞன் இவர். குரு சனியோடு பரிவர்த்தனையாவதால் நீசபங்கமடைகிறது. இதனால் நான்காம் பாவம் வலுவடைகிறது. இளைஞனுக்கு தற்போது குரு திசை சனி புக்தியில் உள்ளார். குரு  பாதகாதிபதியுடன் இணைந்து பாதகாதிபதி சூரியனின் சாரத்தில் இருந்து திசை நடத்திக்கொண்டிருக்கிறார்.  தனுசு ராசியில் கிரகங்கள் இருப்பதால் குரு தனது திசையில் மூன்றாவது பாவ பலனை தரமாட்டார். குரு தானிருக்கும் 4, 5 மற்றும் பரிவர்தனைக்குப்பின் இடம் மாறுவதால் 6 ஆமிடப்பலனையுமே தனது திசா புக்தி காலத்தில் வழங்குவார். குரு திசைக்கு அடுத்து வருவது சனி திசையே.  சனியும் 6, 5 மற்றும் பரிவர்தனைக்குப்பின் இடம் மாறுவதால் 4 ஆம் பாவ பலனையுமே வழங்குவார். குரு, சனியோடு பாதகாதிபதி சூரியன் தொடர்பாகி 4 & 6 ஆம் பாவங்களும் தொடர்பாவதால்  ஜாதகரின் உடற்பருமன் தீராத வியாதியில் கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது இளைஞனின் ஜாதகம் கீழே.


திசா நாதன் ராகு லக்னத்திற்கு 7 ல் 4 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் பூரம் – 2 ல் நின்று 2008 முதல் திசை நடத்துகிறது. இதனால் ஜாதகர் வளர வளர உடல்  பலூன் போன்று ஊதிவிட்டது. 2015 முதல் 10 ஆம் பாவத்திலிருந்து கேட்டை நட்சத்திரத்தில் சுய சாரம் பெற்று 4 ஆம் பாவத்தை பார்வை செய்யும் கால புருஷனின் 3 ஆம் பாவாதிபதி புதனின் புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் உடற்பருமனை குறைப்பதில் கவனம் செலுத்தி பெருமளவில் தனது உடல் எடையைக் குறைத்து தற்போது கட்டுக்கோப்பாக உடலை  பேணுகிறார். தற்போது ஜாதகருக்கு லக்னத்தில் ராகுவின் சதயம் – 4 ல் நிற்கும் கேதுவின் புக்தி  நடக்கிறது. கேது பொதுவாகவே குறுக்குவார் என்பதுடன் ராகுவின் செயல்களை கட்டுப்படுத்தும் சக்தியையும் பெற்றவராக  செயல்படுவார் என்பதால் தற்போது உடலை கட்டுக்கோப்பாக ஜாதகர் பயிர்ச்சிகளின் மூலம் பேணுகிறார்.

பின்வரும் ஜாதகம் ஒரு பெண்ணினுடையது.


ஜாதகி 1995 ல் பிறந்தவர். திருமணமாகிவிட்டது. கணவனை குறிக்கும் 7 ஆமிடத்தில் கால புருஷனின் 4 ஆம் அதிபதி சந்திரன் அமைந்துள்ளார். 7 ஆமிடம் கணவர் எனக்கொண்டால் 7 க்கு 4 ஆமிடமான 10 ஆமிடம் கணவரின் உடற்கட்டை குறிக்கிறது. 10 ஆமிடத்தை அதை அதிபதி குரு புதனின் கேட்டை நட்சத்திலிருந்து பார்க்கிறார். 7 க்கு விரையத்தில் 6 ல் அமைந்த 7 ஆமதிபதி குரு, 7 க்கு பாதகாதிபதியான லக்னாதிபதி புதனின் சாரம் பெற்று திசை நடத்துகிறார். இதனால் ஜாதகியின் கணவரின் உயிருக்கு பாதிப்புள்ளது. குரு பார்வை பெறும் இடம் வளர்ச்சியடையும்   என்பதற்கேற்ப குரு 7 க்கு 4 ஆமிடமான 1௦ ஆமிடத்தை பார்ப்பதால் கணவர் சற்று உடல் பருத்தவராக இருந்தார். திருமணமானவுடன் உடல் பருமனை குறைக்க முறையான மருத்துவர்களை தொடர்புகொள்ளாமல் தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி மருந்து வில்லைகளை உட்கொண்டார். ஜாதகிக்கு களத்திர காரகன் செவ்வாயின் சாரம் சித்திரை- 1 பெற்ற சுக்கிர திசையில் களத்திர பாவமான 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி சந்திரனின் சாரம் பெற்ற புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. புதன் சுக ஸ்தானாதிபதி என்பதால் தனது புக்தியில் ஜாதகிக்கு திருமணத்தை செய்வித்தார். 7 க்கு பாதாக ஸ்தானமான லக்னத்திற்கும் உரியவரானதால் அதே தனது புக்தியில் கணவரின் உயிரையும் பறித்துவிட்டார். கணவர் உடல் எடையை குறைக்க உட்கொண்ட மருந்துகளின் விளைவால்  திருமணமான மூன்று மாதத்தில் மரணமடைந்தார். புதன் மருந்துக்களுக்கு காரக கிரகம் என்பதை கவனிக்க. தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி மருந்து உட்கொள்வோர் கவனம். 
 
