Tuesday, 19 February 2019

கூக்லி


பாவகத்தில் பரிவர்த்தனை நுட்பங்கள்

கிரிக்கெட் பற்றி தெரிந்த அனைவருக்கும் கூக்லி என்றால் என்னவென்று தெரியும். பந்து வீசுகையில் அது ஒரு புறமாக திரும்பும் விதமாக ஸ்பின் பௌலர்கள் வீசுவார்கள். அது எதிர்பார்க்கும் திசையில் திரும்பாமல் மாற்று திசையில் திரும்பி பேட்ஸ்மனை திணறடிக்கும். அவ்விதமான பந்து வீச்சுக்குப் பெயர்தான் கூக்லி.



பரிவர்த்தனை அமைப்பு ஒரு ஜாதகத்தில் ஏற்பட்டிருந்தால் அது சிறப்பானது. பரிவர்த்தனை நல்ல பாவகங்களுக்கிடையேயும் இரு நட்பு கிரகங்களுக்கிடையேயும் ஏற்படுவது விரும்பத்தக்கது. இவ்வகை பரிவர்த்தனைகள் மிகச் சிறந்த பலனைத் தரும்.  இரு பகை கிரகங்கிடையேயும் மறைவு, பாதக ஸ்தான தொடர்புடைய வகையிலும் ஏற்பட்டிருந்தால் அது அவ யோகத்தையே செய்யும். பரிவர்த்தனையில் ஈடுபடும் கிரகங்களுக்கிடையேயான உறவின் அடிப்படையிலும் (நட்பு, பகை, சமம்) மற்றும் பரிவர்தனைக்குள்ளாகும் பாவங்களைப் பொருத்தும் பரிவர்த்தனையின் செயல்பாடு இருக்கும். இரு நீச்ச கிரகங்களுக்கிடையே பரிவர்த்தனை ஏற்பட்டிருந்தால் அங்கு இரு கிரகங்களின் நீச்சம் பங்கப்பட்டு யோகத்தை அளிக்கும். அப்படி இரு நீச்ச கிரகங்களுக்கிடையேயான  பரிவர்தனை இதர கிரக பரிவர்த்தனைகளைவிட மிகச்சிறப்பான பலனை அளிக்கும்.  பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்டிருந்தால் பரிவர்த்தனையில் பங்கு கொள்ளும் பாவங்களின் செயல்பாடு சிறப்பாகவும் பரிவர்த்தனையில் பங்கு கொள்ளாத பாவங்களின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிப்புக்கும் உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் தங்கள் பாவங்களில் இடம் மாறி சிறந்த பலனை வழங்கும் என்றாலும் அது கோட்சாரத்தில் அதிகம் நடக்கும். எப்போது நடக்கும் என்றால் கோட்சாரத்தில் பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்புகொள்ளும் போது நடக்கும். பரிவர்த்தனை ஆனாலும் ஒரு  கிரகம் தனது திசா புக்திகளில் பொதுவாக தாங்கள் நின்ற பாவப்பலனையே அதிகம் செய்யும். அப்படி பரிவர்த்தனை ஆன ஒரு கிரகம் திசை நடத்துகையில் பரிவர்த்தனை ஆன மற்றொரு கிரகம் கோட்சாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அக்கிரகம் நின்ற பாவத்தின் பலனையும் கூடுதலாக  எடுத்துச் செய்யும்.

மேற்சொன்ன விதிகள் தெரிந்திருந்தாலும் பாவத்தில் ராசிச்சக்கரத்தில் இருக்கும் கிரக நிலைகள் பாவச் சக்கரத்தில் இடம் மாறியிருக்கும். அத்தகைய கிரகங்கள் ராசியில் அமைந்த அமைவிடத்தின் தன்மையை ஓட்டி பாவக சக்கரத்தில் அமைந்த இடத்தின் செயல்பாட்டையே தனது திசா புக்தியில் கொடுக்கும். (இது பற்றி பாவச் சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி? என்று ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருந்தோம். அதன்  இரண்டாவது பகுதியாக இப்பதிவை எடுத்துக்கொள்ளலாம்.) இந்நிலையில் ராசி சக்கர பரிவர்த்தனை அமைப்பை பாவச்சக்கரம் மாற்றி அமைத்துவிடும் என்பதை கவனத்திலகொள்ள வேண்டும். பெரும்பாலான ஜோதிடர்கள் குழம்புவது இங்குதான்

              
மேலே உள்ளது ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகத்தில் ராசியில் பரிவர்த்தனை இல்லை. பாவத்தில் உள்ளது. ராசியில் நீச்சத்தை நோக்கிச் செல்லும் சந்திரன் பாவத்தில் நீச்சமான செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகிறது. பாவகத்தில் ஏற்பட்டிருந்தாலும்  இதுவும் ஒருவகையில் அருமையான நீச கிரக பரிவர்தனையாகும். பரிவர்த்தனை கிரகங்கள் இடம் மாறிய பிறகு தங்களது ஆட்சி வீட்டிற்கு வந்து விடுகின்றன. நடப்பது பாக்யாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் அமைந்த லக்னாதிபதி புதனின் திசை. சனியும் பாவத்தில் தனது மூலத்திரிகோண வீட்டில் அமைந்துள்ளார். ஆறாம் இடம் மற்றும் சனி இரண்டும் வேலையை குறிக்கும். பரிவர்த்தனை ஆன இரு பாவங்களும் ஜல ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஜாதகர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். லக்னாதிபதி புதன் தனது பரம நண்பர் சூரியனுடனும், பரிவர்த்தனையால் வலுவடைந்த செவ்வாயுடனும் அமைந்துள்ளார். ராகு-கேதுக்கள் வெளி நாட்டுத் தொடர்பை குறிக்கும் என்பதால் ஜாதகர் வெளிநாட்டோடு தொடர்புடையதாக தமது வாழ்வை அமைத்துக்கொண்டால் ராகு-கேதுக்கள் நன்மை செய்கின்றன.  

