Monday 5 November 2018

உயிரோடு விளையாடு.

2042 ஆம் ஆண்டில் அது ஒரு மழைக்கால ஞாயிற்றுக்கிழமை.
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முகப்பில் இராவின் அடையாளத்தை பரிசோதித்த காவலாளி ரிஷியை பார்த்து நமட்டு சிரிப்புச் சிரித்தான். ரிஷி அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்துவிட்டு இராவை உள்ளே அழைத்துச் சென்றான்.



ஸ்வீடனில் நாம் ஓரிடத்திற்குள் நுழையும்போதே 28 அடி தொலைவிலிருந்து நமது கண்களைப் பார்த்து அடையாளங்கள் உறுதி செய்து அனுமதிக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது தெரியுமா இரா. இங்கு அடுத்த ஆண்டு இறுதியில் அதை செயல்படுத்த ஆரம்பித்துவிடுவோம் நாங்கள் என்றான் ரிஷி.

முதலில் அதைச் செய் என்ற இரா “ஏய் ரிஷி நீ சொன்னபடி வலையில் அலசியதில் ஜோதிட சாகரம் என்றொரு ஜோதிட தகவல் பதிவு குழுவில் நீ ஈடுபாடு காட்டும் ஜோதிட விஷயங்களை 2018 லேயே அலசியிருக்கிறார்கள்” என்றாள்.

Interesting என்றான் ரிஷி.

ஆமாம் எதிர்கால திருமண சூழல், வாழ்க்கை முறைக்கான ஜோதிட காரணங்களை பழனியப்பன், சிவக்குமார், கீர்த்தி கணேஷ்  போன்ற அன்றைய மெம்பர்ஸ் அலசியிருக்கிறார்கள் என்றாள்.

"சரி வீட்டுக்கு வந்ததும் காண்பி" என்றான் ரிஷி.

ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு இரவு தனது பிரத்யேக தகவல் தொடர்பு திரைமுன் அமர்ந்தபோது தனக்கு வந்திருந்த அந்த தகவலை பார்த்தான் ரிஷி.

உடனே தொடர்புகொண்டான்.

எதிர்முனை “ ஹலோ” என்றது.

“ஐம் ரிஷி”

“ஓஹ் நைஸ் ஐம் மீனா” என்றது குரல்.

“உங்களது பதிலை பார்த்தேன். நாம் சந்திப்போமா”

“ஆம் சந்திப்போம்”

“நீங்கள் வேலை செய்யும் ஸ்கூல் எங்கு உள்ளது” என்றான் ரிஷி.

“மடிப்பாக்கம்”

“நான் வேளச்சேரி” என்றபடி அரைமணி நேரம் பேச்சு நீண்டது.

இறுதியாக ஞாயிறு மாலை 4 மணிக்கு சந்திப்பதாக முடிவானது.

சிறிது நேரங்கழித்து ஜோதிட சாகர பதிவுகளை எடுத்துக்கொண்டு ரிஷியை அணுகினாள் இரா.

“இன்னொருனாள் பார்த்துக்கலாம்” என்றான் ரிஷி.

“ ஏன் என்ன ஆச்சு?” என்றாள் இரா.

மீனாவின் செய்தியையும் பேசியதையும் கூறினான் ரிஷி.

 “என்னையும் அழைத்துப்போவாயா?” என்றாள் இரா. 

“ஷ்யூர்” என்றபடி அவளது கையைப்பிடித்து இழுக்க இரா அவன்மீது சரிந்தாள்.
மின்விளக்கை பார்த்து கண் சிமிட்டினான் ரிஷி.

விளக்கு அணைந்தது.

வெளியே வானம் தூறிக்கொண்டிருந்தது.

காலை டைனிங் டேபிளில் இருந்து கொண்டு இராவை பார்த்து இரைந்தான் ரிஷி.

“ஆபீசுக்கு டைம் ஆச்சு சீக்கிரம்”

“கொஞ்சம் வெயிட் பண்ணு” என இரா கூற ரிஷி டென்ஷனாகி திட்டினான்.

“என்ன மனுஷியா பாரு மிஷினா பார்க்காத” என்றபடி தட்டில் இட்லியை வைத்தாள் இரா.

இட்லியை விழுங்கிக்கொண்டு இராவை பார்த்த ரிஷி “போய் குளீங்கடி” என்றான்.

“நான் குளித்தால் நீதான் மச்சான் செலவு செய்யணும்” என்றாள் இரா.

“எல்லாம் என் தலை எழுத்து” என்று நெற்றியில் ரிஷி தட்டிக்கொள்ள இரா சிரித்தாள்.

ஞாயிறு மாலை இராவுடன் ரிஷி மீனாவை சந்தித்தான்.

“ஓஹ் இவள்தான் இராவா” என்று மீனா கூற,

இரா “இவள்தான் மீனாவா” என்று கூற ரிஷி இராவை அதட்டினான்.

