Saturday 10 August 2024

 

அங்க என்ன சொல்லுது?



இன்றைய நவீன உலகில் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை முன்னிட்டிடான ஓட்டத்தில் பணியே முக்கிய கவனமாக ஆகியுள்ளது. அதைத் தவிர இதர விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் அவை பாதிக்கப்படும். பணமே அனைத்திற்கும் ஆதார சுருதியாக திகழ்கிறது என்றாலும், ஆரோக்கியக் குறைபாடு போன்ற இதர விஷயங்களை துவக்கத்திலேயே கவனித்து சரி செய்துகொள்ளாவிட்டால் பிறகு அது நம்மை பீதிக்குள்ளாக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும். இந்நிலையில் தனது வாழ்நாள் சேமிப்புகளை சில நாட்கள் மருத்துவமனை சிகிச்சையில் இழப்பவர்கள் பலர். சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் மன அழுத்தங்களால் வரும் உடல்நல பாதிப்புகளும், பாரம்பரியமாக வரும் ஆரோக்கிய குறைகளும், தவறான பழக்கத்தால் வரும் நோய்களும் ஒருநாள் நம்மை வீழ்த்தி விடும்.  அதனால்தான் “Health is Wealth” என்கிறார்கள். ஆரோக்யம்தான் முதன்மையான சொத்து என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். உடல் நலத்திற்கு மன நலமே முக்கிய காரணியாக விளங்குகிறது. மனம் பாதிக்க, உடல் பாதிக்கும். வெளிநாட்டில் இருக்கும் எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆரோக்கியம் பற்றிய மன அழுத்தத்தில் இருந்தார். இயல்பாக நடக்க இயலா வண்ணம் தனது கால்கள் சிரமப்படுத்துகின்றன. நடுத்தர வயதானாலும் நடக்க சிரமப்படும் சூழல் தன்னை பயமுறுத்துவதாக கூறினார். தனது கால் எழும்புகள் பாதிக்கப்பட்டிருக்குமோ? என்ற பயத்தில் அவர் இருந்தார். ஜோதிடம் மூலம் தனது கால்களில் என்ன பாதிப்பு? என அறிந்து கூற இயலுமா? என கேட்டுக்கொண்டார். அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது



கேள்வியாளர் கேள்வியை நேரடியாகவே கேட்டுவிட்டார் என்பதால் உதயமே பதிலை சொல்லிவிட வேண்டும். ஆனால் இங்கு கூடுதலாக கேள்வியின் பின்னணியோடு இந்தப் பிரசன்னத்தை அணுகுவோம். ஆரோக்ய ஸ்தானம் என்பது 4 ஆமிடமாகும். கால புருஷனுக்கு 4 ஆமிடமான கடகமே உதயமாக அமைந்ததால் ஆரோக்ய விஷயம் என்பதை பிரசன்னம் உணர்த்துகிறது. உதயாதிபதி சந்திரன் உதயத்திலே வெளிவட்டத்தில் அமைந்தது பலமே. அவர் சனி சாரத்தில் பூசத்தில் இருப்பதால் கால்கள் இயக்கத்தில் தடை ஏற்பட்டுள்ளது புரிகிறது. உதயப் புள்ளி 6 ஆமதிபதியான குருவின் புனர்பூசத்தில் அமைந்து, மகர குரு நீசம் பெற்ற நிலையில் உதயாதிபதி சந்திரனின் திருவோணத்தில் இருந்து உதயத்தை பார்ப்பதால் கேள்வியாளருக்கு சர்க்கரை வியாதியின் பாதிப்பால் இந்த தொந்தரவு வந்திருக்க வேண்டும். குரு-இனிப்பு, சந்திரன்-ரத்தம். எனவே சர்க்கரை வியாதி. 4 ஆமிடமான துலாத்தில் சந்திரன் ஜாமச் சுக்கிரனுடன் (வெளிவட்ட சுக்கிரன்) இணைவு பெற்றதும் கேள்வியாளருக்கு சர்க்கரை வியாதி இருப்பதை குறிப்பிடுகிறது. துலாத்தில் சுக்கிரன் ராகுவின் சுவாதியில் நிற்பதால் கேள்வியாளருக்கு ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த சிரமான அளவு உள்ளது என்பதும் புரிகிறது.

