Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Sunday, 3 January 2021

காத்திருந்து... காத்திருந்து...

 

காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் காதலிலும் சில வேதனைகளும் வெற்றிகளும் உண்டு. அனைத்திற்கும் ஒரே காரணம், வாழ்க்கையை அதன் இயல்பில் அனுபவிக்க எண்ணாமல் தங்கள் எண்ணப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என எண்ணுவதே. இது சாத்தியமானால் இறைவனுக்கு இங்கே இடமில்லை. காதலால் எந்தகைய ஜாதகத்தினர் சிரமப்படுவர் என்பதை தெரிந்துகொண்டால் அவர்கள் தகுந்த உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கலாம். ஜோதிடமும் அதற்கு உதவும்.


காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். ஐந்தாம் பாவம் 7 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டால் மட்டுமே காதல் திருமணத்தில் முடியும். காதலின் வெற்றியை 3,5,7,11 ஆகிய பாவங்களின் ஒருங்கிணைவு தீர்மானிக்கிறது. காதலில் தோல்வியை 4,6,1௦, ஆகிய பாவங்களும் கேதுவும் தீர்மானிக்கின்றனர். காதல் யாருக்கு தீமையை தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.             

                    


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாம் பாவம் என்பதால் தனது எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தாது மறைக்கக்கூடியது. அதுவும் லக்னமும் ராசியும் ஒன்று என்பதால் இக்குணம் அதிகமிருக்கும். சந்திரன் நீசமாவதால் பெற்றோர்களுக்கு பாதிப்பைத்தரும் ராசியாகும். இந்த ஜாதகி தனக்கு வந்த வரன்களை எல்லாம் பிடிக்கவில்லை என பல ஆண்டுகள் மறைத்தார். ஜாதகத்தில் லக்னாதிபதி மறைவு ஸ்தானமான எட்டாமிடம் மிதுனத்தில் வக்கிர கதியில் அமைந்திருப்பதை காண்க. இயல்பாகவே பிடிவாத காரகனான செவ்வாய் வக்கிரமானால் பிடிவாத குணம் மேலும் கூடும். இதனால் பிடிவாதமாக தனக்கு சாதகமான நிலை வரும்வரை ஜாதகி தனது விஷயங்களை மறைக்கிறார். ஜாதகிக்கு வயது தற்போது 28. இன்னும் திருமணமாகவில்லை. மிக தாமதமாகவே தனது காதலை வீட்டில் தெரிவித்தார். ஜாதகத்தில் சந்திர சூரியர்களுக்கு சஷ்டாஷ்டகத்தில் லக்னாதிபதி இருப்பதால் ஜாதகியின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த ஜாதகி நிறைவேற வழியற்ற தனது காதலால் மிகவும் சிரமப்படுகிறார். ஜாதகியின் காதலை நிறை வேற்ற துணிவுடன் பெற்றோரை தொடர்புகொண்டு ஜாதகியை கரம்பிடிக்க வேண்டிய காதலனே தீர்மானம் எடுக்க முடியாமல் ஜாதகியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஜாதகியின் இளமையை வீணாக்குகிறார் என்பதுதான் இதில் சோகம்.

சரி ஜாதகியின் காதல் இப்படி இழுபறியாக விளங்க காரணம் என்ன?

1993 ல் கேட்டை-2 ல் பிறந்த ஜாதகிக்கு காதலை குறிக்கும் கேது திசையில் காதலுக்குரிய பாவமான 5 ஆம் பாவாதிபதி குருவின் புக்தி 2008 ல் ஜாதகியின் 14 ஆவது வயதில் துவங்கியது. அப்போது முதல் ஜாதகி காதலிக்கிறார். தற்போதுவரை 14 வருடமாக மிக நீண்ட காதல். 2011 மத்தியிலிருந்து ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. களத்திர மற்றும் விரையாதிபதியான சுக்கிரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்று 2, 5 ஆம் பாவாதிபதி குருவின் பூரட்டாதி-1 ல் நிற்கிறார். திசா நாதன் சுக்கிரன் பகை சாரம் பெற்று திக்பலம் பெறுகிறார். திக்பலம் பகை சாரத்தை முறியடிக்கும் என்றாலும் சுக்கிரன் 4 ஆமிடத்திலிருந்து திசை நடத்துவதுதான் பாதிப்பு. காரணம் 4 ஆம் பாவம் திக்பலம் பெற்றாலும் அது காதலை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு விரைய பாவமாகும். இதனால் 5 ஆம் பாவாதிபதி சாரம் பெற்றாலும் 5 க்கு விரையத்திலிருக்கும் சுக்கிரன் 5 க்கு பாதிப்பை தருகிறார். மேலும் சுக்கிரனும் 5 ஆம் பாவாதிபதி குருவும் பகை என்பதை மீறி இருவரும் ஒருவருக்கொருவர் சஸ்டாஷ்டகத்தில் உள்ளதால் காதலை தனது திசையில் நிறைவேற்றிட மாட்டார். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதன் குறைந்த பாகை (2.06) பெற்றதனால் தாரா காரகனாக உள்ளார். தாரா காரகனான புதனே ஜாதகியின் காதலுக்கு முக்கிய காரணம். புதன் தாரா காரகனானதால் ஜாதகியின் காதலில் உண்மையும் ஏக்கமும் இருக்கும். ஆனால் காதலனை குறிக்கும் புதன் சூரியனின் அஸ்தங்கமாகியுள்ளது. இதனால் காதலனுக்கு போதிய தகுதி இல்லை என்பது தெரிகிறது. ஆனால் புதன் சூரியனோடு சேர்ந்ததால் கௌரவமாகவும்,  சனியோடு சேர்ந்ததால் ஜாதகியை ஏமாற்றுபவராகவும் இருப்பார். (புதன்+சனி சேர்க்கை ஏமாற்றத்தை  குறிக்கும்).

