Showing posts with label சூரியன். Show all posts
Showing posts with label சூரியன். Show all posts

Thursday, 7 October 2021

மீன ராசிக்கு சுக்கிர திசையில் திருமண யோகம்!

                           


மீன ராசியினருக்கு சுக்கிரன், ராசிக்கு 3 ஆமதிபதி என்ற வகையில் திருமண யோகத்தையும் 8 ஆமதிபதி என்ற வகையில் அவமானம், கண்டம், பிரிவினை, நிரந்தர குறைபாடுகளையும் தர வேண்டியவராகிறார். மீன ராசியினருக்கு 2023 முதல் ஏழரை சனி துவங்கவுள்ள நிலையில் சுக்கிர திசை நடக்கையில் திருமணம் செய்யலாமா? என கலக்கத்துடன் ஓரளவு ஜோதிட அறிவுகொண்டோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் எடுத்து வருகின்றனர். சுக்கிர திசை 2௦ வருடங்கள் எனும் நிலையில் அத்தனை வருடங்கள் பாதிப்பு ஏற்படும்  என்று திருமணத்தை தள்ளிப்போடுவது  மடமையாகும். மேலும் ராசி மீனமாயினும் லக்னம் என்ன என்பதையும் அளவிட்டே இதற்கு பதிலளிக்க இயலும். ராசியும் லக்னமும் மீனமாக அமைபவர்களுக்கு சுக்கிர திசை சற்று கடுமையை அதிகம் கட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதையும் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக்கொண்டே கூற வேண்டும். மேலும் ஒருவரது இல்லற கொடுப்பினைகளை கூற கால புருஷனுக்கு 7 ஆமதிபதி என்ற வகையில் சுக்கிரனை முதன்மையாக எடுத்துக்கொண்டாலும் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தையும் அதன் அதிபதி நிலையையும் கவனத்தில்கொள்வது அவசியம்.  இந்தச் சூழலில் சுக்கிர திசை மீன ராசினருக்கு என்னென்ன பலன்களை எவ்வெப்போது வழங்க இருக்கிறது என்று தகுந்த ஜோதிடரிடம் சென்று தெளிவு பெறுவது சுக்கிர திசையின் சாதக-பாதகங்களை எதிர்கொள்ள உதவியாய் அமையும். இதை உதாரண ஜாதகங்கள் மூலம் இன்றைய பதிவில் அலசுவோம்.  

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 26 வயது நிரம்பிய ஒரு ஆண். ஜாதகருக்கு 2015 முதல் சுக்கிர திசை நடப்பில் உள்ளது. சுக்கிரன் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி ராசிக்கு 8 ல் பாவிகள் தொடர்பில் ஆட்சி பெற்று வக்கிரமாகி நிற்கிறார். இந்நிலையில் சுக்கிரனுக்கு பாதக வலு கூடும். இதனால் சுக்கிர திசை ஜாதகருக்கு பெண்கள், இல்லற வகையில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கால புருஷனுக்கு 7 ஆமிடமாகிய துலாத்திலேயே சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது. சுக்கிர திசை ஜாதகருக்கு அவரது 41 ஆவது வயது வரை உள்ளது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போட இயலாது. சுக்கிரன் ரிஷபம், துலாம் ஆகிய இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் இரு வீட்டு பலனையும் வழங்குவார். ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் ஒற்றைப்படை பாவங்களிலுள்ள கிரக திசா-புக்திகள் நடக்க வேண்டும். குறிப்பாக காமத்திரிகோணங்கள் எனப்படும் 3, 7, 11 ஆமிட கிரகங்களின் திசா புக்தியோடு குடும்பம் அமைவதை குறிக்கும் 2 ஆமிடமும்  தொடர்பாக வேண்டும்.

களத்திர பாவாதிபதியும் ஆயுள்  காரகருமான சனி 8 ல் மூலத்திரிகோண வலு பெற்றது ஆயுள் ஸ்தானத்திற்கும் களத்திர வகைக்கும் சிறப்பே எனினும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணத்தை தாமதப்படுத்துவார் எனலாம். எனவே ஜாதகர் சுக்கிர திசையின் துலாம் ஆதிபத்திய காலம் முதல் 1௦ வருடம் முடிந்து 2 ஆவது ரிஷப ஆதிபத்திய காலத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் சில காலமுள்ளது. இப்போது அதற்கான முயற்சி எடுத்தால் ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரன் பிரிவினையையும் அவமானத்தையும் தருவார். லக்னத்திற்கு 8 ல் நிற்கும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பது திருமண தடையையும் மீறி முயன்றால் அவமானத்தை தரும். (8 ஆமிடம் அவமானம்). கோட்சார சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தை தாண்டி ஜென்ம சனியாக மீனத்தில் சஞ்சரிக்கும்போது, லக்னத்திற்கு 5 ல் நின்று லக்னத்தையும் 9,11 பாவங்களையும் பார்க்கும் குருவின் புக்தியில் திருமணம் செய்வதே நல்லது. தற்போது திருமண செய்வித்தால் அது அவமானத்தை ஏற்படுத்தி அதன்  விளைவாக பிரிவினையை தரும்.

சுக்கிர திசை சந்திர புக்தி நடக்கும் ஜாதகருக்கு தற்போது திருமண ஏற்பாடு நடந்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜாதகருக்கு தொழில் சிறப்பில்லை என பெண் வீட்டார் திருமணத்தை நிறுந்திவிட்டனர். ஜாதகர் இதனால் பெருந்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார். அவமான ஸ்தானமான ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரனும் சந்திரனும் தங்களுக்குள் சஷ்டாஷ்டகமாக (6-8 ஆக) அமைந்துள்ளனர். இதுவே ஜாதகருக்கு பெருந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனன சுக்கிரன் வக்கிரமாகி தற்போது கோட்சாரத்தில் லக்னத்தின் 7 ஆமதிபதி சனியும் வக்கிரத்தில் உள்ளதால் பெண் வீட்டார் பின்வாங்கிவிட்டனர். சுக்கிரன் மனைவியை குறிப்பதோடு மூத்த சகோதரியை குறிப்பவர். ஜாதகருக்கு அவரது மூத்த சகோதரிதான் பெண் பார்த்துள்ளார். இதனால் மூத்த சகோதரி ஏற்பாட்டாலும், திருமணதிற்கு பார்த்த பெண்ணின் மூலமும் ஜாதகருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் சுக்கிரனின் காரக உறவுகளான மூத்த சகோதரி, அத்தை ஆகிய சுக்கிரனின் காரக உறவுகள் ஜாதகரின் திருமண விஷயத்தில் தலைடாமல் பார்த்துக்கொள்வது பெருமளவு ஜாதகருக்கு ஏற்படும் அவமானங்களை குறைக்கும்.     

