Showing posts with label 12 ஆம் பாவம். Show all posts
Showing posts with label 12 ஆம் பாவம். Show all posts

Sunday, 25 April 2021

எவனோ ஒருவன் வாசிக்கிறான்!

 


வாழ்வில் சில முறை நாம் சன்னியாசிகளை பார்த்து அவர்களால் சில எண்ணங்களை மனதில் பதிய வைத்திருப்போம். அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதன் மூலம் உலகத்தை காண்கிறார்கள். வட்டத்துக்குள் இருந்து உலகத்தை காண்பவர்களும் என்னதான் தனது முன்னோடிகளின் அனுபவ அறிவை புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் அவர்களுக்கும் நிதர்சனமான உலகியல் அறிவு தேவைப்படுகிறது. அதனால்தான் சன்னியாசிகள் தேசாந்திரம் செல்கிறார்கள். சாதாரண மனிதன் அலைந்து திரிந்து அனுபவங்கள் பல பெற்று அதன் பிறகே வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை உணர்கிறான். இந்தக்கருத்தைக்கொண்டு பார்த்தால் சன்னியாசிகளின் அறிவைவிட சாமான்யனின் அறிவே சிறந்தது என்பது தெளிவு. ஆனால் சாமான்யன் தனது இல்லற பொறுப்புகளால் தள்ளாடுகிறான் அதனால் தனது அனுபவத்தால் பெற்ற அறிவைக்கூட சில சமயம்  குடும்ப பொறுப்புகளால் செயல்படுத்த முடியாதபடி திணறுகிறான். இந்த விஷயத்தில் சன்னியாசிகளுக்கு சாமான்ய மனிதனைவிட சிறப்புண்டு எனலாம். ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்வை குறுக்கிக்கொண்டு வாழும் இந்த சன்னியாசிகளுக்கான ஜாதக அமைப்புகளை ஆராயவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஒரு எண்ணமிருந்தது. சன்னியாசம் எனும் புயலின் மையத்தில் தற்போது நிலைகொண்டுள்ள ஒரு ஜாதகம் மூலம் இது தொடர்பான  விஷயங்களை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். அதுவும் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர் பிறந்த நாளில் இப்பதிவு வருகிறது என்ன பொருத்தம் பாருங்கள்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


21 வயதான இந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் துறவியாக மாறி பாலைவன மாநிலமொன்றில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்.  தமிழ்நாட்டின் முதன்மை தென்மாவட்ட தலைநகரில் வசித்துவரும் ஒரு வட  மாநில குடும்பத்தை சார்ந்தவர் இப்பெண். மேஷ லக்னாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்று  அதன் அதிபதி குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது மோட்சம், நீண்ட சிறைவாசம், அடைபடுதல், நோயால் படுத்த படுக்கையாக பல நாள் இருத்தல் மற்றும் இல்லற இன்பத்தை அனுபவிப்பதையும் (படுக்கை சுகம்)  குறிப்பிடும் இடமாகும். 12 ஆமிடம் மோட்ச ராசியாகி 12 ஆமதிபதி லக்னாதிபதியோடு பரிவர்த்தனை பெற்றதால் இந்தப்பெண் சன்னியாச வாழ்வை விரும்புகிறார். 12 ஆமதிபதி குரு பாதகாதிபதி சனி தொடர்பு பெற்று லக்னத்தில் அமைந்ததும், 12 ல் ஒரு பாவி செவ்வாய் அமைந்து 12 ஆமிட செவ்வாயை கேது தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் இங்கே படுக்கை சுகம் என்ற இல்லற சுகம் அடிபட்டுவிடுறது. மோட்ச பாவமான 12 ஆமிடத்தில் அமைந்த லக்னாதிபதியை கேது பார்ப்பது மோட்சத்தை முன்னிட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது வாழ்வை குறுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அடைபடுதலையும் குறிப்பிடுகிறது.

ஜாதகியை மோட்சத்தை நோக்கிய பாதையில் உந்தித்தள்ளிய காரணிகளை இப்போது ஆராய்வோம்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 அமைப்பில் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். இது பெற்றோர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பள்ளி செல்லும் காலத்தில் பெற்றோர்களின் தினசரி வாக்குவாதங்களை பார்க்கும் ஜாதகிக்கு குடும்ப வாழ்வின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது சாத்தியம். இதனால் இல்லறத்தை நினைத்து ஆசைகொள்ள வேண்டிய பருவ வயதில் ஜாதகிக்கு இல்லற வாழ்வின் மீது வெறுப்பு வந்தது நியாயமே. ஜாதகிக்கு கடந்த 2007 முதல் சுக்கிர திசை நடக்கிறது. ஜாதகி தனது நகரில் 8 ஆம் வகுப்பு வரை ஒரு உயர்தர ஆங்கிலப்பள்ளியில் படித்தார். அதன் பிறகு கும்பத்தில், லக்னத்திற்கு பாதகத்தில் நிற்கும் புதனின் சாரத்தில் கடகத்தில் ஆயில்யம்-4 ராகுவோடு இணைந்து நிற்கும் சந்திர புக்தியில் ஜாதகி தனது கல்வியை நிறுத்திவிட்டார். பாட்டியை குறிக்கும் கேது திசா நாதன் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். பெற்றோர்களின் சண்டையால் மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட ஜாதகிக்கு அவரது பாட்டி மன நிம்மதிக்காக மத நூல்களை படிக்கக்கொடுக்கிறார். பள்ளிக்கு செல்லாமல் மத நூல்களை படிக்கும் ஜாதகியை வீட்டில் யாரும் தொல்லை செய்யாதவாறு திசா நாதனை கட்டுப்படுத்தும் கேது கவனித்துக்கொள்கிறார். பாதக ஸ்தானத்தில் நிற்கும் 5 ஆமதிபதி சூரியனின் உத்திராடம்-4 ல் மகரத்தில் நின்று சுக்கிரன் திசை நடத்துகிறார். சுக்கிரனுடன் சன்னியாச கிரகம் கேது இணைந்துள்ளார். திசா நாதன் சுக்கிரனானாலும் அவர் தனது பகை கிரகமான சூரியனின் சாரம் பெற்று பாதக ஸ்தான தொடர்பும் பெற்றதால் ஒரு பருவ பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை கேது திசை மாற்றி அவருக்கு ஆன்மீக ஆசைகளை பாட்டி மூலம் தூண்டி விடுகிறார். இதனால் ஜாதகி தானொரு சன்னியாசி ஆக முடிவு செய்கிறார்.

