Showing posts with label கிரக சேர்க்கைகள். Show all posts
Showing posts with label கிரக சேர்க்கைகள். Show all posts

Thursday, 14 October 2021

தொழில் சிந்தனைகள்...

 


ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக  ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை. கால மாற்றங்களை போன்றவைதான் எண்ணங்களும். எனவே எல்லோரும் காலத்தின் கைப்பாவைகளே. ஒருவர் சிறப்பான தொழில் சிந்தனையை பெற்றிருப்பதை அவரது மனப்போக்குதான் தீர்மானிக்கிறது. நமது இன்றைய பதிவு ஒருவரின் தொழில் ரீதியான சிந்தனைகளை ஜோதிடப்படி ஆராய்வதே.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 43 வயது நிரம்பிய ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் ஜீவன பாவமான லக்னத்திற்கு 1௦ ல் மிதுனத்தில் திருவாதிரை-4 ஆம் பாதத்தில்  செல்கிறார். திருவாதிரை-2 ஆம் பாதத்தில்  ஜனன காலத்தில் நிற்கும் லாபாதிபதி மீது கோட்சார சந்திரன் செல்கிறார்.  லாபாதிபதி சந்திரன் மாற்றத்திற்குரிய கிரகம் என்பதோடு அவர் 1௦ ஆமிட தொடர்பில் கோட்சாரத்தில் செல்வதால் இவர் தொழில் மாற்றத்தால்  லாபம் உண்டா? என்ற கேள்வியுடன் ஜாதகம் பார்க்க வந்தார். கோட்சார சந்திரனும் ஜனன சந்திரனும் லக்னத்தில் நிற்கும் ராகு சாரம் பெறுவதால் இவர் சந்திரன்+ராகு சேர்க்கை  குறிக்கும் விவசாயதிற்குரிய உரங்கள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவராக இருப்பார். கோட்சாரத்தில் சந்திரன் ரோகிணி-1 ல் நிற்கும் ராகுவை கடந்து வந்துள்ளது இதை உறுதி செய்கிறது. லக்னத்தில் நிற்கும் கிரகமே ஜாதகரை வழி நடத்தும் என்பதற்கேற்ப, அலைச்சலை குறிக்கும் 12 ஆமதிபதி சூரியன் சாரம் பெற்று அலைச்சலின் காரக கிரகமான ராகுவே லக்னத்தில் நிற்கிறார். இவர் கடந்த காலங்களில் ரசாயன உரங்கள் தொடர்புடைய துறையில் விற்பனை பிரதிநிதியாக நீண்ட பயணங்கள் செய்து நன்கு பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

2௦19 ல் இவர் மருந்து வணிகம் தொடர்புடைய துறைக்கு மாறி, கடினமாக உழைத்தும் அதில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்கிறார். கொரான காலம் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் வேலையில் திருப்தியில்லை என்கிறார்.  காரணம் மருத்துவத்தின் காரக கிரகமான செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதியாவதால் ஜாதகருக்கு நன்மைகளை வழங்க இயலவில்லை. இவர் மருத்துவம் சார்ந்த துறையில் ஈடுபட காரணம் செவ்வாய் வருமான பாவமான 2 ஆமிடத்தில் நிற்பதால்தான். கோட்சாரத்தில் செவ்வாயும் சூரியனும் ஜனன கால ராகுவிடம் சரணடைவது ஜாதகர் ஈடுபட்ட செவ்வாய் சார்ந்த துறையில் ஜாதகர் சோபிக்கவில்லை என்பதை கூறுகிறது.  இதனால் ராகு-சந்திரன் சேர்க்கை குறிக்கும் விவசாயத்திற்குரிய உரங்கள், ரசாயனங்கள் தொடர்புடைய துறையே ஜாதகருக்கு   நன்மையை செய்கிறது. காரணம் ராகுவும் சந்திரனும் லக்னத்தோடும் 1௦ ஆம் பாவத்தோடும் தொடர்புகொள்வதே. கோட்சார சந்திரன் லாப ஸ்தானத்தில் கடகத்தில் நிற்கும் உச்ச குருவைத்தான் அடுத்து தொடவுள்ளது. விவசாயத்தை கால புருஷனின் நான்காமிடமான கடகமும் அதன் அதிபதி சந்திரனும் குறிப்பதோடு சந்திரன்+ராகு  தொடர்பு, ஜாதகர் முன்பு ஈடுபட்ட ரசாயன உரத்துறைக்கு திரும்புவது ஜாதகருக்கு நிச்சயம் லாபமாக அமையும் என்று கூறப்பட்டது.  

அடுத்து ஒரு ஜாதகம்.   

ஜாதகதிற்குரியவர் 4௦ வயதான ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் கன்னியில் சுய சாரத்தில் ஹஸ்தம்-3 ல் செல்கிறது. குரு கால புருஷனுக்கு 12 ஆமதிபதி என்பதோடு சனியும் கால்கள், பாதங்கள், கழிவுகள் ஆகியவற்றை குறிப்பவர். தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் ஜனன ராகு சனி சாரம் பூசம்-2 ல் நிற்கிறார். 12 ஆமிடாதிபதி புதன், அங்கு சந்திரனோடு  பரிவர்த்தனை பெற்ற சூரியனோடு இணைந்து நிற்கிறார். ஜாதகருக்கு தற்போது ராகு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. எனவே இவரது தொழில் பற்றிய சிந்தனையில் ராகுவின் காரகத்தோடு, சூரியன் குறிக்கும் சுய தொழில் எண்ணம், சந்திரன் குறிக்கும், திரவங்கள், புதன் குறிக்கும் தரகு கமிஷன், ஏஜென்சி,  ஒப்பந்தம்  ஆகியவை கலந்திருக்கும் எனலாம். செவ்வாய் மிதுனத்தில் ராகு சாரம் திருவாதிரை-4 ல் நிற்பதால் இவரது தொழில் சிந்தனையில் செவ்வாயின் தாக்கமும் இருக்கும். இவர் குடிநீர் விற்பனை செய்தார். தற்போது ஒரு சிமென்ட் ஏஜன்சி வைத்துள்ளார். கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி தருகிறார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது கழிவறையை  குறிக்கும் என்பதோடு, கன்னியில் ஜனன காலத்தில் கால புருஷனுக்கு 12 ஆமதிபதி குரு இருந்து அவர் கோட்சாரத்தில் நீசமாவதும், கழிவுகளை குறிக்கும் சனி ஜனன காலத்தில் அங்கு நிற்கிறது. கோட்சாரத்தில் கட்டுமானங்களுக்குரிய  செவ்வாயும், அரசை குறிக்கும் சூரியனும், கோட்சார புதனோடு லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் செல்வதால், அரசு மக்களுக்கு கழிவறை கட்டித்தரும் திட்டங்களை தான் ஏற்று செய்யலாமா? என்று கேட்கிறார். ஒருவரது தொழில் சிந்தனையின் தரத்தை கோட்சார கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றால் அது மிகையல்ல.

