Tuesday 29 December 2020

இன்னும் வாழ்க்கை மீதமிருக்கிறது!

 

அத்தப்பனும் அங்கயர்க்கன்னியும் பாரம்பரியமானதொரு சமூகத்தை சார்ந்தவர்கள். அத்தப்பன் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். இல்லறத்தை பொறுத்தவரை சிரமங்களற்ற வாழ்க்கை. அங்கயர்க்கன்னி தனது சமூகத்திற்கே உரிய வகையில் வீட்டை நிர்வகிப்பதில் நல்ல நிர்வாகியாக திகழ்கிறார். இவர்கள் இல்லறத்தில் விளைந்த முத்துக்களாக நல்ல குழந்தை செல்வத்தையும் பெற்றவர்கள். பொதுவாக ஒரு நல்ல சமூகத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறப்பதே ஒருவரது வாழ்வை பெரிய சிக்கலின்றி அனுபவித்துவிட பெரிதும் உதவும். இந்தக்கூற்று முழு உண்மையானால் இத்தகைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்வில் சிக்கலே இருக்கக்கூடாது. அப்படியானால் படைத்தவனுக்கு இவர்கள் வாழ்வில் என்ன வேலை?. நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாகவும் இருப்பது இன்றைய காலத்தில் அவசியம். நல்லவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிரார்கள். தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் அளிப்பது என்று நிம்மதியடைகிறார்கள்.   வல்லவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தங்களது வாழ்க்கைப்போராட்டத்தை துவங்குகிறார்கள். அவர்களுக்கு எந்தத்தோல்வி வந்தாலும் அது தங்களது இயலாமையினால் மட்டுமே என எண்ணித்துடிக்கிறார்கள். தங்களுக்கு மேலே ஒருவன் இருந்துகொண்டு தங்களை வழிநடத்துகிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதன் விளைவால் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்.



அத்தப்பன் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் நல்ல நிர்வாகியல்ல என்பதை திருமணமாகி சில நாட்களிலேயே அங்கயர்க்கன்னி உணர்ந்துவிட்டார். இதனால் குடும்ப நிர்வாகத்தோடு தங்களுக்கான வியாபாரத்தையும் தானே கவனிக்க வேண்டிய நிலையை அங்கயர்க்கன்னி உணர்ந்து அந்தப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார்.  இந்த சமயத்தில் ஒருவரது அறிவையும் பொறுப்புகளையும் மீறி விதி விளையாடும். அத்தப்பன்-அங்கயர்க்கன்னி வாழ்விலும் அது விளையாடியது. நல்லவர்களாக  இருந்துவிடுவதால் மட்டும் விதி மனிதர்களை விட்டு விடுவதில்லை. சோதனைகள் மூலம் அவர்களை வல்லவர்களாகவும் மாற்றுவதே அதன் வேலை. இப்படி வல்லவர்களாக மாறுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலைக்கு அனுபவம் என்று பெயர். அனுபவமே ஆசான். அனுபவமே இறை.

கீழே அங்கயர்க்கன்னியின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகம். லக்னாதிபதி ஆறாமிட தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இந்த ஜாதகத்தில்  இங்கு 6 ஆமிடாதிபதி சனியோடு லக்னாதிபதி புதன் பரிவர்தனையாகிறார். 6 , 1௦ இரண்டுமே பொருட்பாவங்கள் என்றாலும் தொழிலால் கடன் ஏற்படும் என்பதை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது.  லக்னத்திற்கு 7 ல் விரையாதிபதி சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெற்று நிற்கும் குரு, கணவர் வலுவற்றவர் என்பதை குறிக்கிறார். இப்படி களத்திராதிபதி அஸ்தங்கமாகி வலுவிழப்பது உபய லக்னத்திற்கு ஒருவகையில் நன்மையே. எப்படி எனில், 7 ல் சூரியன் குருவோடு இணைந்து லக்னத்தை பார்ப்பது, ஜாதகிக்கு திருமணமான பிறகு குடும்ப, தொழில்வகை நிர்வாகத்தையும் ஏற்பதால் லக்னாதிபதி வலுவடைவார். நவாம்சத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கடகத்தில் இணைந்து நிற்பது கணவன் மனைவி ஒற்றுமையை குறிக்கிறது. அதே சமயம் செவ்வாய் நீசம் பெற்று நீச சந்திரனோடு பரிவர்தனையாவதால் வலுவடைகிறது. நவாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை பெறுவதும் கணவனின் திறமை குறைவால் ஜாதகி நிர்வாகியாவார் என்பதை உறுதி செய்கிறது. லக்னப்புள்ளி உணவு காரகன் சந்திரனின் ஹஸ்தம்-4ல் அமைந்து,  சந்திரன் 1௦ ஆமிடத்தில் உள்ள சனியின் பூசம்-4 ல் நிற்கிறது. இதனால் இவர்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யும் இனிப்பு, காரம், சாக்லேட் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம். தசாம்சத்தில் 7 , 1௦ ஆமதிபதி புதன் நீசமாகி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து குரு, சூரியனின் பார்வையை பெறுகிறது. 1௦ ஆமதிபதி புதன் சந்திரனின் வீட்டில் சந்திரனுடன் இணைவதால் உணவு தொடர்புடைய தொழில் என்பதையும் சுக்கிரனும் குருவும் இணைந்த பார்வை புதனுக்கு கிடைப்பதால் இனிப்பு தொடர்புடைய தின்பண்டம் என்பதையும் இது குறிப்பிடுகிறது. கேதுவோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக புதனை பார்ப்பதால் கார வகைகளையும் இணைத்து விற்பனை செய்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது. (செவ்வாய்-காரம்). குரு நீசம் பெற்று சனியோடு பரிவர்த்தனை பெறுவதால் வருமானத்தில் தடைகள் ஏற்படும் என்பதும் இனிப்பை குறிக்கும் குரு பாதகாதிபதியானதும் மற்றொரு இனிப்பு கிரகம் சுக்கிரன் 8 ல் மறைந்ததும் இனிப்பு வகைகள் நஷ்டத்தை கொடுக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றன. ராசியிலும் தசாம்சதிலும் சந்திரன் கடகத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. குரு லக்ன பாதகாதிபதியாகி விரையாதிபதி சூரியனோடு இணைந்து 1௦ க்கு 1௦ ஆன 7 ல் நிற்கிறது. சுக்கிரன் ராசியின் பாதகாதிபதியாகி ராசிக்கு 1௦ ல் மேஷத்தில் நிற்கிறது. இதனால் இனிப்பு தொடர்புடைய வகையில் ஜாதகிக்கு லாபமிருக்காது என்பது தெளிவாகிறது.

2௦13 ல் ராசிக்கு 1௦ ல் நிற்கும் சுக்கிர திசையில் குரு புக்தியில் இந்தத்தொழிலை துவங்கி கடனுக்கு பொருள் கொடுத்து நெருக்கடிக்கிடையில்தான் இதுவரை தொழிலை செய்து வருகின்றனர். 6 ஆமதிபதியும் 1௦ ஆமதிபதியும் பரிவர்தனையாவதும் இவர் கடன் கொடுத்து வியாபரம் செய்ய காரணமாகிறது. வெளி நபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தங்கத்தின் காரக கிரகமான பாதகாதிபதி குரு 7ல் அஸ்தங்கமானதால் மாங்கல்யத்தைக்கூட அடமானம் வைத்துள்ளதாக ஜாதகி கண்ணீர் சிந்த தெரிவித்தார். வெளிநாட்டில் புகழ் பெற்ற இனிப்பு சாக்கலேட் ஒன்றிற்கு ஏஜென்சி எடுத்து அதில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் கார வகையை குறிக்கும் ராசியின் முதல்தர யோகாதிபதியான செவ்வாய்  ராசிக்கு 1௦ ஆமதிபதியாகிறார். அவர் மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் உச்சம் பெற்று ராசிக்கு 7 ல் நின்று சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு கார வகைகளில் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை என்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பூமிகாரகன் செவ்வாயால் இவர்களுக்கு 2 வீடுகளில் இருந்து வாடகை வருகிறது.

