Monday 23 November 2020

முயல் வளர்ப்பு லாபம் தருமா?

 


அன்பர் ஒருவர் முயல் பண்ணை வைத்து சம்பாதிக்க ஆசைப்படுகிறேன். எனது ஜாதகப்படி அது லாபகரமானதாக இருக்குமா? என்ற கேள்வியுடன் தொடர்புகொண்டார். இது ஒரு சாதாரண தொழில் ரீதியான கேள்விதான் எனினும் தொடர்புகொண்ட நபர் தன்னை ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். பொதுவாக ஆசிரிய தொழில் புரிவோர் குருவின் ஆதிக்கத்தில் வருபவர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் என்றால் ஜாதகத்தில் ஜீவன பாவங்களுடன் குருவும் சூரியனும் தொடர்புகொண்டிருக்க வேண்டும். குருவும் சூரியனும் சத்வ குணத்தை சேர்ந்த கிரகங்களாகும். அப்படி இருக்கையில் இவர் எப்படி முயல் பண்ணை வைத்து அதை மாமிசமாக்கி உண்ணக்கொடுத்து தனது கர்மாவிற்கு பாதகத்தை உண்டாக்கிக்கொள்கிறாரே என்று எண்ணினேன். முன்பொரு முறை என்னை தொடர்புகொண்ட தென்மாவட்டத்தை சார்ந்த பிராமண வகுப்பை சார்ந்த நபர் தனது நிலத்தில் மீன் வளர்ப்பு செய்யலாமா? என்று கேள்வி கேட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார். கலிகாலத்தில் இவை சாதாரணம் என்று எண்ணியபடி ஜாதகத்தை ஆராய்ந்தேன்.

கீழே ஜாதகம்.


1) ஜாதகத்தில் வருமானத்தை தரும் 2 ஆம் பாவத்தில் குரு, ஜீவன காரகன் சனி சாரத்தில் அனுஷம்-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகரின் ஜீவன வகையில் குருவின் தன்மை இருக்கும்.

2) குரு 1௦ ஆமிடத்தையும், சனி 1௦ க்கு 1௦ ஆன 7 ஆமிடத்தை பார்ப்பதாலும் ஜாதகர் ஆசிரியராக பணிபுரிய ஜாதக அமைப்பு உள்ளது.

3) புதன் 1௦ ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் ரோஹிணி-2 ல் நின்று,  2 & 7 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து குரு பார்வை பெற்று 2, 7, 1௦ ஆமிடத்தோடு தொடர்புகொண்டு வர்கோத்தமம் பெற்றதால் ஜாதகர் ஆசிரியர் பணி புரிவார் என்பதை அனுமானிக்கலாம்.

4) 1௦ ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் புதனின் ஆயில்யம்-1 பெற்று, 1௦ ஆமதிபதி சந்திரன் புதன் வீட்டில் கன்னியில் 2 ஆம் பாவத்திற்கு லாபத்தில்  அமைந்ததாலும், இப்படி அமைந்த 1௦ ஆமதிபதி சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் சந்திரனின் சாரத்தில் அமைந்ததாலும் ஜாதகரின் பணி கல்வி தொடர்பானது என்பது தெளிவாகிறது. 1௦ ஆமிட கிரகமான சுக்கிரன் நவாம்சத்தில் குரு வீட்டில் நிற்பது கவனிக்கத்தக்கது.  

5) ராசிக்கு 1௦ ல் ராசியாதிபதி புதனின் வீட்டில் திக்பலத்தில் அமைந்த சூரியனால் ஜாதகர் கல்வி தொடர்பான அரசுத்துறையில் பணிபுரிகிறார் என்பதை அனுமானிக்கலாம். இந்த சூரியன் நவாம்சத்தில் சனியோடு இணைந்து நிற்பதும் ஜீவனம் அரசுவகை என்பதை குறிப்பிடுகிறது.