சுபாவ பாவியும் மூன்றாமிடாதிபதியுமான சூரியன் சேவக ஸ்தானத்தில் யோக பலம் பெற்ற ஆறாமதிபதியுடன் அமைவது ஜாதகர் தனது வேளையில் முதன்மையான நிலையை அடைவார் என்பதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை ஆன இடம் தன ஸ்தானமான இரண்டாமிடம் என்பதன் பலனாவது ஜாதகர் மாத ஊதியமாக சில லகரங்களை (டாலரில்) பெறுவதை குறிக்கிறது. செவ்வாய் சனியின் பூச நட்சத்திரத்தில் அமைந்துதான் பரிவர்த்தனை பெற்றுள்ளார். பரிவர்த்தனைக்குப்பின் புதனுடன் சேருகிறார். ஜாதகர் தகவல் தொழில் நுட்பத்துறையில் வல்லுநர் (BE, MS).  இந்த ஜாதகத்தில் பாவச்சக்கர பரிவர்த்தனையை கவனிக்காமல் பலன் கூறினால் பலனில் தெளிவிருக்காது.

கீழே ஒரு பெண்மணியின் ஜாதகம்.
               
இந்த ஜாதகத்திலும் ராசியில் பரிவர்த்தனை இல்லை. பாவகத்தில் வக்ரம் பெற்ற லக்னாதிபதி சனியுடன்  6 ஆமதிபதி சந்திரன் பரிவர்த்தனை. சந்திரன் காலபுருஷனுக்கு ஆறிலும் லக்னத்திற்கு எட்டிலும் அமைந்த ராகுவின் சாரம். பாவகத்தில் பரிவர்த்தனை ஆகும் சனி ராசியில் சிம்மத்தில் கேதுவின் சாரத்தில் அமைந்துள்ளது. பரிவர்த்தனை லக்னத்திற்கும் 6 ஆமிடத்திற்கும் அதன் அதிபதிகளுக்குமிடையே அமைவது இதர அமைப்புகள் கெட்டிருந்தால் அவ யோகத்தை செய்யக்கூடியதாகும். இங்கு நாம் இதர அமைப்புகளை தவிர்த்து பாவக பரிவர்த்தனை தொடர்புடைய விஷயங்களை மட்டும் ஆராய்வோம்.

புதன் ராசியில் கேதுவின் மக நட்சத்திரத்தில் அமைந்து பாவகத்தில் லக்னத்திற்கு இரண்டில் கேது, சூரியனோடு இணைந்துள்ளார். லக்னாதிபதி சனி வக்கிரம் பெற்று சூரியனது வீட்டில் அமைந்துள்ளது. ஜாதகி அரசுப்பள்ளி ஆசிரியையாக பணி புரிய உதவியுள்ளது. வக்கிரம் பெற்ற கிரகங்களை நிரந்தர வக்கிர கதியில் அமையும் ராகு-கேதுக்கள் நண்பர்களாகவே பாவிக்கும். அவைகளெல்லாம் one way யில் பயணிக்கும் வாகனங்கள் போன்றவை. ஒன்றை ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவே. அப்படியே வக்கிர கிரகங்கள் பாதிக்கப்பட்டாலும் அவைகளை ராகு-கேதுக்கள் கை தூக்கி விட்டு உதவுகின்றன. .

இந்த ஜாதகத்திலும் திசா நாதன் புதனே. புதன் கேதுவின் சாரம் பெற்று பாவகத்தில்  கேதுவோடு தொடர்பு பெறுகிறது. புதன் இங்கு ஐந்து மற்றும் எட்டாம் இடத்திற்கு அதிபதி என்பது கவனிக்கத்தக்கது. எட்டாமிடம் ஒரு பெண்ணிற்கு கர்ப்பப்பையையும் குறிக்கும். சந்திரன் காரக அடிப்படையில் ஒரு பெண்ணிற்கு கர்ப்பப் பையை குறிக்கும். ஆறாமதிபதியோடு பாவகத்தில் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்றதால் ஜாதகிக்கு வக்கிரகதியில் அமைந்து ராகு-கேதுக்களுக்கு நட்பாகிவிட்ட எட்டாமதிபதி புதனின் திசையில் கேது புக்தியில் ஜாதகிக்கு கற்பப்பை கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டது.

