Showing posts with label லக்னம். Show all posts
Showing posts with label லக்னம். Show all posts

Sunday, 4 April 2021

ஜனன ஜாதக திருத்தங்கள்!

 


ஜாதகத்தை ஆய்வு செய்யும் சில ஜோதிடர்கள் ஜாதகப்படியான சில விளக்கங்களை வந்தவரிடம் கேட்டு ஜாதகத்தை உறுதி செய்துகொண்டு பலன் சொல்வதை கவனித்திருக்கலாம். இது பொதுவாக ஜாதகத்தின் உண்மைத்தன்மையை அறிய பயன்படுத்தப்படும் ஒரு யுக்திதான். சில ஜாதகங்கள் உத்தேச ஜாதகங்களாகவும் சில லக்னம் மாறியோ அல்லது சந்தி லக்ன ஜாதகங்களாகவும் அமையும்போது ஜோதிடர்களுக்கு பலன் சொல்வதில் தடுமாற்றங்கள் எழத்தான் செய்கின்றன. அதற்காகவே மேற்கண்டவாறு சில கேள்விகளை ஜோதிடர்கள் கேட்பர். ஜோதிடர்களிடம் அளிக்கபடும் ஜாதகங்களில் ஜாதக கணிதங்களுக்கேற்ப தவறுகளும் இருப்பது உண்டு. அவற்றை எல்லாம் சரிசெய்துதான் ஜோதிடர்கள் பலன் சொல்ல வேண்டியிருக்கும். எனது ஜாதகத்தில் நேரத்தவறு இருக்கலாம் அதை சரி செய்து தர இயலுமா என நேரடியாக கேட்போரும் உண்டு. அப்படியானவர்களிடம் ஜாதக விபரங்களோடு அவர்கள் வாழ்வில் நடந்த திருமணம், வேலை கிடைத்த நாள் போன்ற சில முக்கிய சம்பவங்களின் நாட்களை பெற்றுக்கொண்டு  ஜாதகத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி சில நேர திருத்தங்களை செய்யலாம். இப்பதிவில் இன்று ஜனன நேரத்தை சரி செய்வது பற்றி ஆராயவிருக்கிறோம். ஜனன நேரத்தை திருத்த பல முறைகள் உண்டு என்றாலும் நம்பகமான ஒரு முறை என நான் கருதுவது பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு சரி செய்வதே ஆகும்.

எது சரியான பிறந்த நாள்?

தனது உறவுப்பெண்ணின் ஜாதகத்தை கடந்த வருடம் அளித்திருந்த ஒரு நண்பர் மீண்டும் சில நாட்களுக்கு முன் அதே ஜாதகத்தை முன்னிட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். முன்னதாக அனுப்பியிருந்த பிறந்த நாளானது 23.08.91 என அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிறந்த நாள் 28.03.91 என குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இது போன்ற சூழ்நிலைகள் ஒரு ஜோதிடருக்கு விரக்தியை ஏற்படுத்துபவையாகும். வருடம் ஒன்றுதான் ஆனால் பிறந்த நாள் மற்றும் மாதம் ஆகியவை மாறுபட்டிருந்தன. 23.08 மற்றும் 28.03 என்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும் என கருதி இதில் எது சரியான பிறந்த தேதி என ஆய்வு செய்தேன். எனது “ஜோதிட சாகர” WhatsApp குழுவிலும் இதை ஆய்வுக்கு பதிவிட்டிருந்தேன்.

பெண்ணின் இரு வேறு ஜாதகங்கள்

  

   


பிறந்த நாள் A படி ஜாதகி பிறந்தது சூரியன் சிம்மத்தில் இருக்கும் ஆவணி மாதமாகும். ஜாதகம் B படி ஜாதகி பிறந்தது சூரியன் மீனத்தில் இருக்கும்  பங்குனி மாதமாகும். மூன்றாவதாக மேலே குறிப்பிட்டிருப்பது ஆய்வு நாளின் கோட்சார நிலையாகும். ஆய்வு நாளின் மாதம் சூரியன் மீனத்தில் இருக்கும் பங்குனி மாதமாகும். இது பிறந்த நாள் B உடன் ஒத்துப்போகிறது. இதனால் இரண்டாவதாக அளிக்கப்பட்ட ஜாதகம்-B தான் சரியானதாகும். எனவே ஜாதகியின் பிறந்தநாள் 28.03.1991 தான் என கணித்தோம். பிற்பாடு இதை தொடர்புடைய நபர் உறுதி செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.   

எது சரியான பிறந்த லக்னம்?

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம் கீழே.

இந்த ஜாதகத்தை பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் விபரங்களை குறிப்பிட்டு அனுப்பிய நபர். ஜனன நேரம் உத்தேசமாக இருக்கும் எனவே நேரத்திருத்தம் செய்து ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகம் இது.  லக்னப்புள்ளி மிதுனத்தின் இறுதிப்பாகையை ஒட்டி சந்தியில் இருப்பதாலும் நேரம் உத்தேசமானது என்பதாலும் கடக லக்னமாக ஜாதகி  இருக்கக்கூடும் என அவர் அனுமானித்திருந்தார். 

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த நேரத்திற்கான ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

லக்னம் கன்னியில் 00.16 பாகையில் இருப்பதாக பிரசன்னம் காட்டுகிறது. லக்னம்  புதனின் வீடுகளில் ஒன்றுதான் என்பதை இது உறுதி செய்வதோடு லக்னப்புள்ளி சந்தியில் அமைத்திருப்பதால் ஜனன ஜாதக லக்னமும் சந்தியில் அமையும் என்பதை சாதாரண பிரசன்னமே சுட்டிக்காட்டுகிறது. கடகத்தை கோட்சார சந்திரன் தொடர்புகொண்டால் கடக லக்னம் என ஐயம் எழலாம். இங்கு கோட்சார சந்திரனும் கன்னியில்தான் உள்ளது எனவே லக்னம் புதனுடைய மிதுனம் அல்லது கன்னி ஆகும். கடகம் அல்ல என்பது உறுதியாகிறது.  ஆனால் மிதுனம் கன்னி இரண்டில் எனது லக்னம் என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால் இங்கு கேள்வியே லக்னம் மிதுனமா? அல்லது கடகமா என்பதுதான். எனவே லக்னம் மிதுனமாகும்.

