Wednesday 25 September 2019

காதலெனும் தேர்வெழுதி


இன்றைய சூழலில் காதல் திருமணம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் பெற்றோர் பார்த்து செய்விக்கும் திருமணங்கள் அபூர்வமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். பெரும்பாலான பெற்றோர் இதை உணர்ந்தே இருக்கின்றனர். எனினும் தங்கள் பிள்ளைகள் தங்கள் குலப்பெருமையை காக்க மாட்டார்களா? தங்களது குலத்தை  விட்டு மாறிவிடுவார்களா? என இன்னும் மேற்கண்ட கேள்வியை ஜோதிடரிடம் தவறாமல் கேட்கின்றனர். இன்றைய காதல் திருமணங்கள் காலத்தின் கட்டாயம்.




காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவம். அது வெற்றியாகி திருமணத்தில்  முடிய காதல் & கலப்புமண காரகன் எனப்படும் புதன் மற்றும் கேது, செவ்வாய், சுக்கிரன்,குரு 2,7,11 ஆம் அதிபதிகள், மற்றும்  காதலை குறிக்கும் பாவமான 5 க்கு லாப பாவமான 3 பாவமும் அதன் அதிபதியும் என பல்வேறு பாவங்களும் கிரகங்களும் எதோ ஒரு வகையில் இணைந்தே தொடர்புகொள்கின்றன.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் காதல் ஆசையை தூண்டும் கிரகம் எனப்படும் கேது லக்னத்தில் தனித்த நிலையில் நின்று பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் குருவின்  பார்வையை பெறுகிறார். காதல் பாவமான 5ஆம் பாவாதிபதி குரு 5 க்கு 5 ஆம் பாவதிபதியான பாக்யாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். இதனால் பரிவர்தனைக்குப்பின் 5, 7 ஆம் பாவாதிபதிகளான குரு- சனி இணைப்பு ஏற்படுகிறது. காதல் காரகன் புதன் காதல் பாவமான 5ல் நிற்கும் லக்ன யோகாதிபதி செவ்வாயின்  அவிட்டம் – 2 ல் நின்று நவாம்சத்தில் உச்சமடைகிறார். 5ல் சனி,செவ்வாய் இணைவு  7 க்கு லாபத்தில் ஏற்பட்டு சனி 7 ஆமிடத்தை பார்ப்பது ஆகியவை இவரது காதல் நிறைவேறி திருமணம் நடக்கும் என்பதை உறுதி செய்கிறது.

ஒரு ரகசியம் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். சனி செவ்வாய் இணைவு ஏற்பட்டு அது 7 ஆமிடத்தோடு எதோ ஒருவகையில் தொடர்புகொள்ளும் ஜாதகர்கள் கலப்பு மனம் செய்கையில் அங்கு இந்த இணைவினால் ஏற்படும் “விருண யோகம்” எனப்படும்   கடும் யோகம் செயல் இழந்துவிடும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் திருமணம் செய்கையில் விருண யோகம் பாடாய் படுத்திவிடும். இந்த யோகத்திற்கு இதைவிட சிறந்த பரிகாரம் இல்லை என்பது எனது கருத்து. ஜாதி மாறி திருமணம் செய்ய புதனது தொடர்பும் அவசியம். இந்த ஜாதகத்தில் புதன் தொடர்புகொண்டுள்ளது. ஜாதகரின் மனைவி மாற்று ஜாதியை சேர்ந்தவர். இந்த ஜாதகரின் வாழ்க்கையில் சனி திசையில் புதன் புக்தியில் தனது காதலியை கண்டுகொண்டார். 5 ல் நின்ற 7 ஆமதிபதி சனி திசையில் 7ல் நின்ற லக்னாதிபதி சூரியன் புக்தியில் ஜாதகர் திருமணம் செய்தார். பாவத்தில் 5க்கு விரையத்தில் நின்ற நீச சந்திரனால் தாயார் வடிவில் வந்த எதிர்ப்பை தனது பொறுமையினால் முறியடித்தார். ஜாதகரின் ஜாதக கர்மாவை அடியேன் எடுத்துச் சொன்னதும் தாயார் தனது எதிர்ப்பை கைவிட்டார்.

