Showing posts with label மறுதிருமணம். Show all posts
Showing posts with label மறுதிருமணம். Show all posts

Wednesday, 16 September 2020

அகதியின் மகன்

198௦களில் இலங்கையில் உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த சூழலில் போர் முனையில் இருந்து தனது மனைவி குழந்தைகளை வெளி தேசங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு ,இலங்கையில் இருக்கும் தனது சொத்துக்களை இழந்து வெளியேற மனமின்றி,வாழவும் மனமின்றி தவித்தோர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள். போராளிக்குழுக்கள் ஒருபுறம்அரசுப்படை ஒருபுறம் என்று தங்கள் நிம்மதியை இழந்து தவித்தவர்கள் அவர்கள். அதைவிடக்கொடுமை, முறையான ஆவணங்களின்றி அந்நிய தேசங்களில் குடியுரிமை அதிகாரிகளிடம் அகப்பட்டு, தண்டிக்கப்பட்ட சூழலில் தனது குடும்பத்தவர்களின் நிலை என்ன? அவர்கள் வாழ்கிறார்களா? மரணித்துவிட்டார்களா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனரா? என தெரியாது அலைந்த மனிதர்களின் மனோ நிலைதான். சற்று கற்பனை செய்து பாருங்கள். அது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.நாம் இங்கு அலசவிருக்கும் ஜாதகமும் அப்படியான ஒரு மனிதரின் மகனது ஜாதகம்தான்..

இந்த ஜாதகரின் பெயர் கதிர்காமம் என்றும் அவரது தந்தையின் பெயர் மயில்வாகனம் என்றும் கற்பனையான பெயரில் கருதுவோம். மயில்வாகனம் 1983 ல் பிறந்து இரண்டே வயதான தனது மகனையும் தனது இளம் மனைவியையும் அப்படி இத்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் அனுப்பிவிட்டு, இலங்கையில் வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.மயில்வாகனம் தனது மகன் கதிர்காமம் கருவில் இருக்கும்போதே தனது தம்பி வேலாயுதத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தார். இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஒன்று இந்தியாவிற்கு தப்பிச்செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது ராணுவத்துடனோ, போராளிக்குழுக்களுடனோ இணைந்துவிட வேண்டும் என்ற நிலையே அப்போது நீடித்தது.

தனது மகன் குடும்பம் பிரிந்துவிட்டதன் பாதிப்பு மயில்வாகனத்தின் பெற்றோர் வாழ்விலும் எதிரொலித்தது. அது அவர்களது வாழ்வையும் புரட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும். பேரன் கதிர்காமம் பிறந்த 5 வருடம் சென்ற பிறகு மயில்வாகனத்தின் பெற்றோர் இருவரும் தங்களது குடும்ப வாழ்வை முறித்துக்கொண்டனர்.குடும்பத்தை பிரிந்த மயில்வாகனதிற்கு தற்போது பெற்றோர் வழி ஆதரவோ, சகோதர வழி உதவியோ இன்றி தனித்து விடப்பட்டார். சகோதரன், தாய், தந்தை, குடும்பத்தை இழந்த நிலை, போர்ச்சூழல் ஆகியவை தனி ஒருவனின் வாழ்வை தவிடுபொடியாக்கிவிட்டன. அன்றைய சூழலில் பல்வேறு தேசங்களுக்கு உயிர்பிழைக்க தங்களது குடும்பங்களை அனுப்பிவிட்டு இலங்கையில் அப்படி நடைப்பிணங்களாக வாழ்ந்த மயில்வாகனங்கள் ஆயிரமாயிரம். உரிய ஆவணங்களோ அனுமதியோ இன்றி இந்தியா வந்து, தன் மொழி பேசிய மக்களாலேயே ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் .9௦களின் மத்தியில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்தமைக்காக மயில்வாகனத்தின் மனைவியும் மகனும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்படிசொந்த தேசத்தில் வாழ முடியாமல் உறவுகளை உதறிவிட்டு வெளியேறி அந்நிய தேசத்தில் அகதிகளாக, குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக பார்க்கப்படும் மனிதர்களுக்கும் ஒரு ஜாதக  அமைப்பிருக்க வேண்டுமல்லவா, அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே நீங்கள் காண்பது மயில்வாகனத்தின் மகன் கதிர்காமத்தின் ஜாதகம்.


இரண்டாம்பாவம் சொந்த பூமியில், சொந்த ஊரில்ஒருவர் வாழும் நிலையையும், நான்காவது பாவம் சொந்த பந்தங்களோடு குறிப்பாக தந்தை வழி ரத்த உறவுகளோடு அதாவது பங்காளிகளுடன் உள்ள உறவுப்பினைப்பையும் குறிப்பிடும். லக்னம் ஒருவரின் தனித்தன்மையையும், ஐந்தாவது பாவம் அவரது பூர்வீகத்தின் தன்மையையும், 9 ஆவது பாவம் அவரது முன்னோர்களின் செயல்பாட்டையும், சனியின் நிலை ஒருவரது முன்னோர்களின் ஒழுக்கத்தையும் குறிப்பிடும்.. இந்த ஜாதகத்தில் 2 ஆமிடத்தோடு 5 &8 ஆமதிபதி குரு தொடர்பாகி, அங்கு6& 7 ஆமதிபதி சனியோடு 2 ஆமதிபதி புதன் பரிவர்தனையாகியுள்ளது. 5&8 ஆமதிபதி தொடர்பாகும் இந்தப்பரிவர்தனையால் ஜாதகர் பூர்வீகத்தை, சொந்த பூமியைவிட்டு வெளியேறுவார். ஏனெனில் 9 என்பது முன்னோர் வாழ்ந்த பூமி, குரு 8 ஆமிடாதிபதி ஆகையால் பூர்வீகத்தை விட்டு வெளியேறுதலை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. குரு, சனி,ஆகியவை வக்கிரமாகியுள்ளதும் 4 & 9 பாபங்களுக்குரிய செவ்வாய் அஸ்தங்கமாகியுள்ளதும் ஜாதகரது முன்னோர்கள் அடைந்த பாதிப்பை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஜாதகத்தில் 12 ஆமதிபதி சந்திரன் 8ல் சனியின் உத்திரட்டாதி-2 ல் நின்று 2 ஆமிடத்தில் தனது நட்சத்திரம் ஹஸ்தம்-2 ல் அமைந்த சனியோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இந்த இரு பரிவர்த்தனைகளும் ஜாதகரது தந்தைவழி முன்னோர்கள் அடைந்த பாதிப்புகளால் ஜாதகர் தனது தாயகத்தைவிட்டு வெளியேறுவதை தெளிவாக எடுத்துரைக்கிறது. லக்னாதிபதி சூரியன், சனி வீட்டில் நின்று லக்னத்தை பார்ப்பதால் இந்த ஜாதகரின் வாழ்வு சிறப்படைகிறது.. எனினும் சனியின் வீட்டில் அஸ்தங்க செவ்வாயோடும் சுக்கிரனோடும் சூரியன் நிற்பது, ஜாதகருக்கு அதீத கோபத்தையும், பொறுமையின்மையையும், நேர்மையாளனாக, பிடிவாதமுள்ளவனாக, குறைகளை சகித்துக்கொள்ள இயலாதவராக ஒரு மனோநிலையை உருவாக்கும். ஜாதகரின் இந்த குணம் பணியிடத்தில் சிறப்பைத்தந்தாலும், 7 ஆமிடம் இப்படி அதீத உஷ்ணமடைவதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.