ஜாதகி தற்போது சுக்கிரதிசை புதன் புக்தியில் உள்ளார். 6 ஆமிடத்தோடு பரிவர்தனை பெறும் புதன், கடன் பாதிப்பை தருகிறார். லக்னாதிபதி புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகம் என்பதாலும் அது சனியோடு தொடர்பாவதாலும் ராசிக்கு 7 ல் சனியும் குருவும் தற்போது வந்துள்ளதாலும் தொழில் வகை ஆலோசனை கேட்டு ஜாதகி என்னை தொடர்புகொண்டார். செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக இருப்பதாலும் சுக்கிரனுக்கு 1௦ ல் செவ்வாய் இருப்பதாலும் இனிப்பு வகைகளில் முதலீடு செய்யாமல் காரவகை மட்டும் செய்து படிப்படியாக கொடுத்த கடனை வசூல் செய்துகொள்ளுமாறு சொல்லப்பட்டது. சந்திரன் மூன்று சக்கரங்களிலும் (நவாம்சத்தில் பரிவர்தனைக்குப்பிறகு) கடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் பேக்கரியை படிப்படியாக குறைத்துவிட்டு பதிலாக சந்திரன் குறிக்கும் மளிகை கடை (கடன் கொடுக்காமல்) நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செவ்வாயின் நிலையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் கடன் வசூலான பிறகு இருக்கும் இடத்தில் மேலும் இரு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் சொல்லப்பட்டது.   

ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவர் ஈடுபடும் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எத்தனை திறமை படைத்தவராயினும் ஒருவர் ஜாதகப்படி சாதகமற்ற தொழிலை தேர்ந்தெடுத்தால் தோல்வி நிச்சயம். ஜாதகரை வாட்டும் கிரகங்களைப்போலவே அவர்களை உயர்த்தும் கிரகங்களும் உண்டு. அத்தகைய கிரகங்களை அடையாளங்கண்டு அவை சார்ந்த வகைகளில் ஒருவர் ஈடுபடுவது அவரது வாழ்வை நிச்சயம் உயர்த்தும்.  


விரைவில் அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Monday 21 December 2020

அவன் இவன்!

                          

தொடர்பற்ற ஆண்கள் இருவர் அதுவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். அதனால் ஒரே மாதிரியான ஜாதக அமைப்பைக்கொண்டவர்களின் வாழ்க்கையிலும் வேறு வேறு விதிகள் செயல்படுகிறது. ஜோதிடத்தில் உபய லக்னங்களுக்கு அதிபதிகளான குருவும் புதனும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், கேந்திராதிபத்திய தோஷத்தை தருபவர்கள்.  இவ்விரண்டில் குருவிற்கு புதனைவிட தோஷ வலு அதிகம். நாம் கீழே ஆராயவிருக்கும் இரு ஜாதகங்களிலும் இவ்விரு கிரகங்களும் லக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகின்றன. பரிவர்தனையாவதால் இவற்றிற்கிடையேயான தோஷங்கள் நீங்கி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்ளும். இது ஜோதிட ரீதியான விதி. உண்மையில் இவ்விதி எப்படி செயல்படுகிறது என்பதை இங்கு ஆராய்வோம்.       

அவன்:

 

மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. தனுசு லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற  குரு, பாதகாதிபதியும் களத்திர பாவாதிபதியுமான புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். ஜாதகர் பிறந்து 2 வயதுவரைதான் குருதிசை. குரு பரிவர்த்தனைக்குப்பிறகு தனது வீட்டிற்கே வருகிறார். ஜாதகர் வரவு செலவுகளை நிர்வகிக்கும் நகரத்தார் குடும்பத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு  குடும்பத்தில் பிறந்தவர். குரு தனகாரகர். புதன் கணக்கு, பதிவுகள் காரகன். இதனால் ஜாதகர் குரு திசையில் இக்கிரகங்களின் காரகங்கள் தொடர்பான குடும்பத்திலேயே பிறந்திருக்கிறார். ஜாதகருக்கு சனி திசை முடிந்து அவரது 21 வயது முதல் 39 வயது வரை பாதகாதிபதி புதனின் திசை. புதனும் குருவும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள். எனவே இவை பரிவர்த்தனை ஆவதால் தீய பலன்கள் ஜாதகருக்கு அடிபட்டுவிடுகிறது. லக்னத்தில் அமர்ந்த கிரகம் 7 ஆம் இடத்தோடு பரிவர்த்தனை ஆவதால் 7 ஆமிட பலனை அதிகமாகவும் லக்ன பலனை குறைவாகவும் செய்யும். இதன் அடிப்படையில் புதன் ஜாதகருக்கு களத்திர பாவாதிபதி என்பதால் திருமணத்தையும், 1௦ ஆம் அதிபதி பாவத்பாவ அடிப்படையில் 1௦ க்கு 1௦ ல் பரிவர்த்தனக்குப்பின் வருவதால் தனது காரகத்துவம் சார்ந்த வகையில் ஜீவனத்தையும் அமைத்துத்தரவேண்டும். 

ஜாதகர் கல்வியை முடித்து புதன் சார்ந்த தகவல் தொடர்பு நிறுவனத்தில் உயர்பதவியில் வேலை கிடைக்கப்பெற்றார். 7 ஆமதிபதி புதன் ஜாதகருக்கு திருமணத்தை செய்து வைத்தது. ஜாதகரின் மனைவி புதன் தொடர்புடைய (Data Processing) கணினி நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். புதனும் சுக்கிரனும் பங்குச்சந்தைக்கு காரக கிரகமாகும். ஜாதகருக்கு மனைவி வந்த பிறகு பங்குச்சந்தையில் ஈடுபட்டு பெரும் தனம் குவித்தார். புதன் நண்பர்களையும் குறிக்கும் கிரகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜாதகர் நண்பர்களிடம் முதலீடுகளை பெற்று நிறைய சம்பாதித்துக்கொடுத்தார். மனைவியை குறிக்கும் 6, 11 அதிபதி சுக்கிரன் குருவின் விசாகம்-4 ல் லக்னத்திற்கு 12 ல் பாக்யாதிபதி சூரியனுடன் அஸ்தங்கமடையாமல் மறைகிறது. 6 ஆமதிபதி 12 ல் மறைவது விபரீத ராஜ யோகமாகும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் மனைவி வந்த பிறகுதான் ஜாதகர் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்தார். 7 ஆமிட புதன் இங்கு செயல்படுகிறார். 7 ஆம் பாவாதிபதி எனும் வகையில் தனது அம்சம் ஜாதகரின் வாழ்க்கையில் பங்கேற்ற பிறகே ஜாதகர் பங்குச்சந்தையில் செல்வத்தை வாரி வழங்கியது.

இவன்:



இந்த மிதுன லக்ன ஜாதகத்திலும் லக்னாதிபதி புதனும் பாதகாதியான 7 ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை ஆகின்றன. குரு வக்கிரமடைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் பாதக ஆதிபத்தியம் அடிபட்டு 1, 7 ஆம் பாவ பலன்கள் ஜாதகருக்கு சிறப்பாக கிடைக்க வேண்டும். ஜாதகருக்கு பிறந்து 13 வயது வரை சனி திசை. அதன் பிறகு 3௦ வயது வரை புதன் திசை. முந்தைய ஜாதகத்தில் பரிவர்த்தைக்குப்பின் 7ல் அமர்ந்த புதன் தனது திசையில் திருமணத்தையும் ஜீவன வகையிலும் பலன் தந்தது. இந்த ஜாதகத்தில் புதன் பாதக ஸ்தானத்திலிருந்து பரிவர்த்தனை ஆகி லக்னத்திற்கு வருகிறது. லக்னத்தில் வந்து அமரும் புதன் குடும்ப பாவமான 2 க்கு விரையத்தில் அமர்வதால் இரண்டாமிட பலனை குடும்பம் அமைவதையும் வருமான வகைகளையும் பாதிப்பார். எப்படியாயினும் 7 ஆமிடத்தை  பார்ப்பதால் திருமணம் நடந்திட வேண்டும். ஆனால் ஜாதகருக்கு புதன் திசையில் திருமணம் நடக்கவில்லை. காரணம் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் புதனின் பகை கிரகமான செவ்வாய் அமைந்துள்ளார். இதனால் செவ்வாய் புதனின் செயல்பாடுகளை பாதிப்பார். இதனால் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாயை மீறி ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி வைக்க புதனால் இயலவில்லை.