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று வக்ரமடைந்த சனியின் பூசம் சாரத்தில் நீசம் பெற்று நிற்கும் 2, 7 ஆமதிபதி செவ்வாயின் திசையில் ஜாதகிக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் தொடர்புடைய கிரகங்கள் வலுவிழந்ததால் ஜாதகியின் திருமணம் சனி – செவ்வாய் தொடர்ப்பால் திருட்டுத் திருமணமாகி அது பெற்றோர்களின் பிரச்சனையால், செவ்வாய் குறிப்பிடும் காவல் துறை வரை சென்றது. செவ்வாய் திசையில் பாவத்தில் இரண்டில் நிற்கும் சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது. தற்போது இருவரும் சிறப்பாக வாழ்ந்தாலும் செவ்வாய் நீசம் பெற்று திசை நடந்ததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களின் ஆசியின்றி திருமணம் நடந்தது. செவ்வாய் 2 மற்றும் 7 ஆமிட தொடர்பு கொண்டு நீசம் பெற்று திருமண காலம் வருகையில் பலருக்கு இது போன்று காவல் நிலைய, அல்லது திருட்டுத் திருமணங்கள் நடப்பதை கவனிக்க முடிகிறது.  

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


எப்படிப் பார்த்தாலும் இந்த ஜாதகரின் திருமண வாழ்வு சிறப்பில்லை. 7 ஆமிடம் இதை தெளிவாக கூறுகிறது. ஆனால் இவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்.  7 ஆமிடத்தில் சனி காதலுக்கு ஆசை வலை விரிக்கும் கேதுவின் மகம் சாரம் பெற்ற சனியின் திசையில் குடும்ப ஸ்தானத்தில் நின்ற கேதுவின் புக்தியில் திருமணம் செய்துகொண்டார். 7 ஆமிடத்தில் சனி நின்று திசை நடந்த காலத்தில்  பணி புரியும் இடத்தில் காதல் ஏற்பட்டது. 7 ஆமிடம் தன்வந்திரி என புகழப்படும் சூரியனது சிம்ம ராசியாகி அதற்கு இரு புறமும் மருத்துவத்தை குறிக்கும் சூரியனும் ராகுவும் நின்று 7 ஆமிடத்திலும் மருத்துவத்தை குறிக்கும் செவ்வாயும் புதனும் நின்றதால் ஜாதகரும் அவரது காதலியான மனைவியும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்த காலத்தில் காதலித்தனர். இருவரும் மருத்துவம் தொடர்புடையவர்கள் ஆனால் மருத்துவர்களல்ல.  இந்த ஜாதகத்திலும் விருண யோகம் பெரிய பாதிப்பை தரவில்லை. காரணம் ஜாதகரும் ஜாதகியும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதோடு 7 ஆமிடம் மற்றும் 7க்கு இருபுறமும் நிற்கும் கிரகங்கள் குறிப்பிடும் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் என்பதால் தோஷ கிரக அமைப்புகளுக்கேற்ற செயலில் ஜாதகர் ஈடுபட்டிருந்தால் தோஷ கிரகங்கள் தங்கள் தோஷத்தை குறைத்துக்கொள்ளும் என்ற விதியே ஆகும்.

எப்படிப் பார்த்தாலும் 7 ஆமிட தோஷம் வேலை செய்யும் என்ற வகையில் சனி நீர் ராசியான மீனத்தில் நிற்கும் கேது சாரம் பெற்று திசை நடத்துவதால் மனைவியை பிரிந்து பொருளீட்ட  ஜாதகர் வெளிநாடு சென்றார்.

நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


திசா நாதன் சனி காதல் காரகன் புதனின் கேட்டை சாரத்தில் நின்று லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை தனது 1௦ ஆம் பார்வையால் பார்க்கிறார். மேஷத்திற்கு பாதகாதிபதி சனி எட்டில் நிற்பது ஒருவகையில் சிறப்பே ஆகும். சனி ராசிக்கு ஐந்தாமதிபதி என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.  மேலும் பாவத்தில் 11 ல் ராகு நிற்பதால் சனி பாதக ஸ்தானத்திற்கு செயல்பட வழியில்லை. ராசியில் ஒரு பரிவர்த்தனை நடந்துள்ளதால் சனி உள்ளிட்ட கிரகங்கள் பெரும்பாலும் ராசியை சார்ந்தே செயல்பட வேண்டும். சனி ஐந்தாமதி சூரியனுடனும் பரிவர்தனையான 2, 7 ஆமதிபதி சுக்கிரனுடனும் இணைந்து ராசிக்கு 2 ல் நிற்கிறார். சுக்கிரனும் செவ்வாயும்  பரிவர்த்தனையாகி அது லக்னாதிபதியின் ஆட்சி வீடானதால் எட்டாமிட பரிவர்த்தனை தோஷம் இங்கு செயல்படாது.