தாயை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி, தந்தையை குறிக்கும்9  ஆம் பாவாதிபதி இருவரும் செவ்வாய் ஒருவரே ஆகி அஸ்தங்கமாகியுள்ளது. சனி திசை சுக்கிர புக்தியில் பிறந்த ஜாதகர், அதே சுக்கிர புக்தியில் இலங்கையை விட்டு கள்ளத்தோணி மூலம் தந்தையை பிரிந்து தாயோடு இந்தியா வருகிறார். திசா நாதன் சனி,8 ஆமிட சந்திரனோடு சாரப்பரிவர்தனை பெற்றதும்,புக்தி நாதன் சுக்கிரன் 12 ஆமிட ராகுவின் சதயம்-3 ல் நின்றதும் இதற்கு காரணமாகும். 12 ஆமிடம் வெளிநாட்டில் குடியேறுவதை குறிக்கும். சுக்கிரன் சட்டவிரோத குடியேற்றதிற்குரிய ராகு சாரம் பெற்று 12ல் நின்றதால் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறினர்.ராஜீவ்காந்தி மரணதிற்குப்பிறகு இந்திய அரசு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கிறது. 6 ஆமிடத்தில் நிற்கும் புதனின் திசையில் தண்டனை, அவமானங்களை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரன் சாரம் பெற்ற கேது புக்தியில் 1996-97 ல் ஜாதகரும் தாயும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிற்பாடு விடுதலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2௦௦1ல், 18 வருடங்களுக்குப்பிறகு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வந்து இணைகிறார் மயில்வாகனம்

இப்போது துவதசாம்சத்திற்கு வருவோம்.துவாதசாம்ச சக்கரம் பெற்றோர் நிலையை ஆராய உதவுவதாகும். லக்னத்திற்கு 12 ல் சூரியன் மறைந்து, லக்னத்திற்கு 7 ல் சூரியனுக்கு 8 சந்திரன் நிற்கிறது. சூரிய சந்திரர்கள் 6 – 8 ஆக அமைந்ததிதிலிருந்து பெற்றோர் இருவரும் ஒருங்கிணைந்து வாழும் சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்பதை இது குறிக்கிறது. லக்னத்திற்கு 6, 11 ஆமதிபதி சுக்கிரன் 9 ஆமிடத்தில்தனது புக்தியில் தந்தையைகுடும்பத்தைவிட்டு விலக்குகிறார். இதனால் 6–8 ஆக அமைந்த பெற்றோர் பிரிகின்றனர். அப்போது திசா நாதன் சனி, புக்தி நாதன் சுக்கிரன் இருவருமே சூரியனுக்கு எதிரிகளாவர். ஆனால் 2௦௦1 ல் சூழல் மாறுகிறது. புதன் சனி, சுக்கிரனுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் நண்பனாவார். புதன் லக்னத்தில் அமைந்து 7 ஆமிடத்தில் தன் வீட்டில் அமைந்த சந்திரனை பார்க்கிறார். இதனால் 2௦௦1 ல் புதன் திசையில், சந்திர புக்தியில் பெற்றோர் ஒன்று சேர்கின்றனர்.

 

தந்தை குடும்பத்துடன் இணைந்த பிறகு ஜாதகருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஜாதகர் கணினிக்கல்வியில் முதுநிலை பட்டம் பெற்று தேர்வாகிறார். 2004ல் ஜாதகரின் வாழ்வில் ஒரு பொற்காலம். புதன் திசை ராகு புக்தி அப்போது நடப்பு. ராகு ஜல ராசியில் நின்றாலும் அவர் ஜீவன காரகன் சனியின் சாரம் பூசத்தில் நிற்கிறார். ராகு சூதாட்டம், லாட்டரி, பிரம்மாண்டமான கனவு போல நம்ப முடியாத சம்பவங்களுக்கும் காரக கிரகம் ஆகிறார். அமெரிக்கா எப்போதுமே படித்த, தகுதி வாய்ந்த, திறன்மிகு உழைப்பாளிகளை கடந்த காலங்களில் இருகரங்கள் கொண்டு வரவேற்றிருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் வந்து பணிபுரிய விரும்பும் படித்த, தகுதி வாய்ந்த நபர்களுக்காக நடத்தப்படும் லாட்டரியில் பரிசு பெற்று அமெரிக்காவில் நுழையும்போதே பரிசின் மூலம் பச்சைப்பட்டயம் ( Green card) பெற்று அமெரிக்கா சென்று பணிபுரிகிறார்.

2006ல் இந்தியாவில் புதன் திசையில் குரு புக்தியில் கதிர்காமம் பெற்றோர்களுக்காக ஒரு வீடு வாங்கித்தருகிறார். புதன்4 ஆம் பாவதிபதி செவ்வாயின் சாரம் பெற்று (அவிட்டம்-2)  புக்தி நாதன் குருவின் சாரத்தில் (பூரட்டாதி-3 ல்) செவ்வாய் அமைந்ததால் அது சாத்தியமாயிற்று. ஜாதகருக்கு  பரிவர்த்தனைக்கு உள்ளான புதனின் திசையில் 2 ஆமிடத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் 20௦9ல் திருமணம் நடந்தது .ஒரு ஆண்டிற்குப்பிறகு களத்திர பாவமான 7 க்கு விரையத்தில் 6 ஆமிடத்தில் நிற்கும் வழக்கு பிரிவினை காரகன் கேதுவின் திசை துவங்கியதும் ஜாதகருக்கு வழக்கும் வந்தது, திருமண வாழ்வும் முடிவிற்கு வந்தது. எனினும் மணமுறிவு என்பதை 6 ஆமிடம் குறிப்பிட்டாலும் 8 ஆமிடமே சட்டப்படியான முறையான பிரிவினையை குறிப்பிடும் என்பதால் 4 வருட வழக்குக்குப்பிறகு 2௦15 ல் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் சாரம் (ஹஸ்தம்-2) பெற்ற 8 ஆமதிபதி குருவின் புக்தியின் சந்திரனின் அந்தரத்தில் வழக்கு முடிவுற்று சட்டப்படி விவாகரத்து பெற்றனர். (கேது – வழக்கு, சட்டப்பதியான பிரிவினை) அதே ஆண்டின் பிற்பகுதியில் கேது திசையில்,2 ஆமிடத்தில் ,2 ஆமிடத்ததிபதி புதனோடு பரிவர்த்தனையாகி நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. இங்கு திசாநாதன் கேது (திருவோணம்-2)  மற்றும் சனி (ஹஸ்தம்-2)  ஆகியோர் 8 ஆமிட சந்திரனோடு நட்சத்திர அடிப்படையில் தொடர்புகொண்டதால் ஜாதகருக்கு மணமுறிவு ஏற்பட்டு பிறகு மறுதிருமணம் நடக்கவேண்டும் என்பது கர்மவினை என்று தெளிவாகிறது.

