Showing posts with label பிரசன்னம். Show all posts
Showing posts with label பிரசன்னம். Show all posts

Tuesday, 14 September 2021

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்!

காதல் இன்றைய காலத்தில் நிறைய மாறிவிட்டது. புறா விடு தூதிலிருந்து குருஞ் செய்திகளில் பரிமாறிக்கொள்ளப்படும் காலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக பொருத்தம் பார்க்கத்தான் ஜோதிடரை நாடி வருவர். காதலிப்பவர் தனக்கு தகுந்தவரா? எனக் கேட்டு ஜோதிடரை அணுகுவோரும் உண்டு. சமீபத்தில் காதலை சொல்ல நல்ல நாள் கேட்டு ஒரு அன்பர் வந்தது ஆச்சரியமூட்டும் அனுபவம். வந்தவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்  அவருக்கு ஜாதகத்தை பெற்றோர் எழுதி வைக்கவில்லை. எனவே பிரசன்னம் பார்க்க வேண்டுமென்றார்.


அவரது கேள்வி நான்கு.
 

1..சக ஆசிரியையின் செயல்கள் என்னை கிளர்சியூட்டுகின்றன. அவரது செயல்கள் என்னை வசீகரிப்பதன் அறிகுறியா?

2. அல்லது “நான் தவறாக புரிந்துக்கொண்டுள்ளேனா?”

3. எனது எண்ணம் சரி எனில் அவரிடம் எனது காதலை சொல்ல நாள் குறித்து சொல்லவும்.

4. எனது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் எங்கள் மண வாழ்வு எப்படி இருக்கும்? என்று கேள்விகள் இருந்தன.

ஆசிரியருக்கு தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அடிவாங்காமல் அவமானப்படாமல் தனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலில் ஜோதிட ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.. அவரது பயத்திற்கு காரணம் அவர் விரும்புவதாக சொல்லும் சக ஆசிரியை வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதுதான்.

ஆசிரியருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயம் ஆரூடம் இரண்டும் ஒன்றாக உள்ளது. இது கேள்வியாளர் தனக்காகவே கேள்வியை கேட்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. உதயமும் ஆரூடமும் சிம்மமாகி அங்கு சூரியன் ஆட்சி பெற்றுள்ளது கேள்வியாளர் அரசுத் தொடர்புகொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது. உதயத்தை குரு பார்ப்பதும், உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உச்ச புதன் இருப்பதும் வந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை குறிப்பிடுகிறது. உதயம் கேள்வியாளர் என்றால் 7 ஆமிடம்  இவர் காதலை சொல்லவிருக்கும் ஆசிரியையைக் குறிக்கும். 7 ஆமிடத்தில் குரு இருந்து சூரியன் பார்வை பெறுவது எதிராளியும் ஆசிரியையே என கேள்வியாளர் கூறியது சரியே என்பதை தெரிவிக்கிறது. 

இப்போது இவர் காதலின் நிலை என்ன என்பதை காண்போம். உதயம் இரண்டாமிடத்தில் உள்ள உச்ச புதனையும், நீச சுக்கிரனையும், நோக்கி நகர்கிறது. புதன் காதலின் காரக கிரகம் என்பதோடு, அவர் தகவல் பரிமாற்றம், கடிதம் இவற்றின்  காரக கிரகமும் கூட. மேலும் உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சுக்கிரன் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாவது பாவத்தின் அதிபதியும் கூட. எனவே கேள்வியாளர் காதலை தெரிவிக்க  தயாராக இருக்கும் நிலையை இரண்டாமிட கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதன் காதலியையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். இவை இரண்டும் ஒன்றாய் உதயத்திற்கு இரண்டில் அமைவது, காதலிக்கவுள்ள பெண்ணை மனைவியாக அடையும் கேள்வியாளரது ஆசையை குறிப்பிடுகிறது. காதல் பாவமான உதயத்திற்கு 5 ஆமிடம் தனுசில் ஜாமச் சந்திரன் அமர்ந்து அதன் அதிபதி ஜாம குருவால்  உதயதிற்கு லாபத்தில் மிதுனத்தில் இருந்து பார்ப்பது சிறப்பு என்றாலும் வெளிவட்ட குருவிற்கு உள்வட்ட குருவே ஆதார சக்தி. உள்வட்ட குரு வக்கிரம் பெற்று 7 ல் அமர்ந்து உதயத்தை பார்க்கிறார். உதயத்தில் சூரியனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் காதலை சொல்ல துணிச்சல் ஜாதகருக்கு உண்டென்றாலும் வெளிவட்ட செவ்வாய் நீசம் பெற்று, துணிச்சல் ஸ்தானாதிபதி உள்வட்ட சுக்கிரனும் நீசம் பெற்று அமைந்தது ஆகியவற்றால் கேள்வியாளருக்கு சிறிது பயம் கலந்த ஆர்வம் இருப்பது தெரிகிறது. உச்ச, நீச கிரகங்களே கேள்வியாளரின் சிந்தனையில் மையம்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப களத்திர காரக கிரகங்களான சுக்கிரன், செவ்வாயோடு காதல் காரகன் புதனும் உச்சம் பெற்றது ஜாதகரின் சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது.   

இப்போது இவரது காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பார்ப்போம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் உதயத்திற்கு இரண்டாம் வீட்டில் நீசம் பெறுவது கேள்வியாளர் குறிப்பிடும் பெண்ணுக்கு உள்ள பாதிப்பை கூறும் அல்லது கேள்வியாளரின் எண்ணத்திலேயே உள்ள தகுதிக் குறைவை குறிப்பிடும். இதை தனது மதத்திற்கு மாறுப்பட்ட அளவிலான எண்ணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஜாம சுக்கிரன் உதயத்திற்கு எட்டாமிடமான மீனத்தில் உச்சம் பெற்று மறைவது, எதிராளி ஆசிரியை தற்போது வசதியாக இருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. சுக்கிரனும் புதனும் காதல் பாவமான 5 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளாமல் அவமான பாவமான எட்டாமிடத்தையே தொடர்புகொள்கின்றன.  மேலும் உதயத்திற்கு எட்டாம் அதிபதி 7 ல் இருப்பதால் எதிராளியால் கேள்வியாளருக்கு அவமானம் ஏற்பட இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. 7 ஆமிட குருவே உதயத்திற்கு 11 ல் இருப்பது கேள்வியாளரின் ஆவலை தூண்டுவதோடு முறையற்ற தொடர்பு குறித்த தகவலையும் தெரிவிக்கிறது. எனவே கேள்வியாளர், எதிராளியிடம் தனது காதலை தெரிவித்தால் அவமானப்பட நேரும். சக ஆசிரியையின் நடவடிக்கைகளை கேள்வியாளர் தவறாக புரிந்து கொண்டுள்ளதையே பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. 