ஜாதகத்தில் குரு 7 ஆம் பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்துனைவர் வகையில் ஓரளவு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பாகும். ஓரளவு மட்டுமே என்று கூறக்காரணம், குரு நின்ற வீட்டோன் புதன் அஸ்தங்கம் பெற்றுவிட்ட நிலையில், குருவும் சார அடிப்படையில் பாதகாதிபதி சந்திரனின் ஹஸ்தம்-4 ல் நிற்கிறார். நீச சந்திரன் குடும்ப பாவத்திற்கு  விரையத்தில் லக்னத்தில் நின்று, சந்திரனோடு இணைவு பெற்ற சர்ப்பங்களும் 1 & 7 ல் நிற்பது ஜாதகிக்கு திருமணம் நடக்க கடும் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  மூன்றாவது காமத்திரிகோணமான 11 ஆமிடத்தில் குரு நின்றாலும் அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் காதலனும் பின்வாங்கும் நிலையில் பெற்றோரும் சம்மதிக்காத நிலையில் ஜாதகி விரக்தி நிலையை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜோதிடம் மூலம் தனது வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் என மிக காலம் தாழ்த்திய நிலையில் என்னிடம் ஜாதகி ஆலோசனை கேட்டார். ஜாதகிக்கு சுக்கிர திசை இன்னும் 11 ஆண்டுகள் உள்ளதையும், சுக்கிர திசை சுகத்திற்கு கணவனை கொண்டுவரும் ஆனால் காதலை நிறைவேற்றி வைக்காது என்பதையும் எடுத்துக்கூறினேன். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதனுக்கும் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டகம் (6-8 ஆக) உள்ளது. இது காதலன் வேறு கணவன் வேறு என்பதை தெரிவிக்கிறது. மேலும் மேற்சொன்னபடி காதலனுக்குள்ள பாதகமான அமைப்புகளை எடுத்துக்கூறி இனிமேலும் தனது வாலிபத்தை வீணாக்காமல், பெற்றோர் பார்க்கும் நல்லதொரு வரனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகிக்கு சுக்கிர திசையில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குரு புக்தி இந்த ஆண்டு பிற்பகுதியில் துவங்குகிறது. ராகு கேதுக்கள் கோட்சாரத்தில் லக்னத்தைவிட்டு விலகி லக்னத்திற்கு 6 மற்றும் 12 ஆக அதாவது 2022 ராகு-கேது பெயர்ச்சிக்குப்பிறகு கோட்சார குருவும் மீனத்திற்கு வரும் காலம் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501     

Friday, 14 August 2020

பெற்றோர் ஆதரவற்ற காதல் மண அமைப்பு!


ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரே சம்பவத்தில், ஒரே நாளில்  மாற்றிவிடும் வல்லமை படைத்தவை ராகு-கேதுக்கள். ஒரு பாவ பலனை அதன் பாவாதிபதியும் காரக கிரகமும் ஜாதகத்தில் மறுத்திருந்தால் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தோடு தொடர்புகொண்டிருந்தால் அந்த பாவ பலனை நடத்தி வைக்கும் தகுதியை அடைகின்றன. இதனால் இதர கிரகங்களை மீறி ஜாதகருக்கு ஒரு விஷயத்தை இவை நடத்தி வைக்கின்றன. இதனால் அப்படிப்பட்ட காலத்தில் இவை இதர கிரகங்களை கட்டிவைக்கின்றன. இதனால் எழும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி போர்க்குணத்தோடு அப்படிப்பட்ட சம்பவங்களை அவை நல்லவை ஆயினும் பொல்லாதவை ஆயினும்  செய்துவைக்கின்றன. ராகுவிற்கு குரு தொடர்பிருந்தால் அப்படிப்பட்ட சம்பவ காலங்களில் குருவே போர்க்களத்தில் இருப்பதாக எண்ணலாம். சனி, செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் தொடர்பிருந்தால் இவை சம்பவ காலங்களில் ராகு-கேதுக்களை தொடர்புகொண்ட கிரகங்களின் குரூரத்தன்மையை வெளிப்படுத்தும். எப்படி நடந்ததென்றே தெரியாமல் கனவுபோல நடந்துவிடும் வாழ்க்கை சம்பவங்கள் அனைத்திற்கும் ராகு-கேதுக்கள் காரக கிரகங்களாகின்றன.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்   