இதனிடையே ஜாதகருக்கு 2017 மற்றும்2019ல்ராசிக்கு 5 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற சுக்கிர திசையில் சுய புக்தியில் ஜாதகருக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். செவ்வாய் அஸ்தங்கமானது ஜாதகருக்கு உறவுகள், பங்காளிகள் வகையில் நன்மையில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் ஜாதகரின் தந்தை தனது சகோதரனை விட்டு விலகினார். உறவுகள் விலகினர், பங்காளிகள் விலகினர். செவ்வாய் அஸ்தங்கமானதால்தான் இந்தியாவில் தங்களது வீட்டில் குடியேரியவர்களிடம்கூட முறையான வாடகை வசூல் செய்ய ஜாதகரால் இயலவில்லை. பெற்றோரை ஜாதகர் தனது முதல் திருமணம் விவாகரத்தான பிறகு அமெரிக்கா அழைத்து வந்தார். எனினும் வீடு மற்றும் சொத்துகள்  வகை பிரச்சனைகளை சரிசெய்ய தந்தை தனது மனைவியை ஜாதகரிடமே விட்டுவிட்டு இந்தியா வந்து தங்கினார். நீண்டதொரு போராட்டதிற்குப்பிறகு 2020 ல் தற்போது சுக்கிர திசையில்  சுய புக்தியில் செவ்வாய் சாரம் பெற்ற புதன் அந்தரத்தில் வீட்டை விற்றனர் எனினும் சிறிது மீத தொகை வரவேண்டியுள்ளது. இங்கே அஸ்தங்க செவ்வாயின் பாதகம் அதீதம் என்பது தெளிவாகிறது.

சூரியன் பாரம்பரியத்தைகுறிக்கும் காரக கிரகம் என்பது தெரியும். ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது ஒரு தலைமுறை தோஷம் என்பது சூரியனின் நிலைகொண்டு அறியலாம். சூரியன்7 ஆமிடத்தில் செவ்வாயோடு இணைந்து நின்றதால் தற்போது ஜாதகர் தனது இரண்டாவது மனைவியோடுகூட இனிமையான இல்லறம் நடத்த இயலவில்லை. ஜாதகரால் மட்டுமல்ல ஜாதகரின் தந்தை,பாட்டன் ஆகியோரின் குடும்ப வாழ்வும் பாதித்துள்ளது. தற்போதும் ஜாதகரின் தந்தை இந்த கொரானா காலத்தில் அமெரிக்கா செல்ல வழியின்றி இந்தியாவில்தான் இருக்கிறார். இத்தகைய கடுமையான தோஷங்களை முறையான வழிகளில் குறைத்துக்கொள்ள ஜோதிடம் நமக்கு வழிகாட்டுகிறது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி:8300124501 

Thursday, 21 May 2020

8 ஆமிட ரகசியங்கள்

ஜாதகத்தில் லக்ன பாவத்தின் ஆயுளை தீர்மானிப்பது எட்டாவது பாவம்தான். ஒரு பாவத்திற்கு அதன் எட்டாவது பாவம் சிறப்பாக இருந்தால்தான் அந்த பாவத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இதை கிரகம் நின்ற இடத்திற்கு எட்டாம் பாவத்தை அளவிட்டும்  கிரகத்தின் பலம், பலனத்தை அறியலாம். எட்டாவது பாவம் பல்வேறு ரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது. எட்டாவது பாவம் பொதுவாக நல்ல பலனை தர வாய்ப்பே இல்லை எனலாம். காரணம் எட்டாவது பாவத்தின் சக்தி ஜாதகரின் உயிரை தாங்கிப்பிடிக்க மட்டுமே செலவிடப்பட வேண்டும். எட்டாவது பாவம் ஒரு மனிதன் பிறரிடம் வெளிப்படுத்தக்கூடாத ரகசியங்களை குறிக்கும். அவை ஆயுள், அவமானங்கள், தண்டனைகள், உடலுறவு, மணமுறிவு, மறைப்பொருள், ஆன்மிகம், புதையல், பங்கு வணிகம், திடீர் பொருளாதாரங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை அடுத்தவரிடம்  வெளிப்படுத்தினால் ஜாதகர் தனது வாழ்வில் வீழ்ச்சியை சந்திப்பார் என்பது நமது தர்ம சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகம். ஆன்மிகம் என்பது மறைந்திருக்கும் இறை சக்தியை உணர்வதுதான். அதனால்தான் ஞான காரகன் கேது கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் உச்சமடைகிறார். மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமடைந்துள்ளார். ராசியதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் ராசிக்கு எட்டில் சிம்ம ராகுவிடம் தஞ்சமடைந்துள்ளார். லக்னத்தில் எட்டாமதிபதி புதன் அமர்ந்துள்ளார். இவை யாவும் மறைப்பொருளான பரம்பொருளை நாடும் நோக்கில் ஜாதகரின் கர்மா இயங்கும் என்பதை குறிப்பிடுகின்றன. சந்திரனை நோக்கி வரும் கேதுவும் இதை உறுதி செய்கிறது. லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்துள்ளதாலும் ராசியதிபதி சனி சூரியனின் வீட்டில் மோட்சகாரகன் ராகுவுடன் இணைந்துள்ளதாலும் ஜாதகர் சிவாச்சாரியராக (சிவன் கோவிலில் பூஜை செய்பவர்) உள்ளார். கால புருஷனுக்கு போக ஸ்தானாதிபதி (3 ஆமதிபதி) புதன் லக்னத்தில் அமர்ந்ததால் உடல் ரீதியான போகத்தை ஜாதகர் விரும்புகிறார். புதன் எட்டாமதிபதியாகி எட்டாமிடம் உடலுறவையும் மறைபொருளையும் ஒருங்கே குறிப்பதால் இவ்விரண்டையும் ஜாதகரின் மனம் நாடுகிறது. புதனுடன் இணைந்துள்ள 12 ஆமதிபதி சுக்கிரன் படுக்கை சுகத்தோடு மோட்ச நிலைக்கும் அதிபதியாகிறார். புதன் சுக்கிரன் இணைவது மதன கோபால யோகம் என்று சொல்லப்படும் சூழலில் ஜாதகருக்கு சிற்றின்ப ஆசையும் ஆன்மீகமும் ஒருங்கே எழுகிறது. ஆனால் இங்கு இருவரும் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகிவிட்டதால் லக்னாதிபதியை மீறி புதனும் சுக்கிரனும் எதுவும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையை வழங்கவேண்டிய குரு 2 க்கு 8 ல் உச்ச வக்கிரமடைந்து குடும்ப வாழ்வை தர இயலாத சூழலில் அமைந்துவிட்டார். 1978 ல் பிறந்த ஜாதகரின் திருமண முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ரிஷப லக்ன ஆணின் ஜாதகத்தில் தற்போது அஷ்டமாதிபதியான குருவின் திசை நடக்கிறது. குரு லக்னத்திற்கு 8, 11 க்கு உரியவராகி லக்னத்திற்கு 2 ல் நிற்கிறது. 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனம். இவர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். பங்கு வணிகம் நேரடி வருமானமல்ல. பாரம்பரிய தொழில் அல்ல. வணிக சந்தையில் மறைந்திருக்கும் தனத்தை தேடி முதலீடு செய்து பொருளீட்டுவதுதான். எனவேதான் லக்னத்திற்கு 8 ம் பாவம் பங்கு வணிகத்திற்கு உரிய பாவமாக பார்க்கப்படுகிறது. லக்னதிபதி சுக்கிரனும் பங்கு வணிகத்திற்கு உரிய கிரகங்களில் ஒன்றாகி அது பங்கு வணிகத்திற்கு மற்றொரு காரக கிரகமான புதனின் வீட்டில் தன ஸ்தானத்தில் நிற்பதால் ஜாதகர் பங்கு வணிகத்தில் பொருளீட்டுகிறார். இங்கு சுக்கிரனும் குருவும் இணைந்து ஜாதகருக்கு தனம் வரும் வழியை நிர்ணயம் செய்கின்றன.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி லக்னத்திற்கு 7 ல் திக்பலம் பெற்று நிற்கிறார். எனவே ஜாதகரை சனி எப்படியும் காப்பாற்றுவார் எனலாம். சனி ஆயுள் மற்றும் ஜீவன காரகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுள் என்பது சனியோடு 8 ஆமிடத்தையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகருக்கு லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின்  திசை கடந்த பதினேழரை வருடங்களாக நடக்கிறது. 8 ஆமிடம் என்பது ஆயுளோடு ஒரு ஜாதகர் படும் அவமானங்களையும் குறிப்பிடும். ராகு சனியை நோக்கி நகர்ந்து வருகிறது. சனி வக்கிரமில்லாத நேர்கதியில் உள்ளது. இதனால் ஜாதகரின் ஜீவனம் ராகுவால் பாதிக்கப்படும். ராகுவின் காரக தொழிலை செய்தால் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் எனலாம். ராகு சூரியனின் உத்திரம்-4 சாரம் வாங்கியுள்ளார். சூரியன் ரிஷபத்தில் நின்று ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தை பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு கெளரவதிற்கு உரிய சூரியனின் சாரம் வாங்கியுள்ளத்தால் இவர் வேலை செய்யுமிடங்களில் கௌரவம் பார்த்து வேலையோடு ஒன்ற இயலாமல் சண்டையிட்டு வந்துவிடுகிறார். சுய தொழிலை குறிக்கும் 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய், வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளதால் சுயதொழிலிலும் சோபிக்க இயலாமல் போராடுகிறார். இதனால் ஜாதகர் பெருத்த அவமானங்களை சந்திக்கிறார். வேலை மற்றும் சுய சம்பாத்தியம் எதற்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுகிறார். அவமானங்களை எதிர்கொள்ள இயலாமல் திசா நாதன் ராகு 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் மதுப்பழக்கதிற்கும் அடிமையாகிவிட்டார். இங்கே ஆயுள்காரகன் சனி திக்பலம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் ஆயுள் ரீதியாக ஜாதகரை காப்பாற்றுகிறார். எனவே ராகு ஜாதகருக்கு ஆயுள் கண்டத்தை தர இயலவில்லை. இதனால் திசா நாதன் ராகு 8 ஆமிடம் குறிப்பிடும் அவமானங்களை தருகிறார். குரு திசை துவங்கியதும் ஜாதகர் தெளிவான வாழ்க்கைப்பாதைக்கு மாறி தனது அவமானங்களிளிருந்து விடுபடுவார் எனலாம்.