காதலுக்குரிய பாவாதிபதி சூரியன் எட்டில் மறைந்தாலும் அவர் அனுஷம் - 1 ல் நின்றதால் நவாம்சத்தில் சிம்மத்தில் ஆட்சியாகிவிடுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். ஜாதகர்  சனி திசையில் பாவத்தில் ராசிக்கு ஐந்திலும் லக்னத்திற்கு 11 லிலும் நின்ற ராகு புக்தியில் திருமணம் செய்தார். இந்த ஜாதகத்தில் பரிவர்தனைக்குப்பிறகு சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஜாதி மாறி திருமணம் செய்தால் விருண யோகம் செயல்படாது என்பதோடு கலப்பு மணத்தால் பாதகத்தில் நிற்கும் ராகுவும் பாதிக்க வாய்ப்பில்லாமல் போனது. காரணம் ஜாதி மற்றும் மதம் மாற்றத்திற்கு ராகுவும் ஒரு காரணம். அதனால் ஜாதி மாறி திருமணம் செய்தால் சர்ப்பக் கிரகங்கள் கடுமை காட்டாது என்பதை கவனத்தில் கொள்க.  இப்படி ஜாதி மாறி திருமணம் செய்தால் ஜாதகப்படி பாதிக்கப்படக்கூடிய ஒரு அமைப்பும் செயல் இழக்கும் என்பதை பிள்ளைகளின் ஜாதக தோஷம் கழிக்க கோவில் கோவிலாக சுற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும்.

மீண்டும் அடுத்த வாரம் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501.


Wednesday 18 September 2019

அரசியல் யாரை அரவணைக்கும்


கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ரகு Vs ராகு பதிவு மற்றொரு நாளில் வெளிவரும். வாசகர்கள் பொருத்தருள்க. 

அரசியலில் சதிராட்டங்கள் நிறைந்த மோசமான காலத்தில் இருக்கிறோம். இந்நிலை மேலும் வருங்காலத்தில் தாழ்வடையவே செய்யும்.  ஆனால் இந்திய அரசியல் இனிமேல்தான் தன்னை நிலை நிறுத்தி தேசம் முன்னேற பெரும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை இனி வருங்கால அரசியல் சிறப்பாகவே இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.


அரசியலில் ஈடுபட்டு பெரும் தனம் ஈட்ட முடியுமா? .பெரும் புகழைடைய முடியுமா? என்பது போன்ற கேள்விகளால் ஜோதிட உலகம் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக தமிழக தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வருடங்களே உள்ள நிலையில் , உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு செலவு செய்தால் போட்ட முதலை எடுத்துவிடலாமா? என்பது போன்ற கேள்விகள் ஜோதிடர்களின் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலே இந்த பதிவை எழுத தோன்றியது.

கீழே நேற்று பிறந்தநாள் கண்ட நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்.

சனியின் அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கிறார். சனி ராசிக்கு 1ல் ராஜ்ய ஸ்தானம் சிம்மத்தில் நிற்கிறார். இதனால் இவரது கர்மம் என்பது ராஜ கர்மம் என்பதாகிறது. கர்ம  காரகன் சனிக்கு 2 ல் சூரியன் நிற்பது இதற்கு மற்றொரு காரணம். ஜல ராசியில் பிறந்தவர். நடப்பது சந்திர திசை. சந்திரன் விரைவாக  சுற்றும் கிரகம். சுதந்திரமடைந்து இவரது ஆட்சியில் தான் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. துணிச்சலுக்கு காரணம் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து நீச பங்கப்படுவது. உலகம் சுற்றும் வயோதிகராக திகழ்கிறார். காரணம் 9 ஆம் அதிபதி சந்திரன் நீர் ராசியில் அமைந்து திசை நடத்துவதே. 7 ஆமதிபதி கர்ம காரகன் சனியுடன் ராசிக்கு 1௦ ல் அமைந்து நீசம் நோக்கி செல்வதால் குடும்ப வாழ்வு சிறப்பில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார். காரணம் சந்திர திசை முடிந்தாலும் அடுத்து வரும் ராசி அதிபதி செவ்வாய் திசையும் தனது முதல் பகுதியில் நன்மையை செய்யும் என்பதே.