பாதிப்பின் காரணத்தை சுட்டிக்காட்டும் ஆரூடம் உதயத்திற்கு 1௦ ஆமிடமான மேஷத்தில் உச்ச சூரியன், புதன், குருவுடன் அமைந்துள்ளது. ஆரூடத்தில் உச்ச சூரியன் உடல் நரம்புகளை குறிப்பிடும் கேதுவின் அஸ்வினியில் அமைந்து, கும்ப சனியின் 3 ஆம் பார்வையை பெறுவதால் கேள்வியாளருக்கு கால்களில் நரம்பு பலகீனத்தால் ஏற்படும் Varicose பாதிப்பும்  இருக்க வேண்டும். பாதிப்பின் வகையை குறிப்பிடும் கவிப்பு சிம்மத்தில் கேதுவின் மகம்-4 ல் அமைந்தது இதை உறுதிப்படுத்துகிறது. கால்களை குறிப்பிடும் சனி வெளிவட்டத்தில்  கன்னியில் கேதுவுடன் இணைவு பெற்று, கால புருஷனுக்கு 12 ஆமிடமான பாதங்களை குறிக்கும் மீனத்தையும், உதயத்திற்கு 12 ஆமிடமான மிதுனத்தையும் பார்ப்பதால் இது தெளிவாகிறது. பாத ராசியான மீனத்தில் சூரியன் ராகு மற்றும் செவ்வாயுடன் இணைவு பெற்று கன்னி சனியின் பார்வை பெறுவதால் கேள்வியாளருக்கு சூரியனின் செயல்பாடுகள் பாதிக்கப்பட வேண்டும். சூரியன் வைட்டமின் D யை குறிப்பிடுபவர். எனவே கேள்வியாளருக்கு வைட்டமின் D குறைபாடு இருக்க வேண்டும்.

மேற்கண்ட சர்க்கரை வியாதி, Varicose, வைட்டமின் D போன்ற பல பாதிப்புகள் கேள்வியாரின் பாதிப்பின் பின்னணியில் இருந்தாலும், தற்போதைய கால்களில் வலிக்கு என்ன காரணம்? என்பதே கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு உதய கிரகமே நேரடியாக பதிலைக் கூறிவிடும். உதயத்தில் ரத்தத்தை குறிப்பிடும் சந்திரன், கட்டியை குறிப்பிடும் செவ்வாயின் 8 ஆம் பார்வையை கும்பத்தில் இருந்து பெறுகிறார். இதனால் கேள்வியாளருக்கு கால்களின் பாதிப்பிற்கு  ரத்தக்கட்டே காரணம். மீனத்தில் வெளிவட்ட செவ்வாய், நான்காம் பார்வையாக உதயத்திற்கு 12 ஆமிடத்தையும், கும்ப உள்வட்ட செவ்வாய் உதயத்திற்கு 2 ஆமிடத்தையும் பார்ப்பதால், கேள்வியாளருக்கு இரு பாதங்களிலுமே ரத்தக் கட்டுகள் இருக்க வேண்டும். 2 ஆமிடம்-வலது பாதம். 12 ஆமிடம் இடது பாதம் என்பதை அறிக. வலது காலை குறிக்கும் 2 ஆமிடத்தில் கவிப்பு அமைந்தது வலது காலில் பாதிப்பின் கடுமையை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு உங்களுக்கு சர்க்கரை, Varicose, வைட்டமின் D போன்ற பல உடலியல் பாதிப்புகள் இருப்பினும், தற்போதைய கால்களின் வலிக்கு ரத்தக்கட்டே காரணம். நீங்கள் பயப்படும் அளவு எலும்பு பலகீனமல்ல என்று கூறினேன். கேள்வியாளரும் மேற்கண்ட உடலியல் உபாதைகளை குறிப்பிட்திருந்தார் எனினும், கால்களின்  வலிக்கு காரணம் எனும்பு பாதிப்பல்ல என்று கூறியதால் நிம்மதியடைந்தார்.   அடுத்த ஓரிரு நாட்களில் கேள்வியாளரின் கால் வலிக்கு ரத்தக்கட்டே காரணம் என மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, முதலில் இடது காலில் ஊசிகள் மூலம் இரத்தக்கட்டுகள் அகற்றப்பட்டன.  அதன் பிறகு சில நாட்கள் இடை வெளிக்குப் பின் ரத்தக்கட்டு அதிகம் இருந்த வலது காலில் பல ஊசிகள் மூலம் கடும் அவஸ்தையுடன் கேள்வியாளருக்கு ரத்தக்கட்டுகள் அகற்றப்பட்டன.

சிறிய அளவில் பாதிப்பு இருந்த போதே சரியான மருத்துவ ஆலோசனையை பெற்றிருந்தால் இத்தகைய கடும் அவஸ்தைகளும் மன உழைச்சலும் ஏற்பட்டிருக்காது எனலாம். ஆனால் கடமைகளும், பொறுப்புகளும் நமது கவனத்தை திசை திருப்புவதன் விளைவு இது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

பின் குறிப்பு:

எனது வலைத்தளம் jothidanunukkangal.com பராமரிப்பில் இருப்பதால் பதிவு தற்காலிகமாக இங்கு பதிவிடப்படுகிறது.