6) இன்னும் எளிமையாக தசாம்சத்தில் 1௦ ஆம் அதிபதி சந்திரன் குரு வீட்டில் அமைத்து, 1௦ ஆமிடத்தில் சூரியன் அமைந்து, 1௦ க்கு 1௦ ஆமிடமான (பாவத்பாவம்) 7 ஆமிடத்தை அதன் அதிபதி செவ்வாயோடு இணைந்த குரு பார்ப்பதாலும் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை அருதியிட்டுக்கூறுகின்றன.  

ஒருவரது தொழிலை அனுமானிக்க எத்தனை உபாயங்கள் பாருங்கள். இங்கு கூறியுள்ளவை சில மட்டுமே. இப்படி ஜாதகம் அமையப்பெற்றவர் ஏன் தற்போது முயல் பண்ணை வைக்க எண்ணுகிறார் என ஆராய்வோம் வாருங்கள்.

ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. குரு ஜாதகத்தில் உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் குரு வக்கிரம் பெற்று அதன் அதிபதி செவ்வாயால் கால புருஷனுக்கு உணவு ஸ்தானமான ரிஷபத்தில் இருந்து பார்க்கப்படுகிறார்.  குரு செவ்வாய் பார்வை பெற்றதால் தோஷமான நிலையில்தான் உள்ளார். அதுவும் விருட்சிகத்தில் அமையும் பாதிக்கப்பட்ட குரு வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக கெடு செயல்களில் ஜாதகரை ஈடுபட வைக்கும். ஏனெனில் விருச்சிகம் கால புருஷனுக்கு 8 ஆமிடமான மறைவு ஸ்தானமாகும். பாவியின் வீட்டில் பாவியின் பார்வையில் குரு உச்சமாகி வக்கிரமானதால்  நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற சனியின் சாரமும் பெற்று அது 2 ஆம் பாவமும் ஆனதால் ஜாதகர் இப்படி ஒரு கொலைக்கு உயிர் பிராணியை வளர்த்துக்கொடுக்கும் தொழில் செய்வார் என்பது புலனாகிறது. 2 ஆம் பாவம் என்பது 1௦ அதிபதி சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் ஜாதகர் இப்படி ஒரு நீசத்தொழிலுக்கு எண்ணம்கொண்டுள்ளார். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது பசு, யானை, எருமை, குதிரை போன்று வாழ்க்கைக்கும் ஜீவனத்திற்கும் உறுதுணையாக இருக்கும் பிராணிகளை 4 ஆமிடத்தைக்கொண்டும் இதர வகை பிராணிகளை அதாவது உணவுக்காக வளர்ப்பது, பாதுகாப்பிற்காக நாய் வளர்ப்பது போன்றவற்றை 6 ஆமிடத்தைக்கொண்டும் அறியவேண்டும். பொதுவாக பண்ணை வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் பிராணிகளை 4 ஆமிடம் குறிப்பிடும்.

இந்த ஜாதகத்தில் நீச்சதிற்கொப்பான நிலை பெற்ற 4 ஆமதிபதி சனியின் சாரம் அனுஷத்தில் வக்கிரமான 6 ஆமதிபதி குரு நிற்கிறார். இதனால் ஜாதகர் வியாபாரத்திற்காக பிராணிகளை பண்ணை முறையில் வளர்க்க எண்ணுகிறார் என்பது தெரிகிறது. இதில் ஜாதகர் ஏன் முயல் வளர்க்க எண்ணுகிறார் என்ற கேள்வி எழுகிறது. முயலை குறிக்கும் காரக கிரகம் சந்திரனாகும். ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் முயல் வளர்க்க எண்ணுகிறார். புதனின் வீட்டில் சந்திரன் 2 க்கு லாபத்தில் அமைந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் புதனாலும் ஜாதகரின் வியாபர நோக்கம் புலனாகிறது. எப்படிப்பார்த்தாலும் குருவின் அம்சத்தில் போதனை செய்து சம்பாத்தியம் செய்யும் ஒருவர் உணவிற்காக பிராணிகளை வளர்த்துக்கொடுப்பது பாதகமே என்றொரு நெருடல் எழுகிறது. சரி இதன் விழைவு என்ன என ஆராய்வோம். ஜாதகத்தில் சந்திரன் விரைய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்துள்ளார். இதனால் சுய தொழில் செய்தால் ஜாதகர் தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதி. மேலும் 12 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் ஒருவர் தனது கர்மாவின் அடிப்படையில் பெற்ற சாபத்தை குறிப்பிடும் கிரகமாகும். ஜாதகருக்கு சந்திரனின் காரகமான மாத்ரு வகை சாபம் உள்ளது. ஜாதகர் இந்த தொழிலை செய்தால் அது அதிகமாகி ஜாதகரை பழிவாங்கும். இதை தவிர்க்க ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா? என காண்போம்.