அடுத்து கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



சூரியன் லக்னத்தில் நிற்கிறார். சூரியனுக்கு திரிகோணத்தில் ராகு உள்ளார். அதனால் சிந்தனை அரசியலின் பக்கம் உள்ளது. சூரியன் சனியின் நட்சத்திரத்தில் நிற்கிறார். சனி சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதாலும் சனிக்கு 2 ல் சுக்கிரன் நிற்பதாலும் அரசியல்வாதிகளுக்கு வாகன ஓட்டியாக செயல்படுகிறார். 12 ஆமிடத்திற்கு, சுக்கிரனுக்கு, 2 ஆமிடதிற்கு  பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. சுக்கிரன் 8 ஆமதிபதியோடும் மாந்தியோடும் இணைந்து நிற்கிறார். நடப்பது 7 க்கு விரையமான 6 ஆம் பாவத்தில் நிற்கும் சந்திரனின் திசை. ஜாதகருக்கு 38 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இவருக்கு லக்னத்தில் சனியின் நட்சத்திரத்தில் சனி பார்வை பெற்று நிற்கும் சூரியனால் திருமண எண்ணமே பெரிதாக இல்லை என்பதுதான்.  சனி சூரிய தொடர்பால் ஜாதகர் பிரபல ஜாதிக்கட்சி ஒன்றை சார்ந்து செயல்படுகிறார். சிம்ம ராசிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. அரசியலில் ஜாதகர் ஜொலிக்க வாய்ப்பில்லை. ஜாதகர் அடியாளாகவே செயல்படுவார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே .


ஜாதகர் சிம்ம ராசி என்பதும்.  ராகு சூரியன் சேர்க்கை பொதுச் சேவையில் ஈடுபடுத்தும் என்ற அமைப்பு மட்டுமே அரசியலுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது.  ராகு திசையில் லாப ஸ்தானத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு பணப்பட்டுவாடா செய்யும் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து ஓரளவு பொருளீட்டினார்.


பின்வரும் ஜாதகம் மற்றுமொரு ஆணினுடையது.

இந்த ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை இல்லை. ஆனால் சூரியனுக்கு திரிகோணத்தில் 5 ஆமிடத்தில் ராகு உள்ளது. கடக ராசி அரசியலுக்கு உரியது இந்த இரு அமைப்புகளால் இவர் ஒரு அரசியல் கட்சியில் தீவிர ஆதரவாளராக உள்ளார். சந்திரனுக்கு  1௦ ல் நான்கு கிரக சேர்க்கை என்பதால் இது ஒரு சன்யாச யோக ஜாதகம். 38 வயதாகியும் ஜாதகருக்கு திருமண எண்ணம் இல்லை.  குடும்பததை குறிக்கும் குரு வக்கிரமாகிவிட்டதால் குடும்பம் பற்றி இவர் வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. சுக்கிரன் அஸ்தங்கமாகிவிட்டதும் இதை உறுதி செய்கிறது. தன கார கிரகங்கள் குருவும் சுக்கிரனும் தோஷம் பெற்றதாலும் சன்யாச யோகத்தாலும் இவரால் அரசியலில் பொருளீட்டவும் முடியாது. லாபத்திலிருந்து திசை நடத்தும் சனி 1௦ ஆமதிபதி சூரியனின் சாரம் பெற்றுள்ளதால் ஓரளவு பிரபலமாக வாய்ப்புண்டு.

அரசியலில் சேவை செய்ய ராஜ கிரகங்களான சூரியன், சந்திரன், சனி, குரு  ஆகியவை சிறப்பாக ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்து திசாபுக்திகள் சாதகமாக வரவேண்டும். அரசியலில் சதிராட்டங்களில் ஈடுபட்டு பொருளீட்ட (கொள்ளையடிக்க) ராகு, சுக்கிரனின் வலு ஜாதகத்தில் இருக்க வேண்டும். இவற்றை தவிர ராஜ்ய ஸ்தானம் எனப்படும் 1௦ ஆமிடமும், சூரியனும் வலுவடைந்து சாதகமான திசை வந்தாலும் அரசியலில் ஈடுபடலாம். பொதுவாக நெருப்பு ராசிகள் 3 ம் (மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை), கடகம், கும்பம் ஆகியவையும் அவற்றின் அதிபதிகளும் சாதகமாக அமைந்த ஜாதகர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