கீழே மற்றொரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 3௦ வயதான ஒரு பெண். இந்த ஜாதகிக்கு 2008 முதல் சுக்கிர திசை நடக்கிறது. தற்போது திசையின் இரண்டாவது பகுதியில் உள்ளார். ராசி மீனமானாலும் லக்னம் கும்பமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் முந்தைய ஜாதகம் போல சுக்கிரன் இங்கு கடுமை காட்ட மாட்டார். சுக்கிரன்  கும்ப லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாவதால் ராஜ யோகாதிபதியாவதுதான் காரணம். லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதியானாலும் அவர் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். மீன ராசிக்கு 3, 8 க்கு உரியவராகி ராசிக்கு 8 ல் நிற்பதுவும் சுக்கிரன் தனது திசையின் ஒரு பகுதியில் சிரமங்களை ஏற்படுத்துவார் எனலாம். சுக்கிரன் இங்கு முதலில் ஆராய்ந்த ஜாதகத்தில் போலன்றி பாவிகள் தொடர்பின்றி நிற்கிறார். இதனால் சுக்கிரன் ஏற்படுத்தும் சிரமங்கள் ஜாதகி பொருத்துக்கொள்ளுமளவு அல்லது வெளியில் தெரியாத அளவில் இருக்கும் எனலாம். களத்திர பாவாதிபதி சூரியன் ராகுவோடு லாபத்தில் தொடர்பு பெற்று 7 ல் நிற்கும் தனித்த குருவோடு பரிவர்த்தனை பெறுவதால், சுவாதி-4 ல் ராகு சாரத்தில் நிற்கும் சுக்கிரன் இந்த ஜாதகிக்கு பாதகத்தை, திருமண வாழ்வை தடைபடுத்துவதன் மூலமே தருகிறார். தாம்பத்ய ஸ்தானமான  12 ல் ஆட்சி பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் 2 ஆமிடத்தையும் 1௦ ஆம்  பார்வையால் திசாநாதன் சுக்கிரனையும் கட்டுப்படுத்துகிறார். இதனால் திருமணம் மூலம் ஜாதகிக்கு  பாதகம் ஏற்படுத்துவதை தவிர்க்க திசா நாதன் சுக்கிரனுக்கு சனி தனது 1௦ ஆம்  பார்வையால் உத்தரவிடுகிறார்.    

தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதியாக திசாநாதன் சுக்கிரனே வந்து, தந்தையை குறிக்கும் சூரியனே 7 ஆமதிபதியாகி 11 ஆமிட குருவோடு பரிவர்தனையாகவதால் இந்த ஜாதகிக்கு திருமண வாழ்வில்  ஏற்படவிருக்கும் சிரமங்களை கணவருக்குப்பதில் சூரியனாகிய தந்தை வாங்கிக்கொள்கிறார். எவ்வாறெனில், ஜாதகியின் தந்தைக்கு, குரு குறிக்கும் குடும்ப வகையிலும், பொருளாதார  வகையிலும் இழப்பு ஏற்பட்டது. சுக்கிர திசையில் 2 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் பெற்ற சனி புக்தியில் ஜாதகியின் 3௦ ஆவது வயதில் தற்போது தாமதமாக திருமண வாழ்வு கூடி வந்துள்ளது. மீன ராசி சுக்கிர திசை என்றாலும், சுக்கிரன் லக்னாதிபதி சனிக்கு நட்பென்பதால் தீவிர பாதகத்தை ஜாதகிக்கு ஏற்படுத்தவில்லை. அது தாங்கிக்கொள்ளும் அளவிலேயே இருந்தது. ஏழரை சனியில் களத்திர வகையில் ஜாதகிக்கு ஏற்படும் சிரமங்களும்  களத்திர பாவாதிபதி பரிவர்தனையாவதால் திசை மாறிவிடும்.  

எனவே சுக்கிர திசை மீன ராசிக்கு ஏழரை சனியில் திருமண வாழ்வில் பாதகத்தையே செய்யும் என்று பொதுவாக எண்ணி கலங்க வேண்டாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 30 September 2021

யாருக்கோ திருமணம் – பகுதி இரண்டு!

கடந்த பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு வருகிறது. கடந்த பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.


சூரிய-சுக்கிர இடைவெளி அதிகமிருப்பவர்களின் கவனம் பெரும்பாலும் பொருளாதாரத்தை நோக்கிய திசையில் இருப்பதை நடைமுறையில் காணமுடிகிறது. சுக்கிரன் சூரியனை விட்டு அதிக தூரம் விலகி விடுவதால் சுக்கிரனின் காரகமான இல்லற நாட்டமும் இத்தகையோரை விட்டு விலகி விடுவதாகவே தோன்றுகிறது. இயல்பான இத்தகைய எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்கள் ஒருவரை ஆக்கிரமிக்கின்றன எனில் எதிர்மறை எண்ணங்களுக்குரிய  ராகு-கேதுக்களின் பிடியில் இத்தகையோர் அகப்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். சுக்கிரனின் காரகங்கள் பாதிப்புக்குள்ளாகும் அதே வேளையில் இவர்களின் எதிர்பார்ப்புகள் பொருளாதாரத்தின் பக்கம் திசை திரும்பி விடுகிறது. மேலும் துணை பற்றிய எண்ணம் குறையும்போது அதற்காக தனக்கான துணையை தேர்ந்தெடுப்பது பற்றிய எண்ணங்களை வளர்ப்பதற்குப் பதில், தனது எண்ணைகளை ஒத்த ஒரு தன்பாலினரையே நாடுகின்றனர் என்பதுதான் இத்தகைய ஜாதக அமைப்பினரின் விபரீதம். இத்தகைய எண்ணம் ஏற்படும் சூழலில் மற்றவர்களைவிட தனித்து தெரிவதற்காக தங்களது தோற்றத்தில் சில வித்தியாசமான அமைப்புகளையும்  இவர்கள் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 1980 ல் பிறந்த ஒரு ஆண். இவருக்கு சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 பாகைகளாக உள்ளது. களத்திர காரகன் சுக்கிரன் 8 ல் மறைந்தாலும் தன் வீட்டில் ஆட்சி பெறுவதும், 7 ஆமதிபதி செவ்வாய் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் வீட்டை தனது 8 ஆம் பார்வையில் வைத்திருப்பதும் இவருக்கு குடும்ப வாழ்வை தருகிறது. ஆனால் இவர் குடும்பத்தோடு இணைந்திருப்பதை அது பாதிக்கிறது. ஜாதகர் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து வேலை செய்கிறார். இந்தியா வந்து சில மாதங்கள் குடும்பத்தோடு இருக்கும்போது கருத்து வேறுபாடு தலைதூக்குவதாக கூறுகிறார். ஜாதகருக்கு கடகத்தில் உள்ள ராகு திசை நடக்கிறது. இரட்டைப்படை ராசியில் நிற்கும் ராகு திசையை அடுத்து ஒற்றைப்படை ராசியில் உள்ள குரு திசை வரும் வரை இவர் நீடித்து குடும்ப தொடர்பில் இருப்பது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜாதகருக்கு இந்த நிலையை சொல்லி தெளிவுபடுத்தினால் போதும்.  

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்..