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
  
இந்த ஜாதகமும் முந்தைய ஜாதகத்திற்கு ஒப்பானதுதான். ஜாதகருக்கு நடந்தது சனி திசை. கும்ப லக்னாதிபதி சனி வக்கிர நிலை பெற்று லக்னத்திற்கு 11 லிருந்து திசை நடத்துகிறார். சனியும் 5 ஆமிட செவ்வாயும் நேர்பார்வை பார்த்துக்கொள்கின்றனர். சனி-செவ்வாய் தொடர்புகொள்பவர்கள் தங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் விபத்து, மணமுறிவு, கண்டம் போன்ற கடுமையான பாதிப்புகளை அடைகிறார்கள். லாபஸ்தான திசா நாதன் சனி தனது பகை கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சை வாங்கி 1௦ ஆவது பார்வையாக லக்னத்திற்கு 8 ஆவது பாவத்தை பார்க்கிறது. சாதாரணமாகவே சனியின் பார்வைக்கு கடுமை அதிகம் என்பது அனைவரும் அறிந்த நிலையில் செவ்வாயின் பார்வை பெற்ற சனிக்கு கடுமை மிக அதிகமாகும். சனி பார்க்கும் இடங்களுக்கு தனது பாதிப்பை தராமல் இருக்க மாட்டார். இந்நிலையில் சனியின் பார்வையை வாங்கும் செவ்வாயின் 4 ஆவது பார்வையும் 8 மிடத்தின் மீது விழுகிறது. ஜாதகர் தனது சனி திசையில்  ராகு புக்தியில் கொடுமையானதொரு வாகன விபத்தில் சிக்கி நீண்டதொடு மரணப்போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைத்தார். 8 ஆமிட ராகு வேகத்திற்கு உரிய சந்திரனோடும் ஆவேசத்திற்குரிய செவ்வாயோடும் கடுமைக்குரிய சனியோடும் தொடர்புகொண்ட நிலையில் புக்தியை நடத்துகிறது. சனி தான் பார்க்கும் இடத்திற்கு தனது சக்தியை தனது திசா புக்தியில் செலவிட்டே ஆக வேண்டும். இதனால் சனியால் விபத்தை தடுக்க இயலவில்லை. சனி லக்னத்தை 3 ஆம் பார்வை பார்த்ததால் கண்டத்தை கொடுத்து மரணத்தை தவிர்த்தாரா என்றால் அது குறைவே. ஏனெனில் சனி வக்கிரமாகி பின்னோக்கி வருகிறது. இதனால் சனியின் 3 ஆமிட பார்வை லக்னத்தை விட்டு விலகுகிறது. எனவே சனியால் ஜாதகரை காப்பாற்ற இயலாது. இங்கு ஜாதகரை காப்பாற்றியது சனி சாரம் அனுஷம்-1 பெற்ற விருட்சிக குருதான். குருவும் வக்கிரமாகி 9 ஆமிடத்தை நோக்கி போகிறார். இதனால் குருவின் அறை பங்கு பார்வை துலாத்திலிருந்து லக்னத்திற்கு கிடைக்கிறது. இதனால் ஆயுளை எடுக்க ஆயுள்காரகன் சனியின் சாரம் பெற்ற குருவின் அனுமதியும் திசா புக்தி நாதர்களுக்கு தேவை. குரு ஆயுளை எடுக்க அனுமதிக்கவில்லை.  இங்கு குரு ஜாதகரின் உயிரை காப்பாற்றினார் என்றால் அது மிகையல்ல. இங்கு குருவின் அமைப்பால் திசா புக்தி நாதர்கள் ஜாதகருக்கு 8 மிடம் குறிப்பிடும் கண்டத்தை மட்டுமே வழங்க முடிந்தது.

