Sunday 1 February 2015

உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும்

சுற்றுலாத்துறை:

ஜோதிட நுணுக்கங்கள் வலைப்பூ கடந்த ஜனவரி 23 முதல் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துககொள்கிறேன்.  பணிச்சுமை காரணமாக அடிக்கடி எழுத இயலாவிட்டாலும் உபயோகமாக மற்றும் ஆய்வுப்பூர்வமான பதிவுகள் தொடர்ந்து வரும் என்பதை உறுதியளிக்கிறேன். ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கான பதிவு இது. புரியாதவர்கள் அடிப்படையைப் புரிந்துகொண்டு தொடரவும்.

பாவச் சக்கரத்தைப் பற்றி எழுதிய போதே வர்க்கச் சக்கரங்களைப்பற்றி எழுதுமாறு பல்வேறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கிரகங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் எப்படி செயல்படும் என்பதை அளவிடவே வர்க்கச் சக்கரங்கள். இவற்றில் 16 வகை  சக்கரங்கள் முதன்மையானவை. இவற்றை சோடசாம்சம் என்பர். ஒரு குறிப்பிட்ட சக்கரத்திலிருந்து அது தொடர்புடைய  விஷயத்தை மட்டுமே ஆராயவேண்டும் என இச்சக்கரங்களின் பயன்பாட்டை வரையறுத்த மகரிஷி பராசரர் தனது பராசர ஹோராவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமணம் தொடர்புடையவற்றிற்காக மட்டும் ஆராய வேண்டிய நவாம்சத்தை கிரக வலுவை மதிப்பிட இன்று ஜோதிடர்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். (பயன்பாட்டிலும் இது சரியாகவே வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.)

பத்தாமிடாதிபதியின் வலுவை அளவிட நவாம்சச் சக்கரத்தோடு தசாம்சச் சக்கரத்தையும் கவனிக்கவேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் மகிழ்ச்சியையும் ஜாதகரது கர்மாவையும் குறிப்பிடும்.

தசாம்சச் சக்கரத்தின் விசேஷங்கள்.

1.தசாம்ச சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாவது பாவமும் அதன் கேந்திரங்களான 6, 9, 12 ஆம் பாவங்களும் முக்கியமானவை. இதன் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10 ஆமதிபதிகளும் மிகுந்த நன்மையைச் செய்யும்.

2.தசாம்சக் கட்டத்தில் 10 ஆமிடத்தில் அமையும் கிரகங்கள் அவை சுபக்கிரகங்களானாலும் பாவக் கிரகங்களானாலும் நன்மையையே செய்யும்.

3. கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் சுகஸ்தானமான  நான்காமிடம் தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமதத்தையும் உருவாக்குவதாகும். காரணம் நான்காமிடம் சுகத்தைக் குறிப்பது 10 ஆமிடம் செயலைக் குறிப்பது. ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்பாடு பாதிக்கப்படும் என்பது இதன் அடிப்படையாகும். தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமையும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.


16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களில் எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை காண்போம்.

1.ராசி                 -    மெய், நிறம், தோற்றம்
2.ஹோரா             -    செல்வநிலை
3.திரேக்காணம்        -    சகோதரன், சகோதரி
4.சப்தாம்சம்           -    குழந்தைகள்
5.நவாம்சம்           -     கணவன் அல்லது மனைவி
6.தசாம்சம்            -    தொழில்
7.துவாதசாம்சம்       -    பெற்றோர்
8.திரிம்சாம்சம்         -    விதி
9.சோடசாம்சம்        -    வாகனம்
10.சஷ்டியாம்சம்       -    பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
11.சதுர்த்தாசம்         -    அதிஷ்டம்
12.விம்சாம்சம்         -    கடவுள் நம்பிக்கை, குலதெய்வம், பக்தி
13.சதுர்விம்சாம்சம்     -    கல்வி
14.பம்சாம்சம்          -    உடல் வலிமை
15.சுவேதாம்சம்        -    சுகம்
16.அக்ஷவேதாம்சம்    -    குணம்


நான்காமிடம் ஒருவரின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. 12 ஆமிடம் அயனம் எனப்படும் நகர்தலைக் குறிப்பிடும். மேற்கண்ட ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் 12 ஆமிடாதிபதி செவ்வாய் வாகன காரகன் சுக்கிரனோடு சேர்ந்து நான்காமிடத்தில் சிம்மத்தில் உள்ளது. இதனால் ஜாதகர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தொழிலை செய்ய இயலாது என்பது இதன் பொருளாகும்.  ஜீவன காரகன் சனி விரைவான செயல்பாட்டைக் குறிக்கும் சர ராசியாதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளார். ஜாதகர் வாகனச் சுற்றுலா தொழிலை மேற்கொண்டுள்ளார்.

இதை தசாம்சச் சக்கரத்தை வைத்து ஆராய்வோம்.