ராகு-கேதுக்கள் மருத்துவச் சிறப்பை குறிக்கும் காரக கிரகங்களாகும். அவர்களோடு தொடர்புகொள்ளும் கிரகங்கள் வக்கிர கதியில் அமைந்து அவர்களது அன்புக்கு பாத்திரமாகும் போது அக்கிரகங்கள் குறிக்கும் பாவகங்களில் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பை மிகச் சிறப்பாக சரி செய்துவிடும். இது ராகு-கேதுக்கள் வக்கிர கிரகங்களோடு இணைந்து ஜாதகருக்கு நிகழ்த்தும் அற்புதமாகும். அனுபவித்தவர்களுக்கு இக்கிரகங்களின் அற்புதம் புரியும்.

இரு ஜாதகங்களிலும் புதன் வக்ரமடைந்திருப்பது தீவிர படிப்பாளிகளை குறிக்கும்.

எனவே ஜோதிடர்கள் பாவச் சக்கரத்தையும் ஆராய்ந்து பலன் கூறுவது அவசியம் என்றாலும் இப்படி பரிவர்த்தனை அமைப்புகளை பாவகத்தில் சரியாக மதிப்பிட்டால் தங்களது பலனில் நுட்பங்களை சேர்க்கலாம்.

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501.  


Friday, 8 February 2019

கர்மா


உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா உண்டு. இதில் அந்த கர்மங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறோம். அதற்காக ஜோதிடம் போன்ற வழிகளில் முயல்கிறோம்.

கர்மம் என்பது ஒரு ஜாதகர் தனது வாழ்வில் ஈடுபடும் செயல்களைக் குறிக்கும். ஒரு ஜாதகர் தனது வாழ்வில் பலவகை கர்மங்களில் ஈடுபட்டாலும் பிரதானமாக அவரது உணவுக்கான உழைக்கும் 2 மற்றும் 10 ஆமிட தொடர்பையும் ஜீவன காரகன் சனியையும் கொண்டே அது அளவிடப்படுகிறது. இது ஜீவன கர்மா மட்டுமே.

ஒருவர் உணவுக்காக உழைக்கும் தன்மையை 10 ஆமிடம், மகர ராசி, 10 ஆமிடாதிபதி, சனி இவர்களை கொண்டும்,

உழைப்பால் பெரும் பொருளாதாரத்தை 2 ஆமிடம், 2 ஆமிடாதிபதி, ரிஷப ராசி, சுக்கிரனை கொண்டும். 

உழைப்பால் ஈட்டிய தனத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதை 12 ஆமிடம், 12 ஆமிடாதிபதி,  மீன ராசியையும் குருவைக்கொண்டும் ,

உழைப்பால் பெற்ற தனத்தைக்கொண்டு தன்   மனைவியோடு எப்படி வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார் என்பதை 7 ஆமிடத்தையும், 7 ஆமதிபதியையும், துலாம் ராசியையும் சுக்கிரனைக் கொண்டும்,

உழைப்பில் ஒருவருக்கு உள்ள உறுதி, சாதிக்க வேண்டும் என்ற தீவிரம், மற்றவர்களோடு சேர்ந்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை லக்னம், லக்னாதிபதி, மேஷம், செவ்வாய் ஆகியவைகளைக் கொண்டும்,

உழைக்கும் இடத்தில் ஏற்படும் நட்பை புதன், ஏழாமிடம், எழாமதிபதி ஆகியோரைக் கொண்டும்,

உழைக்குமிடத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள், வேலையில் இடம் மாறும் சூழல் ஆகியவற்றை சந்திரன், சந்திரனுக்கும் 10 ஆமிடத்திற்கும் உள்ள தொடர்புகளை கொண்டும்,  

தொழிலில் ஜாதகருக்கு உள்ள நிர்வாகத் திறமையை லக்னாதிபதி, லக்னம், சூரியன், சிம்ம ராசியை கொண்டும்,

வேலையில் ஜாதகர் எதிர்கொள்ளும் கடுமைகளை, எதிர்ப்புகளை, தடைகளை 6 ஆமிடம், 6 ஆமதிபதி, செவ்வாய், ராகு-கேதுக்களை கொண்டும்,

உழைப்பில் வேளையில் ஜாதகருக்கு உள்ள திட்டமிடும் தன்மையை புதனை கொண்டும்,

சூழ்நிலைக்கேற்ப விரைந்து முடிவெடுக்கும் தன்மையை சந்திரனை கொண்டும் அளவிட வேண்டும்.

ஜீவன கர்மாவை தவிர்த்து ஒருவரது ஆன்மா தனது பிறப்பின் ரகசியங்களை தேடி மோட்சத்தை நோக்கிய நிலையில் பயணிப்பது மோட்ச கர்மா ஆகும். அதற்கு லக்னம் மோட்ச லக்னங்களில் ஒன்றாகி லக்னமும், ராசியும் குரு, சனி, ராகு-கேதுக்களின்  தொடர்பு பெறுவது சிறப்பு. லக்னாதிபதி, உடல்காரகன் சந்திரன், உயிர் மற்றும் ஆன்ம காரகன் சூரியன் இவர்களோடு இல்லற வாழ்வை கைவிட சுக்கிரனும் அனுமதிக்க வேண்டும். மேலும் ஜாதகத்தில் இதர பாவங்களும் பாவாதிபதிகளும் இதை அனுமதிக்க வேண்டும்.