ஐந்தாவது ஆணின் ஜாதகம் கீழே.
.
விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். பொதுவாக ஒரு மறைவு ஸ்தான பரிவர்த்தனைகள் சிறப்பல்ல. ஏனெனில் பரிவர்த்தனைகளே பாதிப்பை ஒரு வகையில் வழங்கிவிட்டுத்தான் பலனளிக்கும் என்ற நிலையில் மறைவு ஸ்தானங்களுடனான பரிவர்த்தனை ஒரு பாதிப்பையும் இழப்பையும் வழங்காமல் பலனளிக்க வாய்ப்பே இல்லை. எப்போது அவை இரண்டும் ஏற்படும் என்றால் தொடர்புடைய திசா புக்திகளில்தான் ஏற்படும். 8 ஆமதிபதி புதன் புத்திகாரகனாகும். புதன் லக்னத்திற்கு திக்பலத்தை வழங்கும் 1௦ ஆமதிபதி சூரியனோடு இணைந்து லக்னத்தில் நிற்பது சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இவ்விரு கிரகங்களும் லக்னம், நான்கு மற்றும் 8 ஆகிய இடங்களில் இணைவதுதான் சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்தனையாவதால் ஜாதகருக்கு  பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். ஜாதகர் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இது நுட்ப அறிவால் ஏற்பட்டது. ஜாதகருக்கு 8 ஆமிடதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் சில வருட போராட்டமான வாழ்க்கைத்துனையுடனான மண வாழ்க்கை முறிவுக்கு வந்தது.

போராட்டமான மண வாழ்க்கைக்கு காரணம் சுக்கிரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் ஏற்பட்டது. இதனால் மனைவியின் குணம் ராகுவால் பாதிக்கப்படும். குடும்ப பிரிவினைக்கு அடித்தளமிட்டது கடந்து போன சந்திர திசையாகும். சந்திரன் விருட்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி குடும்ப பாவத்தில் வந்து அமர்ந்து திசை நடத்திய சூழலில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி அது முற்றிய நிலைக்கு தள்ளிவிட்டுத்தான் தனது திசையை முடித்திருக்கிறார். இந்நிலையில் மணமுறிவை குறிப்பிடும் 8 ஆம் பாவதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் மண வாழ்வு முறிவு பெற்றது. பரிவர்த்தனைச் செவ்வாய் குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் பரிவர்த்தனையாகி அமர்ந்ததும் லக்னம் வலுவடைகிறது. அதனால் லக்ன பாவ செவ்வாய் திசை துவங்கியதும் 2 ஆமிடம் வீழ்ச்சியடைகிறது. இங்கு பிரிவினையை லக்ன பாவம் மற்றும் 8 ஆம் பாவம் ஆகிய இரண்டுமே குறிப்பிடும் என்பது கவனிக்கத்தக்கது. அதே சமயம் இப்படி லக்னத்தில் பரிவர்த்தனையால் வந்து அமரும் செவ்வாய் தனது பார்வைகளால் சுகஸ்தானமான 4 ஐயும் களத்திர பாவமான 7 ஐயும் 8 ஆம் பாவத்தையும் பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு மறுதிருமணமும் அமைந்தது.  

மீண்டும் உங்களை மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501   

Tuesday, 29 October 2019

குமரன் சந்தித்த குருப்பெயர்ச்சிகள்.


இன்று வாக்கியப் பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி நடந்து முடிந்துவிட்டது. கிரகப்பெயர்ச்சிகளில் சந்திரன் விரைவாகச் சுழலும் கிரகம் என்பதால் அதன் தாக்கம் உடனுக்குடன் மாறிவிடும். மாதக்கிரகங்கள் தரும் பலன்களும் ஒரு மாதத்தில் மாறிவிடும். ஆனால் வருடக்கிரகங்கள் என்று சொல்லப்படும் குரு, சனியும், ராகு-கேதுக்களும் வருடம் முழுமைக்கும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நம்மை இருக்க வைக்கும். வருடக்கிரகங்களில் ராகு-கேதுக்கள் தாங்கள் நின்ற பாவாதிபதிகளை சார்ந்துதான் செயல்படும் என்றாலும் அவற்றிற்கும் தனிப்பலன்கள் உண்டு. இதர அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தி வைக்கும் வல்லமை பெற்றவை நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள்.  குருவும் சனியும்தான் மனித வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வேலையை செய்பவை. இதில் சனி தாட்சன்யமின்றி சில சூழ்நிலைகளுக்கு மனிதர்களை இட்டுச்செல்வார். சனி அளவு கடுமை காட்டாமல் அதே சமயம் ஒரு மனிதன் அடைய வேண்டிய இலக்கை நோக்கி குரு செலுத்துவார் எனலாம்.


வருட கிரகப்பெயர்ச்சிகள் நடக்கவிருக்கும் சில நாட்களுக்கு முன்பே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஊன்றிக்கவனித்தால் நம் வாழ்க்கையில் வருட கிரகங்கள் ஏப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நன்கு அறியலாம்.   எனினும் அனைத்து கிரக பெயர்ச்சிகள் ஏற்படுத்தும் மாற்றங்களும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்குத்தக்கபடி அவரவர் திசா-புக்திகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதே உண்மை. அதனால்தான் கிரகப்பெயர்ச்சிகளின் பலன்கள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகின்றன.

கீழே நான் அறிந்த அன்பர் குமரனின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னாதிபதி செவ்வாய் களத்திர ஸ்தானமான 7ல் நின்று லக்னத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகம் வலுவடைகிறது. லக்னாதிபதி செவ்வாய் தனது பகை கிரகமான வித்யாகாரகன் புதனுடன் இணைந்து தொடர்பு ஸ்தானத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் ஒரு ஆசிரியராக உருவெடுத்தார்.