இதை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் உறுதி செய்வோம் வாருங்கள். 

ஜாமக்கோள் பிரசன்னைத்தில் கும்ப உதயத்தில் உள்வட்டத்தில் புதன் அமைந்துள்ளதால் புதனின் லக்னமே ஜாதகருடையது என்பது புலனாகிறது. உதயம் கன்னி லக்னத்திற்கு 6/8 ஆக (சஷ்டாஷ்டகத்தில்) அமைகிறது. எனவே கன்னி லக்னமல்ல. அதே சமயம் மிதுனத்திற்கு திரிகோணத்தில் அமைந்த புதன் மிதுனத்தில் உள்ள ஜாம (வெளிவட்ட) சனியோடு   பரிவர்த்தனை ஆகிறார். மிதுன சனியோடு பரிவர்தனையாகும் புதன் உதயத்தையும் பரிவர்த்தனை ஆக்குகிறார். எனவே உதயமும் மிதுனத்திற்கு செல்கிறது. ஜாம சனி கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி வரும். உதயமும் உதய தொடர்புகளும் நமது ஐயப்பாட்டிற்கான விடைகளைக்கொண்டிருக்கும். எனவே பரிவர்த்தனைக்குப்பிறகு மிதுனத்திற்கு செல்லும் உதயம் ஜாதகியின் ஜனன லக்னம் மிதுனம் என்பதை உறுதி செய்கிறது. கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி செல்லும் சனியும் மிதுனத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் புதனும் ஜனன ஜாதகத்தில் அமைந்த நிலையிலேயே பிரசன்னத்திலும் அமைவதை கவனியுங்கள். இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் உன்னதம். சாதாரண பிரசன்னத்தில் இந்த நுட்பம் வெளிப்படாது. எனவே ஜாதகியின் லக்னம் மிதுனமே ஆகும். கடகம் அல்ல என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. மிதுனம் இரட்டை ராசி என்பதால் பிறப்பு விபரங்களையும் இருவேறு சூழல்களை ஒப்பிடும்படி பிரசன்னம் காட்டியது கண்டு அதிசயயித்தேன். இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திலும் (04.04.2021 – மதியம் 12:26 மணி) கோட்சார லக்னம் மிதுனத்தில் செல்வது பிரம்மிக்க வைக்கிறது. எனது ஜோதிட ஆய்வுக்கான இப்பெருமைகள் யாவும் எனது ஜோதிட ஆசான்களையே சாரும்.

எது சரியான பிறந்த நட்சத்திரம்?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நட்சத்திர சந்தி உள்ளது. இதனால் சில கணிதங்களில் பெண்ணின் நட்சத்திரம்  பூசம்-4 ஆம் பாதம் எனவும் சில கணிதங்களில் ஆயில்யம் முதல் பாதம் எனவும் வருவதாக என்னிடம் கொடுக்கப்பட்டது. சில அயனாம்ச மாறுதல்களாலும், கணித மாறுதல்களாலும் இரு நட்சத்திரங்களின்  சந்தியில் ஜனன கால சந்திரன் செல்லும்போதும் இந்நிலை ஏற்படும். இதனால் எந்த நட்சத்திரம் கொண்டு ஜாதகிக்கு நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு எனை நாடி வந்திருந்தனர்.

கீழே பெண்ணின் ஜாதகம்.


கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் 16.39 பாகையில் பூச நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் உள்ளதாகவே எனது கணினி மென்பொருள் காட்டியது. ஆனால் சில நிமிட மாறுதல்களில் அது ஆயில்யம் முதல் பாதம் என காட்டுகிறது. எனவே வந்தவர்களின் நிலை புரிந்தது. இதனால் பிரசன்னம் மூலம் இதை அறிய முயன்றேன்.

கீழே ஆய்வு நேரத்திற்கான பிரசன்ன ஜாதகம்.


கோட்சார சந்திரன் விருட்சிகத்தில் 2.43 பாகையில் கடகத்தின் திரிகோணத்தில் விசாகம்-4 ஆம் பாதத்தில் செல்கிறது. ஒரு பாதம் மாறினால் நட்சத்திரமும் மாறிவிடும். கேள்வி பூசத்தின் 4 ஆம் பாதமா? அல்லது ஆயில்யத்தின் முதல் பாதமா? என்பதே. விசாகம் குருவின் நட்சதிரமானாலும் நட்சத்திர பாதம்-4 தான். கோட்சார சந்திரன் கேட்டையில் இருந்தால் ஜனன நட்சத்திரம் ஆயில்யம் என கூறலாம். எனவே பாத அடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின்  ஜென்ம நட்சத்திரம் பூசம்-4 தான் ஆயில்யம் அல்ல என்பதை கோட்சார சந்திரன் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார சந்திரன் ஆத்மார்த்தமான நம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கண்ணாடி ஆகும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Monday, 21 December 2020

அவன் இவன்!

                          

தொடர்பற்ற ஆண்கள் இருவர் அதுவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். அதனால் ஒரே மாதிரியான ஜாதக அமைப்பைக்கொண்டவர்களின் வாழ்க்கையிலும் வேறு வேறு விதிகள் செயல்படுகிறது. ஜோதிடத்தில் உபய லக்னங்களுக்கு அதிபதிகளான குருவும் புதனும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், கேந்திராதிபத்திய தோஷத்தை தருபவர்கள்.  இவ்விரண்டில் குருவிற்கு புதனைவிட தோஷ வலு அதிகம். நாம் கீழே ஆராயவிருக்கும் இரு ஜாதகங்களிலும் இவ்விரு கிரகங்களும் லக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகின்றன. பரிவர்தனையாவதால் இவற்றிற்கிடையேயான தோஷங்கள் நீங்கி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்ளும். இது ஜோதிட ரீதியான விதி. உண்மையில் இவ்விதி எப்படி செயல்படுகிறது என்பதை இங்கு ஆராய்வோம்.       