அரசியலில் ஈடுபட சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு ஆகியவை இளம் வயதில் கடும் சோதனைகளையும் இழப்புகளையும் ஒருவருக்கு கொடுத்து, பல தியாகங்களை செய்ய வைத்து அவற்றில் அவர் தேரிய பிறகே இக்கிரகங்கள் அரசியலில் வெற்றிகரமாக உலா வர உதவுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் சரி, கடந்த காலங்களிலும் சரி நமது மாபெரும் அரசியல் தலைவர்களின் வரலாற்றை கவனித்தால் இவ்வுண்மை புரியவரும். அரசியல்வாதியின் வாரிசாக பிறந்துவிட்டால் மட்டுமே ஒருவர் அரசியல்வாதியாகிவிட முடியாது.

இப்போது கூறுங்கள் நீங்கள் அரசியலுக்கு வரத் தயாரா.?

தன்னலமற்ற தியாகிகளை இன்றைய அரசியல் எதிர்பார்க்கிறது.


மீண்டும் அடுத்த வாரத்தில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்
கைபேசி: 08300124501



Thursday 12 September 2019

அடிக்கிற கை அணைக்குமா?


யோகம் என்பது நாம் முற்பிறவிகளில் செய்த புண்ணிய செயல்களின் மூலமாக இறைவன் நம் கணக்கில் வைத்துள்ள வரவு எனலாம். இப்பிறவியில் அதை நல்வழியில் செலவு செய்வது நமது பிறவிப்பயனை கடந்து இறைவனை நெருங்க உதவும். தோஷம் என்பது நாம் முற்பிறவிகளில் சேர்த்துவைத்த கடனுக்கு ஒப்பானதாகும்.  நம்மிடமுள்ள தனத்திற்கு தக்கபடி வாழ்ந்து கடனை அடைத்து நிம்மதி பெறுவது சிறப்பு. அதை விடுத்து நம்மிடம் உள்ள இருப்பைவிட அதிக கடனை ஏற்படுத்திக்கொண்டு அதை அடைக்க வழி தெரியாமல் குறுக்கு வழிகளை கடைப்பிடித்து பாவக்கடனை அதிகப்படுத்திக்கொள்பவர்களுக்கு அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை இந்தப்பிறவியிலேயே அனைத்தையும் பிடுங்கிசெல்ல வருவாய்துறை அலுவலர்கள் வந்து சோதிப்பது போல் இறைவன் நம்மை சோதிக்கிறான்.



ஒரு கிரகம் ஒரு யோகத்தை தரக்கூடிய நிலையில் ஜாதகத்தில் ஒரு பாவத்தில் அமைகிறது என்றால் அதன் அமைவு மற்றொரு பாவத்திற்கு, கிரகத்திற்கு பாதிப்பை தரும் நிலையில் இருக்கலாம். எனவே ஒவ்வொரு கிரக அமைவிற்கும் நல்ல பலன்கள் மட்டுமல்ல தீய பலன்களும் ஜாதகத்தில் ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஒளியை உமிழும் ஒரு பொருள் தனித்திருந்தால்  அதாவது சுயம்புவாக இருந்தால் அதற்கு நிழல்கள் இருக்காது. ஆனால் அந்த ஒளியை நம்பி செயல்படும் பொருள்கள் ஒளியை நோக்கிய திசையில் பிரகாசத்தையும் மறுபுறம் நிழலையும் கொண்டிருக்கும். இங்கு ஒளி ஒளிவடிவான இறைவன் எனக்கொண்டால் நாமெல்லாம் சுய ஒளியற்ற, அந்த ஒளிப்பிழம்பான இறைவன் அருளால் வாழும் உயிர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில் சுயம்புவான இறைவனுக்கு கர்மங்கள் கிடையாது.

நமக்கு சுய ஒளி இல்லாததால் நமது கர்மங்களை இறைவனை நோக்கிய நிலையில் அமைத்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி பெறலாம். அவ்வாறின்றி தீய (நிழல்) கர்மங்களை நோக்கிய நிலையில் நமது வாழ்வை செலுத்தினால் நமக்கு கிடைக்கும் ஒளியையும் நமது தீய கர்மங்கள் முறியடித்து நம்மை வாழத்தகுதியற்றதாக  மாற்றிவிடும்.