தனது விருப்பத்தை ஜாதகி வீட்டில் தெரிவிக்கிறார். 5 ஆமிடம் ஒருவரின் ஆசையை குறிக்கும். அதனோடு தொடர்புடைய கிரக திசா-புக்திகள் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும். 5 ஆமதிபதி சாரம் பெற்ற சுக்கிர திசையில் இல்லற ஆசையை கேது தடை செய்தாலும் தனது காரகமான ஆன்மீக ஆசை நிறைவேற உதவுகிறார். கேதுவும் ஆசையை குறிக்கும் கிரகமாகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்பமாக வசிக்கும் ஜாதகியின் வீட்டில் ஏற்கனவே ஜாதகியின் பெரியப்பா ஒருவர் தனது இல்லறக்கடமைகளை நிறைவேற்றிய பிறகு சன்னியாசியாகி இருந்தார். இதனால் ஜாதகியின் சன்னியாசி ஆசைக்கு குடும்பத்தில் தாயாரைத்தவிர இதர அன்பர்கள் அனுமதி தந்தனர்.

ராகு-கேதுக்களின் அச்சும் – கிரகண தோஷமும்.

தாயார் மறுக்கக்காரணம் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு வெளியே சந்திரன் நிற்பதுதான். ராகுவை விட்டு சந்திரன் பாகை அடிப்படையில் விலகி இருந்தாலும் சந்திரன் ராகுவுடன் மோட்ச ராசியான கடகத்திலேயே நிற்பது அதன்  வலுவற்ற தன்மையை குறிக்கிறது. ஜாதகி பௌர்ணமியில் பிறந்துள்ளார். ராகுவுடன் சந்திரன் பௌர்ணமியில் இணைந்திருப்பது கிரகண தோஷமாகும். மனதை குறிக்கும் சந்திரனின் ராசியில் ராகு-கேதுக்களின் தொடர்பில் சந்திரன் நிற்பதால், ஜாதகியின் மனதை ஆளும் தகுதியை ராகு-கேதுக்கள் பெற்றுவிடுகின்றன. ஆனால் ஆட்சி பெற்று நிற்கும் சந்திரன் ஜாதகியின் வாழ்க்கையை காப்பாற்ற தன் மீது விழுந்துவிட்ட ராகு-கேதுக்களின் நிழலை மீறி போராடுகிறார். சந்திரன் ஜாதகத்தின் அதிக பாகை பெற்று (29 பாகை) நிற்கிறார். இதனால் அவர் ஆத்ம காரகனாகி வலுவுள்ளவராகவே உள்ளார். ஆனால் சந்திரனின் வலுவை கிரகண தோஷம் தவிடு பொடியாக்குகிறது. இதனால் சந்திரனின் காரக உறவான ஜாதகியின் தாயாரின் வார்த்தையை வீட்டில் அனைவரும் நிராகரிக்கின்றனர். அனைத்து கிரகங்களும் ராகு-கேதுக்களின் அச்சுக்குள் நிற்கும்போது சந்திரன் மட்டும் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி நிற்கிறார். இதன் பொருளாவது ஜாதகியின் உலகத்திற்குள் தாய் செல்ல முடியாது என்பதாகும்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 ஆக அமைந்த சூழலில் சந்திரன் அதிக பாகை பெற்று ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவும் சூரியன் குறைந்த பாகை (6 பாகை) பெற்று தாரா காரகனாகவும் உள்ளனர். இதனால் தந்தை தாய்க்கிடையே கடும் மனப்பிரிவினை. சூரியன் பாதக ஸ்தானத்தில் 12 ல் நிற்கும் லக்னாதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு உள்ளே  உள்ளார். இதனால் தந்தையை மீறி தாயின் சொல்லை ஜாதகி ஏற்றுக்கொண்டுவிட இயலாது. சுக்கிர திசையில் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கும் குருவின் புக்தியில் ஜாதகிக்கு உள்ளூரில் சன்னியாச சடங்குகள் கடந்த 2019 இறுதியில் கேது, சனி, குரு ஆகியவை கோட்சாரத்தில் தனுசு ராசியில் ஒன்றாக இணைந்திருந்தபோது  நடந்தன. புக்தி நாதன் குரு குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் கேது சாரம் பெற்று நிற்பதை கவனியுங்கள். இது சன்னியாச வாழ்வுக்காக குடும்பத்தை ஜாதகி பிரிவதை குறிப்பிடுகிறது.

தற்போது ஜாதகி தங்களது மதத்தின் தலைமை இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாதகியின் தாய் தனது மகளை சன்னியாச வாழ்விலிருந்து மீட்கப்போராடுகிறார். ஜாதகி தற்போது சற்றே தனது மாயையிலிருந்து விடுபட்டு தனது தாயின் கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார். சன்னியாச வாழ்வை முழுமையாக்கும் முடி பிடுங்குதல் எனும் முக்கிய சடங்கு தற்போதைய கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜாதகியின் மத சம்பிரதாயப்படி முடியை மழிக்கமாட்டார்கள். முழுமையாக பிடுங்கிவிடுவார்கள். தலை முடியை பிடுங்கிவிட்டால் மீண்டும் சன்னியாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இல்லற எண்ணம் வராதபடி அது தவிர்த்துவிடும் என்பதே அதன் அடிப்படை. தற்போது ஜாதகி தன்னை யாராவது காப்பாற்றி மீட்டுச்செல்வார்களா என தனித்து விடப்பட்ட நிலையில் காலம் கடந்து தனது செயல்களை எண்ணி வருந்துகிறார். ஜாதகியின் தாய் தன் மகளை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா? என தமிழ்நாட்டிலிருந்துகொண்டு கதறுகிறார். தாய் தனது குடும்பத்தை மீறி, தனது சமுதாய விதிகளை மீறி தனது மகளை காப்பாற்ற செயல்பட்டால் தனது மதம் மற்றும் குடும்பத்திலிருந்து  தன்னை  ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அறிந்து மனதுக்குள் கதறிக்கொண்டுள்ளார். ஜாதகத்தில் லக்னாதிபதி 12 ஆமிடத்தில் அதன் அதிபதியோடு பரிவர்தனையானது ஜாதகி குடும்ப வாழ்வுக்கு திரும்ப முடியாது என்பதையே குறிப்பிடுகின்றன.