ஒருவரின் முற்பிறவி கர்மங்களையும் அடுந்த பிறவி கர்மங்களையும் அனுமானிக்க ஜோதிடத்தில் வழிகள் உள்ளது என்றாலும் இங்கு நாம் இப்பிறவியில் ஒரு மனிதன் ஈடுபடும் கர்மங்களை எடுத்துக்கொள்வோம். 
உண்மையில் நமது கர்மங்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன என்றாலும் நமது வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அது தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்கிறது என்பதே உண்மை. கர்மங்களில் காலத்திற்குத்தக்க மாறுபாடுகள் உண்டு. அவற்றை திசா புக்திகளைகொண்டு அறியலாம்.  


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. ஜாதகரின் பெயர் குப்புசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்க்குப் பெயர் பெற்ற பத்தமடையை  சேர்ந்தவர்.

ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் கடக லக்னத்திலுள்ள செவ்வாயுடன் பரிவர்த்தனையில் உள்ளார். பரிவர்தனையான கிரகங்கள் பரிவர்த்தனையான தங்கள் ஆட்சி வீட்டோடு தொடர்புகொண்டு இடம் மாறிச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சனி பார்வையை சந்திரன் பெறும்போது ஜாதகரை தவறு செய்ய வைத்து பிறகு தண்டிக்கும். ஆனால் சந்திரன் சனியோடு இணையும்போது சனியின் பற்றுதலற்ற மனோநிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.  கால புருஷனுக்கு சுகஸ்தானமான 4 ஆமிடத்தில்  சனி சந்திரனோடு மறை பொருளை குறிக்கும் ராகுவும் இணைவது ஜாதகர் பற்றற்ற வாழ்வுக்கு செல்வதை குறிப்பிடுகிறது. சன்யாச யோகங்களில் இது குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் ராகுவோடு இணையும்போது ஜாதகர் சாதாரண உலகியல் வாழ்வை விட்டு மாற்றி யோசிப்பவர் எனலாம். மேலும் கடகத்தில் சந்திரனோடு சனி, ராகு இணைவு ஜாதகருக்கு வெளிநாட்டுத் தொடர்பை ஜீவன வகையில் ஏற்படுத்தும் எனலாம்.

தன, குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ஆட்சி சூரியன் சிறப்பாக அமர்ந்திருக்கிறார் என்றாலும் அவர் விரையாதிபதி சேர்க்கை பெற்று நிற்பது வருமான வகையில்  மருத்துவத்தோடு தொடர்பு பெறுவதை குறித்தாலும் குடும்ப வகையில் சிறப்பல்ல. 10 ஆமிடத்தில் பரிவர்த்தனைக்குப் பிறகு வந்து அமரும் செவ்வாயை குரு பார்வை செய்கிறார். இது ஜாதகர் தனது தொழிலிலும் கர்மங்களிலும் அடையும் சிறப்பைக்  குறிப்பிடுவதோடு ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்பு  கொள்வதை உறுதி செய்கிறது. ஜாதகர் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

லக்னத்தில் ராகு அமைந்து ஜாதகர் மருத்துவரானாலோ அல்லது மறை பொருளைத்தேடும் ஞானி ஆனாலோ போற்றத்தக்க வாழ்வை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.

ஜாதகர் செவ்வாய் திசையில் தஞ்சையில் மருத்துவம் பயின்றார். வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்திலமைந்த குரு அதற்கு உதவினார் என்றால் அது மிகையல்ல. ஜாதகர் செவ்வாய் திசை சுக்ர புக்தியில் வெளிநாடு (மலேசியா)   சென்றார். சுக்கிரன் சந்திரன் சாரம் பெற்று வெளி நாட்டு வாழ்வைக் குறிக்கும் 12 ஆமிட தொடர்பு பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடக லக்னத்தில் சனி அமர்ந்ததால் ஜாதகர் வெளி நாடு சென்று மருத்துவ சேவை செய்தார். குறிப்பாக சனி குறிப்பிடும் ஏழைகளுக்கு இலவச சேவை செய்து அவர்களால் வெளிநாட்டில் கொண்டாடப்பட்டார்.

லக்னத்தில் சனி, ராகு என்ற இரு கடும் பாவிகளால் ஞான நிலையை நோக்கி ஜாதகர் மனம் சென்றது என்றால் இரண்டாமிடத்தில் விரையாதிபதி புதன் அமர்ந்து குடும்ப வாழ்வை புறந்தள்ள வைத்தது. குடும்ப காரகன் குரு பகையும் கேதிராதிபத்திய தோஷத்திய தோஷமும் பெற்று அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் தனது சுக ஸ்தானத்திற்கு விரையத்தில் நீசமாகி வக்கிரம் பெற்றதும் ஜாதகருக்கு இல்லற வாழ்வு மறுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. ராகு லக்ன கேந்திரத்தில் தனது நட்சத்திரத்திரமான சுவாதியில் அமைந்த குருவால் சூட்சுமமாக சுபத்துவம் பெற்றுள்ளது மிகச் சிறப்பு. பொதுவாக குரு நான்காமிடத்தில் அமைவதே குடும்ப வாழ்வுக்கு எதிரான அமைப்புதான். 