ஜாதகர் 1969 ல் பிறந்த ஒரு ஆண். முன் ஜாதகத்தில் பார்த்த சில அமைப்புகள் இதிலும் உள்ளன. இவருக்கும் சூரிய-சுக்கிர இடைவெளி 42 பாகைகள்தான். ஆனால் இவருக்கு திருமணம் ஆகவில்லை. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்தில் நீசம் பெற்று லக்னத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதகாதிபதி சனி, பாவ கர்த்தாரி தோஷம் பெற்ற 7 ஆமிடத்தையும் பார்த்துதான்.  ஜாதகர் திருமண காலத்தில் சுக்கிர திசையை கடந்துள்ளார். ஆனால் சுக்கிரன் 8 ஆமதிபதி செவ்வாயின் சாரம் பெற்று மிருகசீரிஷம்-2 ல் நின்று, பாதகாதிபதி சனியின் அனுஷம்-3 ல் இருந்து 8 ஆமதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் செவ்வாயின் 8 ஆமிட பார்வையின் பலனையே சுக்கிரன் வழங்க வேண்டியவராகிறார். களத்திர காரகன் சுக்கிரனுக்கு 8 ஆமிட செவ்வாய் தொடர்பு மறுப்பை தெரிவிப்பதால் ஜாதகருக்கு திருமண வாழ்வு மறுக்கப்பட்டுள்ளதை உணரலாம். இவருக்கு பரிகாரங்களோ வழிபாடுகளோ பலனளிக்காது.

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். சூரிய சுக்கிர இடைவெளி 42 பாகைகள். ஜாதகர் 5 , 10 க்குரிய சுக்கிர திசையில் திருமணம் செய்துகொண்டார். ஜாதகருக்கு கப்பலில் பணி. எனவே பல காலத்திற்கு பிறகுதான் குடும்பத்தோடு இணைவார். 5 ஆமிடம் என்பது 7 க்கு லாபமாக வரும் பாவம் என்பதால் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 1௦ ஆம் பாவம் என்பது 7 க்கு 4 ஆம் பாவமாக வரும் இரட்டைப்படை பாவமாகும். பொருளாதாரத்திற்கு சிறப்பை வழங்கும்  இரட்டைப்படை பாவங்கள் இல்லறதிற்கு சிறப்பல்ல. எனவே மனைவியை பிரிந்திருந்தார். அடுத்து வந்த சன்னியாசி கிரகமான கேது திசையும் இல்லற சிறப்பை தரவில்லை.  தற்போது 11 ஆமிடத்தில் இருந்து செயல்படும் புதன் திசையாவது குடும்பத்தோடு தன்னை இணைத்து வைக்குமா என எதிர்பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் சூரிய-சுக்கிர இடைவெளி பாதிப்பை தருவதற்கு திசா-புக்திகள் காரணமாகின்றன. கணவனை குறிக்கும் செவ்வாய்க்கு மனைவியை குறிக்கும் சுக்கிரன் பாதகம் பெற்றதும் இவரின் நிலைக்கு காரணம்.

ஜாதக ரீதியாக சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிகம் இருப்போர் எதிர்கொள்ளும் விளைவுகள்.

இத்தகைய ஜாதக அமைப்பினர் பலருக்கு சிறு வயதில்  பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் ஏனையோரைவிட மிக அதிகம். இதனால் அவர்களது எதிர்கால குடும்ப வாழ்வு பாதிக்கும். சிறு வயதில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தங்களது மகன்களை தவறான நபர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பது.

சிற்றின்ப ஆசை தலைதூக்கும் பதின்ம வயதில் தவறான நண்பர்களாலும், நவீன தொலை தொடர்பு சாதனங்களாலும் பாலியல் காட்சிகளை பார்த்து கெட்டுப்போகும் சிறார்களுக்கும் குடும்ப வாழ்வு பாதிக்கும். எனவே பெற்றோர் தங்கள் மகன்களின் நண்பர் வட்டாரத்தின்மீது ஒரு கண் வைத்திருப்பது மிக முக்கியம்.

இயல்பான மனிதர்களோடு பழகாமல் மிக வித்தியாசமான நபர்களை தங்களது ஆதர்ஷ நாயகனாக பாவித்தல் இவர்களது மன ஓட்டத்தை சொல்லும். 

சிறுவயதில் ஜாதகரை தனியாக இருக்க விடாமல்  குடும்பத்தோடும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பெரும்பாலான நேரங்களை செலவிட வைப்பது உதவிகரமாக இருக்கும்.

ஜாதகரை தொடர்ந்து ஓய்வு நேரங்களில் பல்வேறு வகை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு உட்படுத்துவது மிகுந்த பலனளிக்கும்.

அவசியமின்றி நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பக்கம் செல்வதை தடை செய்வதும், குறிப்பாக Video Games போன்றவற்றில் ஒருவரின் கவனம் செல்லாமல் தடை செய்வதும் அவசியம். பொதுவாகவே செயற்கை சாதனங்களை அதிகம் நாடுவோருக்கு இல்லற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதை சமீபதித்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்கிறது.

இயற்கையை நேசித்தல், புதிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல், மனவளக்கலை, யோகா, தியானம், தோட்டக்கலை, வீட்டு விலங்குகளை பராமரித்தல் இவற்றோடு திருவிழா போன்ற ஊர் பொது விஷயங்களில் ஜாதகரின் பங்களிப்பு இருக்குமாறு பார்துக்கொள்வது இத்தகையோரை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க பெருமளவில் உதவும்.

 தீர்வுகள்.

பல காலம் ஒரே இடத்தில் வசிப்பதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக இருக்குமென்பதால் இடமாற்றமும் இவர்களுக்கு சிறந்தது. 

இவர்களாக திருமணதிற்கு தயாராகும் முன் திருமணம் செய்விப்பது மணமுறிவுக்கு வழிவகுக்கும். எனவே ஜாதகர் தனது எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீண்டு வரும் வரை பெற்றோர் ஜாதகருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு இல்லற நாட்டம் குறைவு எனில் அவரது துணைவருக்கும் அதுபோன்றே ஜாதக அமைப்பு இருக்குமாறு தேர்ந்தெடுப்பது நன்று.

இதர ஜாதக அமைப்புகள் சாதகமற்று இருப்பின், அதிகமான சூரிய-சுக்கிர இடைவெளி  ஒரு சந்நியாசி யோகம் போல செயல்படும் என்பதை மேலே பார்த்த இரண்டாவது ஜாதகம் உணர்த்துகிறது. இத்தகையோர் குடும்பத்தோடு எப்போதும் இணைந்து இருப்பதை கிரகங்கள் அனுமதிக்காது. மீறி இருப்பின் பிரிவினையை தூண்டும் என்பதால் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து வெளியிடம் சென்று வேலை பார்ப்பது குடும்பம் பிரியாமல் இருக்க வழிவகுக்கும்.

இத்தகையோருக்கு உளவியல் சிகிச்சையே மிகுந்த பலனளிக்கும்.

வழிபாடுகள்.