ஜாதகத்தில் 2 ல் நிற்கும் 6 ஆமதிபதி குரு வக்கிரமாகி, குருவின் சார நாதனும் ஜீவன காரகனுமான சனியும் வக்கிரமாகியுள்ளதால் ஜாதகர் தொழில் விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்க மாட்டார். இதனால் ஜாதகர் ஜோதிடர்கள் மட்டுமல்ல நண்பர்களிடமும் ஆலோசனை மட்டுமே கேட்பார். ஆனால் முடிவை ஜாதகர் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். எனிவே இந்த பாதக தொழிலை செய்யாதீர்கள் என்று இவருக்கு ஆலோசனை சொல்வது வீண். மேலும் கால புருஷனுக்கு 8 ஆமதிபதியான, செவ்வாய், லக்னத்திற்கு 8 ஆமிடதிலிருந்து திசா நாதன் குருவை பார்ப்பதால் ஜாதகர் இந்த தொழிலை உறுதியாக மற்றும் பிடிவாதமாகச்செய்வார். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும், சாபத்தில் விளைவையும் ஜாதகர் அனுபவிப்பார். 1௦ க்கு பாதகத்தில் நிற்கும் அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தியில் அது நடக்கும். தற்போது ஜனன செவ்வாய் மற்றும் குரு மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகு-கேதுக்களும், லக்னத்திற்கு 4 ல் இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்க்கும் குருவும் சனியும் இதை உறுதி படுத்துகின்றன.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

  

Sunday 15 November 2020

நீச்ச குரு தோஷங்கள்!

 


ஜோதிடத்தில் முதன்மையான சுப கிரகம் குரு ஆவார். குரு தற்போது மகரத்திற்கு வந்து நீசமாகிறார். இப்படி பிரதானமான சுப கிரகம் நீசமாவது அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பல்ல என்றாலும் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் திருமணம், குழந்தைப்பேறு  உள்ளிட்ட சுபகாரியங்கள் கூட பாதிப்பை தரக்கூடியது. அதனால்தான் குரு,சுக்கிர கிரகங்கள் தோஷமடையும் காலங்களில் சுபகாரியங்களை விலக்குமாறு சொல்லிவைத்தனர் நமது முன்னோர்கள். குரு மகரத்தில் நீசம் அங்கு ஆட்சி பெற்று நிற்கும் சனியால் நீச பங்கமடைந்தாலும் கூட சில விளைவுகள் தவிர்க்க இயலாதவை. உதாரணத்திற்கு கீழே ஒரு ஜாதகம்.

 