காதல் காரகனான புதன் 7 ல் நிற்கிறார். 7 ஆமதிபதி சுக்கிரன் 7 க்கு பாதகமான காதலைக் குறிக்கும் 5 ஆமிடத்தில் வர்கோத்தமம் பெற்று நிற்கிறார். 5 ஆமதிபதி சூரியன் 6ல் லக்ன சத்ரு புதனின் வீட்டில் புதன் மற்றும் லக்னாதிபதிக்கு விரையத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் காதல் வயப்பட்டார். மகர ராசி சந்தியில் நின்று நீச குருவோடு இணைவு பெற்ற பாதகாதிபதி சனி 12, 4, 7 ஆமிடங்களை பார்க்கிறார். பாதகாதி சனி தொடர்பு பெரும் குரு, பாதகாதிபதி சனிக்கு கட்டுப்பட்டவர் ஆகிறார். இதனால் சனி-குரு இணைவு ஆசிரியராக ஜாதகர் உருவெடுத்து பொருளாதார சிறப்புகளை கொடுத்தாலும் திசா நாதனான 10 ஆமிட குரு குடும்ப வகையில் பாதகத்தையும் தயங்காமல் செய்வார் எனலாம். இதில் சனி செவ்வாய் இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்கின்றன என்பதும் சனி வர்கோத்தமம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த அமைப்புகள் காதலுக்கு சாதகமானது அல்ல. காதல் ஆசையைத்தூண்டும் கேது லாபத்தில் நின்றாலும் பாதகத்தில் நிற்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. காதலுக்கு உதவும் 5 க்கு லாப பாவமான 3ல் மாந்தியுடன் சேர்க்கை பெற்று கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் நிற்கிறார். குருவோடு இணைந்த சனி ராசிக்கு இரண்டாமிடத்தை பார்க்கிறார். சனியோடு இணைந்த குரு லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்க்கிறார். திருமணதிற்கு முன் ஜாதகர் காதலால் பெருத்த அவமானத்தை சந்திக்க இருப்பதையும் அது மரணத்திற்கு சமமானதாக இருக்கும் என்பதையும் மாந்தியோடு இணைவு பெற்று புதனின் வீட்டில் நிற்கும் சந்திரன் உணர்த்துகிறது.

காதலால் ஜாதகர் அவமானப்பட்ட காலத்தில் (1989) குரு மிதுனத்திலும் கேது சிம்மத்திலும் ராகு கும்பத்திலும் அமைந்திருந்தனர். அப்போது குரு திசை கேது புக்தி நடந்தது.

காதலால் அவமானப்பட்ட பிறகு 1990 ல் குரு ஜாதகருக்கு நன்மையை செய்யும் நிலைக்கு கோட்சார ரீதியாக கடகத்தில் வந்து உச்சமடைகிறார். கடகத்தில் உச்சமான குரு ஜனன காலத்தில் மகரத்தில் அமைந்த நீச குருவையும் சனியையும் தனது உச்ச பார்வையால் பார்த்து சமாதானமடைய செய்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனன காலத்தில் கும்பத்தில் பாதகத்தில் அமைந்த கேதுவோடு கோட்சாரத்தில் கடகத்தில் கூடி சர்ப்ப கிரகங்களையும் சமாதானப்படுத்துகிறார். பாதகாதிபதி சனியும் கோட்சாரத்தில் உச்சமான குருவின் வீட்டில் தனுசுவில் நிற்கிறார். இதனால் குருவின் கட்டளைகளை சனி ஏற்றுக்கொள்ளும் மன  நிலையில் இருப்பார் எனலாம். குரு திசையில் 7 ஆமதிபதி சுக்கிரனின் புக்தி நடந்த  இக்காலகட்டத்தில்  ஜாதகருக்கு திருமணம் நடந்தது.

தற்போது 1992. கோட்சார குரு 7ஆமிடமான துலாத்திற்கு   பாதகமான சிம்மத்திற்கு வருகிறது. அங்கு ஜனன சுக்கிரன் ஏற்கனவே ராகுவோடு இணைந்து பாதிக்கப்பட்டிருக்கிறார். கோட்சார குரு ஜனனத்தில் தன நின்ற பாவத்திற்கு அஷ்டமத்தில் வந்த நிலையில் கோட்சார சனி ஜனன சனி-குருவோடு மகரத்தில் சேர்க்கிறது. கோட்சார கேது ஜனன சந்திரன் மேல் மிதுனத்திலும் ராகு தனுசுவிலும் அமைகிறது. நடப்பது குரு திசையில்  லக்னத்திற்கு 6ல் நிற்கும் சூரிய புக்தி. ஜாதகரின் முதல் திருமணம் முறிவுற்றது. 

ஜாதகர் தற்போது 1998ல் வந்து நிற்கிறார். ஜாதகரை பாடாய் படுத்திய குரு திசை முடிவுக்கு வந்துவிட்டது. 1, 6, 10 திசா-புக்திகள் பொதுவாக பிரிவினையை சொல்லும் என்றாலும் குரு பாதகாதிபதி சனியோடு 10 ல் சேர்ந்ததால் சனியின் குணங்கள் அனைத்தும் குருவுக்கு இருக்கும். அதனால் வாழ்க்கை குருவின் அனைத்து காரகத்துவ ரீதியாகவும் பாழ்பட்டது எனலாம். தற்போது சனி திசை என்பதால் குருவோடு சேர்க்கை பெற்ற சனிக்கு குருவின் அணைந்து தன்மைகளும் இருக்கும். தற்போது சனி திசை துவக்கம்.  சனி 12, 4, 7 ஆம் பாவங்களை குருவோடு இணைந்த நிலையில் ஜனனத்தில் பார்க்கிறார். கோட்சார சனி மேஷத்தில் நிற்கிறார். ராகு கேதுக்கள் ஜனனத்தில் நின்ற அதே சிம்மம் கும்பத்தில் நிற்கின்றன. கோட்சார குருவும் ராசிக்கு 9ல் நின்று ராசியையும் களத்திர ஸ்தானமான துலாமையும் பார்ப்பதோடு கும்பத்தில் கேதுவோடு கூடி  சிம்ம ராகுவை பார்த்து சர்பங்களை சாந்தி செய்கிறார். இதனால் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஜாதகருக்கு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு இக்காலத்தில் இரண்டாவது திருமணம் நடந்தது. 

ஜாதகருக்கு 2 ஆவது திருமணமான சில மாதங்கள் கழிந்த நிலையில் கோட்சார குரு தற்போது மீனத்திற்கு பெயர்ச்சியாகி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று 6 ஆமிட ஜனன சூரியனை பார்வை செய்கிறது. ஜீவன காரகன் சனி,  வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நிற்கும் சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் மகரத்தில் நின்று திசை நடத்துகிறது. இந்தக்காலத்தில் ஜாதகருக்கு நல்லதொரு பள்ளியில்  அரசு பணிக்கு இணையான கௌரவமான சம்பாத்தியத்தில் வேலை கிடைத்தது.

தற்போது 1999 இறுதி மாதம். கோட்சார குரு மேஷத்திற்கு வந்து நீச சனியோது இணைகிறது. கோட்சார ராகு சிம்மத்தை விட்டு நகர்ந்து கடகத்திலும் கேது மகரத்திலும் நிற்கிறது. கோட்ச்சாரத்தில்  சனியோடு இணைந்த குரு லக்னத்திற்கு 5, 7, 9 ஆமிடன்களை பார்வை செய்கிறது. ஜாதகரின் மனைவிக்கு தற்போது பெண் குழந்தையை அருளினார் குரு.