இந்த ஜாதகத்தில் தனுசு புதன் கேதுவின் மூல நட்சத்திரத்திலும் மீன கேது புதனின் ரேவதி நட்சத்திரத்திலும் அமைகின்றன இதனால் குருவோடு பரிவர்த்தையாகும் புதன் கேதுவோடும் தொடர்புகொள்கிறார். ஞான காரகன் கேது செவ்வாய்க்கு திரிகோணத்தில் அமைந்துள்ளார். இதனால் கேதுவோடு சாரப்பரிவர்த்தனையாகும் புதன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாய்க்கு திரிகோணத்தில் நிற்கிறார். செவ்வாயும், கேதுவும் புதனின் சாரம் பெற்றதாலும் ஜாதகருக்கு புதன் திசையிலும் கேது திசையிலும் திருமணம் நடக்கவில்லை. முந்தைய ஜாதகத்திலும் இதே அமைப்பு இருக்கிறது என்றாலும் லக்னம் வேறு வேறு என்பதும் குடும்ப பாவத்தோடு கேதுவும் செவ்வாயும் தொடர்புகொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜாதகர் தற்போது சுக்கிர திசையில் உள்ளார். இரண்டாவது பாவத்தையும் லக்னாதிபதியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செவ்வாயின் புக்தியில் ஜாதகர் தற்போது உள்ளார். ஜாதகருக்கு தற்போது திருமணத்திற்கான காலமே. ஜாதகருக்கு வயது தற்போது 44. இரண்டில் சந்திரனுடன் செவ்வாய் அமைந்து 2 ஆம் அதிபதி சந்திரனின் ஹஸ்தம்-3 ல் அமைந்த ராகு இவ்விருவரையும் கட்டுப்படுத்துகிறது. செவ்வாய் முதலில் 8  ஆமதிபதி சனியை தொடுவதால் மனைவி மணமுறிவுற்றவராக இருப்பார்.

மேற்கண்ட இருவரும் ஒரே நாளில் (30.11.1977) வெவ்வேறு ஊர்களில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்டிருந்தாலும் லக்னம் இங்கே இருவரின் விதியை தொடர்பற்று மாற்றி அமைக்கிறது. மேலும் குரு வக்கிரமடைந்த நிலையில் பின்னோக்கிய நிலையில் தான் நிற்கும் பாவத்திற்கு முந்தைய பாவத்தின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்றாலும் திசா-புக்திகளுக்கு இவ்விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கும்வரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Tuesday 15 December 2020

ஊமையை பேச வைத்த குரு சனி சேர்க்கை!

 


சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஊமையான சிவாஜிகணேசன் அன்னை சரஸ்வதி அருளால் திடீரென பேசத்துவங்கி அற்புதமான பாடல் ஒன்றையும் பாடுவார். நிஜத்தில் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் தெய்வ சக்தி மூலம் இது சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட அதிசய நிகழ்வொன்றை ஜோதிட ரீதியாக இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன். முடிவுகள் ஆச்சரியமானவை என்றாலும் ஊமைகள் பேசவும் கிரகங்கள் சம்மதிக்க வேண்டும். இப்பதிவில் நாம் ஆராயவிருக்கும் ஜாதகி 1981 ல் பிறந்தவர். பிறவி ஊமை. ஆனால் தனது 14 ஆம் வயதிற்குப்பிறகு பேச்சு வந்தது. தற்போது சிறந்ததொரு குடும்பத்தலைவியாக திகழும் இவரா சிறுவயதில் ஊமையாக இருந்தார்? என நம்ப முடியாதவராக காட்சியளிக்கிறார். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.


ஜோதிடத்தில் பேச்சுக்கு உரிய காரக கிரகம் சந்திரன். பேச்சுத்திறமைக்கு உரிய காரக கிரகம் வாக்கு காரகன் என அறியப்படும் புதன். கால புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் ரிஷபம் பாவ கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது நல்ல நாவன்மைக்கு அவசியம். சந்திரன் மட்டுமல்ல சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். மேலும் சந்திரன் நீசமடையும் விருட்சிக ராசி, கடகத்தில் உச்சமடையும் குருவின் மீன ராசி ஆகிய மூன்று நீர் ராசிகளும் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருப்பது ஒருவரின் பேச்சு பாதிக்கப்படாமல் இருக்க உதவும். அதனால்தான் மூன்று நீர் ராசிகளும் ஜோதிடத்தில் ஊமை ராசிகள் என அழைக்கப்படுகின்றன. புதனும் சுக்கிரனும் அடுத்ததாக ஜாதகத்தில் சிறப்பாக அமையப்பெற்றிருப்பது நாவன்மைக்கு சிறப்பு. காரணம் சுக்கிரன் காலப்புருஷனுக்கு வாக்கு ஸ்தானாதிபதி என்பதோடு அவர் சுரப்பிகளுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் சிந்தனையில் எழும் எண்ணங்கள் பேச்சு வடிவம் பெற எண்ணச்சமிக்கைகள் காலபுருஷனின் குரல்வளையை குறிக்கும் மிதுனத்திற்கு தடையின்றி செல்ல ரிஷப ராசியும் சுரப்பிகாரகன் சுக்கிரனும் உதவ வேண்டும். நாவன்மைக்கு உரிய புதனும் மிதுன ராசியும் அதன் பகை கிரகமான செவ்வாயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.  

மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் நின்று தன் வீட்டில் நீசம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதி சந்திரனை பார்க்கிறார். ரிஷப ராசி பாதிக்கப்பட்டாலும் செவ்வாய் ராசி அதிபதி ஆவதால் சந்திரனுக்கு நீச பங்கம் கொடுத்தாக வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரனும் சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு காரகன் புதன், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்கிரமாகியுள்ளார். மிதுன ராசிக்கு பாவகர்த்தாரி யோகம் உள்ளது. மிதுன ராசியை பாதகாதிபதி குருவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். வாக்கு ஸ்தானாதிபதியும் பேச்சு காரகனுமான நீசம் பெற்ற சந்திரனை சனி மூன்றாம் பார்வையாகவும், செவ்வாய் 7 ஆம் பார்வையாகவும் பார்கின்றனர். சனி செவ்வாய் பார்வை பெற்ற பாவங்களும் அதில் இருக்கும் கிரகங்களும் பாதிப்படைய வேண்டும். சுக்கிரனும் புதனும் அஸ்தங்கமடையாவிட்டலும் சுக்கிரனனும் புதனைப்போலவே ராகுவின் திருவாதிரை சாரம் பெற்று பாதிக்கப்பட்டுள்ளார். லக்னாதிபதியும் வாக்கு காரகனுமான புதன் வக்கிரமாகியுள்ளார். அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் திருவோணம்-1 ல் நின்று சந்திரனை முதலில் தொடவிருக்கும் கேதுவும் சந்திரனின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளார்.  

இவை யாவும் ஜாதகிக்கு பேசும் திறன் பாதிக்கப்படும் என்பதை குறிக்கின்றன. இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள செவ்வாயால் ராசி வலுவடைகிறது. செவ்வாய் சந்திரனை நீசபங்கப்படுத்துவதோடு ராசிக்கு 2 ஆம் இடத்தையும் தனது 8 ஆம் பார்வையால் பார்ப்பதை கவனிக்க வேண்டும். மேலும் சந்திரன் பாதகாதிபதி குருவின் விசாகம்-4 ல் நின்று நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். சனியும் குருவும் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். ராசியாதிபதி செவ்வாய், ராசியின் யோகாதிபதியும் லக்னாதிபதி புதனின் நண்பருமான சூரியனின் சிம்ம ராசியை தனது நான்காம் பார்வையாக பார்க்கும் சூழலில் சூரியனும் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் அமைந்துள்ளார். இதனால் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் ஒரு இணைந்து செயல்படும் தன்மை ஏற்படும்.