மூன்றாவதாக ஒரு ஜாதகம்.


ஜாதகத்திற்கு உரியவர் 36 வயதான ஒரு பெண். ஜாதகத்தில் கடனை குறிக்கும் 6 ஆமதிபதி சந்திரன் லக்னத்தில் நிற்கிறார். தொழிலை குறிக்கும் 1௦ ஆமதிபதி செவ்வாய் நீசம் பெற்று கடன் பாவமான 6 ஆமிடத்தில் நிற்கிறார். ஜீவன காரகரும் லக்னாதிபதியுமான சனி உச்சம் பெற்று கடனின் காரக கிரகமான கேதுவோடு பாதக ஸ்தானமான துலாத்தில் உள்ளார். இம்மூன்று அமைப்புகளும் ஒன்றைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அது ஜாதகிக்கு தொழில் ரீதியான கடன் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பதே. இது விஷயங்களில் ஜாதகியை ஒரு தேர்ந்த ஜோதிடரால் எச்சரிக்க இயலும். ஆனால் ஜாதகி சம்பவங்களை அனுபவிப்பதை தடுக்க முடியாது.  ஜாதகி ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் கன்னி ராசியில் சுய சாரம் ஹஸ்தம்-3 ல் சென்றுகொண்டிருக்கிறார். கன்னி ராசி கால புருஷனின் 6 ஆவது பாவம் என்ற வகையிலும் சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 8 ல் சுய சாரத்தில் செல்வதால் ஜாதகி கடன் நெருக்கடியில் ஜாதகம் பார்க்க வந்துள்ளார்.

கடக ராசியில் உள்ள 1௦ ஆமதிபதி செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரை துலாத்தில் கேதுவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையை பார்த்த நிலையில் கோட்சார சந்திரன் கடக ராசியை கடந்து வந்துள்ளது. பிறகு சூரியனை கடந்து வந்துள்ளது. கோட்சாரத்தில்  1௦ ஆமதிபதி செவ்வாயும், புதனும், சூரியனும் லக்னத்திற்கு 8 ல் நிற்கின்றனர். சுக்கிரன் லக்னத்திற்கு 1௦ ல் விருட்சிகத்தில் கேதுவோடு நிற்கிறார். இது ஜாதகி தொழிலுக்கான கடன் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவிட்டதை குறிக்கிறது. அரசு வங்கிக்கடனுக்கு உரிய சூரியனும் புதனும் லக்னத்திற்கு 8 ல் கோட்சாரத்தில் மறைந்துவிட்டது ஜாதகி அரசு வங்கிக்கடன் பெற எடுத்த முயற்சிகள் பலனடையவில்லை என்பதை குறிக்கின்றன. ஜாதகி தொழிலுக்கான துவக்க முதலீடு செய்துள்ளார். கூடுதல் முதலீட்டிற்காகவே வங்கிக்கடன் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் ஜாதகி தற்போது தொழில் இருந்து பின் வாங்க இயலாது. கோட்சார சந்திரன் அடுத்து உச்ச சனியையும் கேதுவையும் தொட்ட பிறகே 1௦ ஆமிடம் செல்லமுடியும். இதனால் ஜாதகி தொழிலில் கடுமையான போராட்ட சூழலை சந்தித்த பிறகே தொழிலில் காலூன்ற இயலும் என்பதை கோட்சார சந்திரனின் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜீவன விஷயங்கள் ஒருவரது வாழ்க்கை போக்கை தீர்மானிப்பவை. கணிசமான முதலீட்டில் செய்யும் எந்தவொரு விஷயத்தையும் தகுந்த ஜோதிடரின் மூலம் அதன் சாதக பாதகங்களை அறிந்து செயல்படுவது சிறப்பு.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Saturday, 18 September 2021

மருத்துவ நுழைவுத்தேர்வு எதிர்பார்ப்பும் கொடுப்பினையும்!

 


மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி நிலையங்களை நாடுகின்றனர். இப்பயிற்சி நிலையங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் நிலை  சாமான்யர்களின் வாரிசுகளுக்கு கிடைப்பதில்லை. இதனாலும் சாமான்யர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இக்குறையை தீர்க்க மத்திய அரசு கல்வியில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து   இந்தியா முழுமையிலும் முதன்மை பாடங்கள் எனப்படும் (core subjects ) கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவைகளை அனைத்து மாநிலங்களிலும் CBSC, STATE BOARD,ICS போன்ற அனைத்து கல்வித்துறையிலும்  ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தலாம். மாநிலங்கள் தங்களது மொழி, கலாசாரம், வரலாறு போன்ற இதர பாடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என ஒரு நடைமுறையை கொண்டு வரலாம். தற்போது அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படி கொண்டுவந்தாலும் பாடத்திட்டத்தை விட்டு விலகிய கேள்விகள் நுழைவுத்தேர்வில் கேட்கப்படக்கூடாது என்ற நிலையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் OUT OF SYLLABUS எனும் கேள்விகள் மூலம் தனம் படைத்தோரின் வாரிசுகள் குறுக்கு வழியில் வாய்ப்பு பெற அது  வழி வகுக்கும். பயிற்சி தேவைப்படாமல் திறமையுள்ளோர் அனைவரும் பாடத்திட்டத்தின் மூலமே மருந்தவம் பயில வகை செய்தால் மட்டுமே அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பது சாத்தியமாகும். மாநில அரசுகள் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய கோருவது இத்தகைய முரண்பாடுகளாலும், தாங்கள் சம்பாதிக்கவுமே என்பதை அனைவரும் அறிவர். நமது இன்றைய பதிவில் மருத்துவராக ஜாதக அமைப்பு என்ன என்பதை நமது முந்தைய பதிவுகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் கூறுவதே. தங்களது வாரிசுகளுக்கு உள்ள கல்வி அமைப்பை அறிந்து பெற்றோர்கள்  செயல்பட்டால் பல மாணவ மணிகளின் உயிரை காப்பாற்றலாம் என்ற அடிப்படையில் இப்பதிவு வருகிறது.