காதல் காரகன் புதன் வெளிவட்டத்தில் உதயத்திற்கு பாதக ஸ்தானமாக மேஷத்தில் கவிப்புடன் உள்ளது இதனை உறுதி செய்வதாக உள்ளது. உதயதிற்கு 6 ல் இரு சனியும் உள்ளது, தவறாக எடுக்கப்படும் கேள்வியாளரின் ஒரு முன் முயற்சியால் அவரது வேலையில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஒரே கிரகம் உள்வட்டதிலும் வெளிவட்டதிலும் ஒரே ராசியில் இருப்பது அதன் காரகம் பாதிக்கப்படுவதை குறிக்கும். உதயத்திற்கு விரையத்தில் அமைந்த வெளிவட்ட நீச செவ்வாயை இரு சனியும் பார்க்கிறது. பாதகத்தில் கவிப்பு அமைந்து பாதகாதிபதியான செவ்வாய் உள்வட்டத்தில் உதயத்தில் அமர்ந்து 5, 8 அதிபதியான உள்வட்ட குரு  பாதகாதிபதி செவ்வாயின் அவிட்டத்தில் நின்று உதயத்தை பார்ப்பது ஆகியவை காதலைவிட பாதகமே கேள்வியாளரை தேடி வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. எனவே சக ஆசிரியையின் செயல்களை கேள்வியாளர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். காதல் கடிதம் கொடுத்தால் கேள்வியாளர் அவமானப்பட நேரும் என்பதோடு அவரது பணிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதை  பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனவே காதலை சொல்ல தற்போதைய சூழல் சாதகமில்லை என்று கேள்வியாளருக்கு கூறப்பட்டது. 

இந்த வகை பிரசன்னம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது என்பதோடு இவ்வகை கேள்விகளுக்கு எப்படி விடையளிக்கலாம் என்ற புரிதலையும் கொடுத்தது. இதை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசான்களுக்கு நன்றிகள் கோடி.

 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 4 April 2021

ஜனன ஜாதக திருத்தங்கள்!

 


ஜாதகத்தை ஆய்வு செய்யும் சில ஜோதிடர்கள் ஜாதகப்படியான சில விளக்கங்களை வந்தவரிடம் கேட்டு ஜாதகத்தை உறுதி செய்துகொண்டு பலன் சொல்வதை கவனித்திருக்கலாம். இது பொதுவாக ஜாதகத்தின் உண்மைத்தன்மையை அறிய பயன்படுத்தப்படும் ஒரு யுக்திதான். சில ஜாதகங்கள் உத்தேச ஜாதகங்களாகவும் சில லக்னம் மாறியோ அல்லது சந்தி லக்ன ஜாதகங்களாகவும் அமையும்போது ஜோதிடர்களுக்கு பலன் சொல்வதில் தடுமாற்றங்கள் எழத்தான் செய்கின்றன. அதற்காகவே மேற்கண்டவாறு சில கேள்விகளை ஜோதிடர்கள் கேட்பர். ஜோதிடர்களிடம் அளிக்கபடும் ஜாதகங்களில் ஜாதக கணிதங்களுக்கேற்ப தவறுகளும் இருப்பது உண்டு. அவற்றை எல்லாம் சரிசெய்துதான் ஜோதிடர்கள் பலன் சொல்ல வேண்டியிருக்கும். எனது ஜாதகத்தில் நேரத்தவறு இருக்கலாம் அதை சரி செய்து தர இயலுமா என நேரடியாக கேட்போரும் உண்டு. அப்படியானவர்களிடம் ஜாதக விபரங்களோடு அவர்கள் வாழ்வில் நடந்த திருமணம், வேலை கிடைத்த நாள் போன்ற சில முக்கிய சம்பவங்களின் நாட்களை பெற்றுக்கொண்டு  ஜாதகத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி சில நேர திருத்தங்களை செய்யலாம். இப்பதிவில் இன்று ஜனன நேரத்தை சரி செய்வது பற்றி ஆராயவிருக்கிறோம். ஜனன நேரத்தை திருத்த பல முறைகள் உண்டு என்றாலும் நம்பகமான ஒரு முறை என நான் கருதுவது பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு சரி செய்வதே ஆகும்.

எது சரியான பிறந்த நாள்?

தனது உறவுப்பெண்ணின் ஜாதகத்தை கடந்த வருடம் அளித்திருந்த ஒரு நண்பர் மீண்டும் சில நாட்களுக்கு முன் அதே ஜாதகத்தை முன்னிட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். முன்னதாக அனுப்பியிருந்த பிறந்த நாளானது 23.08.91 என அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிறந்த நாள் 28.03.91 என குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இது போன்ற சூழ்நிலைகள் ஒரு ஜோதிடருக்கு விரக்தியை ஏற்படுத்துபவையாகும். வருடம் ஒன்றுதான் ஆனால் பிறந்த நாள் மற்றும் மாதம் ஆகியவை மாறுபட்டிருந்தன. 23.08 மற்றும் 28.03 என்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும் என கருதி இதில் எது சரியான பிறந்த தேதி என ஆய்வு செய்தேன். எனது “ஜோதிட சாகர” WhatsApp குழுவிலும் இதை ஆய்வுக்கு பதிவிட்டிருந்தேன்.

பெண்ணின் இரு வேறு ஜாதகங்கள்

  

   


பிறந்த நாள் A படி ஜாதகி பிறந்தது சூரியன் சிம்மத்தில் இருக்கும் ஆவணி மாதமாகும். ஜாதகம் B படி ஜாதகி பிறந்தது சூரியன் மீனத்தில் இருக்கும்  பங்குனி மாதமாகும். மூன்றாவதாக மேலே குறிப்பிட்டிருப்பது ஆய்வு நாளின் கோட்சார நிலையாகும். ஆய்வு நாளின் மாதம் சூரியன் மீனத்தில் இருக்கும் பங்குனி மாதமாகும். இது பிறந்த நாள் B உடன் ஒத்துப்போகிறது. இதனால் இரண்டாவதாக அளிக்கப்பட்ட ஜாதகம்-B தான் சரியானதாகும். எனவே ஜாதகியின் பிறந்தநாள் 28.03.1991 தான் என கணித்தோம். பிற்பாடு இதை தொடர்புடைய நபர் உறுதி செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.   

எது சரியான பிறந்த லக்னம்?

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம் கீழே.

இந்த ஜாதகத்தை பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் விபரங்களை குறிப்பிட்டு அனுப்பிய நபர். ஜனன நேரம் உத்தேசமாக இருக்கும் எனவே நேரத்திருத்தம் செய்து ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகம் இது.  லக்னப்புள்ளி மிதுனத்தின் இறுதிப்பாகையை ஒட்டி சந்தியில் இருப்பதாலும் நேரம் உத்தேசமானது என்பதாலும் கடக லக்னமாக ஜாதகி  இருக்கக்கூடும் என அவர் அனுமானித்திருந்தார். 

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த நேரத்திற்கான ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

லக்னம் கன்னியில் 00.16 பாகையில் இருப்பதாக பிரசன்னம் காட்டுகிறது. லக்னம்  புதனின் வீடுகளில் ஒன்றுதான் என்பதை இது உறுதி செய்வதோடு லக்னப்புள்ளி சந்தியில் அமைத்திருப்பதால் ஜனன ஜாதக லக்னமும் சந்தியில் அமையும் என்பதை சாதாரண பிரசன்னமே சுட்டிக்காட்டுகிறது. கடகத்தை கோட்சார சந்திரன் தொடர்புகொண்டால் கடக லக்னம் என ஐயம் எழலாம். இங்கு கோட்சார சந்திரனும் கன்னியில்தான் உள்ளது எனவே லக்னம் புதனுடைய மிதுனம் அல்லது கன்னி ஆகும். கடகம் அல்ல என்பது உறுதியாகிறது.  ஆனால் மிதுனம் கன்னி இரண்டில் எனது லக்னம் என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால் இங்கு கேள்வியே லக்னம் மிதுனமா? அல்லது கடகமா என்பதுதான். எனவே லக்னம் மிதுனமாகும்.