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Tuesday, 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Saturday, 27 February 2021

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

 

கிரகப்பெயச்சிகள் நமது கர்மங்களை எப்போது நாம் அனுபவிக்கவிருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன. கிரகப்பெயர்ச்சிகளில் மனித வாழ்வை ஆளும் முக்கிய கிரகங்களான குரு மற்றும் சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியமானவை. சனி இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறையும் குரு வருடத்திற்கு ஒரு முறையும் பெயர்ச்சியாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.  ராகு-கேதுக்களின் பெயர்ச்சிகள் குரு மற்றும் சனிப்பெயர்ச்சிகளைவிட முக்கியத்துவம் குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. எப்படியாயினும் இவை குறிப்பிட்ட ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் அவர் அறியும் வண்ணமோ அறியா வண்ணமோ மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது. நாளிதழ்களில் பொதுவாக குறிப்பிடப்படும் கிரகபெயர்ச்சி ராசி பலன்களை விட தனி ஒருவருக்கான ஜாதகங்களை தேவைப்படின் தங்களது குடும்பத்திற்கான ஜாதகங்களை ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்வது  குறிப்பிட்ட கிரக பெயர்ச்சிகளால் நாம் எதை எதிர்கொள்கிறோம் என்பதறிந்து நம்மை தயார் படுத்திக்கொள்ள உதவும். இப்பதிவில்  ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயவிருக்கிறோம்.


2015 ல் பிறந்த மேற்கண்ட சிறுவனின் ஜாதகத்தில் ஜனன காலத்தில் ரிஷபத்தில் உச்சமான சந்திரனின் மீது, கோட்சாரத்தில் ராகு கடந்த 202௦ செப்டம்பரில் வந்து உச்சமாகி அமர்கிறார்.  கார்த்திகை-2 ஆம் பாதத்தில் பிறந்த இச்சிறுவனுக்கு தற்போது சந்திர திசையில் ராகு புக்தி இந்த 2021 ஆம் ஆண்டு இறுதிவரை நடப்பில் உள்ளது. ராகு கேதுக்கள் ஒரு ஜனன கால கிரகத்தை கோட்சாரத்தில் கடந்து செல்லும்போது தங்களது திசை, புக்தி, அந்தரங்ககள் அப்போது நடந்தால் அவை ஜாதகருக்கு நிச்சயம் வாழ்வில் மாற்றங்களை வழங்கும். மேலும் அவை செல்லும் நட்சத்திராதிபதியின் இதர நட்சத்திரங்களில் ஏதேனும் கிரகங்கள் அமைந்திருந்தாலும் அக்கிரகங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும். இவை கோட்சாரத்தில் தரும் மாற்றங்கள் ஒருவரது ஜாதக அமைப்பைப்பொறுத்து நன்மையாகவோ அல்லது தீமையாகவோ அமையும். இந்த சிறுவனுக்கு 6 வயதுதான் ஆகிறது எனவே தற்போதைய கோட்சார ராகு தரும் தாக்கத்தை சிறுவனால் பெரிய அளவில் உணர வாய்ப்பில்லை. ஆனால் கோட்சார ராகு தாயாரை குறிக்கும் சந்திரனின் மீது சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணி-4ல் தற்போது சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். இதனால் சிறுவனுக்குப்பதில் கோட்சார ராகு தரும் பாதிப்புகளை தாயார் ஏற்றுக்கொள்ள  வாய்ப்புண்டு.  

இப்போது சிறுவனின் தாயாரின் ஜாதகத்தை பார்ப்போம்.


இந்தப்பெண்மணி 1986 ல் பிறந்தவர். தற்போது இவருக்கு ராகு திசையின் சந்திர புக்திதான் நடக்கிறது. ராகு இவரது ஜாதகத்தில் எந்த கிரகத்தின் மீதும் கோட்சாரத்தில் செல்லவில்லை. இதனால் இந்தப்பெண்மணி மகனின் ஜாதகத்தில் தெரிந்தது போல மகனது சந்திரனின் மீது கோட்சார ராகு செல்வதன் பாதிப்பை உணரமாட்டார். இந்த ஜாதகிக்கு ராகுவால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் கோட்சார கேது இவரது ஜனன கால சனி மீதும் செவ்வாய் மீதும் செல்கிறது. தடைகளை குறிக்கும் கேது ஜனன கால சனி மீது செல்வதால் ஜாதகிக்கு தற்போது வேலை இல்லை. திறமை இருந்தும் தற்போதைய சூழலில் தன்னால் செயல்பட இயலவில்லையே என வருந்துகிறார். இதன் பாதிப்பு ஜாதகிக்கு குறைவே. ஆனால் கோட்சார கேது ஜனன கால செவ்வாய் மீதும்  செல்வதால் இந்த ஜாதகியின் கணவருக்கோ அல்லது சகோதரருக்கோ சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஜாதகியின் ஜாதகத்தில் இது தெரிந்தால் நிச்சயம் மகனின் ஜாதகத்திலும் தந்தைக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது தெரிய வேண்டும். மகனின் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் கோட்சாரத்தில் தந்தைக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என மீண்டும் ஒரு முறை ஆராய்வோம்.

சிறுவனின் ஜாதகத்தில் நாம் கவனிக்கத்தவறிய ஒரு விஷயம் ஒன்று உண்டு. அது தந்தையை குறிக்கும் சூரியன் மகரத்தில் திருவோணம்-2 ல் உள்ளது. தாயை குறிக்கும் ரிஷபத்தில் கார்த்திகை-2 ல் நின்று சூரியனும் சந்திரனும் நட்சத்திரப்பரிவர்தனை பெற்றுள்ளது. இதனால் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் கோட்சாரத்தில் இடம் மாறி செயல்படும். இதனடிப்படையில் சந்திரனின் இடத்திற்கு வரும் சூரியன் கோட்சார ராகுவோடு தொடர்பு பெறுகிறார். இதனால் சிறுவனுக்கு அல்லது சிறுவனின் தாய்க்கு கோட்சார ராகு தரும்  சிரமங்களை அவர்களுக்கு பதிலாக தந்தை ஏற்றுக்கொள்கிறார். எனவே தாயின் ஜாதகப்படி கணவனுக்கு சிரமங்கள் ஏற்படும் என்பது உறுதியாகிறது. இப்போது இவற்றை தந்தையின் ஜாதகம் காட்டுகிறதா என காண்போம். கீழே தந்தையின் ஜாதகம்.


