Showing posts with label திசா புத்தி. Show all posts
Showing posts with label திசா புத்தி. Show all posts

Wednesday, 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 7 October 2021

மீன ராசிக்கு சுக்கிர திசையில் திருமண யோகம்!

                           


மீன ராசியினருக்கு சுக்கிரன், ராசிக்கு 3 ஆமதிபதி என்ற வகையில் திருமண யோகத்தையும் 8 ஆமதிபதி என்ற வகையில் அவமானம், கண்டம், பிரிவினை, நிரந்தர குறைபாடுகளையும் தர வேண்டியவராகிறார். மீன ராசியினருக்கு 2023 முதல் ஏழரை சனி துவங்கவுள்ள நிலையில் சுக்கிர திசை நடக்கையில் திருமணம் செய்யலாமா? என கலக்கத்துடன் ஓரளவு ஜோதிட அறிவுகொண்டோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் எடுத்து வருகின்றனர். சுக்கிர திசை 2௦ வருடங்கள் எனும் நிலையில் அத்தனை வருடங்கள் பாதிப்பு ஏற்படும்  என்று திருமணத்தை தள்ளிப்போடுவது  மடமையாகும். மேலும் ராசி மீனமாயினும் லக்னம் என்ன என்பதையும் அளவிட்டே இதற்கு பதிலளிக்க இயலும். ராசியும் லக்னமும் மீனமாக அமைபவர்களுக்கு சுக்கிர திசை சற்று கடுமையை அதிகம் கட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதையும் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக்கொண்டே கூற வேண்டும். மேலும் ஒருவரது இல்லற கொடுப்பினைகளை கூற கால புருஷனுக்கு 7 ஆமதிபதி என்ற வகையில் சுக்கிரனை முதன்மையாக எடுத்துக்கொண்டாலும் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தையும் அதன் அதிபதி நிலையையும் கவனத்தில்கொள்வது அவசியம்.  இந்தச் சூழலில் சுக்கிர திசை மீன ராசினருக்கு என்னென்ன பலன்களை எவ்வெப்போது வழங்க இருக்கிறது என்று தகுந்த ஜோதிடரிடம் சென்று தெளிவு பெறுவது சுக்கிர திசையின் சாதக-பாதகங்களை எதிர்கொள்ள உதவியாய் அமையும். இதை உதாரண ஜாதகங்கள் மூலம் இன்றைய பதிவில் அலசுவோம்.  

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 26 வயது நிரம்பிய ஒரு ஆண். ஜாதகருக்கு 2015 முதல் சுக்கிர திசை நடப்பில் உள்ளது. சுக்கிரன் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி ராசிக்கு 8 ல் பாவிகள் தொடர்பில் ஆட்சி பெற்று வக்கிரமாகி நிற்கிறார். இந்நிலையில் சுக்கிரனுக்கு பாதக வலு கூடும். இதனால் சுக்கிர திசை ஜாதகருக்கு பெண்கள், இல்லற வகையில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கால புருஷனுக்கு 7 ஆமிடமாகிய துலாத்திலேயே சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது. சுக்கிர திசை ஜாதகருக்கு அவரது 41 ஆவது வயது வரை உள்ளது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போட இயலாது. சுக்கிரன் ரிஷபம், துலாம் ஆகிய இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் இரு வீட்டு பலனையும் வழங்குவார். ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் ஒற்றைப்படை பாவங்களிலுள்ள கிரக திசா-புக்திகள் நடக்க வேண்டும். குறிப்பாக காமத்திரிகோணங்கள் எனப்படும் 3, 7, 11 ஆமிட கிரகங்களின் திசா புக்தியோடு குடும்பம் அமைவதை குறிக்கும் 2 ஆமிடமும்  தொடர்பாக வேண்டும்.

களத்திர பாவாதிபதியும் ஆயுள்  காரகருமான சனி 8 ல் மூலத்திரிகோண வலு பெற்றது ஆயுள் ஸ்தானத்திற்கும் களத்திர வகைக்கும் சிறப்பே எனினும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணத்தை தாமதப்படுத்துவார் எனலாம். எனவே ஜாதகர் சுக்கிர திசையின் துலாம் ஆதிபத்திய காலம் முதல் 1௦ வருடம் முடிந்து 2 ஆவது ரிஷப ஆதிபத்திய காலத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் சில காலமுள்ளது. இப்போது அதற்கான முயற்சி எடுத்தால் ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரன் பிரிவினையையும் அவமானத்தையும் தருவார். லக்னத்திற்கு 8 ல் நிற்கும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பது திருமண தடையையும் மீறி முயன்றால் அவமானத்தை தரும். (8 ஆமிடம் அவமானம்). கோட்சார சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தை தாண்டி ஜென்ம சனியாக மீனத்தில் சஞ்சரிக்கும்போது, லக்னத்திற்கு 5 ல் நின்று லக்னத்தையும் 9,11 பாவங்களையும் பார்க்கும் குருவின் புக்தியில் திருமணம் செய்வதே நல்லது. தற்போது திருமண செய்வித்தால் அது அவமானத்தை ஏற்படுத்தி அதன்  விளைவாக பிரிவினையை தரும்.