இதை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் உறுதி செய்வோம் வாருங்கள். 

ஜாமக்கோள் பிரசன்னைத்தில் கும்ப உதயத்தில் உள்வட்டத்தில் புதன் அமைந்துள்ளதால் புதனின் லக்னமே ஜாதகருடையது என்பது புலனாகிறது. உதயம் கன்னி லக்னத்திற்கு 6/8 ஆக (சஷ்டாஷ்டகத்தில்) அமைகிறது. எனவே கன்னி லக்னமல்ல. அதே சமயம் மிதுனத்திற்கு திரிகோணத்தில் அமைந்த புதன் மிதுனத்தில் உள்ள ஜாம (வெளிவட்ட) சனியோடு   பரிவர்த்தனை ஆகிறார். மிதுன சனியோடு பரிவர்தனையாகும் புதன் உதயத்தையும் பரிவர்த்தனை ஆக்குகிறார். எனவே உதயமும் மிதுனத்திற்கு செல்கிறது. ஜாம சனி கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி வரும். உதயமும் உதய தொடர்புகளும் நமது ஐயப்பாட்டிற்கான விடைகளைக்கொண்டிருக்கும். எனவே பரிவர்த்தனைக்குப்பிறகு மிதுனத்திற்கு செல்லும் உதயம் ஜாதகியின் ஜனன லக்னம் மிதுனம் என்பதை உறுதி செய்கிறது. கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி செல்லும் சனியும் மிதுனத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் புதனும் ஜனன ஜாதகத்தில் அமைந்த நிலையிலேயே பிரசன்னத்திலும் அமைவதை கவனியுங்கள். இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் உன்னதம். சாதாரண பிரசன்னத்தில் இந்த நுட்பம் வெளிப்படாது. எனவே ஜாதகியின் லக்னம் மிதுனமே ஆகும். கடகம் அல்ல என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. மிதுனம் இரட்டை ராசி என்பதால் பிறப்பு விபரங்களையும் இருவேறு சூழல்களை ஒப்பிடும்படி பிரசன்னம் காட்டியது கண்டு அதிசயயித்தேன். இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திலும் (04.04.2021 – மதியம் 12:26 மணி) கோட்சார லக்னம் மிதுனத்தில் செல்வது பிரம்மிக்க வைக்கிறது. எனது ஜோதிட ஆய்வுக்கான இப்பெருமைகள் யாவும் எனது ஜோதிட ஆசான்களையே சாரும்.

எது சரியான பிறந்த நட்சத்திரம்?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நட்சத்திர சந்தி உள்ளது. இதனால் சில கணிதங்களில் பெண்ணின் நட்சத்திரம்  பூசம்-4 ஆம் பாதம் எனவும் சில கணிதங்களில் ஆயில்யம் முதல் பாதம் எனவும் வருவதாக என்னிடம் கொடுக்கப்பட்டது. சில அயனாம்ச மாறுதல்களாலும், கணித மாறுதல்களாலும் இரு நட்சத்திரங்களின்  சந்தியில் ஜனன கால சந்திரன் செல்லும்போதும் இந்நிலை ஏற்படும். இதனால் எந்த நட்சத்திரம் கொண்டு ஜாதகிக்கு நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு எனை நாடி வந்திருந்தனர்.

கீழே பெண்ணின் ஜாதகம்.


கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் 16.39 பாகையில் பூச நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் உள்ளதாகவே எனது கணினி மென்பொருள் காட்டியது. ஆனால் சில நிமிட மாறுதல்களில் அது ஆயில்யம் முதல் பாதம் என காட்டுகிறது. எனவே வந்தவர்களின் நிலை புரிந்தது. இதனால் பிரசன்னம் மூலம் இதை அறிய முயன்றேன்.

கீழே ஆய்வு நேரத்திற்கான பிரசன்ன ஜாதகம்.


கோட்சார சந்திரன் விருட்சிகத்தில் 2.43 பாகையில் கடகத்தின் திரிகோணத்தில் விசாகம்-4 ஆம் பாதத்தில் செல்கிறது. ஒரு பாதம் மாறினால் நட்சத்திரமும் மாறிவிடும். கேள்வி பூசத்தின் 4 ஆம் பாதமா? அல்லது ஆயில்யத்தின் முதல் பாதமா? என்பதே. விசாகம் குருவின் நட்சதிரமானாலும் நட்சத்திர பாதம்-4 தான். கோட்சார சந்திரன் கேட்டையில் இருந்தால் ஜனன நட்சத்திரம் ஆயில்யம் என கூறலாம். எனவே பாத அடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின்  ஜென்ம நட்சத்திரம் பூசம்-4 தான் ஆயில்யம் அல்ல என்பதை கோட்சார சந்திரன் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார சந்திரன் ஆத்மார்த்தமான நம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கண்ணாடி ஆகும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 26 March 2021

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

 

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது புதியவர்களுக்கு புதிய கோணங்களில் வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நீண்ட காலம் ஒரு துறையில், ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து ஒரு சூழலில் பணிமாறுதலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  காரணம் பணி மாறுதல் என்பது தனி மனிதனுக்கு சாதாரண மாறுதல் மட்டுமல்ல அது ஒருவரது வாழ்க்கையின் சூழலையே மாற்றியமைக்கக்கூடியது. அத்தகைய மாறுதலின் பொருட்டு ஒருவர் தனது உழைப்பை, சம்பாத்தியத்தை, குடும்பத்தை பணயம் வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு பாதுகாப்பான எந்த சூழலும் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிரந்தரமான ஊதியத்தை தரும் என்று சொல்லப்படும் அரசு உத்யோகத்தில் கூட லஞ்ச, லாவண்யங்களாலும், பாலியல் சீண்டல்களாளும், திறமையின்மையினாலும் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது தனது வேலையை அல்லது வேலை சூழலை ஒருவர் மாற்றவேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நிலையில் வேலையில்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மன நிலையில் இருப்போர்க்கு ஜோதிடம் எவ்வாறு உதவ முடியும் என்பதை அலசுவதே இப்பதிவின்  நோக்கம்.

ஜோதிடத்தில் மாற்றத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாவார். சந்திரன் சனியோடு தொடர்புகொள்ளும் சூழலில் ஒருவர் பணி மாற்றத்தை சந்திக்கிறார். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த திசை, புக்தி நடந்தாலும் ஏழரை சனியில் குறிப்பாக ஜென்மச்சனியில் ஒருவர் தனது ஜீவன சூழலை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஜீவன காரகன் சனி  தனது ஆதிக்க காலத்தில் மாற்றத்தின் காரகன் சந்திரன் மேல் கோட்சாரத்தில்  செல்லும் காலம் தரும் பணி மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.