 மருத்துவராவதற்குரிய கிரகங்கள்:

மருத்துவத்தின் காரக கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், ராகு-கேதுக்கள் ஆகியவை கூறப்பட்டாலும் சூரியனே மருத்துவத்தின் முதன்மை கிரகமாகும். ஒரு ஜாதகரை மருத்துவர் நிலைக்கு கொண்டு வருவதில் சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் பங்கு முக்கியமானது.

நோய் பாவம் 6 என்றால், நோயிலிருந்து மீழ்வதை 6 ன் விரைய பாவமான ஐந்தாம் பாவம் குறிப்பிடும். குறிப்பாக கால புருஷனின் 5 ஆம் பாவாதிபதி சூரியனின் வலுவே ஒருவர் நோயிலிருந்து குணமாவதை குறிக்கிறது. சூரியனே உயிர்களுக்கு சக்தி கேந்திரம். எனவே சூரியனின் அமைவு மருத்துவ துறைக்கு முதன்மையானது. சூரியனின் கதிர் வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

செவ்வாய் அறுவை சிகிச்சைக்கு அதிபதி என்பதோடு, செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியும், கால புருஷனின் ஆயுள் பாவமான விருட்சிகத்திற்கும் அதிபதியாகிறார். எனவே உயிர் காக்கும் துறையான மருத்துவத்திற்கு செவ்வாய் முக்கிய காரக கிரகமாகிறார்.

ஒருவர் துன்பங்களிலிருந்து விடுபடுவதை 5 ன் பாவத் பாவமான 9 ஆம் பாவம் குறிப்பிடும். மேலும் உயர் கல்வி பாவம் என்பது 9 ஆம் பாவமே. இதன் அடிப்படையில் ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் கால புருஷனின் 9 ஆமதிபதி குருவின் அருளாசி முக்கியம்.

சூரியன், செவ்வாய், குரு மூன்றும் நெருப்பு ராசிகளுக்கு அதிபதிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஒளியே ஆரோக்யத்தை வழங்குகிறது. மாறாக இருள் வியாதியை தருகிறது.

ஒருவர் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனே. எனவே சந்திரன் செவ்வாயுடன் அல்லது செவ்வாயின் வீட்டுடன் தொடர்பு பெறுவது நன்று.

மருத்துவராவதற்குரிய பாவங்கள்:

பாவங்களில் 1,6,1௦ ஆகிய பாவங்களிளோடு செவ்வாய், சூரியன், குரு ஆகிய நெருப்பு ராசி கிரகங்களின் தொடர்பு மருத்துவத்திற்கு சிறப்பான அமைப்பாகும்.

மேற்சொன்ன அனைத்தையும் விட மிக சாதகமான திசா-புக்திகள் உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் காலத்தில் வர வேண்டியது அவசியம்.  

கீழே  ஒரு ஜாதகம்.

 


ஜாதகி 1998ல் பிறந்தவர். 12 ஆம் வகுப்பு முடித்து NEET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஒதுக்கீட்டில் 2016 ஆமாண்டு மருத்துவக்கல்லூரி சென்றவர். இவ்வருடம் MBBS முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார். இதில் மேற்சொன்ன விதிகளின் செயல்பாடுகளை காண்போம்.  லக்னமே செவ்வாயின் விருட்சிகமாகி, குரு மற்றும் சந்திரனின் பார்வையை லக்னம் பெறுகிறது. உச்ச சந்திரன் 1௦ ஆமதிபதி சூரியனின் கார்த்திகை-4 ல் நிற்பதால் 1௦ ஆமதிபதி சூரியன் வலுவடைகிறார். சூரியனை குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜீவன பாவமான 1௦ ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-3 ல் செவ்வாய் நிற்கிறார். திசா நாதன் ராகுவே மருத்துவ காரக கிரகங்களில் ஒன்றாகி தனித்த நிலையில் சூரியனின் வீட்டில் நிற்பதால்  சூரியன் போன்றே செயல்படும். இந்த அமைப்பால் ஜாதகி மருத்துவரானார். குறிப்பாக கல்லூரி செல்லும் காலத்தில் ராகு திசையில் இருப்பதுதான் ஜாதக கொடுப்பினையை அனுபவிக்க முக்கிய காரணம்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.