ரிஷியும் மீனாவும் இரண்டரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மீனா அனாதையான தான் வளர்ந்த ஆஸ்ரமம், கல்வி, தற்போது அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் நிலை என தன்னைப்பற்றி அனைத்தையும் கூறினாள். ரிஷி தான் இன்ஜினியரிங்கில் தங்கப்பதக்கம் பெற்று சைண்டிஸ்ட் ஆக இருப்பது , கிராமத்தில் வாழும் தனது வயோதிக பெற்றோர். திருமணச் சூழல், ஜாதக தோஷம், இரா  என குற்ற உணற்சியில்லாமல் தன்னைப்பற்றி மறைத்துப் பேசாமல் உண்மையாக பேசினான். அப்படித்தான் பேச வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

கல்வியில் உயர்ந்து நல்ல வளமையான நிலையில் இருக்கும் ஒருவன் ஜாதகம், தோஷம் எனப் பேசுவதைப்பார்த்து மீனா ஆச்சரியப்பட்டாள்.



“என் பின்னணி எனக்குத் தெரியாது. தவறான உறவுக்கு பிறந்தவளாகக்கூட இருக்கலாம். எனக்கு ஜாதகமும் கிடையாது” என்றாள் மீனா. தனது பின்னணியை பாராமல் தன்னை மதித்து மணந்துகொள்ளும் ஒரு ஆண் மகனை எதிர்நோக்கி இருக்கும் தனது சூழலை மீனா கூறினாள்.

இறுதியாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவானது.

எளிய முறையில் தனது கிராமத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடித்து சென்னை திரும்பினான் ரிஷி. மீனா ரிஷிக்கு ஒரு அருமையான மனைவியாக வந்து வாய்த்தாள். மீனாவிடம் இயல்பான அதீத ஈர்ப்பு இருந்தாலும் ரிஷியால் இராவை சீண்டுவதை நிறுத்த இயலவில்லை.  ரிஷி மற்றும் மீனாவின் உணவு மற்றும்  ஆரோக்ய விஷயத்தில் இரா நிலைமை அறிந்து செயல்பட்டதால் மீனாவிற்கும் இரா மீது  ஒரு பட்சாதாபம் தோன்றியது. ஒருநாள் ரிஷியிடன் கேட்டேவிட்டாள் மீனா.

“இராவிற்கு மட்டும் குழந்தை பிறக்கும் என்றால் என்னை நீ தேர்வு செய்திருக்கமாட்டாய் தானே ரிஷி”

“ஓரளவிற்கு அது உண்மைதான் மீனு” என்றான் ரிஷி.

“அது என்ன ஓரளவிற்கு உண்மை” என்றபடி அவளது காதை திருகினாள் மீனா.
  
சரியாக எட்டு மாதம் கழித்து இன்னும் குழந்தை வாய்ப்புக்கான அறிகுறியே இல்லை என்பதை உணர்ந்து ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற விரும்பினான் ரிஷி.

இராவை அழைத்து அன்னைக்கு ஜோதிட சாகரம் என்று கூறினாய் அல்லவா அவர்களில் ஒரு ஆக்டிவ் ஜோதிடரை தொடர்புகொண்டு எனது ஜாதகத்தை அனுப்பி பதில் வாங்கு என்றான் ரிஷி. இரா அதற்கான முயற்சியை எடுக்க வியாழன் இரவு ஒன்பது மணிக்கு பதில் அளிக்கப்படும் என்று ஜோதிடர் சிவக்குமாரிடம் இருந்து பதில் வந்தது. மீனாவிற்கு இரண்டு மாதங்களாக ஜீரணத்தில் பிரச்சனை இருக்கிறது. அதற்கான மருத்துவரும் அந்த நேரத்திலேயே அப்பாயிண்மென்ட் அளித்திருக்க “ நீ ரெகார்ட் செய்து வை ரிஷி, நான் டாக்டரிடம் போய் வந்தபிறகு கேட்டுக்கொள்கிறேன்” என்றுவிட்டு டாக்டரை காணச்சென்றுவிட்டாள் மீனா. 

ஜோதிடர் சிவக்குமாரை திரையில் குறிப்பிட்ட நேரத்தில் பிடித்தான் ரிஷி.

“எனது குருநாதரை வணங்கி ஜோதிடர் சிவக்குமார்” என்றார் ஜோதிடர்.

"வணக்கம் ஐயா. நான் ரிஷி ஜோதிடத்தில் ஈர்ப்புள்ளவன். உங்களது குழுவைப்பற்றி தெரியும் பழனியப்பன் ஐயாவின் வலைத்தளத்தை அவ்வப்போது படிப்பவன் நான். அவர் எப்படி இருக்கிறார் ஐயா? என வினவினான்.

நலமாக இருக்கிறார். முதுமை. நினைவுத்திறன் குறைந்துவிட்டது. காது மந்தம். எப்போதாவது குழுவில் எட்டிப்பார்ப்பார். இப்போது தனது துணைவியாருடன் பெண்ணின் குடும்பத்துடன்   ஊட்டியில் வசிக்கிறார் என்றார் ஜோதிடர். 