இது 1961 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம் இது. ஆட்சி சனியால் நீச பங்கம் பெற்ற குரு லக்னத்திற்கு 10, 12, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார். குரு சனி இணைவு பிரம்மஹத்தி தோஷத்தை தரும் என்றாலும் பொருளாதரத்திற்கு இது சிறப்பை தரும் அமைப்பாகும். சனியோடு இணைந்த குரு 1௦, 2 ஆகிய பாவங்களை பார்த்ததால் ஜாதகர் சிறப்பாக சம்பாதித்தார். குரு 12 ஐ பார்த்ததால் வீணான செலவுகளும் ஏற்பட்டன. இப்போது குருவோடு இணைந்த சனி லக்னத்திற்கு 8, 12, 3 ஆகிய பாவங்களை பார்க்கிறது. ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி குரு சனியால் நீச பங்கம் பெற்று நிற்கும் நிலையில் ஜாதகரின் வைராக்கியம் சீர் குலைகிறது. வைராக்யம், மன உறுதி காரகன் செவ்வாய் தனது பகை கிரகமான புதனுடன் இணைந்து 3 ல் நின்று சனியை 4 ஆம் பார்வை பார்த்து சனியின் 1௦ ஆவது பார்வையை வாங்குகிறார். முதலாவது காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில் செவ்வாய் புதனோடு இணைந்து நின்றதால், நிறைந்த சம்பாத்யத்தினால் ஜாதகர் மனச்சலனம் அடைந்து இல்லற ஒழுக்கம் தவறுகிறார். சனி 3 ஆமிட செவ்வாயை பார்த்ததன் விளைவு இது. 12 ஆமிடத்தை சனி பார்த்ததால் இதன்பொருட்டு தனது பொருளாதாரத்தின் ஒரு பகுதியை ஜாதகர் செலவு செய்கிறார். சனி அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தையும் தனது 3 ஆவது பார்வையால் பார்ப்பதால் தனது தவறுகள் வெளியே தெரிந்து அவமானப்படுகிறார். இத்தனைக்கும் ஜாதகத்தில் 5, 8 க்குரிய குரு நீச பங்கமடைந்துள்ளார். குரு 6 ல் மறைவது தோஷமே என்றாலும் 8 ஆமதிபதி 6 ல் மறைவது விபரீத ராஜா யோகம் ஆகும். குரு விபரீத ராஜ யோகத்தின் விளைவை பொருளாதார ரீதியாக தருகிறார். ஆனால் குருவும் சனியும் சம கிரகங்கள் என்பதாலும் சனியால்தான் தான் நீச பங்கமடைகிறோம் என்பதாலும் தண்டனை தரும் நீதிமான் சனியின் செயல்களை குருவால் தடுக்க இயலவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

            
ரிஷப லக்னத்திற்கு ஜாதகத்தில் 8, 11க்குரிய குரு பகவான் உச்ச செவ்வாயால் நீச பங்கமாகியுள்ளார். ஜாதகத்தில் 5 ஆமதிபதி புதன் நீசமாகி 5 ஆவது பாவத்தையே பார்க்கிறார். நீச பங்கமடைந்த குருவும் 5 ஆவது பாவத்தை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். நீச பங்கமடைந்த குரு, தன் வீட்டில் நீசம் பெற்று நிற்கும் புதனையும் நீச பங்கப்படுத்துகிறார். ஜாதகத்தில் குரு புத்திர, குடும்ப காரகனாகிறார். அதே சமயத்தில் இந்த ஜாதகத்தில் புதன் குடும்ப, புத்திர பாவத்திற்கு அதிபதி ஆகிறார். இந்த இரு கிரகங்களும் 5 ஆம் பாவத்தை பார்க்கின்றனர். குரு ஜாதகத்தில் குடும்ப பாவமான மிதுனத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். அதே சமயம் 5 க்கு 5 வலுவடைந்து நிற்கிறார். குடும்ப பாவத்தில் கேது நிற்கிறார். இதனால் புதன் 2 ஆவது பாவத்தின் மீது தனது கட்டுப்பாட்டை இழக்கிறது. அதே சமயம். நீச பங்கமடைந்த புதன் 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் புத்திர வகையில் நன்மையை செய்தாக வேண்டும். இந்த ஜாதகிக்கு குழந்தை (பெண்) பிறந்ததும் குடும்ப வாழ்வு முறிவடைந்தது. காரணம் குரு மற்றும் புதனின் ஒருங்கிணைந்த செயல்பாடே. ஆனால் ஜாதகியின் மகள் தற்போது வெளிநாட்டில் மிகச்சிறப்பாக உயர் கல்வி பயின்று வருகிறார். இதற்கும் குரு மற்றும் புதனின் ஒருங்கிணைந்த செயல்பாடே காரணமாகிறது. ஒன்றை பறித்து மற்றொன்றுக்கு இவை இரண்டும் வழங்குகின்றன. கர்ம வினை.