தற்போதைய காலம் 2007 பிப்ரவரி 26. குரு திசையில் முதல் பகுதியான 9 ஆவது ஆதிபத்தியம் முடிந்து 2 வது ஆதிபதியமான 12 ஆமிட விரைய ஆதிபத்தியம் நடக்கிறது. குரு ராசிக்கு 6 லும் லக்னத்திற்கு  8 லுமான விருட்சிகத்தில் கோட்சாரத்தில் வந்து அமைந்துள்ளார். கோட்சார குருவின் பார்வை ராசி மற்றும் லக்னத்திற்கு இல்லை. பாதகாதிபதி சனி கோட்சார குருவின் 9 ஆவது பார்வையை வாங்கினாலும் கோட்சார குருவிற்கு கோட்சார சனி பாதகத்தில்தான் அமைந்துள்ளது. எனவே குருவின் கட்டளையை ஏற்றுக்கொள்ள சனிக்கு மனமில்லை. கோட்சார சனி லக்னத்திற்கு 4ல்  தனது பகை வீட்டில் லக்னத்திற்கு 6 ஆமதிபதி புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கோட்சார கேது சிம்மத்திலும் கோட்சார ராகு கும்பத்திலும் நிற்கிறது. வாகனங்களை குறிக்கும் செவ்வாய் கோட்சாரத்தில் மகரத்தில் உச்சம் பெற்று ஜனனத்தில் லக்னத்திற்கு 6 நின்ற சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் நிற்கிறது. மற்றொரு வாகன கிரகம் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று பாதகாதிபதி சனியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறது. கோட்சார சந்திரனும் கோட்சார மாந்தியும் ஜனன காலத்தில் நின்ற அதே மிதுன ராசியில் நிற்கின்றன. நடப்பது சனி திசையில் ஜனனத்தில் ராகுவோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட சுக்கிரனின் புக்தி. கோட்சார சந்திரன் நிற்பது ராகுவின் திருவாதிரை நட்சத்திரம். இந்த நாளில் ஜாதகர் வாகன விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். வலது காலில் ஏற்பட்ட எழும்பு முறிவுக்காக  ஜாதகருக்கு இரும்புத் தகடு பொருத்தப்பட்டது.

தற்போது 2016 நவம்பர் மாதம் 29 ம் நாள். குருவின் தன்மையை பெற்ற சனியின் திசையில் சனியின் தன்மையை பெற்ற குருவின் புக்தி. குரு பாதகத்தை செய்வார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கோட்சார குரு லக்னத்திற்கு 6 ல் மறைந்துள்ளது. கோட்சார சனி லக்னத்திற்கு 8 ல் பகை வீட்டில் விருட்சிகத்தில் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன காலத்தில் நின்ற அதே இடத்தில் நிற்கின்றன. கோட்சார குரு ஜனனத்தில் 3 ல் நின்ற சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் கோட்சார சனி 6 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் நிற்கின்றன. இதனால் விபரீதமாக ஒரு விழைவு நடக்கும் என்பது உறுதியாகிறது. ஜாதகருக்கு அன்றைய நாளில் நடந்த வாகன விபத்தில் இடது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் இரும்புத் தகடு பொருத்தப்பட்டது.

தற்போது இன்று 29.10.2019ல் ஜாதகர் லக்னத்திற்கு 6 ஆமதிபதி புதனின் திசையில் ஜனன காலத்தில் பாதகத்தில் நிற்கும் கேதுவின் புக்தியில் உள்ளார். கோட்சாரத்தில் சனியும் கேதுவும் இணைவு பெற்றுள்ளார்கள். புதன் வேலையை குறிக்கும் 6 ஆமதிபதி. கேது தடையை குறிக்கும் கிரகம். சனி ஜீவனத்தை குறிக்கும் கிரகம். தற்போது ராசிக்கு 7 லும் லக்னத்திற்கு 9 லிலும் குரு வந்து அமர்ந்துள்ளார். ஜாதகர் தற்போது பணி ஓய்வு பெறவுள்ளார். தந்தையார் காலத்தில் விட்டுப்போன தனது குல தெய்வ வழிபாடுகளை முறைப்படுத்தி ஜாதகர் செய்து வருகிறார். தனது மகளின் வாழ்வை நல்ல முறையில் அமைத்துத்தர வேண்டிய நிலையில் புதிய ஒரு சூழலில் ஒரு எளிய பணியை ஜாதகர் நாடுகிறார்.

கோட்சார கிரகப்பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நமக்கு வழங்கிவிட முடியாது. கோட்சார கிரகங்கள் வழங்கும் பலன்களும் திசா-புக்திகளின் அனுமதியின் பேரிலேயே நடக்கும். கோட்சார கிரகங்கள் தோஷம் தரக்கூடிய இடங்களில் அமைந்தாலும் திசா-புக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் பெரிய சிரமங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு உதாரணமாக ஏழரை சனியில் உயர்வு பெரும் எண்ணற்றவர்களின் ஜாதகங்களை என்னால் கூற முடியும்.

வருட கிரகங்களின் பெயர்ச்சிகளை குறிப்பாக குருப்பெயர்ச்சியை நாம் கொண்டாடுவோம். அதைவிட முக்கியமாக நேரிய வழியில் வாழ்ந்திடுவோம். நேரிய வழியில் செல்வோருக்கு கிரகப் பெயர்ச்சிகள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளும் பக்குவமிருக்கும். சாதகமான காலம் வரும் வரை சாந்தமான வாழ்வு வாழ்வோருக்கு நிச்சயம் நல்ல பலன்கள் உரிய காலத்தில் கிடைக்கும்.

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501


Sunday, 12 May 2019

மணமுறிவும் மறு திருமணமும்.


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது உணர்ந்து சொல்லிய வார்த்தைகள். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையில் மனிதன் இயற்கையை விட்டு வேகமாக விலகிச் சென்று  கொண்டிருக்கிறான். அதனால் இன்றைய மனிதனிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகிய மனித தன்மைகளும் விலகிச் சென்றுகொண்டிருக்கின்றன. இதன் விளைவே அதிரிகரித்து வரும் மண முறிவுகள். 



அமெரிக்க பூர்வ பழங்குடிகளான செவ்விந்திய தலைவரிடம்  குடியேரிகளான வெள்ளையர்கள் அவர்களது நிலப்பரப்பை தங்களுக்கு அளித்துவிடும்படி கேட்டு ஒரு ஒப்பந்தம் போட்டனர்.. அப்போது அந்த செவ்விந்திய தலைவர் குறிப்பிட்ட வாசகங்கள் இன்றும் அமெரிக்காவில் பிரபலமான வாசகங்கள்.