ராகு 3 மற்றும் 12 ஆமிடாதிபதி புதன் சாரம் பெற்றதால் ராகு திசையின் முதல் 9 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்வை முடிந்த பின் ஜாதகர் இந்தியா திரும்பினார். புதன் சூரியனுடன் சிம்ம ராசியில் இணைந்துள்ளதை கவனிக்க. சிம்ம ராசி உயர்ந்த மலைப்பகுதிகளை குறிப்பிடும். சூரியன் தலைமைப் பண்பை குறிப்பிடும். இந்தியா திரும்பிய ஜாதகரின் மனம் முழுமையான ஆன்மீக வாழ்வை நாடியது. நெடிதுயர்ந்த மலைப்பகுதியான ரிஷிகேசில் கடவுள் தனக்காக வழி காட்ட அனுப்பிய குரு விஸ்வானந்த சரஸ்வதியை ஜாதகர் சந்தித்தார். சில மணி நேரங்களே நீடித்த அந்த சந்திப்பில் குப்புசாமிக்கு போதிக்க அதிகமில்லை என்பதை குரு உணர்ந்தார்.  குருவின் வேண்டுகோளை ஏற்று ஜாதகர் சன்யாச வாழ்வை மேற்கொண்டார். ரிஷிகேசிலேயே தமது ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு ஞான குருவாக இருந்துகொண்டு இவ்வுலகிற்கு வழிகாட்டினார். குருவால் சுபத்துவம் பெற்று மோட்ச லக்னமான கடகத்தில் அமர்ந்த ராகு திசையின் 2 ஆவது பகுதியும் அதனை அடுத்து வந்த குரு திசையும் ஜாதகரை உலகம் கொண்டாடும் உத்தம மகானாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

உலகம் இன்றும் வழிபடும் இந்தியாவின் மிகச்சிறந்த மகான்களில் ஒருவர்  ஜாதகராவார். இன்றைய நிலையில் இந்தியா ஏங்கிக்கொண்டிருப்பது இவரைப்போன்ற உத்தம மகான்களுக்காகத்தான். வாழ்க்கை, ஆன்மீக, இயற்கை நெறிகளை குறித்து ஜாதகர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். இந்துமதத்தின் ஒப்புயர்வற்ற சக்தியாக விளங்கிய ஜாதகர் “தெய்வ நெறிக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இன்றளவும் மிகச்சிறப்பாக இந்து தர்ம நெறிகளை உலகிற்கு அளித்துவருகிறது இவ்வமைப்பு. 

   

சனி திசையி;ல் 14.07.1964ல் “சுவாமி சிவானந்தர்” என்றழைக்கப்பட்ட ரிஷிகேசை சார்ந்த இந்தத் தமிழ்நாட்டு மகான் முக்தியடைந்தார். 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501

Wednesday, 30 January 2019

பரிகாரம்


“மூர்த்தி போலாமா” எனக்கேட்டார் ராஜசேகர்

சத்தியமூர்த்தி மதுரையில் பிரபல புள்ளிகளில் ஒருவரான ராஜசேகரின் வாகன ஓட்டி. எட்டு வருடமாக ராஜசேகரிடம் பணிபுரிகிறான். மூர்த்திக்கு ராஜசேகரின் குடும்பம், முதலீடுகள், பலம்-பலகீனம் அனைத்தும் தெரியும். சில குழப்பமான சூழ்நிலைகளில் சரியான சமயத்தில் தன்னை பாதுகாக்க எச்சரிக்கையும் செய்வான் என்பதால் ராஜசேகர் மூர்த்தியை முழுமையாக நம்புபவர்.

சத்தியமூர்த்தி ராஜசேகரிடம் முழு நேரமாக பணிபுரிந்தான் என்பதால் அவ்வப்போது ஓய்வு கிடைக்கும், ஓய்வில் Whats app, Face book போன்றவற்றில் ஈடுபட்டு ஜோதிடம், பாடல்கள், போன்றவற்றில் பொழுதைக் கழிப்பான். ராஜசேகரிடம் சமயத்தில் அரசியல் பேசவேண்டி இருக்குமே என்ற எண்ணத்தில் அரசியல் பிடிக்காவிட்டாலும் அவருக்காக ஓரளவு தெரிந்து வைதிருப்பவன்.




“போலாம் ஐயா” என்றுவிட்டு காரின் கைப்பிடியை திறந்துவிட்டான் மூர்த்தி.

காரில் ஏரிய ராஜசேகர் “ராத்திரி சரியா தூக்கமில்லே, நீ தூங்கினியால?’ என்றார்.

“எனக்கும் அரத் தூக்கந்தான் ஐயா” என்றான் மூர்த்தி.  

“இன்னும் பொண்டாட்டி கனவில் வந்து பயமுறுத்துறாங்களா?” என்றான் மூர்த்தி.

“அது இல்லடே. புது இடம் அதான் சரியா தூக்கமில்ல என சொல்லிவிட்டு “நீ எப்டி தூங்கின?”’ என்றார் தனது நெல்லைத் தமிழில்.

“சுமாரான தூக்கந்தேன்” என்றான் மூர்த்தி.

 “ஐயரு ஊட்டுக்கு இதுக்கு முன்னாடி நீ வந்திருக்கியால?”

“ஆங். அது ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணுவிட்ட மச்சினன் ஒருத்தனுக்கு திதி கொடுக்க வந்தப்ப போயிருக்கேன்?” என்றான் மூர்த்தி.

ராமேஸ்வரத்தில் அவர்கள் தங்கியிருந்த லாட்ஜை விட்டு வண்டி கிளம்பியது.