ஜாதகிக்கு ராகு திசை குரு புக்தி நடந்த போது நடந்த சம்பவங்கள் இவை. ராகு 7 , 12 பாவங்களோடு தொடர்புகொண்டு லக்னாதிபதி சுக்கிரனின் பரணி-2 ல் நின்று திசை நடத்துகிறார். ஜாதகிக்கு அப்போது வயது 24. ஏழாமிடத்தோடு தொடர்பாவதால் ராகு ஜாதகிக்கு திருமணம் நடத்திவைக்க பொறுப்பேற்கிறார். 7 ஆமிட சனி குரு சாரத்தில் நின்று மகரத்தில் அமைந்த குருவை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். குரு 3 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து 7 ஆமிட சனி தொடர்பு ஏற்பட்டு 11 ஆமிடாதிபதிமாகவும்  வருவதால் தனது புக்தியில் ஜாதகிக்கு தனது காரக மற்றும் பாவ தொடர்பு அடிப்படையில் திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பேற்கிறார். (3, 7, 11 ஆகியவை திருமண வாழ்வை அமைத்துத்தரும் காமத்திரிகோணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) பாதகாதிபதி சனி வக்கிரமாகிவிட்டதால் தனது 9 ஆம் ஆதிபத்திய பலனான பாதக பலனை கைவிட்டு காரக பலனை மட்டும் வழங்க வேண்டியவராகிறார். எனவே இந்த ஜாதகிக்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் குருவாலும் சந்திரனாலுமே பாதிப்புகள் ஏற்படவேண்டும். சனியால் ஏற்படாது.

நீசமாகி வக்கிரம் பெறுவதால் குரு நீசபங்கமாகிறார். வக்கிர குரு தனது ஆதிபத்தியத்தை விட்டு காரக பலனையே பிரதானமாக செய்யும் என்றாலும், தான் நிற்கும் ஸ்தான அடிப்படையில் பாதக பலன்களையும், வக்கிரமாகி 8 ஆமிடம் நோக்கி வருவதால் அவமானம், கண்டம் என்ற வகை பலன்களையும்,  லக்னத்திற்கு லாபாதிபதி என்பதால் லாப ஸ்தான பலன்களையும் தனது புக்தி காலத்தில் ஒரு சேர வழங்கியாக வேண்டிய நிலையில் உள்ளார். குரு எத்தனை இடர்பாடுகளை தந்தாலும், குருவிற்கு கேந்திரத்தில் நிற்கும் திசா நாதன் ராகுவிற்கு குரு கட்டுப்பட்டே ஆக வேண்டும். மேலும் ராகுவிற்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகங்களின் செயல்பாட்டினை ராகு கட்டுப்படுத்துவார் என்றொரு முக்கிய விதி உண்டு. அதனோடு வக்கிரமாகி தன்னிலை இழந்த கிரகங்களை நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்கள் தங்களது சேவகர்களாக பயன்படுத்தும் என்றொரு விதியும் உண்டு. இதனால் பாதகம், பாதகாதிபதி, அஷ்டமாதிபத்யம் ஆகிய பலன்களோடு 11 ஆமதிபத்திக்குரிய பலன்களையும் குரு வழங்கியாக வேண்டும். இவை அனைத்தையும் ஒரே சம்பவத்தின்மூலம் வழங்கிவிட குருவிற்கு திசா நாதன் ராகு கட்டளையிடுகிறார்.

குரு தனது புக்தி காலத்தில் இவ்வணைத்து பலன்களையும் திருமணம் என்ற ஒரே சம்பவத்தின் மூலம் ஜாதகிக்கு வழங்கினார். சுக்கிரன்+செவ்வாய் இணைவால் ஜாதகி காதலித்தார். செவ்வாய்-சனி பரஸ்பர பார்வையால் ஜாதி மாறி காதலித்தார். 9 ஆமதிபதி 9 க்கு பாதகத்தில் நின்றால் ஜாதகர் தனது குலப்பெருமையை காப்பாற்றமாட்டார் என்பதற்கேற்ப ஜாதி மாறி காதலித்தார்.  காதலுக்குரிய பாவமான லக்னத்திற்கு 5 ல் காதல் கிரகம் புதன் உச்சமாகி சூரியனோடு இணைந்து நின்ற அமைப்பாலும் ஜாதகி  காதலித்தார். ஆனால் 9 ஆமிடம் பாதிக்கப்பட்டு சிம்ம ராசிக்கு சனி+செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் தந்தை தனது காதலை ஏற்கமாட்டார் என்றொரு மனோநிலைக்கு ஜாதகி ஏற்கனவே வந்திருந்தார். இதனால் காதலனோடு சென்று பதிவு திருமணம் செய்துகொண்டார். பெண் ஜாதகத்தில் குரு, புதன், சந்திரன் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பாவது வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்வதை குறிக்கும். இந்த ஜாதகத்தில் சந்திரனோடு இணைந்த குரு, புதனை 9 ஆம் பார்வையாக பார்ப்பதும், குரு+சந்திரனுக்கு திரிகோணத்தில் லக்னத்திற்கு 5 ல் புதன்  வலுவாக அமைந்ததும் ஜாதகியின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. தந்தை இதனால் வெகுண்டெழுந்து ஜாதகியின் திருமண வாழ்வை முறிக்க சகல முயற்சிகளையும் எடுத்தார். சூரியனுக்கு 8 ல் மேஷத்தில் நிற்கும் திசா நாதன் ராகு சூரியனின் முயற்சிகளை முறியடித்தார். (கவனிக்க: ஒரு கிரகத்திற்கு அதன் ஆயள் ஸ்தானமான 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும்.) இதனால் ஜாதகி அவமானப்பட்டார். உயிராபத்திற்கு உள்ளானார். இறுதியில் தனது காதலில் உறுதியாய் நின்று தற்போது குடும்ப வாழ்வை நடத்தி வருகிறார். 