வழிபாடுகளை பொறுத்தவரை ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரக அம்சங்களை வழிபடுவது பலனளிக்கும்.

இத்தகையோருக்கு சர்ப்ப தோஷம் இயல்பாகவே செயல்படும் என்பதால் சர்ப்ப தோஷங்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளும் உதவும்.

சிவன் கோவிலில் இரவு இறுதியாக செய்யப்படும் பள்ளியறை பூஜையில் ஜாதகரை பங்கேற்க செய்வது பலனளிக்கும்.   

ஜாதக ரீதியாக திசா-புக்திகள் சாதகமற்று இருப்பின் அதற்குரிய வழிபாடுகளை தகுந்த ஜோதிடரை நாடி தெரிந்து செய்வது பலன் தரும்.  

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Saturday, 25 September 2021

யாருக்கோ திருமணம்!

 

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவர். அதற்கு ஒரு ஜாதகரின் குண நலன்களை அறிந்து சாதகமான சூழலில் பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொருள். இதுவன்றி அவசரசப்பட்டு முன்னரே திருமணம் செய்விப்பது ஒருவரது இல்லறத்தில் சிக்கலை ஏற்படுத்தும். ஒருவரது குண நலனை புறந்தள்ளிவிட்டு சாதகமற்ற கிரக சூழலில், வசதி வாய்ப்புகள் ஏற்பட்டுவிட்டன என்பதை மட்டும் வைத்து திருமணம் செய்விப்பது பாதிப்பை ஏற்படுத்தும். திருமணதிற்கு ஒருவர் உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோ ரீதியாகவும் தயாராக இருக்கிறாரா என்று கவனித்து, அவரது எண்ணங்களை புரிந்து  பிறகு முடிவு செய்வதே நல்லது. கால மாற்றத்தில் இன்று நட்சத்திரப் பொருத்தங்களைவிட  கிரக ரீதியான மற்றும் பாவ ரீதியான பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மேற்சொன்ன அனைத்தையும் விட, திசா-புக்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒருவரது திருமண வாழ்வு சிறக்க லக்னத்திற்கு 7 ஆமிடமும் ஏழாமதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது அவசியம். இதனோடு கால புருஷனுக்கு 7ஆமிடமான துலாமும் அதன் அதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது மிக அவசியம். இவற்றில் பாதிப்பிருந்தால் ஒரு ஜாதகரது திருமண வாழ்வில் சிரமங்கள் ஏற்பட திசா-புக்திகளின் அடிப்படையில் வழியுண்டு. முக்கியமாக இல்லற இன்பத்தின் அதிபதி என்று கூறப்படும் சுக்கிரன் நிலை கவனிக்கப்பட வேண்டும். ஆனால் சுக்கிரன் உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனிடமிருந்தே ஒளியைப்பெற்று பிரதிபலிக்கின்றன. சூரியனுக்கு சுக்கிரனுக்கும் அதிக பட்சமாக்க 46 பாகைக்கும் சற்று கூடுதலாக அமையும். இவ்விடைவெளி 4௦ பாகைக்கு மேற்படின், அங்கு சுக்கிரனின் காரகங்கள் பாதிக்கப்படும்.  இது மிக நெருக்கமாக அமைந்தாலும் சுக்கிரனின் காரகமான இல்லறம் பாதிக்கப்படும். இந்த இரு நிலைகளிலும் சுக்கிரன் பாதிக்கப்படும் அதே வேளையில் சூரியனின் காரகங்கள்  தீவிரமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே இல்லாத ஒருவர் தொழிலில் சிறப்பாக பொருளீட்டுவது யாருமே இல்லாத ஊரில் யாருக்காக டீ ஆற்றுகிறார் என்ற நிலையை தரும்.   

எனவே சூரிய –சுக்கிர இடைவெளி சரியான அளவில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இந்த சூரிய சுக்கிர இடைவெளி அளவு, தற்போதைய நவீன பாகை முறை ஜோதிடத்தில் ஒருவரது திருமண வாழ்வை எடை போடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.  

முதலாவதாக ஒரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ஜாதகத்தில் சூரியனுக்கும் சுக்கிரனுக்குமான இடைவெளி அதிக பட்ச இடைவெளியில் 46 பாகைக்குமேல் உள்ளது. இவருக்கு திருமணம் பற்றிய எண்ணமே மிக குறைவாக உள்ளது. இவரை வீட்டோர் பெண் பார்க்க அழைத்துச்  செல்லுமிடத்தில் யாருக்கோ திருமண ஏற்பாடு நடப்பது போன்று நடந்துகொள்வதாக வீட்டோர் கூறுகிறார்கள். சூரியன் சுக்கிரன் இடை வெளி 4௦ பாகைகளுக்கு மிகுந்ததால்தான். இது போன்ற மனோ நிலை ஒரு ஜாதகருக்கு ஏற்படும். இவ்வமைப்பில் எந்த கிரக திசா-புக்தி நடந்தாலும் இவர்களின் மனோபாவம் பெரிதாக மாறிவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிக பட்ச சூரிய சுக்கிர இடைவெளி அமைபவர்களுக்கு இடது கை பழக்கமும், தன்பால் ஈர்ப்பும் (Homo sex), ஒரு காதில் கடுக்கண்  போடுவது போன்ற  வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு விருப்பமின்றி திருமணம் செய்து வைத்தால்  மண முறிவு ஏற்படும். மேற்கண்ட ஜாதகர் ஒரு காதில் கடுக்கண் போட்டுள்ளார். சுய தொழில் செய்யும் 32 வயதாகும் ஜாதகருக்கு இதுவரை திருமணம் நாட்டம் வரவில்லை. அதனால் திருமணமும் நடக்கவில்லை.

கீழே இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்த ஜாதகை 1985 ல் பிறந்தவர. 36 வயதாகும் ஜாதகிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தன, குடும்ப காரகரான விரையாதிபதி குரு லக்னத்தில் நீசமானதால், குடும்ப வறுமை இவரை வாட்டியுள்ளது. இவர் வேலை செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவராக இருக்கிறார். இவரது ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிக பட்ச இடைவெளியான 46 பாகையில் இருப்பதை கவனியுங்கள். இவ்வமைப்பு இயல்பிலேயே ஒருவருக்கு இல்லறத்தில் நாட்டக்குறைவை அல்லது அதை நோக்கி செல்வதை தடை செய்யும் வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும். இந்த ஜாதகி தந்தையின் வறுமையே தான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமைக்கு காரணம் என்கிறார். சிரம காலத்திலும் தன்னை நாடி வந்த காதல்  மற்றும் திருமண  வாய்ப்புகளை புரந்தள்ளி உள்ளார். தற்போது தந்தை காணாமல்போய்  விட்டார். சூரியன் இந்த ஜாதகத்தில் 12 ல் மறைந்து லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாகவும் வருகிறார். இதனால் சூரியன் தனது காரகதுவ அடிப்படையில் ஜாதகியின் வாழ்வை பாதித்துள்ளது. தனது தந்தை உயிரோடு இருந்தால் நிச்சயம் தங்களை தொடர்புகொள்ளாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார். 36 வயதில் தற்போதுதான் தனக்கு திருமண நாட்டம் வந்துள்ளது என்கிறார். இதிலிருந்து அறிய வருவது, தோஷத்தை ஏற்படுத்தும் சூரியனின் அம்சமான  தந்தை, ஜாதகியை  விட்டு விலகியதால்தான் ஜாதகிக்கு திருமண எண்ணமே ஏற்பட்டுள்ளது. நீச குரு  தனது மூன்றாவது சுற்றை தற்போது கோட்சாரத்தில் நிறைவு செய்வதும் மற்றொரு காரணம். சூரியனிலிருந்து அதிக பாகை  இடை வெளியில், லக்னத்திற்கு 2 ல், பாதகாதிபதியோடு செவ்வாயோடு இணைந்து  நிற்கும் சுக்கிரன், பொருளாதார அடிப்படையில் குடும்ப வாழ்வை பாதிக்கிறார். காரக கிரகங்கள் பகையாகவும், பாதிப்பான நிலையில் இருப்பதாலும் ஜாதகியின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது..