தொடர்ந்து “உங்கள் ஜாதகம் ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. பலன்களுக்கு செல்லலாமா?” என்றார் ஜோதிடர்.

“எங்களுக்கு புத்திர பாக்கியம் பற்றி கேட்டிருந்தோம். அவளது  ஆரோக்கியம் பற்றி கவலையாக உள்ளது. திருமணமாகி வந்ததிலிருந்து அவளுக்கு உடன் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறுகிறாள். அவளது சிரமங்களை பார்த்து வேதனைப்படுகிறேன்.அதற்கு என்ன காரணம் என்றான்.

உடனிருந்த இராவை கவனித்த ஜோதிடர் “இவர் யார்” என்று கேட்டார்.

சொன்னான்.

கும்ப லக்னமான உங்களுக்கு புத்திர காரகன் குரு இரண்டாம் இடத்தில் வக்கிரம் ஆகியுள்ளது. ஏழாமிடத்தில் ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளது. ஏழாமிடம் காம ஸ்தானம். சுக்கிரனும் தாம்பத்யத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிரகம்தான். ராகு 7ல் இருந்தால் ஏழாமிட தொடர்பை வளர்த்தும். தறிகெட்ட விபரீத காம உணர்வு. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புகள். இவற்றை ஏற்படுத்த வேண்டும். அதனால் மனைவியான சுக்கிரன் ராகுவால் கடுமையாக பாதிக்கப்படும். ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளதால் மனைவிக்கு ஆயுள்குறைவும் ஏற்படுத்தும் என்றார் ஜோதிடர்.

“ஐயோ” என மனதுக்குள் கூறிக்கொண்டான் ரிஷி.

இந்த பாதிப்பிலிருந்து மீள வழியுண்டா என வினவினான் ரிஷி.

“ராகு என்ற மாயை ஏற்படுத்தும் விபரீத எண்ணங்களுக்கு இடம்கொடாமல்  மனதை கட்டுப்படுத்தி மனைவியை நேசித்து இல்லறம் நடத்துங்கள்” என்று இராவை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டே கூறினார் ஜோதிடர்.

“எனது ஜாதகப்படி மனைவிக்கு ஆரோக்ய பாதிப்பு ஏற்படுமா?” என்றான் ரிஷி.

ஏழாமிடம் சுக்கிரனுடன் ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ராகுவுடன் சுக்கிரன் சேர்வதே மனைவியின் ஆயுளுக்கு பாதிப்பு என்பதோடல்லாமல் சுக்கிரன் நீசத்தை நோக்கி செல்கிறது. குரு இரண்டில் வக்கிரமாகி உத்திரட்டாதியில் நிற்கிறது. குரு நிற்கும் நட்சத்திராதிபதி சனி துலாத்தில் உச்சமாகி வக்ரமடைந்துள்ளது. எனவே மனைவிக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்படும் அது வயிற்றுப்பகுதியில் எதிரொலிக்கும் என்றார் ஜோதிடர் சிவக்குமார்.

அவளுக்கு வயிற்றுக்குச் செல்லும் உணவு செரிமானமாவதில்லை என்று அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறாள் என்றான் ரிஷி.

இல்லை அதன் மூல காரணம் கிட்னி மற்றும் கர்ப்பப்பையில்தான் இருக்கும். எனவே அதை பரிசோதித்துக்கொள்ளுங்கள் எங்கள் குழுவில் டாக்டர் நரேன் வயிறு தொடர்பான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் சண்முகசுந்தரம் கிட்னி ஸ்பெசலிஸ்ட். இருவருக்கும் ஜோதிட அறிவும் உண்டு தேவைப்படின் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார் ஜோதிடர்.

தொடர்ந்த ஆலோசனைகளுக்குப் பிறகு பரிகார முறைகளை குறித்துக்கொண்டு திரையை அணைத்தான் ரிஷி.

ஜோதிடர் கூறிய வார்த்தைகளின் விபரீதங்களை உணர்ந்த ரிஷி பரிகார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கினான். ஜோதிடர் கூறிய மருத்துவர்களை தொர்புகொண்டு நேரில் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று வந்தான். ஒன்றரை மாதங்களில் நிலைமை சரியானதுபோல தோன்றினாலும் மீனாவிற்கு வயிற்று உபாதை மிதமாகவேனும் இருக்கவே செய்தது.

அன்று ஒரு அரசு விடுமுறை நாள். மீனாவிற்கும் பள்ளி விடுமுறை என்பதால் பிக்னிக் செல்வது என்று முடிவாகியிருந்தது.ரிஷி செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தான். இரா கீழ்த்தளத்தில் வந்து சேர்ந்த மளிகை பொருட்களை எடுத்துவர சென்றிருந்தாள்.

திடீரென்று உடைமாற்றும் அறையில் சத்தம் கேட்டது.

ஓடிச்சென்று பார்த்தபோது மீனா தரையில் சுருண்டிருந்தாள். 

மீனா.. மீனா...என கத்தியபடி அவளது கன்னத்தை தட்டினான். 

மீனாவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவளது தலையில் ஏதேனும் அடிபட்டிருக்கிறதா எனப்பார்த்தான். .

மீனா மயங்கியிருந்தாள்.

மீனு மீனூ..

என்னடி ஆச்சு எனும்போதே அவனுக்கு கண்களில் நீர்கோர்த்தது.

அவளை தரையில் கிடத்திவிட்டு தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.

மீனு...

மீனு..

உணர்வில்லை.

இரா...

இரா...

எங்க போய்த் தொலைஞ்சே என கத்தியபடி தனது மணிக்கட்டுப் பட்டையை தட்டி இராவுக்கும் அவரச உதவிக்கும் தகவல் அனுப்பிவிட்டு உள்ளறைக்கு ஓடிச்சென்று டாக்டர் நரேன் மீனாவிற்கு அளித்திருந்த மருந்து வில்லைப் பட்டைகளை எடுத்து ஆபத்துக்கால வில்லையை கண்டுபிடித்து அவளது வாய்க்குள் திணித்தான் ரிஷி.

மீண்டும் தண்ணீரை மீனாவின் முகத்தில் தெளித்து அவளை உலுக்கினான்.. அவளது மார்பில் கைவைத்து அழுத்தியவாறே  மற்றோர் கையால் மிதமான வேகத்தில் குத்தினான். மீனாவின் கண்ணத்தை குவித்து அவளது வாயோடு தனது வாயை வைத்து ஊதினான். தனது நிறுவனத்தில் தனக்கு அளிக்கப்படிருந்த அத்தனை முதலுதவி சிகிச்சைகளையும் முயன்றான்.

பலனில்லாமல் போகேவே பீறிட்ட அழுகையை அடக்கியபடி அவளது கால் பாதங்களை தனது கரங்களில் தாங்கி விறுவிறுவென தேய்க்க ஆரம்பித்தான்.

“என்ன விட்டுட்டு போய்டாதடி” என ஓலமிட்டு புலம்பிய தருணத்தில் ரிஷி அவளது உடல் சில்லிடத்தொடங்கிவிட்டதை தெளிவாக உணர்ந்தான்.

பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த இயலாத ரிஷி மீனாவை தன் மார்போடு அணைத்துக்கொண்டு தனது கதறலை துவக்கினான்.

“கொன்னுட்டனே....”

படீரென கதவை திறந்து பாய்ந்து வந்த இரா (Indian Robotic Association  வடிவமைத்த நான்காம் தலைமுறை ரோபோட்) அவனருகில் அமர்ந்து அவனது தோளைத்தொட்டாள்.

தரைத்தளத்தில் ஆம்புலன்ஸ் ஓசை ஒலித்தது.



மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி:7871244501.

Sunday 5 August 2018

வைதேகி காத்திருக்கிறாள்.


சம்பாத்தியத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று வேலை பார்க்கும் அன்பர்களின் வாழ்க்கை பார்வைக்கு சிறப்பாகத் தோன்றினாலும் பெரும்பாலும் அதில் துயரங்களும் கலந்தது என்பதே உண்மை. அதிலும்  கணவரை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு நமது இல்லத்தரசிகள் படும் மனோரீதியான துயர் கொடுமையானது. அதனினும் கொடுமை மண முடித்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்தை பிரிவது.




வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தாய்நாடு திரும்புவதில்லை. அப்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்பத்தை பார்க்க இயலாதோர் இல்லற வாழ்க்கை உண்மையில் சபிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வரிசையில் சமீபத்தில் ஆராய்ந்து என்னை பாதித்த இரு ஜாதகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.


ஒரு ராசி மண்டலத்தின் இறுதி 3 பாகைக்குள் இருக்கும் கிரகமும் முதல் மூன்று பாகைக்குள் இருக்கும் கிரகமும் வலுவற்ற அமைப்பில்தான் இருக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் 1.12 பாகையில் ராசி மண்டலத்தின் விளிம்பில் அமைந்துள்ளது வலுவற்ற அமைப்புதான். அதைவிட ஒரு ஜாதகத்தில் ஜாதகரை  தாங்கிப்பிடிக்க வேண்டிய லக்னாதிபதியும்,  குடும்ப பாக்ய பாவாதிபதியுமான சுக்கிரனும் ராசி சந்தியில் 0 பாகையில் நிற்பது மிக மோசமான அமைப்புதான். லக்னாதிபதி புதன்,  களத்திர & பாதகாதிபதியும் குடும்ப காரகனுமான குரு சாரம் (புனர்பூசம் – 4) பெற்று நிற்பது ஜாதகி கணவன், குடும்ப வகை பாதிப்புகளை அடைவாள் என்பதை குறிக்கிறது.

சுக்கிரன் திக்பலம் பெற்ற விரையாதிபதி சூரியனுடன் இணைந்து 10 ல் மாந்தியுடன் இணைந்து நிற்பது குடும்ப வாழ்க்கை விரையமாவதை குறிப்பிடும் அமைப்பாகும். அப்படி அமைந்த சுக்கிரனை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு பார்ப்பது ஜாதகியின் குடும்ப வகை பாதிப்பின் தீவிரத்தை காட்டுகிறது.