ஜாதகி பிறந்தது முதல் 2 வயதுவரை பாதகாதிபதி குருவின் திசையில் பேசவில்லை. அதன்பிறகு 1983 முதல் 2002 வரை சனி திசை. லக்னத்திற்கு 8 & 9 ஆம் அதிபதியாக சனி வருகிறார். சனிக்கும், சூரியனுக்கும் அஷ்டமாதித்ய தோஷமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாதகாதிபதி தொடர்பால் தோசமுண்டு. 19 வருட சனி திசையின் முதல் ஒன்பதரை வருடங்கள் முடிந்து இரண்டாவது பகுதி 1995  ல் வந்தது. அப்போது சனி திசையின் சந்திர புக்தியில் ஜாதகி இருந்தார். சந்திரன் செவ்வாயால் நீசபங்கப்படுதப்பட்டுள்ளார். சந்திரன் தந்து புக்தியில் 6 ஆமிட பலனையும் 11 ஆமிட பலனையும் வழங்க வேண்டும். சந்திர புக்தியில் இரண்டாம் பகுதியான லாப ஸ்தான பலனை சந்திரன் வழங்கத்துவங்கிய காலம். ஜாதகிக்கு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரிரு வார்த்தைகள் பேசத்துவங்கினார். சந்திரனை நீச பங்கப்படுத்திய செவ்வாய் புக்தி துவங்கிய பிறகு ஜாதகி எல்லோரையும் போல சாதாரணமாக பேச ஆரம்பித்தார். அப்போதைய கோட்சார நிலை (1997 துவக்கம்) கீழே.

ஒரு நல்ல திசா-புக்திகள் வரும்போது சர்ப்ப கிரகங்கள் ஜாதகருக்கு இருக்கும் பிரச்னையை கோட்சாரத்தில் அவை தொடர்புகொள்ளும் பாவங்கள் மற்றும் கிரகங்களின் மூலம் தீர்த்து வைக்கும். அதே போன்று ஒரு மோசமான திசா – புக்தி காலங்களில் அவை வரும் ராசியை சார்ந்து அதிலுள்ள கிரகங்களை சார்ந்து இல்லாத பிரச்னையை ஜாதகருக்கு உருவாக்கி  விட்டுச்செல்லும். ஜனன காலத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துவிட்ட ராகு அந்த பாவ பலனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது கோட்சார ராகு ராசிக்கு லாபத்தில் ஜனன சனி-குரு மீது வந்து நிற்கிறது. பாதகாதிபதி குருவை கட்டுப்படுத்தும் கோட்சார ராகு, திசா நாதன் சனியின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார். ராகு-கேதுக்கள் மருத்துவ ஜோதிடத்தில் மிகச்சிறந்த பலன்களை வழங்குபவை என்பது யாவரும் அறிந்ததே. லக்னத்திற்கு சுகஸ்தானத்தில் மருத்துவ கிரகம் புதனின் மூலத்திரிகோண வீட்டில் வந்தமரும் ராகு, திசா நாதன் சனிக்கு புதனின் மருத்துவ குணத்தையும் தனது நுட்பத்தையும் சேர்த்து வழங்கி தற்போது செயல்பட வைப்பார். கோட்சாரத்தில் குரு நீசமாகி சனியோடு பரிவர்த்தனை பெறுகிறது. இதனால் குருவும் சனியும் சம கிரகங்களானாலும் சனியின் தயவில்தான் பரிவர்த்தனையால் குரு நீச பங்கம் அடையவேண்டும். எனவே குரு தனது பாதகாதிபத்தியத்தை இழப்பார். ஜனன சனி, குருவிற்கு திரிகோணத்தில் அமர்ந்த கேது கோட்சாரத்திலும் இவ்விரு கிரகங்களோடு தொடர்புகொள்வதை கவனிக்கவேண்டும். இதனால் இவை கேதுவின் மருத்திவ நுட்பத்தை கோட்சாரத்தில் பெறுகின்றன. 

அதே சமயம் கோட்சாரத்தில் பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் கேதுவின் பிடியில் சிக்குவதால் குரு தனது பாதகாதிபத்திய தோஷத்தை இழபார். சனியும் குருவும் கோட்சாரத்தில் கடக ராசியை பார்வை செய்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குரு ஜனன காலத்தில் கேது நின்ற சந்திரனின் அதே திருவோண நட்சத்திரத்தில் கோட்சாரத்தில் சென்ற போது ஜாதகி முழுமையாக பேசத்துவங்கினார். ஜாதகி சனி திசையின் செவ்வாய் புக்தியில் பரிபூரணமாக பேசத்துவங்கினார். ஜனன காலத்தில் சனி,குருவிற்கு திரிகோணத்தில் செவ்வாய் நின்றதால் புக்தினாதனின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சனி திசை சந்திர புக்தியில் ஜாதகி பேச முயற்சித்தார் என்றால் செவ்வாய் புக்தியில் தெளிவாக தங்குதடையின்றி பேசத்துவங்கினார். இதற்கு ஜனன காலத்தில் சேர்க்கை பெற்ற வருட கிரகங்களான சனியும் குருவும் காரணம். திசா புக்தி கிரகங்கள் இவ்விரு கிரகங்களோடு தொடர்பானது மிக முக்கிய காரணம். இவ்விரு கிரகங்களுக்கும் தங்களது மருத்துவ குணத்தை அதிசய மாற்றத்தை கோட்சாரத்தில் வழங்கிய ராகுவும் கேதுவும் மிக மிக முக்கிய காரணம். ராகு-கேதுக்களின் ஒப்புதலின்றி ஒருவர் கடும் சோதனைகளை சந்திக்கவும் முடியாது. அதிலிருந்து விடுபடவும் முடியாது. ஜனன  காலத்தில் லக்னத்தை நோக்கி நகரும் ராகு ஜாதகியின் வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கோட்சாரத்தில் ஜாதகியின் பிரச்னையை சீராக்கினார் என்றால் அது மிகையல்ல.

பேசா ஊமை ஒருவர் திடீரேன பேசம் அதிசயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. அதற்கும்  ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டு.

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday 6 December 2020

அப்பாவின் வேலை கிடைக்குமா?

 


திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை தற்போது கொண்டுவந்துவிட்டார்கள். இதுபோன்று வேலை அமைவது குரூரமான ஜாதக அமைப்பு என்றாலும் அதற்கும் ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஒருவரது லக்னாதிபதியை 9 ஆம் அதிபதி அல்லது சூரியன் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகர் தந்தையின் காலதிற்குப்பிறகே தனது வாழ்வில் முன்னேற முடியும். அத்தகையோர் தந்தையை விட்டு விலகி இருந்தால் பாதிப்பு குறையும். மேலும் தனது முன்னேற்றதிற்கான முக்கிய முடிவுகளை சனி ஜாதகத்தில் நன்றாக இருப்பின் சனிக்கிழமைகளிலும், சனி ஹோரைகளிலும் எடுத்தால் சிறப்பாக அமையும். மேலும்  ஞாயிற்றுக்கிழமையையும், சூரிய ஹோரையையும் தவிர்த்தால் சிறப்பு கூடும். சனியும் கெட்டிருந்தால் லக்னாதிபதி, லாபாதிபதியையும் மற்றும் ஜாதகத்தில் வலுவான கிரகம் இவற்றின் மூலம் தனது முயற்சிகளை மேற்கொள்வது சிறைப்பைத்தரும். எப்படியாயினும் சூரியனை தவிர்த்தல் நலம்.     