தசாம்சச் சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாமிடத்தில் ஆன்மீகக் கிரகங்களான குருவும் கேதுவும் நன்கு அமைந்துள்ளனர். (ஜாதகர் திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும்  ஆன்மீக சுற்றுலா நிறுவனம் நடத்துகிறார். மேலும் குரு ராசி, நவாம்சம் & தசாம்சத்திலும் வர்கோத்தமத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. மூன்றாமதிபதி செவ்வாய் ஆட்சியில் உள்ளது சிறப்பு.  6 ஆமதிபதி சனி பகவான்  6 க்கு 12 ல் அமர்ந்தாலும் ஆட்சியில் உள்ளார். 2 மற்றும் 9 ஆமதிபதியும் வாகனம், சுற்றுலா இவற்றிற்கு காரகனுமான சுக்கிரன் பணவரவைக் குறிக்கும் இரண்டாவது பாவமான துலாத்தில் ஆட்சியில் உள்ளது இந்த வகையில் வருமானம் வரவேண்டும் என்பதை உறுதி செய்கிறது. துலாராசியும் ஒரு சர ராசி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 12 ஆமதிபதியும் விரையாபதியுமான சூரியன் 3 ஆவது பாவத்திற்கு கேந்திராதிபதியாவதால் நன்மையைச் செய்யவேண்டும் ஆனால் தசாம்சத்தில் 4 ஆவது பாவத்தில் அமையும் பாவக்கிரகம் தீமையைச் செய்ய வேண்டும் என்பதால் சூரியன் தீமையையும் கலந்தே செய்யவேண்டியவராகிறார். 

ராசிச்சக்கரத்தின்  3 ஆம் பாவாதிபதி சந்திரன் தசாம்சத்தில் 8ல் மறைந்தாலும் சுக்கிரனின் பார்வை பெறுவது சிறப்பு அத்துடன் சந்திரனுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதியும் 10 ஆமதியுமான புதன் அமைந்தது ஜாதகரின் தொழில் ரீதியிலான முயற்சி, விருப்பம் மற்றும் கர்மாவையும் தெளிவாக விளக்குகிறது.

வர்க்கச் சக்கரங்களைப் போடவும் ஆராயவும் மிகுந்த நேரம் பிடிக்கும் என்பதாலும் அப்படி கால அவகாசமெடுத்து கணிக்குமளவுக்கு ஜோதிடனுக்கு தட்சிணை தரப்படுவதில்லை என்பதாலும் 90 சதவீத ஜோதிடர்கள் ராசி மற்றும் நவாம்சத்தோடு நின்றுவிடுகின்றனர். இன்று ஜாதகங்களைக் கணிக்க கணினிகள் பயன்படுகின்றன என்பதால் ஜோதிடர்கள் இனி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இப்படி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் உண்டு. ராசிக்கட்டதில் ஒரு லக்னம் மாறும் கால இடைவெளி தோராயமாக 2 மணி நேரமாகும். நவாம்ச சக்கரத்தில் 12 நிமிடத்திற்கு ஒருமுறை லக்னம் மாறும். ஆனால் வர்க்கச் சக்கரங்களில் ஓரிரு நிமிடங்களிலேயே லக்னமும் கிரகங்களும் மாறும். எனவே ஜனன நேரம் துல்லியமான ஜாதகங்களுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது பயன் தரும். இதில் ஜனன நேரத்தில் வித்தியாசமிருக்குமென சந்தேகமேற்பட்டால்  அதை சரிசெய்ய (For birth time rectification) தசாம்ச சக்கரத்தை ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எப்படியெனில் ஜாதகர் முப்பது முப்பத்தைந்து வயதில் தொழில் ரீதியாக நிலைத் தன்மை பெற்று இருப்பார். அப்போது அவரது தொழிலுக்கேற்ப தசாம்ச சக்கரம் பொருந்தும் வகையில் ஒருசில நிமிடங்களை முன்னும் பின்னும் சரி செய்து துல்லியமான ஜனன நேரத்தை காண்பது என்பது வழக்கமாகிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன். 

7 comments:

  1. தங்கள் வலைப்பூ மூன்றாம் ஆண்டில் கால் பதித்ததில் மகிழ்ச்சி. தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்

    "செவ்வாய் வாகனகாரகன் சுக்கிரனோடு சேர்ந்து நான்காமிடத்தில் கடகத்தில் உள்ளது" - கடகத்திற்க்கு பதில் சிம்மம் என்று வர வேண்டும் (அல்லது) ராசி கட்டம் மாற்றப்படவேண்டும் என்று நினைக்கிறேன்

    தசாம்சம் மற்றும் நவாம்சத்தை பற்றிய சில அடிப்படை கேள்விகள். இரண்டு கேள்விகளுமே ஜோதிடத்தை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகள்