1986 ல் பிறந்த ஜாதகர். இவரது ஜனன கால லக்னாதிபதி புதன் மற்றும் சூரியன் மீது கோட்சார ராகு நிற்கிறது. இது இந்த ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படுவதை தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார கேது ஜனன கால வக்கிர சனி மீது நிற்கிறது. ஜனன காலத்தில் வக்கிரமடைந்த கிரகங்கள் கோட்சார நேர்கதி கிரகங்களோடு இணைந்து செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி கேதுவினால் ஜீவன காரகன் சனி பாதிப்படையாது. ஜனன புதன், சூரியன் மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகுதான் பாதிப்பை தர வேண்டும். ஜாதகருக்கு ராகுவால் ஏற்படும் பாதிப்பை திசா-புக்திகள் அனுமதிக்கின்றனவா என காண்போம். ஜாதகருக்கு கேது திசையில் புதன் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கிறது. ஜனன கால புதனை கோட்சாரத்தில் ராகு கடந்தாலும் பாதிப்பின் தீவிரம் குறையுமே தவிர பாதிப்பு இல்லாமல் இராது. கோட்சார ராகு ஜனன கால புதனை கடந்து சூரியனை நெருங்கிக்கொண்டுள்ளார். சூரியன் தந்தை, மாமனாரையும் கால புருஷனுக்கு வயிறு மற்றும் முதுகை குறிக்கும் சிம்மத்தின் அதிபதி என்பதால் இந்த வகைகளில்தான் ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்பட வேண்டும். தந்தையை குறிக்கும் லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் சூரியன் மீது கோட்சார ராகு செல்வதால் இவரது தந்தைக்கு கடும் கண்ட காலமாகும். மேலும் சூரியன் கால புருஷனின் ரோகாதிபதியும் லக்னாதிபதியுமான புதனோடு இணைந்து உள்ள நிலையில் கோட்சாரத்தில் இவைகளின் மீது ராகு செல்கையில் ஜாதகருக்கும் பாதிப்புகள் ஏற்பட விதியுண்டு. ஜாதகருக்கு ஏற்கனவே முது வலி உள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து  வருகிறார். கோட்சார ராகு சூரியனை நெருங்கிக்கொண்டுள்ளது. இந்தக்காலத்தில் இவர் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

கீழே ஒரு இளைஞனின் ஜாதகம்.


1997 ல் பிறந்த இளைஞனின் ஜாதகம். இது. இவர் தற்போது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். இரண்டாம் இடத்திற்கு கோட்சார ராகு-கேதுக்கள் வரும் சூழலில் திசா-புக்தி அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி நடக்கிறது. ஜோதிடத்தில் 9 ஆமிடம் நீண்ட தொலைவு பயணங்களையும் 12 ஆமிடம் வெளிநாட்டு பயணங்களையும் குறிப்பிடும். இந்த இளைஞனுக்கு சனி திசையில் ராகு புக்தி தற்போது நடக்கிறது. ஜனன கால சனி கால புருஷனுக்கு 12 ல் நிற்க ராகு லக்னத்திற்கு 12 ல் நின்று புத்தி நடத்த இவர் தற்போது வெளிநாடு செல்கிறார். இவர் கல்விக்காகவே வெளிநாடு செல்கிறார் என்பதை ஜனன காலத்தில் கல்வியை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனியோடு பரிவர்த்தனை ஆகி நிற்கும் குருவும் சனியும் கோட்சாரத்தில் 4 ஆம் பாவத்தில் தற்போது இணைந்திருப்பது சுட்டிக்காட்டுகிறது.

மகனின் இந்த சூழல் இதர குடும்ப உறுப்பினர்களில் ஜாதகங்களிலும் எதிரொலிக்கிறதா என காண்போம்.

இளைஞனின் தந்தையின் ஜாதகம்.


லக்னத்திற்கு 5 ஆவது பாவம் முதல் குழந்தையையும், சூரியனும் முதல் மகனையும் குறிப்பவை. முன் பார்த்த இளைஞன் ஜாதகரின் முதல் மகனாவார். தனுசு லக்னத்திற்கு 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் ராகுவோடு இணைவு பெற்று ரிஷபத்தில் நிற்பதும் முதல் மகனை குறிக்கும் சூரியன் கோட்சாரத்தில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் நிற்பதும் ஜாதகரின் முதல் மகன் வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது. ஜாதகருக்கு சுக்கிர திசை புதன் புக்தி தற்போது நடப்பில் உள்ளது. இவை இரண்டும் முதல் மகனை குறிக்கும் 5 ஆம் பாவத்திற்கு விரையத்தில் நின்று திசை நடத்துகிறது. 5 க்கு விரைய பாவமான 4 ஆம் பாவம் செயல்படுவதால் 5 ஆம் பாவ உறவான மகன் விடுபட்டுச்செல்கிறார். மேலும் திசா-புக்தி கிரகங்கள் கல்வி பாவமான 4 ஆம் பாவத்தில் ஜல ராசியான  மீன ராசியில் நிற்பது மகன் கல்விக்காக கடல் கடந்து வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது.

இப்போது இளைஞனின் தாயார் ஜாதகத்தில் மகன் வெளிநாடு செல்வது சுட்டிக்காட்டப்படுகிறதா என காண்போம்.


இதுவும் தனுசு லக்ன ஜாதகம் என்பதால் முதல் மகனை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் கோட்சார ராகுவின் மீது செல்வதும் முதல் மகனை குறிக்கும் சூரியன் கோட்சாரத்தில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் செல்வதும் மகன் வெளிநாடு செல்வதை குறிக்கிறது. ஜாதகிக்கு நடக்கும் திசா நாதன் ராகு முதல் மகனை குறிக்கும் சூரியனின் உத்திராடம்-2 நின்று திசை நடத்துகிறது. புக்தி நாதன் சனி 5 ஆம் பாவாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம்-1 ல் நின்று புக்தி நடத்தும் வேளையில் சனி  மீது கோட்சார ராகு செல்வதும், புத்திரகாரகன் குரு கோட்சாரத்தில் ஜனன கால ராகுவின் மீது கோட்சார சனியோடு இணைந்து செல்வதும் மகன் கல்விக்காக வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது.

கிரகங்கள் மாற்றங்களை தந்துகொண்டே இருக்கின்றன. உணர்வதற்கு மனமிருந்தால் மாற்றங்களை எதிர்கொள்வது எளிதாகும். அதற்கு ஜோதிடம் உறுதுணை புரிகிறது.  

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 28 January 2021

பால் வளத்துறை பலன் தருமா?