இவர் 2000 ல் பிறந்த ஒரு மாணவி. இவர் கடந்த இரு வருடங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுகிறார். தற்போதும் எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார். ஜாதகிக்கு செவ்வாய் திசை கடந்த ஆண்டு இறுதிவரை நடந்தது. குரு செவ்வாயையோ, சூரியனையோ பார்க்கவில்லை. ஆனால் செவ்வாயின் வீடான விருட்சிகத்தை 12 ல் மறைந்த நிலையில் பார்க்கிறது. செவ்வாய் சந்திரனின் வீட்டில் நீசமாகி திசை நடத்துவதால் ஏற்பட்ட உந்துதலாலேயே ஜாதகி மருத்துவம் படிக்க எண்ணியுள்ளார். செவ்வாய் 1, 6, 1௦ பாவங்களோடு தொடர்புகொள்ளவில்லை. செவ்வாய், சூரியன், குரு ஆகியவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பாகவில்லை. தற்போது ஜாதகிக்கு செவ்வாய் திசை முடிந்து ராகு திசை துவங்கியுள்ளது. ஜாதக அமைப்பு சாதகமாக இல்லை என்பதால் ராகு திசையிலும் இந்த ஜாதகிக்கு மருத்துவம் பயில வாய்ப்பு இல்லை எனலாம்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1990 ல் பிறந்த ஒரு ஆண். இவர் MBBS முடித்து, மனநல மருத்துவத்தில் MD முடித்து அதிலேயே DM முடித்து அரசு மருத்துவராக பணிபுரிகிறார். ஜாதகத்தில் செவ்வாய் 1௦ ஆமதிபதி சந்திரனின் ரோஹிணி-2 ல் நின்று விருட்சிகத்தை பார்க்கிறார். உச்ச குருவும் விருட்சிகத்தை பார்க்கிறார். சூரியன் 1௦ ஆமதிபதி சந்திரனின் தொடர்புடன் 12 ல் சுய சாரத்தில் உத்திரம்-2 ல்  உள்ளார். இந்த அமைப்பால் இவருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு உள்ளது. இவர் மருத்துவம் பயில திசா-புக்திகள் எப்படி அனுமதித்தன என காண்போம். சந்திரன் ஹஸ்தம்-2 ல் சுய சாரம் பெற்றுள்ளார். எனவே பிறப்பு திசை சந்திர திசை. பிறகு செவ்வாய் திசை கடந்து 2003 முதல் 2021 வரை ராகுவின் திசை. இந்த ராகு திசையில்தான் ஜாதகர் மருத்துவம் பயின்றார். காரணம் ராகு 1௦ ஆமதிபதி சந்திரனின் திருவோணம்-1 நிற்கிறார். 1௦ ஆமிட தொடர்பு பெற்ற ராகு ஜாதகருக்கு மருத்துவம் கல்வியை வழங்கி மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது. மருத்துவத்தை பொறுத்தவரை ராகு-கேதுக்களின் பங்கு முக்கியமானது. சந்திரன் சாரம் பெற்றதால் ராகு, சந்திரன் குறிக்கும் மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது.

நான்காவது ஜாதகம் கீழே.

இவர் 2002 ல் பிறந்த ஒரு பெண். இவரும் இருமுறை மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி இரண்டாவது தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளார். லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று சூரியனும் செவ்வாயும் குருவோடு சிறப்பாக இணைவு பெற்று அமைத்துள்ளது. இது மருத்துவம் பயில சிறப்பான ஜாதக அமைப்பாகும். ஆனால் இவரால் இருமுறையும் சிறப்பாக தேர்வெழுத முடியவில்லை என்கிறார்.  காரணம் ஜாதகிக்கு இவ்வாண்டு ஜனவரி வரை சுக்கிர திசை நடைபெற்றுள்ளது. சுக்கிரன் லக்னத்திற்கு லாபத்தில் அமைத்திருந்தாலும் சுக்கிரன் 1௦ க்கு விரையத்தில் ரிஷபத்தில் நிற்கும் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. 1௦ ஆமிடாதிபதியோடுதான் சுக்கிரனுக்கு தொடர்புள்ளதே தவிர 1௦ ஆமிட கிரகங்களோடு அல்ல. ஜனன கால புதன் மீது கோட்சார ராகு அமர்ந்திருந்த நிலையில்  கடந்த ஆண்டு சுக்கிர திசையில் ஜாதகிக்கு மருத்துவ வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது சூரிய திசையில் ஜாதகி இரண்டாவது முறையாக தேர்வெழுதியுள்ளார். சூரியன் திக்பலம் பெற்று நிற்கும் நிலையில் தற்போது வாய்ப்பு உள்ளதை மறுக்க இயலாது. ஆனால் சூரியன் 10 ல் நின்று திசை நடத்தினாலும் அவர் 9 ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். எனவே சூரியன் தனது வலுவை 9 ஆமிடதிற்கே செயல்படுத்துவார் எனலாம். கன்னி லக்னத்திற்கு சூரியன் விரையாதிபதியாகி, 8 ஆமதிபதி செவ்வாய்  மற்றும் பாதகாதிபதி குருவின் இணைவில் உள்ளார். மேலும் செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதி என்பதோடு, ராசிக்கு விரையாதிபதியும் ஆவதால் திசாநாதன் சூரியனைவிட அதிக பாகை பெற்று நிற்கும் செவ்வாய் ஜாதகி மருத்துவராக அனுமதிக்க மாட்டார் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

விரைவில் மீண்டுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Saturday, 7 August 2021

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்பது ஒருவருக்கு அமையும் அவர் நேசிக்கும் சிறப்பான வேலைதான். வாழ்க்கைக்கு ஆதாரமான வேலை சிறப்பாக அமைந்துவிடின் அது ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய இதர வகை சிரமங்களை பெருமளவு குறைத்துவிடும். ஆனால் அந்த வேலை அவரது அறிவுக்கும், திறமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதிஷ்டவசமாக சிலருக்குத்தான் அத்தகைய கனவு வேலையே கிடைக்கிறது. அதில் சென்று சேர்ந்த பிறகும் சிலருக்குத்தான் அந்த வேலையில் உரிய அங்கீகாரமும், உயர்வும் நிம்மதியான பணிச்சூழலும்  கிடைக்கிறது. இரயில்வே துறை வேலைக்காக தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் எனது வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று என்னை அனுகிய நபருக்கான அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து எனது கருத்துக்களை தெரிவித்தேன். எனது ஜோதிட கோணங்களால் ஈர்க்கப்பட்ட அவர், அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒரு பதிவாக எழுத வேண்டுகோள் விடுத்ததன் விளைவே இப்பதிவு.


ரயில்வே துறை வேலைக்கான ஜாதக அமைப்புகள்.