இப்போது திருமண கால கிரக நிலைகளை கவனிப்போம்.     

ஸ்திர லக்னக்திற்கு பாதிப்பை வழங்க வேண்டிய பாதக ஸ்தானமான 9 ஆமிடத்தில் கோட்சார ராகு வந்து நின்று குருவின் செயல்பாட்டை தானே முன்னின்று கவனிக்கிறார். இதனால் ஜனன காலத்தில் பாதகத்தில் நின்ற குரு, ராகுவை மீறி செயல்பட முடியாதவாறு ராகு குருவை கட்டுப்படுத்துகிறார். எதிர்ப்பை தெரிவிக்கும் சூரியன், கோட்சாரத்தில் மேஷத்தில் ஜனன ராகு மீது நின்று கிரகண தோஷமடைகிறார். இதனால் ராகுவை மீறி சூரியனால் செயல்பட முடியாது. தாயாரை குறிக்கும் சந்திரன் கோட்சாரத்தில் ஜனன கேது மீது நின்று,  கோட்சார கேதுவும் கடகத்தில் நிற்பதால் தாயின் எதிர்ப்பையும் கேது முறியடிக்கிறார். ஜனன நிலையை போலவே கோட்சாரத்திலும் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்திருக்கின்றனர். சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாயோடு இணைந்துள்ளது வீட்டை பிரிந்துவர ஜாதகிக்கு துணிச்சலை கொடுத்துள்ளது. ஜனனத்தில் 7 ஆமிடத்தில் நின்று சிம்மத்தை பார்த்த சனி கோட்சாரத்தில் வக்கிரமாகி ஜனன செவ்வாய்+சுக்கிரன் மீது நிற்கிறது. இதனால் இந்த ஜாதகி திருமணமானவுடன் தனது பாதுகாப்பிற்காக காவல்நிலையத்தை நாடினார். ஜனன காலத்தில் குரு வக்கிரமாகி சனி நேர்கதியில் இருக்கிறது. ஆனால் கோட்சாரத்தில் சனி வக்கிரமாகி குரு நேர்கதியில் உள்ளது. இது ஜனன கால கிரகங்களின் மனோபாவம் மாறிவிட்டதை குறிப்பிடுகிறது.,

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

 அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

 பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 5 August 2018

வைதேகி காத்திருக்கிறாள்.


சம்பாத்தியத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று வேலை பார்க்கும் அன்பர்களின் வாழ்க்கை பார்வைக்கு சிறப்பாகத் தோன்றினாலும் பெரும்பாலும் அதில் துயரங்களும் கலந்தது என்பதே உண்மை. அதிலும்  கணவரை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு நமது இல்லத்தரசிகள் படும் மனோரீதியான துயர் கொடுமையானது. அதனினும் கொடுமை மண முடித்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்தை பிரிவது.




வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தாய்நாடு திரும்புவதில்லை. அப்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்பத்தை பார்க்க இயலாதோர் இல்லற வாழ்க்கை உண்மையில் சபிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வரிசையில் சமீபத்தில் ஆராய்ந்து என்னை பாதித்த இரு ஜாதகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.


ஒரு ராசி மண்டலத்தின் இறுதி 3 பாகைக்குள் இருக்கும் கிரகமும் முதல் மூன்று பாகைக்குள் இருக்கும் கிரகமும் வலுவற்ற அமைப்பில்தான் இருக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் 1.12 பாகையில் ராசி மண்டலத்தின் விளிம்பில் அமைந்துள்ளது வலுவற்ற அமைப்புதான். அதைவிட ஒரு ஜாதகத்தில் ஜாதகரை  தாங்கிப்பிடிக்க வேண்டிய லக்னாதிபதியும்,  குடும்ப பாக்ய பாவாதிபதியுமான சுக்கிரனும் ராசி சந்தியில் 0 பாகையில் நிற்பது மிக மோசமான அமைப்புதான். லக்னாதிபதி புதன்,  களத்திர & பாதகாதிபதியும் குடும்ப காரகனுமான குரு சாரம் (புனர்பூசம் – 4) பெற்று நிற்பது ஜாதகி கணவன், குடும்ப வகை பாதிப்புகளை அடைவாள் என்பதை குறிக்கிறது.

சுக்கிரன் திக்பலம் பெற்ற விரையாதிபதி சூரியனுடன் இணைந்து 10 ல் மாந்தியுடன் இணைந்து நிற்பது குடும்ப வாழ்க்கை விரையமாவதை குறிப்பிடும் அமைப்பாகும். அப்படி அமைந்த சுக்கிரனை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு பார்ப்பது ஜாதகியின் குடும்ப வகை பாதிப்பின் தீவிரத்தை காட்டுகிறது.