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 


  

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு, உச்சமான ராசியாதிபதி செவ்வாயுடன் இணைந்து நீச பங்கமாகிறார். ஜாதகத்தில் 9 மற்றும் 1௦ அதிபதிகள் சூரியனும் புதனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றனர். இது தந்தை வழி வந்த கொடுப்பிணை என்று கூறலாம். இதைத்தவிர கால புருஷனுக்கு 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குருவும் சனியும் இணைந்துள்ளதால் மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. இரண்டாவது யோகமே இதில் முதன்மையானது. சூரியன் 1௦ ஆமதிபதியோடு இணைந்து 2 ல் நின்றதால், தந்தை ஜாதகருக்கான வருமான வாய்ப்பை தமயனுக்கு வழங்குகிறார் என அனுமானிக்கலாம். சிம்மத்திற்கு 5 ஆமிடம் தனுசின் அதிபதி குருவோடு இணைவது மற்றொரு கோணத்தில் இதை தெளிவாக்குகிறது. ஜாதகர் விருட்சிக ராசிக்காரர் என்பது கவனிக்கத்தக்கது. இது ஜாதகரின் முன்னேற்றத்தைக்காண தந்தை உயிரோடு இருக்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. அப்படி எனில் தந்தை இறந்த பிறகே அவரது வேலை தமயனுக்கு கிடைக்கும். இது பாதகமான அமைப்பே. விருட்சிக ராசி இல்லை என்றால் தனது வேலையை தொடர இயலாத சூழலில் தந்தை வேலையை தமயனுக்கு விட்டுத்தருவார் எனலாம்.

1962 ல் அனுஷம்-3 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகருக்கு 1971 முதல் 7 & 1௦ க்குரிய புதன் திசை நடக்கிறது. புதன் 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையை வழங்க வேண்டும். 7 ஆம் அதிபதி என்பதால் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும். 9 ஆம் அதிபதி சூரியன் தனது வீட்டிற்கு 6 ல் பகை வீட்டில் தனது பகை கிரகங்களான சனி, கேது, லக்ன விரையாதிபதி செவ்வாயுடனும், பாதகாதிபதி புதனுடனும் இணைந்து நிற்கிறார். இது சூரியனுக்கு வலுவற்ற அமைப்பாகும். ஜாதகத்தில் ராசியாதிபதி செவ்வாய் உச்சமாகியுள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமாகவில்லை என்ற நிலையில் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியே வலுவானதாகிறது. புதன் செவ்வாயின் சாரம் அவிட்டம்-2 ல் நிற்கிறார். செவ்வாய் சிம்மத்தின் பாதகாதிபதி குறிப்பிடத்தக்கது. இதனால் ராசிக்கு 8 ஆமிடமான புதன் திசையில் ஜாதகரின் தந்தைக்கு பாதகம் ஏற்படும். ஜாதகரின் 2௦ ஆவது வயதில் ராசிக்கு 8 ஆமதிபதியான புதனின் திசையில் ராசிக்கு 9 ஆமிடத்தில் புதனின் ஆயில்யம்-3 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகர் தனது தந்தையை இழந்தார். ராகு தந்தையை குறிக்கும் சிம்மத்தின் விரையத்தில் நின்று தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தினார். 

தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்திய அதே ராகு, 1௦ ஆமிட தொடர்பையும் பெற்று 1௦ ஆமிடமான கன்னிக்கு லாபத்தில் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வேலையையும் வாங்கிக்கொடுத்தது. தந்தைக்கு திடீர் மரணம் ஏற்பட்டதால் கருணை அடிப்படையில் தந்தையின் வேலை தமயனுக்கு கிடைத்தது. 2 ஆமிடத்தில் சூரியன் அமைந்தால் அரசு வகை வருமானம் குடும்பத்திற்கு ஏற்படும். அந்த வகையில் அரசுத்துறை வங்கியில் பணிபுரிந்த தந்தை மூலமும் தந்தைக்குப்பிறகு அவரது வேலையை பெற்ற ஜாதகருக்கும் அரசு வகை வருமானம் வருகிறது. தசாம்ச லக்னம் தனகாரகன் குருவின் வீடாகி அதில் சனி நிற்பதால் தனம் சார்ந்த பணி. தசாம்ச 1௦ ஆமிடமான கன்னியை தங்களுக்குள் பரிவர்தனையான இரு தன காரக கிரகங்கள் சுக்கிரனும் குருவும் பார்க்கின்றனர். தசாம்ச பரிவர்த்தனை பாதகதிற்குப்பின் சாதகம் என்ற நிலையை குறிப்பிடுகிறது. தசாம்ச 1௦ ஆமதிபதியான புதன், லக்னத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்ப்பதால் கணக்கு, ஆவணம், பதிவுகள் தொடர்புடைய பணி என்பதை குறிப்பிடுகிறது. 


மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திப்போம்,


அதுவரை வாழ்த்துக்களோடு,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501.

Tuesday 1 December 2020

ஜவுளி வியாபாரம்

 


கொரானாவால் முடங்கிய உலகம் தற்போது மெல்ல தனது பழைய பாதைக்கு திரும்ப முயற்சிக்கிறது. இந்த காலத்தில் தொழில் துறை அடைந்த பாதிப்புகள் சொல்லில் வடிக்க முடியாதது. அதிலும் கடன் வாங்கி தொழில் செய்து வந்தவர்கள் வருமானமின்றி வட்டியும் கட்டமுடியாமல் தொழிலை ஓரம் கட்டிவிட்டு ஊரைப்பார்க்கப்போன பீகாரிகளை, பெங்காலிகளைவிட நம்மவர்களும் மிக அதிகம்.  சென்னையில் இருந்து சாரை சாரையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நம்மவர்கள் திரும்பிய அவலங்களை பார்த்தோம். இந்நிலையில் தன் உறவுக்காரப்பெண்  ஒருவருடன் இணைந்து ஜவுளி வியாபாரம் செய்யலாமா? எனக்கேட்டு என்னை அணுகினார் ஒரு பெண்மணி. பொதுவாக ஒருவரது தொழில் கூறுகளை ஜாதகம் சுட்டிக்காட்டும் என்றாலும் பிரசன்னம் அதன் நிகழ்கால நிலையை துல்லியமாக சுட்டிக்காட்டும். இதனால் இது போன்ற கேள்விகளுக்கு பிரசன்னத்தை கைக்கொள்வதே சிறந்தது. அவருக்காக ஒரு ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கப்பட்டது.

          


பிரசன்னத்தை ஆராயுமுன் பிரசன்னம் கேள்வியாளரின் கேள்வியை,  சிந்தனையை சுட்டிக்காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்திகொண்ட பிறகே பதிலுக்கு செல்ல வேண்டும். இது பிரசன்னத்தில் மிக முக்கியம். இனி மேற்கண்ட  பிரசன்னத்தை ஆராய்வோம் வாருங்கள்.

சனி ஹோரையில் சுக்கிர உப ஹோரையில் கேட்கப்பட்ட கேள்வி. இங்கு சனி என்பது தொழிலையும் சுக்கிரன் என்பது பெண்கள் உடுத்தும் ஆடைகளையும் குறிக்கிறது.

உதயத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளது. உடன் கூட்டாளியை குறிக்கும் புதன் உள்ளார். எனவே கூட்டுத்தொழில் என்ற கேள்வி சரி.

உதயத்திலும் கூட்டாளியை குறிக்கும் மேஷத்திலும் சுக்கிரன் அமைந்துள்ளது. எனவே கூட்டாளி பெண் என்பது தெளிவாகிறது.

தொழிலை குறிக்கும் 1௦ ஆம் அதிபதி சந்திரன் உதயத்திற்கு கூட்டாளி ஸ்தானமான 7 ல் உள்வட்டத்தில் நிற்கிறது. எனவே இது இரு பெண்கள் இணைந்து கூட்டாக தொழில் செய்வதைப்பற்றிய கேள்வி என்பது தெளிவாகிறது.

வியாபரத்தை குறிக்கும் துலாம் உதயமும் 7 ஆம் பாவமும் ஒற்றைப்படை ராசியாகி அதில் பெண் கிரகங்களான சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உடன் புதனும் இருப்பதால் இந்த பிரசன்னம் பெண்கள் தொடர்புடைய வியாபாரப்பிரசன்னம் என்பது தெளிவாகிறது. 

                       உள்வட்ட கிரக நிலை
 


பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களே தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உதயத்திற்கு 1௦ ல் அமைந்த குரு ஜாதகியின் தொழில் சிந்தனையை தெரிவிக்கிறார்.