அவன்:

 

மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. தனுசு லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற  குரு, பாதகாதிபதியும் களத்திர பாவாதிபதியுமான புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். ஜாதகர் பிறந்து 2 வயதுவரைதான் குருதிசை. குரு பரிவர்த்தனைக்குப்பிறகு தனது வீட்டிற்கே வருகிறார். ஜாதகர் வரவு செலவுகளை நிர்வகிக்கும் நகரத்தார் குடும்பத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு  குடும்பத்தில் பிறந்தவர். குரு தனகாரகர். புதன் கணக்கு, பதிவுகள் காரகன். இதனால் ஜாதகர் குரு திசையில் இக்கிரகங்களின் காரகங்கள் தொடர்பான குடும்பத்திலேயே பிறந்திருக்கிறார். ஜாதகருக்கு சனி திசை முடிந்து அவரது 21 வயது முதல் 39 வயது வரை பாதகாதிபதி புதனின் திசை. புதனும் குருவும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள். எனவே இவை பரிவர்த்தனை ஆவதால் தீய பலன்கள் ஜாதகருக்கு அடிபட்டுவிடுகிறது. லக்னத்தில் அமர்ந்த கிரகம் 7 ஆம் இடத்தோடு பரிவர்த்தனை ஆவதால் 7 ஆமிட பலனை அதிகமாகவும் லக்ன பலனை குறைவாகவும் செய்யும். இதன் அடிப்படையில் புதன் ஜாதகருக்கு களத்திர பாவாதிபதி என்பதால் திருமணத்தையும், 1௦ ஆம் அதிபதி பாவத்பாவ அடிப்படையில் 1௦ க்கு 1௦ ல் பரிவர்த்தனக்குப்பின் வருவதால் தனது காரகத்துவம் சார்ந்த வகையில் ஜீவனத்தையும் அமைத்துத்தரவேண்டும். 

ஜாதகர் கல்வியை முடித்து புதன் சார்ந்த தகவல் தொடர்பு நிறுவனத்தில் உயர்பதவியில் வேலை கிடைக்கப்பெற்றார். 7 ஆமதிபதி புதன் ஜாதகருக்கு திருமணத்தை செய்து வைத்தது. ஜாதகரின் மனைவி புதன் தொடர்புடைய (Data Processing) கணினி நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். புதனும் சுக்கிரனும் பங்குச்சந்தைக்கு காரக கிரகமாகும். ஜாதகருக்கு மனைவி வந்த பிறகு பங்குச்சந்தையில் ஈடுபட்டு பெரும் தனம் குவித்தார். புதன் நண்பர்களையும் குறிக்கும் கிரகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜாதகர் நண்பர்களிடம் முதலீடுகளை பெற்று நிறைய சம்பாதித்துக்கொடுத்தார். மனைவியை குறிக்கும் 6, 11 அதிபதி சுக்கிரன் குருவின் விசாகம்-4 ல் லக்னத்திற்கு 12 ல் பாக்யாதிபதி சூரியனுடன் அஸ்தங்கமடையாமல் மறைகிறது. 6 ஆமதிபதி 12 ல் மறைவது விபரீத ராஜ யோகமாகும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் மனைவி வந்த பிறகுதான் ஜாதகர் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்தார். 7 ஆமிட புதன் இங்கு செயல்படுகிறார். 7 ஆம் பாவாதிபதி எனும் வகையில் தனது அம்சம் ஜாதகரின் வாழ்க்கையில் பங்கேற்ற பிறகே ஜாதகர் பங்குச்சந்தையில் செல்வத்தை வாரி வழங்கியது.

இவன்:



இந்த மிதுன லக்ன ஜாதகத்திலும் லக்னாதிபதி புதனும் பாதகாதியான 7 ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை ஆகின்றன. குரு வக்கிரமடைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் பாதக ஆதிபத்தியம் அடிபட்டு 1, 7 ஆம் பாவ பலன்கள் ஜாதகருக்கு சிறப்பாக கிடைக்க வேண்டும். ஜாதகருக்கு பிறந்து 13 வயது வரை சனி திசை. அதன் பிறகு 3௦ வயது வரை புதன் திசை. முந்தைய ஜாதகத்தில் பரிவர்த்தைக்குப்பின் 7ல் அமர்ந்த புதன் தனது திசையில் திருமணத்தையும் ஜீவன வகையிலும் பலன் தந்தது. இந்த ஜாதகத்தில் புதன் பாதக ஸ்தானத்திலிருந்து பரிவர்த்தனை ஆகி லக்னத்திற்கு வருகிறது. லக்னத்தில் வந்து அமரும் புதன் குடும்ப பாவமான 2 க்கு விரையத்தில் அமர்வதால் இரண்டாமிட பலனை குடும்பம் அமைவதையும் வருமான வகைகளையும் பாதிப்பார். எப்படியாயினும் 7 ஆமிடத்தை  பார்ப்பதால் திருமணம் நடந்திட வேண்டும். ஆனால் ஜாதகருக்கு புதன் திசையில் திருமணம் நடக்கவில்லை. காரணம் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் புதனின் பகை கிரகமான செவ்வாய் அமைந்துள்ளார். இதனால் செவ்வாய் புதனின் செயல்பாடுகளை பாதிப்பார். இதனால் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாயை மீறி ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி வைக்க புதனால் இயலவில்லை.