பொதுவாக அனைத்து லக்னத்தவர்க்கும்  சுக ஸ்தானாதிபதி வக்ரமடைவது சுகத்தில் ஏற்படும் தடையை குறிப்பிடும் என்றாலும் உபய லக்னத்தவர்க்கு மட்டும் 4 ஆம் அதிபதி 4 ஆமிடத்தில் தனித்த நிலையில் எப்படி நின்றாலும் பாதிக்கும்.

நான்காமிடத்தில் ஆட்சியில் நின்றால் கேந்திராதிபத்திய தோஷம், வக்ரமடைந்தாலும் சுகக்கேடு. சனி, ராகு-கேதுக்களோடு இணைந்து 4 ல் நின்றால் தோஷம் பெருமளவில் குறையும். குரு களத்திர பாவாதிபதியாகி களத்திர பாவத்திற்கும் 10 ல் கேதிராதிபத்திய தோஷம் பெற்று நிற்பதும் பாதிப்பே.

போக ஸ்தானமான 3 மற்றும் கணவன் மனைவிக்கிடையேயான உடல் ரீதியான உறவை குறிக்கும் 8 ஆமிடாதிபதி செவ்வாய் நீசமானது பரிதாபத்திற்குரியது. பெண்ணின் ஜாதகத்தில் களத்திர , மாங்கல்ய காரகனான செவ்வாய் நீசம் பெற்றது ஜாதகியின் கணவனுக்கு உள்ள உயிராபத்தை குறிப்பது மட்டுமல்லாது ஜாதகி கணவனால் சுகமடைய முடியாது என்பதையும் குறிப்பிடுகிறது.

உபய லக்னத்திற்கு 11 ஆமிடம் பாதகமில்லை என்றாலும் பொதுவாக கடகத்தில் நிற்கும் கிரகங்கள் எந்த ஒரு ஜாதகருக்கும் மன ரீதியான பாதிப்பை தரும். கணவனை குறிக்கும் செவ்வாய் ஜல ராசியான கடகத்தில் நிற்பது ஜாதகியின் கணவன் வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடுகிறது. செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் கேது தொடர்பைபுயும் பெற்று சனி பார்வை பெறுவது, கணவன் தனக்கு ஏற்படும் கடனை அடைக்க வெளி நாடு சென்று பணி புரிவதையும் குறிப்பிடுகிறது. கடகம்-வெளிநாடு, சனி – வேலை, செவ்வாய் – கணவன், கேது = கடன்.

மேற்கண்ட அமைப்பை 5 ஆமதியும் கர்ம காரகனுமான சனி பார்ப்பது ஜாதகியின் கணவனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனது கர்ம வினையால் ஏற்படும் பாதிப்பு என்பதை தெள்ளதெளிவாக எடுத்துரைக்கிறது.

இனி ஜாதகியின் கணவரது ஜாதகத்தை அலசுவோம்



லக்னத்தில் இரு ஜலக்கிரகங்கள். லக்னாதிபதி தன ஸ்தானத்தில் கேதுவும் ஒரு ஜலக்கிரகம் என்பதுடன் கேது வெளிநாட்டையும் குறிக்கும் கடனையும் குறிக்கும். ஒரு ஜாதகர் வெளிநாடு செல்வதை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி லக்னத்தில் உள்ள இரு ஜலக்கிரகங்களுடன் இணைகிறது. ஜீவன காரகன் சனி 9 ஆம் பாவத்தில் நீசமடைந்து வக்கிரம் பெற்ற நிலையில் நிற்கிறது. இந்த அமைப்புகள் அனைத்துமே மனைவியின் ஜாதகத்தில் குறிப்பிட்டபடி ஜாதகர் வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும் அமைப்பாகும்.

குரு குடும்ப காரகன், புத்திர அஷ்டமாதிபதி என்பதோடு அவர் குடும்ப பாவத்திற்கு விரையத்தில்  லக்ன விரையாதிபதி சந்திரன் மற்றும் சுக, பாக்யாதிபதி செவ்வாயுடன் இணைந்து நிற்கிறார். ராகு-கேதுவின் அச்சுக்கு வெளியே மனைவியை குறிக்கும் சுக்கிரனும் குடும்ப பாவாதிபதி புதனும் நிற்கின்றனர். இந்த அமைப்பு மனைவி குழந்தையை விட்டு பிரிந்து ஜாதகர் வெளிநாடு செல்லும் நிலையை குறிக்கிறது.  எனினும் வெளிநாட்டில் ஒருவர் வாழும் காலத்தை திசா-புக்திகளே முடிவு செய்கின்றன.

ஜாதகர் ராகு திசையில் துவங்கிய தொழில் நஷ்டமடைந்தது. சனி நீசமடைந்து வக்கிரம் பெற்றாலும் அவர் கடனை குறிக்கும் கேது சாரம் பெற்று கேது லக்னாதிபதியுடன் இணைந்து சனிக்கும் கால புருஷனுக்கும் ஆறில் மறைந்து சஷ்டாஷ்டகம் பெற்று லக்னாதிபதியோடு தன ஸ்தானத்தில் அமைந்ததால் தொழிலில் மிக மோசமான இழப்பை சந்தித்தார். (செவ்வாய் & கேது = கடன். சனி = கடனால் ஏற்படும் பாதிப்பு.).