மூன்றாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


விருட்சிக லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற குருவும் சனியும் பரிவர்தனையாகியுள்ளன. குரு வக்ரமாகிவிட்டதாலும் பரிவர்தனையடைவதாலும் நீச பங்கமடைகிறது. ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு 5 ல் அமரும் குரு வக்கிர குரு ஆவதால் தனது மன உறுதியில் சில விட்டுக்கொடுத்தல்களை செய்துகொள்கிறார். பரிவர்த்தனைக்குப் பிறகு 3 ல் வக்கிரம் பெற்று அமரும் சனி ஜாதகிக்கு அசட்டுத்துணிச்சலை தருகிறார். லக்னாதிபதியும் வைராக்ய காரகனுமான செவ்வாய் லக்னத்திற்கு 12 ல் மறைந்து 12 ஆம் வீட்டோன் சுக்கிரன் நீசமாகியுள்ளார். இந்த அமைப்பால் ஜாதகியின் வைராக்கியம் தளர்ச்சியுறும். பரிவர்தனைக்குப்பின் மீனத்திற்கு இடம் பெயரும் குரு, நீச நிலை பெற்று லக்ன பாதகாதிபதியுடன் இணைந்திருக்கும் சுக்கிரனின் பார்வையை பெறுகிறது. இந்த அமைப்புகள் குடும்ப மற்றும் இல்லற விஷயங்களில் ஜாதகியை தவறாக வழிநடத்தும். இந்த ஜாதகி திருமணதிற்கு முன்னரே தனக்குப்பிடித்தமானவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்கிறார்.

குரு வாழ்வின் ஒட்டுமொத்த வளமைக்கான கிரகம். அது நீசமாகும்போது தவறான வழிகளில் உயர்வை கொடுத்து வாழ்வில் உயிரானவைகளாக, உயர்வானவைகளாக மதிக்க வேண்டிய விஷயங்களில் பாதிப்பை தந்துவிடும் வாய்ப்பு நிறைய உண்டு. தற்போதைய கோட்சாரத்தில் நீச குருவிற்கு 5 ல் கால புருஷனுக்கு 2 ல் ரிஷபத்தில் உச்ச கதியில் நிற்கும் ராகுவையும் குரு பார்க்க இருக்கிறார். இதனால் குரு-சண்டாள யோகம் செயல்படும் என்பதை இவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக காலங்காலமாக நாம் கட்டிக்காத்து வந்த சமுதாய, குடும்ப, பாரம்பரிய நடத்தை நெறிகள் மாறிவிடும் என்பது கலியின் கொடுமை என்று சொல்தைத்தவிர வேறு என்ன சொல்ல?

 

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி எண்: 8300124501.

Sunday 8 November 2020

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்!

 


ஜோதிடத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியை முடித்து உயர் கல்விக்காக கல்லூரி செல்லும்போது எட்டாம் பாவத்தில் இருந்து ஒரு கிரகம் திசா-புக்தி நடத்தினாலோ அல்லது எட்டாம் பாவாதிபதி திசா-புக்தி நடந்தாலோ அப்போது உயர்கல்வியில் தடை ஏற்படும். ஏனெனில் 8 ஆம் பாவம் என்பது ஒன்பதாம் பாவத்தின் விரைய பாவமாகும்.அப்படியானதொரு சூழலில் நினைந்த உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக்காலகட்டமே மிக முக்கியமானதொரு காலமாகும். இந்தச் சூழ்நிலையில் பெற்றோர்கள் சரியான வழிகாட்டலை தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். முன்னதாக தங்கள் குழந்தைகளின் உயர்கல்வி சூழல்களை தகுந்த ஜோதிடர்களின் துணைகொண்டு ஆராய்ந்து வைத்திருப்பது பல சிரமங்களை தவிர்க்க பெரிதும் உதவும். உயர்கல்வியில் சிரம சூழல் யாருக்கு ஏற்படும் எனில் ஒன்பதாம் பாவம் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதிகம் ஏற்படும். 9 ஆம் பாவம் பாதிக்கப்பட்டு 8 ஆம் பாவ கிரக திசை-புக்தி நடக்கையில் அங்கு உயர்கல்வி தடுமாறும். அப்போது குறிப்பிட்ட காலம் வரை அவர்களை ஆற்றுப்படுத்தி உரிய மறு வாய்ப்புகளை அடையாளம் காட்டவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இப்பதிவின் உயர்கல்வி வாய்ப்புகளில் 8 ஆமிடத்தின் தாக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம்.  