இந்த ஜாதகத்தில் தனுசு புதன் கேதுவின் மூல நட்சத்திரத்திலும் மீன கேது புதனின் ரேவதி நட்சத்திரத்திலும் அமைகின்றன இதனால் குருவோடு பரிவர்த்தையாகும் புதன் கேதுவோடும் தொடர்புகொள்கிறார். ஞான காரகன் கேது செவ்வாய்க்கு திரிகோணத்தில் அமைந்துள்ளார். இதனால் கேதுவோடு சாரப்பரிவர்த்தனையாகும் புதன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாய்க்கு திரிகோணத்தில் நிற்கிறார். செவ்வாயும், கேதுவும் புதனின் சாரம் பெற்றதாலும் ஜாதகருக்கு புதன் திசையிலும் கேது திசையிலும் திருமணம் நடக்கவில்லை. முந்தைய ஜாதகத்திலும் இதே அமைப்பு இருக்கிறது என்றாலும் லக்னம் வேறு வேறு என்பதும் குடும்ப பாவத்தோடு கேதுவும் செவ்வாயும் தொடர்புகொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜாதகர் தற்போது சுக்கிர திசையில் உள்ளார். இரண்டாவது பாவத்தையும் லக்னாதிபதியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செவ்வாயின் புக்தியில் ஜாதகர் தற்போது உள்ளார். ஜாதகருக்கு தற்போது திருமணத்திற்கான காலமே. ஜாதகருக்கு வயது தற்போது 44. இரண்டில் சந்திரனுடன் செவ்வாய் அமைந்து 2 ஆம் அதிபதி சந்திரனின் ஹஸ்தம்-3 ல் அமைந்த ராகு இவ்விருவரையும் கட்டுப்படுத்துகிறது. செவ்வாய் முதலில் 8  ஆமதிபதி சனியை தொடுவதால் மனைவி மணமுறிவுற்றவராக இருப்பார்.

மேற்கண்ட இருவரும் ஒரே நாளில் (30.11.1977) வெவ்வேறு ஊர்களில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்டிருந்தாலும் லக்னம் இங்கே இருவரின் விதியை தொடர்பற்று மாற்றி அமைக்கிறது. மேலும் குரு வக்கிரமடைந்த நிலையில் பின்னோக்கிய நிலையில் தான் நிற்கும் பாவத்திற்கு முந்தைய பாவத்தின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்றாலும் திசா-புக்திகளுக்கு இவ்விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கும்வரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Saturday, 22 August 2020

கொரானா ஸ்பீக்கிங்!


கொரானாவால் உலகம் பீதியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் கொரானாவால் உயிரிழப்புகளை சந்தித்த சில ஜாதகங்களை ஆராய்ந்தபோது, தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கும் கொரானா மரணங்களுக்கும் உள்ள நேரடித்தொடர்பை தெளிவாக உணர முடிகிறது. ராகு தடைகளுக்கு உரிய கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே. மிதுனம் கால புருஷ தத்துவப்படி தைராய்டு மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் ராசியாகும். கொரானாவால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் சுவாசிப்பதில் ஏற்படும் தடையால்தான் உயிரிழக்கின்றனர். ஜனன காலத்தில் மிதுன ராசியும் அதன் அதிபதி புதனும் பாதிக்கப்பட்டு, தற்போது மாரக திசா-புக்திகள் நடப்பவர்களே கொரானா மூலம் மரணத்தை அதிகம் தழுவுகின்றனர். உடலில் ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்களும், புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களும் கொரானா தாக்குதலுக்கு உள்ளாக  வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

 கீழே ஒரு ஜாதகம்.

கன்னி லக்னத்திற்கு மீனம் பாதக ஸ்தானம். மீனத்தில் லக்னாதிபதி புதன் நீசமாகியுள்ளார். அதே சமயம் பாதகாதிபதி குரு லக்னத்திற்கு 1௦ ல் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் நிற்கிறார். இதனால் இங்கு பரிவர்த்தனை யோகம் செயல்படுகிறது. இந்த பரிவர்தனையால் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். இதனால் இங்கு குருவின் பாதகாதிபத்திய தோஷம் விலகுகிறது.

ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு மீனத்தில் ஆட்சி வீட்டிற்கு வரும் பாதகாதிபதி குருபாதகத்தை செய்யும் நிலையிலேயே உள்ளார். எனவே பரிவர்தனைக்குப்பிறகு இங்கு பாதக தோஷம் வலுவடைகிறது. இப்போது குரு மிதுனத்தில் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். இதனால் தனித்து லக்னத்தில் நிற்கும் ராகு லக்னாதிபதி புதன் போலவே செயல்படுவார். இதனால் ராகுவின் சாரத்தில் நிற்கும் குருவை லக்னாதிபதி புதனின் சாரத்தில் நிற்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் குரு நன்மையை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் பரிவர்த்தனைக்கு முன்னர்தான். பரிவர்த்தனைக்குப்பிறகு குரு ஆட்சி பெறும் நிலையில் இவை தlலைகீழாக மாறிவிடும். புதன் மீனத்தில் சுய சாரத்தில் ரேவதி – 2 ல் நிற்கிறார். இதனால் இங்கு குருவிற்கு லக்னாதிபதியின் தொடர்பு பரிவர்தனைக்குப்பிறகு மீண்டும் ஏற்படுகிறது. இதனால் இப்போது குருவின் செயல்பாடு எப்படி அமையும் என்ற கேள்வி எழும். ஏழும் பத்தும் பரிவர்த்தனை ஆவதால் இங்கு பரிவர்த்தனை ஆகும் இடங்களுக்கே கிரகங்கள் செயல்பட வேண்டும் எனவே லக்னத்திற்கு பாதகத்தை குரு செயல்படுத்த மாட்டார் என்றொரு கருத்து இங்கு எழும்.