பொதுவாக அனைத்து லக்னத்தவர்க்கும்  சுக ஸ்தானாதிபதி வக்ரமடைவது சுகத்தில் ஏற்படும் தடையை குறிப்பிடும் என்றாலும் உபய லக்னத்தவர்க்கு மட்டும் 4 ஆம் அதிபதி 4 ஆமிடத்தில் தனித்த நிலையில் எப்படி நின்றாலும் பாதிக்கும்.

நான்காமிடத்தில் ஆட்சியில் நின்றால் கேந்திராதிபத்திய தோஷம், வக்ரமடைந்தாலும் சுகக்கேடு. சனி, ராகு-கேதுக்களோடு இணைந்து 4 ல் நின்றால் தோஷம் பெருமளவில் குறையும். குரு களத்திர பாவாதிபதியாகி களத்திர பாவத்திற்கும் 10 ல் கேதிராதிபத்திய தோஷம் பெற்று நிற்பதும் பாதிப்பே.

போக ஸ்தானமான 3 மற்றும் கணவன் மனைவிக்கிடையேயான உடல் ரீதியான உறவை குறிக்கும் 8 ஆமிடாதிபதி செவ்வாய் நீசமானது பரிதாபத்திற்குரியது. பெண்ணின் ஜாதகத்தில் களத்திர , மாங்கல்ய காரகனான செவ்வாய் நீசம் பெற்றது ஜாதகியின் கணவனுக்கு உள்ள உயிராபத்தை குறிப்பது மட்டுமல்லாது ஜாதகி கணவனால் சுகமடைய முடியாது என்பதையும் குறிப்பிடுகிறது.

உபய லக்னத்திற்கு 11 ஆமிடம் பாதகமில்லை என்றாலும் பொதுவாக கடகத்தில் நிற்கும் கிரகங்கள் எந்த ஒரு ஜாதகருக்கும் மன ரீதியான பாதிப்பை தரும். கணவனை குறிக்கும் செவ்வாய் ஜல ராசியான கடகத்தில் நிற்பது ஜாதகியின் கணவன் வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடுகிறது. செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் கேது தொடர்பைபுயும் பெற்று சனி பார்வை பெறுவது, கணவன் தனக்கு ஏற்படும் கடனை அடைக்க வெளி நாடு சென்று பணி புரிவதையும் குறிப்பிடுகிறது. கடகம்-வெளிநாடு, சனி – வேலை, செவ்வாய் – கணவன், கேது = கடன்.

மேற்கண்ட அமைப்பை 5 ஆமதியும் கர்ம காரகனுமான சனி பார்ப்பது ஜாதகியின் கணவனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனது கர்ம வினையால் ஏற்படும் பாதிப்பு என்பதை தெள்ளதெளிவாக எடுத்துரைக்கிறது.

இனி ஜாதகியின் கணவரது ஜாதகத்தை அலசுவோம்



லக்னத்தில் இரு ஜலக்கிரகங்கள். லக்னாதிபதி தன ஸ்தானத்தில் கேதுவும் ஒரு ஜலக்கிரகம் என்பதுடன் கேது வெளிநாட்டையும் குறிக்கும் கடனையும் குறிக்கும். ஒரு ஜாதகர் வெளிநாடு செல்வதை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி லக்னத்தில் உள்ள இரு ஜலக்கிரகங்களுடன் இணைகிறது. ஜீவன காரகன் சனி 9 ஆம் பாவத்தில் நீசமடைந்து வக்கிரம் பெற்ற நிலையில் நிற்கிறது. இந்த அமைப்புகள் அனைத்துமே மனைவியின் ஜாதகத்தில் குறிப்பிட்டபடி ஜாதகர் வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும் அமைப்பாகும்.

குரு குடும்ப காரகன், புத்திர அஷ்டமாதிபதி என்பதோடு அவர் குடும்ப பாவத்திற்கு விரையத்தில்  லக்ன விரையாதிபதி சந்திரன் மற்றும் சுக, பாக்யாதிபதி செவ்வாயுடன் இணைந்து நிற்கிறார். ராகு-கேதுவின் அச்சுக்கு வெளியே மனைவியை குறிக்கும் சுக்கிரனும் குடும்ப பாவாதிபதி புதனும் நிற்கின்றனர். இந்த அமைப்பு மனைவி குழந்தையை விட்டு பிரிந்து ஜாதகர் வெளிநாடு செல்லும் நிலையை குறிக்கிறது.  எனினும் வெளிநாட்டில் ஒருவர் வாழும் காலத்தை திசா-புக்திகளே முடிவு செய்கின்றன.