சில வருடங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற எங்கள் மதிப்புமிகு பள்ளி ஆசிரியரின் ஜாதகம் கீழே.


ஜாதகத்தில் உடலின் கட்டமைப்பை குறிக்கும் நான்காம் பாவத்தில் வாழ்க்கையில் எதையும் அளவாக அனுபவிக்க வைக்கும் கேது உள்ளார். இதனால் இவரின் உடற்கட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரே சீராக ஒல்லியாகவே உள்ளது. திரைத்துறை இயக்குனர் மனோபால போல எப்போதும் எதிர்க்காற்றில் வந்தது போலவே காணப்படுவார். இவரின் உடற்கட்டை பார்த்து பொறாமைப்படாத சக ஆசிரியர்களே இல்லை எனலாம். 1௦ ஆம் பாவத்தில் நின்ற ராகுவின் திசையில் ஜாதகருக்கு ஆசிரியராக பணி கிடைத்தது. தனது சிறப்பான சேவையால் நல்லாசிரியர் விருது பெற்றவர். ராகு குருவின் விசாகம் – 2 ல் நிற்கிறது. ராகு நின்ற பத்தாம் பாவத்திற்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியனும் செவ்வாயும் அமைந்துள்ள அமைப்பு அரசு ஆசிரியர் பணி பெற காரணாமாக இருந்தது. 1957 ல் பிறந்த ஜாதகருக்கு 1986 ல் குரு திசை வந்தது. குரு 3 ஆம் பாவத்தை பார்க்கிறார். 4 ல் கேது இருந்து உடலை குறுக்குகிறது. கால புருஷனின் 4 ஆம் பாவமான கடக ராசியில் பாவ கிரகங்கள் அமைந்து அதன் அதிபதி சந்திரன் அந்த பாவத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் உச்சமானதால் உடல் கட்டமைப்பு பேணப்பட்டது. குரு திசையை அடுத்து  2002 ல் வந்த சனி திசையிலும் ஜாதகர் உடல் கட்டுக்கோப்பாகவே காணப்படுகிறது. சனி லக்னத்தையும் கால புருஷனுக்கு 4 ஆம் அதிபதி சந்திரனையும் பார்க்கிறது என்பதே காரணம்.

மனித வாழ்க்கையை மட்டுமல்ல மனித உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பதே உண்மை. இறைவனால் படைக்கப்பட்ட கிரகங்களின் தயவின்றி உயிரினங்களுக்கு எதுவும் நடைபெறாது. இதையே அவனன்றி எதுவும் அசையாது என நமது இந்து தர்மம் கூறுகிறது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Friday 3 January 2020

செல்போன் தோஷம்!


நாளுக்கு நாள் புதுமையான விஷயங்கள் அறிமுகமாகி பழமையானவைகளை புறக்கணிக்க வைக்கிறது. புதுமைகளை நாட நாட நமக்கு வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. பொருளாதார வளர்ச்சிகளும் கூடும். எனவே புதுமைகளை புறந்தள்ளினால் வாழ்வில் முன்னேற முடியாது. ஆனால் புதுமைகளை அதீதமாக பயன்படுத்துவது அதாவது உண்ண  உறங்கக்கூட மின்னணு சாதனங்கள் செயலிகள் என்று அதை நோக்கி செல்வது நமக்கு சாதகங்களை விட பாதகங்களையே அதிகம் ஏற்படுத்தும் என்பதை காலப்போக்கில் உணர முடியும். இன்றைக்கு கைபேசிகள் இல்லாத மனிதர் என்றால் அவர் சுத்த சந்நியாசியாகத்தான் இருக்க முடியும்


கைபேசி, முகநூல் உள்ளிட்ட நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை குறிக்கும் காரக கிரகங்கள் ராகு-கேதுக்களாகும். ராகு-கேதுக்கள் போன்ற பாவக்கிரகங்கள் ஜாதகத்தில்  3,6,10,11 ல் அதுவும் தனித்த நிலையில் அமைவது விரும்பத்தக்கது. இவை லக்னம் மற்றும் தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் அமைவது மற்றும் வாக்கு ஸ்தானமான 2 மற்றும் 8 ல் அமைவதால் நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வாழ்வில் பொருளீட்ட வழிவகுக்கும். அதே சமயம் அவை அமையும் பாவங்கள் 1,2,7,8 ஆவதால் இல்லறத்திலும் குடும்ப வாழ்விலும் வாழ்க்கத்துனைவர் வகையிலும் பாதகத்தை செய்யாமல் போவதில்லை