கீழே மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.

இந்த ஜாதகர் 1987 ல் பிறந்த ஒரு ஆண். 34 வயதான இவருக்கு இதுவரை  திருமணமாகவில்லை. ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளியானது அதிக பட்ச இடைவெளியான 46 பாகை என்பதை கவனியுங்கள். இதனால் இவருக்கு  இயல்பாகவே இல்லற நாட்டம் குறைவு. இவருக்கு திருமண அமைப்பை பற்றி ஜாதகம் பார்த்தபோது ஜாதகரின் சார்பாக அவரது நண்பர்தான் பேசினார். ஜாதகர் யாருக்கோ திருமண வாழ்வு பற்றி கேட்கிறார்கள் என்ற ரீதியில் தனது திருமண அமைப்பை பற்றி ஜோதிடரிடம் பேசக்கூட முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்காவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1988 ல் பிறந்த ஒரு ஆண். சூரியன் சுக்கிர இடை வெளி 4௦ பாகையாக உள்ளது. ஆனால் இதில் ஒரு சிறப்பு சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகியுள்ளனர். சூரியன் கால புருஷனுக்கு 7 ஆமிடத்தில் நீசம் பெற்ற நிலையில் பரிவர்தனையாகியுள்ளது. பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதால் ஜாதகர் மிக நேர்த்தியான தோற்றம் கொண்டவர். குடும்ப காரகன் குரு 8 ல் வக்கிரம்  பெற்று 2 ஆமிடத்தை பார்ப்பதால் நல்ல வேலையில் சிறப்பான சம்பாத்தியத்திலும் இருப்பவர். பேச்சு சாதுர்யம் மிக்கவரும் கூட. இவருக்கும் திருமண ஆசை இல்லை. ஆனால் குறுக்கு வழியில் காம சுகத்தை திட்டமிட்டு அனுபவிப்பவர். காரணம், கால புருஷனுக்கு 7 ல் 11 ஆமதிபதி நீசம் பெற்றதாலும், பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதாலும்தான். 32 வயதை கடந்த ஜாதகர் முறையான திருமண வாழ்வு தனக்குத் தேவையில்லை என்கிறார்.

இப்பதிவில் நாம் அலசிய ஜாதக அமைப்பினருக்கான தீர்வுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Saturday, 18 September 2021

மருத்துவ நுழைவுத்தேர்வு எதிர்பார்ப்பும் கொடுப்பினையும்!

 


மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி நிலையங்களை நாடுகின்றனர். இப்பயிற்சி நிலையங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் நிலை  சாமான்யர்களின் வாரிசுகளுக்கு கிடைப்பதில்லை. இதனாலும் சாமான்யர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இக்குறையை தீர்க்க மத்திய அரசு கல்வியில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து   இந்தியா முழுமையிலும் முதன்மை பாடங்கள் எனப்படும் (core subjects ) கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவைகளை அனைத்து மாநிலங்களிலும் CBSC, STATE BOARD,ICS போன்ற அனைத்து கல்வித்துறையிலும்  ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தலாம். மாநிலங்கள் தங்களது மொழி, கலாசாரம், வரலாறு போன்ற இதர பாடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என ஒரு நடைமுறையை கொண்டு வரலாம். தற்போது அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படி கொண்டுவந்தாலும் பாடத்திட்டத்தை விட்டு விலகிய கேள்விகள் நுழைவுத்தேர்வில் கேட்கப்படக்கூடாது என்ற நிலையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் OUT OF SYLLABUS எனும் கேள்விகள் மூலம் தனம் படைத்தோரின் வாரிசுகள் குறுக்கு வழியில் வாய்ப்பு பெற அது  வழி வகுக்கும். பயிற்சி தேவைப்படாமல் திறமையுள்ளோர் அனைவரும் பாடத்திட்டத்தின் மூலமே மருந்தவம் பயில வகை செய்தால் மட்டுமே அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பது சாத்தியமாகும். மாநில அரசுகள் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய கோருவது இத்தகைய முரண்பாடுகளாலும், தாங்கள் சம்பாதிக்கவுமே என்பதை அனைவரும் அறிவர். நமது இன்றைய பதிவில் மருத்துவராக ஜாதக அமைப்பு என்ன என்பதை நமது முந்தைய பதிவுகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் கூறுவதே. தங்களது வாரிசுகளுக்கு உள்ள கல்வி அமைப்பை அறிந்து பெற்றோர்கள்  செயல்பட்டால் பல மாணவ மணிகளின் உயிரை காப்பாற்றலாம் என்ற அடிப்படையில் இப்பதிவு வருகிறது.

 மருத்துவராவதற்குரிய கிரகங்கள்:

மருத்துவத்தின் காரக கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், ராகு-கேதுக்கள் ஆகியவை கூறப்பட்டாலும் சூரியனே மருத்துவத்தின் முதன்மை கிரகமாகும். ஒரு ஜாதகரை மருத்துவர் நிலைக்கு கொண்டு வருவதில் சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் பங்கு முக்கியமானது.

நோய் பாவம் 6 என்றால், நோயிலிருந்து மீழ்வதை 6 ன் விரைய பாவமான ஐந்தாம் பாவம் குறிப்பிடும். குறிப்பாக கால புருஷனின் 5 ஆம் பாவாதிபதி சூரியனின் வலுவே ஒருவர் நோயிலிருந்து குணமாவதை குறிக்கிறது. சூரியனே உயிர்களுக்கு சக்தி கேந்திரம். எனவே சூரியனின் அமைவு மருத்துவ துறைக்கு முதன்மையானது. சூரியனின் கதிர் வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

செவ்வாய் அறுவை சிகிச்சைக்கு அதிபதி என்பதோடு, செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியும், கால புருஷனின் ஆயுள் பாவமான விருட்சிகத்திற்கும் அதிபதியாகிறார். எனவே உயிர் காக்கும் துறையான மருத்துவத்திற்கு செவ்வாய் முக்கிய காரக கிரகமாகிறார்.