ஜாதகர் ராகு திசையில் துவங்கிய தொழில் நஷ்டமடைந்தது. சனி நீசமடைந்து வக்கிரம் பெற்றாலும் அவர் கடனை குறிக்கும் கேது சாரம் பெற்று கேது லக்னாதிபதியுடன் இணைந்து சனிக்கும் கால புருஷனுக்கும் ஆறில் மறைந்து சஷ்டாஷ்டகம் பெற்று லக்னாதிபதியோடு தன ஸ்தானத்தில் அமைந்ததால் தொழிலில் மிக மோசமான இழப்பை சந்தித்தார். (செவ்வாய் & கேது = கடன். சனி = கடனால் ஏற்படும் பாதிப்பு.).

குரு வீட்டில் அஷ்டமத்தில் நின்றாலும் ஐந்தாமிட தொடர்பையும் பெற்ற காரணத்தால் ராகு திசை சந்திர புக்தியில் 11.06.2006 ல் திருமணம் நடந்து அதே சந்திர புக்தியில் 11.03.2008 பெண் குழந்தை பிறந்தது.

ஜாதகர் வங்கிக்கடன் பெற்று நடத்திய தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதனை அடைக்க வழிதெரியாது விழித்தார். ஜாதகர் சிம்ம லக்னம், ராசி என்பதால் ஜாதகரின் முறையீட்டை அரசு ஏற்று வங்கிக்கடனில் பெரும்பகுதியை தள்ளுபடி செய்தது.  மீத தொகையை அடைக்க வழி தெரியாது இரு முறை ஜாதகர் தற்கொலைக்கு முயன்றார். அஷ்டம ராகு ஆயுளையும் உலுக்கினார் என்றே கூற வேண்டும். அதோடு அடைந்த அவமானம் அளவில்லாதது. பொதுவாக நெருப்பு ராசியை லக்னமாக கொண்டவர்கள் கௌரவதிற்காக உயிரை மாய்த்துக்கொள்ளவும் துணிகின்றனர்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்றபடி ஜாதகர் காவிரிக்கரையில் ஜீவசமாதியான மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரை சரணடைந்தார். ஜாதக அமைப்பில் கேது 2 ஆமிடத்தில் இருந்து லக்னத்தை நோக்கி வருவதால் ராகு கொடுத்த தொல்லையை கேதுவின் அம்சமான மகான் குறைத்தார் என்றே சொல்லவேண்டும். பூர்வீக வீடு ஏலத்தில் போவதில் இருந்து தப்பியது.


சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர். (கரூர் அருகில்)

ஜாதகருக்கு அஷ்டமத்தில் நின்ற ராகு திசை முடிந்து அஷ்டமாதிபதியான குருவின் திசை தொடங்கியது. ஓநாயிடமிருந்து மீண்டு புலியிடம் சிக்கிய புள்ளிமானின் கதைதான். குடும்ப காரகன் குடும்பத்திற்கு விரையத்தில் லக்னத்தில் இருப்பதால் குரு குடும்பத்திலிருந்து ஜாதகரை பிரித்தார்.

ஜாதகர் 2008 மத்தியில் கடனை மீட்க பொருளீட்ட வெளிநாடு சென்றார். தற்போது 2018. இடைப்பட்ட 10 வருட காலத்தில் ஜாதகர் 2013 ல் குடும்ப பாவாதி புதனின் புக்தியிலும் களத்திர காரகன் (ஆணுக்கு) சுக்கிரனின் புக்தியில் 2016 லும் இந்தியா வந்தார். புதன் சுக்கிரன் இருவரும் சுக ஸ்தானாதிபதி செவ்வாயின் நட்சத்திரம் சித்திரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.     

மனைவியின் ஜாதகத்தில் கணவனின் கடன் நிலைமை, கணவனுக்கு ஏற்படும் உயிராபத்து, தற்கொலைக்கு முயன்றது, வெளிநாட்டு வேலை ஆகியவை தெளிவாக உள்ளது.

கணவனின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் சுக்கிரன் சுகஸ்தானமான 4 க்கு விரையத்தில் மூன்றில் ஆட்சி பெற்றது. ராகு-கேதுவின் அச்சை விட்டு குடும்ப பாவாதிபதியும் மனைவியான சுக்கிரனும் விலகி இருப்பது ஆகியவை குடும்ப வாழ்வில் இருவருமே பெரிய அளவில் சுகப்பட இயலாது என்பதையே காட்டுகிறது.  இருவரையும் கிரகங்கள் விதி வசத்தால் அல்ல ஜாதக அமைப்பாலேயே இணைத்திருக்கின்றன.

கணவன்-மனைவி இருவருக்குமே இது கடவுள் போட்ட முடிச்சுதான் எனலாம்.

ஓரிரு ஆண்டுகளே இல்லற இன்பத்தை அனுபவித்த தம்பதியரில் இருவரின்  நிலையுமே கொடுமையானதுதான். வெளிநாடு சென்ற கணவன் இரு முறை மட்டுமே இந்தியா வந்து சென்றுள்ளார். தனது மகள் பூபெய்த இருக்கும் நிலையில் அதற்காகவேனும் தனது கணவர் வருவாரா என பொங்கி வரும் உணர்சிகளை கட்டுப்படுத்த இயலாத நிலையில் ஜாதகி என்னிடம் ஜாதக ஆலோட்சனை கேட்டு வந்தார்.