உதயத்திற்கு பாதகாதிபதி சூரியன் உதயத்தில் வெளிவட்டத்தில் நீச நிலை பெற்று உதய ஆட்சி சுக்கிரனால் நீச பங்கம் பெற்று நிற்கிறார். இது கேள்வியாளர் கூட்டாளியுடன் இணைந்து தொழில் செய்தாலும் தானே முதன்மையான சக்தியாக இருக்க விரும்புவதும் அதற்கு பாதகாதிபதியான சூரியன் தடையாக இருப்பார் என்பது தெளிவாகிறது. 

உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சூரியன் கேது இணைவையும் மீனத்தில் தன் வீட்டில் ஜாம சனியோடு இணைந்து நிற்கும் செவ்வாயை உச்ச நிலையில் கடகத்தில் அமைந்த ஜாம குரு பார்க்கிறார். இதனால் தொழில் முதலீடு கடன் பெற்றே துவங்கும் என்பதும். அதற்கு உதயத்திற்கு 1௦ ல் உச்சமான 6 ஆமதிபதி குரு உதவுவார் என்பதும் புரிகிறது. ஜாம குரு கேதுவின் மகம்-2 ல் நிற்பது தொழில் முதலீடு கடன் மூலம் என்பதை உறுதி செய்கிறது.

கூட்டாளியை குறிக்கும் புதன் உதயாதிபதியுடன் இணைந்து உதயத்தில் பாதகாதிபதி சூரியனுடன் இணைந்து நின்று, கூட்டாளியை குறிக்கும் மேஷ செவ்வாய் மீனத்தில் 6 ஆமிடத்தில் அதன் பகை கிரகமான சனியோடு சேர்க்கை பெற்ற   நிலையில் ஜாம செவ்வாயும் விரையத்தில் நிற்கிறது. இதனால் கேள்வியாளர் தனது தொழிலில் மிகுந்த சிரமங்களை அடைவார். அதுவும் கூட்டாளி வகையில் விரையங்களையும் வேதனைகளையும் அடைவார் என்பது தெளிவாகிறது.

                          வெளிவட்ட கிரக நிலை 


    உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற ஜாம குருவை உதயத்திற்கு 4 ஆமிடத்தில் அமைந்த சனியும், ஆட்சி சனியால் நீச பங்கமடைந்த உள்வட்ட குருவும் பார்க்கிறார்கள். உடன் 1௦ ஆமதிபதியான ஜாம சந்திரனும் தன் வீட்டை பார்க்கிறார். இந்த நிலையை உதயத்திற்கு 7 ஆமிடத்தை முதன்மையாகக்கொண்டு பார்க்கையில் கூட்டாளிக்கு நிர்வாகத்திறமை உண்டு. ஆனாலும் இரு செவ்வாயின் நிலையால் மேற்சொன்ன பாதிப்பு மற்றும் விரையம் ஆகியவை இருக்கும்.

இது எதுவரை இருக்கும் எனில் உதயத்திற்கு 4 ல் நின்று 1௦ ஆம் வீட்டை பார்க்கும் சனி 4 ஆம் வீட்டை விட்டு நகரும் வரையிலும் கோட்சார கேது உதய புள்ளியை கடக்கும் வரையிலும் இருக்கும். அதன் பிறகு தொழில் பாதிப்புகள் குறையத்துவங்கும். ஆனால் உள்வட்ட சனி உதயத்திற்கு 6 ல் மீனத்திற்கு செல்லும் காலம் வரை தொழிலில் அதிகம் கடன் கொடுக்காமலும் அதிக இருப்பு வைத்துக்கொள்ளாமலும் வியாபாரம் செய்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டது.

உதயம் (சுவாதி), ஆரூடம் (சதயம்), கவிப்பு (சதயம்) ஆகியவை ராகு சாரம் பெறுவது கவனிக்கத்தக்கது. உதயாதிபதியின் மற்றொரு வீடான ரிஷபத்தில் நிற்கும் ராகு உதயாதிபதி போன்றே செயல்படவேண்டும். ராகு உதயத்திற்கு 8 ல் நின்றாலும் அது உதயாதிபதியின் மற்றொரு வீடு என்பதால் பாதிப்பை தராது.

கவிப்பு 5 ல் இருப்பது இந்த தொழிலால் கேள்வியாளருக்கு  ஏற்படவிருக்கும் பாதிப்பை சொல்லும். கவிப்பும் உதயாதிபதியின் சாரம் பெறுவதால் அது பாதிப்பை தர இயலாது.

ஆரூடம் 5 ல் நிற்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கேள்வியாளர் கல்லூரியில் படிக்கும் தனது மகளை தனது தொழிலுக்கு சேர்த்துக்கொள்ளலாமா? என கேட்டார். பிரசன்னத்தில் உச்சம் மற்றும் நீசம் பெற்றும் நிற்கும் குருவை ஆராய்ந்தும் மூத்த மகளை குறிப்பிடும் சுக்கிரன் 7 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதை வைத்தும் அதுவே மிகச்சிறப்பானது என கேள்வியாளருக்கு சொல்லப்பட்டது. இதனால் கேள்வியாளர் தொழில் கூட்டிற்கு எண்ணியிருந்த பெண்ணை  தவிர்த்து மகளையே கூட்டாளியாக்கிவிட ஒப்புக்கொண்டார்.  எனினும் நிர்வாகத்தை மகளிடமே தந்துவிடவேண்டும் என்றும் நீங்கள் உதவியாளராக மட்டுமே செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 


மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன் 

கைபேசி: 8300124501  

Monday 23 November 2020

முயல் வளர்ப்பு லாபம் தருமா?

 


அன்பர் ஒருவர் முயல் பண்ணை வைத்து சம்பாதிக்க ஆசைப்படுகிறேன். எனது ஜாதகப்படி அது லாபகரமானதாக இருக்குமா? என்ற கேள்வியுடன் தொடர்புகொண்டார். இது ஒரு சாதாரண தொழில் ரீதியான கேள்விதான் எனினும் தொடர்புகொண்ட நபர் தன்னை ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். பொதுவாக ஆசிரிய தொழில் புரிவோர் குருவின் ஆதிக்கத்தில் வருபவர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் என்றால் ஜாதகத்தில் ஜீவன பாவங்களுடன் குருவும் சூரியனும் தொடர்புகொண்டிருக்க வேண்டும். குருவும் சூரியனும் சத்வ குணத்தை சேர்ந்த கிரகங்களாகும். அப்படி இருக்கையில் இவர் எப்படி முயல் பண்ணை வைத்து அதை மாமிசமாக்கி உண்ணக்கொடுத்து தனது கர்மாவிற்கு பாதகத்தை உண்டாக்கிக்கொள்கிறாரே என்று எண்ணினேன். முன்பொரு முறை என்னை தொடர்புகொண்ட தென்மாவட்டத்தை சார்ந்த பிராமண வகுப்பை சார்ந்த நபர் தனது நிலத்தில் மீன் வளர்ப்பு செய்யலாமா? என்று கேள்வி கேட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார். கலிகாலத்தில் இவை சாதாரணம் என்று எண்ணியபடி ஜாதகத்தை ஆராய்ந்தேன்.

கீழே ஜாதகம்.


1) ஜாதகத்தில் வருமானத்தை தரும் 2 ஆம் பாவத்தில் குரு, ஜீவன காரகன் சனி சாரத்தில் அனுஷம்-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகரின் ஜீவன வகையில் குருவின் தன்மை இருக்கும்.

2) குரு 1௦ ஆமிடத்தையும், சனி 1௦ க்கு 1௦ ஆன 7 ஆமிடத்தை பார்ப்பதாலும் ஜாதகர் ஆசிரியராக பணிபுரிய ஜாதக அமைப்பு உள்ளது.

3) புதன் 1௦ ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் ரோஹிணி-2 ல் நின்று,  2 & 7 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து குரு பார்வை பெற்று 2, 7, 1௦ ஆமிடத்தோடு தொடர்புகொண்டு வர்கோத்தமம் பெற்றதால் ஜாதகர் ஆசிரியர் பணி புரிவார் என்பதை அனுமானிக்கலாம்.