ஆனால் கிரகங்கள் பரிவர்த்தனை ஆனாலும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஓரளவு அதாவது சுமார் 3௦ சதவீத பலனை வழங்க வேண்டும். மீதி 7௦ சதவீத பலனை தாங்கள் பரிவர்த்தனை ஆகிச்சென்று அமரும் இடத்திற்கு வழங்கும் என்றொரு கருத்தே பெரும்பாலும் நடைமுறையில் ஏற்கத்தக்கதாக உள்ளது. இந்தக்கருத்தை கவனத்தில்கொண்டு இப்போது இந்த பரிவர்த்தனையை அனுகினால் பரிவர்த்தனை ஆகும் குருவும் புதனும் இணைந்தே ஜாதகருக்கு நன்மையையும் தீமையையும் கலந்து செய்யவேண்டும் என்றொரு எண்ணம் வரும். இக்கருத்தே சரியானதும் கூட.

இப்போது உண்மையில் இக்கிரகங்கள் என்ன பலனை ஜாதகருக்கு வழங்கியுள்ளன என்று கவனித்தால், லக்னத்தில் ராகு அமர்ந்து, லக்னாதிபதி புதன் பரிவர்த்தனைக்குமுன் மீன ராசியில் நிற்பதாலும், பரிவர்த்தனைக்குப்பின் லக்னாதிபதி புதன், குரு நின்ற ராகுவின் சாரத்திற்கு வருவதாலும் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு வெளிநாட்டில் வசிக்கிறார். 7 ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் வாழ்க்கைத்துனையுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். 1௦ ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கின்றனர். 1௦ ஆமிடம் கால புருஷனுக்கு 3 ஆமிடமான கழுத்து மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் மிதுன ராசியாகிறது. இதனால் ஜாதகருக்கு இவை தொடர்பாக உபாதைகள் ஏற்படின் அது மாரக வியாதியாக உருமாறும். பரிவர்த்தனைக்குப்பின் மாரக ஸ்தானத்திற்கு வரும் குரு 5 ஆம் பார்வையாக கடகத்தை பார்ப்பார். 11 ஆமிடம் என்பது அனைத்து லக்னத்திற்கும் பொதுவான மாரக ஸ்தானமாகும். கடகம் மார்பை குறிக்கும் ராசியாகி பரிவர்த்தனை குருவின் பார்வையை பெறுகிறது. ராகு சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. ராகுவால் ஏற்படும் மூச்சுத்திணறல் மார்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும், நுரையீரல் இயக்கத்தையும் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. இதனால் இந்த ஜாதகர் மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்பால் மார்பு மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு ஆயுள்தோஷத்தை சந்திப்பார் என அனுமானிக்கலாம்.

திசா – புக்திகளின் அடிப்படியில்தான் அது நிகழும் என்றாலும், லக்னாதிபதி பாதகாதிபதி மற்றும் மாரக ஸ்தானம் இவற்றோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பைக்கொண்டே இதை அனுமானிக்கவேண்டும். இந்த அமைப்பு உள்ளோருக்கு தற்போது மாரக திசா-புக்தி நடந்தால் அத்தகையோர் தற்போது உலகை பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே புதன், மாகர ஸ்தானம், மிதுனம், கடக ராசி தொடர்புடையவர்கள், ஜனன ஜாதகத்தில் புதன்+ராகு சேர்க்கை உள்ளவர்கள், ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள், கவனமாக இருக்க வேண்டிய காலமிது. திசா-புக்தி சிறப்பாக அமையப்பெற்றவர்கள் இது பற்றி கவலைப்படாமல் கவனமாக இருந்தால் போதும்.

 

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

 அதுவரை வாழ்த்துக்களோடு,


அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 2 April 2020

ஜனன ஜாதகமும் பிரசன்ன ஜாதகமும்


ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அந்த நேரத்திற்கு ஒரு பிரசன்ன ஜாதகத்தை குறித்து வைத்துக்கொண்டு ஜோதிடரிடம் கொடுக்கப்பட்ட ஜாதகத்தை ஆராயும்போது இரு ஜாதகத்திற்கும் ஒரு தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும். ஜாதகர் ஜோதிடரைக்காண வந்த காரணத்தை அனுமானிக்க ஜோதிடத்தில் பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன. அப்படிப்பட்ட யுக்திகள் மூலம் காரணத்தை அறிய இயலாவிட்டாலும் அவை தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகமாகவோ அல்லது போலி ஜாதகமாகவோ இருக்க வாய்ப்ப்புண்டு. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆராயும்போது ஜாதகத்தின் அமைவிற்கேற்ப ஜாதகரின் நிலை உள்ளதா என அறிந்து ஜாதகத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். திசா – புக்திகளுகேற்ப கடந்த காலங்களில் சம்பவங்கள் நடந்துள்ளதா என்று சரிபார்த்துக்கொள்வதும் சிறந்தது. அப்போதுதான் ஜோதிடரால் ஜாதகருக்கு தெளிவாக வழி காட்ட இயலும்.


 
ஜனன ஜாதகம் சந்தேகத்திற்குரியதாக இருந்தால், (உதாரணமாக திசா-புக்தியும் கோட்சாரமும் ஒரு சிறப்பான நிலையைக்காட்டி ஜாதகர் கடின சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என ஜோதிடரை நாடி வந்திருந்தால்)   அப்படிப்பட்ட நிலையில் ஜோதிடர் ஜனன ஜாதகத்தை தவிர்த்து அந்த நேரத்திற்கு கணிக்கப்பட்ட பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு கேள்வியாளருக்கு பதிலுரைப்பதே சிறந்தது.  உண்மையில் ஒரு நபர் கொண்டுவரும் ஜாதகம் உண்மையானதா போலியானதா என்று கூட பிரசன்ன ஜாதகம் கொண்டு அறிய முடியும்.  மேலும் ஒரு நபரின் உண்மையான ஜாதகத்தை தேர்ந்த ஒரு ஜோதிடரால் பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டே எழுதிவிட இயலும். இக்கருத்துக்களை ஒருங்கிணைந்து ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

என்னிடம் ஒரு ஜாதகம் ஆய்வுக்கு கொண்டுவரப்படுகிறது. ஜாதகத்தை நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேரத்தின் பிரசன்ன ஜாதகம் நீங்கள் கீழே காண்பது.