பின்வரும் ஜாதகம் ஒரு பெண்னுடையது.


தனுசு லக்ன ஜாதகத்தில் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனையில் உள்ளது. லக்னத்திற்கு இரண்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது. இது செல்வ வளமை மிக்கவர்  ஜாதகி என்பதை குறிப்பிடுகிறது. சூரியன் 7 ஆமிதிபதி புதனுடன் இணைந்து பத்தாமிடத்தை பார்ப்பது சிறப்பு. 2 ஆமதிபதியும் ஜீவன காரகனுமாகிய சனி சுக்கிரன் சாரம் பெற்று சுக்கிரனும் இரண்டாமிட தொடர்பு கொண்டது யோகமே. விரைய ஸ்தானத்தில் குரு பரிவர்த்தனையில் இருப்பது ஒருவகையில் தன யோகத்தை குறிக்கும். விரையத்திற்கு குறைவில்லா தனவரவை குரு தருவார் எனலாம். 10 ஆமிடத்தை 10 ஆமதியோடு இணைந்த சூரியன் தர்ம கர்மாதிபதி யோகம் கொண்டு பார்ப்பதால் ஜாதகி சுய தொழில் செய்கிறார்நீச சனி சாரம் பெற்ற சூரியன் சனி குறிப்பிடும் இரும்பு தொடர்புடைய தொழில் செய்கிறார். லக்னாதிபதி நீச சனி சாரம் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.   

7 ஆமதிபதி புதன் நீச நிலை பெற்று செவ்வாயும் நவாம்சத்தில் நீசம் பெற்று அமர்ந்தது தோஷமே. உபய லக்னத்திற்கு ஏழாமதிபதி வலுகுறைவது ஒருவகையில் நன்மை எனும் சூழலில் ஏழாமதிபதி லக்னாதிபதியான குருவின் பார்வையை பெறுவது கணவரை இந்த ஜாதகம் தாங்கிப்பிடிக்கிறது என்றாலும் செவ்வாய் நவாம்சத்தில் நீசம் பெற்றது கணவர் போதுமான திறமை அற்றவர் என்பதை குறிப்பிடுகிறது. இவர்கள் இரும்பு வியாபாரம் செய்கிறார்கள். இரண்டாமதிபதி சனி 5ல் செவ்வாய் வீட்டில் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நீசம் பெற்ற நிலையில் சுக்கிரன் இரண்டில் செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்ததாலும் செவ்வாய்க்கு சனி திரிகோணம் பெற்றதாலும் செவ்வாய்க்கும் சனிக்கும் ஏற்பட்ட தொடர்பால் இவர்கள் இரும்புக்கடை நடத்துகிறார்கள். ஏழாமதியைவிட லக்னாதிபதி வலு கூடியதால்  ஜாதகிதான் தொழிலை நிர்வகிக்கிறார். ஏழாமதிபதி வலு குறைவது தோஷமே என்றாலும் அந்த தோஷமே ஜாதகி நிர்வாகியாக மாற வழி செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

கீழே மற்றுமொரு பெண்ணின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் 7 ல் நின்ற ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது. 7 ல் லக்னாதிபதி சந்திரனோடும் மாங்கல்யகாரகன் செவ்வாயோடும ராகு நிற்பது கடும் தோஷமே. நவாம்சத்தில் 7 ஆமதிபதி சனி, மாங்கல்ய காரகன் செவ்வாய் ஆகியோர் நீசமானது தோஷத்தை உறுதி செய்கிறது.  7 க்கு பாதகத்தில் குரு நிற்கிறார். இந்த அமைப்பால் குழந்தை பிறந்ததும் 7 ஆமிட தோஷம் செயல்படும்.  குரு திசையில் ஜாதகிக்கு மகன் பிறந்தான். குரு திசை மாங்கல்யத்தையும் பறித்தது. 7 ஆமிடம் தோஷம் பெற்று, 7 ஆமதிபதியும் பாதகத்தில் 11 ல் அமைந்து, 7 க்கு பாதகத்தில் அமைந்த 6 ஆமதிபதி குரு பார்வையை 7 ஆமதிபதி சனி  பெற்றது ஆகியவை தோஷம் வெளிப்படும் காலகட்டத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு லாபத்தில் குரு நின்று தொடர்பு ஸ்தான அதிபதியும் ஜீவன காரகனுமான சனியை பார்க்கிறார். எனவே குரு மூலம் ஜாதகிக்கு லாபமும் உண்டு என்பது புலனாகிறது. லக்னத்திற்கு திரிகோணத்தில் குரு அமைந்ததும் சனிக்கு திரிகோணத்தில் புதன் சூரியன் அமைந்ததும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடதிற்கு திரிகோணத்தில் சூரியன் புதன் அமைந்ததுமான அமைப்பால் ஜாதகிக்கு அரசுப்பள்ளி ஆசிரியையாக வேலை கிடைத்தது.