“எம்புட்டு தூரம் ஐயரு ஊடு?” என வினவினார் ராஜசேகர்.

“கா மணி நேரத்துக்கு போய்டலாம் ஐயா”

மணி இப்போது அதிகாலை 4.55 மணி.

 
ராஜசேகரின் மனைவி மைதிலி கிராமத்து சூழலில் வளர்ந்தவள். மைதிலியின் தந்தை மாரி மர அரவை மில் நடத்தி ஓய்ந்தவர் என்பதால் கஷ்ட ஜீவனத்தில் வளர்ந்தவள். ராஜசேகரின் தந்தையின் தென்னந்தோப்புக்கு பட்டுப்போன மரங்களை எடுக்க வந்த மாரிக்கு அறிமுகமாகி அந்த தொடர்பால் தனது மகளை கட்டிக்கொடுத்த கையோடு இதய நோயால் போய்ச்சேர்ந்தவர்.

மைதிலிக்கு நேர் எதிர் ராஜசேகர். பிறக்கும் போதே பணக்காரச்சூழலில் பிறந்து சௌகரியமாக வளர்ந்தவர். தந்தையின் காலத்திற்குப் பிறகு மைதிலி தடுத்தும் கேளாமல் MLA பித்து பிடித்து அரசியலில் ஈடுபட்டு தனது சொத்துக்களை இழந்தவர். பிறகு 18 வருடங்கள் கழித்து அவர் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் பல ஒப்பந்தங்களை பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வந்து தனது மகனுக்கும் மகளுக்கும் கௌரவமாக திருமணம் நடத்தி வைத்தார். மகளை தனது அக்கா மகனுக்கு மணமுடித்து அவர்கள் ஸ்வீடனில் இருக்கிறார்கள். மகன் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ந்தவன். தனது டாக்டர் மனைவியோடு சிங்கப்பூரிலேயே குடியுரிமை பெற்றுவிட்டான். அம்மா இறந்த பிறகு தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். மகள் எப்போதாவது பேசுவதோடு சரி.

ராஜேகரின் சபலத்தால் ஏற்பட்ட தொடர்புகளை எளிதில் கண்டு பிடித்துவிட்டாள் மைதிலி. அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜசேகர் மைதிலியை அடிக்க அவள் நிலை தடுமாறி சாப்பாட்டு மேசை முனையில் தலைமோதி எதிர்பாராமல் இறந்துவிட்டாள். கோர்ட்டில் தனது தொடர்பை மட்டும் மறைத்து குடித்ததால் ஏற்பட்ட சண்டை என்றும் எதிர்பாராதது என்று கூறி 2 ஆண்டு குறைந்த பட்ச தண்டனை பெற்று தற்போது தண்டனையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் ஜாமீனில் வெளியே உள்ளார். மனைவி மீது சராசரிப் பிரியம் வைத்திருந்தவர். பட்டென்று போய்விட்டாளே என்ற கோபமே மைதிலி மீது அவருக்கு இருக்கிறது. செயற்கை மரணம் என்பதால் அவளது கர்ம காரியங்களையும் சாந்திப் பரிகாரங்களையும் செய்யவே தற்போது டிரைவருடன் ராமேஸ்வரம் வந்திருக்கிறார்.

பரிகார ஹோமங்களை முடித்து கோவில் சென்று கடலிலும் நாழிக்கிணறுகளிலும் குளித்து சுவாமி தரிசனம் முடிந்து தங்கும் விடுதி திரும்பியபோது நேரம் மதியம் ஒரு மணியை கடந்துவிட்டிருந்தது.
உணவு வரவழைத்து உண்டுவிட்டு ராஜசேகர் உறங்கினார். மூர்த்தி கடைவீதி சுற்றிவிட்டு காரில் வைக்க ஒரு கணபதி பொம்மையை வாங்கி வந்திருந்தான். பிறகு மாலை ராஜசேகர் எழுந்ததும் கிளம்பி வழியில் மன்னார்குடியில் தனது தொழில் தொடர்பு நண்பரை பார்த்து பேசிவிட்டு உணவை முடித்து கிளம்ப இரவு மணி 10 ஐ தாண்டிவிட்டிருந்தது. ஐயர் ஹோமம் முடித்து கோவில் சென்றபின் நேராக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதை ராஜசேகர் கண்டுகொள்ளவில்லை.

“இது என்னடே எப்போ வாங்கினே/” என்று காரின் முன்பக்கம் இருந்த  உலோகத்தாலான விநாயகரை பார்த்துக் கேட்டார் ராஜசேகர். அவருக்கு மைதிலி நினைவு வந்து தாக்கியது. வித விதமான விநாயகர் பொம்மைகளை வாங்கி சேகரிக்கும் பழக்கம் மைதிலிக்கு இருந்தது. நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள், பொம்மைகள் என வீட்டில் இருந்தன. ராஜசேகருக்கு மைதிலியை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால் வித்தியாசமான விநாயகர் பொம்மையை வாங்கிக்கொடுத்தால் போதும் நகைகள் கூட தேவையில்லை என்பதை நன்கு அறிந்திருந்தார். ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது அவளுக்கான வாங்கி வந்திருந்த நியானில் ஒளிரும் கணபதி சிலை மீது மைதிலி மிகுந்த பிரியம் வைத்திருந்தது நினைவில் வந்தது. 