4) 1௦ ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் புதனின் ஆயில்யம்-1 பெற்று, 1௦ ஆமதிபதி சந்திரன் புதன் வீட்டில் கன்னியில் 2 ஆம் பாவத்திற்கு லாபத்தில்  அமைந்ததாலும், இப்படி அமைந்த 1௦ ஆமதிபதி சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் சந்திரனின் சாரத்தில் அமைந்ததாலும் ஜாதகரின் பணி கல்வி தொடர்பானது என்பது தெளிவாகிறது. 1௦ ஆமிட கிரகமான சுக்கிரன் நவாம்சத்தில் குரு வீட்டில் நிற்பது கவனிக்கத்தக்கது.  

5) ராசிக்கு 1௦ ல் ராசியாதிபதி புதனின் வீட்டில் திக்பலத்தில் அமைந்த சூரியனால் ஜாதகர் கல்வி தொடர்பான அரசுத்துறையில் பணிபுரிகிறார் என்பதை அனுமானிக்கலாம். இந்த சூரியன் நவாம்சத்தில் சனியோடு இணைந்து நிற்பதும் ஜீவனம் அரசுவகை என்பதை குறிப்பிடுகிறது.

6) இன்னும் எளிமையாக தசாம்சத்தில் 1௦ ஆம் அதிபதி சந்திரன் குரு வீட்டில் அமைத்து, 1௦ ஆமிடத்தில் சூரியன் அமைந்து, 1௦ க்கு 1௦ ஆமிடமான (பாவத்பாவம்) 7 ஆமிடத்தை அதன் அதிபதி செவ்வாயோடு இணைந்த குரு பார்ப்பதாலும் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை அருதியிட்டுக்கூறுகின்றன.  

ஒருவரது தொழிலை அனுமானிக்க எத்தனை உபாயங்கள் பாருங்கள். இங்கு கூறியுள்ளவை சில மட்டுமே. இப்படி ஜாதகம் அமையப்பெற்றவர் ஏன் தற்போது முயல் பண்ணை வைக்க எண்ணுகிறார் என ஆராய்வோம் வாருங்கள்.

ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. குரு ஜாதகத்தில் உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் குரு வக்கிரம் பெற்று அதன் அதிபதி செவ்வாயால் கால புருஷனுக்கு உணவு ஸ்தானமான ரிஷபத்தில் இருந்து பார்க்கப்படுகிறார்.  குரு செவ்வாய் பார்வை பெற்றதால் தோஷமான நிலையில்தான் உள்ளார். அதுவும் விருட்சிகத்தில் அமையும் பாதிக்கப்பட்ட குரு வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக கெடு செயல்களில் ஜாதகரை ஈடுபட வைக்கும். ஏனெனில் விருச்சிகம் கால புருஷனுக்கு 8 ஆமிடமான மறைவு ஸ்தானமாகும். பாவியின் வீட்டில் பாவியின் பார்வையில் குரு உச்சமாகி வக்கிரமானதால்  நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற சனியின் சாரமும் பெற்று அது 2 ஆம் பாவமும் ஆனதால் ஜாதகர் இப்படி ஒரு கொலைக்கு உயிர் பிராணியை வளர்த்துக்கொடுக்கும் தொழில் செய்வார் என்பது புலனாகிறது. 2 ஆம் பாவம் என்பது 1௦ அதிபதி சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் ஜாதகர் இப்படி ஒரு நீசத்தொழிலுக்கு எண்ணம்கொண்டுள்ளார். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது பசு, யானை, எருமை, குதிரை போன்று வாழ்க்கைக்கும் ஜீவனத்திற்கும் உறுதுணையாக இருக்கும் பிராணிகளை 4 ஆமிடத்தைக்கொண்டும் இதர வகை பிராணிகளை அதாவது உணவுக்காக வளர்ப்பது, பாதுகாப்பிற்காக நாய் வளர்ப்பது போன்றவற்றை 6 ஆமிடத்தைக்கொண்டும் அறியவேண்டும். பொதுவாக பண்ணை வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் பிராணிகளை 4 ஆமிடம் குறிப்பிடும்.

இந்த ஜாதகத்தில் நீச்சதிற்கொப்பான நிலை பெற்ற 4 ஆமதிபதி சனியின் சாரம் அனுஷத்தில் வக்கிரமான 6 ஆமதிபதி குரு நிற்கிறார். இதனால் ஜாதகர் வியாபாரத்திற்காக பிராணிகளை பண்ணை முறையில் வளர்க்க எண்ணுகிறார் என்பது தெரிகிறது. இதில் ஜாதகர் ஏன் முயல் வளர்க்க எண்ணுகிறார் என்ற கேள்வி எழுகிறது. முயலை குறிக்கும் காரக கிரகம் சந்திரனாகும். ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் முயல் வளர்க்க எண்ணுகிறார். புதனின் வீட்டில் சந்திரன் 2 க்கு லாபத்தில் அமைந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் புதனாலும் ஜாதகரின் வியாபர நோக்கம் புலனாகிறது. எப்படிப்பார்த்தாலும் குருவின் அம்சத்தில் போதனை செய்து சம்பாத்தியம் செய்யும் ஒருவர் உணவிற்காக பிராணிகளை வளர்த்துக்கொடுப்பது பாதகமே என்றொரு நெருடல் எழுகிறது. சரி இதன் விழைவு என்ன என ஆராய்வோம். ஜாதகத்தில் சந்திரன் விரைய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்துள்ளார். இதனால் சுய தொழில் செய்தால் ஜாதகர் தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதி. மேலும் 12 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் ஒருவர் தனது கர்மாவின் அடிப்படையில் பெற்ற சாபத்தை குறிப்பிடும் கிரகமாகும். ஜாதகருக்கு சந்திரனின் காரகமான மாத்ரு வகை சாபம் உள்ளது. ஜாதகர் இந்த தொழிலை செய்தால் அது அதிகமாகி ஜாதகரை பழிவாங்கும். இதை தவிர்க்க ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா? என காண்போம்.

ஜாதகத்தில் 2 ல் நிற்கும் 6 ஆமதிபதி குரு வக்கிரமாகி, குருவின் சார நாதனும் ஜீவன காரகனுமான சனியும் வக்கிரமாகியுள்ளதால் ஜாதகர் தொழில் விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்க மாட்டார். இதனால் ஜாதகர் ஜோதிடர்கள் மட்டுமல்ல நண்பர்களிடமும் ஆலோசனை மட்டுமே கேட்பார். ஆனால் முடிவை ஜாதகர் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். எனிவே இந்த பாதக தொழிலை செய்யாதீர்கள் என்று இவருக்கு ஆலோசனை சொல்வது வீண். மேலும் கால புருஷனுக்கு 8 ஆமதிபதியான, செவ்வாய், லக்னத்திற்கு 8 ஆமிடதிலிருந்து திசா நாதன் குருவை பார்ப்பதால் ஜாதகர் இந்த தொழிலை உறுதியாக மற்றும் பிடிவாதமாகச்செய்வார். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும், சாபத்தில் விளைவையும் ஜாதகர் அனுபவிப்பார். 1௦ க்கு பாதகத்தில் நிற்கும் அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தியில் அது நடக்கும். தற்போது ஜனன செவ்வாய் மற்றும் குரு மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகு-கேதுக்களும், லக்னத்திற்கு 4 ல் இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்க்கும் குருவும் சனியும் இதை உறுதி படுத்துகின்றன.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

  

Sunday 15 November 2020

நீச்ச குரு தோஷங்கள்!