நல்ல குடும்பத்தில் பிறந்ததால் வழி தவறவும் மனமின்றி தன் உணர்வுகளோடு ஒரு கொடிய போராட்டம் நடத்திக்கொண்டு, 

வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே ஒரு குடும்பம் அமைத்துக்கொண்டான் இனி வர மாட்டான் எனக்கூறி தனக்கு வலை வீசும் ஆண்களிடமிருந்து தன்னையும் தனது மகளையும் காத்துக்கொண்டு,

கணவர் அனுப்பும் பணத்தை கடனுக்கு கட்டிவிட்டு தான் எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு,

வாழ வேண்டிய வயதில் இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியாத சோகத்தை கண்களில் தாங்கிக்கொண்டு,

அசோகவனத்து வைதேகி ராமன் தன்னை வந்து மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருந்ததைப் போல,

இங்கேயும் 

ஒரு

வைதேகி காத்திருக்கிறாள். 


விரைவில் மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501

Friday 20 July 2018

ஒரு ஜாதகத்தை மற்றோர் ஜாதகம் எப்படி பாதிக்கிறது?


ஒருவரது ஜாதக அமைப்பே அவரது வாழ்க்கைச் சூழலை தீர்மானிக்கிறது. வேலை, குடும்பம், உறவுகள் என இப்படி அனைத்தையும் ஒருவரது ஜாதகத்தை அலசுவதன் மூலம் தெளிவாக அறியலாம். அதனால் ஒரு ஜாதகர் தனது வாழ்வில் எதிகொள்ளும் மற்றொரு ஜாதகரை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்பதே அப்பட்டமான உண்மை.


 
கீழ்க்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள்

தனபால் சென்னையில் பிறந்தவர். லக்னப் புள்ளியும் 2 ம் அதிபதி குருவும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமதிபதி சுக்கிரனும் வாக்கு காரகனும் 8, 11 க்கு உரியவரான   புதனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர்.

குரு, சூரியன் உள்ளிட்ட 5 கிரகங்கள் மாந்தியோடு லக்னத்தில் அமைந்துள்ளனர். எனவே ஜாதகர் தனித்து இயங்குபவர் . செவ்வாய் லக்னத்தின்  சதுர்த்த கேந்திரத்தில் சனியின் வீட்டில் கும்பத்தில் அமைந்துள்ளது. செவ்வாய் 10 ஆமிடமான சிம்மத்தை பார்க்கிறது. செவ்வாய்க்கு 10 ல் லக்னத்தில் சூரியன் உள்ளது. தொழில் ஸ்தானமான 10 க்கு 10ல் ரிஷபத்தில் சனி அமைந்து 10 ஆமதிபதி சூரியனை பார்க்கிறது. சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்வை செய்கின்றனர்.

மேற்கண்ட அமைப்பின் பலனாக முக்கியமாக சனி செவ்வாய் தொடர்பின் காரணமான  ( சட்டம் ஒருங்கு நீதித்துறை) தொழில் புரிகிறார் ஜாதகர். .

தனபாலுக்கு கடந்த  29.11.2007ல்  திருமணம் சூரிய திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

லக்னத்தில் பாவக்கிரகமான சூரியன் எதிரியும் மற்றொரு பாவியுமான சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து 8, 11 அதிபதி புதன், நீச நிலை பெற்ற பாக்யாதிபதி சந்திரன் இவர்களோடு குடும்ப புத்திர அதிபதியான குரு , களத்திர காரகன் சுக்கிரன் ஆகியோரையும் கட்டுப்படுத்துகிறார். இதில் சூரியனை தவிர இதர நான்கு கிரகங்களும்,  லக்னம் விழுந்த புள்ளியும் 8, 11 அதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

குடும்ப காரகன் குரு குடும்ப பாவமான தனுசுக்கு விரையத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானமான மீனத்திற்கு திரிகோணத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர பாவமான மீனத்திற்கு 3,6,8  மற்றும் மீனத்திற்கு பாதகாதிபதி புதனுடனும் இணைந்துள்ளார்.

தனபால் குரு ஒரையில்தான் பிறந்துள்ளார். குரு மேற்கண்ட அமைப்பில் உள்ளதும் நவாம்சத்தில் நீச மானதும் ஜாதகர் தன, குடும்ப புத்திர வகையிலான பாதிப்புகளை அடைய வேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும்.

லக்னத்தில் அமைந்த கிரக கூட்டில் சந்திரன் நீச நிலை பெற்று 4 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் கடகத்திற்கு பாதகதிலும் லக்னத்திற்கு 7 லும்  அமைந்து சனி செவ்வாய் தொடர்பு 4 ஆம் இடத்திற்கு ஏற்படுவதும் முந்தைய பத்தியில் குறிப்பிட்ட பாதிப்புகளை ஜாதகர் அடைய ஜாதகரின் தாயார் காரணமாக இருப்பார் என அளவிடலாம். 