1973 ல் பிறந்த இவர் தன் பணியில் தனக்குள்ள தனித்திறமையால் தன் திறமைக்கேற்ற நல்ல சூழலில் வேறு ஒரு நாட்டில் பணிபுரிய விரும்புகிறார். இதற்கேற்ற சூழல் ஜாதகத்தில் உள்ளதா என ஆராய்வோம். ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் நீசமாகி சனியோடு இணைந்து நீச பங்கமும் ஆகியுள்ளார். இது பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியை தரும் அமைப்பே ஆகும். எனவே ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர இன்னும் சில காலமாகும். ஜாதகருக்கு சுக்கிர திசையில் குரு புக்தி 2022 இறுதி வரை நடக்கிறது.  சுக்கிரன், குரு இருவரும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திசா நாதனை மீறி புக்தி நாதன் செயல்பட இயலாது. சுக்கிரனும் குருவும் சந்திரனின் சாரத்திலேயே (சுக்கிரன் ரோஹிணி-1, குரு திருவோணம்-3)  உள்ளதால் இவர் பணி மாறுதலை விரும்புகிறார். மேலும் முதலாளி அல்லது முதன்மை நிர்வாகியை குறிக்கும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் குறைந்த பாகை  பெற்று (சூரியன் 3 பாகை 1௦ விகலை) நிற்கும் ஜாதகத்தினருக்கு தனது நிர்வாகியிடம் எவ்வளவு சிறப்பாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாவச்சக்கரத்தில் சுக்கிரன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் மேஷத்தில் நிற்பதால் இவருக்கு தான் பணிபுரியுமிடத்தில் அதிருப்தி உள்ளது. ஆனால் திசை மற்றும் புக்தி நாதர்கள் தற்போது சிறந்த பொருளாதார உயர்வை வழங்கும் நிலையில் இல்லை. எனவே ஜாதகர் அவசரப்பட்டு வேலையை விடுவது நன்மை அளிக்கும் முடிவல்ல.

ஒரு நேர்முகத்தேர்வின் முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளேன். அந்த வேலை கிடைக்குமா என கேட்ட நபருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் ஆரூடமும் கவிப்பும் உள்ளது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமாகியுள்ளது. இது ஜாதகர் வேலையில் ஒரு உயர்வான நிலையை நோக்கி செல்லும் எண்ணத்தில் உள்ளதை காட்டுகிறது. வேலை கேட்பவர் உதயாதிபதி என்றால் வேலை கொடுப்பவர் 7 ஆமதிபதி ஆவார். உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் தடையை குறிக்கும் ராகுவிற்கு நெருக்கமாக சென்றுகொண்டுள்ளார். அதே சமயம் ஜாம செவ்வாய் (வெளி வட்ட செவ்வாய்)   வேலை பாவமான 6 க்கு விரையத்தில் மீனத்தில் நிற்பது ஆகியவை சிறந்த அமைப்பல்ல. வேலை தர தயாராக இருப்பதாக சொல்லும் 7 ஆமதிபதி சுக்கிரன் வெளி வட்டத்தில் விரையத்தில் உள்ளது. உள்வட்டத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 1௦ ஆமதிபதி சூரியனுடன் நெருக்கமாக அஸ்தங்கமாகி நிற்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதி சுக்கிரன் ஆகிய இருவருக்கும் இடமளித்த மீனத்தில் அதிபதி குரு உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நீசம் பெற்று நிற்பது, வேலை தருபவர் இவர் எதிர்பார்க்கும் சிறந்த சம்பளத்தை தர மாட்டார் என்றே குறிப்பிடுகின்றன. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமானாலும் உள்வட்ட சூரியனின் பலமே ஜாம சூரியனுக்கு செயல்பாட்டு வலுவைத்தரும். உள்வட்ட சூரியன் வேலை பாவத்திற்கு விரைய  பாவத்தில் நிற்கிறது. இந்த நிலை ஜாதகருக்கு ஊதிய உயர்வை தர தங்கள் நிறுவனத்திற்கு மாறுதலாகி வந்தால் சாத்தியம் என சொல்லும் நபர் ஜாதகரை வேலையை இழக்க வைத்து பிறகு தங்கள் எண்ணப்படி சொல்லும் ஊதியத்திற்கு இணங்க வைக்கும் முயற்சி உடையவராக  இருக்ககூடும் என்பதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடத்தில் உள்ள கவிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே வேலை அளிப்பதாக சொல்லும் நிறுவனத்தை நம்பி பார்க்கும் வேலையை விட்டுவிட்டால் பிறகு பாதிப்படைவது உறுதி என்பது புலனாகிறது. உச்சமான ஜாம சூரியன் உதயத்தை தொடும் காலத்தில் ஜாதகருக்கு உத்யோக உயர்வு காத்துள்ளது. அதுவரை ஜாதகர் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்க சொல்லப்பட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Wednesday, 17 February 2021

குறை தீர்க்க வரும் தெய்வம்!

 

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை.

தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு விலங்குகளின் மீதுள்ள பயத்தால் குரூர விலங்குகளையும், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றையும் வணங்கியிருக்கிறான். இன்றைய நமது தெய்வங்களின் காலடியில் சிங்கங்களும், புலிகளும், யானைகளும், பாம்புகளும் இருப்பதன்  காரணம் இதுதான். பண்டைய மனிதர்கள் தனித்தனி கூட்டங்களாக வசித்தபோது எதிரிக்கூட்டத்தினரால் பாதிக்கப்பட்டபோது, தாங்கள் வணங்கும் தெய்வம் எதிரிகளிடம் இருந்து தன்னை காக்கும் என்று நினைத்ததன் விளைவே நமது தெய்வங்களின் காலடியில் அரக்கர்கள் என்ற எதிரிகளின் தலைகள் இருப்பது. பிறகு தங்களுக்கு நிழல் தரும், கனி தரும், ஆரோக்கியம் தரும், பால் தரும் பசுக்களையும், மரங்களையும், செடிகளையும், நதிகளையும், சூரிய, சந்திரர்களையும் வணங்கி இருக்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்த மகா பெரிய பிரபஞ்ச சக்தியை நமது மனதின் எண்ண அலைகளின் மூலம் தொடர்புகொள்ள ஒரு வடிவம் சாமான்ய மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வடிவம் தேவைப்படுபவர்களுக்கு அது தெய்வம் தேவைப்படாதவர்களுக்கு அது இயற்கை என்பதே உண்மை. நமது எண்ண அலைகளை ஒரு வடிவத்தின் மீது குவிக்கும்போது இயற்கையுடன் மனிதன் அந்த வடிவத்தின் மூலம் தொடர்புகொள்கிறான் என்பதை சில அபூர்வமான அறிவியல் ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.    

குல தெய்வம்.