பிரசன்ன ஜாதக விபரம். ஆண்.25.03.2020 இரவு 8 மணி 3 நிமிடம். பிரசன்ன ஜாதகத்திற்கும் ஜனன ஜாதகத்திற்கும் உள்ள தொடர்பை பிரசன்ன ஜாதகத்தின் லக்னம், லக்னாதிபதியை முக்கியமாகக் கொண்டே அறியமுடியும். மேற்கண்ட பிரசன்ன ஜாதகத்தில் லக்னத்தை லக்னாதிபதி சுக்கிரன் மேஷத்திலிருந்து பார்க்கிறார். இதிலிருந்து ஜனன லக்னத்திற்கும் சுக்கிரனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என அறியவேண்டும்.  மேலும் பிரசன்ன ஜாதக ஹோரை சுக்கிர ஹோரையாகும் இதனால் லக்னம் சுக்கிரனோடு தொடர்புடையது என அனுமானிக்கலாம்.  சுக்கிரன் ரிஷபத்திற்கு விரையத்தில் மேஷத்தில் இருந்து பிரசன்ன லக்னமான துலாத்தை பார்ப்பதால் இங்கு ரிஷபத்தை விட துலாமே ஜனன லக்னமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.  லக்னத்தை சுக்கிரனைத் தவிர மகரச்சனி தனது 10 ஆம் பார்வையாகப் பார்க்கிறது. சனி லக்னத்தை தவிர சந்திரனை தன்  3 ஆம் பார்வையாக பார்க்கிறது. இதனால் லக்னதிற்கோ அல்லது ராசிக்கோ சனியின் தொடர்பும் இருக்கும் என அனுமானிக்கலாம். சந்திரன் மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்கிறது. சந்திரனின் சார நாதன் புதன் கும்பத்தில் நிற்கிறது. இதனால் ஜனன ராசி மீனமாகி நட்சத்திரம் புதனின் ரேவதி நட்சத்திரமாகவோ அல்லது  சந்திரனின் சார நாதன் நிற்கும் கும்ப ராசியாகவோ இருக்க வாய்ப்புண்டு.

இப்போது பிரசன்ன லக்னாதிபதி சுக்கிரனை கேதுவோடு இணைந்த குரு தனது 5 ஆம் பார்வையாக பார்க்கிறது. ஆனால் குரு தனுசுவின் கடைசி பாகையில் இருந்து தனது நீச்ச வீட்டை நோக்கி செல்வதாலும் பாவத்தில் குரு மகரத்தில் செவ்வாய், சனியோடு இணைவதாலும் சுக்கிரனுக்கு கிடைக்கும் குருவின் 5 ஆவது பார்வை வலுவற்றதாகும். எனவே லக்னத்திற்கு குருவின் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. பாவ குரு சனியோடு சேர்வதாலும் சனிக்கும் ஜனன ராசிக்கும் தொடர்பு இருக்கும் என ஏற்கனவே நாம் அனுமானித்து வைத்துள்ளதாலும் ராசி அல்லது நட்சத்திரத்தில் குருவின் பங்கும் இருக்கும் எனலாம். அடுத்து செவ்வாயும் தனது 4 ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறது.  எனவே லக்னத்திற்கு செவ்வாயின் தொடர்பும் இருக்க வேண்டும். செவ்வாய் சனியோடு கிரக யுத்தத்தில் தோற்றிருந்தாலும் கால புருஷ லக்னத்திற்கு 1௦ ஆமதிபதியான சனியோடு உச்ச கதியில் திக்பலத்தில் நின்று தன் வீட்டில் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறது. எனவே ஜனன லக்னத்தில் செவ்வாயின் பங்கு இருக்க வேண்டும்.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையை ஜனன லக்னம் துலாமாகவும் ராசி கும்பமாகவும் இருக்கலாம். இது ஜனன லக்னம் சுக்கிரனுடையதாகவும் ராசி சனியினுடையதாகவும் இருக்கும் என்ற அடிப்படையைக்கொண்டது. மேலும் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும்  தொடர்பும் எதோ ஒரு வகையில் இருக்க வேண்டும்.  சரி, இப்போது ராசிக்கு குருவின் தொடர்பு எப்படி ஏற்படும் என ஆராய்ந்தால் கும்ப ராசி என நாம் ஜனன ராசியை அனுமானித்து வைத்துள்ள ராசியில்தான் குருவின் பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. எனவே ஜாதகரின் ஜனன நட்சத்திரம் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரமாக இருக்க வேண்டும்.  

கீழே நீங்கள் காண்பது ஜாதகரின் உண்மையான ஜனன ஜாதகம்.


இதில் லக்னம் துலாமாகவும் ராசி கும்பமாகவும் உள்ளது. நட்சத்திரம் பூரட்டாதி-3 ஆகும். லக்னத்தை சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதிலிருந்து பிரசன்ன ஜாதகப்படி லக்னத்திற்கு சனி தொடர்பு உறுதியாகிறது. சிம்மச் செவ்வாய் லக்னாதிபதி சுக்கிரனின் பூரம்-1 ல் நிற்கிறது. எனவே செவ்வாய் சுக்கிர தொடர்பும் உறுதிப்படுத்தப்படுகிறது.  எனவே இது உண்மையான ஜாதகமே. போலியான ஜாதகத்திற்கும் பிரசன்ன ஜாதகத்திற்கும் இப்படி தொடர்புகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில ஜாதகங்களில்  பிரசன்ன ஜாதகத்தோடு தொடர்பு இருந்தால் அதன் உண்மைத்தன்மையை திருமண நாள், வேலை கிடைத்த நாள், வீடு, உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வாழ்க்கை சம்பவங்களை திசா புக்திகளோடு தொடர்புபடுத்தி தெளிவடையலாம்.