ராகு ரயிலின் காரக கிரகம் ஆகும். ஜீவன காரக கிரகம் சனியாகும். ரயில் போன்ற பெரிய இயந்திரங்களுடன் ஒருவரது வாழ்க்கை தொடர்பு ஏற்பட வேண்டுமெனில் வாகன காரகன் செவ்வாயும் சனியும் தொடர்பில் இருக்க வேண்டும்.  அரசுப்பணிக்குரிய காரக கிரகம் சூரியன் ஆகும். அரசுப்பணிக்குரிய காரக பாவங்கள் 5, 1௦ ஆகியவை ஆகும். சம்பாத்யத்திற்குரிய காரக பாவங்கள் 2, 6, 1௦ மற்றும் 1௦ ன் பாவத் பாவமான 7 ஆகும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி திசா புக்திகள் சாதகமாக வரும் காலம் ஒருவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1968 ல் பிறந்தவர். ரயிலை குறிப்பிடும் ராகு, லக்னாதிபதி சந்திரனோடும், ஜீவன காரகன் சனியோடும், 6 ஆமதிபதி குருவோடும், 1௦ ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்புகொள்கிறார். 2 ஆமதிபதி சூரியன் ராகு சாரமான சுவாதியில் நின்று 1௦ ஆவது பாவமான மேஷத்தை பார்க்கிறார். வித்யா காரகன் புதன் உச்சம் பெற்று, ஆதிக பாகை பெற்று ஆத்மா காரகனாக சிறப்பாக அமைந்ததால் கல்வி சிறப்பாக அமைந்தது. புதனுக்கு செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் பொறியியல் பயின்றார். பிறகு 1998 ல் 5 ல் நிற்கும் சுக்கிர திசையில் சனி சாரம் உத்திரட்டாதி-4 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி கிடைத்தது. தற்போது முதுநிலை பொறியாளராக பணிபுரிகிறார். ரயிலின் காரக கிரகம் ராகுவிற்கு ஜீவன காரகன் சனி மற்றும் 5,1௦ ஆமதிபதி செவ்வாய் தொடர்பு இருப்பதை கவனியுங்கள். இவை ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி அமைய காரணங்களாகும். ஒரு துறையில் ஒருவர் மதிப்பான உயர்ந்த நிலைக்கு  உயர வேண்டுமெனில் 9 ஆமிடம் சிறப்புற வேண்டும். இந்த ஜாதகத்தில் ராகு 9 ல் அமர்ந்து 9 ஆமதிபதி குரு பார்வை பெற்றது சிறப்பு. மேலும் ஜீவன காரகன் சனி உச்சம் பெற்ற புதனின் சாரத்தில் ரேவதி-4 ல் அமைந்திருப்பது ஜாதகரை தனது துறை சார்ந்த வகையில் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதை அறியலாம்.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகி 1952 ல் பிறந்து இரயில்வே துறையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருட்சிக லக்னத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தில் கேது நிற்கிறார். இதனால் இவர் அரசு மருத்துவரானார். கேது உயர்நிலை மருத்துவரை குறிக்கும் கிரகமாகும். சிம்மம் அரசுத்துறை என்பதை குறிக்கிறது. 12 ஆமிட செவ்வாய் ராகுவின் சுவாதி-2 ல் நின்று வேலை பாவமான 6 ஆம் பாவத்தையும், 1௦ ன் பாவத் பாவமான 7 ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் இவர் செவ்வாய் குறிப்பிடும் மருத்துவராகவும், லக்னாதிபதி செவ்வாய் ராகு சாரம் பெற்றதால் ரயில்வே துறை மருத்துவராகவும் செயல்பட வேண்டும் என்பது இவரது கர்மாவாகும்.

சனி வீட்டில் நிற்கும் 1௦ ஆமதிபதி சூரியன் மருத்துவ கிரகம் புதனுடன் இணைந்து சனி நிற்கும் சந்திரனின் சாரத்தையே பெறுகிறார். (சூரியன்-திருவோணம்-3, சனி-ஹஸ்தம்-4. மேலும் 6 ஆமதிபதி செவ்வாய், 1௦ ஆமதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகி அரசுத்துறையில் ரயில்வே மருத்துவராக பணியாற்றியுள்ளார்.  


தொழிலை சுட்டிக்காட்டும் தசாம்சத்தில் லக்னம் கால புருஷனின் 6 ஆமிடமாகி, லக்னாதிபதி புதன் கேதுவுடன் இணைவதும், 1௦ ன் பாவத்பாவம் 7 ல் இருந்து சூரியனோடு சேர்ந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாய் பார்ப்பதிலிருந்து ஜாதகி ஒரு அரசு மருத்துவர் என்பதையும் குரு உச்ச ராகுவோடு இணைந்ததிலிருந்து ஜாதகி ரயில்வே துறை சார்ந்தவர் என்பதையும் உணரலாம்.  

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1994 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ரயில்வே துறையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். விருட்சிக லக்னதிலேயே ராகு அமர்ந்து தனது ஆதிக்கத்தை ஜாதகரின்மேல் செலுத்துகிறார். இதனால் ரயில்வே துறை தொடர்பு. 4 ஆம் பாவத்தில் சனி,செவ்வாய், புதன் ஆகியவை ஒருங்கிணைந்து 1௦ ஆமிடமான சிம்மத்தை பார்ப்பதால் இவரது ஜீவனம் சுகாதாரத்துறை ஆகும். 1௦ ஆம் அதிபதி சூரியன் 5 ஆம் பாவத்தில் மீனத்தில் அமர்ந்ததால் இவருக்கு அரசு தொடர்பான பாக்கியம் ரயில்வே மூலமாக கிடைத்துள்ளது.


தசாம்ச லக்னத்திலும் ராகு-கேதுக்கள் தொடர்பாகியுள்ளதை கவனியுங்கள். தசாம்சத்தில் உணவு காரகன் சந்திரன் உச்சம். இதனால் இவர் ரயிலில் வழங்கப்படும் உணவு தொடர்பான விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவார் எனலாம்.    