குல தெய்வம் என்பது பயத்தின் பொருட்டு உருவான கதைகளின் அடிப்படையில் மேலே கூறப்பட்டவை போன்று உருவானதல்ல. குல தெய்வம் என்பது தனித்துவமானது.  குல தெய்வம் என்பது தங்கள் கூட்டத்தின் பொருட்டு எதிரிகளோடு நடந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களையும், தனது குலத்திற்கு, தனது குடும்பத்தின் நலனின் பொருட்டு தனது உயிரை, வாழ்வை தியாகம் செய்தவர்களே அந்த குலத்தின் (கூட்டத்தின்) தெய்வங்கள் என அழைக்கப்படுகிறது. குல தெய்வத்தோடு அந்த குலம் காக்க உயிர்நீத்த வீரர்களையும் காவல் தெய்வங்கள்  என்று வணங்குவது நடைமுறை. இந்த தெய்வங்கள் நமது வாழ்வோடு ஒன்றியவை. எனவே இவைகளின் ஆன்மாவிற்கு அந்த குலத்தை காக்கும் சக்தி உண்டு. முறையாக வழிவழியாக ஏற்படுத்தப்பட்ட வழிபாடுகளின் அடிப்படையில் நன்றி செலுத்தும் உணர்வோடு குல தெய்வத்தை வணங்கினால்  ஒருவரின் துயர் தீர்க்க விரைந்து வரும் தெய்வம் குல தெய்வமாகும். ஒருவரின் துயர் தீர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் தெய்வம் குல தெய்வமாகும்.

தமிழர்களின் தெய்வம் முருகன்.

நமது தமிழ் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவான தெய்வமாக முருகன் வழிபடப்படுகிறார். ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் பண்டைய காலாசாரத்தின் விடிவெள்ளியாக விளங்கிய தன்னிகரற்ற தலைவனே முருகன் ஆவார். மலைகளிலும் காடுகளிலும் தமிழர்கள் குழுக்களாக வசித்த பண்டைய காலத்தில் தோன்றியவராக முருகன் இருந்திருக்க வேண்டும். அப்போது தமிழ் பேசும் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரே  குடையின்கீழ் கொண்டுவர முயன்றவராக முருகன் இருந்திருக்கலாம். அதனால்தான் முருகன் குறிஞ்சி நிலத்தின் (மலையும் மலை சார்ந்த இடம்) கடவுளாக கூறப்படுகிறார். முருகன் தமிழர்களின் கலாச்சார தெய்வமாகும். குல தெய்வம் தெரியாத தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தை நாடி பிழைக்க வரும் குல தெய்வம் தெரியாத ஏனையயோரும் முருகனை குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடமாறு கூறுவதன் அடிப்படை இதுதான். மனினாக  பிறந்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த முருகனை பிற்பாடு சிவனின் மகனாக உருவகம் செய்துள்ளனர். முருகனின் வரலாற்றை நமது பண்பாட்டுக்கூறுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு ஒப்பற்ற தமிழர்களின் தெய்வ வரலாறாக தொகுத்து எழுதும் முயற்சியில் தமிழறிஞர்கள்  சிலர் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன். அரசியல் தொடர்பற்று அது நடந்தால் அது தமிழ்  சமூகத்திற்கு நல்லது. காரணம் இன்று அரசியலுக்காக தங்கள் மதத்தையும், இனத்தையும் வழிபாடுகளையும் இழிவுபடுத்திக்கொண்டு பிற மதத்திற்கு வால் பிடிப்பவர்களே தங்களை தமிழக தலைவர்களாக காட்டிக்கொள்கின்றனர். முருகன் மனிதனாக பிறந்து வாழ்ந்து மறைந்தவர். தனது வாழ்வின் சொகுசுக்காக முருகனை சந்திர குப்த விக்ரமாதித்தனின் மகனாக அவதானித்து காளிதாசர் “குமார சம்பவம்” எழுதிச்சென்ற நகைச்சுவைகளெல்லாம் வரலாற்றில் இருக்கிறது. 

கால மாற்றத்தில் குல தெய்வ வழிபாடுகள்.

இன்றைய நவீன யுகத்தில் தங்கள் வாழிடத்தை விட்டு சம்பாத்தியத்திற்காக வெளி தேசம் செல்வோர் தங்களது மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவைகளையும் இழந்துவிட்டே செல்கின்றனர். முந்தைய காலங்களில் இலங்கை, பர்மா, மலேசிய, சிங்கப்பூர் சென்றோர் அங்கெல்லாம் நமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை பரப்பினர். ஆனால் இன்று பொருளாதாரத்தின் பொருட்டு உலக மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கலந்து செயல்படும் சூழ்நிலையில் நமது இனத்தின் அடையாளம் மாறிவருகிறது. உலகின் முதன்மையான கலாச்சார தொட்டில்களில் ஒன்று தமிழ்நாடு எனும் நிலையில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காது பேணுவதற்கு பொறுப்பு உள்ளது. நமது வழிபாட்டுமுறைகளை குறிப்பாக தங்கள் துயர்தீர்க்கும் முதன்மை தெய்வமாகிய குல தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பது அவசியம்.

இன்று தங்கள் குல தெய்வம் தெரியாது ஜோதிடம் பார்க்க வருபவர்களை காணும்போது பரிதாபமாகவுள்ளது. இத்தகையவர்களுக்கு உதவ ஜோதிடம் கைகொடுக்கிறது. குலதெய்வத்தை அறிய ஜாதகத்தைவிட பிரசன்னமே மிகச்சிறந்தது என்பது எனது கருத்து.

ஜாதகம் மூலம் குல தெய்வம் அறிதல்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். 9 ஆம் பாவமும் கிரகங்களில் சனியும் (குருவும் கூட)  குல தெய்வ அனுக்கிரகத்தை கூறுகிறது. மேற்கண்ட ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆம் பாவம் பெண் ராசியாகி அதில் சூரியன் அமைந்துள்ளார். இதனால் இவரது குல தெய்வம் ஒரு பெண் தெய்வமாகும். சூரியன் 5 ல் அமைந்துள்ளதால் குல தெய்வம் ஆளுமை மிக்க தெய்வமாகும். உச்ச ராகு சூரியனின் நட்சத்திரம் கார்த்திகை-4 ல் நின்றதால் 5 ஆம் பாவத்தோடு தொடர்பாகிறார். மேலும் ராகு 5 ஆம் பாவத்தை கட்டுப்படுத்தும் பாவத்தில் உள்ளார். இதனால் ராகுவின் ஆதிக்கம் 5 ஆமிடத்தில் அதிகம். ராகு ஒரு மூர்க்க கிரகமாகும். ராகு செவ்வாயின் பார்வையை பெறும்போது அதற்கு மூர்க்க குணம் அதிகமாகும். இந்த ஜாதகரின் குல தெய்வம் பழனி  அருகிலுள்ள வீரமாத்தி அம்மன் என்பதாகும். குல தெய்வத்தில் உச்ச ராகுவின் ரௌத்ர குணம் தெரிகிறது. 5 ல் அமைந்த கிரகமே குல தெய்வத்தின் நிலையை சொல்லும் என்றாலும் ராகு சூரியன் சாரம் பெற்றதால் சூரியன் இங்கே தனது ஆதிக்கத்தை ராகுவிடம் இழந்துவிடுகிறார். குல தெய்வ பாக்கியத்தை குறிக்கும் 9 ஆமிடத்தில் வீரத்தை குறிக்கும் செவ்வாயின் பார்வையை வாங்கும் ராகு, குலதெய்வத்தின் பெயரிலேயே செவ்வாயின் தன்மையை ஏற்றுக்கொள்கிறார். ராகு தனித்திருப்பதால் அது பார்க்கும், சேரும் கிரகங்களின் நிலையையே வெளிக்காட்ட வேண்டும் என்ற விதி  இங்கு செயல்படுகிறது.