பொதுவாக தவறான ஜாதகங்கள் எப்படி உருவாகின்றன என்றால் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதோரால்தான். அப்படிப்பட்டோரின் பிள்ளைகள் திருமணத்திற்கு துணையை தேடும்போதுதான் ஜாதகம் எழுதி வைக்காததன் பாதிப்பு தெரியும். அப்படிப்பட்டோர் திருமணதிற்காக உத்தேசமாக  ஜனன விபரங்களை கொடுத்து ஜாதகங்களை கணினியில் கணித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஜாதகங்களை வைத்துக்கொண்டு  பொருத்தம் பார்க்கும் ஜோதிடரின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. இத்தகைய நேரங்களில் ஜோதிடர்களுக்கு உதவுவது பிரசன்ன ஜாதகமாகும். சில சமயங்களில் ஜாதகத்தில் இருக்கும் கடுமையான தோஷங்களை மறைத்து சிறப்பான ஜாதகமாக மாற்றி தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணையை அடையவதற்கேற்பவும் போலி ஜாதகங்கள் உருவாகின்றன. இத்தகைய ஜாதகதினர் கடுமையாக நோய்வாய்ப்படும்போது அவர்களின் உறவுகள் போலியான ஜாதகத்தை வைத்துக்கொண்டு  அதிலுள்ள நட்சத்திர நாதனுக்கு சாந்திப்பரிகாரங்களும் வழிபாடுகளும் செய்து   பயனில்லாமலும் காரணம் புரியாமல் ஜோதிடத்தையும் படைத்தவனையும் திட்டுவதும் இந்தக்காலத்தில் நடக்கிறது. 

இப்பதிவு எழுத உந்துதலாக இருந்த காஞ்சிபுரம் வாசகர் திரு.இன்பநாதன் அவர்களுக்கு நன்றி.

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Wednesday, 12 October 2016

லக்ன நட்சத்திராதிபதி

ஜோதிட பலன்களை வரையறுப்பதில் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. லக்ன நட்சத்திராதிபதி கிரகத்தையும் ஜாதகத்தில் அது தொடர்புகொண்ட பாவங்களையும் அலசினால் ஜாதகரின் ஒட்டுமொத்த இயல்பையும் மற்றவற்றை ஆராயுமுன் அனுமானித்துவிடலாம். ஒரு உயிர் என்ன காரணத்திற்காக பிறவி எடுத்திருக்கிறது என்பதையும் அது என்ன கர்மங்களில் ஈடுபடும், அனுபவிக்கும் என்பதையும் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகம் தெளிவாய் கூறிவிடும். தேர்ந்த ஜோதிடர்கள் லக்ன நட்சத்திராதிபதி கிரகம் முதற்கொண்டே ஒருவரது ஜாதகத்தை ஆராய்வர்.    

மகாபாரதத்தின் நாயகன் தருமபுத்திரரின் ஜாதகம் கீழே.

                 


லக்னம் ஞான காரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது ஏழாமிடத்தில் அமைந்த குருவை கெடுத்து குடும்ப வாழ்வில் குளறுபடிகள் ஏற்பட வழிசெய்துவிட்டார். ஆனால் அதே கேது நுட்ப அறிவுக்குரிய 5 ஆம் பாவாதிபதியும் காரகனுமான குருவுடன் இணைந்ததால் ஜாதகருக்கு பகைவனும் போற்றும் தரும சிந்தனையை கொடுத்தது. 7 க்கு சுகஸ்தானமான 1௦ ஆம் பாவத்தில் நான்கு கிரக சேர்க்கை என்பது ஏழாமிட தோஷம் எத்தனை   இணைவுகளுடன் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.. தர்மரின் 4 சகோதரர்களுக்கும் ஜாதகரின் மனைவியான திரௌபதி குடும்ப வாழ்வில் இணைந்து பாஞ்சாலியாக வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.

இவ்விடத்தில் வேறு சில விஷயங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். லக்னத்திற்கு 10 ஆமிடத்தில் ஏற்பட்டுள்ள 4 கிரக சேர்க்கை சன்யாச யோகமாகும்.  குரு, 12 ஆமிடம் ஆகியவை வலுவிழந்து இருப்பது இல்லற வாழ்வில் பிடிப்பற்ற நிலையை குறிப்பிடுகிறது. துவாபர யுகம் வரை மனிதர்கள் இத்தகைய அமைப்புகளிலேயே பிறப்பார்கள் என்று சுக்ர நீதி போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த யுகங்களில் மனிதர்களில் பெரும்பான்மையினர் நற்குணவான்களாக (ரஜோ குணம்) இருந்தனர். கலி யுகத்தில் பிறக்கும் மனிதர்களில் பெரும்பான்மையோர் ராக்ஷச குணம் கொண்டவர்களாக அதாவது  சனி,செவ்வாய், ராகு-கேது போன்ற கிரகங்கள் மனிதர்களை தவறாக வழிநடத்தும் ஜாதக பாவங்களில் கலி புருஷனின் கட்டளைப்படி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இரண்டாவதாக மற்றுமொரு ஜாதகம்.

              
சுக்கிரனின் பூராடம் – 4 ல்   லக்னம் அமைந்துள்ளது. சுக்கிரன் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில் அமைந்துள்ளது. ஜாதகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். மருத்துவ கிரகங்கள் சூரியன், கேது, செவ்வாய், புதன் ஆகியவர்களின் நிலையை ஆராய்ந்தால் ஜாதகி ஒரு மருத்துவர் என்பதை அறியலாம்.

இரண்டாமிடத்தில் கேது நின்று 2 க்கு எட்டாமதிபதியான சூரியனுடன் சனி தொடர்புகொண்டதால் ஜாதகி சனியின் காரக அடிப்படையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் அவர் சொந்த ஊரில் இருந்தால் வருமானம் பாதிப்படையும் என்பது ஒரு முக்கிய ஜாதக விதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஜாதகர்கள் சொந்த ஊரைவிட்டு முடிந்தவரை விலகிச்சென்று வருமானம் ஈட்ட முயலவேண்டும். 