குரு வீட்டில் அஷ்டமத்தில் நின்றாலும் ஐந்தாமிட தொடர்பையும் பெற்ற காரணத்தால் ராகு திசை சந்திர புக்தியில் 11.06.2006 ல் திருமணம் நடந்து அதே சந்திர புக்தியில் 11.03.2008 பெண் குழந்தை பிறந்தது.

ஜாதகர் வங்கிக்கடன் பெற்று நடத்திய தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதனை அடைக்க வழிதெரியாது விழித்தார். ஜாதகர் சிம்ம லக்னம், ராசி என்பதால் ஜாதகரின் முறையீட்டை அரசு ஏற்று வங்கிக்கடனில் பெரும்பகுதியை தள்ளுபடி செய்தது.  மீத தொகையை அடைக்க வழி தெரியாது இரு முறை ஜாதகர் தற்கொலைக்கு முயன்றார். அஷ்டம ராகு ஆயுளையும் உலுக்கினார் என்றே கூற வேண்டும். அதோடு அடைந்த அவமானம் அளவில்லாதது. பொதுவாக நெருப்பு ராசியை லக்னமாக கொண்டவர்கள் கௌரவதிற்காக உயிரை மாய்த்துக்கொள்ளவும் துணிகின்றனர்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்றபடி ஜாதகர் காவிரிக்கரையில் ஜீவசமாதியான மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரை சரணடைந்தார். ஜாதக அமைப்பில் கேது 2 ஆமிடத்தில் இருந்து லக்னத்தை நோக்கி வருவதால் ராகு கொடுத்த தொல்லையை கேதுவின் அம்சமான மகான் குறைத்தார் என்றே சொல்லவேண்டும். பூர்வீக வீடு ஏலத்தில் போவதில் இருந்து தப்பியது.


சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர். (கரூர் அருகில்)

ஜாதகருக்கு அஷ்டமத்தில் நின்ற ராகு திசை முடிந்து அஷ்டமாதிபதியான குருவின் திசை தொடங்கியது. ஓநாயிடமிருந்து மீண்டு புலியிடம் சிக்கிய புள்ளிமானின் கதைதான். குடும்ப காரகன் குடும்பத்திற்கு விரையத்தில் லக்னத்தில் இருப்பதால் குரு குடும்பத்திலிருந்து ஜாதகரை பிரித்தார்.

ஜாதகர் 2008 மத்தியில் கடனை மீட்க பொருளீட்ட வெளிநாடு சென்றார். தற்போது 2018. இடைப்பட்ட 10 வருட காலத்தில் ஜாதகர் 2013 ல் குடும்ப பாவாதி புதனின் புக்தியிலும் களத்திர காரகன் (ஆணுக்கு) சுக்கிரனின் புக்தியில் 2016 லும் இந்தியா வந்தார். புதன் சுக்கிரன் இருவரும் சுக ஸ்தானாதிபதி செவ்வாயின் நட்சத்திரம் சித்திரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.     

மனைவியின் ஜாதகத்தில் கணவனின் கடன் நிலைமை, கணவனுக்கு ஏற்படும் உயிராபத்து, தற்கொலைக்கு முயன்றது, வெளிநாட்டு வேலை ஆகியவை தெளிவாக உள்ளது.

கணவனின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் சுக்கிரன் சுகஸ்தானமான 4 க்கு விரையத்தில் மூன்றில் ஆட்சி பெற்றது. ராகு-கேதுவின் அச்சை விட்டு குடும்ப பாவாதிபதியும் மனைவியான சுக்கிரனும் விலகி இருப்பது ஆகியவை குடும்ப வாழ்வில் இருவருமே பெரிய அளவில் சுகப்பட இயலாது என்பதையே காட்டுகிறது.  இருவரையும் கிரகங்கள் விதி வசத்தால் அல்ல ஜாதக அமைப்பாலேயே இணைத்திருக்கின்றன.

கணவன்-மனைவி இருவருக்குமே இது கடவுள் போட்ட முடிச்சுதான் எனலாம்.

ஓரிரு ஆண்டுகளே இல்லற இன்பத்தை அனுபவித்த தம்பதியரில் இருவரின்  நிலையுமே கொடுமையானதுதான். வெளிநாடு சென்ற கணவன் இரு முறை மட்டுமே இந்தியா வந்து சென்றுள்ளார். தனது மகள் பூபெய்த இருக்கும் நிலையில் அதற்காகவேனும் தனது கணவர் வருவாரா என பொங்கி வரும் உணர்சிகளை கட்டுப்படுத்த இயலாத நிலையில் ஜாதகி என்னிடம் ஜாதக ஆலோட்சனை கேட்டு வந்தார்.