ஒருவர் துன்பங்களிலிருந்து விடுபடுவதை 5 ன் பாவத் பாவமான 9 ஆம் பாவம் குறிப்பிடும். மேலும் உயர் கல்வி பாவம் என்பது 9 ஆம் பாவமே. இதன் அடிப்படையில் ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் கால புருஷனின் 9 ஆமதிபதி குருவின் அருளாசி முக்கியம்.

சூரியன், செவ்வாய், குரு மூன்றும் நெருப்பு ராசிகளுக்கு அதிபதிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஒளியே ஆரோக்யத்தை வழங்குகிறது. மாறாக இருள் வியாதியை தருகிறது.

ஒருவர் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனே. எனவே சந்திரன் செவ்வாயுடன் அல்லது செவ்வாயின் வீட்டுடன் தொடர்பு பெறுவது நன்று.

மருத்துவராவதற்குரிய பாவங்கள்:

பாவங்களில் 1,6,1௦ ஆகிய பாவங்களிளோடு செவ்வாய், சூரியன், குரு ஆகிய நெருப்பு ராசி கிரகங்களின் தொடர்பு மருத்துவத்திற்கு சிறப்பான அமைப்பாகும்.

மேற்சொன்ன அனைத்தையும் விட மிக சாதகமான திசா-புக்திகள் உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் காலத்தில் வர வேண்டியது அவசியம்.  

கீழே  ஒரு ஜாதகம்.

 


ஜாதகி 1998ல் பிறந்தவர். 12 ஆம் வகுப்பு முடித்து NEET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஒதுக்கீட்டில் 2016 ஆமாண்டு மருத்துவக்கல்லூரி சென்றவர். இவ்வருடம் MBBS முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார். இதில் மேற்சொன்ன விதிகளின் செயல்பாடுகளை காண்போம்.  லக்னமே செவ்வாயின் விருட்சிகமாகி, குரு மற்றும் சந்திரனின் பார்வையை லக்னம் பெறுகிறது. உச்ச சந்திரன் 1௦ ஆமதிபதி சூரியனின் கார்த்திகை-4 ல் நிற்பதால் 1௦ ஆமதிபதி சூரியன் வலுவடைகிறார். சூரியனை குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜீவன பாவமான 1௦ ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-3 ல் செவ்வாய் நிற்கிறார். திசா நாதன் ராகுவே மருத்துவ காரக கிரகங்களில் ஒன்றாகி தனித்த நிலையில் சூரியனின் வீட்டில் நிற்பதால்  சூரியன் போன்றே செயல்படும். இந்த அமைப்பால் ஜாதகி மருத்துவரானார். குறிப்பாக கல்லூரி செல்லும் காலத்தில் ராகு திசையில் இருப்பதுதான் ஜாதக கொடுப்பினையை அனுபவிக்க முக்கிய காரணம்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.


இவர் 2000 ல் பிறந்த ஒரு மாணவி. இவர் கடந்த இரு வருடங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுகிறார். தற்போதும் எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார். ஜாதகிக்கு செவ்வாய் திசை கடந்த ஆண்டு இறுதிவரை நடந்தது. குரு செவ்வாயையோ, சூரியனையோ பார்க்கவில்லை. ஆனால் செவ்வாயின் வீடான விருட்சிகத்தை 12 ல் மறைந்த நிலையில் பார்க்கிறது. செவ்வாய் சந்திரனின் வீட்டில் நீசமாகி திசை நடத்துவதால் ஏற்பட்ட உந்துதலாலேயே ஜாதகி மருத்துவம் படிக்க எண்ணியுள்ளார். செவ்வாய் 1, 6, 1௦ பாவங்களோடு தொடர்புகொள்ளவில்லை. செவ்வாய், சூரியன், குரு ஆகியவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பாகவில்லை. தற்போது ஜாதகிக்கு செவ்வாய் திசை முடிந்து ராகு திசை துவங்கியுள்ளது. ஜாதக அமைப்பு சாதகமாக இல்லை என்பதால் ராகு திசையிலும் இந்த ஜாதகிக்கு மருத்துவம் பயில வாய்ப்பு இல்லை எனலாம்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1990 ல் பிறந்த ஒரு ஆண். இவர் MBBS முடித்து, மனநல மருத்துவத்தில் MD முடித்து அதிலேயே DM முடித்து அரசு மருத்துவராக பணிபுரிகிறார். ஜாதகத்தில் செவ்வாய் 1௦ ஆமதிபதி சந்திரனின் ரோஹிணி-2 ல் நின்று விருட்சிகத்தை பார்க்கிறார். உச்ச குருவும் விருட்சிகத்தை பார்க்கிறார். சூரியன் 1௦ ஆமதிபதி சந்திரனின் தொடர்புடன் 12 ல் சுய சாரத்தில் உத்திரம்-2 ல்  உள்ளார். இந்த அமைப்பால் இவருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு உள்ளது. இவர் மருத்துவம் பயில திசா-புக்திகள் எப்படி அனுமதித்தன என காண்போம். சந்திரன் ஹஸ்தம்-2 ல் சுய சாரம் பெற்றுள்ளார். எனவே பிறப்பு திசை சந்திர திசை. பிறகு செவ்வாய் திசை கடந்து 2003 முதல் 2021 வரை ராகுவின் திசை. இந்த ராகு திசையில்தான் ஜாதகர் மருத்துவம் பயின்றார். காரணம் ராகு 1௦ ஆமதிபதி சந்திரனின் திருவோணம்-1 நிற்கிறார். 1௦ ஆமிட தொடர்பு பெற்ற ராகு ஜாதகருக்கு மருத்துவம் கல்வியை வழங்கி மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது. மருத்துவத்தை பொறுத்தவரை ராகு-கேதுக்களின் பங்கு முக்கியமானது. சந்திரன் சாரம் பெற்றதால் ராகு, சந்திரன் குறிக்கும் மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது.

நான்காவது ஜாதகம் கீழே.