 


நமக்கு சம்பாத்தியம் வரும் வழிகளை ஒருவர் தெரிந்துகொண்டு அதில் ஈடுபட்டால் வருமானம் பற்றிய கவலைகள் மறைந்துவிடும். சம்பாத்தியம் சுகமானால் வாழ்வில் பாதிப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சம்பாத்தியத்திற்குரிய சரியான துறையை தேர்ந்தெடுப்பதில்தான் மனித வாழ்வின் பாதி வெற்றியே அடங்கியுள்ளது. பொருளாதாரத்தால் முடங்கிய இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தங்களுக்கான துறையை நாடியே ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் துறைகளை தெரிந்துகொண்டு அந்த திசையில் ஓடுபவர்கள் பொருளாதார ரீதியாக விரைவில் வெற்றிபெறுகிறார்கள். இன்றைய பதிவில் நாம் பால் வளத்துறையில் சம்பாதிக்கும் ஜாதக  அமைப்பு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.

கீழே 1996 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகர் குஜராத் அரசின் பால் வளத்துறையில் பணிபுரிகிறார்.



கடக லக்னம் ஒரு நீர் ராசியாகும். அதில் வருமான ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் நின்று தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தை பார்க்கிறார். வேலைவாய்ப்பு பாவமான 6 ஆமதிபதி குரு நவாம்சத்தில் சூரியன் வீட்டில் நிற்கிறார். இதனால் ஜாதகரின் வேலை அரசு வேலையாகும். ஜீவன காரகன் சனி வேலை பாவமான 6 ஆமிடதிலுள்ள அதன் அதிபதி குருவை 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கிறார். சனி தனது 1௦ ஆம் பார்வையாக 6 ஆமிடத்தையும் 6 ஆம் பாவதிபதியையும் பார்ப்பதால் ஜாதகர் சுயதொழிலைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு என இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லாபாதிபதியுடன் இணைந்து விரையத்தில் நிற்கிறார். செவ்வாய் வியாபர கிரகமான புதனின் வீட்டில் நிற்பதால் ஜாதகர் பாலை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாய் உணவு பாவமான கடக லக்னத்திற்கு விரையத்தில் நிற்பதால் ஜாதகர் சார்ந்துள்ளது உணவை நுகர்ந்து விரையம் செய்யும் துறையாகும். கடகத்தின் யோகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான செவ்வாய் நவாம்சத்தில் லக்னத்தில் உச்சமாகி கடக ராசியை பார்ப்பதால் அந்த வேலை கடகம் குறிக்கும் திரவம் சார்ந்தது என்பது புரிகிறது. இரண்டாம் அதிபதி சூரியனும் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். புதன் வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கும் துறை புதன் குறிப்பிடும் வியாபரத்துறையேயாகும். விரையாதிபதியே வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் விரையம் செய்வதன் மூலமே பொருளீட்டும் துறையாகும். புதன் கேதுவின் மகம்-3 ல் நிற்பதால் ஜாதகர் பால் பதப்படுத்தும் துறையில்  Lab Chemist ஆக பணிபுரிகிறார்.

லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் பூர்வீக பூமியை விட்டு வெகுதொலைவில் சென்று வேலை பார்ப்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. சந்திரன் நீர் ராசியான மீனத்தில் ஜீவன காரகன் சனியோடு அமைந்துள்ளார். நீர் ராசியான மீனம் கால புருஷனுக்கு விரைய ராசியாகும். இதனால் ஜாதகர் குடித்துத்தீர்க்கும் பால் வளத்துறையில் பணிபுரிகிறார். (சனி-மக்கள். சந்திரன்-பால், மீனம்-நுகர்தல், அழித்தல், கேது- Chemist). ராகு கன்னியில் ஹஸ்தம்-3 ல் நிற்கிறார். இது பாலை பதப்படுத்தும் துறையில்  ஜாதகர் ஈடுபடுவதை குறிக்கிறது. (ராகு/கேது-பதப்படுத்துதல்) லாபாதிபதியும் பாதகாதிபதியுமான சுக்கிரன் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் நிற்கிறார். இதனால் பாதகாதிபதி சுக்கிரன் லக்ன யோகாதிபதி செவ்வாய்க்கு கட்டுப்பட்டவராகிறார். சந்திரன் உச்சமாகும் பாதகாதிபதி சுக்கிரன் விரையத்தில் நிற்பதால் பால் உணவால் ஜாதகருக்கு லாபம் வரும். 1௦ ஆமதிபதி செவ்வாயை ஒன்பதாம் அதிபதி குரு பார்க்கிறார். இதனால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஜாதகருக்கு உண்டு.

உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் அமைந்த  கேது 2 ஆம் பாவத்தில் நிற்கும் புதனோடு சாரப்பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் உயர்கல்வியில் ஜாதகர் B.Tech – (Dairy Tech) படித்தார். ஜாதகர் தற்போது புதன் திசை ராகு புக்தியில் உள்ளார். புதன் இரண்டாம் இடத்தில் நிற்பதால் ஜாதகருக்கு புதன் திசையில் 1௦ ஆம் அதிபதி செவ்வாயில் புக்தியில் வேலை கிடைத்தது. அப்போது கோட்சார சனி தனுசுவில் ஜனன கால 6 ஆமதிபதி குருவின்மேல் இருந்தது. கோட்சார குரு துலாத்தில் இருந்து 1௦ ஆம் பாவமான மேஷத்தையும் மிதுனத்தில் நின்ற 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயையும் பார்த்த காலத்தில் வேலை கிடைத்தது. அடுத்தடுத்து திசை நடத்தும் கிரகங்களான புதன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வருமானத்தை தரும். இம்மூன்று கிரகங்களும் ஜாதகர் தொலை தூர இடத்தில் இருப்பதையே குறிப்பிடுகின்றன. 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமர்ந்த சூரிய திசையில் ஜாதகரின் வேலை, வருமானம் தடைபடும். அப்போது ஜாதகர் ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார். சூரியன் லக்னத்தில் நிற்பதால் ஜாதகர் தனது வேலையில் முதன்மையான இடத்தை அடைவார். லக்னாதிபதி சந்திரனும் ஜீவன காரகன் சனியும் உபய ராசியில் அமைந்திருப்பதால் ஜாதகர் வேலையில் பல மாறுதல்களை சந்திப்பார் எனலாம்.

இன்றைய தேவை ஒரு வேலை. கிடைக்கும் வேலையை செய்யும் கூலியாட்களைவிட வாழ்வில் பொருளாதார வகையில் உயர வேண்டுமானால் தகுந்த துறையை ஜோதிடத்தின் வாயிலாக அடையாளம் கண்டு முயல்வது மிகுந்த பயனைத்தரும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துகளுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Wednesday, 13 January 2021

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன?