நல்ல குடும்பத்தில் பிறந்ததால் வழி தவறவும் மனமின்றி தன் உணர்வுகளோடு ஒரு கொடிய போராட்டம் நடத்திக்கொண்டு, 

வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே ஒரு குடும்பம் அமைத்துக்கொண்டான் இனி வர மாட்டான் எனக்கூறி தனக்கு வலை வீசும் ஆண்களிடமிருந்து தன்னையும் தனது மகளையும் காத்துக்கொண்டு,

கணவர் அனுப்பும் பணத்தை கடனுக்கு கட்டிவிட்டு தான் எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு,

வாழ வேண்டிய வயதில் இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியாத சோகத்தை கண்களில் தாங்கிக்கொண்டு,

அசோகவனத்து வைதேகி ராமன் தன்னை வந்து மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருந்ததைப் போல,

இங்கேயும் 

ஒரு

வைதேகி காத்திருக்கிறாள். 


விரைவில் மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501

Sunday, 20 August 2017

பெண்

இன்றைய காலத்தில் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றால் அதற்கு ஆச்சார்ய கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். 

இதில் குரு தன, குடும்ப காரகன் என்றால் அதை வளமையாக அனுபவிக்க சுக்கிரனே காரணமாகிரார். குரு வலுவாக இல்லாதிருந்து சுக்கிரன் வலுவாக அமைந்துவிட்டால் கூட அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.  பெண்கள் மகிழ்வாக இருக்கும் குடும்பத்தில் மகாலகஷ்மி வாசம் செய்கிறாள். பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வம்சத்தில் அதற்கு காரணமானவர்களை சுக்கிரன் தண்டிக்கிறார். இதை ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை கண்டு அறியலாம்.



“எங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லையோ
எங்கே பெண்மைக்கு மதிப்பில்லையோ
எங்கே பெண்கள் வஞ்சிக்கப்படுகிரார்களோ
அது மக்கள் வாழத்தகுதியற்ற பூமியாகும்”

என நமது நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன.

பெண் மனித வாழ்வின் இன்றியமையாத சக்தி.

சக்தி இல்லையேல் சிவமில்லை.

பெண் இல்லாத வாழ்க்கை பட்டுப்போன மரத்திற்குச்சமம்.

இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தற்கொலை செய்துகொல்பவர்களை தினசரிகளில் படிக்க முடிகிறது.

இது போன்ற நிலைக்கு 80 களில் துவங்கி 90களில் புற்றீசல்களாக உருவெடுத்த பாலினத்தை அறியும் மையங்களும் தவறான மருதுவர்களுமே காரணம். அதை நாடிச்சென்று தங்கள் பெண் செல்வங்களை அழித்தவர்களின் சந்ததியினரே இன்று பெரும்பாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

பெண்களை துன்புறுத்தினால் அல்லது அழித்தால் அவர்களது சந்ததியினருக்கு பெண் வகையில் குடும்ப சந்தோஷங்களோ பெண் வாரிசுகளோ இல்லாததை அல்லது மிகத்தாமதமாக அமைவதை காண முடிகிறது. ஒருவர் பெண்களுக்கு இழைக்கும் தீங்குகள் அவரை மட்டுமின்றி அவரது வம்சத்தையும் கடுமையாகவே பாதிக்கின்றன.

பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளை சேறும் என்பது மிகச்சரியான அனுபவ மொழியாகும்.

ஒருவர் அவருக்கு கேடு செய்யும் செயல்களை செய்யக்கூடாது என்பதுடன் அவரது சந்ததியினருக்கு செல்வங்களை சேர்த்து வைக்காமல் விட்டாலும் பரவாயில்லை. அவரது சந்ததியினருக்கு பாவங்களை தேடிவைதுவிட்டு செல்லக்கூடாது.

இது வெறும் பயமுறுத்தல் அல்ல.

பெண்களுக்கு பாதகம் செய்தவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். அவர்களது ஜாதகங்களை பெற்று ஆய்வு செய்து பாருங்கள். சுக்கிரன் எப்படி அமைத்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். நான் சொல்வதன் உண்மை உரைக்கும்.

பெண்களை வஞ்சிக்க துணை நின்றவர்கள், மருத்துவர்கள் அதை சார்ந்தவர்கள், கற்புடைய மங்கையரைப்பற்றி பழி சொன்னவர்கள் போன்றவர்களையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.

இது போன்ற செயல்களை செய்தவரின் சந்ததியினர் இராமேஸ்வரத்தில் மூன்றுமுறை தில ஹோமம் செய்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

வீட்டுப்பெண்களை கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அம்மன் கோவிலில் அக்கினிச்சட்டி எடுப்பதில் அணுவளவும் பயனில்லை என்பதை உணருங்கள்.


முக்கியமாக தொடர்புடையவர்களை மட்டுமின்றி அவர்களின் சந்ததியினரையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.  


மேற்கண்ட பெண்மணியின் ஜாதகத்தில் குரு உச்சமாகி வக்கிரமான நிலையில் இருக்கிறார். ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமானால் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும். இவ்விதிப்படி குடும்ப பாவமான 2 க்கு விரயத்தில் அமைந்த குரு திசையில் ராகு புக்தியில் ஜாதகி கணவரை இழந்தார். ராகு கணவரை குறிக்கும் 7 ஆமிடத்திற்கு சுகஸ்தானம் 1௦ உடனும், 7 ஆமிடத்திற்கு பாதக ஸ்தானமான 5 உடனும் தொடர்புகொண்டுள்ளது. (7 ஆமிடம் சர ராசியாகியதால் 7 க்கு 11 ஆன விருச்சிகம் பாதக ஸ்தானம் ஆகும்).   