“இயற்கையோடு இணைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். வேட்டையாடுவதில் மட்டுமல்ல சமுதாய, குடும்ப அமைவிலும் ஒரு ஒழுங்கமைவை நாங்கள் கடைபிடிக்கிறோம். நீங்கள் பொருளாதார வளத்திற்காக காடுகளை (இயற்கையை) அழித்தால் மிருகங்கள் அழிந்துவிடும். நீங்கள் மிருகங்களாக மாறிவிடுவீர்கள்” என்பது போன்ற ஒரு நீண்ட கருத்தை பதிவு செய்திருந்தது நினைவு வருகிறது.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


ரிஷப லக்ன ஜாதகத்தில் செவ்வாய் - சனி இரண்டும்  1 – 7 தொடர்பிலிருந்து சம சப்தமமாக பார்த்துக்கொள்கின்றன. சனி வக்கிரமானதால் இது கணவரின் விட்டுக்கொடுத்துச் செல்லும் குணத்தை பாதிக்கும். கிரகம் வக்ரமானால் திக் பலம் வலுவிழந்துவிடும். கணவர் தனது சில கருத்துக்களில் ஒரு முடிவோடுதான் செயல்படுவார் என்பதை இது குறிக்கிறது. பாக்யாதிபதி சனி பாக்ய ஸ்தானத்திற்கு பாதகத்தில் அமர்ந்து, பாக்ய ஸ்தானத்தில் நீச நிலையில் சந்திரனோடு இணைந்து அமர்ந்த குருவை வக்கிர சனி மூன்றாம் பார்வை பார்க்கிறது. புத்திரமே ஒரு பாக்கியம்தான் என்பதன் அடிப்படையில் ஒன்பதாமிடம் பெண்களுக்கு பிரதானமான புத்திர ஸ்தானமாகிறது. புத்திர தோஷம் கொண்ட இந்த ஜாதகத்தில் புத்திர பேறுக்காக மருத்துவ ஆலோசனை பெற கணவர் வர மறுத்ததால் விவாகரத்து கேட்டது இந்தப் பெண்.  


கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



தனுசு லக்னத்தவர்க்கு பாதகாதியாக 7 & 10 க்குரிய புதன் வரும் என்பதால் இவர்கள் புதனின் பாதகத்தை களத்திரம் அல்லது தொழில் வகையில் அனுபவிக்கின்றனர். பொதுவாக களத்திர ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானாதிபதியான 6 ஆமதிபதியுடன் 7 ஆமதிபதி ஒன்று சேர்வது களத்திரத்திற்கு  பாதிப்பை தரும். இதில் 6 ஆமதிபதி  களத்திர காரகன் என்பது இன்னும் பாதிப்பே. முக்கியமாக களத்திர காரகனுடனும் (சுக்கிரன்), களத்திர ஸ்தானாதிபதியுடனும் (7 ஆமதிபதி) பிரிவினையை குறிக்கும் சர்ப்ப கிரகங்கள் இணைந்து நின்றால் அந்த ஜாதகர் குடும்ப பிரிவினையை தொடர்புடைய கிரகங்களின் திசா புக்தி வரும்போது நிச்சயம் எதிர்கொள்வார் எனலாம். சர்ப்ப கிரகங்களில் கேது கிரிஸ்தவத்தையும், ராகு இஸ்லாமியத்தையும் குறிக்கும். கணவன் மனைவி இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். இந்த ஜாதகர் திருமணம் முடிந்து 13 நாளில் மனைவியை உதறினார். காரணம் இந்து மதத்தை சேர்ந்த மனைவி கிறிஸ்தவ கடவுளை வழிபடுவது தெரியவர கணவர் விலகிவிட்டார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


மேஷ லக்ன ஜாதகத்தில் பாதகாதிபதியும் ராசியாதிபதியுமான சனி பிரிவினையை குறிக்கும் ஆறாமிடத்தில் வர்கோத்தம வலுவுடன் நிற்கிறது. பாவத்தில் விரையாதிபதி குருவுடன் சேர்ந்து உச்ச கதியில் 7 ல் நின்றதால் 34 வயது நெருங்கிய நிலையில்தான் ஜாதகருக்கு திருமணமானது. பாதகாதிபதியுடன் சேந்து மற்றொரு பகைவன் வீட்டில்  சனியுடன் கிரக யுத்தத்தில் தோல்வியுற்று நவாம்சத்தில் நீசம்  பெற்றும் பல்வேறு வகையில் பலவீனமடைந்த லக்னாதிபதியும் யோகியுமான செவ்வாயால் ஜாதகரின் திருமண வாழ்வை தாங்கிப்பிடிக்க இயலவில்லை. ஏழில் நின்ற குரு திசை சுய  புக்தியில் ஜாதகருக்கு திருமணமாகி எட்டாவது நாளில் மனைவி ஜாதகரை பிரிந்து சென்றுவிட்டார்.   

சந்நியாச யோகம்கொண்ட இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயைவிட ராசியாதிபதி சனிக்கே அதிக வலுவுள்ளது. ஜாதகருக்கு ராசி சுக ஸ்தானாதிபதி செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தி துவங்கியதும் ஜாதகருக்கு மறு திருமணம் நடந்தது. குரு தொடர்புகொண்ட சனி,  புத்திரத்தையும்  தனது புக்தியிலேயே கொடுத்தது. 4 ஆம் பாவம் மறு திருமணத்தை குறிக்கும்.

கீழே மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


துலாம் லக்னம், கடக ராசி. சந்திரன் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. 17 வயது முதல் ராகு திசை. பாதகத்தில் சுக ஸ்தானாதிபதி சனியோடு நின்று ராகு திசை நடத்துகிறது. ராகுவோடு சேர்ந்த சனி 2 , 7 ஆம் பாவாதிபதி செவ்வாயோடு பரஸ்பர பார்வைகளை பரிமாரிக்கொள்கிறது. இத்தகைய ஜாதக அமைப்பு மணமுறிவுற்ற அல்லது குறையுடைய கணவரை தேர்ந்தெடுத்திருந்தால் திருமண வாழ்வை பாதிக்காது. இல்லையேல் நிச்சயம் மண முறிவைத்தரும். ஜாதகிக்கு சுக்கிரன் சாரம் பெற்ற ராகு திருமணம் செய்வித்து மணமுறிவையும் கொடுத்தது. அடுத்துவந்த குரு,  பாக்ய - படுக்கை ஸ்தானாதிபதி (9 - 12 ஆமதிபதி) புதன் சாரம் பெற்றதால் 2 ஆவது திருமணம் செய்வித்தது.. கிரகங்களில் புதனும்,  பாவங்களில் 4 ம் மறு திருமணத்தை குறிப்பிடுபவை.

திருமணம் தொடர்புடைய பாவங்களும் கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் எப்படி அமைந்துள்ளன. திசா-புக்திகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை அனுமானித்து ஒரு தேர்ந்த ஜோதிடரால் ஒருவரின் திருமண வாழ்வை அதிகம் பாதகம் ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். உதாரணமாக 7 ஆம் பாவமும் களத்திர கிரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிப்பின் தன்மைக்கேற்ற ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது மணவாழ்வை பாதுகாக்கும். ஆனால் இன்றைய மனிதனின் பொருளாதாரமும் மனமும் அதை ஏற்றுக்கொள்ளும்  நிலையில் இல்லை. இன்றைய பெரும்பாலான மண முறிவுக்கு காரணம் இதுவே. இதை ஓரளவு சரி செய்துவிட முடியும். ஏற்றுக்கொள்ளத்தான் மனிதர்கள் இல்லை. 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.   
அதுவரை,

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி & பகிரி (Whatsapp) 08300124501