மூன்றாவதாக அறிஞர் அண்ணாவின் ஜாதகம் கீழே.

                 
லக்னம் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. ராகுவிற்கு வீடு கொடுத்த லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சியில் உள்ளார். உச்சமான வாக்கு காரகன் புதனின் கன்னி ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2 ஆமிடத்தில் ராகு தொடர்பில் இருப்பது ஜாதகர் பேச்சுத்திறமையில் வல்லவர் என்பதை குறிக்கிறது. ராகு ராஜ்ய ஸ்தானமான பத்தாம் அதிபதியும் அரசியல் தொடர்புகளுக்கும் உரிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்ததும். பத்தாம் அதிபதி சந்திரன் ராஜ்யாதிபதி எனப்படும் அரசாங்கத்திற்கு காரகத்துவம் பெற்ற சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்ததும் ஜாதகரின் கர்மா அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பதை குறிப்பிடுகிறது. 

லக்னம் அமைந்த நட்சதிராதிபதி ராகு ஆயுள் ஸ்தானமான 8 ஆமிடத்துடன் தொடர்பு கொண்டதும் ராசிக்கு எட்டில் நீசம்பெற்று வக்கிரமடைந்த சனியும், சனிக்கு 12 ல் ராசிக்கு  ஏழில் அஷ்டமாதிபதியான செவ்வாய் வக்கிர நிலையில் அமைந்ததும் ஜாதகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவார் என்பதை குறிப்பிடுகிறது. புற்றுநோய்க்கு ராகு,சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் கதிர்வீச்சுகளே காரணமென்பது ஜோதிடம் ஆராய்ந்து அறிந்த உண்மை. ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பில் அடுத்தடுத்த ராசிகளில் அமைந்தது கவனிக்கத்தக்கது.

கீழே தமிழர்கள் இன்னும் இயந்திரங்களாக மாறிவிடாமல் தனது இசையால் தடுத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்.



                    
விரயாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்துள்ளது. செவ்வாய் சிம்ம ராசிக்கு எட்டில் மறைந்துள்ளார். மேலும் சூரியன் அமைந்த ரிஷப ராசிக்கு செவ்வாய் விரயாதிபதியாகிறார். தந்தையின் பாக்கியத்தை பெற இயலாத நிலையை இது குறிப்பிடுகிறது. லக்னத்தில் பித்ரு காரகன் சூரியன் மாத்ரு காரகனான உச்ச சந்திரனுடன் சேர்ந்து சனியுடன் இணைவு பெற்றது தந்தையின் பாக்கியங்களை தனது சுய அனுபவங்களின் மூலமே பெற்று உயர வேண்டும் என்பது ஜாதகறது கர்மா. சனி சூரிய புத்திரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஒருவரது ஜாதகத்தில் இசைத்துறை தொடர்பை குறிப்பது மூன்றாமிடமாகும். இசைத்திரையில் ஒருவர் கோலோச்ச வேண்டுமானால் லக்னத்திற்கு மூன்றாமிடம், சுக்கிரன், புதன் ஆகியவை வலுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமதிபதி சந்திரன் லக்னத்தில் உச்சம். கலை மற்றும் திரைத்துறைக்கு காரகத்துவம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரன் உச்ச சந்திரனின் வீட்டில் அமர்ந்ததால் உச்ச வலு பெற்றதோடல்லாமல் பரிவர்த்தனையும் பெற்றதால் ஜாதகர் உலகம் போற்றும் உன்னத இசை வல்லுனராக ஒளிர்கிறார்.



வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

எனது பதிவுகள் சாமான்யர்களுக்கும், ஜோதிட நேசர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை.. எனது சுய ஆய்வு கொண்டு வரும் கருத்துக்கள் இப்பதிவுகள். அதனால்தான் பிற ஜோதிட வலைப்பதிவுகளுக்கும் எனது பதிவுகளுக்கும் வித்தியாசங்கள் காணப்படும். ஜோதிட விதிகளை புத்தகங்களில் இருந்து வலை ஏற்றுபவை அல்ல எனது பதிவுகள். உதாரண ஜாதகங்கள் மூலம் ஜோதிட விதிகளை பூப்போல எனது பதிவுகளில் தூவியிருப்பேன். எனது ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் தங்களது ஜோதிட அறிவை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதோடல்லாமல் பதிவுகளில் தவறிருப்பின் பின்னூட்டங்கள் மூலமும் என்னை செம்மைப்படுத்தவும் உதவலாம். எனது ஆய்வுக்கருத்துகளை பலர் தங்களது ஜோதிட மாணவர்களுக்கு பாடங்களாக்கி பயன்படுத்துகின்றனர் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதில் எனது ஆக்கம் என்பதை மறைத்து பயன்படுத்துவது வேதனைப்படுத்துகிறது. எனது ஆய்வுக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி பல வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  நூல்வடிவில் கொண்டுவர இருக்கிறேன். ஜோதிடம் பயில வேண்டும் என்பவர்களுக்காக தங்களுக்கு இயன்ற நேரத்தில் இயன்ற வகையில் கட்டுப்பாடுகள்;;இல்லாமல் மின்னஞ்சலில் ஜோதிட ஜோதிட பாடங்கள் நடத்திடவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எனது ஆக்கங்களை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?, தசாம்சமும் தொழிலும் போன்ற சில பதிவுகளை PDF கோப்புகளாக மாற்றி எனது பெயரை மறைத்து வெளியிட்டிருக்கும் ஒரு வலைப்பூ..

https://vedicfastro.blogspot.in/p/pdf-tamil-books.html


மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

அன்பன்,


பழனியப்பன்.     .