“இது ரொம்ப புடிச்சிருந்ததுங்க ஐயா” அதான் வாங்கினேன் என்றான் மூர்த்தி. அப்போதுதான் மூர்த்தியின் கண்களை பார்த்தார் ராஜசேகர். சத்தியமூர்த்தியின் கண்கள் சிவந்திருந்தது. “எலே மத்தியானம் கொஞ்சம் தூங்கியிருக்கலாம்லே, நேத்து ராத்திரியிலும் நல்ல தூக்கமில்லைனு சொன்னியாலே.. கண்ணு இப்படி செவந்திருக்கு” என்றார் ராஜாசேகர்.

“அது பெரிய பிரச்னையில்லீங்கையா மன்னார்குடில சாப்பிட்ட தோசை கொஞ்சம்  புளிச்சிருந்தது. அதான் தலைவலியும் சேர்துடுச்சு” என்றான் மூர்த்தி.

“எலே வண்டிய நிறுத்துலே நீ பின்னாடி வா. நா வண்டிய ஒட்டுதேன்” என்று மூர்த்தியின் மறுப்பை கேளாமல் மூர்த்தியை பின்சீட்டில் அமர்த்திவிட்டு வண்டியை ஓட்டினார் ராஜசேகர்.

அன்னபூரணியின் கோலத்தை பார்த்த செல்வம் “ஏண்டி என்னடி எப்ப பாத்தாலும் ஒளவையார் கணக்கா இப்டி ஒரு கோலம். நமக்கு கல்யாணமாகி 6 வருஷந்தான் ஆச்சு . அதுக்குள்ளே இப்டியா?” என்றான்.

“உனக்கு அஷ்டம சனியாம் கண்டம் இருக்காம். ஜோசியரு சொன்னாரு அதான் புள்ளார (பிள்ளையார்) சுத்தி வேண்டிட்டு வாரேன்.” என்றாள் அன்னபூரணி.


“மொதல்ல ஊட்டுக்காரன சுத்துங்கடி. புள்ளார அப்புறம் சுத்தலாம்” என்று செல்வம் அன்னபூரணியிடம் கடுப்படித்த வேளையில் உள்ளே வந்தான் குமார்.

“அண்ணாத்தே ஒரு அர்ஜென்ட் சவாரி. உன்ன முதலாளி இட்டார சொன்னாரு” என்றான் .

“இப்பதாண்டா வந்தேன் அதுக்குள்ள அர்ஜெண்டா என்றான்.

“ஏன்டா ஒரு அர நாள் மனுசன சும்மா உடுரீங்களா. இன்னும் உங்கண்ணன் சாப்டக்கூட இல்ல. நாளைக்கு போய்க்கலான்னு போய் சொல்லு” என்றாள் அன்னபூரணி.

நசீர் மதுரையில் பிரபல மோட்டார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். செல்வம் நசீரிடம் கடந்த 9 வருடங்களாக லாரி டிரைவராக வேலை பார்க்கிறான். நசீரிடம் உள்ள 18 வண்டிகளில் 6 வது வண்டியை ஓட்டிவருபவன். 15 வயதில் செல்வம் கிளீனர் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே நசீருக்கு தொழில் வளம் கூடியது என்பதால் நசீருக்கு செல்வத்தின் மீது தனிப்பட்ட அக்கறை உண்டு.  குமார் செல்வதுடன் வரும் கிளீனர். குமாருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் சென்ற பிறகு தனி வண்டி தருவதாக சொல்லி இருக்கிறார் நசீர். அது வரை செல்வத்துடன்தான் குமாரின் பிழைப்பு.

செல்வம், குமார், அன்னபூரணி மூவருமே ஏழ்மையான சூழலோடு போராடுபவர்கள். படிப்பறிவு குறைவு என்பதால் கிடைத்த வேளையில் தங்கள் ஏழ்மையை களைய முனைபவர்கள். அனாதையான செல்வந்துக்கு கடவுள் கொடுத்த பரிசு அன்னபூரணி எனலாம். நசீர்தான் அவனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தார்.

மூவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நசீர் கைப்பேசியில் அழைத்தார்.

“ அண்ணே குமாரு சொன்னான்னே” என்றான் செல்வம்.

“நீ இப்பத்தான் திருச்சியில இருந்து வந்தே. நாளைக்கும் நாளை மறுநாளும் டீசல் வெல குறைப்புக்காக லாரிகள் வேலை நிறுத்தம் செய்யலாம்னு சாயந்திரம் தீர்மானம் போடப்போறோம். நீ என்ன பண்ணு இப்ப தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ. சாயந்தரம் கிளம்பி கீழக்கர போயிட்டு நைட்டோட நைட்டா திரும்பிரு.. நாளைக்கு ரெண்டு நாள்  ஸ்ட்ரைக்குனால ரெஸ்டுதான்” என்று கூறிவிட்டு லோடு விபரங்களை கூறினார் நசீர்.

மாலை எழுந்த  பிறகு லோடு ரெடியாகி விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கிளம்ப தயாரானார்கள் செல்வமும் குமாரும்.