சூரியன் இரட்டைத்தன்மையை குறிக்கும் புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். எனவே குல தெய்வ வழிபாட்டில் மற்றொரு அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த ஜாதகர் பாரம்பரையில் குழந்தை பிறந்ததும் குழந்தையை சூரியனுக்கு முன் வைத்து வணங்கி ஆசி பெற வேண்டும் என்ற மற்றொரு வழிபாட்டு முறையையும் காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஜாதகம் இதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

பிரசன்னம் மூலம் குல தெய்வம்  அறிதல்.

குல தெய்வம் என்னவென்று உறுதியாக தெரியாமல் இரண்டு தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். இதுபற்றி விபரமறிந்த எங்கள் முன்னோர்கள் வழியில் தெளிவான நபர்கள் யாரும் இல்லை. எனவே வழிகாட்டுங்கள் என்று எங்கள் ஊர் நண்பர் வந்தார். ஜாதகம் இல்லாத சூழலில் அவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.



ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ அனுக்கிரகத்தை உதயத்தில் இருக்கும் கிரகம் சொல்லிவிடும். ஆனால் குல தெய்வத்தை கூறுமிடம் 5 ஆமிடமும் 9 ஆமிடமும் ஆகும். ஒன்பதாமிடம் ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ நிலையை தெளிவாகக்காட்டும். இந்த பிரசன்னத்தில் உதயத்தில் உள்ள உதயாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக உள்ளார். எனவே ஜாதகருக்கு குல தெய்வ பாக்கியம் சிறப்பாக உள்ளது. ஆரூடம் இரட்டைக்கிரகம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் இருவித  தெய்வங்களை  வணங்கி வருவதாக ஜாதகர் கூறியது சரியாகும். ஒன்பதாம் பாவத்தில் பாம்பு, குருவின் சாரம் புனர்பூசம்-2 பெற்று  பாம்பின் சாரநாதன் குரு உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் நீசமாகியுள்ளது ஜாதகருக்கு குலதெய்வத்தின் பொருட்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ஆம் பாவத்தை ஜாம மற்றும் ஜாதக புதன் ஆகிய இரண்டும் பார்ப்பதால் குல தெய்வ வழிபாடு தொடர்வதையும் அதில் இருவித வழிபாடுகளாக இருப்பதையும் அறிய முடிகிறது. புதனுடன் பாதகாதிபதி சூரியன் உள்ளதாலும் உதயத்தை உச்சம் பெற்ற பாதகாதிபதி சூரியன் பார்ப்பதும் குழப்பத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இந்த பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களான சூரியன் மற்றும் குரு ஆகியவை ஜாதகரின் சந்தேக மன  நிலையை தெளிவாக காட்டுகிறது.

இந்த பிரசன்னத்திற்கு நான் கூறிய பதிலானது.

9 ஆம் பாவத்தில் உள்ள பாம்பு வடிவமே குல தெய்வத்தின் அம்சமாகும். 9 ஆமிடத்தை இரு புதனும் பார்வையிடுவதால் பெருமாளையும் வழிபடுகிறீர்கள். எனினும் 9 ல் உள்ள பாம்புதான் குல தெய்வம் எனக்காட்டுகிறது என்று கூறினேன்.

நண்பர் தாராபுரம் அருகிலுள்ள பாம்பலத்தம்மனை தங்கள் பங்காளிகளுடன் இன்றும் வழிபட்டு வருவதாகவும் தற்போது உள்ள ஊரின் (கரூர் அருகிலுள்ள வெள்ளியணை)  பிரதான தெய்வமாகிய பெருமாளையும் வழிபட்டு வருவதாகவும் கூறினார்.

நண்பர் பாம்பலத்தம்மன் என்று கூறியதும் அடியேன் சிலிர்த்துப்போனேன். பிரசன்னம் துல்லியமாக பதிலை கூறிவிட்டது. சொந்த ஊரை விட்டு விலகி பிழைக்க வந்த ஊரைத்தான் 3 ஆமிடம் குறிக்கிறது. எனவே ஒரு ஊரை நம்பி வாழ வந்தவர்கள் அந்த ஊர் தெய்வத்தை முக்கியமாக வழிபட வேண்டும் என்ற வகையில் பெருமாளை வழிபடுவதை மூன்றாமிடம் கூறுகிறது. எனவே உங்களுக்கு இரு தெய்வ அனுக்கிரகமும் உண்டு. இரு வழிபாடுகளையும் தொடர்வது நன்மையே எனினும்  பாம்பலத்தம்மனே குல தெய்வம் என்பதை உங்கள் தலைமுறையினருக்கு சொல்லி வழிபட்டுவர சொல்லுங்கள் அதன் நன்மை அளப்பரியது என்று கூறி அனுப்பிவைத்தேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 1 December 2020

ஜவுளி வியாபாரம்

 


கொரானாவால் முடங்கிய உலகம் தற்போது மெல்ல தனது பழைய பாதைக்கு திரும்ப முயற்சிக்கிறது. இந்த காலத்தில் தொழில் துறை அடைந்த பாதிப்புகள் சொல்லில் வடிக்க முடியாதது. அதிலும் கடன் வாங்கி தொழில் செய்து வந்தவர்கள் வருமானமின்றி வட்டியும் கட்டமுடியாமல் தொழிலை ஓரம் கட்டிவிட்டு ஊரைப்பார்க்கப்போன பீகாரிகளை, பெங்காலிகளைவிட நம்மவர்களும் மிக அதிகம்.  சென்னையில் இருந்து சாரை சாரையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நம்மவர்கள் திரும்பிய அவலங்களை பார்த்தோம். இந்நிலையில் தன் உறவுக்காரப்பெண்  ஒருவருடன் இணைந்து ஜவுளி வியாபாரம் செய்யலாமா? எனக்கேட்டு என்னை அணுகினார் ஒரு பெண்மணி. பொதுவாக ஒருவரது தொழில் கூறுகளை ஜாதகம் சுட்டிக்காட்டும் என்றாலும் பிரசன்னம் அதன் நிகழ்கால நிலையை துல்லியமாக சுட்டிக்காட்டும். இதனால் இது போன்ற கேள்விகளுக்கு பிரசன்னத்தை கைக்கொள்வதே சிறந்தது. அவருக்காக ஒரு ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கப்பட்டது.

          


பிரசன்னத்தை ஆராயுமுன் பிரசன்னம் கேள்வியாளரின் கேள்வியை,  சிந்தனையை சுட்டிக்காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்திகொண்ட பிறகே பதிலுக்கு செல்ல வேண்டும். இது பிரசன்னத்தில் மிக முக்கியம். இனி மேற்கண்ட  பிரசன்னத்தை ஆராய்வோம் வாருங்கள்.

சனி ஹோரையில் சுக்கிர உப ஹோரையில் கேட்கப்பட்ட கேள்வி. இங்கு சனி என்பது தொழிலையும் சுக்கிரன் என்பது பெண்கள் உடுத்தும் ஆடைகளையும் குறிக்கிறது.

உதயத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளது. உடன் கூட்டாளியை குறிக்கும் புதன் உள்ளார். எனவே கூட்டுத்தொழில் என்ற கேள்வி சரி.