இவர் 2002 ல் பிறந்த ஒரு பெண். இவரும் இருமுறை மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி இரண்டாவது தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளார். லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று சூரியனும் செவ்வாயும் குருவோடு சிறப்பாக இணைவு பெற்று அமைத்துள்ளது. இது மருத்துவம் பயில சிறப்பான ஜாதக அமைப்பாகும். ஆனால் இவரால் இருமுறையும் சிறப்பாக தேர்வெழுத முடியவில்லை என்கிறார்.  காரணம் ஜாதகிக்கு இவ்வாண்டு ஜனவரி வரை சுக்கிர திசை நடைபெற்றுள்ளது. சுக்கிரன் லக்னத்திற்கு லாபத்தில் அமைத்திருந்தாலும் சுக்கிரன் 1௦ க்கு விரையத்தில் ரிஷபத்தில் நிற்கும் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. 1௦ ஆமிடாதிபதியோடுதான் சுக்கிரனுக்கு தொடர்புள்ளதே தவிர 1௦ ஆமிட கிரகங்களோடு அல்ல. ஜனன கால புதன் மீது கோட்சார ராகு அமர்ந்திருந்த நிலையில்  கடந்த ஆண்டு சுக்கிர திசையில் ஜாதகிக்கு மருத்துவ வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது சூரிய திசையில் ஜாதகி இரண்டாவது முறையாக தேர்வெழுதியுள்ளார். சூரியன் திக்பலம் பெற்று நிற்கும் நிலையில் தற்போது வாய்ப்பு உள்ளதை மறுக்க இயலாது. ஆனால் சூரியன் 10 ல் நின்று திசை நடத்தினாலும் அவர் 9 ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். எனவே சூரியன் தனது வலுவை 9 ஆமிடதிற்கே செயல்படுத்துவார் எனலாம். கன்னி லக்னத்திற்கு சூரியன் விரையாதிபதியாகி, 8 ஆமதிபதி செவ்வாய்  மற்றும் பாதகாதிபதி குருவின் இணைவில் உள்ளார். மேலும் செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதி என்பதோடு, ராசிக்கு விரையாதிபதியும் ஆவதால் திசாநாதன் சூரியனைவிட அதிக பாகை பெற்று நிற்கும் செவ்வாய் ஜாதகி மருத்துவராக அனுமதிக்க மாட்டார் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

விரைவில் மீண்டுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 25 April 2021

எவனோ ஒருவன் வாசிக்கிறான்!

 


வாழ்வில் சில முறை நாம் சன்னியாசிகளை பார்த்து அவர்களால் சில எண்ணங்களை மனதில் பதிய வைத்திருப்போம். அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதன் மூலம் உலகத்தை காண்கிறார்கள். வட்டத்துக்குள் இருந்து உலகத்தை காண்பவர்களும் என்னதான் தனது முன்னோடிகளின் அனுபவ அறிவை புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் அவர்களுக்கும் நிதர்சனமான உலகியல் அறிவு தேவைப்படுகிறது. அதனால்தான் சன்னியாசிகள் தேசாந்திரம் செல்கிறார்கள். சாதாரண மனிதன் அலைந்து திரிந்து அனுபவங்கள் பல பெற்று அதன் பிறகே வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை உணர்கிறான். இந்தக்கருத்தைக்கொண்டு பார்த்தால் சன்னியாசிகளின் அறிவைவிட சாமான்யனின் அறிவே சிறந்தது என்பது தெளிவு. ஆனால் சாமான்யன் தனது இல்லற பொறுப்புகளால் தள்ளாடுகிறான் அதனால் தனது அனுபவத்தால் பெற்ற அறிவைக்கூட சில சமயம்  குடும்ப பொறுப்புகளால் செயல்படுத்த முடியாதபடி திணறுகிறான். இந்த விஷயத்தில் சன்னியாசிகளுக்கு சாமான்ய மனிதனைவிட சிறப்புண்டு எனலாம். ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்வை குறுக்கிக்கொண்டு வாழும் இந்த சன்னியாசிகளுக்கான ஜாதக அமைப்புகளை ஆராயவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஒரு எண்ணமிருந்தது. சன்னியாசம் எனும் புயலின் மையத்தில் தற்போது நிலைகொண்டுள்ள ஒரு ஜாதகம் மூலம் இது தொடர்பான  விஷயங்களை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். அதுவும் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர் பிறந்த நாளில் இப்பதிவு வருகிறது என்ன பொருத்தம் பாருங்கள்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


21 வயதான இந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் துறவியாக மாறி பாலைவன மாநிலமொன்றில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்.  தமிழ்நாட்டின் முதன்மை தென்மாவட்ட தலைநகரில் வசித்துவரும் ஒரு வட  மாநில குடும்பத்தை சார்ந்தவர் இப்பெண். மேஷ லக்னாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்று  அதன் அதிபதி குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது மோட்சம், நீண்ட சிறைவாசம், அடைபடுதல், நோயால் படுத்த படுக்கையாக பல நாள் இருத்தல் மற்றும் இல்லற இன்பத்தை அனுபவிப்பதையும் (படுக்கை சுகம்)  குறிப்பிடும் இடமாகும். 12 ஆமிடம் மோட்ச ராசியாகி 12 ஆமதிபதி லக்னாதிபதியோடு பரிவர்த்தனை பெற்றதால் இந்தப்பெண் சன்னியாச வாழ்வை விரும்புகிறார். 12 ஆமதிபதி குரு பாதகாதிபதி சனி தொடர்பு பெற்று லக்னத்தில் அமைந்ததும், 12 ல் ஒரு பாவி செவ்வாய் அமைந்து 12 ஆமிட செவ்வாயை கேது தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் இங்கே படுக்கை சுகம் என்ற இல்லற சுகம் அடிபட்டுவிடுறது. மோட்ச பாவமான 12 ஆமிடத்தில் அமைந்த லக்னாதிபதியை கேது பார்ப்பது மோட்சத்தை முன்னிட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது வாழ்வை குறுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அடைபடுதலையும் குறிப்பிடுகிறது.

ஜாதகியை மோட்சத்தை நோக்கிய பாதையில் உந்தித்தள்ளிய காரணிகளை இப்போது ஆராய்வோம்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 அமைப்பில் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். இது பெற்றோர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பள்ளி செல்லும் காலத்தில் பெற்றோர்களின் தினசரி வாக்குவாதங்களை பார்க்கும் ஜாதகிக்கு குடும்ப வாழ்வின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது சாத்தியம். இதனால் இல்லறத்தை நினைத்து ஆசைகொள்ள வேண்டிய பருவ வயதில் ஜாதகிக்கு இல்லற வாழ்வின் மீது வெறுப்பு வந்தது நியாயமே. ஜாதகிக்கு கடந்த 2007 முதல் சுக்கிர திசை நடக்கிறது. ஜாதகி தனது நகரில் 8 ஆம் வகுப்பு வரை ஒரு உயர்தர ஆங்கிலப்பள்ளியில் படித்தார். அதன் பிறகு கும்பத்தில், லக்னத்திற்கு பாதகத்தில் நிற்கும் புதனின் சாரத்தில் கடகத்தில் ஆயில்யம்-4 ராகுவோடு இணைந்து நிற்கும் சந்திர புக்தியில் ஜாதகி தனது கல்வியை நிறுத்திவிட்டார். பாட்டியை குறிக்கும் கேது திசா நாதன் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். பெற்றோர்களின் சண்டையால் மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட ஜாதகிக்கு அவரது பாட்டி மன நிம்மதிக்காக மத நூல்களை படிக்கக்கொடுக்கிறார். பள்ளிக்கு செல்லாமல் மத நூல்களை படிக்கும் ஜாதகியை வீட்டில் யாரும் தொல்லை செய்யாதவாறு திசா நாதனை கட்டுப்படுத்தும் கேது கவனித்துக்கொள்கிறார். பாதக ஸ்தானத்தில் நிற்கும் 5 ஆமதிபதி சூரியனின் உத்திராடம்-4 ல் மகரத்தில் நின்று சுக்கிரன் திசை நடத்துகிறார். சுக்கிரனுடன் சன்னியாச கிரகம் கேது இணைந்துள்ளார். திசா நாதன் சுக்கிரனானாலும் அவர் தனது பகை கிரகமான சூரியனின் சாரம் பெற்று பாதக ஸ்தான தொடர்பும் பெற்றதால் ஒரு பருவ பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை கேது திசை மாற்றி அவருக்கு ஆன்மீக ஆசைகளை பாட்டி மூலம் தூண்டி விடுகிறார். இதனால் ஜாதகி தானொரு சன்னியாசி ஆக முடிவு செய்கிறார்.