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. கும்ப லக்ன ஜாதகம். மிதுன ராசியில் சந்திரன் புனர்பூசம் – 2 ல் அமைந்துள்ளது. 1989 ல் பிறந்த ஜாதகிக்கு சனி திசையில் லக்னத்தில் அமைந்த ராகுவின் புக்தியில் திருமண நிச்சயம் நடந்தது. லக்னத்தில் ராகு சுய சாரத்தில் சதயம் – 1 ல் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இதனால் பொருளாதார வளம் கொண்டவராக ஜாதகி உள்ளார். திருமணம் நிச்சயம் ஆனவுடன் ஜாதகியும் இவருக்கு நிச்சயிக்கப்பட்ட வரனும் கைபேசியில் தினமும் பேசி வந்தனர். மண மகனை குறிக்கும் 7 ஆமதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாக உள்ளார். ஜாதகிக்கு நடக்கும் ராகு புக்தி சூரியனுக்கு பகையாகும். 7 ஆமதிபதி உச்சமானதால் திருமணதிற்கு முன்னதாகவே வரன் ஜாதகிக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். லக்னத்தில் அமைந்த ராகு மேஷ சூரியனை தனது 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்துகிறது. இதனால் பத்திரிகை அடித்து வினியோகித்துவிட்ட நிலையில் ஜாதகி நிச்சயிக்கப்பட்ட வரனின் அதீத கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் திருமணத்தை நிறுத்திவிட்டார். இங்கு 7 ஆமதிபதி சூரியன் உச்சமானாலும் 7 ஆமதிபதி மேஷ சூரியனுக்கு பாதகத்தில் கும்பத்தில் ராகு அமைந்து சூரியனை தனது 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்துவதால் ஜாதகி தனது உறுதியான முடிவால் மணமகனை மறுத்து உதறினார்.

கீழே 2 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


மீன லக்ன ஜாதகத்தில் ராகு ஜீவன காரகன் சனியோடு சேர்ந்து உப ஜெய ஸ்தானமான 6 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 12 ஆமதிபதியாகிய சனி 6 ஆமிடத்தில் அமைவது ஒருவகையில் விபரீத ராஜ யோகம் என்றாலும் அவர் ராகுவோடு இணைந்து அமைவது ஜீவன வகையில் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். மேலும் சனி 6 ல் அமைந்தாலும் அவர் பகை வீட்டில் சிம்மத்தில் அமைவது சிறப்பல்ல. இவர்களுக்கு இடம் கொடுத்த சூரியன் கால புருஷனின் மூன்றாமிடத்தில் புதனுடன் இணைந்து நிற்கிறார். சிம்மத்தில் சனியோடு ராகுவும் அமர்ந்து ராகு சூரியனை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதால்  சனிக்கு பகைவீடு என்ற தோஷத்தை ராகு போக்கிவிடுகிறார். ஆனால் சனி ராகுவிற்கு கட்டுப்பட்டவராகிறார். ஜாதகருக்கு ஜீவனம் ராகுவால் தடைபடாமல் இருக்க வேண்டுமானால் ராகுவின் காரகத்தொழிலை செய்தாக வேண்டும்.

ஜாதகர் கைபேசி விற்பனை நிறுவனம் ஒன்றில் பழுது நீக்கும் வேலை செய்துவந்தார். ராகு சிம்மத்தில் அமைந்துள்ளதால் நிறுவனத்தில் முதலாளியைவிட ஜாதகரே முக்கிய நபராக திகழ்ந்தார். ராகுவின் காரக தொழிலை செய்ததால் (ராகு - குற்றம் கண்டுபிடித்து அதை நீக்குதல்) தொழிலில் ஜாதகர் சிறப்புற்றார். தற்போதைய திசா நாதன் சனி, சூரியனின் வீட்டில் அமர்ந்ததால் பணி புரிந்த கடையிலிருந்து விலகி சொந்தமாக கைபேசி விற்பனை & பழுது நீக்கும் நிறுவனம் தொடங்கி நடத்திவருகிறார். இதற்கு கடக்க ராசியில் சனியின் பூசம்-4ல் உச்சமான குருவும் ஒரு முக்கிய காரணம். சனி களத்திர ஸ்தானமான 7 க்கு விரையத்தில் நின்று திசை நடத்துவதாலும் 6 ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதியோடு இணைந்து ராகு பார்வை பெறுவதாலும் பொருளாதார வளத்தை கொடுக்கும் இதே சனியும்-ராகுவும் குடும்ப வாழ்வில் பாதிப்பை ஜாதகருக்கு தற்போது வழங்கி வருகின்றன. ஜாதகர் தற்போது மனைவியோடு கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்.

மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம் அடுத்து.


தனுசு லக்ன ஜாதகத்தில் ராகு-லக்னதிலும் கேது தொடர்புகள் மற்றும் களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திலும் அமைந்துள்ளது. சந்திரன் விருட்சிக ராசியில் அனுஷம்-4 ல் அமைந்துள்ளது. ராகு-கேதுக்கள் தனித்த நிலையில் அமைந்துள்ளது நன்மையே எனினும் 1-7 தொடர்பாவதால்  அவைகளின் மூலம் சாதக பாதகங்கள் இரண்டையுமே அடைய நேரிடும் என்பதை குறிக்கிறது. இந்த ஜாதகியும்  ராகு-கேதுக்கள் குறிக்கும் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார். 1992 ல் பிறந்த இந்த ஜாதகிக்கு தற்போது திருமணம் ஏற்பாடாகி முடிவாகிய பின் ஜாதகியும் நிச்சயிக்கப்பட்ட வரனும் கைபேசியில் தினமும் பேசிவந்தனர். ஜாதகிக்கு சுக்கிர திசையில் சுய புக்தி நடக்கிறது. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் லக்ன பாதகாதிபதி புதனுடன் இணைந்துள்ளார். புதன் தகவல் தொடர்பின்  காரக கிரகம் என்பதால் தகவல் தொடர்பு மூலமாகவும் 1-7 ல் நிற்கும் சர்ப்ப கிரகங்களால் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமும் பாதகம் ஏற்பட வேண்டும்.

சுக்கிரன் பாவத்தில் களத்திர ஸ்தானத்திற்கு விரையத்தில்  6 ஆமிடத்தில் சூரியனுடன் ஆட்சி பெற்று திசையையும் புக்தியையும் நடத்துகிறார். விருட்சிக ராசிக்கு ஏழரை சனி இன்னும் முடியவில்லை. ஜாதகிக்கு தற்போது சுக்கிர திசை சுய புக்தியில் ராகு அந்தரம் நடக்கிறது. 2 ஆமிடத்தில் நிற்கும் சனி  8 ஆமிடம் தொடர்பாகும்போது அவமானத்தை ஏற்படுத்தும்.  சனியின் நட்சத்திரத்தில் அனுஷம்-4  ல்  அவமான ஸ்தானாமான 8 ஆமதிபதி சந்திரன் நிற்கிறது. ராசிக்கு 2 ல் லக்னத்தில் சனி தற்போது கோட்சாரத்தில்  நிற்கிறது. இதனால் ஜாதகியோடு கைபேசி பேச்சுக்கள் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிச்சயிக்கப்பட்ட வரன் திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் ஜாதகி பெருத்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார்.

4 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் தகவல் பரிமாற்ற ஸ்தானமான 3 ஆமிடத்தில் நீசம். வாகன யோகங்களை குறிக்கும் சுக்கிரன் கன்னியில் நீசம். லக்னாதிபதி சூரியன் சுக்கிரனின் வீட்டில் ராகுவோடு இணைந்து அமைந்ததால் ஜாதகர் வாகனத்துறையில்  ஈடுபட்டுள்ளார். லக்னாதி சூரியனும், வாகன காரகன் சுக்கிரனும்,  சுக்கிரனின் வீடும் பாதிக்கப்படிருப்பது இதற்கு சாதகமான அமைப்பல்ல. ஜாதகருக்கு வாகன ஸ்தானமான 4 க்கு விரையத்தில் 3 ல் நிற்கும் புதனின் திசை நடக்கிறது. புதன் தகவல் தொடர்ப்பு காரகன் என்பதால் தனது தொழிலை விளம்பரம், பத்திரிகை, தகவல் தொடர்புகள் மூலம் விரிவுபடுத்த முனைகிறார். திசா நாதன் புதன்,நீச சூரியன் மற்றும் ராகுவோடு இணைந்து நிற்பதால் அதீத கற்பனைகளும் பேச்சும் கொண்டவர். இதனால் இவரிடமிருந்து அழைப்பு வந்தாலே இவர்களது தொடர்பாளர்கள் இவரை தவிர்க்கின்றனர். இதற்கு காரணம் தகவல் தொடர்பு காரகனும் வாக்கு காரகனுமான புதன் நீச கிரக தொடர்பாகி  ராகுவோடும் தொடர்பு பெற்ற நிலையில் நீச சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்றதேயாகும்.

எனவே கைபேசி, முகநூல் உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களை குறிக்கும் ராகு கேதுக்கள்  மற்றும் தகவல் தொடர்பு காரகன் புதனின் நிலையை அறிந்து இவற்றை அளவோடு பயன்படுத்தி வாழ்வில் வளம் காண்பீர். இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501.