உதயத்திலும் கூட்டாளியை குறிக்கும் மேஷத்திலும் சுக்கிரன் அமைந்துள்ளது. எனவே கூட்டாளி பெண் என்பது தெளிவாகிறது.

தொழிலை குறிக்கும் 1௦ ஆம் அதிபதி சந்திரன் உதயத்திற்கு கூட்டாளி ஸ்தானமான 7 ல் உள்வட்டத்தில் நிற்கிறது. எனவே இது இரு பெண்கள் இணைந்து கூட்டாக தொழில் செய்வதைப்பற்றிய கேள்வி என்பது தெளிவாகிறது.

வியாபரத்தை குறிக்கும் துலாம் உதயமும் 7 ஆம் பாவமும் ஒற்றைப்படை ராசியாகி அதில் பெண் கிரகங்களான சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உடன் புதனும் இருப்பதால் இந்த பிரசன்னம் பெண்கள் தொடர்புடைய வியாபாரப்பிரசன்னம் என்பது தெளிவாகிறது. 

                       உள்வட்ட கிரக நிலை
 


பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களே தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உதயத்திற்கு 1௦ ல் அமைந்த குரு ஜாதகியின் தொழில் சிந்தனையை தெரிவிக்கிறார்.

உதயத்திற்கு பாதகாதிபதி சூரியன் உதயத்தில் வெளிவட்டத்தில் நீச நிலை பெற்று உதய ஆட்சி சுக்கிரனால் நீச பங்கம் பெற்று நிற்கிறார். இது கேள்வியாளர் கூட்டாளியுடன் இணைந்து தொழில் செய்தாலும் தானே முதன்மையான சக்தியாக இருக்க விரும்புவதும் அதற்கு பாதகாதிபதியான சூரியன் தடையாக இருப்பார் என்பது தெளிவாகிறது. 

உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சூரியன் கேது இணைவையும் மீனத்தில் தன் வீட்டில் ஜாம சனியோடு இணைந்து நிற்கும் செவ்வாயை உச்ச நிலையில் கடகத்தில் அமைந்த ஜாம குரு பார்க்கிறார். இதனால் தொழில் முதலீடு கடன் பெற்றே துவங்கும் என்பதும். அதற்கு உதயத்திற்கு 1௦ ல் உச்சமான 6 ஆமதிபதி குரு உதவுவார் என்பதும் புரிகிறது. ஜாம குரு கேதுவின் மகம்-2 ல் நிற்பது தொழில் முதலீடு கடன் மூலம் என்பதை உறுதி செய்கிறது.

கூட்டாளியை குறிக்கும் புதன் உதயாதிபதியுடன் இணைந்து உதயத்தில் பாதகாதிபதி சூரியனுடன் இணைந்து நின்று, கூட்டாளியை குறிக்கும் மேஷ செவ்வாய் மீனத்தில் 6 ஆமிடத்தில் அதன் பகை கிரகமான சனியோடு சேர்க்கை பெற்ற   நிலையில் ஜாம செவ்வாயும் விரையத்தில் நிற்கிறது. இதனால் கேள்வியாளர் தனது தொழிலில் மிகுந்த சிரமங்களை அடைவார். அதுவும் கூட்டாளி வகையில் விரையங்களையும் வேதனைகளையும் அடைவார் என்பது தெளிவாகிறது.

                          வெளிவட்ட கிரக நிலை 


    உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற ஜாம குருவை உதயத்திற்கு 4 ஆமிடத்தில் அமைந்த சனியும், ஆட்சி சனியால் நீச பங்கமடைந்த உள்வட்ட குருவும் பார்க்கிறார்கள். உடன் 1௦ ஆமதிபதியான ஜாம சந்திரனும் தன் வீட்டை பார்க்கிறார். இந்த நிலையை உதயத்திற்கு 7 ஆமிடத்தை முதன்மையாகக்கொண்டு பார்க்கையில் கூட்டாளிக்கு நிர்வாகத்திறமை உண்டு. ஆனாலும் இரு செவ்வாயின் நிலையால் மேற்சொன்ன பாதிப்பு மற்றும் விரையம் ஆகியவை இருக்கும்.

இது எதுவரை இருக்கும் எனில் உதயத்திற்கு 4 ல் நின்று 1௦ ஆம் வீட்டை பார்க்கும் சனி 4 ஆம் வீட்டை விட்டு நகரும் வரையிலும் கோட்சார கேது உதய புள்ளியை கடக்கும் வரையிலும் இருக்கும். அதன் பிறகு தொழில் பாதிப்புகள் குறையத்துவங்கும். ஆனால் உள்வட்ட சனி உதயத்திற்கு 6 ல் மீனத்திற்கு செல்லும் காலம் வரை தொழிலில் அதிகம் கடன் கொடுக்காமலும் அதிக இருப்பு வைத்துக்கொள்ளாமலும் வியாபாரம் செய்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டது.

உதயம் (சுவாதி), ஆரூடம் (சதயம்), கவிப்பு (சதயம்) ஆகியவை ராகு சாரம் பெறுவது கவனிக்கத்தக்கது. உதயாதிபதியின் மற்றொரு வீடான ரிஷபத்தில் நிற்கும் ராகு உதயாதிபதி போன்றே செயல்படவேண்டும். ராகு உதயத்திற்கு 8 ல் நின்றாலும் அது உதயாதிபதியின் மற்றொரு வீடு என்பதால் பாதிப்பை தராது.

கவிப்பு 5 ல் இருப்பது இந்த தொழிலால் கேள்வியாளருக்கு  ஏற்படவிருக்கும் பாதிப்பை சொல்லும். கவிப்பும் உதயாதிபதியின் சாரம் பெறுவதால் அது பாதிப்பை தர இயலாது.

ஆரூடம் 5 ல் நிற்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கேள்வியாளர் கல்லூரியில் படிக்கும் தனது மகளை தனது தொழிலுக்கு சேர்த்துக்கொள்ளலாமா? என கேட்டார். பிரசன்னத்தில் உச்சம் மற்றும் நீசம் பெற்றும் நிற்கும் குருவை ஆராய்ந்தும் மூத்த மகளை குறிப்பிடும் சுக்கிரன் 7 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதை வைத்தும் அதுவே மிகச்சிறப்பானது என கேள்வியாளருக்கு சொல்லப்பட்டது. இதனால் கேள்வியாளர் தொழில் கூட்டிற்கு எண்ணியிருந்த பெண்ணை  தவிர்த்து மகளையே கூட்டாளியாக்கிவிட ஒப்புக்கொண்டார்.  எனினும் நிர்வாகத்தை மகளிடமே தந்துவிடவேண்டும் என்றும் நீங்கள் உதவியாளராக மட்டுமே செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 


மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன் 

கைபேசி: 8300124501  

Saturday, 29 August 2020

பிரசன்னத்தில் வேலை நிலை அறிதல்

ஜாதகம் இல்லாதோருக்கு பிரசன்னம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கேட்கப்படும் கேள்விக்கு துல்லியமான பதிலை, கேள்வியின் தன்மையை, கேள்வியாளரின் நிலையை சுட்டிக்காட்டவல்லது. பிரசன்னங்களில் இதர வகை பிரசன்னங்களைவிட பலபடி உயர்ந்தது, எளிமையானது, துல்லியமானது ஜாமக்கோள் பிரசன்னமாகும். நம்பிக்கையான பதிலை தரவல்லது. நான் எப்போதும் ஜாதக பலன் கூறும்போது ஜாமக்கோள் பிரசன்னத்தை ஒப்பிட்டே பலன் கூறி வருகிறேன். ஜாதகம் தவறாக இருப்பின் பலன்களும் தவறாகவே அமையும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பிரசன்ன ஜாதகத்தை ஜோதிடர்களை காக்கும் கருவியாக பயன்படுத்தலாம்.

ஜோதிடரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது எனில் கேள்வியின் காரக, பாவங்களையும், திசா-புக்திகளையும், கோட்சாரத்தையும் ஒப்பிட்டு பதிலளிப்பது என்பது பெரும்பாலும் அனைத்து ஜோதிடர்களும் கடைப்பிடிக்கும் எளிய முறையாகும். ஆனால் கேள்வி தொடர்பான விஷயத்தின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலையையும் அதன் போக்கையும் துல்லியமாக அறிய ஜாமக்கோள் ஆரூடம் மிகச்சிறப்பாக பயன்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல.

கீழே வேலை தொடர்பாக ஒரு ஆணுக்காகக் கேட்கப்பட்ட பிரசன்னம்.


துலாம் உதயம்.ஜாம உதயாதிபதி துலாத்தில் ஆட்சி பெற்று ராகுவின் சுவாதி-2 ல் நிற்கிறார். உள்வட்ட சுக்கிரன் ராகுவோடு சேர்க்கை பெற்று உதயத்திற்கு 9 ல் மிதுனத்தில் நிற்கிறார். இரு சுக்கிரனும் ராகுவோடு  தொடர்புகொண்டதால் ஜாதகர் ஏதோ ஒரு தடையை சந்தித்துக்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. உதயத்திற்கு 9 ஆம் பாவம், ஜீவன பாவமான 1௦க்கு விரைய பாவமாகிறது. இதனால் ஜீவனம் தடையாகியுள்ளது. வெளிவட்ட சுக்கிரன், தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் உதயத்திலேயே நிற்பதால் தன வரவு தடையாகிக்கொண்டிருப்பது தெரிகிறது. உள்வட்ட சுக்கிரன், வேலை பாவமான உதயத்திற்கு 6 ஆமிடாதிபதி குருவின் புனர்பூசம்-2 ல் நிற்கிறார். உள்வட்ட சுக்கிரனின் சார நாதன் குருவெளிவட்டத்தில் நீசமாகியுள்ளார். உள்வட்ட குரு, கேதுவோடு இணைந்து பாதிக்கப்பட்டுள்ளார். இரு குருக்களும் ஜாதகரின் பணி இழந்த சூழலை தெளிவாக கூறுகின்றனர்.

ஜீவன பாவமான 1௦ ஆமதிபதி சந்திரன் உள் வட்டத்தில் புதனின் கேட்டை-4 ல் நீசமாகியுள்ளார். வெளிவட்ட சந்திரன் அதே புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். இது ஜாதகர் கணினி மென்பொருள் தொடர்பான வேலையில் வெளிநாடு தொடர்புடைய வகையில் முன்னர் பணிபுரிந்து தற்போது பணி இழந்துள்ள சூழலை தெரிவிக்கிறது. உதயத்திற்கு 6 ஆமிடம் நீர் ராசியாகி அதன் அதிபதி குரு நீர் கிரகமாகி, 1௦, 2 ஆகிய பாவங்கள் நீர் ராசியான கடகமும், விருட்சிகமும் ஆகி,  அதன் அதிபதிகள் நீர் கிரகமான சந்திரனே ஆவது ஆகியவை ஜாதகரின் முந்தைய பணிச்சூழலை தெளிவாக கூறுகிறது. ஜாதகர் கணினி மென்பொருள் தொடர்பான வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து பணியிழப்பை சந்த்திதவர். கவிப்பு உதயத்திற்கு 1௦ ல் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. இது ஜீவனத்தில் பாதிப்பையும்.உறுதி செய்கிறது.

வேலைக்கு காரக கிரகம் சனி வெளிவட்டத்தில் உதயத்திற்கு விரையத்தில் கன்னியில் சூரியனின் உத்திரம்-3 ல் நிற்கிறது. உள்வட்ட சனி 4 ஆம் பாவத்தில் வக்கிரம் பெற்று அதே சூரியனின் உத்திராடம்-2 ல் நிற்கிறது. இது ஜாதகர் தனது பணியில் நிறைந்த மதிப்பையும் கௌரவத்தையும் எதிர்பார்ப்பவர் என்பதை குறிக்கிறது. உதயத்திற்கு 9 ஆம் பாவ ராகு செவ்வாயின் மிருகசீரிஷத்தில் நிற்கிறது. செவ்வாய் பாதகாதிபதிபதி உச்ச சூரியனோடு இணைந்து உதயத்திற்கு 7 ல் உச்சம் பெற்று நிற்பது ஜாதகரின் வேலையில் அவருக்குறிய மதிப்பும், அங்கீகாரமும் ஜாதகரின் உயர் அதிகாரிகளால் மறுக்கப்படும் என்பதை தெரிவிக்கிறது. இங்கே உயர் அதிகாரி என்பதை செவ்வாயும் உயரதிகாரியால் வேலையில் பாதிப்பு என்பதை செவ்வாய் சாரத்தில் நிற்கும் ராகுவும் குறிப்பிடுகின்றனர். செவ்வாய் இங்கு உயரதிகாரி (Team Leader) என்பதையும்,   தலைமை அதிகாரி என்பதை சூரியனும் (Owner & Project Head) சுட்டிக்காட்டும். உள்வட்ட சனி கேதுவை கடந்து மகரத்திற்கு போயுள்ளது. இது ஜாதகர் சனி+கேது சேர்க்கையால் கடந்த ஓரிரு வருடங்களாகவே சரியான பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்நிலையில்உள்வட்ட குரு வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்திற்கு செல்ல மேலும் 2 வருடங்களுக்கு மேலாகும்.உள்வட்ட கேது உதயத்திற்கு 1௦ ஆமதிபதியான நீச நிலைபெற்ற சந்திரனை நோக்கி வருகிறது. இது ஜீவன தடை தொடர்வதையே குறிக்கிறது. கேது சந்திரனை கடந்து உதயத்திற்கு செல்லும்வரை  தடை நீடிக்கும்.அதுவரை ஜாதகருக்கு சரியான வேலை கிடைக்க வாய்ப்பில்லை. இடையே கிடைக்கு ஓரிரு வாய்ப்புகளும் ஜாதகருக்கு பொருந்தாதவைகளாகவே அமையும் என்பதை பிரசன்னம் குறிப்பிடுகிறது. பிரசன்னத்தில் தெரியும் இந்த நிலையை ஜாதகருக்கு எடுத்துச்சொல்லி ஜாதகரை அதுவரை தாற்காலிக வேலைகளிலோ அல்லது தனது திறனை வளர்த்துக்கொள்வதிலோ கவனத்தை செலுத்தச்செய்து தெம்பூட்ட வேண்டும். இது ஒரு ஜோதிடரின் தலையாய கடமை ஆகும். இது கேள்வியாளர் தனது நிலையில் சோர்வடையாமல் திட்டமிட மிக உதவும்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501