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday, 11 April 2021

திருமண உறவில் சூரியன்!

 


சூரியன் தனது சுய கர்மங்களில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்தும் கிரகம் ஆகும். இதன் பொருளாவது எதன் பொருட்டும் ஒருவர் தான் விரும்பி ஈடுபட்டுள்ள செயலை நிறுத்தமாட்டார் என்பதாகும். சூரியன் சீரான மற்றும் நிரந்தரமான இயக்கத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஒருவரை புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் தனது செயலை செய்யவைக்கும் கிரகம்  சூரியனாகும். இதனால் சூரியனின் ஆதிக்கம் உடையோர் பிறரிடம் எளிதில் ஒன்றிவிட  மாட்டார்கள். அப்படியெனில் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களின் திருமண வாழ்வு என்னவாவது? என்றொரு கேள்வி எழும். திருமண உறவிலும் சூரியன் கௌரவம் பார்க்கும். ஒருவரது கௌரவம் பங்கப்பட்டால் அங்கே அவரது திருமண உறவு முறிகிறது என்பது பொருளாகும். தனது கௌரவத்திற்காக எதையும் இழக்கத்துணியும்  கிரகம் சூரியனாகும். இதனால் சூரியன் பொதுவாக திருமண உறவிற்கு எதிரான கிரகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சூரியன் கால புருஷனுக்கு களத்திர பாவமான துலாத்தின் பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் ஆதிக்கம் கொண்டவர்கள் கௌரவத்திற்காக தங்களது குடும்ப வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைத்துனைவர்களிடம் கிடைக்காத அன்பையும் நிம்மதியையும் குழந்தைகளிடம் பெறுகிறார்கள். காரணம் புத்திர காரகன் குரு, சிம்மத்தின் 8 ஆமிடமான மீனத்தின் அதிபதியாவதால் குடும்ப வாழ்வில் சிரமத்தை கொடுத்து சிம்மத்தின் 5 ஆமிடமான தனுசுவின் அதிபதியாவதால் குழந்தைகளால் நிம்மதியை தருகிறார். சூரியன் குடும்ப வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என்பதை ஆராய்வதே இன்றைய பதிவாகும்.


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் செவ்வாயுடன் 4 ஆம் பாவத்தில் இணைந்துள்ளனர். சுக ஸ்தானத்தில் இரு பாவிகள் இணைவது சுகத்திற்கு சிறப்பல்ல ஆயினும் கேந்திர பாவிகள் பொருளாதார வகையில் சிறப்பை தருகின்றனர். இங்கு செவ்வாய், சூரியனுக்கு பின்னால் 5 பாகை விலகி உள்ளது. இதனால் இது செவ்வாய்க்கு  கடுமையான அஸ்தங்கமல்ல. ஆயினும் செவ்வாயும்  சூரியனும் ஒன்று சேர்வதே இல்லறத்திற்கு சிறப்பல்ல. இக்கிரகச்சேர்க்கை பெற்றோர், தனது கௌரவம் பாதிக்கப்பட்டால் நல்ல சம்பாத்தியம் உள்ள வேலையைக்கூட எளிதில் உதறிவிடுவதை காண முடிகிறது. லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற சூரியன் ஜாதகரை எப்போதும் தனது வாழ்வின் உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே முன்னோக்கி நகர்த்தும். எந்த தோல்வியிலும் ஜாதகருக்கு பின்வாங்காத நிலையைத்தரும். சூரியன் செவ்வாய்  சேர்க்கை ஜாதகருக்கு தகுதிக்குறைவை அது எந்த வடிவமானாலும்  அல்லது உறவானாலும் உதறிவிடும் மனநிலையைத்தரும். ஆனால் சூரியன் செவ்வாய் சேர்க்கை நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்ததும் ஒரு நீர்க்கிரகம் சந்திரன் லக்னத்தில் அமைந்ததும் சூரியன் செவ்வாய் இணைவு தோஷத்தை பெருமளவு குறைத்துவிடுகிறது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் 6 ல் மகரத்தில் அமைந்து, அதற்கு பாதகமான விருட்சிகத்தில் செவ்வாயும் சூரியனும் அமைவது மனைவிக்கு பாதகத்தை செய்யும் அமைப்பாகவே தோன்றுகிறது. மனைவி தனது தகுதிக்கு குறைவானவராக இருந்தால் மனைவியோடு நல்லுறவு இருக்காது. தனது தகுதிக்கு நிகரானாவராக இருப்பின் மனைவியை  ஜாதகர் விட்டுத்தர மாட்டார்.