சுக்கிர திசை சந்திர புக்தி நடக்கும் ஜாதகருக்கு தற்போது திருமண ஏற்பாடு நடந்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜாதகருக்கு தொழில் சிறப்பில்லை என பெண் வீட்டார் திருமணத்தை நிறுந்திவிட்டனர். ஜாதகர் இதனால் பெருந்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார். அவமான ஸ்தானமான ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரனும் சந்திரனும் தங்களுக்குள் சஷ்டாஷ்டகமாக (6-8 ஆக) அமைந்துள்ளனர். இதுவே ஜாதகருக்கு பெருந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனன சுக்கிரன் வக்கிரமாகி தற்போது கோட்சாரத்தில் லக்னத்தின் 7 ஆமதிபதி சனியும் வக்கிரத்தில் உள்ளதால் பெண் வீட்டார் பின்வாங்கிவிட்டனர். சுக்கிரன் மனைவியை குறிப்பதோடு மூத்த சகோதரியை குறிப்பவர். ஜாதகருக்கு அவரது மூத்த சகோதரிதான் பெண் பார்த்துள்ளார். இதனால் மூத்த சகோதரி ஏற்பாட்டாலும், திருமணதிற்கு பார்த்த பெண்ணின் மூலமும் ஜாதகருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் சுக்கிரனின் காரக உறவுகளான மூத்த சகோதரி, அத்தை ஆகிய சுக்கிரனின் காரக உறவுகள் ஜாதகரின் திருமண விஷயத்தில் தலைடாமல் பார்த்துக்கொள்வது பெருமளவு ஜாதகருக்கு ஏற்படும் அவமானங்களை குறைக்கும்.     

கீழே மற்றொரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 3௦ வயதான ஒரு பெண். இந்த ஜாதகிக்கு 2008 முதல் சுக்கிர திசை நடக்கிறது. தற்போது திசையின் இரண்டாவது பகுதியில் உள்ளார். ராசி மீனமானாலும் லக்னம் கும்பமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் முந்தைய ஜாதகம் போல சுக்கிரன் இங்கு கடுமை காட்ட மாட்டார். சுக்கிரன்  கும்ப லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாவதால் ராஜ யோகாதிபதியாவதுதான் காரணம். லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதியானாலும் அவர் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். மீன ராசிக்கு 3, 8 க்கு உரியவராகி ராசிக்கு 8 ல் நிற்பதுவும் சுக்கிரன் தனது திசையின் ஒரு பகுதியில் சிரமங்களை ஏற்படுத்துவார் எனலாம். சுக்கிரன் இங்கு முதலில் ஆராய்ந்த ஜாதகத்தில் போலன்றி பாவிகள் தொடர்பின்றி நிற்கிறார். இதனால் சுக்கிரன் ஏற்படுத்தும் சிரமங்கள் ஜாதகி பொருத்துக்கொள்ளுமளவு அல்லது வெளியில் தெரியாத அளவில் இருக்கும் எனலாம். களத்திர பாவாதிபதி சூரியன் ராகுவோடு லாபத்தில் தொடர்பு பெற்று 7 ல் நிற்கும் தனித்த குருவோடு பரிவர்த்தனை பெறுவதால், சுவாதி-4 ல் ராகு சாரத்தில் நிற்கும் சுக்கிரன் இந்த ஜாதகிக்கு பாதகத்தை, திருமண வாழ்வை தடைபடுத்துவதன் மூலமே தருகிறார். தாம்பத்ய ஸ்தானமான  12 ல் ஆட்சி பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் 2 ஆமிடத்தையும் 1௦ ஆம்  பார்வையால் திசாநாதன் சுக்கிரனையும் கட்டுப்படுத்துகிறார். இதனால் திருமணம் மூலம் ஜாதகிக்கு  பாதகம் ஏற்படுத்துவதை தவிர்க்க திசா நாதன் சுக்கிரனுக்கு சனி தனது 1௦ ஆம்  பார்வையால் உத்தரவிடுகிறார்.    

தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதியாக திசாநாதன் சுக்கிரனே வந்து, தந்தையை குறிக்கும் சூரியனே 7 ஆமதிபதியாகி 11 ஆமிட குருவோடு பரிவர்தனையாகவதால் இந்த ஜாதகிக்கு திருமண வாழ்வில்  ஏற்படவிருக்கும் சிரமங்களை கணவருக்குப்பதில் சூரியனாகிய தந்தை வாங்கிக்கொள்கிறார். எவ்வாறெனில், ஜாதகியின் தந்தைக்கு, குரு குறிக்கும் குடும்ப வகையிலும், பொருளாதார  வகையிலும் இழப்பு ஏற்பட்டது. சுக்கிர திசையில் 2 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் பெற்ற சனி புக்தியில் ஜாதகியின் 3௦ ஆவது வயதில் தற்போது தாமதமாக திருமண வாழ்வு கூடி வந்துள்ளது. மீன ராசி சுக்கிர திசை என்றாலும், சுக்கிரன் லக்னாதிபதி சனிக்கு நட்பென்பதால் தீவிர பாதகத்தை ஜாதகிக்கு ஏற்படுத்தவில்லை. அது தாங்கிக்கொள்ளும் அளவிலேயே இருந்தது. ஏழரை சனியில் களத்திர வகையில் ஜாதகிக்கு ஏற்படும் சிரமங்களும்  களத்திர பாவாதிபதி பரிவர்தனையாவதால் திசை மாறிவிடும்.  

எனவே சுக்கிர திசை மீன ராசிக்கு ஏழரை சனியில் திருமண வாழ்வில் பாதகத்தையே செய்யும் என்று பொதுவாக எண்ணி கலங்க வேண்டாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 7 September 2021

கிரக சஷ்டாஷ்டக விளைவுகள்!

 


ஜோதிடத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 / 8 ஆக அமைவது சஷ்டாஷ்டகம் என்று அழைக்கப்படும். சஷ் என்பது 6 ஐயும், அஷ்டம் என்பது 8 ஐயும் குறிக்கும். உதாரணமாக மேசத்தில் சூரியன் இருந்து விருட்சிகத்தில் சந்திரன் இருப்பது ஒன்றிலிருந்து மற்றொன்று 6 / 8 ஆக அமையும். இப்படி தங்கள் நிலைகளில் சஷ்டாஷ்டகம் பெற்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து செயல்படும். இதன் வெளிப்பாடு கிரக காரகம், கிரகமிருக்கும் ராசி, கிரகங்கள் சுட்டும் உறவுகள், பணிகள் போன்ற பல்வேறு வகைகளில் வெளிப்படும். இவற்றை சில உதாரணங்கள் மூலம் இன்றைய பதிவில் ஆராய்வோம்.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1984 ல் பிறந்து திருமணமான ஒரு ஆண். ஜாதகத்தில் தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி சனி, 12 ஆமிடமான துலாத்தில் உச்சம். அங்கு சனியின் நண்பர் சுக்கிரன் ஆட்சியாக உள்ளார். தாயாரை குறிக்கும் காரக கிரகம் சந்திரனும் மனைவியை குறிக்கும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6/8 ஆக  அமைந்துள்ளனர். இதனால் சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் சஷ்டாஷ்டக தோஷம் ஏற்படுகிறது. சந்திரனும் சுக்கிரனும் பெண் கிரகங்கள் என்பதோடு சுப கிரகங்களுமாவர். எனினும் இவை இரண்டும் சம வலு கொண்ட பகை கிரகங்களாகும். சந்திரன் இரவுக்கு ராணி எனில் சுக்கிரன் பகலுக்கு ராணியாகும். இதனால் இந்த ஜாதகர் திருமணமான நாள் முதல் தனது தாய்க்கும் தனது மனைவிக்கும் நிகழும்  உரிமைப்போரில் நிம்மதி இழக்கிறார். 4 ஆமதிபதி சனி சுக்கிரனுக்கு நட்பாகையால் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்கிறார். ஆனால் இதர நேரங்களில் இருவருக்கும் உரிமைப்போர் நடக்கிறது. என்கிறார். கிரகங்கள் இப்படி சஷ்டாஷ்டகம் பெற்று அவற்றின் காரக உறவுகள் கருத்து வேறுபாடுகொள்ளும் என்றாலும் அதன்  தாக்கம் தொடர்புடைய திசா-புக்திகளில்தான் அதிகம் வெளிப்படும்.