சந்திரனின் வீடான கடகத்தில் கேது நின்று கடகம் சனி பார்வை பெறுவது இதை உறுதி செய்கிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்து நீச பங்கம் ஏற்படுத்த முயன்றாலும் சந்திரனும் செவ்வாயும் சந்திரனின் வீடும் சனி பார்வை பெற்றதால் நீச பங்கம் தடைபடுகிறது. சந்திரனின் வீட்டில் ஒரு வக்கிர கிரகம் கேது, சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணியில் ஒரு வக்கிர கிரகம் சனி அமையும் நிலைமை ஒரு ஜாதகனுக்கு மன நிலையிலும் தாயார் வகையிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தனபாலுக்கு  29.08.2008 அன்று ஓர் குழந்தை பிறந்தது. அஷ்டமாதிபதி புதனின் சாரம் பெற்ற நீச நிலையில் அமைந்த  சந்திர திசை சந்திர புக்தியில் ஒரு பெண் மகள் ரூபா பிறந்தாள்.



ரூபாவின் லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானாதிபதியுமான  குரு லக்னத்திலேயே வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளார். தந்தையை குறிக்கும் பித்ருகாரகன் சூரியன் ஆட்சி பெற்று பாவியான சனியுடன் இணைவு பெற்று  பாவ கர்தாரி யோகமும்  பெற்று நீசன் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது. சுக்கிரனும் சூரியனும் சார பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் சனியும் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கிரக யுத்தத்தில் செவ்வாய் அதிக பாகை பெற்று வெற்றி பெற்றுவிட்டதால் புதன் சுக்கிரன் இணைவு காரணமான நீச பங்கம் இங்கு சுக்கிரனுக்கு செயல்படமுடியாமல் போகிறது. 

ரூபா பிறந்த ஓரை நாதன் சுக்கிரனாகி, சுக்கிரன் நீசம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சூரியனின் சாரம் பெற்று நிற்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓரை நாதன் சூரியன் சாரத்தில் நிற்பது சூரியனின் அம்சமான தந்தையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தை ரூபாவின் லக்ன புள்ளி கேதுவின் மூலமாகி சூரியனும் சந்திரனும் ஆட்சி பெற்றாலும் இருவருக்குமிடையில் கேது அமர்ந்தது ஆகியவை குழந்தை  பிறந்தவுடன் பெற்றோருக்கிடையே பிரிவினை ஏற்படும் என்பதை குறிக்கிறது.

மகள் ரூபா பிறந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக தனபால் தனது மனைவியையும் குழந்தையையும் பிரிந்தார். மகளை தந்தை பார்க்க மறுத்தார் . பிரிவிற்கு தனபாலின் தாயார் (நீச சந்திரன்) வழிகோலியுள்ளார். தனபால்  தனது தொழிலின் மூலம் எளிதாக வழக்குத்தொடர்ந்து சட்ட ரீதியாக குடும்பத்தை மகள் பிறந்த சில மாதங்களிலேயே பிரிந்துள்ளார்.

தனபாலின் ஜாதகத்தில் அவர் பிறந்த துவிதியை திதிக்குரிய திதி சூனிய ராசிகள் தனுசு மீனமாகி திதி சூன்யாதிபதி குரு சூரியனுடன் இணைந்து திதி சூனிய தோஷத்திலிருந்து மீண்டாலும் குரு அஷ்டமாதிபதி புதன் சாரம் பெற்றது.  தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

ரூபா பிறந்தது சதுர்த்தசி திதியில். எனவே மிதுனமும் கன்னியும் திதி சூனிய ராசிகளாகவும் புதன் திதி சூனியம் பெற்ற கிரகமுமாகிறது. இங்கு செவ்வாயுடனான யுத்தத்தில் தோல்வியுற்று தனது உச்ச வலுவும் பயனற்றுப்போனதன் காரணமாக திதி சூனியம் புதனுக்கு குறைவாகவே செயல்பட்டாலும் தோல்வியுற்ற லக்ன பாதகாதிபதி புதன் சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதால் ஏற்கனவே சனி கேதுவால் பலவீனப்பட்டுள்ள சூரியனை மேலும் பாதிக்கச் செய்வதை அறிய முடிகிறது.

தனபால் ஜாதகத்தின் அஷ்டமாதிபதி புதனின் நட்சத்திரத்தில் புத்திர காரகன் குரு. ரூபாவின் ஜாதகத்தில் லக்ன பாதபாதிபதியும் தந்தையின் அஷ்டமாதிபதியுமான புதன் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் நிற்பது ஒருவரது ஜாதகம் மற்றவருக்கு பாதகத்தை செய்யும் என்பதை குறிப்பிடுகிறது.

கவனிக்க:
ஜாதகங்கள் ஜோதிட ஆய்வு நோக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. யாரையும் குற்றம் கூறும் நோக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதை அறியவும். ஜாதகங்களில் உண்மைப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜாதகங்கள் திருக்கணித அடிப்படையில் பூச பக்ஷ அயனாம்சப்படி ஆய்வு செய்யப்பட்டவை.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.