தனது கர்மா என்ன?

தன்னை எது வழிநடத்துகிறது?


என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய அனைவரிடமும் இக்கேள்வி ஒருநாள் கண்டிப்பாக எழுந்தே தீரும். அதனால்தான் மனிதர் மனம் வயது செல்லச்செல்ல ஆன்மீகத்தின்பால் திரும்புகிறது. ஒருவரது பிறப்பின் சூழலை லக்னமும் லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் வாழும் சூழலை பூர்வ புண்ணியம் எனும் அவரது ஐந்தாம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் ஆன்மா இறுதியாக எதில் நிறைவு பெறும் என்பதையும் அவரது கடந்த பிறவியின் கொடுப்பினைகள் என்ன என்பதையும் 9 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களுமே முடிவு செய்கிறது. அவரின் வாழ்வின் முடிவை 12 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் முடிவு செய்கின்றன. எளிமையாக சொல்வதென்றால் வாழ்வின் துவக்கத்தை லக்னமும், மத்திய காலத்தை 5 ஆம் பாவமும் இறுதிக்காலத்தை 9 ஆம் பாவமும் குறிப்பிடும்.  இவற்றின் ரகசியங்களை தெரிந்துகொண்டால் ஒருவரின் வாழ்க்கைப்பயணம் தவிப்பாக இருக்காது. இப்பதிவில் நாம் ஒரு மனிதனின் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளையும் ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.

ஜாதகர் 1968 ல் பிறந்த ஒரு ஆண். லக்னம் மோட்ச ராசியான கடகத்தில் அமைந்து அதன் அதிபதி சந்திரன் வளர்பிறையான காலத்தில் பிறந்தவர். இதனால் ஜாதகருக்கு இயல்பாகவே ஒரு அறம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும் எனலாம். லக்னம் பூசம்-3 ல் அமைந்துள்ளது. சந்திரன் பூசம்-2 ல் அமைந்துள்ளது. பூச நட்சதிராதிபதி சனி, கால புருஷனின் மூன்றாவது மோட்ச ராசியான மீனத்தில் மோட்ச காரகன் ராகுவுடன்  அமைந்துள்ளார். இவரது சிந்தனை வாழ்வின் பிற்காலத்தில் எதை நோக்கிய நிலையில் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இவரது ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்னத்திற்கு 3 ல் அமைந்து அதன் அதிபதி புதன் மீனத்தில் அமைந்துள்ளார். மீனத்தின் அதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனையாகி நிற்கிறார். இந்நிலையில் கடக லக்னத்தின் யோகாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு திக்பலத்தை தரும் நிலையில் அமைந்து மீனத்தில் உச்சமாகியுள்ள சுக்கிரனின் சாரம் பரணி-1 பெற்றுள்ளார். செவ்வாய் கடகத்தையும் மற்றொரு மோட்ச ராசியாகிய விருட்சிகத்தையும் பார்வை செய்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.  இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மீன ராசியையே தொடர்புகொள்கின்றன. லக்னத்தின் போக ஸ்தானாதிபதி (3 ஆம் அதிபதி) புதனே கால புருஷனுக்கும் போக ஸ்தானமான மிதுனதிற்கும் அதிபதியான நிலையில் அவர்  லக்னத்தின் மோட்ச பாவமான 12 ஆம் அதிபதியுமாகி, அவர் கால புருஷனின் மோட்ச பாவமாகிய மீனத்தில் அமைகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜாதகரின் பிறப்பு விபரங்களை காண்போம். லக்னமும் லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்ததால் ஜாதகர் ஒரு நல்ல ஆன்மீக  நாட்டம் கொண்ட ஒரு உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தார். பிறப்பு திசை சனி திசை என்பதும், சந்திரன் சனி சாரம் பெற்றதும் இதற்கு காரணமாகும். பிறவியிலேயே சனி திசை வந்து சிரமங்களை சிறு வயதிலேயே அனுப்பவிப்பவர்கள் பிற்கால வாழ்வில் தடம் மாறுவது குறைவு. காரணம் சனி கற்றுத்தரும் பாடங்கள் அப்படி. சனி திசைக்குப்பிறகு ஜாதகருக்கு சனியோடு சாரப்பரிவர்த்தனை பெற்ற (புதன் உத்திரட்டாதி-2, சனி ரேவதி-2) புதன் திசை வந்தது. வித்யா ஸ்தானமாகிய 4ஆம் பாவத்தின் அதிபதியாகிய உச்ச சுக்கிரனால் நீச பங்கப்பட்ட புதன் வித்யா காரகன் என்பதால் சிறந்த கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். ஜீவன காரகன்  சனியோடு புதன் தொடர்பாவதால் கல்விக்கேற்ற வேலையையும் கிடைக்கப்பெற்றார். 7 ஆம் அதிபதி சனியோடு தொடர்பானதால் ஜாதகருக்கு திருமணமும் தக்க வயதில் நடந்தது. பாதகாதிபதியான மனைவி வந்ததும் வாழ்வில் வசந்தகளும் கூடவே  பாதகமான சில மாற்றங்களும் வரவேண்டும். ஆனால் இங்கு பாதகங்கள் ஏதும் பெரிய அளவில்  நடக்கவில்லை. மனைவியும் ஜாதகரைப்போலவே நல்ல ஆன்மீக சிந்தனை வாய்க்கப்பெற்றவராகவே இருக்கிறார். காரணம் சுக்கிரனுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்ப்படுவதால் தனது இயல்பான பலன்களை வழங்க முடியவில்லை.