    (1) தசாம்சத்தை, நவாம்சம் போல் நட்சத்திர பாதங்களின் மூலம் பிரிக்க வழி உள்ளதா

    (2) நவாம்சத்தில் சிலர் உச்சம் நீச்சம் உள்ளது என்றும் சிலர் இல்லை என்றும் சொல்கிறார்கள். உதாரணமாக நான் சூரிய பகவானை எடுத்து கொள்கிறேன்

    சூரியன் மேஷ ராசியில் இருக்கும் போது உச்சம் அல்லது உச்ச பாதையில் இருப்பார் என்பது என் புரிதல் அதாவது அஸ்வினி, பரணி (4-பாதங்கள்) மற்றும் கிருத்திகை (பாதம் 1). ராசி கட்டத்தை பொருத்தவரை சூரியன் மற்ற ராசிகளை சுற்றி மேஷத்தில் நுழையும் பொது உச்சம் பெறுகிறார் என்பது புரிகறது

    நவாம்சத்தில் மேஷ ராசியில் கேது, குரு மற்றும் சந்திரன் ஆகிய நட்சத்திரங்களின் 1-ஆம் பாதங்கள் இடம் பெறுகின்றன. ஆனால் நவாம்சம் நட்சத்திர பாதங்கள் வைத்து போடப்படுவதால் சூரியன் உச்சம் என்று எப்படி சொல்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

    அஸ்வினி (பாதம் 1 தவிர) அதாவது மகம், மூலம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சட்திரங்களில் சூரியன் சஞ்சரிக்கும் பொது அதை உச்சம் என்று எப்படி சொல்கிறார்கள். மேற்கூறிய நட்சத்திர பாதங்கள் நவாம்சத்தில் மேஷ ராசியில் வருகிறது என்ற காரணத்திற்காகவே உச்சம் என்று சொல்கிறார்களா (அல்லது) வேறு காரணங்கள் இருக்கிறதா?

    விளக்கினால் நன்றாக இருக்கும்

    நன்றி
    சதீஷ்

    ReplyDelete
    Replies
    1. அன்புமிக்க வாசகரே செவ்வாயும் சந்திரனும் சிம்மத்தில் உள்ளது என்பதே சரி. தவறு சரி செய்யப்பட்டுவிட்டது. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இப்போது உங்களது கேள்விக்கான பதில். நவாம்சம் என்பது ராசிக்கட்டத்தின் ஒவ்வொரு பாவத்தையும் ஒன்பது கூறுகளாக்கி போடுவது. அதுபோல தசாம்சம் ராசிக்கட்டத்தின் ஒவ்வொரு பாவத்தையும் பத்து கூறுகளாக்கிக் காண்பது. இதில் நவாம்சம் திருமணம், மற்றும் கணவன்-மனைவி பற்றிய செய்திகளை ஆரியப் பயன்படுவது மற்றுமின்றி கிரகத்தின் உள்ளார்ந்த வலுவை அளவிடுவது. நவாம்சத்திலும் உச்சம் , நீச்சம், பரிவர்த்தனை ஆகியவை உண்டு. ராசிக்கட்டத்தில் நீசமான ஒரு கிரகம் நவாம்சத்தில் உச்சமாகிவிட்டால் அக்கிரகம் நீச பங்கப்பட்டு நல்ல பலனை வழங்கும் என்பது உண்மை. ராசியில் உச்சமான ஒரு கிரகம் அரச யோகத்தைக்கூடத் தரும் ஆனால் நவாம்சத்தில் அது கெட்டிருந்தால் அந்த அரசன் முழுப் போதையில் இருந்தால் பயனின்றிப் போவது போல நன்மை செய்யாது.

      அன்பன்,
      பளையப்பன்.

      Delete
  2. சொல்ல மறந்து விட்டேன். தசாம்சம் பற்றிய பதிவு அருமை

    ReplyDelete
  3. நவாம்சத்தில் நீச்ச பங்கம் உள்ளதா??

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா...எனக்கு நெல்லை மாவட்டம்..15வயதிலிருந்து எனக்கு நோய்,எதிரி,துரோகம் என வாழ்க்கையின் கொடூரங்களை சந்தித்து வருகிறேன்.

    இப்போது சனிதசை ஆரம்பித்துவிட்டது!! ஜோதிட ரீதியாக ஏதேனும் பரிகாரங்கள் உள்ளதா...நன்றிகள்!!

    ReplyDelete
  5. மிகவும் தெளிவாக உள்ளது.தசாம்ச கட்டத்தில் பத்தாமிடம் காலியாக உள்ளது. அந்த இடத்துக்குரிய புதன், தசாம்ச கட்டத்தில் ஒன்பதில்,( ரிஷபம் ) உச்ச சந்திரனுடன் உள்ளார்.இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் ஐயா!!!

    ReplyDelete
  6. ஜோதிடம் கற்று தருகிறீர்களா?

    ReplyDelete