முன்பத்தியில் கூறப்பட்ட அமைப்பால் குரு குடும்ப வாழ்வை பறித்தார். ஆனால் அதே குரு ஜாதகியின் வாழ்வை தாங்கியும் பிடிக்கிறார் என்பது நம்பக்கூடிய உண்மை. முந்தைய அமைப்பு தோஷம் பிந்தைய அமைப்பு யோகம். பெரும்பாலும் பாவத்துவ அமைப்பை பெற்ற கிரகங்கள் முதலில் பாதகத்தை செய்துவிட்டு பிறகு பிறகு யோகம் செய்யும் அமைப்பால் பிற்காலத்தில் யோகத்தையும் செய்துவிடுவதை பார்க்க முடிகிறது. ஜாதக அமைப்பால் இது மாறுபட்டும் செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க. கீழே வரும் ஜாதகம் அத்தகையது.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்ன ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் இரண்டாமதிபதி செவ்வாயோடு பாக்ய -விரையாதிபதி புதனும் பாதகாதிபதி சூரியனும் நிற்கிறார்கள். ஜாதகருக்கு லாபத்தில் நிற்கும் சந்திர திசையில் உச்ச குருவின் பூரட்டாதி-4 சாரம் பெற்ற கேது புக்தியில் திருமணம் நடந்தது. அடுத்து வந்த சூரியனுடன் நிற்கும் செவ்வாய் திசையில் ஜாதகர் அரசியலில் ஈடுபட்டு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். சனிக்கு எந்த கிரக தொடர்பு ஏற்படுகிறதோ அந்த கிரகத்திற்கு தனது காரகத்துவமான உண்மை, கடின உழைப்பு, நேர்மை என்ற நற்பண்புகளை சனி வழங்குவார்.  இங்கு சூரியன் வீட்டில் சனி நிற்பதாலும் சூரியனுக்கு 1௦ ல் சனி நிற்பதாலும், சனி சாரத்தில் சூரியன் நிற்பதாலும் ஜாதகர் தனது பதவி காலத்தில் பெருமளவு நேர்மையுடன் ஊருக்கு சில நல்ல காரியங்களை செய்து கொடுத்தார்.

ஆனால் சூரியனும் சனியும் மேற்சொன்ன அதே அமைப்பினால் பாதகங்களையும் செய்ய உரிமை பெற்றவர்களாயிற்றே. அதன்படி 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற குடும்ப காரகன் குருவின் பார்வை பெற்ற இரண்டாமிட கிரகங்கள் குடும்ப வாழ்வை சிதறடித்தது. அதே செவ்வாய் திசையின் இறுதிப்பகுதியில் 2011 ல் ஜாதகரின் மனைவி ஜாதகரிடமிருந்து விவாகரத்து பெற்று விலகிச் சென்றார்.

இதிலிருந்து நாம் அறிய வருவது,

யோகத்தை செய்யும் கிரகங்கள் பாதகத்தையும் செய்யும்.

ஒரே மனிதனுக்குள் மாறுபட்ட குணங்கள் இருப்பதைப்போல் கிரகங்களும் மாறுபட்ட திசா புக்தி , கோட்சாரங்களில் தங்களது செயல்களில் மாறுபாட்டை தருகின்றன.

அதீத யோகம் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அதன் தாக்கமாக மற்றொரு விஷயத்தில் பாதிப்பு உறுதியாக இருக்கும். பொதுவாக ஒருவரது வாழ்வை பார்த்து மலைத்து நிற்கும் நாம் அதன் பின்னணியில் அவர் இழந்த இழப்புகளை கவனத்தில் கொள்வதில்லை.

அடுத்த வாரப்பதிவு

“ரகு VS ராகு”

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி:  08300124501.