அன்னபூரணி பிள்ளையார் கோவில் சென்று வந்து இருவருக்கும் விபூதி பூசிவிட்டு பிறகு தன் தாலிக்கயிற்றில் வைத்து கண்களில் ஒத்திக்கொண்டாள். செல்வம் லாரிக்கு செல்லும்போதெல்லாம் வீட்டில் இது ஒரு சடங்காகவே உருவாகியிருந்தது. செல்வத்திற்கு துவக்கத்தில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பிறகு அன்னபூரணியின் நம்பிக்கைக்காக மகிழிச்சியோடு ஏற்றுக்கொண்டான். அதுமட்டுமல்ல அவள் ஆசையாக திருவிழாவில் வாங்கிக்கொடுத்த விநாயகர் பொம்மையை தனது வண்டியில் தனக்கு முன்னால் பொருத்தியிருந்தான். அன்னபூரணி தன் கணவன் கண்ட இடத்தில் உணவுக்காக செலவு செய்து உடம்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்திலும், சிக்கனத்தின் பொருட்டும் ஒருநாள் லோடு எனும் போது உணவு தயாரித்து தந்துவிடுவாள்.

“சாக்குறதயா போய்யா. உன் ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம்னு டிவில ஜோஸ்யர் சொன்னாரு” என்றாள்.

“உன் ஜோஸ்யருகிட்ட எப்ப காசு வரும்னு கேட்டு சொல்லு” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே அவள் கொடுத்த உணவுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு இருவரும் சென்று நசீரை பார்த்து லாரியை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

லோடு குறித்த நேரத்துக்கு ரெடியாகவில்லை. தாமதித்தலில் இதுதான் அன்னபூரணி சொன்ன சந்திராஷ்டமோ என்று அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பது தெரியாமல் அலுத்துக்கொண்டான்.  எதிர்பார்த்தற்கு மாறாக மிகவும் தாமதமாகவே  லோடு ஏற்றிக் கிளம்பினர்.

வழியில் வண்டியை நிறுத்தி உணவருந்தினர். உணவுப்பொட்டலத்தை பிரிக்கையில் அந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரி வந்து கையை நீட்டி பிச்சை கேட்டாள்.

செல்வம் ஒரு கணம் அவளையும் அவள்  கையிலிருந்த குழந்தையையும் பார்த்தான். அன்னபூரணி தற்போதுதான் கருவுற்றிந்தாள். கையிலிருந்த பொட்டலத்தை அப்படியே அவளிடம் தந்துவிட்டான்.

குமார் அவளை வைதான் “போ மே அந்தாண்ட. சாப்புடுற நேரத்துல” என்று விரட்டினான்.

செல்வம் பக்கம் திரும்பி “ஏன் அண்ணாத்த அப்டியே குடுதுட்ட” என்றான்.
“சாப்புடுட்டுண்டா. என்ன பெத்தவ என்ன தூக்கிபோட்டது  மாதிரி இவளும் அவ குழந்தைய தூக்கிப் போட்டுடக்கூடாது பாரு” என்றான்.

“போ அண்ணாத்தா. இதெல்லாம் பிச்ச எடுக்கரதுக்கே வாடகைக்கு எடுத்துட்டு வந்த குழந்தையா இருக்கும்” என்றான்.

“அவிங்கெல்லாம் இந்நேரம் வந்து பிச்சை எடுக்க மாட்டாங்கடா. குழந்தயோட பசிக்கு சோத்த தேடுற தாய்க்கு நேரம் தெரியாதுடா. நீ சாப்டு” என்று விட்டு கீழே இறங்கி அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றான்.

அதிகாலை 2.47 மணிக்கு செல்வத்தின் லாரியும் ராஜசேகரின் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

குறுக்கே வந்த டூ வீலர்காரனை திட்டிவிட்டு வேகத்தை குறைக்காமல் வண்டியை சற்றே வளைத்த ராஜசேகர் எதிரே வந்த லாரியை கவனிக்கத் தவறியிருந்தார்.

தன்னெதிரே திடீரென்று நிலைதடுமாறித்  திரும்பிய காரைப்பார்த்து இடது பக்கம் பள்ளத்தில் இறங்க வழியில்லாமல் கஸ்மாலம், சாவுகிராக்கி என்றபடியே பிரேக்கை அழுத்தினான் செல்வம்.

கார் லாரியை மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு பள்ளத்தில் உருண்டது. செல்வமும் குமாரும் கண்னாடிக் கீரல்களை எதிர்கொண்டனர்.

செல்வம் மயங்கியிருந்தான். அண்ணாத்த என்று குமார் உலுக்கியபோது கண்திறந்த செல்வத்தின் பார்வையில் அவர்களது வண்டியிலிருந்த விநாயகர் கண்சிமிட்டுவது போல் தெரிந்தார்.

உயிர் தப்பிய மூர்த்திக்கு மார்பிலும் முகத்திலும் காயங்கள். 

உடலின் மீது அதிக சேதம் என்றாலும் டாஷ் போர்டிலிருந்த விநாயகர் பொம்மை நெற்றிபொட்டில் தாக்கியதால் வினாடியில் உடல் வேதனைகளை அனுபவிக்காமல்  உயிரை விட்டிருந்தார் ராஜசேகர். 

அடுத்த பதிவு 

“கர்மா”

ஜாதகத்தில் நமக்கான கர்மங்களை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் கிரகங்கள் பற்றிய ஆய்வு.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501.