கணவரை இழந்தபின் மருமகளை மாமனாரே அடைய எண்ணினார். இதற்கு தந்தை மற்றும் மாமனாரை குறிக்கும் சூரியன் காம களத்திர ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்ததே காரணமாகும். ஜாதகி கணவர் குடும்பத்தை விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார்.

சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகமாகி அது தொடர்புகள் ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்து லக்னத்தை பார்த்ததால் ஜாதகிக்கு அரசுப்பணியையும் முன்னமே கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற குரு ஐந்தாமிடத்தை பார்த்ததாலும் ஐந்தாமதிபதி செவ்வாய் 5 க்கு விரயத்தில் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டதாலும் கணவர் வகை தொடர்புகளின் இந்த செயல் இவர்களது வம்சத்தை பாதித்தது.

எப்படி எனில்.
ஜாதகியின் மகன் வேற்று ஜாதியில் மணமுடித்து தனது குல மரபுகளை விட்டு விலகிவிட்டார். எனினும் ஜீவன ரீதியாக கடினமான சூழ்நிலையிலேயே உள்ளார். ஜாதகியின் மகள் வேற்று குலத்தை சார்ந்தவரை காதலித்து மணமுடிக்க தயாராக உள்ளார்.

ஜாதகத்தில் 5, 9 மற்றும் அதன் பாவாதிபதிகளும் குருவும் கெட்டுவிட்டால் ஒருவர் தனது குலத்தை விட்டு விலகுகிறார் அல்லது தனது குல மரபுகளுக்கு மாறாக நடக்கிறார்.

கீழே வருவது ஒரு ஆணின் ஜாதகம் 


கன்னி லக்னத்திற்கு 7 ல் விரயாதிபதியும் தந்தையை குறிக்கும் கிரகமும் ஆன சூரியன் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து 6 ஆமதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். தனம் மற்றும் தந்தையை குறிக்கும் 2 , ஒன்பதாம் பாவாதிபதியான சுக்கிரன் விரயாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியுடன் இணைந்து குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். அஷ்டமாதிபதியான செவ்வாய் தனது கடும் பகைவனும் 5, 6 ஆம் பாவாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார்.

இவர்கள் நின்ற நட்சத்திராதிபதிகளும் பாவாதிபதிக்களுமான குருவும் சனியும் வக்கிரமாகி தங்களது இயல்பை இழந்த நிலையில் மேற்கண்ட மூவரையும் பார்வை செய்கின்றனர்.

ஜீவன காரகன் சனியும் தன காரகன் குருவும் வக்கிரகமாகி தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் நிற்பதும் லக்னாதிபதி புதன் ஆறாமதிபதி சனியுடன் பரிவர்த்தனை ஆகி 6 ல் நின்றதும் ஜீவனம் மற்றும் ஆரோக்ய ரீதியாக கடும் போராட்டங்களை ஜாதகருக்கு தந்துகொண்டிருக்கிறது.

ஜாதகரின் இந்த நிலைக்கு கீழ்வரும் தந்தையார் வகை கர்மங்களே காரணமாகும்.

ஜாதகரின் தந்தையார் அபலைப்பெண் ஒருவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கற்பவதியாக்கி கைவிட்டார். பிறந்த குழந்தை தமதில்லை என்று வாதிட்டார். நீதிமன்றத்தில் மரபுக்கூறு சோதனையில் குழந்தைக்கு தந்தை அவரே என்று நிரூபணமாகி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. 

ஜாதகரின் தாயார் ஒரு மாதம் ஜீவனாம்சம் பெற்ற பிறகு அவரது தந்தை ஜாதகியை வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். இப்போது மகன் விரும்பினாலும் தாயாரை தொடர்புகொள்ள இயலாத நிலை. ஜாதகர் ஜீவனம் ஆரோக்கிய வகை போராட்டங்களால் மனம் நொந்த நிலையில்   மூன்று முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். 

தந்தையின் செயல்களுக்கு தமையனே இப்படி அனுபவிக்கிறார் என்றால் ஜாதகரின் தந்தையின் நிலை என்னவாகி இருக்கும்.

இவற்றிற்கு காரணமான ஜாதகரின் தந்தையையார் அவரது ஒழுக்கக்கேடான வாழ்வினால்  எய்ட்ஸ் வியாதியில் நிராதரவான நிலையில் இறந்து போனார்.

பெண்மைக்கு தீங்கு விளைவித்தால் அது காரணமானவர்களை மட்டுமல்ல அவரது வம்சத்தையே கடுமையாக பாதிக்கிறது.

பெண் பாவம் பொல்லாதது என்பது அறிவுரை மட்டுமல்ல அது அனுபவமொழி.

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன், அன்பன்,

பழனியப்பன்,
கைப்பேசி எண்: 7871244501