கீழே ஒரு மாணவியின் ஜாதகம்.

2002 ல் பிறந்த இந்த மாணவிக்கு 2018 இறுதியிலிருந்து சிம்ம லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் மீனத்தில் ரேவதி-2 ல் நிற்கும் 9 ஆமதிபதி செவ்வாயின் திசை நடக்கிறது. ஜாதகி 2௦19 ல் 12 ஆம் வகுப்பு முடித்து மருத்துவம் பயில எண்ணியிருந்தார். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமதிபதி செவ்வாய், 9 க்கு விரையத்தில் மறைந்துள்ளார். ஜாதகி நன்றாக படிக்கும் மாணவி ஆயினும் மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதனால் தனது எண்ணம் ஈடேற ஓராண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு மீண்டும் இவ்வாண்டு தேர்வு எழுதினார். ஆயினும் இவ்வாண்டும் தேர்ச்சி பெற இயலவில்லை. செவ்வாய் இங்கு பாக்யாதிபதி ஆயினும் 8 ல் மறைந்து திசை நடத்துவதால் உயர்கல்வியை தடை செய்கிறார். 8 ஆமிட செவ்வாய் தனது எதிரி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்பதால் புதனின் காரக வகையில்தான் அதாவது கல்வி சார்ந்த வகையில்தான் தனது பாதிப்பை வழங்கவேண்டும் என்பது தெளிவாகிறது. செவ்வாய் பிடிவாத காரகன் ஆகிறார். இதனால் ஓராண்டு கல்வியை பிடிவாதமாக மறுத்து மீண்டும் முயன்றார். உயர்கல்விக்கு உரிய 9 ஆம் பாவத்திற்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பது உயர்கல்வியில் ஏற்படும் தடுமாற்றத்தை தெளிவாக உணர்த்துகிறது. இங்கு செவ்வாய் பாக்யாதிபதியாயினும் 8 ஆமிட பலனை முதலில் வழங்கிவிட்டு பிறகே தனது 9 ஆம் பாவ பலனை வழங்குவார். இந்த அடிப்படையில் முதலில் உயர்கல்வியை தடைசெய்த அதே செவ்வாய் தற்போது உயர்கல்வியை தொடர வழிவகுத்துள்ளார். தற்போது ஜாதகி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.  

இரண்டாவதாக மற்றொரு மாணவியின் ஜாதகம்.


ஜாதகி 1994ல் பிறந்தவர். இந்த ஜாதகமும் முதல் ஜாதகத்தைப்போன்றே சிம்ம லக்ன ஜாதகம்தான். ஜாதகிக்கு 2௦௦6 முதல் 2023 வரை புதன் திசை நடக்கிறது. புதன் இந்த ஜாதகத்தில் 8 மறைந்து திசை நடத்தினாலும் அவர் தனது திசையின் ஒரு பகுதி பலனை 5 ஆமிடத்திற்கும் பிரித்து வழங்க வேண்டும். ஏனெனில் புதன் இரு வீடு ஆதிபத்தியம்கொண்ட  குருவின் வீட்டில் இருந்து திசை நடத்துகிறார். புதன் ஜாதகத்தில் நீசமானாலும் அவர் லக்னத்திற்கு 7 ல் திக்பலத்தில் நிற்கும் சனியின் உத்திரட்டாதி-1 ல் நிற்கிறார். இதனால் புதனுக்கு நீச பங்கம் ஏற்படுகிறது. கூடவே சனியின் திக்பல வலிமை புதனுக்கும் கிடைக்கிறது. இதனால் புதன் வலுவடைகிறார். இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் புதனும் சூரியனும் சேர்ந்து புத-ஆதித்ய யோகத்தில் உள்ளனர். பொதுவாக புதனும் சூரியனும் சேர்ந்து இதர இடங்களில் அமைவதைவிட 1, 4, 8  ஆகிய மூன்று இடங்களில் ஒன்றில் இணைந்து நின்றால்தான் அங்கு புத-ஆதித்ய யோகம் மிகச்சிறப்பாகச் செயல்படும். இந்த ஜாதகத்தில் புத-ஆதித்ய யோகம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