ஜாதகரின் இல்லறம் சிறக்க இங்கு மற்றொரு காரணி உதவுகிறது. 7 ஆமதிபதி சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தனது மனைவியை விட்டுத்தர மாட்டார். ஆனால் இந்த விதியையும் ஜாதகரின் தகுதிக்கு மனைவி குறைந்த தகுதி பெற்றராயின் செயல்பட வாய்ப்பு இல்லை எனலாம். இவர் மனைவி இவருக்கு இணையான தகுதி வாய்ந்தவராக உள்ளார். இதனால் கடும் போராட்டமான காலங்களிலும் தனது தகுதியை உயர்த்திக்கொண்டு மனைவியோடு இன்று சிறப்பான இல்லறம் நடத்துகிறார். ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் அரசுப்பணியில் உள்ளார். 7 ஆமதிபதி சனி 12 ல் மறைந்து வக்கிரம் பெற்று, வேலை பாவமான 6 ல் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறார். இதனால் இவரது மனைவியும் பணி புரிபவராக இருக்கிறார். சுக்கிரனுக்கு பாதகத்தில் நிற்கும் சூரியனும் செவ்வாயும் களத்திர பாவமான 7 ஆமிடத்திற்கு திக்பலத்தை தருவதை கவனியுங்கள் இதனால் இவரது மனைவியும் அரசுத்துறையில் பணிபுரிகிறார். எனவே ஜாதகருக்கும் மனைவிக்குமான சம தகுதி இங்கு இவர்களின் குடும்ப வாழ்வை சிறப்படைய வைக்கிறது. இதில் திசா புக்திகளின் பங்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்து ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னதிலேயே செவ்வாய். இதனால் ஜாதகிக்கு நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் அதிகம். ஜாதகிக்கு சுக்கிர திசை முடிந்து தற்போது சூரிய திசையில் ஒரு வருடம் முடிந்துள்ளது. சுக்கிரன் வித்யா காரகன் புதனுடனும் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று திசை நடத்திய காலத்தில் 2016 ல் ஜாதகி உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை உலகின் முதன்மையான தேசத்தில் முடித்தால்தான் தனக்கு மதிப்பு என ஜாதகி எண்ணினார். காரணம் திசா நாதன் சுக்கிரன் 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியனின் காரகமான இருப்பதிலேயே உயர்வான எனும் காரகத்தை தனதாக்கிக்கொண்டார். சுக்கிரன் சூரியனின் அஸ்தங்கமாகவில்லை எனினும் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனின் காரகங்களை தனதாக்கிக்கொண்டார். மேலும் ராகுவை முதலில் எதிர்கொள்ளும் சுக்கிரன் ராகுவின் காரகங்களையும் தனதாக்கிக்கொள்கிறார். இந்த ஜாதகி திரைத்துறையில் இயக்குனர் தொடர்புடைய உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். திரைத்துறையை சுக்கிரன் புதன் சேர்க்கை குறிக்கிறது. அதில் இயக்குனர் எனும் நிலையை சூரியன் குறிக்கிறார். அதில் பிரம்மாண்டமான நவீன நுட்பங்களை ராகுவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் கனவுகள் கற்பனைகளை குறிக்கும் காரக கிரகமாகும் இவற்றோடு ராகு தொடர்பாகும்போது அது பிரம்மாண்டமானதாக உருவெடுக்கும்.

இந்த ஜாதகி அமெரிக்காவில் வரும் திரைப்படங்களைப்போன்று வேற்றுகிரக வாசிகளோடு தொடர்புடைய பிரம்மாண்டமான திரைப்படங்களை இந்திய மொழிகளில் எடுக்க விரும்புபவர். தற்போது ஜாதகி சுக்கிர திசை முடிந்து திக்பலம் பெற்ற சூரிய திசையில் இருக்கிறார். 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்ற சூரியன் பணிக்கு சிறப்பு. ஆனால் திருமண வாழ்விற்கு சிறப்பை தராது. 1௦ ஆமிட திக்பல சூரியன் மேலும் மேலும் புகழ் மற்றும் உயர்வையே எண்ண வைக்கும். சூரியன் இங்கு ஜாதகிக்கு ஒருவித புகழ்,  உயர்வு எனும் மன போதையை ஊட்டி திருமண வாழ்வை தடை செய்கிறார். 1992 ல் பிறந்த ஜாதகிக்கு தற்போது வயது 32. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர் கல்வி பாவமான 9 ல் லக்ன பாதகாதிபதி சனி அமைந்ததால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர் இன்னும் கல்வியை முடித்து திரும்ப மனமின்றி மேலும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவே விரும்புகிறார். இது சூரியனால் உண்டாகும் ஒருவித புகழ் போதை மனநோய் எனலாம். சுக ஸ்தானாதிபதியும் மனோ காரகனுமான சந்திரனும் நீசம் பெற்றதால் ஜாதகி உடல் ரீதியாக விரும்பும் சுகத்தை சூரியன் ஏற்படுத்தும் புகழ் போதை எண்ணம் மழுங்கடித்துவிடுகிறது. 2 ல் நின்று கல்வி கற்க பொருளைத்தரும் குரு குடும்பத்தை எளிதில் தரமாட்டார். காரணம் 5 ல் கேது நிற்பதையொட்டிய புத்திர தோஷமும் திருமண தடைக்கு முக்கிய காரணம். இந்த ஜாதகி திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள முதலில் மனநல சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நன்று.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 12 March 2021

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

 


நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன் எதிர்மறையாகவும் செயல்பட்டு வளர்ச்சியை அடையக்கூடியது. சுக்கிரனின் இந்த எதிர்மறைத்தன்மையால் தமிழ்நாட்டு மக்களாகிய நமக்கெல்லாம் பொதுவாகவே ஒரு எதிர்மறை சிந்தனைகொண்டவர்கள்தான். தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயர் மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கேதுவின் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டது. கேது மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம்,  நேர்மையான நீதி நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மருத்துவத்துறையின், ஆன்மீகத்துறையின், ஜோதிடத்துறையின் எழுச்சி ஆகியவை கேதுவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டதை தெளிவாக உணர்த்துகிறது. எனவே கேதுவின் ஆதிக்க காலமான இன்றைய நிலையில் இனி திரைத்துறையோடு தொடர்புடையவர்கள் தமிழகத்தை ஆள நினைத்துப்பார்க்கவே இயலாது. இதை எதிர்வரும் தேர்தலில் திரைத்துறை வேட்பாளர்கள் அடையும் தோல்வியிலிருந்து உணரலாம். சுக்கிரன் பாவிகள் தொடர்பு, சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் ஒருவர் நேர் வழியில் செயல்பட்டு அடைய முடியாத தனது விருப்பங்களை லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் சென்று நிறைவேற்றிக்கொள்வதை குறிக்கும். அப்படி பாவிகள் தொடர்பு பெற்ற சுக்கிரனின் செயல்பாட்டிற்கு ஒருவரது ஜாதகத்தில் உள்ள வக்கிரம் பெற்ற கிரகங்களும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் உதவுகின்றன. இக்கருத்தை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவதே இன்றைய பதிவு.