 


ஜோதிடத்தில் முதன்மையான சுப கிரகம் குரு ஆவார். குரு தற்போது மகரத்திற்கு வந்து நீசமாகிறார். இப்படி பிரதானமான சுப கிரகம் நீசமாவது அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பல்ல என்றாலும் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் திருமணம், குழந்தைப்பேறு  உள்ளிட்ட சுபகாரியங்கள் கூட பாதிப்பை தரக்கூடியது. அதனால்தான் குரு,சுக்கிர கிரகங்கள் தோஷமடையும் காலங்களில் சுபகாரியங்களை விலக்குமாறு சொல்லிவைத்தனர் நமது முன்னோர்கள். குரு மகரத்தில் நீசம் அங்கு ஆட்சி பெற்று நிற்கும் சனியால் நீச பங்கமடைந்தாலும் கூட சில விளைவுகள் தவிர்க்க இயலாதவை. உதாரணத்திற்கு கீழே ஒரு ஜாதகம்.

 

இது 1961 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம் இது. ஆட்சி சனியால் நீச பங்கம் பெற்ற குரு லக்னத்திற்கு 10, 12, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார். குரு சனி இணைவு பிரம்மஹத்தி தோஷத்தை தரும் என்றாலும் பொருளாதரத்திற்கு இது சிறப்பை தரும் அமைப்பாகும். சனியோடு இணைந்த குரு 1௦, 2 ஆகிய பாவங்களை பார்த்ததால் ஜாதகர் சிறப்பாக சம்பாதித்தார். குரு 12 ஐ பார்த்ததால் வீணான செலவுகளும் ஏற்பட்டன. இப்போது குருவோடு இணைந்த சனி லக்னத்திற்கு 8, 12, 3 ஆகிய பாவங்களை பார்க்கிறது. ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி குரு சனியால் நீச பங்கம் பெற்று நிற்கும் நிலையில் ஜாதகரின் வைராக்கியம் சீர் குலைகிறது. வைராக்யம், மன உறுதி காரகன் செவ்வாய் தனது பகை கிரகமான புதனுடன் இணைந்து 3 ல் நின்று சனியை 4 ஆம் பார்வை பார்த்து சனியின் 1௦ ஆவது பார்வையை வாங்குகிறார். முதலாவது காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில் செவ்வாய் புதனோடு இணைந்து நின்றதால், நிறைந்த சம்பாத்யத்தினால் ஜாதகர் மனச்சலனம் அடைந்து இல்லற ஒழுக்கம் தவறுகிறார். சனி 3 ஆமிட செவ்வாயை பார்த்ததன் விளைவு இது. 12 ஆமிடத்தை சனி பார்த்ததால் இதன்பொருட்டு தனது பொருளாதாரத்தின் ஒரு பகுதியை ஜாதகர் செலவு செய்கிறார். சனி அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தையும் தனது 3 ஆவது பார்வையால் பார்ப்பதால் தனது தவறுகள் வெளியே தெரிந்து அவமானப்படுகிறார். இத்தனைக்கும் ஜாதகத்தில் 5, 8 க்குரிய குரு நீச பங்கமடைந்துள்ளார். குரு 6 ல் மறைவது தோஷமே என்றாலும் 8 ஆமதிபதி 6 ல் மறைவது விபரீத ராஜா யோகம் ஆகும். குரு விபரீத ராஜ யோகத்தின் விளைவை பொருளாதார ரீதியாக தருகிறார். ஆனால் குருவும் சனியும் சம கிரகங்கள் என்பதாலும் சனியால்தான் தான் நீச பங்கமடைகிறோம் என்பதாலும் தண்டனை தரும் நீதிமான் சனியின் செயல்களை குருவால் தடுக்க இயலவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

            
ரிஷப லக்னத்திற்கு ஜாதகத்தில் 8, 11க்குரிய குரு பகவான் உச்ச செவ்வாயால் நீச பங்கமாகியுள்ளார். ஜாதகத்தில் 5 ஆமதிபதி புதன் நீசமாகி 5 ஆவது பாவத்தையே பார்க்கிறார். நீச பங்கமடைந்த குருவும் 5 ஆவது பாவத்தை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். நீச பங்கமடைந்த குரு, தன் வீட்டில் நீசம் பெற்று நிற்கும் புதனையும் நீச பங்கப்படுத்துகிறார். ஜாதகத்தில் குரு புத்திர, குடும்ப காரகனாகிறார். அதே சமயத்தில் இந்த ஜாதகத்தில் புதன் குடும்ப, புத்திர பாவத்திற்கு அதிபதி ஆகிறார். இந்த இரு கிரகங்களும் 5 ஆம் பாவத்தை பார்க்கின்றனர். குரு ஜாதகத்தில் குடும்ப பாவமான மிதுனத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். அதே சமயம் 5 க்கு 5 வலுவடைந்து நிற்கிறார். குடும்ப பாவத்தில் கேது நிற்கிறார். இதனால் புதன் 2 ஆவது பாவத்தின் மீது தனது கட்டுப்பாட்டை இழக்கிறது. அதே சமயம். நீச பங்கமடைந்த புதன் 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் புத்திர வகையில் நன்மையை செய்தாக வேண்டும். இந்த ஜாதகிக்கு குழந்தை (பெண்) பிறந்ததும் குடும்ப வாழ்வு முறிவடைந்தது. காரணம் குரு மற்றும் புதனின் ஒருங்கிணைந்த செயல்பாடே. ஆனால் ஜாதகியின் மகள் தற்போது வெளிநாட்டில் மிகச்சிறப்பாக உயர் கல்வி பயின்று வருகிறார். இதற்கும் குரு மற்றும் புதனின் ஒருங்கிணைந்த செயல்பாடே காரணமாகிறது. ஒன்றை பறித்து மற்றொன்றுக்கு இவை இரண்டும் வழங்குகின்றன. கர்ம வினை.

மூன்றாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


விருட்சிக லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற குருவும் சனியும் பரிவர்தனையாகியுள்ளன. குரு வக்ரமாகிவிட்டதாலும் பரிவர்தனையடைவதாலும் நீச பங்கமடைகிறது. ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு 5 ல் அமரும் குரு வக்கிர குரு ஆவதால் தனது மன உறுதியில் சில விட்டுக்கொடுத்தல்களை செய்துகொள்கிறார். பரிவர்த்தனைக்குப் பிறகு 3 ல் வக்கிரம் பெற்று அமரும் சனி ஜாதகிக்கு அசட்டுத்துணிச்சலை தருகிறார். லக்னாதிபதியும் வைராக்ய காரகனுமான செவ்வாய் லக்னத்திற்கு 12 ல் மறைந்து 12 ஆம் வீட்டோன் சுக்கிரன் நீசமாகியுள்ளார். இந்த அமைப்பால் ஜாதகியின் வைராக்கியம் தளர்ச்சியுறும். பரிவர்தனைக்குப்பின் மீனத்திற்கு இடம் பெயரும் குரு, நீச நிலை பெற்று லக்ன பாதகாதிபதியுடன் இணைந்திருக்கும் சுக்கிரனின் பார்வையை பெறுகிறது. இந்த அமைப்புகள் குடும்ப மற்றும் இல்லற விஷயங்களில் ஜாதகியை தவறாக வழிநடத்தும். இந்த ஜாதகி திருமணதிற்கு முன்னரே தனக்குப்பிடித்தமானவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்கிறார்.

குரு வாழ்வின் ஒட்டுமொத்த வளமைக்கான கிரகம். அது நீசமாகும்போது தவறான வழிகளில் உயர்வை கொடுத்து வாழ்வில் உயிரானவைகளாக, உயர்வானவைகளாக மதிக்க வேண்டிய விஷயங்களில் பாதிப்பை தந்துவிடும் வாய்ப்பு நிறைய உண்டு. தற்போதைய கோட்சாரத்தில் நீச குருவிற்கு 5 ல் கால புருஷனுக்கு 2 ல் ரிஷபத்தில் உச்ச கதியில் நிற்கும் ராகுவையும் குரு பார்க்க இருக்கிறார். இதனால் குரு-சண்டாள யோகம் செயல்படும் என்பதை இவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக காலங்காலமாக நாம் கட்டிக்காத்து வந்த சமுதாய, குடும்ப, பாரம்பரிய நடத்தை நெறிகள் மாறிவிடும் என்பது கலியின் கொடுமை என்று சொல்தைத்தவிர வேறு என்ன சொல்ல?

 

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி எண்: 8300124501.