இந்த ஜாதகத்தில் உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்து தன வீட்டில் அமைந்த குருவின் பார்வையை பெறுகிறார் என்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இதனால் ஜாதகிக்கு உயர்கல்வி மிகச்சிறப்பாக வாய்க்கும். 8 ஆமிடம் சிறப்பாக அமைந்தால் அது மறைந்திருக்கும் பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்து புகழ்பெற்ற வைக்கும் அமைப்பாகும். இந்த ஜாதகத்தில் 8 ஆமிட புதன் நீச பங்கம் பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்தது ஜாதகிக்கு தீவிர ஆராய்ச்சி மனமிருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. 8 ஆமிடம் என்பது நீர் ராசியாவதால் ஜாதகி சொந்த ஊரை விட்டு கண்காணாத இடத்தில் கடல்கடந்த தேசத்தில் மறைந்துதான் தனது உயர்கல்வியை தொடரவேண்டும் என்பதையும் குறிப்பிடும். இந்த ஜாதகி பொறியியலில் BE (INDUSTRIAL BIO TECHNOLOGY) யை முடித்தார். புதன் செவ்வாய் சேர்க்கை இதற்கு வித்திட்டது என்றால் அது மிகையல்ல. அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக 9 ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது. பொறியியல் கல்வி பயிலும்போது ஜாதகி உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்று புதன் திசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகி ஜெர்மன் சென்று MS (MOLECULAR BIO TECHNOLOGY) பயின்றார். ஜாதகி இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் புக்திநாதன் செவ்வாய் குரு சாரம் பூரட்டாதி-4 பெற்று, குருவும் ராகுவும் தங்களுக்குள் சாரப்பரிவர்த்தனை (குரு-சுவாதி-4 & ராகு விசாகம்-4)  பெற்றதுதான் காரணமாகும். MOLECULAR பிரிவு கல்வியை இங்கு ராகு குறிக்கிறார். ஜாதகி ஜெர்மனியில் MS படிக்கும்போதே சுவிட்சர்லாந்தில் தனது ஆய்வுக்கல்வியை (PhD) பயில்வதற்கான  வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டார். ஜாதகி தற்போது சுவிட்சர்லாந்தில் MOLECULAR BIO ENGINEERING  ல் தனது ஆய்வுக்கல்வியை  தொடர்ந்து வருகிறார். 

பொதுவாக 8 ஆமிடம் என்பது உயர்கல்வியை தடை செய்யும் அமைப்புதான் என்றாலும் ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாக்யஸ்தானத்தின் அமைப்பையும் 8 ஆமிட கிரகம் வேறு எந்த பாவங்களுடன் தொடர்புகொள்கிறது என்பதை கவனித்தே உயர்கல்வியில் ஏற்படும் விளைவுகளை கூறவேண்டும். இந்த ஜாதகத்தில் 8 ஆமிட கிரகம் கண்காணாத கடல்கடந்த தூர தேசத்தில் தனது உயர்கல்வியை பயில ஜாதகிக்கு வகை செய்துள்ளதை கவனிக்கவேண்டும். (8 ஆமிடம் – மறைந்துபோதல், கடல்கடந்த தூர தேசம் சென்றுவிடுவதை குறிக்கும்.)

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501