 

ஜாதகர் 1962 ல் பிறந்த ஒரு ஆண். இவர் அரசுத்துறையில் பணிபுரிந்து கடந்த 2020 பிற்பகுதியில் பணி ஓய்வு பெற்றவர். ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமானாலும் அவர் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாய் நீசமாகிவிட்டதால் ஜாதகர் நேர் வழியில் முயன்று தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலாது. சந்திரன் பரிவர்தனைக்குப்பிறகு ராகுவோடு தொடர்பாவதாலும் இவர் மனம் ராகுவின் குறுக்கு வழி சிந்தனையை நாடும். நேர் வழி முயர்ச்சிகளை ராகு தடை செய்வார். குறுக்கு வழியை ராகு தடை செய்ய மாட்டார். லக்னாதிபதி நீசமாகி ராகுவோடு இணைந்து நிற்பதால் குறுக்கு வழிக்கு ஜாதகர் முயல்வார் ஜீவன காரகன் சனியும் மூன்றாமிடத்தில் அமைந்திருப்பது சிறப்பே. ஜீவன விஷயங்களில் கேதுவின் நேர்மைத்தன்மை வேண்டும் என்பதை இது குறித்தாலும் ராகு-கேதுக்களோடு தொடர்பான சனியை நீச செவ்வாய் பார்ப்பதால் ஜாதகருக்கு நேர் சிந்தனையை விட குறுக்கு சிந்தனைகளே அதிகம் வெற்றி தரும். 1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு லாப ஸ்தானத்தில் இணைத்துள்ளது. இதனால் ஜாதகர் அரசுத்துறையில் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் மற்றும் வரி வசூல் சார்ந்த துறைகளில் ஜாதகர் பணி புரிந்தார். 1௦ ஆமதிபதி சூரியனானதால் அரசுத்துறையிலும் சூரியன் புதனோடு இணைந்ததால் திட்டமிடல் துறையிலும் ஜீவன காரகர் சனி ராகு கேதுக்களோடு தொடர்பானதால் வரி வசூல் துறையிலும் ஜாதகர் பணி புரிந்தார்.   1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு இணைந்துள்ளது  ஜாதகரின் பணியில் நேர்மையான நண்பர்களை விட குறுக்கு வழி ஆசாமிகள் அதிகம் உடன் வருவர் என்பதை உணர்த்துகிறது.  

லக்னாதிபதி நீசமானதால் ஜாதகர் ஆளுமைத்தன்மை இல்லாதவராக செயல்பட்டார். நீச செவ்வாய் பாதக ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்பானதால் ஜாதகரிடம் பொதுவாகவே ஒரு பயந்த சுபாவம் உண்டு. இவரால் தனது துறையில் தவறு செய்யும் பணியாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ஜாதகரின் இந்தத்தன்மையால் ஜாதகருக்கு பணி ஆண்டுகள் அடிப்படையில் தன் துறை சார்ந்த வகையில் முதன்மை இடத்திற்கு முன்னேற தகுதி இருந்தும்  இவரை முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல அரசு நிர்வாகம் தயங்கியது என்றே சொல்லலாம். ஜோதிடத்தில்  உத்தியோக உயர்வை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். ஒன்பதாம்  பாவமே ஜாதகருக்கு பாதக ஸ்தானமாகவும் அமைந்துவிட்டதால் உத்தியோக உயர்வில் ஜாதகருக்கு பாதகம் ஏற்படும் என்பதை இவரது லக்னமே குறிப்பிடுகிறது. ஜாதகருக்கு வேலை பாவமான 6 ஆம் பாவம் மேஷத்தில் சந்திரன் லக்னத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-3 ல் நிற்கிறார். இதனால் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் ஏற்பட்ட தொடர்பால்  சந்திரனின் திசையில் 6 க்கு லாபத்தில் நிற்கும் குருவின் விசாகம்-4 ல் விருட்சிகத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் ஜாதகருக்கு அரசுப்பணி கிடைத்தது. ஜாதகருக்கு கடந்த 2019 பிற்பகுதி வரை குரு திசையில் கேது புக்தி நடந்தது. குரு வேலை பாவமான 6 க்கு லாபத்தில் நிற்கும் அதே சமயம் அது 6 ன் பாதக ஸ்தானம் என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் குரு திசை ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு குரு திசையில் கேது புக்தி 2020 பிற்பகுதி வரை நடக்கிறது. கேது உத்தியோக உயர்வை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சந்திரனின் திருவோணம்-1 ல் அதே திருவோணம்-1 ல் உள்ள சனியுடன் இணைந்து இருந்தாலும் 9 ஆமிடம் பாதக ஸ்தானமாக வருவதாலும் உத்தியோக உயர்வுகளில் தடையும் மறுப்பும் ஜாதகருக்கு ஏற்பட்டது. கேது புக்தியை அடுத்து வரும் சுக்கிர புக்தி வருமான பாவமான 2 ன் விரையமான லக்னத்தில் இருப்பதால் சுக்கிர புக்தியில் ஜாதகர் பணி ஓய்வு பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 ல் உள்ள ராகுவும் உத்தியோக உயர்வில் தடைகளையே கொடுத்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஆனால் ராகு முன் சொன்னபடி முறையான வழியில் செயல்படுவதை தடை செய்வார். முறையற்ற வழிகளில்  செயல்பட தடை செய்ய மாட்டார். இதனால் உத்தியோக உயர்வை முறையாக பெற இயலாது என்பதை புரிந்துகொண்ட ஜாதகர் உத்தியோக உயர்வுக்காக லஞ்சம் கொடுத்து பணி உயர்வு பெற்றார். பணி ஏற்ற சில மாதங்களில் குரு திசையில் சுக்கிர புக்தி வந்ததும் பணி ஓய்வும் பெற்றார்.

இந்த ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டதை கிரகங்கள் சுட்டிக்காட்டினாலும் அவர் குறுக்கு வழியில் சென்று பணி உயர்வு பெறவும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் இதர வக்கிர கிரகங்களான புதனும் குருவும் இணைந்து செயல்பட்டுள்ளன. புதன் லஞ்சப்பணத்தை மேலிடத்தில் கொண்டுசேர்க்கும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் லஞ்சத்தின் காரக கிரகமாகும். இவைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் ஜாதகர் குறுக்கு வழியில் உத்தியோக உயர்வு பெற்றார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501