இரண்டாவதாக ஜாதகரின் மத்திய வயது வாழ்வியலை ஆராய்வோம். ஜாதகருக்கு இப்போது பூர்வ புண்ணிய பலன்கள் செயல்படத்துவங்குகின்றன. 31 ஆவது வயதில் ஜாதகருக்கு புதன் திசை முடிந்து கேது திசை துவங்கியது. ஞான காரகன் கேது தனது காரக அடிப்படையிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் கேதுவின் சாரநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானதாலும் பூர்வ புண்ணிய அடிப்படையில் ஜாதகருக்கான பலன்கள் நடந்தன. செவ்வாய் லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்த்ததால் வீடு, வாகன பாக்கியங்களை குறைவின்றி வழங்கினார். 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கினார். ஞான காரகன் கேது தற்போது கட்டுமான காரகன் செவ்வாய்க்கு தனது காரக அடிப்படையில் தான் விரும்பும் “அடியார்க்கு எளியர்” (சிவன்)  கோவில் கட்டும் சிந்தனையை ஏற்படுத்துகிறார். பொதுமக்களிடம் ஜாதகருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் தனது வீட்டின் ஒரு பகுதியையே கோவிலாக மாற்றுகிறார் ஜாதகர். ஞான காரகன் கேது, பிடிவாதகாரகன் செவ்வாய் தொடர்பால் தன் முயற்சியில் ஜாதகர் பின்வாங்கவில்லை. உரிய காலம் வரும் வரை காத்திருக்கிறார். ஜாதகர் 2௦ வருடங்களாக தனது வீட்டில் வழிபாடுகள் செய்து இப்படி காத்துக்கொண்டுள்ளார். தற்போது 52 வயதான நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை முடிய இன்னும் உத்தேசமாக 5 வருடங்கள் உள்ளது. சுக்கிரன் பாதகாதிபதி என்பதோடு கால புருஷனின் குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் அதுவரை ஜாதகருக்கு தடை நீடிக்கும்.

இறுதியாக ஜாதகரின் கடைசி காலங்களிலாவது அவரது விருப்பங்கள் நிறைவேறுமா எனக்காண்போம். சுக்கிர திசைக்கு அடுத்து வரும் சூரிய திசை ஜாதகரின் எண்ணங்களை நிறைவேற்றும். காரணம் சூரியன் குருவோடு பரிவர்தனையாவதுதான். சூரியனுடன் பரிவர்த்தனையாகி மோட்சகாரகன் ராகுவோடு இணையும் கால புருஷனின் மோட்ச ஸ்தானாதிபதி குரு, ஞானகாரகன் கேதுவின் மகம்-1 ல் நிற்கிறார். இப்படி சூரியன், குரு, ராகு-கேதுகளுடன் ஏற்படும் தொடர்பால் ஜாதகர் கோவில் கட்டுவார். குருவிற்கும் கேதுவிற்கும் ஆன்மீக ரீதியாக இயல்பாக உள்ள புரிதலால் சூரிய திசையில் ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறும். அப்போது கோவில் கட்ட ஜாதகருக்கு அரசின்  பின்புலத்தில் இயங்கும் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பு ஒன்றின் மூலம் உதவிகள் கிடைக்கும் என்பது ஜாதக ரீதியாக தெரிகிறது. சூரிய திசையை அடுத்து வரும் சந்திரன் அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெறுவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் ஜாதகரின்  வாழ்வு சந்திர திசையில் இறையோடு கலந்து நிறைவுபெறும். கடகத்தில் பிறந்து விருட்சிகத்தில் பொங்கி பிரவாகமெடுத்த நதி இறுதியாக மீனத்தில் கடலில் கலக்கும் எனலாம். ஜாதகத்தில் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதகரின் நோக்கத்தை தெளிவாகத்தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Monday, 23 November 2020

முயல் வளர்ப்பு லாபம் தருமா?

 


அன்பர் ஒருவர் முயல் பண்ணை வைத்து சம்பாதிக்க ஆசைப்படுகிறேன். எனது ஜாதகப்படி அது லாபகரமானதாக இருக்குமா? என்ற கேள்வியுடன் தொடர்புகொண்டார். இது ஒரு சாதாரண தொழில் ரீதியான கேள்விதான் எனினும் தொடர்புகொண்ட நபர் தன்னை ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். பொதுவாக ஆசிரிய தொழில் புரிவோர் குருவின் ஆதிக்கத்தில் வருபவர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் என்றால் ஜாதகத்தில் ஜீவன பாவங்களுடன் குருவும் சூரியனும் தொடர்புகொண்டிருக்க வேண்டும். குருவும் சூரியனும் சத்வ குணத்தை சேர்ந்த கிரகங்களாகும். அப்படி இருக்கையில் இவர் எப்படி முயல் பண்ணை வைத்து அதை மாமிசமாக்கி உண்ணக்கொடுத்து தனது கர்மாவிற்கு பாதகத்தை உண்டாக்கிக்கொள்கிறாரே என்று எண்ணினேன். முன்பொரு முறை என்னை தொடர்புகொண்ட தென்மாவட்டத்தை சார்ந்த பிராமண வகுப்பை சார்ந்த நபர் தனது நிலத்தில் மீன் வளர்ப்பு செய்யலாமா? என்று கேள்வி கேட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார். கலிகாலத்தில் இவை சாதாரணம் என்று எண்ணியபடி ஜாதகத்தை ஆராய்ந்தேன்.

கீழே ஜாதகம்.


1) ஜாதகத்தில் வருமானத்தை தரும் 2 ஆம் பாவத்தில் குரு, ஜீவன காரகன் சனி சாரத்தில் அனுஷம்-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகரின் ஜீவன வகையில் குருவின் தன்மை இருக்கும்.

2) குரு 1௦ ஆமிடத்தையும், சனி 1௦ க்கு 1௦ ஆன 7 ஆமிடத்தை பார்ப்பதாலும் ஜாதகர் ஆசிரியராக பணிபுரிய ஜாதக அமைப்பு உள்ளது.

3) புதன் 1௦ ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் ரோஹிணி-2 ல் நின்று,  2 & 7 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து குரு பார்வை பெற்று 2, 7, 1௦ ஆமிடத்தோடு தொடர்புகொண்டு வர்கோத்தமம் பெற்றதால் ஜாதகர் ஆசிரியர் பணி புரிவார் என்பதை அனுமானிக்கலாம்.

4) 1௦ ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் புதனின் ஆயில்யம்-1 பெற்று, 1௦ ஆமதிபதி சந்திரன் புதன் வீட்டில் கன்னியில் 2 ஆம் பாவத்திற்கு லாபத்தில்  அமைந்ததாலும், இப்படி அமைந்த 1௦ ஆமதிபதி சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் சந்திரனின் சாரத்தில் அமைந்ததாலும் ஜாதகரின் பணி கல்வி தொடர்பானது என்பது தெளிவாகிறது. 1௦ ஆமிட கிரகமான சுக்கிரன் நவாம்சத்தில் குரு வீட்டில் நிற்பது கவனிக்கத்தக்கது.  

5) ராசிக்கு 1௦ ல் ராசியாதிபதி புதனின் வீட்டில் திக்பலத்தில் அமைந்த சூரியனால் ஜாதகர் கல்வி தொடர்பான அரசுத்துறையில் பணிபுரிகிறார் என்பதை அனுமானிக்கலாம். இந்த சூரியன் நவாம்சத்தில் சனியோடு இணைந்து நிற்பதும் ஜீவனம் அரசுவகை என்பதை குறிப்பிடுகிறது.