தனது விருப்பத்தை ஜாதகி வீட்டில் தெரிவிக்கிறார். 5 ஆமிடம் ஒருவரின் ஆசையை குறிக்கும். அதனோடு தொடர்புடைய கிரக திசா-புக்திகள் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும். 5 ஆமதிபதி சாரம் பெற்ற சுக்கிர திசையில் இல்லற ஆசையை கேது தடை செய்தாலும் தனது காரகமான ஆன்மீக ஆசை நிறைவேற உதவுகிறார். கேதுவும் ஆசையை குறிக்கும் கிரகமாகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்பமாக வசிக்கும் ஜாதகியின் வீட்டில் ஏற்கனவே ஜாதகியின் பெரியப்பா ஒருவர் தனது இல்லறக்கடமைகளை நிறைவேற்றிய பிறகு சன்னியாசியாகி இருந்தார். இதனால் ஜாதகியின் சன்னியாசி ஆசைக்கு குடும்பத்தில் தாயாரைத்தவிர இதர அன்பர்கள் அனுமதி தந்தனர்.

ராகு-கேதுக்களின் அச்சும் – கிரகண தோஷமும்.

தாயார் மறுக்கக்காரணம் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு வெளியே சந்திரன் நிற்பதுதான். ராகுவை விட்டு சந்திரன் பாகை அடிப்படையில் விலகி இருந்தாலும் சந்திரன் ராகுவுடன் மோட்ச ராசியான கடகத்திலேயே நிற்பது அதன்  வலுவற்ற தன்மையை குறிக்கிறது. ஜாதகி பௌர்ணமியில் பிறந்துள்ளார். ராகுவுடன் சந்திரன் பௌர்ணமியில் இணைந்திருப்பது கிரகண தோஷமாகும். மனதை குறிக்கும் சந்திரனின் ராசியில் ராகு-கேதுக்களின் தொடர்பில் சந்திரன் நிற்பதால், ஜாதகியின் மனதை ஆளும் தகுதியை ராகு-கேதுக்கள் பெற்றுவிடுகின்றன. ஆனால் ஆட்சி பெற்று நிற்கும் சந்திரன் ஜாதகியின் வாழ்க்கையை காப்பாற்ற தன் மீது விழுந்துவிட்ட ராகு-கேதுக்களின் நிழலை மீறி போராடுகிறார். சந்திரன் ஜாதகத்தின் அதிக பாகை பெற்று (29 பாகை) நிற்கிறார். இதனால் அவர் ஆத்ம காரகனாகி வலுவுள்ளவராகவே உள்ளார். ஆனால் சந்திரனின் வலுவை கிரகண தோஷம் தவிடு பொடியாக்குகிறது. இதனால் சந்திரனின் காரக உறவான ஜாதகியின் தாயாரின் வார்த்தையை வீட்டில் அனைவரும் நிராகரிக்கின்றனர். அனைத்து கிரகங்களும் ராகு-கேதுக்களின் அச்சுக்குள் நிற்கும்போது சந்திரன் மட்டும் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி நிற்கிறார். இதன் பொருளாவது ஜாதகியின் உலகத்திற்குள் தாய் செல்ல முடியாது என்பதாகும்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 ஆக அமைந்த சூழலில் சந்திரன் அதிக பாகை பெற்று ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவும் சூரியன் குறைந்த பாகை (6 பாகை) பெற்று தாரா காரகனாகவும் உள்ளனர். இதனால் தந்தை தாய்க்கிடையே கடும் மனப்பிரிவினை. சூரியன் பாதக ஸ்தானத்தில் 12 ல் நிற்கும் லக்னாதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு உள்ளே  உள்ளார். இதனால் தந்தையை மீறி தாயின் சொல்லை ஜாதகி ஏற்றுக்கொண்டுவிட இயலாது. சுக்கிர திசையில் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கும் குருவின் புக்தியில் ஜாதகிக்கு உள்ளூரில் சன்னியாச சடங்குகள் கடந்த 2019 இறுதியில் கேது, சனி, குரு ஆகியவை கோட்சாரத்தில் தனுசு ராசியில் ஒன்றாக இணைந்திருந்தபோது  நடந்தன. புக்தி நாதன் குரு குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் கேது சாரம் பெற்று நிற்பதை கவனியுங்கள். இது சன்னியாச வாழ்வுக்காக குடும்பத்தை ஜாதகி பிரிவதை குறிப்பிடுகிறது.

தற்போது ஜாதகி தங்களது மதத்தின் தலைமை இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாதகியின் தாய் தனது மகளை சன்னியாச வாழ்விலிருந்து மீட்கப்போராடுகிறார். ஜாதகி தற்போது சற்றே தனது மாயையிலிருந்து விடுபட்டு தனது தாயின் கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார். சன்னியாச வாழ்வை முழுமையாக்கும் முடி பிடுங்குதல் எனும் முக்கிய சடங்கு தற்போதைய கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜாதகியின் மத சம்பிரதாயப்படி முடியை மழிக்கமாட்டார்கள். முழுமையாக பிடுங்கிவிடுவார்கள். தலை முடியை பிடுங்கிவிட்டால் மீண்டும் சன்னியாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இல்லற எண்ணம் வராதபடி அது தவிர்த்துவிடும் என்பதே அதன் அடிப்படை. தற்போது ஜாதகி தன்னை யாராவது காப்பாற்றி மீட்டுச்செல்வார்களா என தனித்து விடப்பட்ட நிலையில் காலம் கடந்து தனது செயல்களை எண்ணி வருந்துகிறார். ஜாதகியின் தாய் தன் மகளை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா? என தமிழ்நாட்டிலிருந்துகொண்டு கதறுகிறார். தாய் தனது குடும்பத்தை மீறி, தனது சமுதாய விதிகளை மீறி தனது மகளை காப்பாற்ற செயல்பட்டால் தனது மதம் மற்றும் குடும்பத்திலிருந்து  தன்னை  ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அறிந்து மனதுக்குள் கதறிக்கொண்டுள்ளார். ஜாதகத்தில் லக்னாதிபதி 12 ஆமிடத்தில் அதன் அதிபதியோடு பரிவர்தனையானது ஜாதகி குடும்ப வாழ்வுக்கு திரும்ப முடியாது என்பதையே குறிப்பிடுகின்றன.

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.