இந்த ஜாதகருக்கு சந்திரனை நேர் பார்வை செய்யும் சூரிய திசை நடக்கிறது. சந்திரனை சூரியன் பார்ப்பதால் ஜாதகரின் தாயார் இயல்பாகவே அதிகார குணம் பொருந்தியவர். தற்போது புதன் புக்தி நடக்கிறது. புதன் சூரியனோடு சேர்ந்து சந்திரனை பார்ப்பதால் தாயார் அதிகாரத்தோடு அதற்குரிய புத்தி சாதுர்யமும் கொண்டவர் என்பது புரிகிறது. புக்திகாரகன் புதன், சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் இருந்து புக்தி நடத்துகிறார். இதனால் தாயார் தனது ஆளுமையையும் புத்திசாலித்தனத்தையும் காட்டி ஜாதகரின் மனைவியை மட்டம் தட்ட முயற்சிக்கிறார். இதற்கு திசா நாதன் சூரியனும் புக்தி நாதன் புதனும் மனைவியை குறிக்கும் சுக்கிரனுக்கு 12 ல் இருப்பதும், சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் பகை என்பதும் காரணமாகும். சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்திற்கு 12ல் இருப்பதாலும் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாகவுள்ள சந்திரனைவிட வலு குறைந்தவராகிறார். ஆனால் சுக்கிரன், சந்திரனைவிட ஒரு பாகைதான் குறைந்தவர் என்பதால் இங்கே கௌரவப்போட்டி தாய்க்கும், மனைவிக்கும் அதிகமாகிறது. இப்படி தாய்க்கும் மனைவிக்குமிடையே நடக்கும் சண்டையில் ஜாதகர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு சென்று பணிபுரிய உள்ளதாகவும் அப்போதுதான் இவர்களுக்கு புத்தி வரும் என்று கூறுகிறார். ஜாதகருக்கு புதன் புக்திக்கு அடுத்து சந்நியாசி கிரகமான கேதுவின் புக்தி குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் ஜல ராசி விருட்சிகத்தில் இருப்பதால் இவர் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்ல எண்ணுகிறார். சஷ்டாஷ்டகம் பெற்ற கிரகங்கள்  தங்கள் காரக உறவு வகையில் ஜாதகரை பாதிக்கின்றன.  

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.


ஜாதகர் திருமணமான ஆண். ஜாதகத்தில் களத்திர காரக கிரகங்களான சுக்கிரனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். ஜாதக அமைப்பிலேயே இவர் திருமண வாழ்வில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டை சந்திப்பார் என்பது தெளிவாகிறது. எப்போது எனும் கேள்வி எழும்போது திசா-புக்திகள் பதிலைத் தரும். இவருக்கு 7 ஆமிடத்தை பார்வை செய்யும் சந்திர திசையில் திருமணம் நடந்தது. 8 ஆமிடத்தில் இருந்து 7 ஆமிட சனியின் உத்திரட்டாதியில் நிற்கும் செவ்வாய் திருமணத்தை நடத்தி வைத்தார். மனைவி வந்தவுடன் செவ்வாய்க்கும் சுக்கிரனுக்குமான சஷ்டாஷ்டகம் வேலை செய்கிறது. இதனால் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு எழுகிறது. இதனால் சார அடிப்படையில் 7 ஆமிட தொடர்பு பெற்று திருமணத்தை நடத்தி வைத்த அதே செவ்வாய், தான் நிற்கும் பிரிவினை பாவமான 8 ஆமிடத்திற்குமான பலனையும் கொடுக்க வேண்டியவராகிறார். அதனால் பிரிவினையையும் செவ்வாய் கொடுத்துவிட்டார். பிரிவினைக்கு வித்தாக அமைந்தது சுக்கிரன்-செவ்வாய் பெற்ற சஷ்டாஷ்டகமே.  இவர் திருமணமாகி இல்லற வாழ்வுக்குள் நுழையுமுன்னரே மணமுறிவை சந்தித்தவர்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 30 July 2021

இரவுப்பறவைகள்!

 


அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும்  அறிமுகமற்ற நபர்கள், மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர் இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில் செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை.  இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள் உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே இன்றைய பதிவு.

கீழே 1963 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.

 
மகர லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம். இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு. சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில் பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம் பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம் என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின் காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற  சந்திரனின் காரக  வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன் இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.

மேற்கண்ட ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக் குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும், 12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.


தசாம்சத்தில் புதன் தசாம்ச லக்னத்திற்கு 7 ல் நிற்பது ஜாதகரது ஜீவனத்துறை புதன் சார்ந்த பத்திரிக்கை துறை என்பதை உறுதி செய்கிறது. 1௦ ன் பாவத்பாவமான 7 ஆமதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து 12 ல் மறைவதும் லக்னாதிபதி சனியும் 1௦ ஆமதிபதி செவ்வாயும் புதன் வீட்டில் மிதுனத்தில் இணைவது ஜாதகர் ஈடுபடும் துறையையும் அதில் அவரது உழைப்பின் கடினத்தன்மையையும் குறிப்பிடுகிறது. 

12 ஆம் பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம் பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால் செவ்வாய் திசையில் தனது 25, 26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின் தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு  புதனின் வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது. தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

லக்னத்தில் அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில் நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ  தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும்.  இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25 ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1 ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர புக்தியில் தனது  55 ஆவது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

உண்மையில் ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர் லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.

இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின் வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில் ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது. அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால் அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501