6) இன்னும் எளிமையாக தசாம்சத்தில் 1௦ ஆம் அதிபதி சந்திரன் குரு வீட்டில் அமைத்து, 1௦ ஆமிடத்தில் சூரியன் அமைந்து, 1௦ க்கு 1௦ ஆமிடமான (பாவத்பாவம்) 7 ஆமிடத்தை அதன் அதிபதி செவ்வாயோடு இணைந்த குரு பார்ப்பதாலும் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை அருதியிட்டுக்கூறுகின்றன.  

ஒருவரது தொழிலை அனுமானிக்க எத்தனை உபாயங்கள் பாருங்கள். இங்கு கூறியுள்ளவை சில மட்டுமே. இப்படி ஜாதகம் அமையப்பெற்றவர் ஏன் தற்போது முயல் பண்ணை வைக்க எண்ணுகிறார் என ஆராய்வோம் வாருங்கள்.

ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. குரு ஜாதகத்தில் உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் குரு வக்கிரம் பெற்று அதன் அதிபதி செவ்வாயால் கால புருஷனுக்கு உணவு ஸ்தானமான ரிஷபத்தில் இருந்து பார்க்கப்படுகிறார்.  குரு செவ்வாய் பார்வை பெற்றதால் தோஷமான நிலையில்தான் உள்ளார். அதுவும் விருட்சிகத்தில் அமையும் பாதிக்கப்பட்ட குரு வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக கெடு செயல்களில் ஜாதகரை ஈடுபட வைக்கும். ஏனெனில் விருச்சிகம் கால புருஷனுக்கு 8 ஆமிடமான மறைவு ஸ்தானமாகும். பாவியின் வீட்டில் பாவியின் பார்வையில் குரு உச்சமாகி வக்கிரமானதால்  நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற சனியின் சாரமும் பெற்று அது 2 ஆம் பாவமும் ஆனதால் ஜாதகர் இப்படி ஒரு கொலைக்கு உயிர் பிராணியை வளர்த்துக்கொடுக்கும் தொழில் செய்வார் என்பது புலனாகிறது. 2 ஆம் பாவம் என்பது 1௦ அதிபதி சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் ஜாதகர் இப்படி ஒரு நீசத்தொழிலுக்கு எண்ணம்கொண்டுள்ளார். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது பசு, யானை, எருமை, குதிரை போன்று வாழ்க்கைக்கும் ஜீவனத்திற்கும் உறுதுணையாக இருக்கும் பிராணிகளை 4 ஆமிடத்தைக்கொண்டும் இதர வகை பிராணிகளை அதாவது உணவுக்காக வளர்ப்பது, பாதுகாப்பிற்காக நாய் வளர்ப்பது போன்றவற்றை 6 ஆமிடத்தைக்கொண்டும் அறியவேண்டும். பொதுவாக பண்ணை வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் பிராணிகளை 4 ஆமிடம் குறிப்பிடும்.

இந்த ஜாதகத்தில் நீச்சதிற்கொப்பான நிலை பெற்ற 4 ஆமதிபதி சனியின் சாரம் அனுஷத்தில் வக்கிரமான 6 ஆமதிபதி குரு நிற்கிறார். இதனால் ஜாதகர் வியாபாரத்திற்காக பிராணிகளை பண்ணை முறையில் வளர்க்க எண்ணுகிறார் என்பது தெரிகிறது. இதில் ஜாதகர் ஏன் முயல் வளர்க்க எண்ணுகிறார் என்ற கேள்வி எழுகிறது. முயலை குறிக்கும் காரக கிரகம் சந்திரனாகும். ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் முயல் வளர்க்க எண்ணுகிறார். புதனின் வீட்டில் சந்திரன் 2 க்கு லாபத்தில் அமைந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் புதனாலும் ஜாதகரின் வியாபர நோக்கம் புலனாகிறது. எப்படிப்பார்த்தாலும் குருவின் அம்சத்தில் போதனை செய்து சம்பாத்தியம் செய்யும் ஒருவர் உணவிற்காக பிராணிகளை வளர்த்துக்கொடுப்பது பாதகமே என்றொரு நெருடல் எழுகிறது. சரி இதன் விழைவு என்ன என ஆராய்வோம். ஜாதகத்தில் சந்திரன் விரைய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்துள்ளார். இதனால் சுய தொழில் செய்தால் ஜாதகர் தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதி. மேலும் 12 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் ஒருவர் தனது கர்மாவின் அடிப்படையில் பெற்ற சாபத்தை குறிப்பிடும் கிரகமாகும். ஜாதகருக்கு சந்திரனின் காரகமான மாத்ரு வகை சாபம் உள்ளது. ஜாதகர் இந்த தொழிலை செய்தால் அது அதிகமாகி ஜாதகரை பழிவாங்கும். இதை தவிர்க்க ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா? என காண்போம்.

ஜாதகத்தில் 2 ல் நிற்கும் 6 ஆமதிபதி குரு வக்கிரமாகி, குருவின் சார நாதனும் ஜீவன காரகனுமான சனியும் வக்கிரமாகியுள்ளதால் ஜாதகர் தொழில் விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்க மாட்டார். இதனால் ஜாதகர் ஜோதிடர்கள் மட்டுமல்ல நண்பர்களிடமும் ஆலோசனை மட்டுமே கேட்பார். ஆனால் முடிவை ஜாதகர் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். எனிவே இந்த பாதக தொழிலை செய்யாதீர்கள் என்று இவருக்கு ஆலோசனை சொல்வது வீண். மேலும் கால புருஷனுக்கு 8 ஆமதிபதியான, செவ்வாய், லக்னத்திற்கு 8 ஆமிடதிலிருந்து திசா நாதன் குருவை பார்ப்பதால் ஜாதகர் இந்த தொழிலை உறுதியாக மற்றும் பிடிவாதமாகச்செய்வார். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும், சாபத்தில் விளைவையும் ஜாதகர் அனுபவிப்பார். 1௦ க்கு பாதகத்தில் நிற்கும் அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தியில் அது நடக்கும். தற்போது ஜனன செவ்வாய் மற்றும் குரு மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகு-கேதுக்களும், லக்னத்திற்கு 4 ல் இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்க்கும் குருவும் சனியும் இதை உறுதி படுத்துகின்றன.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.